வாங்க அபிஅம்மா...எப்படி இருக்கீங்க? அபி, நட்டு & அபிஅப்பா எப்படி இருக்காங்க? ஊருக்கே விருந்து வைக்கறவங்க நீங்க. .ஆனா உங்களுக்கு வெறும் கேப்பஞ்கஞ்சி ய கொடுக்க கூப்பிட்டு இருக்கேன்.:) என்ன செய்ய..அதுக்கு மேல எனக்கு இங்க வசதி இல்ல :)) எப்படியோ சகிச்சிக்கிட்டு குடிச்சிக்கிட்டே என்னோட கேள்விகளுக்கும் பதில் சொல்லிடுங்க. கேள்வியும் அப்படித்தான் இருக்கும் :)). உங்களை கேப்பஞ்கஞ்சி’க்கு அழைக்க காரணம், நீங்க ஒரு சக்சஸ்ஃபுல் குடும்ப தலைவி, அப்படி இருப்பதே இந்த காலத்தில் மிகப்பெரிய சாதனை. :).அந்த சாதனைக்காக உங்களை அழைத்து பேச விரும்பினேன்.

உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள் : -

கவிதா : உங்களை பற்றி சின்னதா ஒரு அறிமுகம் செய்துக்கோங்க. (உங்க ஊர், படிப்பு, குடும்பம் பற்றி )
வணக்கம் கவிதா! கேப்பங்கஞ்சி எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு. வசதிக்கும் கேப்பைக்கும் தானே எப்பவும் பத்து பொருத்தம். பணக்காரங்க வியாதின்னு செல்லமா சொல்ற சர்க்கரை வியாதிக்கு அருமருந்தே கேப்பைதானே. அதனால இன்னைக்கு பணக்கார உணவு கேப்பை தான்:-). 
என்னோட பெயர் கிருஷ்ணா தொல்காப்பியன். படிப்பு D.C.E., எங்க சொந்த  ஊர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர். ஆனால் அப்பா மாயவரம் மாற்றலாகி வந்து, அங்கவே வீடு வாங்கி செட்டில் ஆகிட்டோம். படித்து முடித்ததும், பழனி தேவஸ்தானத்தில் ஜூனியர் இன்ஜினியராக (சிவில்) வேலை கிடைத்து செய்து வந்தேன்.

கவிதா: அட நீங்க சிவில் என்ஜினியரா  சொல்லவே இல்ல?  அப்படீன்னா தனிப்பட்ட உங்களின் ஆர்வம், விருப்பம் காரணமாக தான் படிச்சி இருப்பீங்க... வேலைக்கு போறீங்களா?
ஆமாம். டிகிரி இல்லை. டிப்ளமா தான். தனி ஆர்வம்'ன்னு சொல்ல முடியாது. என்னோட விருப்பம் னா அது டீச்சர்’ ஆவது தான். அந்த காலேஜ் பழனியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அதிக தூரம் என்பதால் பக்கத்தில் இருந்த பாலிடெக்னிக்கில்  சேர்த்துவிட்டாங்க. விரும்பியது கிடைக்காட்டியும் கிடைத்ததை விரும்புகின்ற மனோநிலை எப்போதுமே எனக்குண்டு. அதனால் அதிலே எனக்கு பிடிச்ச சிவில்' எடுத்தேன். படித்து முடிச்ச பிறகு பழனி தேவஸ்தானத்தில் வேலை கிடைச்சது.  கல்யாணத்திற்கு பின்னே வேலைக்கு போகவில்லை.

கவிதா: வேலைக்கு போயிக்கிட்டு இருந்த நீங்க திருமணத்திற்கு பின் வேலையை விடனும்னு வந்தப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது..?
அது முன்பே எடுத்த முடிவு. அதே சமயம், அப்பாவிற்கும் சிதம்பரத்திற்கு வேலை மாறியது. அதனால் சிதம்பரத்தில் B.E.,சேர்ந்துவிடலாம் என வேலையை விட்டேன். ஆனா, உடனே கல்யாணம் ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் படிக்கவும் மனசில்ல, வேலைக்கு போகவும் முடியல. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ன்னு எனக்கு சரிப்பட்டு வராதுன்னு நினைத்து விட்டுட்டேன்.

