மாமியாருக்கு மொட்டையடித்த மருமகள்

திருமணம் நிச்சயம் செய்வதற்கு முன் மாப்பிள்ளை வீட்டாரின் பழக்கவழக்கங்கள் என்னென்ன என்று நன்றாக தெரிந்து கொண்டு திருமண ஏற்பாடுகளை செய்வது நல்லது. பொதுவாக குல தெய்வம் என்று ஒன்று இருக்கும். இது ஒவ்வொரு வீட்டுக்கும் மாறுபடும். அதனால் ஏற்படும் பழக்கவழக்கங்களும் மாறுபடும். பெண்கள் (என்னையும் சேர்த்துதான்) இயல்பாகவே புகுந்த வீட்டு பழக்க வழக்கங்களை தன்னுடையதாக்கி கொண்டு தன் வீடு, தன் மக்கள், தன் கடவுள் என்று மாறிவிடுகிறார்கள். கடவுள் என்று வரும்போது, சைவம்-சிவன்(பட்டை), வைணவம்-விஷ்னு(நாமம்) என்று இரண்டும் எப்போதும் திருமணங்களில் கலந்து விடுவதுண்டு. எங்களுது வீட்டில் இப்படி நிறைய திருமணங்கள் நடந்திருக்கிறது. என்னுடைய அத்தை-சைவம் மாமா-வைணவம் இதனால் பழக்கவழக்கங்களில் நிறைய பிரச்சனைகள். அத்தை, மாமா வீட்டிலுள்ளவாறு தான் எல்லாவற்றையும் செய்வார்கள். ஆனால் மாமா சிவன் கோயிலுக்கு போகக்கூடாது என்பார். அவருக்கு பிடிப்பதில்லை. குழந்தைகள் பெயர் உட்பட எதிலும் சிவன் (கடவுள்) வந்துவிடக்கூடாது.

சரி, மாமியாரை மொட்டை அடித்த மருமகள் கதைக்கு வருவோம். திருமணம் முடிந்து, குழந்தை பிறந்தவுடன், குழந்தைக்கு மொட்டை அடிக்கும் போது, குழந்தையின் அம்மாவும் மொட்டை அடித்து கொள்ளவேண்டும் என்பது தான் அந்த மாப்பிள்ளை வீட்டு வழக்கம். இதை திருமணத்திற்கு முன்பு அவர்கள் பெண் வீட்டாரிடம் சொல்லவில்லை. குழந்தை வயிற்றில் இருக்கும் போது தான் இந்த மொட்டை விஷயம் அந்த பென்ணிற்கு தெரிய வந்தது. இந்த பெண்ணிற்கோ மிகவும் சிறிய வயது.. யாருமே தலை வாரிவிட பயப்படும் (இறுக்கி பிடித்து சீவி விட முடியாது) அளவிற்கு கருகருவென்று மிகவும் அடர்த்தியான கூந்தல்.. இந்த பெண்ணிற்கோ அந்த வயதில் தன் தலை முடியை இழக்க மனமில்லை, மொட்டை அடித்து கொள்ள மிகவும் வெட்கமாகவும், வேதனையாகவும் இருந்தது..

என்ன செய்வது, மாமியார் வீட்டில் இதற்கு முன் திருமணம் ஆன அத்தனை பெண்களும் மொட்டை அடித்து இருந்தனர், தப்பிக்க வழியில்லை. தலைமுறை தலைமுறையாக தொடர்ந்து வரும் பழக்கவழக்கத்தை எப்படி இந்த சின்ன பெண்ணால் தடுத்து மாற்றமுடியும் பெண்ணின் கணவரும், தன் வீட்டு வழக்கப்படிதான் எல்லாம் செய்ய நடக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். மாமியாரை எதிர்த்து கொள்ளவும் இஷ்டமில்லை. என்னசெய்வது என்ற ரொம்ப நாள் யோசித்த அந்த பெண், குழந்தைக்கு மொட்டை அடிப்பதற்கு முன், அதே குல தெய்வத்திடம், எனக்கு பதிலாக, என் மாமியார் மொட்டை அடித்து கொள்வார், நான் உனக்கு பூ முடி கொடுக்கிறேன் என வேண்டிக்கொண்டு, அதை நாசுக்காக மாமியாரிடமும் சொல்லிவிட்டாள். மாமியாரும் என்ன செய்வது என்று தெரியாமல் தெய்வகுத்தம் ஆகிவிடுமோ என்று பயந்து மொட்டை அடித்து கொண்டார்கள். இந்த பெண் பூ முடி மட்டும் கொடுத்து வேண்டுதலை நிறைவேற்றிக்கொண்டாள். வீட்டில் உள்ள அனைவருமே என்ன செய்வது என்று தெரியாமல், பிரச்சனையும் வளர்த்த முடியாமல் அப்படியே விட்டுவிட்டார்கள்.

அந்த பெண் வேறு யாரும் இல்லைங்க..நான் தான்...என் மாமியாருக்கு, நான் நல்லபடியாக மொட்டையடித்து வைத்தேன். எனக்கு நம்பிக்கை இல்லாத பல விஷயங்களில் இதுவும் ஒன்று, வேற வழியே தெரியாமல் மாமியாருக்கு மொட்டை அடிக்க வேண்டியாதாயிற்று..

