கேப்பங்கஞ்சி'யில் தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு

கேப்பங்கஞ்சி'யில் இன்று தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு'விடம் தேர்தலில் நிற்பதைப் பற்றியும், அவரின் தேர்தல் அறிக்கை பற்றியும் கேள்விகள் கேட்க வேண்டிய சூழ்நிலையை நம் சக பதிவர்கள் ஏற்படுத்திவிட்டனர். அவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்று அவரையே கேட்டுவிடலாம் என்று நினைத்து இமெயிலில் தொடர்பு கொண்டு அவரின் அனுமதி கோரி இருந்தேன். இத்தனை வேலைகளுக்கு நடுவில், அவரும் தன்னை தொலைபேசியில் அழைத்து பதிலை பெற்றுக்கொள்ளுமாறு பதில் அனுப்பி இருந்தார்..

இதில் குறிப்பிட வேண்டியது என்னுடைய கேள்விகள் எதற்குமே அவர் முன்னேற்பாட்டோடு இல்லை அல்லது முன் கூட்டி யோசித்து வைத்தும் பதில் சொல்லவில்லை. மிக எளிமையாகவும் தயக்கமே சிறிதும் இன்றி மனதில் உள்ளதை நிதானமாக உணர்ச்சிவசப்படாமல் சொன்னார். தேர்தல் அறிக்கை பற்றி கேட்ட கேள்விகளுக்கு மட்டும் சற்றே யோசித்து பதில் சொன்னதாக உணர்ந்தேன். இதோ நம்மிடையே தென் சென்னை வேட்பாளர் சரத்பாபு.

கவிதா : ஹல்லோ சரத், கவிதா பேசறேன். எப்படி இருக்கீங்க? அம்மா எப்படி இருக்காங்க...?! நீங்கள் இப்போது என்னுடன் பேச இயலுமா?

கவிதா?!! ...................?!ம்ம்ம்ம் !! ஓ... கவிதா சொல்லுங்க.. ! நான் நல்லா இருக்கேன்.. அம்மா நல்லா இருக்காங்க. நீங்க எப்படி இருக்கீங்க?. தாராளமாக பேசலாம், சொல்லுங்க...

கவிதா:- என்னுடைய கேள்விகளை ஆரம்பிக்கிறேன் சரத், அரசியலில் எந்த முன் அனுபவம் இன்றி, இது வரையில் எந்த ஒரு சிறிய பதவியும் வகுத்திராத நீங்கள் எப்படி இந்த தேர்தலில் போட்டி இடுகிறீர்கள்?, ஏழ்மையிலிருந்து வந்தவர், இளைஞர், படித்தவர் என்ற தகுதியை தவிர்த்து அரசியலுக்கு வர வேறு என்ன தகுதி இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்.

கவிதா, முதலில் நாம் மக்களின் Basic Concept, Mindset ஐ மாத்தனும். அரசியல் பின்னணி இல்லாமல் ஏன் ஒரு இளைஞர் தேர்தலில் நிற்க கூடாதுன்னு நாம் யோசிக்கவேயில்லை. அதோடு, இந்தியாவில் தேர்தலில் நிற்கும் முதல் இளைஞன் நான் இல்லை. இதுவரையில் எத்தனையோ பேர் நின்றிருக்கிறார்கள். எடுத்துக்காட்டு, ராஜிவ் காந்தி, ராகுல் காந்தி. சச்சின் பைலட், ஜோதி ஆதித்யா சிந்தியா, பிரியா தத், மு.க.ஸ்டாலின் போன்றோர். ஆனால் அவர்களுக்கு எல்லாம் அரசியல் பின்னணி இருந்தது, செல்வாக்கு, குடும்ப பாரம்பரியம், பணம் இருந்தது, அதனால் அவர்களை நாம் இப்படி கேள்விக்கேட்டு கொண்டு இருக்கவில்லை.

அரசியலை விட மோசமான பல விஷயங்களை நான் என் வாழ்க்கையில் கடந்து வந்து இருக்கிறேன். அதனால் அரசியல் எனக்கு பெரிதல்லவே, அரசியலில் சாதிக்க முடியும், எதையும் சமாளிக்கமுடியும் என்ற தன்னம்பிக்கை இருக்கிறது, அதற்கான முதிர்ச்சியை என் அனுபவம் எனக்கு கொடுத்துள்ளது.

கவிதா: பசியில்லாத இந்தியா உங்கள் கனவு, தேவைப்படுபவர்களுக்கு உதவ நினைக்கிறீர்கள், அதற்கு அரசியல் அவசியமா? ஏன் தனிப்பட்ட முறையில், சில பிரபலங்கள் செய்து வருகிறார்கள் அப்படி செய்யலாம் இல்லையா? அரசியலை தேர்ந்தெடுக்க காரணம் என்ன?

அரசியலில் இருந்தால் மட்டுமே நல்லவிதமான மாற்றங்களை விரைவில், எளிதில் செய்ய முடியும். தனிமனிதனாக என்னால் எவ்வளவு உதவ முடியும் என்று நினைக்கிறீர்கள்? ஒரு... 1 கோடி ரூபாய்? அதுவே நான் அரசியலில் இருந்தால் மக்களுக்கு அதிகப்படியாக உதவ முடியும். உதாரணமாக 5 வருடங்களில் குறைந்தபட்சம் ஒரு 500 கோடி ரூபாய் மதிப்புள்ள உதவிகளை, நலத்திட்டங்களை அரசின் உதவியோடு என்னால் செய்யமுடியும். தனியாக உதவி செய்வதற்கும் அரசியலில் இருந்து உதவுவதற்கும் உள்ள வித்தியாசத்தை பார்த்தீர்களா? எவ்வளவு? 500 மடங்கு இல்லையா? இவ்வளவு தனியாக செய்தால் முடியுமா.? நீங்கள் குறிப்பிடும் பிரபலங்கள் ஏன் அரசியலுக்கு வரவில்லை என்ற காரணத்தை நீங்கள் எனக்கு சொல்லமுடியுமா? அரசியல் அவ்வளவு எளிதல்ல என்பது அவர்களுக்கு தெரியும் இல்லையா?!

கவிதா: அப்படியென்றால் ஏன் சுயேட்சையாக நிற்கிறீர்கள்? ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து இருக்கலாமே?

கவிதா..:) கவிதா.. :) ! உங்களின் முதல் கேள்விக்கு வாருங்கள், அரசியல் தலைவர்கள் என்னுடைய தகுதிக்கு நாடாளுமன்ற தேர்தலில் நிற்க வாய்ப்பளிக்க சாத்தியக்கூறுகள் இல்லவே இல்லை. :) என்னுடைய qualification எல்லாம் அவர்களின் எதிர்பார்ப்புக்கு எம்மாத்திரம்? அரசியல் கட்சியில் இறங்க என்ன மாதிரியான தகுதிகள், பணம், குடும்ப பின்னணி வேண்டும் என்பதை நான் சொல்லித்தான் உங்களுக்கு தெரிய வேண்டுமா? எனக்கு அப்படி ஒன்றும் இல்லையே. :)

கவிதா: இதுவரை மக்களுக்கு நீங்கள் தனிப்பட்ட முறையில் ஏதாவது செய்ததுண்டா?

நிறைய உண்டு இந்தியா முழுக்கவும் இது என்னுடைய மொத்த நேரத்தில் 400 நாட்கள் ஏழைக்குழந்தைகளுடன் செலவிட்டு இருக்கிறேன். அவர்களுக்கு கல்வி மற்றும் உழைப்பை பற்றிய விழிப்புணர்வு, விளக்கங்கள், ஊக்கங்கள் (Awareness) கொடுப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறேன். 850 நாட்கள் இளைஞர்கள் தொழில் தொடங்க தேவையான அறிவுரை, தொழில் சார்ந்த அறிவு, மனதளவில் அவர்களுக்கு ஊக்கம் கொடுத்து இதுவரை 50 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் என்னால் தொழில் அதிபர்களாக ஆகியிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திருக்கிறார்கள். 3000 மேற்பட்ட மாணவ மாணவியருக்கு அவர்களின் career பற்றிய விழுப்புணர்வையும், ஊக்கத்தையும், ஆதரவையும் தந்திருக்கிறேன்.

கவிதா: உங்களின் படிப்புக்காக இந்திய அரசு எத்தனை செலவு செய்து இருக்கிறது, துறை சார்ந்த தொழில் செய்யாமல் ஏன் இப்படி ஹோட்டல் தொழில் செய்கிறீர்கள்? உங்கள் படிப்பிற்காக இந்திய அரசு செலவிட்டது எல்லாம் வீணாகி அல்லவா விட்டது?

:) ஓ என்னால் இந்திய அரசின் பணம் வீணாகிவிட்டதா? (சிரிக்கிறார்) சரி எனக்கு நீங்கள் ஒன்று சொல்லுங்கள், துறை சார்ந்த தொழில் தொடங்க முதலீடு தேவை, ஒரு மென்பொருள் கம்பெனி தொடங்க குறைந்தபட்சம் 5 லட்சங்களாவது தேவை இல்லையா?, ஒரு சாஃப்ட்வேர் என்ஜினியரின் சம்பளம் என்னவென்பது உங்களுக்கு தெரிந்து இருக்கும். நான் குறைந்த முதலீட்டில் வெறும் 2000 ரூபாயை கொண்டு தொழில் தொடங்கினேன். என்னுடைய முதல் ஆர்டர் 75 டீ, 25 காப்பி. லட்சங்களில் முதலீடு செய்ய இயலவில்லை, அப்படியே முதலீடு செய்தாலும் 100% சக்ஸஸ் ஆகும் என்று சொல்லமுடியாது. Food Industry அப்படி இல்லை. அதனால் என்னால் முடிந்ததை கொண்டும், சாத்தியக் கூறுகளை ஆராய்ந்தும் தொழில் தொடங்கினேன்.

கவிதா மேலும் இப்போது எனக்கு 29 வயது தான் ஆகிறது, என் வாழ்நாள் 60 வயது என்று வைத்துக் கொண்டாலும் எத்தனை வருடங்கள் இன்னும் இருக்கின்றன. இது மட்டுமே என்னுடைய தொழில் இல்லை, என் துறை சார்ந்த மட்டும் இல்லாது குறைந்தபட்சம் 10 இண்டஸ்டீரிஸ் தொடங்கி அதில் என் முத்திரை பதிப்பேன். இன்னும் காலம் இருக்கிறது அல்லவா? கண்டிப்பாக இந்திய அரசாங்கம் எனக்கு செலவிட்ட பணத்தை வீணாக்கமாட்டேன். :)

கவிதா: நீங்கள் அரசியலுக்கு வர நினைப்பது, 1. உங்கள் வியாபாரத்திற்கு விளம்பரம் தேடிக்கொள்ளவும், 2. தேர்தல் நிதி என்று இது வரையில் நீங்கள் சம்பாதிருக்கும் கறுப்புப் பணத்தை எல்லாம் வெளுப்பாக்கிக் கொள்ளவும். - உங்களின் விளக்கம்?!

(வாய்விட்டு சிரிக்கிறார்) எப்படிங்க இப்படி எல்லாம் யோசிச்சி கேள்வி கேட்கறீங்க? விளம்பரமா? யூத் ஜகான் கொடுக்கப்பட்ட போதே எனக்கு தேவையான விளம்பரம் கிடைத்துவிட்டதே? அதையும் தாண்டி என் வியாபரத்திற்கு விளம்பரம் தேவையா?

அடுத்து நிஜமாகவே உங்களின் இரண்டாவது கேள்வியை பற்றி எனக்கு ஒன்றும் தெரியலைங்க. :). நான் சம்பாதிக்கவேண்டும் என்றால் சொன்னேனே 400 நாட்கள், 850 நாட்கள் என்று அந்த நேரங்களை எல்லாம் என் வியாபாரத்தில் மட்டுமே செலவிட்டு இருப்பேன் இல்லையா?. கண் எதிரில் லட்சங்கள் சம்பளத்தில் எனக்கு வேலை கிடைத்த போது அதை புறம் தள்ளிவிட்டு, தொழில் தொடங்கி அதில் என்னால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க எண்ணியவன், கையில் ஒரு 200 ரூபாய் கூட இல்லாமல் மும்பை ரயில் நிலையத்தில் படுத்துகிடந்து இருக்கிறேன். என் அனுபவங்கள் எனக்கு நல்ல விதமான பாடங்களை மட்டுமே கற்று தந்து இருக்கிறது. நான் அதை தவறாக உபயோகிக்க நினைக்கவில்லை. பட்ட அடிமட்ட கஷ்டங்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டிய அவசியம் எனக்கு இல்லை தான் இருந்தாலும் உங்களின் கேள்வி எனக்கு புரியலைங்க.. அப்படியெல்லாம் செய்ய எனக்கு அவசியம் ஏற்படாதுங்க.

உங்கள் தேர்தல் அறிக்கையிலிருந்து சில கேள்விகள்

கவிதா : உங்களின் தேர்தல் அறிக்கை முறையே 1, 2, 3, 6 - இவற்றிக்கு நீங்கள் இதுவரையில் ஏதாவது திட்டம் தீட்டி வைத்து இருக்கிறீர்களா ? அப்படி இருப்பின் பகிர்ந்து கொள்ள முடியுமா?

திட்டம் என்றால், முதலில் நான் நேரடியாக மக்களை தனித்தனியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான விழிப்புணர்வை தருவது, அது யூத் பூத்' கள் மூலமாக நடைபெறும். 100 இளைஞர்கள் முதல் கட்டமாக நேரடியாக கேம்ப் அமைத்து இதில் இறங்குவார்கள், ஒவ்வொரு இளைஞரும் குறைந்தபட்சம் 100 பேருக்காவது வேலைவாய்ப்பு அளிக்க தேவையாக வசதிகள், தொழில் பற்றிய ஆலோசனை வழங்கப்படும். இப்படி கொஞ்சம் கொஞ்சமாக திட்டத்தை விரிவு படுத்துவேன்.

கவிதா:- மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன். - எப்படிப்பட்ட வேலைவாய்ப்புகள் வழங்கப்படும், இதற்கான உங்களின் திட்டத்தின் தொகுப்பு ஏதாவது இருந்தால் விளக்கமுடியுமா?

கவிதா, முதலில் படித்தவர்கள், படிக்காதவர்கள் என்று பிரித்து, படிக்காத முன்னரே சிறுதொழில் செய்துவரும், அதாவது சின்ன சின்ன தொழில் பூ கட்டுதல், காய்கறி வியாபாரம், போன்றவற்றின் கொள்முதலை ஒவ்வொரு ஏரியாவிலும் மையப்படுத்துவேன். ஒரு பூ கட்டும் பெண் செலவு செய்து கோயம்பேடு சென்று வாங்கிவரும் செலவை குறைப்பேன். 50 பேருக்கு ஒருவர் சென்று வாங்கிவந்தால் போதுமே. எவ்வளவு பணம் மிச்சமாகும். இது போல் ஒவ்வொரு சிறுதொழிலிலும் எளிதான முறைகளை செயற்படுத்த தேவையான அறிவுரையை வழங்குவேன். படித்தவர்களுக்கு அவர்களுக்கு ஏற்றது போன்ற வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்பேன். அதற்கான முழு திட்டத்தையும் இன்னும் முடிக்கவில்லை.

கவிதா: வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். - சரத் இதை படித்தவுடன் எனக்கு சிரிப்பு தான் வந்தது, முடியும் என்பதை ஆராய்ந்து கொடுக்கப்பட்ட அறிக்கையா? வேளச்சேரி வெள்ளபிரச்சனைக்கு இதுவரை அரசு செய்துள்ள திட்டம் தோல்வி, அகலமான ரோடுகள் குறுகிவிட்டன. அதுதான் மிச்சம். நீங்கள் இந்த கேள்விக்கு டெக்னிகலாக எப்படி சாத்தியம் என்று பதில் சொல்ல முடியுமா?

கவிதா, நான் ரொம்பவெல்லாம் ஆராயவில்லை. ஆனால் முடியும். துறை சார்ந்த வல்லுநர்களின் உதவியோடு ஒரு குறிப்பிட்ட இடத்தை தேர்ந்தெடுத்து அங்கே ஒரு ஏரியை உருவாக்கி, நகரில் நீர் நிற்காமல் அதில் வெள்ளநீரை கொண்டு சேர்க்க முடியும்.