அணில் : அபிஅம்மாஅக்கா....... (ஸ்ஸ்ஸ் இவிங்கள எப்படி கூப்பிடனும்னே தெரியலையே.)) ஹி ஹி...கிருஷ்ணாக்கா,  கவி ய பத்தி என்ன தெரியும்னு பேட்டிக்கொடுக்க வந்தீங்க?
அணிலு ஆஞ்சநேயர் பலம் ஆஞ்சநேயருக்கு தெரியாது. அம்மாம் பெரிய பாலம் கட்டினபோது கூட இருந்து பார்த்த அணிலுக்குமா தெரியாம போச்சு? முத்துக்கு கேப்பங்கஞ்சி ஊத்தினப்ப, அதை படிச்சி இருக்கேன். அதனால கவிதா'வின் கேப்பங்கஞ்சி பத்தி ஓரளவு தெரியும். என்னை கேப்பங்கஞ்சி க்கு கூப்பிட்டவுடனே அபிஅப்பாவை, கவிதாவின் பதிவில் படிக்க நல்லதா லிங் எடுத்து கொடுங்க என கேட்டு படிச்சது. ல்விங்ஸ்மைல் வித்யாவின் கேப்பங்கஞ்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நல்ல பதமான பேட்டி அது. 

கவிதா : திருமணத்திற்கு முன் and பின் - இதை இழந்தீர்கள் எதை பெற்றீர்கள் ?!  (பெற்றவையில் குழந்தைகள், அபிஅப்பா பற்றி எல்லாம் சொல்ல க்கூடாது)
திருமணத்துக்கு முன் இழந்தது B.E படிப்பை மட்டுந்தான். வேறு எதையும் இழந்ததாக நினைவில்லை. அது போல திருமணத்துக்கு முன்பு அடித்து போட்ட மாதிரி வருமே ஒரு தூக்கம், அதை திருமணத்திற்கு பின் இழந்தேன்னு சொல்லலாம். அப்பெல்லாம், நினைச்ச நேரத்தில் தூங்கலாம். குடும்ப ரெஸ்பான்சிபிலிட்டி இல்லை.. ஆனா, திருமணத்துக்கு பின் வெறும் 1000 ரூபாயில் குடும்பம் நடத்துவது எப்படி, மாசம் 75 ஆயிரம் வந்தால் குடும்பம் எப்படி நடத்தறதுன்னு திட்டமிட வேண்டியிருக்கு. அதனால, படுத்த பின்னும் வீட்டுவரி, பாலிசி, கேபிள், ஸ்கூல் பீஸ் ன்னே கனவுகள் வருது. ஆக திருமணத்துக்கு பின்னாடி எனக்கு கிடைப்பது நல்ல அனுபவம் தான்.

அணில் : கிருஷ்ணாக்கா நீங்க இருக்கும் வீடு, நீங்க ப்ளான் செய்த படி கட்டியதுன்னு சஞ்சய் அங்கிள் ஒரு போஸ்ட் ல எழுதி இருந்தாங்க நிஜம்மாவா க்கா?  உங்களுக்கு உங்க வூட்டுல அப்படி எல்லாம் ஃபிரிடம் கொடுத்தா வச்சி இருக்காங்க? இல்லாட்டி நீங்களே அதை புடுங்கி வாங்கனீங்களா?
சஞ்சய் எழுதின அந்த பதிவை படிச்சேன், பின்னூட்டம் கூட போட்டு இருக்கேன் அதிலே. நாங்க கல்யாணத்துக்கு பின்னே பேசிய முதல் பேச்சே வீடு பற்றியது தான். ஒரு தனி வீடு, பார்க்க அழகா, சின்னதா, தினமும் அதை நானே சுத்தம் செய்யும் அளவான வீடு என ஏகப்பட்ட கனவு. அப்போது மனதில் போட்ட பிளான் இந்த வீடு. அதில் கொஞ்சமும் மாறாமல் கட்டியது தான் என் வேலை. மற்றபடி பிளான் என்பது எங்க இரண்டு பேரின் பிளான் தான். பொதுவா பத்து மாதம் தான் கரு சுமக்கும் காலம். ஆணால் நாங்க இந்த வீட்டு பிளானை பத்து வருஷம் கருவாக சுமந்தோம்.
சுதந்திரம் 'ங்கறது கொடுக்கல் வாங்கல் பிஸினஸ் இல்லை. சுதந்திரத்தை எடுத்துப்பது, விடுப்பது தான். அவங்க அக்கறையா செய்யும் ஒரு காரியத்தை அவங்க கிட்டே விடுவதும்,நான் அக்கறையா செய்யும் காரியத்தை நானே செய்வதும் தான் நடந்தது. மார்பிளா, டைல்ஸா' ங்கறது முதல், மாடி கைப்பிடி டிசைன் வரை சண்டை என்பது நடந்து கொண்டு தான் இருந்தது. சண்டையில் யார் ஜெயிக்கிறோமோ, அவங்க சொன்னத் நடந்திடும். இப்போது கூட வீட்டில் தன் தலைவர் படம் மாட்ட வேண்டும் என அடம். குழந்தைகள் படமே மாட்டக்கூடாது என்கிறேன், தலைவர் படம் மாட்டவிடுவேனா? மாட்டவே கூடாதுன்னு சொல்லிட்டேன். இப்படி நானும் அவரோட சுதந்திரத்தை பறிப்பது உண்டு:-)) 