அணில் குட்டி அணிதா:- கேளுங்கம்மா..கேளுங்கய்யா இந்த அக்கறமத்த.. அம்மணி எவ்வளோ மோசமான ஆள்ன்னு இப்பவாவது புரிஞ்சிகோங்க.. .மாமியாருக்கே மொட்டை போட்டுட்டாங்களே.. அப்ப நாம எல்லாம் என்ன கதி..? அம்மணிக்கு போன பதிவுல சப்போர்ட் பண்ண அத்தன பேரும் தயவுசெய்து அத வாபஸ் வாங்குங்க.. இல்லைனா..மாமியார் மொட்டை உங்களுக்குதான்..... சொல்லிட்டேன்.. ம்ம் இனிமே நானுமே உஷாரா வாலை சுருட்டி வச்சிக்கணும், ராமருக்கு வேண்டிக்கிட்டேன்னு, என் வாலை கட்பண்ணி பிரஷ் பண்ணாலும் பண்ணிடுவாங்க......... (குட்டி குட்டி பெயிண்டிங் பிரஷ் எல்லாம் நம்ம வால்ல பண்றதாதான் கேள்வி, உங்களுக்கு ஏதாவது ஐடியா இருக்கா?)

பீட்டர் தாத்தா :- Many receive advice, only the wise profit from it.

VIP யின் கார்களுக்கு வாலாட்டும் போலிஸ்காரர்கள்...

அரசாங்க உத்தியோகத்தில், பொது மக்களுக்கு சேவை செய்யும் பணியில் இருக்கும் போலிஸ்காரர்கள், உயர் அதிகாரிகளின் காருகளுக்கு வாலாட்டுவது மட்டுமல்லாமல் பொதுமக்களை எத்தனை இடைஞ்சலுக்கும் இன்னல்களுக்கும் உள்ளாக்குகிறார்கள் என்பதை ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இவர்கள், அவர்களுக்கு வாலாட்டவில்லை என்றால் என்னவாகும் என்பது வேறு கதை. அதற்கு தனி பதிவு தான் போடவேண்டும்.

சென்னையில் VIP கள் வருகிறார்கள் என்றால் போதும், (ஆட்சியில் இருக்கும் போது அம்மா வருகிறார்கள் என்றால் 1 மணி நேரம், ஏன் சில சமயம் 2 , 3 மணி நேரம் கூட நிற்கவேண்டி இருந்திருக்கிறது) அரை மணி நேரத்திற்கு முன்பே போக்குவரத்தை சீர் செய்கிறோம் என்று சிக்னலுக்கு சிக்னல் வாகனங்களை நிற்க வைத்து விடுகிறார்கள். VIP களின் கார்கள் சென்றவுடன், போக்குவரத்தை சரிசெய்து அனுப்பவும் மாட்டார்கள், யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் போகட்டும் என நேடு நேரம் வேலை செய்த கலைப்பில் ?!! போக்குவரத்து காவலர்கள் ரோடோர மரம், இல்லை டீ கடை என்று ஓரம் கட்டி ஓய்வெடுக்க சென்றுவிடுகிறார்கள். அதாவது, அவர்கள் நிற்கும் இடத்தை VIP களின் கார்கள் கடந்த மறுவினாடியே இவர்களை காணாமல் போய்விடுவார்கள்.

இங்கே நமக்கு அவசரம், அடித்தவர்களை பற்றி கவலை படாமல், போக்கவரத்து விதிகளையும் மதிக்காமல் நான் முந்தி நீ முந்தி என்று நடுநடுவே புகுந்து, யாருமே சரியாக போகமுடியாமல் நெரிசல் அதிகமாகி அவதிபட்டு, வாகனத்துடன் வாகனங்கள் மோதி, ஒருவரை ஒருவர் திட்டி, வேலைக்கு செல்வதை விட்டுவிட்டு வண்டியை ஓரம் கட்டிவிட்டி, சில பேர் சண்டையில் மிக வேகமாக இறங்கிவிடுவதுண்டு. அடிதடிக்கூட சில சமயம் நடக்கும். இப்படி நடக்கும் பல சமயங்களில், போலிஸ்காரர் பக்கத்தில் இருக்கிறாரா, இதை சரிசெய்ய மாட்டாரா என நான் தேடுவதுண்டு. ஒவ்வொரு முறையும் அவர்கள் பக்கத்தில் எங்காவது மரநிழலில் நின்று கொண்டு இங்கு நடப்பதை வேடிக்கை பார்த்து ரசித்தவாறு இருப்பார்களே அன்றி, வந்து தன் பணியை செய்ய மாட்டார்கள். அவர்கள் வாங்கும் சம்பளம் இது போன்ற மேல் அதிகாரிகள், VIP கள், அமைச்சர்கள் கார்களுக்கு வாலாட்ட மட்டுமே என்று தோன்றுகிறது. ஏதோ ஒரு சமுதாய நல்லெண்ணம் உடைய சிலர், தானாக முன்வந்து போக்குவரத்தை சரிசெய்து அனுப்புவார்கள். ஆனால் நாம் இருக்கிறோமே, அவர்களையும் திட்டுவோம், இவர் யாராடா நடுவில் நம்மை நிறுத்தி நிறுத்தி அனுப்பிகிறார், வேலைசெய்யும் போலிஸ்காரரே நம் சவுகரியத்துக்கு போகட்டும் என விட்டுவிட்டார், இவர் தான் நாட்டை சரி செய்பவர் போல் முன்னுக்கு வந்துவிட்டார் என வசவுபாடுவோம். நாமும் திருந்தமாட்டோம், திருந்தியவர்களையும், திருத்துபவர்களையும் விடமாட்டோம்.