80% குப்பை மக்கும் குப்பையாக இருப்பதால், அதற்கென ஒரு ப்ளான்டை ஏற்படுத்தி குப்பைகளை உரங்களாக மாற்றி, அந்த உரங்களையும் சென்னையிலுள்ள செடிகளுக்கும் மரங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

கவிதா : சரத், மிக்க நன்றி ! உங்களின் பதில்கள் உங்களை ஆதரிக்கும், எதிர்க்கும் அனைவருக்குமே நல்ல விதத்தில் பயன்படும் என்று நம்புகிறேன். :)

மை ப்ளஷர் கவிதா. !!

மாற்றம் அவசியம் மக்களே சரத்பாபுவை மனதில் வையுங்கள் !

Mr. E. Sarath Babu's Graduation at BITS , Pilani, PGP IIM Ahmedabad. தெற்கு சென்னை தொகுதியில் தேர்தலில் நிற்கும் திரு.சரத்பாபுவிற்கு வாய்ப்பு கொடுங்கள்.

தன் சொந்த வாழ்க்கையில் சாதித்தவர், இனியும் சாதிப்பார். இவரை பற்றி அறியாதவர் இல்லை. உழைப்பு, நல்ல படிப்பு, அன்பு, பன்பு, பொறுப்பு, நேர்மை இத்தனையும் ஒன்று சேர்ந்த இளைஞர்...

உங்கள் வாக்குகளை இவருக்கு அளித்து நமக்கு நாமே ஒரு மாற்றத்தை ஏற்படுத்திக்கொள்ள ஒரு வாய்ப்பு கொடுங்கள்.

நம்ம வெட்டி'யின் பதிவை இப்பத்தான் படித்தேன்.. சரி நமக்கு தோன்றிய சிலவற்றை சேர்ப்போம் என்று.......

ஏன் சரத்பாபு ?!

படிப்பை முடித்து தனக்கு கிடைத்த மிக சிறந்த வெளிநாட்டு / உள்நாட்டு வேலை வாய்ப்புகளை தேர்ந்தெடுத்து சுயநலமாக தன் வாழ்க்கையில் செட்டில் ஆகிவிடாமல், தனெக்கென ஒரு லட்சியத்தை கொண்டு, தனியாக தொழில் தொடங்கி (அதுவும் அவர் அம்மாவின் உழைப்பை பார்த்து), அதில் தற்போது 200 நபர்களுக்கு வேலை வாய்ப்பும் அளித்திருக்கிறார். இது அவருடைய வாழ்க்கை மட்டும் இல்லை, தான் எப்படி இருக்கவேண்டும், தன்னால் எப்படி இருக்க முடியும் என்பதை முடிவு செய்பவராகவும் இல்லாமல் அதை நடைமுறையில் செயற்படுத்தியும் காட்டியுள்ளார்.

இதில் குறிப்பிட்டு நான் சொல்ல ஆசைப்படுவது, ஐ.ஐ.எம் போன்ற உலகத்தரம் வாய்ந்த இன்ஸ்டியூஷனில் படிப்புகளை முடிக்கும் முன்னும், முடித்தவுடனும், மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை நான் நேரில் கண்டு வியந்து இருக்கிறேன். என் கணவர், சென்னை ஐ.ஐ.டி, மற்றும் கோழிக்கோடு ஐ.ஐ.எம் இல் வேலை பார்த்திருந்த போது நேரடியாக அந்த மாணவர்களின் பட்டியலையும் அவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளும் கண்டு(மாத சம்பளம் உட்பட) வியந்திருக்கிறேன். அதை எல்லாம் எளிதாக புறம் தள்ளியவர் சரத்பாபு என்பது குறிப்பிட தக்கது.

அடுத்து இதுவரையில் ஊழல் செய்து சுரண்டியவர்களையே தேர்ந்தெடுத்து நாம் தோற்று போகாமால், சரத்பாபுவை தேர்ந்தெடுத்து, அவரும் வெற்றிப்பெற்று நாமும் வெற்றி பெற ஒரு வாய்ப்பு கொடுக்கலாமே...

மேலும் இவரை பற்றி அறிய

http://sarathbabu.co.in/
http://sarathbabu.co.in/in/
http://kanaguonline.wordpress.com/2009/04/15/good-one-series-3-mresarath-babu/
http://foodkingindia.com/index.html

சரத்பாபுவின் தேர்தல் அறிக்கை :-

நாடாளுமன்றத் தேர்தலில் தென்சென்னைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடும் நமது 'யூத் ஐகான்' சரத்பாபுவின் முக்கிய இலக்கே, 2025-க்குள் 'பசியில்லாத இந்தியா'வை உருவாக்குவதுதான்!

இளைஞர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் துணையோடு தென்சென்னையில் களமிறங்கும் சரத்பாபுவின் 10 முக்கிய அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கை இதுதான்...

1. தென் சென்னையில் 20 ஆயிரத்துக்கும் மேலானோருக்கு அனைத்து வகையான தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்படும்.
2. அனைத்துப் பகுதியிலும் தூய்மையானதும், சுகாதாரமானதுமான குடிநீர் வசதி. குறிப்பாக குடிசை, குடியிருப்பு பகுதிகள் மற்றும் பள்ளிகள் ஆகியவை கருத்தில் கொள்ளப்படும். உலக சுகாதார நிறுவனத் தரத்துடன் அவசர சேவைகள் பெறுவதில் எளிதாக்கப்படும். பள்ளிகளின் நிலைகள் மேம்படுத்தப்படும்.
3. மாநில அரசின் உதவித் திட்டங்களுடன் ஏழை மற்றும் ஊனமுற்ற மூத்தக் குடிமக்களுக்கு உணவு, வசிப்பிடம், சுகாதார வசதிகள் பெற வழிவகை செய்யப்படும்.
4. ஒவ்வொரு வார்டிலும் ஒரு இளைஞர் நிலையம் (யூத் ஸ்டேஷன்) அமைக்கப்படும். இதுபோல் மொத்தம் 50 நிலையங்கள் அமைக்கப்பட்டு, குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றி எடுத்துரைக்கப்படும். இதன் மூலம் தென்சென்னையில் முறைகேடு, புகார்கள் போன்றவற்றை சரத்பாபுவிடம் நேரடியாக தொகுதி மக்கள் கொண்டு செல்ல வழிவகுக்கப்படும்.
5. செல்பேசி சேவை நிறுவனங்களை அணுகி, இரண்டு ஆண்டுகளுக்கு ரூ.2,400 என்ற வாடகைக்கு இரண்டு மொபைல் ஃபோன்களுடன் சேவை வழங்கும் ஜாயின்ட் பேக்கேஜ் திட்டம் கேட்கப்படும். இது, மக்களுக்கு மாதம் ரூ.100 வாடகை செலவு மட்டும் ஆகும் வகையிலேயே வழங்க முயற்சிக்கப்படும்.
6. பாதுகாப்பான போக்குவரத்துக்கு வழிவகை செய்யும் நோக்கத்தில், சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மக்கள் பாதுகாப்புடன் பயணம் மேற்கொள்வதற்கு உரிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்.
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்பு உணர்வு ஏற்படும் வகையில், குடியுருப்பு நலச் சங்கங்கள் முதலிய அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயல்புரிவேன். அதன் வாயிலாக, தென் சென்னை தொகுதியில் நாளொன்றுக்கு 60 மரக்கன்றுகள் நடப்படும். ஐந்து ஆண்டுகளில் மொத்தம் 1,08,000 மரங்கள் நடப்பட்டு சுற்றுச்சூழல் பாதுகாக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.
8. மகளிர் மேம்பாட்டுக்கென அனைத்து இல்லத்தரசிகளுக்கும் வங்கிக் கணக்கு துவக்கப்படும். வீட்டில் உள்ள பெண்கள் வருவாய் ஈட்டும் வகையில் நல்ல வாய்ப்புகளும் திட்டங்களும் அறிமுகப்படுத்துவேன். இந்தத் திட்டத்தில் நான் நேரடியாகவே ஈடுபடுவேன்.
9. கணினி போன்ற தொழில் நுட்பத்தின் துணை கொண்டு இளம் தலைமுறையினரின் கல்வித் திறனை மேம்படுத்துவேன். இரண்டு ஆண்டுகளில் 80% கணினி அறிவு எட்டப்படுவதே இலக்கு. இதற்கென பயிற்சி நிலையங்கள் அமைக்கும் நிறுவனங்கள் ஊக்குவிக்கப்படும். ஆசிரியர்களின் உதவியுடன் கல்வித் திட்டத்தின் தரம் உயர்த்தப்படும்.
10. இரு வழி தொடர்பு முறை மூலம் நமது தொகுதியிலுள்ள ரேஷன் வினியோக குறைபாடுகள், வேளச்சேரியில் வெள்ளத் தேக்க பிரச்னை, பெருங்குடியில் குப்பை மேடுகள் மிகுதியாவது போன்ற அனைத்து பகுதியிலுள்ள பிரச்னைகளுக்கும் தேர்வு காணப்படும். அதாவது, எல்லா வித பிரச்னைகளையும் என்னிடம் நேரடியாக தெரிவித்து தீர்வு காணப்படும்.


நன்றி :- யூத் விகடன் http://youthful.vikatan.com/youth/sarathbabu17042009.asp

அணில்குட்டி அனிதா : ஆஹா அம்மணி இதை எல்லாம் ஆரம்பிச்சிட்டாங்களா... நானே கொஞ்சம் தள்ளி நின்னுக்கறேன்.. !!!

பீட்டர் தாத்ஸ் :- Leadership: the art of getting someone else to do something that you want done because he wants to do it

வெறுமை.....


எழுதவே தோன்றாத

வெறுமை


எத்தனை மாறினாலும்

மாறாத மனித குணங்கள்


எத்தனை அழுதாலும்

நிற்காத கண்ணீர்


எத்தனை சிரித்தாலும்

போகாத துக்கம்


எத்தனை எழுதினாலும்

திருப்தியே அளிக்காத எழுத்து


எத்தனை பாசம் வைத்தாலும்

வேசமாக போகும் தருணங்கள்


எத்தனை நேசித்தாலும்

புரிதல் இல்லாத உள்ளங்கள்


எத்தனை சுற்றி வந்தாலும்

சேருமிடமோ அதே இடம்


எத்தனை வாழ்க்கை என்னுள்???!!!

ஒன்றுக்கே இத்தனையா??????!!


என்றோடு முடியுமோ...

இந்த வாழ்க்கை

இனியும் தொடருமோ

இந்த வெறுமை...



ஆன்(ண்) லைன் நண்பர்கள் - 2

அணில் குட்டி அனிதா : ம்ம்..அடுத்து இலியாஸ், அம்மணி ஆடி போயிட்டாங்க இல்ல.. இவரு கிட்ட பேச ஆரம்பிச்சி ஆட்டங்கண்டு போயி சேட்'டவே ஒரு பிரேக் எடுத்தாங்க... .அம்மணிய ஆடவச்சவரு கதைய கேட்டு நீங்களும் ஆடி போவிங்களாம்...

* * * * * * * * * * * * * * * * ** * *
பப்ளிக் சேட் சென்ற போது இலியாஸ் தான் முதன் முதலில் பிங் செய்து என்னை அவரே ஆட் செய்தார். ரொம்பவும் மரியாதையுடன் பேசுவார். +1 படித்துக்கொண்டு இருந்த இவர் பாகிஸ்தானை சேர்ந்தவர். இவரைப்பற்றி சொல்வது என்றால் Pious Musulman எனலாம், மாணவராக இருந்தாலும் கடவுள் பக்தி நிறைந்தவராகவும், பேச்சில் நிதானமும், அன்பும் நிறைந்தவராகவும் தெரிந்தார். அந்த வயதுக்கு தகுந்தார் போன்று இல்லாமல் மிகவும் முதிர்ச்சியுடைவர் போன்று பேசுவார். நிறைய அறிவுரை சொல்லுவார். அவர் எனக்கு சொல்லிய ஒரு அறிவுரையோடு ஆரம்பிப்போம்.

"தவறான எண்ணத்தோடு உன்னிடம் பேசவோ பழகவோ தொடவோ வரும் ஆண்கள் எல்லாம் மனதளவில் கோழைகள். அவர்களை நீ தைரியமாக எதிர் கொள்ளலாம், பயந்து பின் வாங்குவார்கள், அவர்களை கண்டு ஒரு போதும் நீ பயம் கொள்ளாதே. நீ ஒதுங்கி போகாதே அவர்களை உன்னை விட்டு ஒதுங்கி போகுமாறு உன் வார்த்தைகளை கடுமையாக்கிக்கொள். பயந்து , புறமுதுகிட்டு ஓடுவார்கள்"

இவரிடம் இன்னொரு விஷயம் எப்போதும் உருதுவில் வணக்கம் சொல்லி ஆரம்பிப்பார். அவரை பார்த்து நானும் சொல்லுவேன்.

முழுமையாக அவருடைய சேட் ஐ எழுத ஆரம்பித்தால் நீங்கள் எல்லாம் குறட்டைவிட ஆரம்பித்துவிடுவீர்கள். அதனால் தேவையானது மட்டும்...

"கவிதா நான் தோற்றத்தில் எப்படி இருப்பேன் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்"

"நீங்கள் ஒரு மாணவர், வயதுக்கேற்றார் போல் இருப்பீர்கள், இஸ்லாமியர் என்பதால் நல்ல கலராக இருக்க வாய்ப்புகள் அதிகம், வேறு என்ன ? "

"ஹா ஹா.. இல்லை நான் நீங்கள் நினைப்பது போல் இருக்கமாட்டேன்."

"ம்ம்.. இஸ்லாமியர்கள் அணியும் தொப்பி போட்டு இருப்பீர்களோ...? அப்புறம் தொழுகை செய்வதால் நெற்றியில் வடு இருக்குமோ..?!!"

"ஹா ஹா.. தொப்பியும் அணிவேன்... "

"எனக்கு தெரியவில்லை.. எனக்கு போட்டோ அனுப்புங்கள் பார்க்கிறேன்.."

"என்னுடைய போட்டோ எதுவும் இல்லை. நானே சொல்கிறேன்.. ஓரளவு உயரம், ரொம்ப குண்டு இல்லை, நீளமான தாடி வைத்திருப்பேன், பைஜாமா குர்தா மட்டுமே எப்போதுமே என் ஆடையாக இருக்கும்'.

"ஓ... தாடி எல்லாம் வைத்து இருப்பீர்களா? பள்ளியில் அனுமதி உண்டா..?"

"உண்டு "

"ஏன் நீங்க இந்த வயதில் இப்படி இருக்கனும்? இது தான் அங்கு பழக்கமா? "

"என் வாழ்க்கையின் லட்சியத்தை அடைய தோற்றம் முக்கியம் அல்ல. நான் தோற்றத்திற்கு முக்கியத்துவம் தரவிரும்பவில்லை..."

"அப்படி என்ன லட்சியம்? "

"என் மக்களை என் நாட்டை நான் மீட்கவேண்டும்.."

"??? 'புரியவில்லை........."

"காஷ்மீரத்து மக்களையும், காஷ்மீரத்தையும் மீட்டு எங்களுடன் சேர்க்க வேண்டும் அது தான் என் லட்சியம்...."

"என்ன்ன்ன்ன்னனனனனன? காஷ்மீரத்து மக்கள் உங்கள் மக்களா? காஷ்மீரம் உங்கள் நாடா? என்ன கதை இது? "

"ஆம் அதிர்ச்சி அடையாதீர்கள் கவிதா, காஷ்மீரத்தை மீட்காமல் நான் சாகமாட்டேன் என்று சபதம் எடுத்திருக்கிறேன்....அப்படியே நான் இறந்தாலும் அதுவும் கூட அதற்காகத்தான் இருக்கும்"

"காஷ்மீரமும் மக்களும் எங்களுக்கு சொந்தமானவர்கள், அதை ஒரு போதும் நாங்கள் விட்டுக்கொடுக்கவே மாட்டோம், என்ன தைரியம் இருந்தால் இப்படி என்னிடம் நீங்கள் பேசுவீர்கள்..."

