பொதுவாக, டார்ஜிலிங், சிம்லா, மனாலி சுற்றுலா செல்ல காட்டும் முனைப்பு யாருக்கும் 'சிக்கிம்' செல்ல இருக்காது. ஆனால், சிக்கிம் தான் முக்கியமாக பார்க்கவேண்டிய  ஒரு சுற்றுலா இடம்.
 
மேற்கு வங்கத்திற்கு அருகில் இருப்பதால் , அநேகமாக பெங்காலிகள் தான் அதிகம் அங்கே சுற்றுலா செல்கிறார்கள். சிக்கிம் மக்கள் பெங்காலி, ஹிந்தி & நேபால மொழியும் பேசுகின்றனர். விக்கியில் மற்ற தகவல்களை தெரிந்துக்கொள்ளவும்.  

சிக்கிம் சுற்றலா மற்ற இடங்களை போல இல்லாமல், எந்த இடமெல்லாம் போகலாம்,  எவ்வளவு செலவாகும் போன்ற தகவல்களை தெரிந்துக்கொண்டு செல்வது நல்லது. இந்த பயணக்குறிப்பை அதற்காகவே பதிவிடுகிறேன்.  குறிப்பாக தங்கும் விடுதி தவிர, மற்றவை அங்கு போய் புக் செய்துக்கொள்வது நல்லது. பேக்கேஜ்' ஜில் செல்வது அதிக செலவு.

சிக்கிமில் சுற்றிப்பார்க்க மொத்தம் 5 நாட்கள் தேவைப்படும்.  விமானம் மூலம் பாக்தோக்ரா வரை சென்று அங்கிருந்து காங்டாக் கிற்கு காரில் செல்லலாம். ரூ 3500/- ரூ 5000/- வரை வாங்குகிறார்கள். காங்டாக் சிக்கிமின் தலைநகரம். அங்கிருந்து தான் மற்ற இடங்களுக்கு
செல்வது எளிது. விமான நிலையத்திலிருந்து யாருடனாவது சேர்ந்து சென்றால் செலவு குறையும். பேரூந்திலும் செல்லலாம், ஆனால் சிலிகுரியிலிருந்து தான் நேரடி பேரூந்து இயங்குகிறது. ரயிலில் சென்றால் நியூ ஜல்பாய்குரி வரை சென்று அங்கிருந்து காரிலோ, பேரூந்திலோ காங்டாக் செல்லலாம்.   காங்டாக் கில் தங்க இங்கிருந்து புக் செய்து செல்வது நல்லது. ஒரு நாளைக்கு 1000-2000 ரூ வரை நல்ல அறைகள் கிடைக்கும்.

இங்கு சுற்றுளா செல்ல ஜீப் புகள் தான் பயன்படுத்தப்படுகின்றன. 8 பேர் செல்லக்கூடிய இடத்தில் 10 பேரை ஏற்றி செல்கின்றனர். அதிகமாக Bolero, Innova  வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன. தனி வண்டியில் செல்ல வேண்டுமானால் அதிகமான பணம் கேட்கிறார்கள். 4500 ரூ வாங்குமிடத்தில் 12-15 ரூ ஒரு நபருக்கு கேட்கிறார்கள்.  

1. காங்டாக்; சுற்றியுள்ள இடங்களை பார்க்க ஒரு நாள் தேவைப்படும். ஒரு ஆளுக்கு ரூ 1000 

2.  லாச்சங்***, லாச்சன்** செல்ல 2 இரவு 3 பகல் தேவைப்படும். இதற்கு ஒரு ஆளுக்கு ரூ 4500/- தங்குமிடம், சாப்பாடு அடக்கம்.  ஒரு வண்டிக்கு 10 பேர், அதனால், புத்திசாலித்தனமாக, என்ன வண்டி, தனி இருக்கை கிடைக்குமா போன்ற தகவல்கள் விசாரித்து செல்வது நலம். இடநெருக்கம், 3 நாள் மோசமான மலை சாலைகளில் பயணம் சிரமத்தை தரும். அதே சமயம் மலை சாலைகளின் இயற்கை எழில் இவற்றை மறக்க செய்யும்.

**லாச்சனிலிருந்து தங் 'பள்ளத்தாக்கும், அதைத்தாண்டி 18 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கும் குருதோங்மார் ஏரியும் வாழ்நாளில் பார்க்கவேண்டிய இடங்கள். குருதோங்மார் ஏரியில் ஆக்சிஜன் அளவு 3% மட்டுமே இருப்பதால், இரத்த அழத்தம், இருதய பிரச்சனை, மைக்ரேனி தலைவலி, வெர்டிகோ தலைசுற்றல் இருப்போர் இங்கு சென்று வருவது சிரமம். போர்ட்டபுல் ஆக்சிஜன் கையில் எடுத்துச்செல்வது நல்லது. இஞ்சி துண்டுகளை பொடியாக நறுக்கி அதை மென்று சாற்றை விழுங்கிபடி செல்லலாம். தலைச்சுற்றல் மயக்கம் வாந்தி போன்றவை கட்டுக்குள் இருக்கும். 