இன்று காலை அடையார் பார்க்’ கிலிருந்து வெளியில் வரும் ஏதோ ஒரு அதிகாரியின் காருக்கு வாலாட்ட மட்டும், அங்கே 3 காவலர்கள், 2 போக்குவரத்து காவலர்கள். அடையார் பார்க் வெளி கதவு டி.டி.கே சாலையில், ரோடு வளையும் இடத்தில் உள்ளது. வளைவு திரும்பும் போது இவர்கள் தடாலென்று நடுவில் புகுந்து வாகனங்களை நிறுத்தினார்கள். அடையார் பார்க்'குக்கு சற்று அருகில், எதிர் புறமாக டி.டி.கே சாலையில் ஒரு பள்ளி உள்ளது. பள்ளிக்கு போகும் குழந்தைகள் ஆட்டோவில் வந்து கொண்டிருந்தனர். இவர்கள் நிறுத்தியவுடன், அதிகாரிகளின் கார்கள் சென்றிருந்தால் பரவாயில்லை. நிற்கிறோம் நிற்கிறோம் யாரும் வரவில்லை, என்ன ஹோட்டலை விட்டு கார்கள் வெளிவர அத்தனை நேரமா.. ?! இந்த ஆட்டோவில் இருந்த குழந்தைகள், பள்ளிக்கு நேரம் ஆகிவிட்டது என கத்த, அந்த பொறுப்பில்லாத ஆட்டோ டிரைவர், பக்கத்தில் தானே பள்ளி, "இறங்கி போங்கடா" என்றாரே பார்க்கலாம், சின்ன குழந்தைகள் ஆளுக்கொரு பக்கமாக வேக வேகமாக போக்குவரத்துக்கு நடுவில் இறங்கி குதித்து ஓட ஆரம்பிக்க, VIP களின் கார்கள் வாராததால் ஞானோதயம் அடைந்த போக்குவரத்து காவலர்கள், தீடீரென்று கைகாட்டி போக்குவரத்தை விட, இந்த நடுவில் இறங்கிய குழந்தைகள் நடு நடுவே சிக்கி தவிக்க ஆரம்பித்தன.. ஒரு 10 வாகனம் விட்டிருப்பார்கள், திரும்பவும், கை காட்டி நிறுத்தி விட்டார்கள். குழந்தைகள் பாவம் அங்கும் இங்கும் அல்லாடி, வாகனங்களையும் கடக்க முடியாமல், சாலையையும் கடக்க முடியாமல் கஷ்டப்பட்டன.

யார் எப்படி போனால் என அவர்கள் எதிரில் நடக்கும் குழப்பங்களை, அதுவும் ஒரு மனிதனின் உயிருடன் சம்பந்தப்பட்ட குழப்பங்களை கண்டும் காணாமல் இருக்கும் இவர்கள் எப்போது தான் சக மனிதர்களை மனிதர்களாக மதித்து திரும்பி பார்த்து தன் கடமைகளை செய்வார்களோ தெரியவில்லை.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிடீங்களா அம்மணி, ஏன் நீங்க வண்டிய ஓரங்கட்டிட்டு குழந்தைகளை ஸ்கூல்ல விட்டுட்டு வரவேண்டியது தானே..செய்தீங்களா.. செய்யல இல்ல.. அப்படிதான் அவரும்.. அவரவருக்கு அவரவர் வேல முக்கியம்..உங்களுக்கு உங்க வேல முக்கியம்.. சும்மா எல்லாத்துக்கும் சவுண்டு விடறதுல மட்டும் குறைச்சல் இல்ல. ஒன்னுத்துக்கு பிரயோசனம் இல்லாமா..... சவுண்ட குறைக்கற வழிய பாருங்க.... அப்புறம் நான் குறைக்க வைக்க வேண்டியாதா இருக்கும்..சொல்லிட்டேன்.. என்ன இன்னைக்கு முந்திரி பழம் வாங்கி வச்சிருக்கீங்களா?.. இனிமே கேக்கறது எல்லாம் கேக்கற டயத்துல இருக்கனும் சொல்லிட்டேன்..

பீட்டர் தாத்தா : A great pleasure in life is doing, what people say you cannot do.

அணில் குட்டி அனிதா வேறு வேலை தேடுகிறது...

வாங்க அக்காங்களா, தம்பிகளா.. வாங்க அண்ணன்களா தங்கச்சிங்களா.. கேளுங்க என் சோக கதைய.. இந்த அம்மணி கவிதா அவங்க முதல் பதிவுல என்ன சொல்லியிருக்காங்கன்னு கொஞ்சம் பார்த்துட்டு வாங்க.. அணில் குட்டிய ஏன் பிடிக்கும்ன்னு ஒரு சோக கதை இருக்குதுன்னு சொன்னாங்க.. நானும் ஏதாவது இண்டரிஸ்டிங்கா இருக்கும்னு நெனைச்சி அவங்கள என்ன ஏதுன்னு ஒரு கேள்வி க்கூட கேக்காம இந்த வேலையில சேர்ந்தேன்.. நேத்திக்கு அம்மணிக்கிட்ட கெஞ்சி கூத்தாடி அந்த கதைய கேட்டேன்ங்க.. கேட்ட பிறகு எடுத்த முடிவுதான்..இந்த புது வேலை தேடும் படலம்.. தாங்க முடியலங்க..