"ஹா ஹா ஹா.. அநாவசியமாக கோபபடாதீர்கள் கவிதா, நீங்களும் உங்கள் அரசாங்கமும் காஷ்மீரத்து மக்களின் ஆசை என்னவென்று இதுவரையில் கேட்டு பார்த்ததுண்டா? கேட்டுபாருங்கள், ஒவ்வொரு காஷ்மீரியும், பாகிஸ்தானோடு தான் இருக்க விருப்பம் என்று சொல்லுவார்கள், அவர்களின் ஆசையை நிறைவேற்றி வையுங்கள்."

"இல்லவே இல்லை... இதற்கு சாத்தியமே இல்லை அவர்கள் என் மக்கள் இந்நாட்டு மக்கள் அவர்கள் ஒரு போதும் அப்படி சொல்லவே மாட்டார்கள், அதுவும் எந்த நேரமும் அவர்களை பிரச்சனைக்குள்ளாக்கும் உங்களுடன் இருக்க வேண்டும் என்று சொல்லவே மாட்டார்கள். அவர்கள் எங்களை விட்டு செல்ல ஒரு போதும் நினைக்கக்கூட மாட்டார்கள். நீங்களாக கற்பனை செய்து கொள்ளாதீர்கள் நீங்கள் அவர்களை எங்களடமிருந்து பிரிக்கவே முடியாது

"பிரித்துக்காட்டுவோம், அது தான் ஒவ்வொரு பாகிஸ்தானியுடைய விருப்பம்.

"My Dear Young Man ! இலியாஸ், கவனியுங்கள், நாங்கள் எல்லாம் காதில் பூ வைத்து க்கொண்டு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருப்போம் என்று நினைக்காதீர்கள் ! உங்களை போன்ற தீவிரம் எங்களிடம் இல்லை, அதற்காக நாங்கள் கோழைகள் இல்லை, விட்டுக்கொடுத்துவிடுவோம் என்று ஒரு போதும் நினைக்காதீர்கள்... உங்களால் அப்படி எளிதில் எங்கள் நாட்டையும் மக்களையும் கைப்பற்றிவிட முடியாது, வீணாக உங்களின் நேரத்தை இதில் செலவிடாமல் படிக்கும் வழியை பாருங்கள்..

"இல்லை கவிதா என்னை சிறுபிள்ளையாக நினைத்து பேசாதீர்கள்.."

"நீங்கள் சிறுபிள்ளைதானே... +1 படிக்கும் நீங்கள் எனக்கு சிறுபிள்ளைதான்! "

"கவிதா இல்லை, உங்களிடம் உண்மையை தான் பேசுகிறேன், சும்மாவாக வாய்சண்டை இடவில்லை, அப்படி வாய்சண்டையிட்டு என் நேரத்தை வீணடிக்கும் ஆள் நான் இல்லை என்பது உங்களுக்கு தெரியுமல்லவா... ??

"ஆம் தெரியும்..!! "

"நான் போராளி அதற்கான அடிப்படை தகுதியை, பயற்சியை முறையாக எடுத்துக்கொள்ள இந்த ஆண்டு விடுமுறையில் முகாமிற்கு செல்கிறேன்.. 1.5 மாதங்கள் அங்கு தங்கி என்னை தயார்படுத்துவேன்... திரும்பி வந்தபிறகு என் லட்சியத்தை நிறைவேற்றுவேன்..."

"..என்ன???!! "

"ஆமாம், ஒரு வாரம் சென்று முதல் கட்ட பயிற்சியை வெற்றிகரமாக முடித்துவிட்டேன்.. திரும்பவும் செல்ல இருக்கிறேன்..."

"............................... என்ன பயிற்சி..??

"ஆயுத பயிற்சி.... "

"............என்ன ஆயுத பயிற்சியா? இலியாஸ் நிஜமாகவா சொல்கிறீர்கள்...? எங்கே செல்ல இருக்கிறீர்கள் ?"

"இடம் எல்லாம் தெரியாது, நாடு கடந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் காட்டு எல்லைக்குள் சென்றுவிட்டால் அவர்களே வந்து அழைத்து சென்றுவிடுவார்கள்.. "

".......................................... நீங்க என்ன சொல்றீங்க உண்மையா ? சினிமா கதையை போன்று இருக்கிறது..."

"... இப்போது நீங்கள் தான் சிறுபிள்ளையை போல் கேள்வி கேட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் கவிதா.... "

".................................... இலியாஸ் கொஞ்சம் காத்திருங்கள்.."

"..சரி"

* * * * * * * * * * * ** * * **

(ஜே.கே, ஜனா, சுந்தர், கனேஷ், கார்த்திக்.. இங்க வாங்க.. இவன் சொல்றதை படிச்சி பாருங்களேன்...., எல்லோரும் சேட் ஹிஸ்டிரியை படிக்கிறார்கள்.....)

சுந்தர்.. : (படித்தவுடன் டென்ஷன் ஆகிவிட்டார்) கவிதா !! போதும் இவனோட நீங்க பேசவேண்டாம்... இவன் நமக்கு எதிராக செயல் படறவன் போல தெரியுது...உண்மையோ பொய்யோ.. தேவையில்லாத பேச்சு ...

ஜனா: இவன் கிட்ட ஏதாவது உங்க தகவல் சொல்லி வச்சி இருக்கீங்களா..?

கனேஷ் : ஜனா இவங்கள நம்பாதே.. ... டே ஒன் ல இருந்து சேட் ஹிஸ்டிரி எடுத்துப்பாரு...

கவிதா : ம்ம்.. என்னுடைய இமெயில் ஐடி தெரியும் அவ்வளவு தான்... ம்ம் வேற என்ன? கல்யாணம் ஆயிடுத்துன்னு தெரியும், நவீன் பத்தி தெரியும்..

ஜனா : சரி.. எங்க எதிர்ல அவனை ப்ளாக் பண்ணுங்க...

கவிதா : .. ஜனா.. ....ஒரு பை சொல்லிட்டு வரேன்..

ஜனா : ம்ம் ரொம்ப முக்கியம்... தேவையில்லை.... நானே சொல்லிக்கிறேன்... தள்ளுங்க..!! " எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது..உங்களிடம் பிறகு பேசுகிறேன்... பை.............. "

ஜே.கே.: ஜனா ஐபி எடு ட்ரேஸ் செய்து பாத்திடறேன்.. நிஜமா அவன் பாக்..தானான்னு.... ?

ஜனா : ம்ம்ம்... எடுக்கிறேன்டா.. கவிதா நீங்க போய் அந்த சிஸ்டம்ல உட்காருங்க... எங்களுக்கு வேலை இருக்கு இங்க.. கிளம்புங்க... !

மக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து என் மெயில் பாக்ஸை குடை குடை என்று குடைந்து என்ன செக் பண்ணனுமோ செக் செய்துவிட்டார்கள். பாக், தான் என்றும் கண்டுபிடித்துவிட்டார்கள்.

கவிதா: எஸ்கியூஸ்மீ கைஸ்.. ! அவர் எனக்கு எந்த பிரச்சனையும் தரமாட்டார். பயப்படவேண்டாம் !!

எல்லோரும் திரும்பி : உங்க திருவாய மூடறீங்களாஆஆஆஆ.... !!

கவிதா: :(((((((((((((((((((((( சரி... !! :((((((((((((((((

* * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * * *
பீட்டர் தாத்ஸ் :- “People who go to places of worship, people who go to libraries, people who are in chat rooms, are going to have 'Big Brother' listening in even though there's no evidence that they are involved in anything illegal whatsoever.

சிபி யின் கன்னத்துக்குழி :)

அணில் குட்டி அனிதா:- எங்க ஓனரை ஓவரா கலாய்ப்பதால் அவங்க இப்படி எல்லாம் ஐடியா செய்யறாங்க.. உஷார் உஷார்.... !!

சிபியின் தொல்லை தாங்கமுடியாமல் எப்படி பழிவாங்கலாம் என்று யோசித்தபோது சிக்கியது சிபியின் கன்னத்துக்குழி :-

1. இரவில் மின்சாரம் போய்விட்டால் , சிபியின் கன்னத்துக் குழியில் எண்ணெய் ஊற்றி திரி போட்டு விளக்கேற்றி வீட்டுக்கு வெளிச்சம் தரலாம்.
2. மெழுகுவத்தி ஸ்டேன்டாக பயன்படுத்தலாம்..
3. அப்படியே சுட சுட உருகும் மெழுகை அதில் சேமித்து வைத்து , திரும்பவும் திரிப்போட்டு எரியவிடலாம்.
4.. சிமெண்டு குழைக்க பாண்டாக பயன்படுத்தலாம்
5. பெயிண்ட்ங் செய்யும் போது கலர் குழைக்க பயன்படுத்தலாம்.
6. தாளிக்க கரண்டி இல்லைன்னா. .சுடசுட எண்ணெய் காயவைத்து குழியில் ஊற்றி அதை தாளிக்க பயன்படுத்தலாம்
7. யார் சாமிக்கு வேண்டிக்கிட்டாலும் சிபி யின் வாயில் அலகு குத்தறேன்னு வேண்டிக்கிட்டு.. குழிக்கு குழி ..கம்பியை விட்டு அலகு குத்தலாம். குழியின் காரணமாக நீளம் குறைவான கம்பியே போதும்
8. தீபத்திருநாளில் சிபியின் கண்ணத்தையும் தீபமாக்கிவிடலாம்...
9. குண்டூசி, ஸேஃப்ட்டி பின் போட்டு வைக்கலாம் எடுக்கும் போது எல்லாம் ஒரு குத்து குத்தலாம்.
10. தீபாவளிக்கு ராக்கெட் விட ஸ்டான்டாக பயன்படுத்தலாம்
11. புஸ்வானம் கூட வைத்து விடலாம்
12. பாம்பு மாத்திரை குழிக்குள் போட்டு ஆசைத்தீர கொளுத்தலாம்
13. சுடச்சுட அவித்த வேர்கடலையை கொட்டி அதிலிருந்து எடுத்து சாப்பிடலாம் நம்ம கை சுடாமல் இருக்கும்.
14. லவுட் ஸ்பீக்கரை இரண்டு கன்னத்துக்குழியிலும் பிக்ஸ் செய்துவிடலாம்
15. நெல்லு, அரிசி குத்த பயன்படுத்தலாம்.
16. அந்த குழியில் சின்னதா மஞ்சல் வட்டம் போட்டு வில் வித்தை அல்லது துப்பாக்கி சுடும் பொழுது மார்க்கிங்ஸ்டேண்டாக பயன் படுத்தலாம்.
17.. பூரி, வடை சுட்டு மீந்த கொதிக்கும் எண்ணெயை கொதிக்க கொதிக்க ஊற்றி வைக்கும் பாத்திரமாக பயன் படுத்தலாம்
18. மிளகாய் அதிகம் போட்டு ஊறுகாய் போட்டு வைக்கும் ஜாடியாக பயன் படுத்தலாம்

ஆன்(ண்) லைன் நண்பர்கள் -1

அணில் குட்டி அனிதா :- ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல, இருந்தாலும் உங்க எல்லாரோட நலன கருதி கவிதாவோட பாஸ்ட் ஹிஸ்டிரிய எழுதறேன்ன்... உஷாரா இருந்துக்கோங்க.. அவ்வளவுதான்..........

*****
ஆன்லைன் சேட் சொல்லிக்கொடுத்தது கனேஷ் & ஜனா. அவர்கள் சேட்டும் போது பின்னால் நின்று வேடிக்கை பார்ப்பேன்.. அதில் என் மேல் பரிதாபப்பட்டு ?!! கனேஷ் தான் (2000 ஆம் ஆண்டு) யாஹூ ஐடி கிரியேட் செய்து கொடுத்து எப்படி சேட்'ட வேண்டும் என்று சொல்லிக்கொடுத்தார்கள், ஜனாவிற்கு பிடிக்கவில்லை தான் இருந்தாலும் போன போகிறது என்று சொல்லிக்கொடுத்தது மட்டுமில்லாமல் அறிவுரை ;-

"யாரிடமும் உங்களின் நிஜபெயர், ஊர், வேலைசெய்யும் இடம், அலுவலகம் பெயர், உங்கள் போன் நம்பர், போட்டோ போன்ற பர்சனல் தகவல் களை சொல்லக்கூடாது" என்றார்.

"ம்ம்.. சொல்லிட்டீங்க இல்ல.. முதல்ல கடைப்பிடித்துவிட்டு தான் மறுவேலை " என்று மனதில் நினைத்துக்கொண்டு அவரை பார்க்க.... அவருக்கு தான் என்னை நன்றாக தெரியுமே..! " என்ன கவிதா, என்ன லுக்.. ..?! லுக் சரியா இல்லையே... " சொல்றத சொல்லிட்டேன். .ஏதாவது கொடுத்து வைக்காதீங்க அப்புறம் பிரச்சனைன்னு வந்து நிக்காதீங்க. .சரிங்களா? என்றார்
திரும்பவும் நானும். .அதே லுக்'ஐ விட்டவுடன்.. சுந்தரை பார்த்து.... "நீங்க பாத்துக்கோங்க. .". என்று எனக்கு காவலாக சுந்தரை நியமித்துவிட்டார்.. பிறகு என்னை முறைத்து பார்த்துவிட்டு ஏரியாவை விட்டு சென்றுவிட்டார்.

சரி ஸ்டார்ட் த மீயூஸிக்க் னு... முதலில் பப்ளிக் சேட்'டில் தேடி கிடைத்த நண்பர் இலியாஸ்.. என்ற ஒரு இஸ்லாமிய மாணவர். 11 ஆம் வகுப்பு படிக்கும் இவர் இருந்தது பாகிஸ்தான். இவர் தான் என் முதல் ஆன்(ண்) லைன் நண்பர். ரொம்பவும் நன்றாக என்னிடம் பேசினார். இவரை பற்றி முழுசாக சொல்லும் முன் "கிங் ஆஃப் சென்னை" என்பவரை பார்ப்போம்.

அந்த பப்ளிக் சாட் பாக்ஸில் என்னுடைய கவனத்தை ஈர்த்த மற்றொரு பெயர் "கிங் ஆஃப் சென்னை" அவருடைய போட்டோ வேறு இருந்தது. அதை பார்த்தபிறகு என்னால் சும்மா இருக்க முடியவில்லை. அவரை என் லிஸ்ட் ல் சேர்த்துவிட்டு பேச ஆரம்பித்தேன்..

"டேய் நீ எந்த ஊரு... "

"அடிங்..!! யாருடா நீ ?!! பொம்பல பேர்ல பேசற "

"டேய் நீ எந்த ஊருன்னு கேட்டேன்... "

"டேய் நீ யாருன்னு முதல்ல சொல்லுடா.."

"கவிதா' னு ஐடி ல இருந்து பேசறேன்.. திருப்பி திருப்பி டேய் ன்னு சொல்ற.. சரி.. முதல்ல உன் ஸ்டேடஸ் மேஸேஜ் ஐ தூக்கு எனக்கு பிடிக்கல... "

" என்ன மெசேஜ் ? "

" கிங் ஆஃப் சென்னை !!" உன் முகரகட்டைய பாத்தேன்... நீ கிங் ஆஃப் சென்னையா? ஒனக்கே கொஞ்சம்ம் ஓவரா தெரியலா.. எடுடா முதல்ல.. மவனே நீ மட்டும் எடுக்கல.. உனக்கு என் கையல தான் டா சாவு........"

" ஹேய் யாரு நீ.. பொண்ணுங்க எல்லாம் இப்படி பேசமாட்டாங்க. .நீ கண்டிப்பா ஆம்பளை தான்.. சொல்லு.. யாரூ நீ.. டேய்.. குமார் !! நீதானே.. ?!! ""

" அடச்சே இவனோட என்ன பெரிய இம்சையா இருக்கு.. ஸ்டேடஸ் மெசேஜ் தூக்கபோறியா இல்லையா இப்ப?

" முடியாது... என்ன பண்ணவ... "

"ம்ம். உன் ஃபோன் நம்பர் கொடு.. அப்புறம் பாரு என்ன செய்யறேன் ன்னு"

" xxxxx xxxxx , போன் பண்ணு பாக்கலாம்... "

" டேய் நான் யாருன்னு தெரியுமா உனக்கு?

"அதைத்தானே கேக்கறேன் நீ யாரு? "

"நான் தான் டா.. "குயின் ஆஃப் ஆப் சென்னை"... அதனால தான் நீ கிங் ஆஃப் சென்னனயா இருக்கறது எனக்கு பிடிக்கல... முதல்ல தூக்கு. .இல்ல நிஜமா என்கிட்ட வாங்கிக்கட்டுவ.........."