கவிதா : நீங்க ஒரு குடும்ப *குத்துவிளக்கு" ஆச்சே....  உங்களின் பார்வையில் - ஒரு பெண் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க? ,
ஹாஹா! குடும்பம் பார்த்துப்பது என்பதும் ஒரு வேலை தானே. அதக்கு மட்டும் என்ன குத்துவிளக்கு பட்டம் தனியே வேண்டி கிடக்கு:-)) அப்படி பார்த்தா ஆபீஸ் குத்துவிளக்கு, பிஸினஸ் குத்துவிளக்கு,ன்னு சொல்லலாமே. :)).  ஆண்/பெண் யாராக இருந்தாலும் சரி தன் கடமை இது தான்னு தெரிந்த பிறகு, அதை சரியா செய்து முடித்தால் போதும். அது அத்தனை பெரிய கம்பசூத்திரம் ஓன்னும் இல்லை. விட்டு கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டு கொடுப்பதும், தட்டி கேட்கும் நேரத்தில் தட்டிகேட்பதும் பரஸ்பரம் நடக்க வேண்டியவை. அதிலே ஆண் என்ன பெண் என்ன?  

கவிதா: உங்க கணவர், ப்ளாக் எழுதுகிறார். அவரை "பெண்களிடம் ஜொள்ளுவிட்டு திரிபவர்" என்று வினவு தளத்தில் எழுதப்பட்டு இருந்தது. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன், இதனால், அவரின் மனைவியாக உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?   (உங்களின் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்)
என்னை பொறுத்த வரை இது ஒரு விஷயமே இல்லைங்க. ப்ளாக்ல எப்போதும் யார் யார் பற்றியோ கிசுகிசு வருது. இது மாதிரி மத்தவங்கள பத்தி பேசறது என்ன புதுசா? சகஜம் தானே. அது மாதிரி இதுவும் ஒன்னுங்க. 15 வருஷமாக அவரை எனக்கு நல்லா தெரியும், இதை ஒரு மேட்டராகவே நான் நினைக்கல...கவலையும் படல.... என்னைப் பொருத்தவரை கண்டுக்காம ஒதுக்கித்தள்ள வேண்டிய ஒரு கிசுகிசு.. :) 

அணில்: யக்கோவ், மங்சிங் அண்ணாச்சி ய பத்தி கூட அதுல எழுதி இருந்தாங்க.. பாவம் அண்ணாச்சி தொண்ட கிழிய கத்தி கூப்பாடு போட்டாரு (ஒன்னியம் வேலைக்கு ஆகல அது பெரிய சோகக்கதை, அதை அப்பாளிக்கா உங்கக்கிட்ட தனியா சொல்றேன் சரியா..) ஆனா, உங்க வூட்டுக்காரு செம சைலன்ட் ஆ கமுக்கமா இருந்தாரே' ன்னு எங்க கவி க்கு டவுட் வந்து,  நேராவே "நீங்கள் இப்படி செஞ்சீங்களா? ஏன் உங்க பேரு வந்து இருக்குன்னு கேட்டுட்டாங்க" ஆனா நீங்க அவரோட வூட்டுக்காரம்மணி, சும்மாவா வீட்டீங்க? பூரி கட்டைய வச்சி அடிச்சி உதச்சி அவரு என்ன செய்தார் ஏன் அப்படி பேர் வந்துச்சின்னு கேட்டீங்களா?
அணிலம்மா, போன பதிலிலேயே சொல்லிட்டேனே.. அது ஒரு மேட்டரே இல்ல, இதுல என்ன அதைப்பத்தி பேசிக்கிட்டு, துருவி தோண்டிக்கிட்டுன்னு விட்டாச்சி,  நானு, அபிஅப்பாவை இந்த விஷயமா கேக்கக்கூட இல்லை :), தலையில ஏத்தி வச்சிக்கிற அளவு ஒர்த் இல்லாத விஷயம். அதான் சொல்லிட்டேனே.. 'கிசு.கிசு' ன்னு.. அதுக்கெல்லாமா முக்கியத்துவம் கொடுப்பாங்க :))) விடு..விடு..போட்டும்.