என்ன கதைன்னு கேக்கறீங்களா.. அம்மணிக்கு 8 வயசு இருக்கும்போது, என்னமாதிரி ஒரு அணில் குட்டி (பிறந்த குட்டி) இவங்களும் இவங்க அண்ணனும் சேர்ந்து எங்கேர்ந்தோ பிடிச்சிட்டு வந்து இருக்காங்க.. அம்மணி ரொம்ப அடம் பிடிச்சி இந்த அணில் குட்டிய நான் தான் வளர்பேன்னு அவங்க கிட்டேயே வச்சிக்கிட்டாங்க.. சரி ஆசைப்பட்டு கூட்டிட்டு வந்தாங்களே.. ஒழுங்கா பாத்துக்கிட்டாங்களான்னு பார்த்தா..அதான் இல்லை.. அந்த அணில் குட்டிய இம்ச பண்ணி இருக்காங்க..எப்படின்னு கேக்கறீங்களா.. சொல்லும் போதே எனக்கு அழுகை அழுகையா வருதுங்க.. ம்ம்ஹ்ம்ம்ம்ச்ச்ச்ச்ச்ச் (ஒன்னும் இல்ல மூக்கை சிந்திக்கிட்டேன்.. anybody..please give a kerchief ...!) அதுக்கு அனிதா ன்னு பேர் வச்சி, ஈர துணியால அது மூஞ்சிய தொடச்சி, பவுடர் போட்டு.. பொட்டு வச்சி.. அய்யோ..என்னா அக்கரமம் பாருங்க... நெசமாவே அந்த அணில் குட்டி பாவம்டா சாமீ..... அடுத்தது.. ஒரு பெரிய கப் நிறையா பால் கொண்டாந்து.. இங்க் பில்லரை வச்சி அது வாயா தொரந்து சகட்டு மேனிக்கு பால ஊத்தியிருக்காங்க... சாப்பாடு ஊட்டறாங்களாமா.. என்னடா அக்கரமம் இது...! அது மூச்சு முட்ட குடிச்ச பிறகாவது விட்டாங்களா.. அதுக்கு தனியா ஒரு குட்டி பெட் எல்லாம் தச்சி படுத்து தூங்க வச்சி இருக்காங்க.. பாவம் அது குட்டியினால இவங்க பண்ண கொடுமையெல்லாம் தாங்கி கிட்டு ஓட தெரியமா பொறுமையா இருந்து இருக்கு..

அதோட விட்டாங்களா.. தனியா டப்பாகுள்ள 2 நாள் வச்சி பாத்திருக்காங்க.. ஓவரா பாசம் பொங்கி 3 வது நாள், அம்மணி மதியம் தூங்க போகும் போது அணில கொஞ்சரேன் பேர் விழின்னு அதை பெட்’டோட இவங்க பக்கத்துல, பெட் ல படுக்க வச்சிட்டு, அத கொஞ்சரேன் ன்னு இம்சை பண்ணிட்டு தூங்கி போய்ட்டாங்க.. அம்மணி தூங்கறத சொல்லறதுன்னா தனி பதிவுதான் போடனும்.. ரூமையே ஒரு ரவுண்ட் அடிப்பாங்க.. அப்படி ஒரு அடக்கம்.. பெட்ல தூங்கனவங்க.. தூக்கதுல ரவுண்டு அடிக்கறேன்னு அந்த குட்டி பாப்பா அணில் குட்டி மேலயே..போய் உருண்டு படுத்தாட்டாங்க.. ஆஆஆஅங்க்க்.... ஆஆஅங்க்க்க்…. ஆஅயேஆஆ..ஒன்னும் இல்லலங்க திருப்பியும் அழறேன்.....இப்படி ஒரு கொடுமைய நீங்க எங்கையாவது கேட்டு இருக்கீங்களா?..

தூங்கி ஏன்ச்சி.. அனிது அனிது ன்னு தேடறாங்க.. எங்க அனிது.. பரலோகம் அனுப்பிட்டு கொஞ்சி கொஞ்சி கூப்பிட்டா வருமா அனிது...... அது கால கெளப்பிக்கிட்டு பல்ல துருத்திக்கிட்டு செத்து போய் கிடந்தது..... அம்மணிக்கு பாத்தவுடனே ஒரே அதிர்ச்சி.. அவங்க சவுண்டு தான் எல்லாருக்கும் தெரிஞ்சி இருக்குமே... என் அணில் அணில் வேணும்னு ன்னு ஓவரா சவுண்டு போட்டு அழ ஆரம்பிச்சிட்டாங்க.. யார் வந்தும் நிக்கல..3 - 4 நாள் அழுதுட்டு விட்டு இருக்கலாம் இல்ல.. இப்ப பாருங்க.. விடாம..என்னைய புடிச்சிட்டு வந்து இப்போ கொடும பண்றாங்க..

நான் வரலப்பா இந்த விளையாட்டுக்கு.... வாழ்க்கையில சம்பாதிக்கனும் தான் அதுக்காக..இப்படி என் உயிர இந்த அம்மணி க்கிட்ட பனையம் வச்சி எல்லாம் வேல செய்ய முடியாதுப்பா.. அப்பவாவது குட்டி பாப்பா வா இருந்தாங்க.. இப்போ இருக்கறதோ பீப்பா.....ஒன்னுகெடக்க ஒன்னு ஆகி....என்னால முடியாதுப்பா.. எப்ப இந்த கதைய கேட்டேனோ.. அப்பவே முடிவு பண்ணிட்டேன்..வேற வேல தேடி என்னோட life ஐ safe ஆ செட்டில் ஆக்கிகனும்னு....