" என்னது குயினா...?

"ஏன் உன் மூஞ்சிக்கு நீ கிங் ஆ இருக்கும் போது நான் என் மூஞ்சிக்கு குயின் ஆ இருக்கக்கூடாதா? "

"டேய் குமார்..... ஏண்டா.. என்னடா பிரச்சன உனக்கு.... ஏண்டா இப்படி பொண்ணுங்க பேர்ல லாம் வந்து கலாய்க்கற.. "

"டேய் லூசு, உனக்கு எத்தனை வாட்டி சொல்றது.. .நான் கவிதா... ன்னு.. அறிவில்ல.. எருமையா நீ..? புத்தி இல்ல.. ? நீயெல்லாம் கிங் ஆஃப் சென்னையா டா? முதல்ல ஸ்டேடஸை தூக்கு... இல்ல மேட்டர் ஆபிஸ் வரைக்கும் வரும்.... உங்க மேனேஜர் கிட்ட நீ சேட் பண்ற விஷயத்தை போட்டுக்கொடுத்து வேலைய விட்டு தூக்குவேன்.... தூக்குடா சீக்கிரம்.... "

" டேய் குமார்... ஏண்டா... "

" ஹ்ய்யோ.....எவண்டா அது குமாரு. உன்னை மாதிரி அவன் ஒரு வெட்டியா? இவனுக்கு என்ன சொன்னாலும் புரியமாட்டேங்குதே...

"சரி அப்ப உன் ஃபோன் நம்பர் குடு... நீ கவிதா வான்னு நான் செக் பண்ணனும்.. :"

" ஓ அவ்வளவு தானே... இந்தா.... x x x x x x x "

" ஆபிஸ் நம்பரா... "

"ஆமாம்.. சீக்கிரம் பண்ணு.. ஆனா ஸ்டேடஸ் மெஸேஜ் தூக்கு அதுவரைக்கும் உன்னை விடமாட்டேன் நானு..."

டிரிங்.. .டிரிங்....டிரிங்...

(அட கடவுளே போன் வருதே.... அவசரமாக சுந்தரை பார்த்து சுந்தர் இப்ப ஒரு லூசு போன் பண்ணுவான்.. கவிதான்னு இருக்காங்களான்ன்னு கேட்ட்டா இல்லைன்னு சொல்லுங்க.... சரியா... , சுந்தர்... அமைதியாக. ."சரி... " என்றார் )

"ஏங்க அங்க கவிதான்னு யாருமே இல்லைன்னு சொல்றாங்க... "

"ஆமாண்டா லூசு.. யாராச்சும் உண்மையான பேரை நம்பரை கொடுப்பாங்களாடா?..அறிவில்லாத முண்டமே..? நம்பர் கொடுத்தவுடனே. " பல் இளிச்சிக்கிட்டு போன் பண்ணிட்டியா.. ? பாத்துடா யார் கிட்டயாவது அடி வாங்கி தொலைக்க போற... " சரி ஸ்டேடஸ் மேசேஜ் தூக்கு... "

" ஏங்க நீங்க யாருங்க..."

"நான் தான் குயின் ஆஃப் சென்னை.. " இதை உனக்கு எத்தனை வாட்டிடா சொல்றது.? .ஏண்டாஆ.. எனக்கு இல்லாத பொறுமைய சோதிக்கற.. " சரி.. நீ ஸ்டேடஸ் மாத்து நானும் நீயும் பிரண்டஸ் ஆ இருக்கலாம்.. ஒகே? "

"................................. அப்ப நீங்க நிஜமா பொண்ணுத்தானே.. "

"அட லூசு பயலே................... குயின் ஆஃப் சென்னை , குயின் ஆஃப் சென்னை ன்னு காட்டு கத்து கத்திக்கிட்டு இருக்கேன்...: பொண்ணான்னு திருப்பி திருப்பி கேக்கற..."

"ஏங்க எந்த பொண்ணும் இப்படி பேசமாட்டாங்கன்ங்க.... "

"அதான் நான் பேசறேன் இல்ல.அப்புறம் என்ன.? .சரி ஸ்டேடஸ் மெசேஜ் மாத்தினியா.. .."

"..............சரி எடுத்திட்டேன்.. உங்க உண்மையான போன் நம்பர் கொடுங்க..."

"..அப்ப கொடுத்தேனே... அது தான் என் உண்மையான நம்பர்... "

"..........................."

************

பீட்டர் தாத்ஸ் : “The Internet: Transforming Society and Shaping the Future Through Chat

பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ !!

பொம்மாயீஈஈஈஈஈஈஈஈ - அருந்த-தீ!!

:) இது வரையில் திரை விமர்சனமே எழுதியதில்லை.. திரு, கமல்ஹாசன் அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன்.. இது இரண்டாவது... இதுவும் திரை விமர்சனம் இல்லை.....

படம் பார்க்க செல்பவர்களுக்கு சில டிப்ஸ்..

படம் பார்க்கும் போது நீங்கள் விசில் அடித்து, நடனம் ஆடி, கத்தி, கூப்பாடு போடுபவர்களாக இருந்தால், தயவுசெய்து நண்பர்களுடன் செல்லுங்கள், மனைவி அல்லது கணவரோடு சென்றால் அப்படி எல்லாம் செய்ய முடியாது அடக்கம் ஒடுக்கமாக உட்கார்ந்து படம் பார்க்கவேண்டும் !! :). நான் மிஸ் செய்து விட்டேன்... !! :((( இது விசில் அடித்து.. பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈ!! நான் உன்னை விடமாட்ட்டேண்டீஈஈஈஈஈஈஈஈ !! என்று கத்தி பார்க்க வேண்டியப்படம்.. :).

எப்போதும் போல இந்த படம் பார்க்கும் போதும் நிறைய கேள்விகள்... !! அருந்ததீ' யின் கணவர் என்ற கதாப்பாத்திரத்தை தேவைப்படும் ஸ்கீரிங்களில் தேடி தேடி.. கடைசியில்...........:( அவ்வ்வ்வ் ! ஏன் இப்படி..?!!

கபால மோட்சம் ???!!! - பிரம்மாவில் கையில் இருக்கும் வஜ்ராயுதம்??!!!- ம்ம்..ஒரு ஸ்பெஷல் நடனம்!! - அன்வர் ??!!!! - இந்த நடிகை அனுஷ்கா !! அழகு !! அதுவும் இந்த கெட்டிபில் தனி அழகு... !!

பொம்மாயீஈஈஈஈஈஈஈஈஈஈ உன்னை நான் விடமாட்ட்ட்டேன்ன்ன்ண்டீஈஈஈஈ !

அணில்குட்டி அனிதா :- ஹய்யாஆங்க்..!!. இங்கயுமா.. படம் பார்த்துட்டு வந்ததிலிருந்து யாரை பார்த்தாலும் "பொம்மாயீஈஈஈஈஈஈ... ன்னு கத்திக்கிட்டு இருக்காங்க... ஓ காட்.. .வெயில் வேற ஜாஸ்தி ஆகிபோச்சி கவி' ஆர் யூ ஓகே !!!

பீட்டர் தாத்ஸ் :- The past is a ghost, the future a dream, and all we ever have is now.

கேப்பங்கஞ்சி with கவிதாவுடன் - சாதனை மங்கை

மிகவும் தாமதமாக கேப்பங்கஞ்சிக்கு அழைக்கும் ஒரு அன்பான பதிவர் மங்கைஜி. வலைச்சரம் தொடுக்க சென்றபோது இவரைப் பற்றி சொல்லியிருந்தேன். சத்தமில்லாமல் யுத்தம் நடத்தும் ஒரு அற்புதப்பெண், என்னை மிகவும் கவர்ந்த, நான் பின்தொடர வேண்டும் என்றும் நினைக்கின்ற பெண். இன்னமும் நான் பலவிதத்தில் வளரவேண்டும் என்னை சரிசெய்து கொள்ளவேண்டும் என்று நினைப்பது இவர்களை பார்த்தே.. இவரை கேப்பங்கஞ்சிக்கு அழைக்க ஏன் இந்த தாமதம் ஏற்பட்டது என்பதற்கு விடை எனக்கே தெரியவில்லை. இருப்பினும் மங்கைஜி ஐ விடாமல் துரத்தி அழைத்து வந்தாகிவிட்டது. இதோ நம்முடன் மங்கைஜி...

விளக்கமாக கேட்ட கேள்விகள் :-

கவிதா :- மங்கைஜி! வாங்க, வணக்கம் ! எப்படி இருக்கீங்க? புதுடில்லி எப்படி இருக்கு? தேர்தல் சமயமாக இருப்பதால் ஏதாவது ஸ்பெஷல் நியூஸ் உண்டா?

தில்லிக்கென்ன நல்லா தான் இருக்கு...சும்மாவே தெருவுல உய் உய்ன்னு எப்பவும் விஐபி கார்கள் போயிட்டு தான் இருக்கும்...இப்ப கேட்கணுமா... அதுவும் என் அலுவலகம் இருக்குறது ஜன்பத்துல...எல்லா கட்சி ஆபீசும், முக்கிய அலுவலகங்களும் இருக்கிற இடம்..சொல்லிக்கவே வேணாம். பரபரப்பா இருக்குற ஒரு நகரம்... மக்களை பத்தி சொல்லணும்னா..வெட்டி பந்தா...ஈசி மணி வேணும்னு நினைக்குற மக்கள்...நம்ம தென்மாநில மக்களின் பக்குவம் இவர்களுக்கு வர இன்னும் நாளாகும்...இது என் தனிப்பட்ட கருத்து.

கவிதா : உங்களின் தற்போதைய பணி பற்றிய சின்ன விளக்கம்

தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு நிறுவனம். சுகாதார அமைச்சரகத்தின் கீழ் செயல்படும் ஒரு துறை. இந்தியாவில் எச்ஐவி எய்ட்ஸ் கட்டுப்பாட்டிற்கு தேவையான திட்டங்களை வகுத்து அதை செயல் படுத்தும் ஒரு அரசு நிறுவனம். அதில நான் Technical Officer (Training) ஆக பணி புரிகிறேன். ஒவ்வொரு அரசு மருவத்துவமனைகளிலும் தன்னார்வ பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. இது தவிர பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச மருந்துகள் வழங்கப்படும் ஏ ஆர் டி (ART - Anti Retroviral Therapy) மையங்களும் செயல்பட்டு கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ஆலோசகர்கள் இங்கு பணியில் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள். ஆலோசனை வழங்குவதற்க்கான அடிப்படை கல்வி இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்களிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும், ஆலோசனை குடுக்கும்போது அவர்கள் செய்ய வேண்டிய / செய்ய கூடாத செயல்கள், எதிர் கொள்ளக் கூடிய பிரச்சனைகள், அதை சமாளிக்க வேண்டிய விதம், பாதிக்கப்பட்டவர்களின் மனநிலை, குடும்ப உறுப்பினர்களிடன் பேச வேண்டிய முறை, தகவல்கள் உள்பட பல விஷயங்களில் பயிற்சி கொடுக்கப் படுகிறது. ஆலோசகர்கள், செவிலியர்கள், லேப் டெக்னீஷியன்கள் ஆகியோருக்கு பயிற்சியை ஒருங்கிணைக்கும், ஒருங்கிணைப்பாளர் பணி. இவர்கள் அனைவரும் நாடெங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெறுகிறார்கள்.

கவிதா :- உங்களின் பணியில் உங்களுக்கு ஏற்படும் மனத்திருப்தி/ அதிருப்தி

இந்த பணியில் இருப்பதே திருப்தி தான். சமுதாயத்தால் ஒதுக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது ஒருவகையில் உதவ நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்கிற திருப்தி. இன்னும் நிறைய உதவி தேவைப்படுகிறது.

அதிருப்தி என்றால் அரசு தரப்பிலும் தனியார் தரப்பிலும் இதற்கென்று ஒதுக்கப்பட்ட பணம் வெட்டியாக செலவு செய்யப்படுவதை பார்க்கும் போது வருத்தம் வருகிறது.

கவிதா: பிரிதிபா பற்றி

கோவையில் என்னுடன் பணி புரிந்த ஒரு தோழியும் நானும் யூனிசெஃப் (UNICEF) ன் ஆதரவுடன் எடுத்துக் கொண்ட ஒரு முயற்சி. மத நல்லிணக்கதை மையமாக வைத்து வகுக்கப்பட்ட ஒரு திட்டம். எல்லா மதத்திலிருந்தும் தன்னார்வமுள்ள பெண் தலைவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு எச்ஐவி பற்றி பேச பயிற்சி அளித்து, அதை தங்களின் பிரார்த்தனை கூட்டத்தில் பக்தர்களுக்கு எடுத்துகூற ஊக்கப்படுத்தினோம். நாடு முழுவதும் 500 பெண்களை கண்டறிந்து பயிற்சி அளித்தோம். ஆர்வமுள்ள பல பெண்கள் முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட பெண்களின் அமைப்பிற்கும் உதவ முடிந்தது.

கவிதா: கருத்துடை மாத்திரைகள் பெண்கள் உபயோகப்படுத்துவது என்னை பொறுத்தவரை பிரச்சனையே.. உங்களின் கருத்தும் ,விளக்கமும்.

என்ன/ எப்படி பிரச்சனை என்று நினைக்கிறீர்கள்?
கருத்தடை மாத்திரை யார் சாப்பிடுகிறார்கள்? என்பதை பொறுத்தது அது.குழந்தை பேற்றிற்குப்பின் குழந்தை பிறப்பை தடுக்க இது கண்டிப்பாக ஒரு நல்ல முறை. பல ஆராய்ச்சிகளுக்கு பின்னரே இது போன்ற மாத்திரைகள் அரசாலும், சர்வதேச நிறுவனங்களாலும் பரித்துரைக்கப்படுகிறது. ஒரு சிலருக்கு ஏதாவது பிரச்சனைகள் வரலாம். இது மாதிரி ஓரிரண்டு சதவீத ஒவ்வாமை எந்த மாத்திரையிலும் இருக்குமே. அதற்காக ஒட்டு மொத்தமாக கருத்தடை மாத்திரை பிரச்சனை என்று கூறி ஒதுக்க முடியாது. சுகாதாரமற்ற முறையில் நடக்கும் அனாவசிய கருத்தடைகளை தடுக்க இது உதவும்.

இரண்டாவது இப்பொழுது சந்தையில் பல கருத்தடை மாத்திரைகள் வர ஆரம்பித்திருக்கிறது. கருத்தடை மாத்திரைகளின் விளம்பரங்கள் வெகு சாதாரணமாக தொலைக்காட்சிகளில் காணமுடிகிறது. தில்லியில் நடந்த ஒரு ஆராய்ச்சியில் திருமணமாகாத பெண்கள் அதிக அளவில் இந்த மாத்திரைகளை வாங்குவதாக ஒரு அறிக்கை வெளி வந்தது. இது தான் வருத்தம் அளிக்க கூடிய விஷயம். அவ்வாறு திருமணம் ஆகாத பெண்கள் பின்னர் தான் செய்த தவறை நினைத்து வருத்தப்பட்டு மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவரை அணுகுவதாக அந்த ஆராய்ச்சி முடிவுகள் சுட்டுகிறது. இது கவனிக்கபடவேண்டிய விஷ்யம்.

கவிதா:- தலித்துகளின் நிலை பற்றி..?

5 ஆண்டுகளுக்கொரு முறை தான் இவர்களின் நினைப்பு அரசியல் வாதிகளுக்கு வருகிறது. ''During her interaction with Dalits, Soniaji had food provided by a Dalit family in Rohania village in Rae Bareli,’ ‘She had some flattened rice (chivda)'' இது மாதிரி செயல்கள் அவர்களுக்கு எந்த வித்தில் உதவும். அவங்களோட சோறு சாப்ட்டா போதுமா. அதுக்கு அப்புறம் அவர்களின் நிலை???.. உத்தரபிரதேச மாநிலத்தில் தலித் பெண்மணி முதலமைச்சராக இருந்தும், தலித்துகள் கொலை மற்றும் கற்பழிப்பு போன்ற குற்றங்களுக்கு அதிக அளவில் ஆளாகிறார்கள். இந்த குற்றங்களை புரிந்தவர்கள் பெரும்பாலும் உயர்ந்த (?) சாதியை சேர்ந்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். படிப்பறிவை கொடுப்பதே அவர்களின் இன்றைய நிலையை மாற்ற ஒரு நிலையான தீர்வாக இருக்கும். அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்க மற்றவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.