கவிதா : புடவை, நகை, அக்கம் பக்கத்து கதைகள், டிவி சீரியல், குழந்தைகள், கணவருக்கு சாப்பாடு கொடுப்பது தவிர்த்து, சமுதாயம் சார்ந்த பிரஞ்ஞை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் என்றால் அவை என்ன? இல்லை என்றால் ஏன்?
முதலில்ல என் வீட்டை, என் குழந்தைகளை கவனிக்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் என் குழந்தைகளால் வராதபடி வளர்கிறேன். அதுவே என்னால் சமூகத்துக்கு முடிந்த பெரிய கடமை. எனது வீடு, குழந்தைகள், குடும்பம், வீட்டுக்கு வெளியே வாசல்,தெரு இதுதாங்க என் உலகம். இதை தாண்டி எல்லாம் நான் போறது இல்லைங்க. டிவி சீரியல் பார்க்கறதை எல்லாம் வேணாம்னு சொல்ற அளவு நானு இண்டலக்சுவல் இல்லை. பார்த்தால் தப்பில்லை ன்னு தான் நினைக்கிறேன்.  எந்த நேரமும் லேப்டாப் முன் அமர்ந்து பஸ் அரட்டை, பேஸ்புக், ட்விட்டர், எல்லாத்திலியும் குட்மார்னிங், என் மனைவி புளிகுழம்பு வைத்தாள் என சொல்லிகொண்டு இருப்பதற்கும், டிவி சீரியல் பார்க்கும் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்ல. (நான் டி வி சீரியல் பார்ப்பது அரிது. அது வேற விஷயம்) அது தப்பு, கேலிக்குரியது ன்னு சொன்னால் அதையே கம்பியூட்டர்ல செய்யும் நீங்களும் அதே கேட்டகிரியில தானே வரீங்க.. :))

கவிதா : பெண்ணியவாதிகள், பெண் போராளிகள் பற்றிய தங்களின் புரிதல் ?
என் பாட்டி வயது 95 ஆகிறது. அவங்க ஒரு பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்திடனும்னு உறுதியா சொல்லுவாங்க, அதான் பெண்மைக்கு அழகுன்னு சொல்லுவாங்க. அவங்க கண் வழி பார்த்தா அதான் அவங்களோட பெண்ணீயம். என் அம்மா காலத்தில் அது வேற மாதிரி இருந்தது. என் காலத்தில் அது இன்னும் கொஞ்சம் மாறி போனது. இப்போதிய காலக்கட்டத்தில் பிடிக்கலையா. டைவர்ஸ் பண்ணு என்கிற ரீதியில் வந்தாச்சு. எது பெண்ணீயத்துக்கு அளவுகோள்னு யாரும் சொல்லமுடியாது, அது அவங்கவங்களை பொறுத்தது. 

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் பெண்ணை கூட போராளியாக மாத்துது. இந்திராகாந்திம்மா, அவங்க அம்மாவோட இல்லாம அப்பா கூடவே அவரை பாத்து பாத்து வளந்தாங்க. அரசியல்ல அவங்க ஈடுபட காரணம் அவங்க வளந்த சூழல். இலங்கையில் பெண்கள், வீட்டிலே இருந்த அப்பா, மாமனார், புருஷன், மகன் னு எல்லாம் அழிந்த பின்னே அவங்க போராளியா ஆக வேண்டிய சூழ்நிலை. ஏன் அவங்களுக்கு மட்டும் குழந்தை, புருஷன், மெகந்தி, வளையல், கர்ப்பம், டிவி சீரியல் ஆசை எல்லாம் இருந்திருக்காதா என்ன? சூழ்நிலை பாவம் அப்படி ஆகிபோச்சு:-( இதுக்கு மேல இதைப்பத்தி விளக்கம் எனக்கு சொல்ல தெரியலை