யாராச்சும் பெரிய மனசு பண்ணி என்னோட கீழ்க்கண்ட புரொபைல பார்த்து வேல குடுங்கோ.. .

பெயர் :- அணில் குட்டி அனிதா

அனுபவம்: 4 மாதம் (கவிதா’வுடன் பிளாக் எழுதிய அனுபவம்)

பேச்சு திறன் : ஓவர் ஆ இருக்கு
(அருளையும், சந்தோஷயையும் கேளுங்க சொல்லுவாங்க)

எழுதும் திறன் :- அதுவும் ஓவர் ஆ இருக்கு
(ஸ்பெஷல் கவிதை எழுதறது..)

கண்டிஷன் :-
1. நல்லா பேசும் சுதந்திரம் வேணும், சும்மா இவங்க கிட்ட பேசாத, அவங்க கிட்ட பேசதா ன்னு சொல்லகூடாது. இத பேசாத அத பேசாதன்னு சொல்லகூடாது..
2. அடிக்க கூடாது
3. ஓவரா கொஞ்சவும் கூடாது
4. கொய்யா பழம் மட்டும் குடுத்து எஸ்கேப் ஆகக்கூடாது.. ஒரு முந்திரி பழம், பாதாம் பருப்பு, ஆப்பில், பேரீச்சம் பழம், பால்னு குடுத்து என் உடம்ப தேத்தனும்..(அம்மணி நம்மல அந்த மோசாமான ரேஞ்ல வச்சிருக்காங்க)

இந்த பதிப்புல No kavitha ..only peter தாத்தா..

பீட்டர் தாத்தா:- You may be disappointed if you FAIL, you are doomed, if your don’t TRY.

பார்வையற்றவர்களின் - பார்வையில்..

பார்வை என்பது எத்தனை அவசியம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. ஒரு நாள், சில மணி நேரம், இரவில் மின்சாரம் இல்லாவிட்டால், திண்டாடி போகிறோம். நிறைய வீடுகளில் மின்சாரம் போனவுடன் (எமர்ஜன்ஸி லைட் இல்லை என்றால்) வேறு விளக்கு ஏற்றுவதற்குள் பெரும்பாடாகிவிடும். குழந்தைகள் இருட்டில் பயந்து கத்த ஆரம்பித்துவிடுவார்கள், பல நாள் பழகிய வீட்டில் முட்டி மோதி நடப்போம்.. சிறிய விளக்கில் நம் வேலைகளை செய்ய சிரமப்படுவோம். எளிதாக மொட்டை மாடிக்கு சென்று நிலா வெளிச்சத்தில் நேரத்தை கழிக்கத்தான் நாம் விரும்புவோம்..

ஆனால், பார்வையற்றவர்கள்? அவர்களுக்கு தெரிந்த ஒன்று இருட்டுமட்டுமே..இந்த உலகமே அவர்களுக்கு ஒரே இருட்டுதான். இருட்டை தவிர வேறொன்றும் அறியாதவர்கள். அவர்கள் எப்படி இருக்கிறார்கள், என்ன நிறத்தில் உடை அணிந்திருக்கிறார்கள்.. பூக்கள், வானம், மழை, நிலவு, ஈ, எறும்பு, பாம்பு, பல்லி, ரஜனி, கமல், கைப்புள்ள,அணில் குட்டி என்று எதுவுமே தெரியாது.

என் அப்பாவின் சித்தி மகனுக்கு (எனக்கு சித்தப்பா’வாக வேண்டும்), எனக்கு தெரிந்து கண் தெரியாது. ஆனால் அவருக்கு கண் தெரிந்து கொண்டுதான் இருந்ததாம், கொஞ்சம் கொஞ்சமாக பார்வை குறைந்து தெரியாமலே போய்விட்டது. என் அப்பாவிடம் ஏன் அவரை டாக்டரிடம் காட்டி குணப்படுத்தவில்லை என்று கேட்டதற்கு, அவருடைய பார்வை நரம்புகளே செயலிழந்து போய்விட்டன அதனால் ஒன்றும் செய்ய முடியாது என்று டாக்டர்கள் கைவிரித்து விட்டதாக சொன்னார். இவர் அடிக்கடி எங்களது வீட்டுக்கு வருவார். இவருடன் சிறு வயதில் நிறைய நாள் நான் கழித்திருக்கிறேன். உச்சிக்கு வந்த சூரியனை நேராக பார்த்து காட்டுங்கள் என்று அடம்பிடித்து அவரை பார்க்க வைப்பேன். அவருக்கு கண்கள் கூசாது, நேராக சூரியனை பார்ப்பார். எனக்கு அது ஆச்சரியமாக இருக்கும், நான் பார்க்க முயற்சி செய்வேன்..முடியாது..