கவிதா: பாலியல் தொழில் - உங்களின் பார்வையில் -

பாலியல் தொழிலில் என்றால், அதில் சம்பந்தப்பட்டிருக்கும் பெண்கள் ஏதோ தெருவில் நின்று கொண்டு கண்ணடித்து அழைக்கும் அழகிகள் என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம். இதற்கு காரணம், நம் ஊடகங்கள். அறிவு பூர்வமாக, சமுதாய அக்கறையுடன் கொஞ்சம் விரிவாக யோசித்துப் பார்த்தால், அவர்களின் குடும்ப சூழ்நிலை, பாலியல் தொழிலில் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், அன்றாட சந்திக்கும் நபர்களின் ஆசைகளுக்கு ஈடுகொடுக்கும் அவர்களின் பரிதாப நிலை நமக்கு புரியும். இதையெல்லாவற்றையும் விட, எச்ஐவி நோய் பரவி இருக்கும் இந்த நாட்களில் தங்களை பாதுகாத்துக் கொள்ள அவர்கள் படும்பாடு.ம்ம்ம்ம்..இன்னும் எத்தனை எத்தனை...ஊடகங்களில் இன்றும் அழகிகள் கைது என்ற வாசகத்தை படித்துக் கொண்டு தானிருக்கிறோம்.' 'விபச்சாரி' என்ற வார்த்தயை இன்னும் கேட்டுக் கொண்டுதானிருக்கிறோம் இன்று வரை பாலியல் தொழிலில் ஈடுப்பட்டவர்களை தண்டிக்கும் சட்டங்கள் தானிருக்கின்றனவே ஒழிய, சம்பந்தப்பட்ட ஆணை தண்டிக்கும் சட்டம் இன்னும் வரவில்லை.

கவிதா :- Memory Trigger - இதனால் உங்களுக்கு அடிக்கடி நினைவுவரும் விஷயங்கள்??

வேப்பம்பூ நறுமணம் என்றால் கோவையில் யுகாதி கொண்டாடிய நாட்களும், மாரியம்மன் நோம்பியில் தோழியருடன் ராட்டினாந்தூரி ஆடிய நாட்களும். புது துணி மணம் என்றால், ஜூன் மாதம் புது யூனிபார்ம் போட்ட நாட்கள், அடுத்த வகுப்பிற்கு போவதால் ஏற்பட்ட அந்த பதட்டம், இன்றும் எனக்கு வரும் ஒரு உணர்வு.

அணிலு:- யக்கோவ்..நீங்க பாட்டு எல்லாம் பாடுவீங்களா? கவி கொடுமைய தாங்கமுடியாம இருக்கோம்.. அது என்ன நடுநடுவுல சினிமா பாட்டா போட்டு தாக்கி இருக்கீங்க... ??? என்ன மேட்டரு

பாட்டு பாடாதவங்க யாரு இருப்பா...எனக்கு மட்டும் கேக்குற மாதிரி பாடிக்குறதுதான்.:-).. பிடித்த பாடல்களை வலையேற்றினேன்...இன்னும் வரும்...

கவிதா:- பிஞ்சு கரங்களில் தாய்மை - என்னவோ என் நினைவு வந்தது.. ஆனால் பதிவு வேறு விதமாக இருந்தது.. பெண்ணின் திருமணவயது தெரியும், ஆனால் இன்றைய பெண்கள் மிக தாமதமாக திருமணம் செய்துக்கொள்வதாக படுகிறது. உங்களின் நிலைப்பாடு.

அந்தப் பதிவை படித்ததும் என்னவோ நினைவு வந்தது என்று கூறியிருக்கிறீர்கள்..உங்களுக்கு என்ன நினைவு வந்தது....???

இது அவரவர்களின் விருப்பம்.. ஒரு பெண்ணோ, குடும்பத்தாரோ பல காரணங்களை முன் வைத்து முடிவை எடுப்பார்கள்..இதில் நாம் சொல்வதற்கு ஒன்றுமில்லை...ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்று நினைக்கலாம்.. குடும்ப சூழ்நிலைகள் காரணமாக இருக்கலாம்....தங்கைகளுக்கு திருமணம் செய்த பிறகு திருமணம் செய்து கொண்ட தோழியர் பலர்...இது அவரவரர் தனிப்பட்ட விருப்பம்... இந்த வயதில் தான் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்று நினைக்குறேன்...இன்றைய பெண்கள் எதையும் ஆராய்ந்து முடிவு எடுக்க கூடிய பக்குவம் உள்ளவர்கள் என்று நினைக்கிறேன்.

முக்கியமான விஷ்யம்... இன்றும் ஆந்திரா, ராஜஸ்தான்,பீஹார், ஒரிசா, மத்தியப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில், 14 / 15 வயதில் பெண்களுக்கு திருமணம் நடக்கிறது. அது தான் கவலைப்படவேண்டிய ஒன்று.

கவிதா : மங்கைஜி உங்களுடைய 80% பதிவுகள் பெண்களின் பிரச்சனைகளை சார்ந்தே உள்ளது. அடுத்து குழந்தைகள், அடுத்து சமுதாயம் சம்பந்தப்பட்ட பதிவுகள், இதில் எங்கேயுமே நான் ஆண்களுக்கான அல்லது ஆண்களை பற்றிய உங்களின் எழுத்தை பார்க்கவில்லை குறிப்பிட்ட காரணம் இருக்கா? (ம்ம்..அப்பா' வை பற்றிய ஒரு பதிவு இருந்தது அதைத்தவிர்த்து.)

நான் பெரும்பாலும் எழுதுவது என் துறை சார்ந்த பதிவுகளே...எதைப் பற்றி தெரியுமோ அது தானே எழுத முடியும்!!...சமுதாயத்தை பற்றி எழுதும் போது ஆண்களைப் பற்றியும் எழுதித்தான் இருக்கிறேன்...ஆண்/ பெண் என்ற பேதம் பிரித்து நான் எழுதவில்லை....எச்ஐவியால் பாதிக்கப்பட்டவர்களை பற்றி எழுதும் போது இரு பாலாரைப்பற்றியும் தான் எழுதி இருக்கிறேன்..பாலியல் பலாத்காரத்தைப்பற்றி எழுதும் போது குறிப்பாக ஆண் குழந்தைகளைப் பற்றி் எழுதியிருக்குறேன்...ஆண்களுக்கு வரும் மசக்கையைப் பற்றி எழுதி்யிருக்கிறேன்.. தெருவில் வளர்ந்து வாழ்க்கையில் வெற்றி பெற்ற விக்கியைப்பற்றி எழுதி இருக்கிறேன்...மனித உரிமை நாள் பதிவில் அரும்பணியாற்றிய சில ஆண்/பெண் இருபாலாரையும் குறிப்பிட்டு எழுதியிருக்குறேன்...எல்லாமே பொதுவாக எழுதியவையே...

ஆண்களைப் பற்றி நான் வேறு என்ன எழுதி இருக்கலாம் என்று நீங்கள் நினைக்குறீர்கள்?.

ஒரு விஷயம் பெண்ணீயத்தை பற்றி நான் என்றுமே நான் எழுதியதில்லை..எழுதப்போவதுமில்லை..அதில் எனக்கு விருப்பம் இல்லை.. நான் எழுதியது எதுவுமே பெண்ணீய பதிவுகள் இல்லை. 80% பெண்களைப்பற்றியதா?.. அப்படியில்லையே...5 அல்லது 6 பதிவுகள் தான் முற்றிலும் பெண்கள் பற்றியது..அதுவும் ஒரு சமுதாய பிரச்சனையாகத்தான் நான் எழுதியிருக்கிறேன்.

சுருக்கமாக கேட்ட கேள்விகள் :-

1. உங்களின் சொந்த ஊர், பிடித்த விஷயம் - கோவை...அங்க பிடிக்காத விஷயம் ஒன்னுமே இல்லை.:-)

2. தனிமையில் நீங்கள் இனிமை காணும் ஒரு விஷயம்- தனிமையையே இனிமையாக்க கற்றுக் கொண்டேன். பாட்டு கேட்பது, நண்பர்களுடன் உரையாடல்..

3. உங்கள் பதிவுகளில் உங்களுக்கு பிடித்தது 3 - எல்லாமே பிடித்த பதிவுகள் தான்... ரொம்ப பிடித்த பதிவு --வலிகளை பகிர்தலின் அவசியம்.

4. பிடித்த ஆண்கள் மூவர்- எனக்கு பிடிக்காதவர்கள்னு யாரும் இல்லை.. சட்டென்று நினைவிற்கு வருபவர்கள்...1) முதலில் அப்பா...2) ராணுவத்தில் சேர்ந்து, இறந்து போன என் கல்லூரி தோழன் செம்பியன்..3) நான் விழும்பொழுதெல்லாம் என்னை தூக்கி நிறுத்தி என் தன்னம்பிக்கையை தூண்டிவிட்ட நண்பன். இதில் கணவர் இல்லையானு கேட்கவேண்டாம்... என் கணவரை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொன்னா என்னமோ நல்லா இல்லை. அது எங்களுக்குள்ள சொல்லிக்க வேண்டியது..

5. உங்களுக்கு பிடித்த பொழுதுபோக்கு- அப்படி குறிப்பிட்டு சொல்லும்படியா ஒன்னும் இல்லை....எப்படியாவது பொழுது போயிடுது.

6. உங்கள் வாழ்க்கையின் லட்சியம்- லட்சியம் எல்லாம் இல்லைங்க.... செய்யும் பணியை முடிந்த வரை முழு அர்ப்பணிப்புடன் செய்ய வேண்டும்.. அவ்வளவு தான்.

7. உங்களுக்கு பிடிக்காத விஷயம்-கோபம், மற்றவர்களின் எண்ணங்களுக்கு மதிப்பு கொடுக்காமல் தனக்கே எல்லாம் தெரியும் என்கிற இறுமாப்பு, ஒரு வரைப்பற்றி அனாவசிய விமர்சனம்

8. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு நாம் ஓட்டு போடலாம் என்று நீங்கள் பரிந்துரைக்கும் 2 கட்சிகள்- அரசியலுக்கும் எனக்கும் ரொம்ப தூரம்.பரிந்துரை செய்யும் அளவிற்கு நான் அரசியலை அலசியதில்லை.

9. கவிதாவிடம் கேட்க நினைக்கும் ஒரு கேள்வி-உங்கள் குறைகளை பிறர் சுட்டிக்காட்டும்போது உங்கள் மனநிலை?. அது உண்மையிலேயே குறைகளாகவே இருக்கும் பட்சத்தில்?

பிடித்த சில முகங்கள் (All Time Favorite)





























அக்கா.. அம்மாவென உதடுகள் சொல்லும் உள்ளத்தில்....?!

முன்குறிப்பு : இது சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் சேரும். தயவுசெய்து அதை புரிந்துக்கொள்ளுங்கள். (ஒவ்வொரு முறையும் இதை வேற போடனும் இல்லன்னா.. கிளம்பிடுவாங்க...... oopsss !! ) .

அக்கா, அம்மாவென்று அழைத்துவிட்டு அதே பெண்களை பின்னால் அவர்களின் தோற்றத்தையும், உடலழகையும் வர்ணித்து பேசுவதும், ஏன் தன் சொந்த அக்காவிடமும் அம்மாவிடமும் பேசக்கூடாததை எல்லாம் இந்த இரவல் அக்கா, அம்மாவிடம் பேசுவதும் அருவருக்கத்தக்கதாக உள்ளது.

வலையுலகில் மட்டுமே என்னை அக்கா வென்று அழைப்பவர்கள் அதிகம் என்று நினைக்கிறேன். பொதுவாக அலுவலகங்களில் யாரும் இப்படி என்னை அழைக்க அனுமதிப்பதில்லை.. ஸிஸ்டர் என்றாலே ... ம்ம்.. தெரியும். .உங்க ஸிஸ்டர் பாசம் கவிதா வென்று அழையுங்கள் என்று நேரிடியாக சொல்லிவிடுவது உண்டு.. இங்கு அக்காவென்று அழைக்காதீர்கள் என்று சொன்னால் என்னவோ என்னை தவறாக நினைப்பதோடு அல்லாமல், ஓ உங்களுக்கு வயதாகிவிட்டது என்று நினைக்கிறீர்களா? ன்னு கேட்பவர்களும் உண்டு. ஆனால் அழைக்க வேண்டாம் என்று சொல்ல உண்மையான காரணமோ, அக்கா, அம்மாவென்று அழைப்பவர்கள் அப்படியே நடந்துக்கொள்வது இல்லை, அந்த கருமத்தை எல்லாம் சகித்துக்கொள்ள முடியாது என்பதாலேயே பெயரிட்டு அழையுங்கள் என்று சொல்லிவிடுவது.

ஆனால் அக்கா என்பதையும் தாண்டி சிலர் அம்மா வென்றும் வலையுலகில் அழைத்திருக்கிறார்கள். அக்கா அம்மாவென்று அழைக்கும் ஒரு ஆணை நாங்கள் என்னவோ அப்படித்தான் பார்க்கிறோம்... பேசுகிறோம். .ஆனால் அவர்கள்...???

வெளியில் சொல்லவோ, எழுதிவிடவோ மிகவும் வேதனையாகவும் அசிங்கமாகவும் இருக்கிறது. பார்வையே சரியில்லாத போது என்ன மண்ணாங்கட்டிக்கு அக்காவென்றும் அம்மாவென்றும் அழைக்கிறீர்கள். உங்களின் பார்வை எப்போது சரி இருக்கிறதோ, உங்களால் ஒரு பெண்ணை எப்போது உண்மையாக அக்காவாக அல்லது அம்மாவாக பார்க்க முடியுமோ, உங்களின் உடலும் உள்ளமும் எப்போது உங்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறதோ அப்போது ஒருவரை அப்படி அழைக்கலாம்.. இல்லையென்றால் தேவையில்லாமல் அந்த உறவுமுறைகளை கொச்சைப்படுத்தாமல் இருக்கலாம். கூப்பிடும் போது அக்கா, அம்மா வென்று கூப்பிட்டுவிட்டு பின்னால் செம ஃபிகர்டா மச்சி... என்னம்மா இருக்காடா.. !! மச்சி ....ன்னு.... " அடக்கடவுளே ...இப்படியுமா.. ????

உறவு முறைகளுக்கான முழுமையான மரியாதையை கொடுக்கமுடியாத போது, தயவுசெய்து பெயரிட்டு அழையுங்கள்.... அக்கா அம்மாவென்று அழைத்து உறவு முறைகளை கொச்சைப்படுத்தாதீர்கள்... அருவருப்பாக இருக்கிறது.........!!

அணில் குட்டி அனிதா : ஹைய்யா. .எனக்கு இந்த பிரச்சனையே இல்ல. .எல்லாரும் என்னைய அணிலுன்னே கூப்பிடறாங்களே.. .ஹி ஹி.. கவி நீங்க... கழுத குட்டி கவிதா ன்னு பேரு வச்சிக்கோங்க. .உங்கள எல்லாரும் செல்லமா கழுத கழுத ன்னு கூப்பிடுவாங்க... :) சரி சரி... முறைக்காதீங்க.. ச்ச்சும்ம்மா லுலுலாயிக்கு.........

பீட்டர்தாத்ஸ் :- Trust is the glue of life. It's the most essential ingredient in effective communication. It's the foundational principle that holds all relationships

"எல்லிஸ்" சத்திரம் - 1954 ல் எழுதியது கெஜானனன்

"ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்" - என்று அவ்வை பாடியதாக ஞாபகம்.

ஓர் ஊர் இருக்கின்றது, அழகான ஊர், மனிதர்கள் நடமாடும் ஊர், மாட மாளிகைகள் கூட கோபுரங்கள் உள்ள ஊர். அறிவுக்கே பிறப்பிடமான ஊர்.
இப்படிப்பட்ட ஒரு ஊருக்கு ஆறு வேண்டும் -வேண்டிய அவசியம் கூட இல்லை - அது ஒரு "அழகு அந்த ஊருக்கு" என்கிறார் அவ்வையார்.