அணில்: உங்களை உக்காரவச்சி  என்னிக்காவது இந்த அபிஅப்பா சமைச்சி போட்டு இருக்காறா? இல்லாட்டி நீங்களாச்சும் யோவ் சமைச்சி போடுய்யா.. அப்படின்னூ கேட்டு இருக்கீங்களா?
அபிஅப்பாவுக்கு சமைக்க தெரியும். ஆனால் நான் சமைக்க விடுவதில்லை. ஏன்னா சமைத்து கொடுப்பதை மத்தவங்க ருசித்து சாப்பிடனும்னு நினைக்கிறதை விட இதை பதிவாக்கி பின்னூட்டம் எத்தனை வருங்கற கணக்குத்த்தான் அவங்க மனசில் அதிகம் ஓடும். அதனால் சமைக்க விடுவதில்லை. மேலும், என் வேலைகளை மற்றவர்கள் செய்யும் போது எனக்கு திருப்தி வராது. 
கவிதா : ஒரு வீடு கட்டும் போது அத்தியாவசியமாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
பல்வலி வந்தால் உலகிலேயே அதிக வலி அதான் என்போம், வயிற்று வலி வந்தால் அதான் வலி என்போம். அது போல வீடு கட்ட ஆரம்பிக்கும் போது சாயில் டெஸ்ட் அதாவது மண் பரிசோதனையிலேயே அதன் பைலிங், ஃபூட்டிங் எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து விடும். அப்ப ஆரம்பிக்கும் சவால்கள், பிரச்சனைகள் இல்லை. வீடுகட்டி முடித்த பின்னர் காலம், பீம்ல எல்லாம் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகளில் ரஸ்ட் ப்ரூப்ஃ பார்க்காம விட்டா வரும் ஸ்டீல் கேன்சர் எனப்படும் வியாதி வரை சவால் தான் எல்லாமே. அப்போதைக்கு மற்றது மறந்து போய் புதியது தான் நியாபகம் இருக்கும். இதை விரிவாக தான் சொல்ல முடியும். பத்து பதிவா போட மேட்டர் இருக்கு அபிஅப்பாவுக்கு:-))

அணில்: அட இம்புட்டு மேட்டர் உங்களுக்கு தெரியுது அப்புறம் ஏன் நீங்களும் அபிஅப்பா மாதிரி எழுதறது இல்ல?  அபிஅப்பா உங்க கைய கால எல்லாம் கட்டி போட்டு ஹவுஸ் அரஸ்ட் செய்து வச்சி இருக்காறா?
மேட்டர் தெரிஞ்சவுடன் இதை எழுதினால் அதிகபட்சமாக கட்டுமானதுறையை ஒரு இருபது பதிவில் முடிச்சிடலாம். ஆனா இதை எல்லாம் நேரிடை அனுபவத்தால் தான் முழுசா கொடுக்க முடியும். சமீபத்தில் திரு. வேலன் அவர்களின் வீட்டு பிளான் போடும் சாஃப்ட்வேர் பதிவு படிச்சேன், அது போல சில நல்ல பதிவுகள் போடலாம். அதையே தான் திரு.வேலன் மாதிரி இருக்கவங்க எழுதறாங்களே..நான் தேவையா? அவரோட பதிவுக்கு இந்த லிங் பாருங்க. அபிஅப்பா என் கையை கட்டி எல்லாம் போடவில்லை. அப்படியே போட்டா அப்ப என் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என இது வரை அனுபவம் இல்லை.

கவிதா: கோல்டன் ஹவர்ஸ் - (அதிகாலை 4-6 வரை) - இதைப்பற்றிய விளக்கம் சொல்ல முடியுமா?
எப்பவும் 3.30க்கு எழுந்துக்குவேன். காலை 4 மணிக்கு பூஜை செய்ய ஆரம்பித்து 5.30க்கு முடித்துவிட்டு, சில சமயம் படுத்துகூட விடுவேன். அந்த ப்ரம்ம நேரத்தில், நம் மூளை நல்ல புத்துணர்ச்சியுடன் வேலை செய்யும், அப்போது வீசும் காற்று மாசு இல்லாமல் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது, அவற்றை பெறவே இந்த பூஜை நேரம் வீட்டில பழக்கப்படுத்தப்பட்டது. முக்கியமாக பூஜைக்கு எந்த தொல்லையும் இருக்காது

கவிதா: கணவர் - இவங்க ஒரு காலக்கட்டத்தில் மனைவிக்கு இன்னொரு குழந்தையாக ஆகிடறாங்க..- விளக்கம்
கணவரின் மேல் இருக்கும் ஆசையில், அன்பில் எல்லோரும் கணவரை தாயை போல் கவனிச்சிக்குவாங்கத்தான். ஆனா அதையே இவங்க அட்வான்டேஜ் ஆ எடுத்துக்கிட்டு, தன் வேலையை கூட பொண்டாட்டி செஞ்சுட்டா நல்லா இருக்கும் என நினைக்கும் நினைப்பு சோம்பேறி தனத்தின் உச்சம். அதுவும் ஒரு "ஐஸ்" வைக்கும் விஷயம் தான். எனக்கு எதும் தெரியாது. எல்லாம் அவ பார்துப்பா என மற்றவர்கள் மத்தியில் அள்ளிவிடுவது. இது தெரியாத பேக்குகள் அதை பாராட்டா நினைச்சு "ஹய்யோ நான் இல்லாட்டி அவரு சோத்தை எடுத்து காதிலே வச்சாலும் வச்சிப்பாரு' என உருகும் பெண்கள். இதெல்லாம் சுத்த அக்மார்க் அயோக்கியத்தனம்.