அவரால் முடிந்த எல்லா வேலைகளையும் செய்வார். எனக்கு மறக்கமுடியாதது, அவர் எப்போது கழிவரை சென்றாலும் (இந்தியன் மாடல்) தண்ணீர் ஊற்றிவிட்டு என்னை அழைத்து சரியாக பேசீனில் தண்ணீர் ஊற்றியிருக்கிறாரா என்று பார்க்க சொல்வார், சில சமையங்களில் சரியாக இல்லையென்றால், சித்தப்பா நான் ஊற்றுகிறேன் என்று சொன்னால் விடமாட்டார், இல்லை, நீ இங்கேயே இரு, என்று தண்ணீர் பிடித்து பிடித்து ஊற்றுவார், நான் சரியாக இருக்கிறது என்று சொல்லும் வரை விடமாட்டார். இப்படிப்பட்ட சமயங்களில் கண் தெரியாமால் அவர் சிரமபடுவதை பார்க்க மிகவும் வேதனையாக நான் உணர்ந்து இருக்கிறேன்.

இறந்த பின் மண்ணுக்கு போகும்/எரிந்து போகும் உடலுடன் நம் கண்களும் வீணாகத்தான் போகப்போகிறது.. ஒவ்வொருவரும் அதை வீணாக்காமல் கண்தானம் செய்தால் எத்தனை பேர் இந்த உலகத்தை நம் கண்களால் பார்ப்பார்கள். இறந்தபின் கண்ணை எடுத்துவிட்டால் முகம் அசிங்கமாகி போகும் என உறவினர்கள் அதை செய்ய விடுவதில்லை. ஆனால் கண் எடுத்தவுடன், அதை எடுத்தது தெரியாமல் தான் தைத்து அனுப்புகிறார்கள். இதில் இன்னுமொரு விஷயம், நாம் கண் தானம் செய்து இருந்தாலும், நாம் இறந்தவுடன் நம் உறவினர்கள் அதை சில மணி நேரங்களுக்குள் சொல்லி, கண்களை தானம் செய்ய வேண்டும். இங்கு கவனிக்க வேண்டியது, நம் துக்கத்தை அடுத்து வைத்து தான் இதை செய்ய வேண்டும் என்பதே.

தயவுசெய்து கண்தானம் செய்யுங்கள்..நம் கண்களால் யாரோ ஒருவர் இவ்வுலகை பார்க்கட்டுமே...

அணில் குட்டி அணிதா :- ஆங்..இதோடா.. கிளம்பிட்டாங்கய்யா... ஒரு வாரத்துக்கு முன்னாடி.. வூட்டாண்டா உள்ள பைபாஸ் ரோட்ல.. இராத்திரி ஒரு 8 மணி இருக்கும் போய்கிட்டு இருந்தாங்க.. பகல்லையே அம்மணிக்கு பசுமாடு தெரியாது (சோடா புட்டி) இராத்திரியில கேக்கவா வேணும், நிஜமாவே ஒரு பசுமாடு எதுதாப்பல வந்து நிக்குது..அம்மணி அது கிட்ட போற வரைக்கும் கவனிக்கல.. அத டச் பண்ற நேரத்துல..பின்னாடி உட்கார்ந்திருந்த இவங்க பையன்..அம்மா......!. மாடுமா....! வண்டிய நிறுத்து ..என சவுண்டு விட்டுட்டு, கிரேட் ஜம்ப் பண்ணிட்டான்.. அம்மணி தட்டு தடுமாறி வண்டிய சைடு வாங்கி மாட்டு மேல மோதாம எஸ்கேப் ஆய்ட்டாங்க.. பையன் வுடலியே..”அம்மா சாவறது நீ சாவு என்னையும் ஏன் சேத்து சாவடிக்க பாக்கறன்னு..” அம்மணிய டோஸ் விட்டுகிட்டு இருந்தான்.. இதுக்கு அப்புறமா தான் அம்மணிக்கு இந்த ஐடியா வந்திருக்கனும்..

அம்மணி.. சூப்பர் ஐடியா..!!. உங்களுக்கு இப்பவே சரியா கண்ணு தெரியலயே..உங்க ஒன்னு விட்ட 2 விட்ட சித்தப்பா மாதிரி ஏதாவது ஆயிடுத்துன்னா என்னா பண்றதுன்னு இப்பவே அடிப்போட்டு வைக்கறீங்களா?! பாத்துக்கோங்க பா.. கண் தானம் செய்ய சொன்னது..ஊருக்கு இல்ல.. வருங்காலத்துல தேவைபடுமோன்னு இப்பவே சொல்லிவைக்கறாங்க.. நேரக் கொடுமைடா இது எல்லாம்

குறிப்பு :- நம்ம கவிதா பிளாக்’க்கு புதுசா ஒருத்தர் அறிமுகம் ஆகிறார்.. அவரு பேரு பீட்டர் தாத்தா - பீட்டர் இங்கிலீஷ்ல தத்துவம் எல்லாம் உங்களுக்கு சொல்லுவார். இன்னையிலிருந்து பீட்டர் தாத்தாவின் தத்துவம் ஆரம்பம்...என்னை மாதிரி , கவிதா மாதிரி யார் கூடேயும் பேச மாட்டார். No interactions. இவர் only for தத்துவம்..தாத்தா ரெடி..ஸ்டார்ட்...

தாத்தாவின் தத்துவம்:- “Don’t sit back and take what comes.. go after what you want”

இறந்தால் தான் மரணமா?

இறந்தபின் தான் மரணம்..
இருக்கும் போதே இறந்தால்...