சரி, ஆறு ஒரு இடத்தில் ஓடுகிறது. இருமருங்கிலும் பண்ணையாக தென்னைந்தோப்புகள், சவுக்கை தோப்புகள் இருக்கின்றன. அகலம் இரு "காதம்" இருக்கும். அந்த இடத்தில் ஒரு நடுத்தரமாக உள்ள அணை வேறு இருக்கிறது. ஒரு தாலுக்காவின் அரை பகுதி ஏரிகளுக்கு வேறு அது நீர் அளிக்கிறது. அப்படிப்பட்ட அந்த ஆற்றின் கரையில் சரியான -

ஊர் இல்லை!! அது தான் "எல்லிஸ்" சத்திரம்!

மேற்கூறிய காரணத்துக்காக தானோ என்னமோ அந்த ஆறு கண்னீர் விடுவது அதன் இரு மருங்கிலும் ஓடுகிறது.

"எல்லிஸ்" சத்திரம் என்னும் பெயர் உங்களுக்கு ஒரு புதுமையான சந்தேகத்தை அளிக்கலாம். ஏன்? எங்களுக்கும் கூடத்தான் ஒரு சில தினங்களுக்கு முன் இருந்தது. அந்த சத்திரத்தை கட்ட முக்கிய காரணம் "Ellis" என்ற ஆங்கிலேயராம். அதனால் தான் அந்த ஊருக்கு "எல்லிஸ்" சத்திரம் என்று பெயர் ஏற்பட்டதாம்.

இப்போது நமது ஊர் மக்கள் சிலர் அதை "எல்லிச்சத்திரம்" என்றும் "எல்லை சத்திரம்" என்றும் அழைக்கின்றனர். அதற்காக நாங்கள் பெரிதும் வருந்துகிறோம். அன்று ஞாயிற்றுக்கிழமை, எங்கள் எல்லோருக்குமே அன்று ஓய்வு தான், திடீரென்று து. கோவிந்தன் அவர்கள் வண்டி எல்லிஸ் சத்திரத்திற்கு ஒரு வேலையாக கிளம்பியது. நாங்களும் கிளம்பினோம். கிளம்பியவர்கள் :-
1. P. அரங்க நாதன்.
2. M. வேதகிரி
3. T. கோவிந்தன்
4.R. அனந்தன்
5. C.கிருஷ்ணமூர்த்தி

மேற்கூரியவர்களில் து.கோவிந்தன் அவர்கள் (மாட்டு) வண்டியில் சென்றவர்கள்:-
1. து.கோவிந்தன்
2. மு.வேதகிரி
3. பெ. அரங்கநாதன்
4. C.கிருஷ்ணமூர்த்தி.

என் ஓட்டை வண்டியில் (சைக்கிளில்!) நானும் அனந்தனும் சென்றோம். நாங்கள் இங்கு கிளம்பும் போது மாலை மணி சுமார் மூன்று இருக்கும். அங்கு சேரும் போது மணி நாலரை இருக்கலாம். ஒருவாறாக போய் சேர்ந்தோம்!. போய் சேர்ந்ததும் அந்த சத்திரத்தின் அமைப்பை பார்த்தோம். சத்திரம் என்றால் அதுதான் சத்திரம். அந்த மாதிரி அதன் அமைப்பு இருந்தது. ஒவ்வொன்றாக பார்க்கும் போது ஒரு சில(ர்) வற்றை பார்த்தோம்!. அந்த சத்திரத்தில் பல கெட்ட வார்த்தைகளை கை கூசாமல் எழுதி இருந்தனர். அதை பார்த்துவிட்டு மறுபுறம் திரும்பினால் ஒரு "காணாத காட்சி" யை கண்டோம்.

நமது விழி நகரில் உள்ள ஒரு 'பெயர் போன (!) மன்ற (?) நாடக விளம்பரம் இருந்தது. அதிலிருந்து குறிப்பாக நாங்கள் இது போன்ற இடத்தில் தான் நாடக சபையினர் விளம்பரம் செய்வார்கள் என தெரிந்து கொண்டோம்!.

பிறகு கையில் கொண்டு வந்த சிற்றுண்டியை அருந்த அணையின் பக்கமாக சென்று ஆற்றின் நடுவே, அணையின் பக்கமாக, உட்கார்ந்தோம். சிற்றுண்டியை சாப்பிட்டோம்!. தர்மாஸ் கூஜாவில் கொண்டுவந்த காபியையும் ஒரு கை பார்த்தோம்! சாப்பிடும் போது சில நாகரீக செம்படவர்கள் புது முறையில்(?) மீன் பிடிப்பதை பார்த்தோம்.
ஆற்று மணலில் சில நிமிடங்கள் உட்கார்ந்து பேசிவிட்டு அணையின் அமைப்பை கவனிக்க சென்றோம் தென்கரை நோக்கி!

அப்போது ஏனாதி மங்கலத்திலிருந்து வந்த ஒரு அணையின் தற்காலிக நிர்வாகி (Officer - in -Charge, Ellis Choultry Dam (Temporary)) எங்களுக்கு அணையின் அமைப்பை விளக்கினார். தென்கரையில் பிரியும் கால்வாய்கள் இன்ன இன்ன இடத்திற்கு போகிறது என்று சொன்னார். அவை எங்களுக்கு சரியாக ஞாபகம் இல்லை. வடக்கு புறம் வந்து கொண்டே இருந்தோம். படம் 3- ல் காட்டியபடி செங்குத்தாக மாறி மாறி சுமார் ஆயிரம் கற்களுக்கு மேல் நடப்பட்டு இருந்தது. அதைப்பற்றி மு.வேதகிரி அவரை வினவிய போது அவர் சொன்னதாவது.

(கவனிக்க:- அப்பா, மேலுள்ள படத்தில் 1, 2, 3, 4 என்று நம்பர் குறிப்பிட்டுள்ளார்)
"இந்த கற்களின் நீளம் 9 அடி, கனம் 1 அடி சதுரம். இதை 16 அடி உள்ள ஒரு கிணற்றில் சிமண்டு காங்க்ரீட்டின் மூலமாக புதைத்து இருக்கிறது. இந்த கற்களின் மூலமாக தண்ணீர் வேகம் படத்தில் காட்டியுள்ள படி குறைக்கப்படுகிறது.

பிறகு அணையின் சுவற்றின் மேல் நடந்தோம். அப்பொழுது அந்த சுவர் ஏன் சாய்வாகவும் ஒரு பள்ளமுடையதாகவும் இருக்கிறது?" என்று பெ.அரங்கநாதன் அவரை கேட்டார். அவர் படத்தில் காட்டி இருப்பது போன்ற (படம்-1) அந்த இடத்திற்கு விளக்கம் தந்தார். "இந்த மாதிரி அணையின் சுவர் சாய்வாகவும் வளைந்தும் இருப்பதால் அந்த சுவரை தண்னீர் உடைத்துவிடுவது என்பது அவ்வளவு சுலபமல்ல. மேலும் அதில் பள்ளம் வேறு இருப்பதால் (தயவு செய்து படத்தை பாருங்கள்) வழிந்த தண்ணீரின் வேகம் குறைக்கப்படுகிறது. அதுவுமில்லாமல் அணையின் "கசிவு நீர்" (Dam Fountain) அதில் தங்கவும் வசதியாகிறது" என்றார்.

பிறகு அந்த அணை சுவரிலேயே உள்ள ஒரு இடத்திற்கு இறங்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அந்த இடத்தில் சுமார் 8 அடி நீளமுள்ள இரும்பு தகடுகள் ஒரே நீளமாக அந்த அணையின் காங்கரீட் சுவரின் மேல் பொருத்தப்பட்டு இருந்தது. அதைப்பற்றி அவரிடம் அனந்தன் அளவளாவிய போது அவர் அளித்த விளக்கம்

"இந்தத் தகடுகளினால் (படம்-2) வேண்டும் போது தண்ணீரை சீக்கிரமாக திறந்து விட சாத்தியமாகிறது மேலும் இதில் உள்ள "ஏற்பாட்டின் படி" (Adjustment) (படம் -4 ஐ பாருங்கள்) இதை தண்ணீரை தாக்கும் படியாகவோ (Beating of Water) அல்லது தாங்கும் படியாகவோ (Carrying of water)
அமைக்கலாம். நீங்கள் இப்போது பார்ப்பது அதன் நடுவான நிலை. (In it's normal position). வெள்ளத்தின் தன்மையை பொருத்து அதை அதிகாரிகளின் மேற்பார்வையில் வேலையாட்கள் அந்த "ஷட்டரை" (Shutter) ஏற்பாடு செய்வார்கள்" என்று சொன்னார்.

பிறகு தென்கரையை அடைந்தோம். அவர் கால்வாய்கள் எங்கு போகின்றன என்பதை விளக்கினார். நாங்கள் ஊருக்கு திரும்ப சத்திரத்திற்கு வந்தோம். அவர் அங்கேயே எதோ ஒரு வேலையாக தங்கிவிட்டார். சத்திரத்திற்கு வந்து அவிழ்த்த மாட்டை பூட்டினோம். கிளம்பினோம் வில்லுபுறம் நோக்கி.....
வழியில் சில(ர்)வற்றை கண்டோம், அவை(கள்)களை நாங்கள் மதிக்கவில்லை. கண்டம்பாக்கம் எனும் கிராமம் வந்தது, நானும் அனந்தனும் சைக்கில் விளக்கை பற்ற வைக்க ஒரு வத்திப்பெட்டி வாங்கினோம். ஏற்றினோம். புறப்பட்டோம். வழியில் சாலை சரிவர இல்லாதததால் நானும் அவரும் விழுந்து வாரினோம்.

பிறகு விழிநகர் நானும் அனந்தனும் முதலிலும் பிறகு எங்கள் நண்பருமாக வந்து சேர்ந்தோம்.
சிற்றுண்டி அருந்தி சீட்டாடி சிங்கார பண் இசைக்க போகவில்லை - நாங்கள்.
சத்திர சுவற்றில் "சிலர்" போல் தம் சித்திரத்தை தீட்ட ஆசைப்படவில்லை - நாங்கள்

மீன் பிடித்து சாப்பாடு சமைத்து சுவைத்து கூப்பாடு போட போகவில்லை - நாங்கள்

ஆனால் - சிதறிக்கிடக்கும் சிந்தனைக்கு சிலவுத்தர, காணா கண்களுக்கு விருந்தளிக்க, பதறும் மனதிற்கு பால் சோறு ஊட்ட, மருதூர் மக்களுக்கு அவ்வணையின் மதிப்பினை தெரிவிக்க -சென்றோம்.. "நாங்கள்"

இதுதான் நாங்கள் "எல்லிஸ்" சத்திரம் போன கதை.

கவிதா:- இது பார்வைகளின் 200ஆவது பதிவு. அப்பாவே வரைந்து எழுதிய எழுத்தை பதிவிட எனக்கு மிகவும் சந்தோஷமாகவும் பெருமையாகவும் இருக்கிறது. 1954 ல் எழுதிய இந்த பதிவின் போது அப்பாவிற்கு வயது 20. படங்களில் PK வென கையெழுத்திட்டிருப்பார். பிளாக் வந்த பிறகு அவருடைய கையேட்டை படிக்கவில்லை. அவ்வப்போது எடுத்து அவரின் நினைவாக பார்ப்பதுண்டு. இன்று தான் எடுத்து இதோ டைப் செய்து முடித்துள்ளேன் அவரின் எழுத்து சாயல் நிறைய என்னிடம் இருப்பதாக இன்று தான் எனக்குப்பட்டது...! Ofcourse அப்பாவின் கையெழுத்து Damn Good!! அவரை போலவே எழுதுகிறேன் என்பதை விட அவர் இருக்கும் போதே உங்களை போல் அழகாக எழுதிக்காட்டுகிறேன் பாருங்கள் என்று கட்டாயாப்படுத்தி பழகிக்கொண்டது :)). வரைதலும் அப்படியே, அப்பாவிடம் ஆ, ஊ வென்றால் சவால் விட்டு உங்களை போல் வரைகிறேன் பாருங்கள் என்று வரைந்துக்காட்டுவேன்.
Appa, I love you !! I Miss You!! Naveen Missed you ! I want you back Daddy. !

மயில் போல பொண்ணு ஒன்னு..

இந்த பாடல் பாடகி பவதாரணிக்கு தேசிய விருது வாங்கித்தந்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று... எதோ பாட முயற்சி செய்து இருக்கேன்..
படம் - பாரதி
பாடகர் - பவதாரணி
இசை - இளையராஜா

mayilpola.mp3

அணில் குட்டி அனிதா : ஆஹா.. .அம்மணி ஆரம்பிச்சிட்டாங்களா திருப்பி, தொண்டை கிட்டத்தட்ட.. 15-20 நாளா சரியில்லாம லுக்கு லுக்கு. .ச்ச்சே!!.. லொக்கு லொக்கு ன்னு இருமிக்கிட்டு இருந்தாங்க... சரி.. அம்மணி இனிமே சங்கீத சுவரங்கள் எதோ கணக்க்கா.. இங்கே வழக்கா.. ன்னு ஆரம்பிக்க மாட்டாங்கன்னு தப்பு கணுக்கு போட்டுட்டேனே.........ஏஏஏஏஏஏஏஏ!! இதுல இந்த பீட்டர் தொல்ல வேற தாங்கல.. சோலு..மாலு..ன்னு!!

பீட்டர் தாத்ஸ்:- Music speaks what cannot be expressed, soothes the mind and gives it rest, heals the heart and makes it whole, flows from heaven to the soul.

முல்லைக்கு அன்பு முத்தங்கள்..!!

கவிதை எழுதனும்னு உட்கார்ந்தால் கவிதை எழுத வராது... ஆனாலும் கண்ணே !! உனக்காக உட்கார்ந்து எழுதுகிறேன், ஏனென்றால்

நீ பிறந்த இனிய நாளன்றோ..!! :)

அன்பான சிலரை
அடிக்கடி பார்ப்பதுண்டு
நீர்குமிழியாக
மறைந்துபோவார்கள் !!
உன்னிடம்
எனக்கு
கிடைக்கப்பெற்றதோ ..
வேறு....

என்னின்
கட்டுக்குள்
இல்லாத அதையும்
உன்னருகில் இருக்க
செய்வதும்
உன் இயல்பே...

நம் நட்பில்
என்னை
நம்புவதைவிட
உன்னை
நம்புகிறேன்...
நீ .........
உணர்ந்தவள் !
உணர்த்துபவள் !
புரிந்தவள் !
புரியவைப்பவள் !

நீ பிறந்தநாளாம் இன்று!!

உன்னை வாழ்த்தி
அகம் மகிழ
சந்தர்ப்பமாக்கி
கொள்கிறேன்

இந்த நன்னாள்
போன்று
ஒவ்வொரு நாளும்
உனக்கு
பொன்னாளாக
இருக்க...

வாழ்த்துக்கள்..... !!
என் நவீன் சார்ப்பாகவும் வாழ்த்துக்கள்...!

I Just showing you some

LOVE , HUG & KISSES !!







I LOVE YOU DEAR !!!

ஹெல்த் டே டிப்ஸ் & பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை

இன்று

World Health Day 2009
Save lives. Make hospitals safe in emergencies
World Health Day 2009 focuses on the resilience and safety of health facilities and the health workers who treat those affected by emergencies. Events around the world will highlight successes, advocate for safe facility design and construction, and build momentum for widespread emergency preparedness.

இந்த பதிவை Chocho' கோபி'க்கு டெடிகேட் செய்கிறேன்.