கவிதா: அபியை பற்றிய ஒரு பதிவு ரொம்ப கோபமாக எழுதி இருந்தேன். திருமணம் செய்து கொடுத்தப்பின் ஒரு பெண், அவளின் வாழ்நாள் முழுதும் தம் குடும்பத்தின் நலன் கருதி பொறுப்பாகவும், அதற்கான வேலைகளை சரிவரவும் செய்துக்கொண்டு தான் வர வேண்டும். நிற்க, அவள் பிறந்தவீட்டிலாவது எந்த வேலை பளுவும் இல்லாமல் சந்தோஷமாக வைத்திருக்கலாமே? ஏன் அவளைக்கும் இந்த வயதிலேயே பொறுப்புகளை கொடுக்கிறீர்கள்?
குழந்தைகளுக்கு அவங்க அவங்களுக்குன்னு வேலையை பிரிச்சு கொடுத்து செய்ய பழக்கனும். முதலில் தான் சாப்பிட்ட தட்டை கழுவ சொல்லி பழக்க ஆரம்பிக்கனும். பின்னே டாய்லெட் போனா தானே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லி தரனும், அப்புறம் படிப்படியாக எல்லாம் சொல்லித்தர வேண்டியது தான். இதிலே ஆண் குழந்தை, பெண் குழந்தை பாகுபாடு பார்க்கக்கூடாது. அபிக்கும் தன் வேலையை தானே செய்ய சொல்லி பழக்கி வைக்கிறேன். நட்டுவுக்கும் பழக்குவேன். ஆண் குழந்தையையும் வேலை செய்ய சொல்லி பழக்கும் போது, நாளை வரும் மனைவியை அவன் அவனுடைய வேலையை செய்ய சொல்ல மாட்டானே

இதிலே கொடுமை சில பேர் பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக அப்பாக்கள் "அய்யோ அவ போற இடத்திலே தான் கஷ்ட்டப்பட போறாளே, என் வீட்டிலாவது சந்தோஷமா இருக்கட்டும்" என சொல்லி தன் மனைவியை கஷ்ட்டப்படுத்துவாங்க. என்னய்யா இது அப்ப உன் மனைவியும் இன்னும் ஒரு அப்பனுக்கு பொண்ணு தானே என்கிறது தெரியலையா. நீ பெத்த பொண்ணுன்னா ஒரு சட்டம்.இன்னும் ஒருத்தன் பொண்ணுன்னா ஒரு சட்டமா.?. அதாவது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன பின்னே அடிமை வாழ்க்கை வாழனும் என மனதளவில் மறைமுகமாக தயார் படுத்துறான் ன்னு அர்த்தம். .

அணில் : யக்கோவ் வுட்டா அம்மணி உங்களையும் அவிங்களமாதிரி டென்ஷன் கேஸா மாத்திடுவாங்க. .சோ நீங்க எனக்கு பதில் சொல்லுங்க... உங்களோட ஸ்கூல், காலேஜ், ஆபிஸ் பிரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க... இன்னும் அவர்களோட கனக்ஷன் இருக்கா.. ?
இல்லை. அணில். எனக்கு அத்தனை நண்பிகள்,நண்பர்கள் இல்லை. இப்போது பழக்கமும் விட்டு போச்சு.

கவிதா : நேரம் காலம் இல்லாம இந்த அபிஅப்பா  யாரையாச்சும் விருந்துக்கு கூட்டுட்டு வராரே... அவரை விறகு கட்டையாலயே அடிக்கனும் போல உங்களுக்கு தோணி இருக்கா.. இல்ல அடிச்சே இருக்கீங்களே.. ?
இல்லை. விருந்து, சமையல் எல்லாம் எனக்கு பெரிய சுமை இல்லை. நான் அபி மாதிரி இருக்கும் போதே சமைக்க தொடங்கிட்டேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால், சீக்கிரமே சமைக்க ஆரம்பிச்சிட்டேன். நான் புகுந்த வீட்டிலும் என் மாமியார் எப்போதும் அனையா அடுக்களைக்கு சொந்தக்காரி ன்னு சொல்லலாம். எப்போது யார் வந்தாலும் நல்ல சாப்பாடு சமைத்து அதிலே ஒரு வகை இன்பம் காணும் குடும்பம். அதனால் எனக்கு சமையல் என்பது ஒரு பிடித்தமான விளையாட்டு.

ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1.ப்ளாக் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு இதுவரை வந்தவர்களை நினைவு கூற முடியுமா? உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்/தோழி யார்?ஏன்?
பிளாக் நண்பர்கள் என சொன்னாசீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர்,முத்து, இம்சைஅரசி ஜெயந்தி, கவிதாயினி காயத்ரி, இராம், ஜி(ஜியாவுதீன்), கோபி, சென்ஷி, ஆயில்யன், நாமக்கல் சிபி & அவரோட மனைவி, பாலராஜன் கீதா, தினேஷ், மாலா(நட்புவலை), கீதாம்மா, வழிப்போக்கன் யோகேஷ், வேலன் அண்ணாச்சி, கும்க்கி, சஞ்சய், மங்களூர்சிவா, இம்சைவெங்கி, இளையகவி கணேஷ்குமார், குசும்பன்,ஷோபா அக்கா, மாயவர்த்தான், நீடூம்நிஜாமுதீன் இன்னும் சிலர் பெயர் உடனே நியாபகம் வரவில்லை. இன்னும் நாகைசிவா, சுரேகா, ஜி3, ஜே கே போல பலரை குசும்பன் திருமணத்தில் பார்த்தேன். நான் போன வலைபதிவர்கள் வீடு என்றால் சீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர், மயில் விஜி, மஞ்சூர் ராஜா வீடுன்னு போயிருக்கேன். கோவை போன போது சந்தனமுல்லை, தாரணி பிரியா, வீட்டுபுறா சக்தி, செல்வா ஆகியோரை பார்த்து இருக்கேன்.  எனக்கு நண்பர்கள் வட்டம் தனிப்பட்டு இல்லை.அபிஅப்பாவுக்கு நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் ஆகிவிடுவது தான் வழக்கம்..

2.அபி - நட்டு - இரு குழந்தைகளிடம் உங்களின் மனம் கவர்ந்த விஷயம் என்ன? 
அபியிடம் சின்சியாரிட்டி. எதிலும் ஒரு வரைமுறை இருக்கும். கோடு போட்டு வாழும் வாழ்க்கை. அது பிடிக்கும். 
நட்ராஜிடம் ரெஸ்பான்சிபிலிட்டி. எதிலும் ஒரு பொறுப்பு இருக்கும். டாய்லெட் போகும் போது லைட் போட்டு போனால் கூட வரும் போது சேர் எடுத்து போட்டு ஆஃப் செய்து விட்டு வருவதும், கேட் திறந்து வைக்காமல் அதை சாத்தி விட்டு வருவதும், வீடு பூட்டிய பின் அதை இழுத்து பார்ப்பதும், சிலேட்டில் எழுதிய பின் அதை உள்ளே வைக்கும் போது அழகாக அழித்து விட்டு வைப்பதும்

3.அபிஅப்பா வின் மைனஸ் , ப்ளஸ் என்ன? (பர்சனலாக இருந்தால் இந்த கேள்வி வேண்டாம்)
அவங்க மைனஸ், பிளஸ் இரண்டுமே ஒரே விஷயமாக தான் இருக்கும் எல்லா விஷயத்திலும். எந்த கெட்ட பழக்கம் ஆனாலும் அதில் எக்ஸ்ட்ரீம் லெவல் வரை போவது பெரிய மைனஸ் பாயிண்ட் அதை ஒரே நாளில் தூக்கி போட்டு பின்னர் அதை சீந்தாமல் ஒதுக்குவது பிளஸ் பாயிண்ட். அது போல முக்கியமான ஒன்று he is an unperdictable man.  அவரை எளிதில் கணிக்க முடியாது.

4. எது உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு பூரண திருப்தி அளிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? ஏன்? 
அஃப்கோர்ஸ் கணவர், குழந்தைகள், குடும்பம் எல்லாமே பூரணதிருப்தி தான்.