இதயத்தை குத்தி கிழிக்கும் பேச்சில்
செவிடாய் போன காதுகளும்

எடுத்தெறியும் பார்வையில்
குருடாய் போன கண்களும்

எச்சில் துப்பும் வார்த்தையில்
ஊமையாய் போன வாயும்,

வேற்கூரின் வாசங்களும் மறந்து
தொண்டைக்குழிக்குள் இறங்கும் சோறும்

சொரணையற்ற உடம்பை மூட
பிச்சை(என) போட்ட துணியும்

மனமென்னும் பட்டறையில்
பூட்டிவைத்த துயரங்களுடன்

விழிகளை மட்டுமே அசைத்து
மெளனத்தை மட்டுமே சுவாசித்து

மனிதர்களுடன் மனிதர்களாய்
உலவிதான் வருகிறார்கள்..

இந்த...............

மரத்துப்போன இதயங்கொண்ட ....
மரணத்தைவென்ற மனிதரகளும்...


அணில் குட்டி அனிதா:- அம்மணி நல்ல வேள..நான் என்னவோ நீங்க “மரணம்” பற்றி எழுத போறேன்னு சொன்னவுடனே.. வீட்டுல யாரையாவது போட்டு தள்ளிட்டு (அதான் இப்ப சர்வ சாதாரணமா நடுக்குதே, பொம்பளைங்க கிட்ட ஆம்பளைங்க எல்லாம் உஷாரா இருங்கப்பா....அம்மணிங்க எல்லாம் இப்ப சூப்பரா போட்டு தள்ள ஆரம்பிச்சிட்டாங்க..! அவ்ளோதான் நான் சொல்லுவேன்...............அப்புறம் ரிஸ்க் எடுக்கறது உங்க இஷ்டம்) அதை கருவா வச்சி, எழுதபோறீங்கன்னு.. ம்ம்.. என்னவோ.. ..உங்க வீட்டுல இருக்கறவங்களுக்கு ஆயுள் கெட்டிதான்..

வாரமலர் படிப்பவரின் தரம் எப்படி இருக்கும் ?

பொதுவாக நாம் மனிதர்களை எதை வைத்து மதிப்பிடுகிறோம். அவர்களின், படிப்பு, பணம், குணம், தோற்றம், பழக்க வழக்கங்கள் என சொல்லி கொண்டே போகலாம். சமீபத்தில் எனக்கு கிடைத்த அனுபவம், படிக்கும் பத்திரிக்கை, புத்தங்ககளை கொண்டு மனிதர்களை எடை போடுகிறோம் என்பதே. எனக்கு ஒன்று புரியவில்லை, The Hindu, Economic Times, Indian Express மற்றும் பல ஆங்கில தின பத்திரிக்கைகள் படிப்பவர்களை மிகுந்த தரம் உடையவர்கள், உயர்ந்தவர்கள் என்றும், தினமலர், வாரமலர், தினதந்தி மற்றும் பல தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்களை தரக்குறைவாகவும், தாழ்வாகவும் நினைக்கும் பண்பு நம்மில் உள்ளது.

கன்னிதீவு (சிந்துபாத்) என்ற ஒரு பட கதை தினப்பத்திரிக்கையில் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகிறது.. அதை தொடர்ந்து சிறுவயதிலிருந்து படித்து வந்த என்னுடைய கணவர், நடுவில் பல காரணங்களால் படிப்பதை விட்டுவிட்டார். இப்போது சிந்துபாத் என்ற தொடர் சன் டீவி யில் ஒளிபரப்பபடுகிறது. அதனை விடாமல் உட்கார்ந்து ரசித்து பார்க்கிறார். அவர் தமிழ் பத்திரிக்கை படித்ததற்காகவும், இத்தனை வயதுக்கு பிறகு தான் படித்த கதையின் தொடர்ச்சியை ஆர்வத்துடன், டிவியில் பார்க்கிறாரே என்று தாழ்வாக எடைபோடுவதா, இல்லை அவர் The Hindu, Business Line, Management weekly, monthly books படிக்கிறாரே அதனால் அவரை தரம் உடையவராகவும், உயர்ந்தவராகவும் நினைப்பதா.? படிப்பதை வைத்து ஒருவரின் தரத்தையும், குணத்தையும் எப்படி ஊகிப்பது. அது சரிதானா?

வாரமலர் ஒருவர் படிக்கிறார் என்பதால் மட்டுமே அவர் இப்படி பட்டவர் தான் என நாம் முடிவுக்கு வந்து விட முடியுமா?! இல்லை இவர் ஹிந்து பத்திரிக்கை படிக்கிறார் இவரின் தகுதி மிக உயர்ந்தது என முடிவுடன் இருக்கலாமா?. பள்ளியிலும், கல்லூரியிலும் குழந்தைகளுக்கு பாடம் எடுக்கும் ஆசிரியர்கள் பெண் குழந்தைகளிடம் தவறாக நடந்து கொள்வது எல்லோரும் அறிவர். மெத்த படித்தவர்கள் ஆசிரியர்கள், அவர்களையே இவர் நல்லவர்/கெட்டவர் என்பதை அவரின் இயல்பான குணம் வெளிபடும் போது தான் தெரிந்து கொள்ளமுடிகிறது.