உடல் ஆரோக்கியத்திற்கு என்னால் முடிந்த சில ஹெல்த் டிப்ஸ் :-

1. தண்ணீர் ஒரு நாளை குறைந்தபட்சம் 3 - 5 லிட்டர் வரைக்கும் குடித்தால் நல்லது.
2. குளிர்ந்த தண்ணீர் (ஃபிரிஜ் வாட்டர்) குடிப்பதைவிடவும், சாதாரண தண்ணீர் , பானையில் ஊற்றி வைத்த தண்ணீர் அல்லது சுடுத்தண்ணீர் குடிப்பது நல்லது.
3. சாப்பாட்டிற்கு பிறகு அல்லது எப்போதுமே சுடுத்தண்ணீர் குடிப்பதால் தேவையற்ற கொழுப்புகள் எளிதாக வெளியேற்றப்படும்
4. FAST FOOD சாப்பிடுவதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம். 5. பலகாரங்கள் சாப்பிடுவதை விட பழங்களை சாப்பிடுவதை பழக்கமாக்கி கொள்ளலாம்.
6. ஐஸ் கிரிம், பேக்கரி ஐடம்ஸ் எல்லாம் மாதம் ஒரு முறை சாப்பிடலாம், அல்லது நிறுத்திவிடலாம். (இது பெரியவர்களுக்கு மட்டும்)
7. இரவில் சாப்பிடவுடன் தூங்கக்கூடாது.
8. கண்டிப்பாக உடற்பயற்சி செய்ய வேண்டும், ஒரு குட்டி வாக் போகலாம். குறைந்தபட்சம் 20 நிமிடங்கள் உடற்பயிற்சி உடம்புக்கு தேவை.
9. உடற்பயிற்சி செய்ய முடியவில்லை என்றால், நல்ல குத்து பாட்டு போட்டு விட்டு, 15-20 நிமிடம் நன்றாக டான்ஸ் ஆடலாம். ஆடத்தெரியவில்லை என்றாலும் கையை காலை ஆட்டி ஏதாவது செய்தால் போதும் அதுவும் உடற்பயற்சியே.
10. முடிந்தவரை நம் வேலையை நாம் செய்ய பழகிக்கொள்ளலாம், வீட்டு வேலைகளிலும் சரி, அலுவலக வேலையிலும் சரி.. நம்மை நாம் ஆக்ட்டிவாக வைத்துக்கொண்டால் நம் உடலுக்கு நல்லது.

இது குறிப்பாக என் பாசக்கார நண்பர்களுக்காக...இது உங்களுக்கு எல்லாம் சொல்லறது வேஸ்ட் இருந்தாலும் "உன் கடமையை நீ செய் பலனை எதிர்பாராதே" ன்ன்னு நினைத்துக்கொண்டு சொல்கிறேன்..

1. சிகிரெட் பிடிப்பதை நிறுத்திவிடலாம், அல்லது குறைத்துக்கொள்ளலாம், இதனால் உடல் பாதிப்பு மட்டும் ஆண்மைகுறைவிற்கு இதுவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.
2. தண்ணீ அ(கு)டிக்கறதையும் நிறுத்திக்கலாம்.. இதை இந்த ஜென்மத்தில் நீங்கள் யாரும் செய்ய போவது இல்லை, அதனால் குறைத்துக் கொள்ளுங்கள். இதனுடைய இம்பேக்ட் எல்லாம் நான் சொல்ல வேண்டியது இல்லை.

சமையல் குறிப்பு :- பிரட் ஃப்ரன்ச் ஃப்ரை :- (Bread French Fry )

தேவையானவை :-
பால் - 2 கப்
முட்டை - 3
சர்க்கரை - 6 ஸ்பூன்
நெய் - தேவையான அளவு
பிரட் :- 6 துண்டுகள்

செய்முறை :-
பால், முட்டை, சர்க்கரை எல்லாவற்றையும் ஒரு வாய் அகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்கு அடித்து கலக்கிக்கொள்ளவும். அடுப்பில் தோசைக்கல் வைத்து, நெய் ஒரு ஸ்பூன் விட்டு, பிரட்' டை இந்த கலவையில் நனைத்து எடுத்து கல்லில் போட்டு, திரும்பவும் நெய் 'யை பரவலாகவிடவும். இரண்டு பக்கமும் பொன்னிறமானவுடன் எடுத்து பரிமாறவும்.

நெய் அதிகமாக சேர்க்க வேண்டியது இல்லை. பால், முட்டையே அதிக கலோரி உள்ள உணவுகள். குழந்தைகளுக்கு மட்டும் நெய் அதிகம் விட்டு கொடுக்கலாம்.

அணில் குட்டி அனிதா :-
ஆமா டான்ஸ் ஆட சொல்றீங்களே.. அந்தம்மா குஷ்பூ இருக்காங்களே. .அவங்களும் என்னம்ம்மா குத்து டான்ஸ் ஆடறாங்க.. ஆனா குண்டாவே இருக்காங்களே. அது எப்படி கவி ??!!

பீட்டர் தாத்ஸ் : The only way to keep your health is to eat what you don't want, drink what you don't like, and do what you'd rather not.

இது இவங்களுக்கு தேவையா?!!ஹா ஹா! - 2

அணில் குட்டி அனிதா: கவிக்கு பல்பு வாங்கறது ஒன்னும் புதுசு இல்ல... ஆனா பப்புக்கிட்ட கூட பல்பு வாங்கினது தான்……. ஒன்னும் சொல்லிக்கிற மாதிரி இல்ல… வாங்க.. வந்து கவிய நீங்களும் பாராட்டிட்டு போங்க..
* * * * * *
குழந்தைகள் பூங்காவில் கவியும் காயுவும் முதலில் சென்று முல்ஸ்'க்காக வெயிடிங். முல்ஸ் & பப்பு வந்தவுடன்... வண்டியை விட்டு பப்பு இறங்காமல் இருக்கும் போதே..

கவிதா :- ஹாய் பப்பு குட்டி....!! :)
பப்பு :- ........................ (கவியை பார்த்துக்கொண்டே... தலையில் அடித்து க்கொள்கிறாள்)..
கவிதா : ஞே.....!!
காயூ:- ஹா ஹா ஹா.. கவி.. பப்புவிற்கும் உங்களை பத்தி நல்லா தெரிஞ்சி போச்சி...........
முல்ஸ் :- ஹா ஹா ஹா இதுக்கு தான் வயசுக்கு ஏத்த மாதிரி இருக்கனும்னு சொல்றது.....!!
கவிதா : ஞே..!! (கண்ணாடியும் தொப்பியும் போடறது ஒரு பிரச்சனையா??? .....?? ஒன்னும் புரியலையே!!!! )
***************************


கவிதா :- பப்பு, வா...என் கைய பிடிச்சிக்கோ.................
முல்ஸ் :- பப்பு, என் கைய விட்டுடு... ஆன்ட்டி கைய மட்டும் பிடிச்சிக்கோ....
பப்பு : ( பப்பு, முல்ஸ் கையை விட்டு விட.....)
காயூ:- சரி வேணும்னா என் கைய பிடிச்சிக்கோ..
பப்பு :- ....................................
முல்ஸ் :- ஹி ஹி..அவ கண்ணாடி போட்டவங்க கைய மட்டும் தான் பிடிச்சி நடந்து வருவா...
கவிதா : ஓஒ..... ஏன்...?
காயூ :- ஹய்யோ....கவி......கண்ணு தெரியாதவங்க தானே.. கண்ணாடி போடுவாங்க...அவங்களுக்கு தானே ஹெல்ப் தேவை..!!
கவிதா : ஞே...!!
*******************************


கவிதா:
பப்பு, இங்க பாரு...இது பேரு Python!!
காயூ: ஏன் தமிழ்'ல சொல்லித்தரமாட்டீங்களா?
கவிதா : முல்ஸ்'ஐ பார்த்து பப்புக்கு தமிழ் தெரியுமா?
முல்ஸ் : தெரியாதுன்னு நான் சொல்லவே இல்லையே.. கவிதா :................................! சரி பப்பு இது பேரு மலைப்பாம்பு!! முல்ஸ் :ம்ம்....இனிமே இப்படியே சொல்லிட்டு வாங்க..
கவிதா: எப்படி எல்லா பாம்பையும் மலைப்பாம்பு' ன்னே சொல்லித்தர முடியும்?
முல்ஸ்: கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
************************************



கவிதா:-
ஹே காயூ, முல்லை... இங்க வாங்க! இங்க ஒரு முதலை வாய தொறந்துக்காட்டுது...
முல்ஸ் :- ஹா ஹா ஹா.. அசல் உங்களை மாதிரியே இல்ல கவி........
கவிதா : ஹை... என் பக்கமா திரும்பி பாக்குது... ஹே ஹே... என்னை பாத்ததும் பயந்து வாய முடீடுத்து..
காயூ :- அடக்கொடுமையே.. அங்க பாருங்க. பயத்துல அது யூ-டர்ன் போட்டு ரிடர்ன் போகுது :(

முல்ஸ் :- காயூ, எதுக்கும் நாம இவங்கள விட்டு கொஞ்சம் தள்ளியே இருப்போம்.
காயூ :- சேச்சே.. நாம அந்த முதலை மாதிரி கோழை எல்லாம் இல்லை.. நாம தைரியசாலிங்க :)
முல்ஸ் :- அதுக்கு சொல்லலை.. இவங்க கூட நம்மள பாத்து நாமளும் இவங்கள மாதிரி தான்னு தப்பா நினைச்சிட போறாங்க..
காயூ :- ஆஹா.. அதுவும் கரெக்ட்டு தான்.. கவி.. நீங்க முன்னாடி போங்க.. நாங்க ஒரு 10 அடி கேப் விட்டே வர்றோம்
கவிதா : ஞே!!
**********************************

காயூ
:- கவி கவி இங்க வாங்க இங்க ஒரு முதலை வாய தொறந்து இருக்கு... உங்களை பாத்தா மூடுதா பாக்கலாம்..
கவிதா.. : ஹோ....இதோ வரேன்...இதோ வரேன்...!!
காயூ..: ஒரு வேளை இது கல்'லா இருக்குமோ.? கவிய பாத்துக்கூட வாய மூடல....
முல்ஸ் :- ஹா ஹா.. ஹா... அதான் அதுக்கு பதிலா கவி வாய மூடிட்டாங்களே..!!
கவிதா :- ஞே!!!
**********************************

பப்பு
:- இங்க பூராவும் முதலையா இருக்கு....மான் பாக்கலாம் வாங்க...
கவிதா :- இரண்டு மான்கள், மான்களை பார்க்க செல்கின்றன....
முல்ஸ் & காயூ : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ......
***********************************


கவிதா :-
ஏன்ப்பா இந்த கூண்டுக்குள்ள பாம்பையே காணோம்..
காயூ : கவி, கண்ணாடிய கழட்டிட்டு பாருங்க…
முல்ஸ் :- ஹே அவங்க கண்ணாடிய கழட்டினா…அடுத்தது கூண்டு எங்கன்னு கேட்பாங்கப்பா…. :)
கவிதா : ஞே!!
************************************


காயூ :
(மயிலை போட்டொ எடுக்கும் போது கூண்டின் கம்பி வராமல் இருக்க ரொம்பவும் கஷ்டப்பட்டு போக்கஸ் செய்யறாங்க)
கவிதா :காயூ….யூ…. இங்க நான் இருக்கும் போது நீங்க ஏன் இவ்வளவு கஷ்டப்படறீங்க..…???
முல்ஸ் :- கவிதாஆஆஆஆஆஆஆஆ!!!
காயூ : இதுக்கு மேல யாராவது இங்க பேசினா…. இங்க ஒரு கொலை விழும்..!!
**********************************


கவிதா :
இப்படி இரண்டு பேரும் மாறி மாறி போட்டோ எடுத்தா நான் யாருக்கு போஸ் கொடுக்கறது.. ம்ம்?!!
முல்ஸ் :- நீங்க வாய மூடினா போதும்.. ஒரு போட்டோ விடமா முதலை மாதிரி வாய பொளந்துக்கிட்டு இருக்கீங்க…
கவிதா : வாய மூடிட்டா அப்புறம் எப்படி கேள்வி கேக்கறது..?
முல்ஸ் : கவிதாஆஆஆஆஆஆ !!
காயூ: முல்ஸ்..அவங்க என்ன சொன்னாலும் அடங்க மாட்டாங்க. .நாம் ஆக்ஷன்லியே போட்டோ எடுத்து.. உலகம் பூரா லிங்க் அனுப்புவோம் அப்பத்தான் அடங்குவாங்க....
கவிதா : ஞே!!
**********************************


காயூ :
ஸ்ஸ்…என்னா Height Difference இரண்டு பேருக்கும் ..!!
கவிதா : அட ஆமா இல்ல..
காயூ : ஹல்லோ… இப்படியா சொன்னவுடனே அவங்களை திரும்பி பாக்கறது… ???
கவிதா : ஆமா..அப்படி பாத்தாத்தானே நீங்க அவங்களப்பத்தி தான் பேசனீங்கன்னு அவங்க புரிஞ்சிப்பாங்க....
முல்ஸ் : கவிதாஆஆஆஆஆ!!
காயூ: அய்யோ..விட்டா என்ன பேசினோம்னு போய் சொல்லிட்டு வருவீங்க…போல...???
கவிதா : ஹோ அது வேற இருக்கா.. சொல்லிட்டா போச்சி….:)
காயூ & முல்ஸ் :- கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
*****************************


கவிதா :
சரி எது எதுல விளையாடனும்னு நான் முடிவு செய்துட்டேன்..
முல்ஸ் : கவி அது எல்லாம்….குழந்தைகள் விளையாடறது……
கவிதா : ஓ. .நான் விளையாடினா….
முல்ஸ் : ம்ம்ம்…ஒத கிடைக்கும்…!!
கவிதா : என்ன அடிப்பாங்களா…? யாரு்…………….??
முல்ஸ் :. ம்ம்ம்…..இதுக்காக என்ன ஆள் எல்லாமா வைச்சு அடிப்பாங்க..… நாங்களே பின்னி பெடல் எடுப்போம்…
கவிதா : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !!
****************************************
கடைசியாக பப்பு…. (பூங்காவை விட்டு வெளியில் வந்த பிறகு)

பப்பு: இப்ப எங்கம்மா எனக்கு ஐஸ் கிரீம் வாங்கி தருவாங்க பாருங்க…
கவிதா : ஓ அம்மா சொன்னாங்களா..???... (கடை ஒன்று அருகில் வர)… இங்கயா வாங்குவாங்க….???
பப்பு : ஓ இந்த கடையில வாங்கித்தரேன்னு.....அம்மா உங்ககிட்ட சொன்னாங்களா????........
கவிதா : ………………………………???????..!!
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் !!..... புள்ள என்னம்மா போட்டுவாங்குது!! , நிஜமாவே நம்மல பத்தி தெரிஞ்சிப்போச்சோ..?!! சைலன்டா எஸ் ஆகனும் இல்லன்னா முல்லை என்னை கொன்னே போட்டுவாங்க….,,,,,,,,!! )
*****************************
கவிதாவின் கேள்வி நேரம் :

முல்ஸ்’க்கு :- நீங்க ஏன் கோவம் வந்தா கவிதாஆஆஆ? ன்னு கத்திட்டு அப்படியே நிறுத்திடறீங்க.. மேற்க்கொண்டு புரோசீட் செய்யவே மாட்டேன்ங்கறீங்க…? அப்படியே புரோசீட் செய்தா விளைவுகள் எப்படி இருக்கும்???

காயூ’க்கு… :- நீங்க வளைச்சி வளைச்சி என்னை போட்டோ எடுத்தீங்களே… உங்க ஆசைய நான் நிறைவேத்தி வச்சனே… உங்களை மட்டும் ஏன் போட்டோ எடுக்கவே விடலை ..??

முல்ஸ் & காயூ’ க்கு :-
1. ஏன் உங்க இரண்டு பேருக்கும் ஒரு பேஸிக் மேனர்ஸ் தெரியாதா? ஒரு போட்டோ எடுத்தா..எடுக்கறவங்க கிட்ட… ஸ்டார்ட் கேமரா ஆக்ஷன், ஸ்மைல் ப்ளீஸ் எல்லாம் சொல்ல தெரியாதா?
2. இரண்டு பேரும் மாறி மாறி எடுத்தா எந்த கேமராவை நான் பார்க்கறதுன்னு எனக்கு ஏன் சொல்லவே மாட்டறீங்க.. அப்படி என்னை அலையவிடறதுல உங்களுக்கு என்ன அப்படி ஒரு ஆத்ம திருப்தி..?
3. இவ்வளவு பல்பு வாங்கியிருக்கேனே.. இதை பாராட்டி சீராட்டி எனக்கு ஏதாச்சும் பரிசு உண்டா..???

சிவா ' ராம் நாங்களும் படம் எடுப்போம் !!

நாகை சிவாவும், ராயல் ராமும், என்னம்மா எடுக்கறாங்க போட்டோ. அவர்களை பின்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் பற்றீஈஈஈஈஈ நானும் வளச்சி வளச்சி எடுத்து இருக்கேன்(கோம்)...பார்த்து ரசித்து கொள்(ல்)ளுங்கள்....

1. மஞ்சள் நிறமே மஞ்சள் நிறமே........


2. எல்லா சிகப்பும் உந்தன் கோபம்...