குருதோங்மார் ஏரியில் வெர்ட்டிகோ தலைசுற்றல் காரணமாக நினைவு தப்பி மயக்க மடைந்த எனக்கு, தகுந்த நேரத்தில் ஆக்சிஜன் கொடுத்து முதலுதவி செய்து என்னை நினைவுக்கு க்கொண்டு வந்தனர் நம் ராணுவ வீரர்கள். கண் விழித்து, என்னால் தனியாக நடந்து செல்ல முடியும் என்ற நம்பிக்கை அவர்களுக்கு வந்தப்பின்னரே அனுப்பி வைத்தனர்.  படுக்கையின் இரண்டு பக்கமும் இரு வீரர்கள் நின்று என்னை கவனித்தது மறக்க முடியாத நிகழ்வு.  என்னுடன் வந்த 25-27 வயதுடைய ஒரு பையனுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது, நான் மயக்கமுற்றதால் எனக்கு முதலுதவி உடனே கொடுக்கப்பட்டது. எனக்கு நினைவு வந்ததும், அந்த பையன் என் எதிரில் உட்கார்ந்திருப்பதை ப்பார்த்து, வீரர்களிடம், கையைக்காட்டி அந்த பையனை கவனிக்கும்படி சகை செய்தேன். இருவருமே ஒரே நேரத்தில்... ' முதல்ல உன்னைப்பாரு, அவனை நாங்கள்  பார்த்துக்கொள்கிறோம், உனக்கே முடியலையாம்,இதுல அவனை கவனிக்க சொல்றியா' என்று என்னை மென்மையாக கடிந்துக்கொண்டு, ஒருவர் அந்த பையனை இன்னொரு படுக்கைக்கைக்கு அழைத்து சென்றார், ஒருவர் என்னைவிட்டு விலகவேயில்லை.  அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி.

வாழ்நாளில் ஒருதரமாவது இங்கு சென்று, அதன் அழகை ரசிப்பது வரம். இது புனித ஏரியாக கருதுப்படுவதால், இங்கே வழிபாடுகளும் நடைபெறுகின்றன. என் கணவர் கீழே இறங்கி சென்று கற்கள் அடுக்கி, பணம் வைத்து, ஏரி நீரை தலையல் தெளித்துக்கொண்டு, எங்களுக்கும் ஒரு பாட்டலில் எடுத்து வந்திருந்தார், இவர் வர கால தாமதமான நேரத்தில் தான் நான் மயங்கியும் போனேன்.

*** லாச்சாங்கிலிருந்து யும்தாங் பள்ளத்தாக்கின் வழியாக 15 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் zero point க்கு அழைத்து செல்கிறார்கள். இதற்கு தனியாக ரூ300/- ஏனென்றால் இது பல
நேரங்களில் மூடி இருப்பதால், நாம் செல்லும் போது திறந்திருந்தால் மட்டுமே செல்லமுடியும். இது கிட்டத்தட்ட டார்ஜிலிங், சிம்லா போன்றதொரு பனிமலை பகுதி, இங்கும் அதிக குளிர் காரணமாக வெகு நேரம் இருக்க முடியாது. தவிர, மேற்சொன்ன உடல் உபாதை இருப்பவர்கள் செல்வது சிரமமே. 

3. நாதுலா - இது சீனாவின் எல்லையொட்டிய பகுதி, நம்முடைய எல்லையில் இருந்து சீனாவில் எல்லையை மதில் சுவரை எட்டிப்பார்ப்பது போல பார்க்க முடிகிறது. இதுவும் 14 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கிறது.  இங்கு செல்லும் போது 3a. ச்சாங்கு ஏரி, இங்கு அலங்கரிக்கப்பட்ட காட்டு எருதுவை பார்க்கலாம், பணம் கொடுத்து அதன் மேல் சிறிது தூரம் பயணம் செய்யலாம். 3b. பாபர் மந்திர்  & உலகின் மிக உயரத்தில் ஆர்கானிக் முறையில் கட்டப்பட்ட மிகப்பெரிய சிவன் சிலை அமைந்துள்ளது.  

நம் ராணுவ வீரர்கள் மேற் சொன்ன தங், யும்தாங், நாதுலா பகுதிகளில் கடும் குளிர் மற்றும்,
ஆக்சிஜன் பற்றாகுறையான இடத்திலிருந்து இரவு பகல் பாராமல் தொடர்ந்து எல்லை கண்காணிப்பு & பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். 
 
4.  நம்ச்சி ;- இது ஒருநாள் பயணம். ஒருவருக்கு ரூ 1000. 4a. Samdruptse Hill, 4b. ச்சார்தம் இரண்டும் இரண்டு மலை உச்சியில் எதிர் எதிர் திசையில் அமைந்துள்ளது.

இவற்றைதவிர 5. ரவான்ங்லா, 6. பெல்லிங் போன்ற இடங்களும் பார்க்க வேண்டியவை நேரமின்மை & சரியான திட்டமில்லாமல் சென்றதால் போக முடியவில்லை. 

உணவு ; மோமோஸ்  எப்போதும் கிடைக்கும். சாதம், பருப்பு, காய்கறியோடு சிக்கன், மட்டன் , முட்டை உணவுகள், நூடுல்ஸ் கிடைக்கும்.  காங்டாக்கில் எம் ஜி ரோடு கடைகள்,  இங்கு எல்லா வகையான உணவு விடுதிகள்  இருக்கின்றன.  தங்கும் விடுதிகளும் எம் ஜி ரோடு அருகில் புக் செய்தால் எல்லா இடங்களுக்கும் செல்ல வசதியாக இருக்கும்.

அதிக குளிர்/பனி படர்ந்த மலைகளில் பிரயாணம் செய்வதால், அதற்கு தகுந்த உடைகள் மிக அவசியம். குளிருக்கான ஆடைகள் காங்டாக் கில் வாங்கலாம், மற்ற இடங்களில் விலை அதிகமாக இருக்கிறது. 

சிறந்த மாதம் ; நவம்பர் - ஜனவரி

Photos courtesy : Thx Google