5.உங்களுக்கு பிடித்த நடிகர், கலர், உணவு, சினிமா, உடை ? 
சினிமாவில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் இந்த நடிகர் படம் பிடிக்கும்னு ஆசையாக எல்லாம் பாக்கமாட்டேன். கலர் பற்றி கவலைப்பட்டது இல்லை. எதுனாலும் ஒக்கே தான். உடை - புடவை மட்டுமே. காட்டன் புடவை பிடிக்கும். படிக்கும் காலத்தில் ஜீன்ஸ் போட்டதுண்டு. அதும் சைட் விசிட்க்கு மட்டுமே.

6. பொது வாழ்க்கையில் உங்களை கவர்ந்த அல்லது பிடித்த பெண் /ஆண் யார்?
கர்மவீரர் காமராஜர், ராஜீவ்காந்தி, பெரியார், அன்னை இந்திராவை, விஜயலெஷ்மி பண்டிட்டை பிடிக்கும், கலைஞரின் மகள் செல்வி' யை மிகவும் பிடிக்கும்.

7. கலைஞர் - பிடித்த பிடிக்காத விஷயங்கள்
பிடித்தது : உழைப்பு, பிடிக்காதது : ஒன்றும் இல்லை.

8. உங்கள் பிறந்தவீட்டில் இருந்த ஒன்று புகுந்த வீட்டில் இல்லாதது - நீங்கள் மிஸ் பண்ற ஒரு பொருள்
அம்மாதான். ஆனால் பொருள் என்று கேட்டதால் எதும் இல்லை. என் உண்டியல் முதல்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வந்துவிட்டேன்:-)

9. இசை ஆர்வம் பற்றி. பிடித்த இசை, இசைக்கலைஞர்.
எனக்கு அண்ணன் முறையான திரு.மாணிக்கவினாயகம் தான். காரணம்  என்னை குழந்தை முதல் அவர் பார்க்கும் போது எல்லாம் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்ற கீர்த்தனையை பாடுவார், அது பிடித்து போனது. என் பெயரில் பாடுவதால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது போல அவர் பாடலில் தாளம் கட்டுக்குள் அடங்கி வரும். கைமீறி போகாது. ஒரு சிக்கனமான குடும்ப தலைவி குடும்பம் நடத்துவது போல தாளம் கட்டுக்குள் இருக்கும். ஸ்ருதி பிசகாது. அது போல டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடும் போது பிருகா அடிக்கும் வேகம்.... ஆலாபனையின் போது சர்னு ஒரு பிருகா அடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பி கேட்பேன். அது போல பெண்களில் எஸ். வரலஷ்மி. அதே டைப் பிருகா அடிப்பதில் கெட்டிகாரங்க. ரொம்ப பிடிக்கும். 

ஹைலைட்ஸ்:

1. கேள்வியை அனுப்பி, அபிஅப்பாவின் தலையீடு இருக்கவே கூடாதுன்னு பலமுறை சொல்லியும், ஒன்னும் நடக்கல, நானும் விடல, அபிஅம்மாவும் விடல. இருவரும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கடைசி நேரத்தில் அபிஅப்பா வின் எக்ஸ்ட்ரா மேட்டர் எல்லாத்தையும் எடுத்துவிட்டோம்.(எங்களோட கூட்டு சதி ன்னு சொல்லமுடியாது, 2 பெண்களும் சேர்ந்து, சதியை மதியால் வென்றோம்னு சொல்லிக்கலாம் :), அபிஅம்மா கைக்கொடுங்க..:)) )

2. அபிஅம்மா ரொம்ப தெளிவாக இருந்தாங்க. என் கேள்விகளுக்கு அவங்களோட பதில் என்னவாக இருக்கனும், எப்படி இருக்கனும், எது இருக்கக்கூடாது, எந்த வார்த்தைகள் வரனும், வரக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தார்கள். (இது ரொம்ப பிடிச்சிது எனக்கு). சில வார்த்தைகளை குறிப்பிட்டு இப்படி எல்லாம் நான் பேசவே மாட்டேன் எடுத்துடுங்கன்னு ரொம்ப கிளையரா சொல்லிட்டாங்க. ஏனோ தானோன்னு, அபிஅப்பா சொன்னா என்ன தான் சொன்னா என்ன? என்று விடாமல், நிதானமாக, தெளிவாக தன் பதில்களை சொல்லியது மட்டும் இல்லாமல், தேவையில்லை என்று நினைத்த என் பொதுவான கேள்வி ஒன்றையும் எடுங்கன்னு சொல்லிட்டாங்க. 

அபிஅப்பா இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சி இருக்கனும். பல்லாண்டு வாழ்க வளமுடன் !! :)
.