3. கலர்ஃபுல் சுண்டல் (இது காயூ எடுத்தது)


அணில் குட்டி அனிதா :- கவி......உங்களை வளச்சி வளச்சி அவங்க படம் எடுத்தாங்களே முதலை மாதிரி வாயை பொளந்துக்கிட்டு, செந்நாய் மாதிரி சிரிச்சிக்கிட்டு அது எல்லாம் எங்க........?!!

பீட்டர் தாத்ஸ் :- A photograph can be an instant of life captured for eternity that will never cease looking back at you.

குறிப்பு : இது சிவா மற்றும் ராம்' மின் புகைப்படம் எடுக்கும் கலையை கிண்டல் செய்து போட்ட பதிவு இல்லை...!! :)))

சில வேலைகளும் சில விளையாட்டுகளும்.

இப்போது வீட்டு வேலை செய்வது என்பது மிக பெரிய பொழுது போக்கு, குறிப்பாக வீட்டை சுத்தம் செய்வது, அலங்காரம் செய்வது, படம் வரைந்து (என் இஷ்டத்திற்கு) ஓரளவு பின்புற சுவரின் கலருக்கு மேட்சாகும் மாறு மாட்டுவது, துணி தைப்பது இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் அப்போது எல்லாம் வேலைகள் வேறு விதமாக இருந்தன. ஆயா ஏதாவது ஒரு வேலை செய்து க்கொண்டே இருப்பார். அவற்றை எழுதிவைத்துக் கொள்ள ஆசைப்பட்டு இந்த பதிவை எழுதுகிறேன் :-

1. நெல் அவித்தல் :- பெரிய பெரிய பித்தளை, தாமிர அண்டாக்கல் இருக்கும், அதை விறகு அடுப்பின் மேல் ஏற்றி வைத்து தண்ணிர் ஊற்றி அடுப்பை விறுகுகள் வைத்து பற்றவைத்துவிடுவார்கள். மொத்தம் மூன்று அடுப்புகள், பின் மூட்டை மூட்டையாக வாங்கி வைத்துள்ள நெல்லை கழுவி அதில் போடுவார்கள். துடுப்பு என்று மரத்தால் செய்தது இருக்கும். அதனால் இந்த நெல்லை அவ்வப்போது துழவி விட்டுக்கொண்டே இருப்பார்கள். வெந்தவுடன் பதம் அவர்களுக்கு தான் தெரியும், மெல்லிய சாக்கை கொண்டு கட்டி இன்னும் ஒருவர் உதவி க்கொண்டு அண்டாவை இறக்கி தண்ணீர் வடியவிட்டு, எங்களின் பெரிய வீட்டு மெத்தையில் (மாடி) காயவைப்பார்கள்.

இதில் என்னுடைய வேலை அடுப்பை அணையாமல் விறகை தள்ளி விடவேண்டும், சும்மா இல்லாமல் ஆயா அந்த பக்கம் போனவுடன் துடுப்பை எடுத்து அண்டாவில் போட்டு கையை சுட்டு க்கொள்ளுவேன், சில சமயம் சூடு தாங்காமல் அப்படியே அண்டாவில் விட்டுவிடுவேன். ஆயாவாக இருந்தால் திட்டு அப்பா பார்த்தால் நறுக்கு ன்னு தலையில் கொட்டு கிடைக்கும். அடுத்து காயவைத்த நெல்லை காலால் துழவி விடவேண்டும், வெயில் அதிகமாக இருக்கும் எனக்கு தலைவலி வருமென்று குடை கொடுத்து அதை பிடித்துக்கொண்டு காலால் தள்ளி காயவைக்க வேண்டும். இதை மாலை வரை அடிக்கடி செய்ய வேண்டும். அடுப்பு தள்ளுவதை விட இந்த வேலை பிடிக்கும். ஏனென்றால் காலால் தள்ளி தள்ளி விடுவது ஒரு வித விளையாட்டு போல இருக்கும். மாலை ஆனால் அதை பெருக்கி வாரி மூட்டையில் அடைத்து ஆயாவுடன் மிஷினுக்கு சென்று, திரும்பி வந்து அரிசியாக அதை ஹாலில் கொட்டினால், அதன் மேல் குதிக்கும் முதல் ஆள் நான் தான். ஆயா போகட்டும் என்று விட்டுவிடுவார்கள், மிஷினில் இருந்து வந்ததால் சூடாக இருக்கும், அதில் கையை விட்டு கிளரி கிளரி விளையாடுவேன்.

3. இளவம்பஞ்சி : மரக்காணம் தாத்தாவின் பூர்வீகம், அங்கிருக்கும் இளவம்பஞ்சி மரத்தில் பஞ்சிக்கு சொல்லி வாங்கி வருவார்கள், இதை தான் பெட்டில் வைத்து தைப்பார்கள். இந்த பஞ்சியில் தைத்த பெட் உடம்புக்கு குளிர்ச்சி, மென்மையாக இருக்கும் நன்றாக தூக்கம் வரும். மூட்டைகளாக வந்த பஞ்சை ஒரு ரூமிர்குள் போட்டு, குச்சியை கொடுத்து தலை காது மூக்கு எல்லாம் கட்டி மூகமூடி போல் ஆக்கி அனுப்புவார்கள், நமக்கு யார் மேலாவது கோபம் இருந்தால் அவர்களை நினைத்து க்கொண்டு எவ்வளவு அடிக்க முடியுமோ அவ்வளவு அடிக்கலாம். செம ஜாலியான வேலை இந்த வேலை முடிந்தது.

4. தையல் : தாத்தா தான் பெட், தலையணை உறை எல்லாம் தைப்பார், அவருக்கு பெடலிங் மட்டும் நான். அவர் முன்னே அமர்ந்தால், நான் எதிராக பெடலில் கால் வைத்து நின்று மிதிப்பேன். அவருக்கு முட்டி வலி என்பதால் நான் தான் சித்தால். தைத்து முடிப்பதற்குள் நானும் தாத்தாவும் ஏகத்துக்கு ஆயாவிடம் திட்டு வாங்குவோம். எப்பவுமே எங்கள் வீட்டில் அந்த அம்மா ரொம்ப புத்திசாலி, அதனால் எல்லாரையும் ஒழுங்காக செய்யவில்லை ன்னு திட்டவது மட்டும் இல்லாமல் சரியாகவும் சொல்லி தருவார்கள். சில சமயம் தாத்தா அப்பா நிக்கர் எல்லாம் நானே தாத்தா சொல்லித்தர தைப்பேன். எனக்கு ஸ்கூல் பாவாடை, வீட்டுக்கு போடும் பாவாடை எல்லாம் நானே ஆயா சொல்லித்தர தைத்து க்கொள்வேன். சட்டை மட்டும் வெளியில் கொடுப்பார்கள். இதில் மிஷின் பெடலிங் சூப்பர் விளையாட்டு.

5. பஞ்சடைத்தல் : இப்போது தைத்த தலையணை க்கு எல்லாம் பஞ்சடைக்கறதும் எங்க வேலைதான். இப்ப நினைத்தால் கூட முதுகு வலிக்கிது ஆனா ஆயா எமகாதகி, விடமாட்டாங்க.. இது மட்டும் விளையாட்டே இல்லை பனிஷ்மெண்டு !

6. சுண்ணாம்பு கலக்குதல்: வீட்டுக்கு சுண்ணாம்பு அடிக்கறது பெரிய வேலை, அதில் சங்கு போல் ஒரு சுண்ணாம்பு கட்டிகள் இருக்கும் அதை முதல் நாள் இரவு பெரிய தொட்டியில் தண்ணீர் விட்டு கொட்டு விடுவார்கள், அது ஊறி கரைந்து காலையில் அடிக்கும் பதத்தில் இருக்கும். தென்னம் பாலையில் செய்த பிரஷ்'கள். அதை ரெடி செய்யவும் பாலைகளை முதல் நாள் இல்லை மூன்று நாட்கள் முன் கூட்டியே ஊறவைப்பார்கள். அப்புறம் அதை பிரஷ் 'ஆக அடிக்க செய்யமுடியும். இதில் என் வேலை தொட்டியில் தண்ணீர் நிரப்புவது, எனக்கு அந்த சுண்ணாம்பில் கைவிட்டு விளையாட ஆசையாக இருக்கும். ஆயா என்னவொ கை வெந்து போயிடும் செய்யாதே சூடு என்பார்கள், சரி கைதானே வைக்க கூடாது என்று ஏதாவது குச்சி வைத்து தொட்டியின் மேல் உட்கார்ந்து அதை நோண்டிக்கொண்டே இருப்பேன்.

7. தென்னங்காய், ஓலை :-
மரம் ஏறி பதிவில் சொல்லி இருப்பேன், வீட்டில் தேங்காய் வெட்ட ஆள் வந்தால் நான் பார்த்துக்கனும், ஓலை பின்னும் போது பார்த்துக்கனும், தாத்தா ஓலை பின்னுவார் என்னையும் அழைத்து பின்ன சொல்லி கற்றுக்கொடுப்பார், 25 ஓலைகள் எல்லாம் தேவைப்பட்டால், நாங்களே பின்னிவிடுவோம், பாம்பு ஓலை செய்வது எனக்கு ரொம்பவும் பிடிக்கும். அதை செய்து வைத்து விளையாடுவேன். பின்னுவதோடு நின்று விடாது சரியா உல்டா உல்டாவாக ஆயா சொல்லும் இடத்தில் அடுக்கி வைக்க வேண்டும்.

9. விழல் அடித்தல் :- தாத்தா குடிலுக்கு 5 வருடங்களுக்கு ஒரு முறை இதை வாங்குவோம், எங்கிருந்து வாங்குவார்கள் என்பது நினைவில்லை. இது தாத்தா செக்ஷன் ஆனாலும் கிழவி விடாது என்பது வேறு விஷயம். விழல் வந்தவுடன் அதற்கு தண்ணீர் தெளித்து வைக்க வேண்டும். ஆள் வந்து விழல் பரப்பி கட்ட ஆரம்பித்தவுடன் தாத்தா ஏணி போட்டு அவர்களுடன் கூரை மேல் ஏறிவிடுவார். என்னையும் மேலே வரச்சொல்லுவார். கார்த்தி அண்ணா ஏறிவிடும், ஆயா என்னை ஏற விடமாட்டங்க. காரணம் சூப்பர் விழுந்து கை கால் உடைந்துவிட்டால், முடமான பெண்ணை யாரும் கல்யாணம் செய்துக்க மாட்டாங்களாம். அதனால் நான் ஏணியிலே நின்று கட்டிய விழலை தாத்தா சொல்கிற படி அடிப்பேன். விழல் கட்டுபவர்களை வேடிக்கை பார்க்க ரொம்பவே பிடிக்கும். தாத்தா விழுந்து விடாமல் இருக்கிறாரா என்பதற்காகவே நான் ஏணியை விட்டு இறங்கமாட்டேன். அவரை நான் தான் பார்த்துக்கொள்வதாக எனக்கு ஒரு நினைப்பு. :)

10. திருவாசகம், திருவருட்பா படித்தல் : இது மட்டும் எனக்கு பிடிக்காத ஒரு வேலை. ராத்திரி ஆனால் போதும், தாத்தா கூப்பிட்டு விடுவார், அவருக்கு கண்பார்வை மங்கி விட்டதால் படிக்க நான் வேண்டும், அவர் கொசுவலைக்குள் சென்று , எனக்காக பெட் மேல் ரீடிங் டெஸ்க் போடுவார். இல்லைன்னா முதுகுவலிக்குதுன்னு எஸ்கேப் ஆகிவிடுவேன். எவ்வளாம் பெரிய பெரிய புக், தொடர்ந்து நேற்று விட்டதிலிருந்து ஆரம்பித்து செய்யுள் படிக்கவேண்டும், அதற்கு அர்த்தம் வேறு சொல்லி என்னை கொல்லுவாரு. இப்ப என்னவோ அந்த புத்தங்கள் படிக்க வேண்டும் போல் இருக்கிறது தீ விபத்தில் எல்லாமே போயின என்பது வேறு கதை. அதில் திருவாசகம் என்னவொ எனக்கு ரொம்பவும் பிடிக்கும், அருட்பா கொஞ்சம் எளிதாக அர்த்தம் தெரிந்து கொள்ளலாம் திருவாசம் அப்படி இல்லை தாத்தா சொல்லாவிட்டால் எனக்கு தெரியாது.

11. கதை செக்ஷன் :- விடுமுறை நாட்களில் மட்டும் இது உண்டு, தாத்தா நாற்காலியில் உட்கார்ந்து கொள்ள நாங்கள் அனைவரும் சுற்றி அமர்ந்து கொள்வோம், நான் தான் பக்கத்தில் யாரையும் விடமாட்டேன். ராமாயணம், மகா பாரதம், ஏகலைவன், குட்டி குட்டி புராண கதைகள், அரிசந்திரன், எமராஜன், விக்கிரமாதித்தன் கதைகள் ன்னு தாத்தா சூப்பரா கதை சொல்லுவார். அவர் கதை சொல்லும் போது "உம்" சொல்லனும் இல்லன்னா ஏ பொண்ணே என்ன தூங்கறியா உம் சொல்லு ன்னு அதட்டுவாங்க.. :) கதையை கூட கிழவி எங்கே இருந்தாவது கவனித்து தாத்தா தப்பு பண்ணா போதும் ஓடியாருவாங்க.... எதுக்கு? வேற எதுக்கு திட்டத்தான்.. ::)

12. கட்டிட வேலை : கட்டிட வேலை நடக்கும் போது என்னை வேலை வாங்கா விட்டாலும், மணல், சிமெண்டு கலவை சரியாக இருக்கா? என்று நின்று பார்க்க சொல்லுவார்கள். பொதுவாக கார்த்தி அண்ணா இதில் எல்லாம் எக்ஸ்பர்ட் , கூடவே நானும் நின்று கற்றுக்கொள்வேன். மட்டபலகை வைத்து மட்டம் பார்ப்பது, தரை சாய்வு சரியாக இருக்கா என்று பார்ப்பது போன்ற சின்ன சின்ன வேலை எப்படி செய்கிறார்கள் என்று அண்ணாவே சொல்லித்தரும். இதில் கொள்ளூரை வைத்து தனியாக சிமெண்டை திருடி வந்து நானே எங்கேயாவது பூசி பார்ப்பேன். நன்றாக இருந்தால் திட்டு விழாது, கேவலமாக இருந்தால் கொட்டு மட்டும் இல்லை எப்படி சரியா செய்யணும்னு திருப்பி பாடம் வேறு எடுப்பார்கள்

13. பூ கட்டுதல் : இதை தவிர்த்து, அன்றாட வீட்டு வேலை, சம்பங்கி பூ, நித்தியமல்லி வீட்டிலேயே பூத்தது. அதை பறித்து வந்து கட்டவேண்டும் முதலில் தென்ன்ஞ்குச்சி வைத்து சொல்லி கொடுத்தார்கள் பிற்கு காலால் கோர்த்து கட்டவும் கற்றுக்கொண்டேன். இது கொண்டை அலங்காரத்திற்கு பயன்படும். அதிகமாக திட்டு வாங்குவது இந்த வேலையில் தான் இருக்கும், பூ கட்டாகி விழுந்து விட்டால் போதும் கிழவி கழுத்தே கட்டாகி விட்டது போல் திட்டுவிழும். இதில் இன்னொரு விஷயம் பூ கட்டும் நார், அதை வாழைமரத்தில் இருந்து எடுத்து வந்து மெல்லியதாக கிழித்து காயவைத்து சுருட்டி கட்டி வைத்து இருப்பார்கள் தேவைப்படும் போது எடுத்து தண்ணீரில் நனைத்து பயன்படுத்தவேண்டும்.

அணில் குட்டி அனிதா: ஓ இவ்வளவு வேலை செய்து இருக்கீங்களா நீங்க இப்ப என்னவோ உங்களை வீட்டில் சோம்பேறி தூங்குமூஞ்சி எதுக்கும் லாயிக்கு இல்லன்னு அடிக்கடி சொல்றது என் காதுல கேட்குதே... அது என்ன மேட்டரு கவி....?!!

பீட்டர் தாத்ஸ் :- “A woman can do anything. She can be traditionally feminine and that's all right; she can work, she can stay at home; she can be aggressive; she can be passive; she can be any way she wants with a man. But whenever there are the kinds of choices there are today, unless you have some solid base, life can be frightening.”