நுனி நாக்கில் ஆங்கிலம் பேசி, பெண்களை ஏமாற்றும் எத்தனை ஆண்கள் நம்மிடையே உண்டு அதே போல் ஆங்கிலத்தில் பேசி ஆண்களை இழிவு செய்யும் எத்தனை பெண்கள் நம்மிடையே உண்டு. என் நண்பர்கள் சிலர் ஒரே மாதிரி பட்ட படிப்பு படித்தவர்கள். அதில் ஒருவர் IIT யிலிருந்து வந்தவர், IIT என்றாலே அதனுடைய தரம் நமக்கு தெரியும். அந்த தரத்தை அந்த நண்பரிடம் பார்க்கலாம். மற்றவர் சாதாரண கல்லூரியிலிருந்து வந்தவர். இவர்கள் இருவரும் ஒருமுறை ஏதற்கோ விவாதம் செய்திருப்பார்கள் போலிருக்கிறது, இந்த IIT-நண்பர் என்னிடம்”பாரு, ரிக்க்ஷாகாரன் மாதிரி பேசுகிறான் அவன், ஒரு என்ஜினியர் மாதிரியா பேசுகிறான்” என்றார். அவரோ “இவர் IIT பந்தாவெல்லாம் நம்ம கிட்ட காட்டறார்..நாங்க ரிக்க்ஷாகாராங்களாவே இருக்கிறோம், ஆனா இவனாட்டம் திருட்டுதனமா பண்றோம்” என்றார்.

மெத்தபடித்தவர்களும், ஆங்கலத்தில் அளப்பவர்களும், ஆங்கில பத்திரிக்கைகள் படிப்பவர்களும் நல்லவர்கள், உயர்ந்தவர்கள் என சொல்லிவிட முடியாது, தமிழில் பேசி, தமிழ் பத்திரிக்கைகள் படிப்பவர்கள் தாழ்ந்தவர்கள், தகுதியில்லாதவர்கள் என சொல்லிவிட முடியாது.

மனிதர்களின் நற்குணம் ஒன்றே அவர்களை யாரென்று சொல்லும். அதை அறிந்து மனிதர்களின் தரத்தை உணர நாம் முயற்சிக்க வேண்டும்.

அணில் குட்டி அனிதா: அம்மனி நீங்க நல்லவங்களா.. கெட்டவங்களா? உயர்ந்தவங்களா, தாழ்ந்தவங்களா.. எப்ப பார்த்தாலும் தப்பு தப்பா பீட்டர் English ல பேசறீங்களே.. அதான் சரியா என்னால உங்கள judge பண்ணமுடியல... தமிழ் மட்டும் என்னா?.. ஆற்றலரசி அக்கா பொன்ஸ்’ ஐ கேட்டா தெரியும் நீங்க தமிழ்ல எவ்ளோ..தப்பு பண்றீங்கன்னு... இப்படி 2 மே உங்களுக்கு சரியா வரலியே..உங்கள எதுல சேக்கறது..... இதுல என்ன மேட்டர் னா அம்மனி தமிழும் தெரியாம.. English ம் தெரியாமா.. எல்லாம் தெரிஞ்சமாதிரி உங்ககிட்ட எல்லாம் சீன் போடறாங்க பாருங்க அதுதாங்க.... அதுதாங்க என்னால தாங்கவே முடியல.....

(ஒரு ரகசியம்-அம்மனி அவங்க friend அ நக்கலா “ஓ வாரமலர் படிக்கறீங்களா?..ன்னு கேட்டாங்க..அவரு ..டென்ஷன் ஆகி வுட்ட சவுண்டுல தான்..இப்படி பதிவு போட்டு இருக்காங்க...அம்மனி காதுல இருந்து ரத்தம் வர அளவுக்கு அவரு சவுண்டு வுட்டாருன்னா பார்த்துகோங்க..)

வாழ்க்கையை இழந்து வரும் - இன்றைய மங்கைகள்

எங்களுடைய அலுவலக செக்யூரிட்டி சில நேரங்களில் பொழுது போகாமல் இருக்கும் போது பேப்பர் பேணா வைத்துக்கொண்டு கோலம் போடுவதை பார்த்திருக்கிறேன். அவரின் திறமை எனக்கு ஆச்சரியமாக இருந்தது, மிக நேர்த்தியாக, தெளிவாக, அழகாக போடுகிறார். அவரை பாராட்டி, அவரிடம் எங்களது வீட்டில் வாங்கும் பெண்கள் பத்திரிக்கையை கொண்டுவந்து கோல ப்போட்டி இருக்கு முயற்சி செய்து பாருங்கள் என்று கொடுத்தேன். இது பழக்கமாகி, 2 புத்தகங்கள் நான் கொடுப்பேன், படித்துவிட்டு அவர் திரும்ப கொடுத்தவுடன் திரும்பவும் 2 புத்தகங்கள் எடுத்து வருவேன்.

நேற்று அவரிடம் உங்கள் மனைவி க்கூட இதை படிக்கிறார்களா? என்று கேட்டதற்கு.. தயக்கத்தோடு “இல்லைங்க” என்று சிரித்து சென்றவர், திரும்பி வந்து, மேடம், என் மனைவிக்கு இந்த புத்தங்களை நான் படிக்க கொடுக்கவில்லை என்பதே உண்மை, ஏன்னா இந்த மாதிரி புத்தகங்கள் படித்தால் என்னை அவர் மதிக்காமல் போய் விடுவார், பெண் சுதந்திரம் என்று பேச ஆரம்பிப்பார் அதனால் படிக்காமல் இருப்பதே நல்லது என்று நினைக்கிறேன் என்றார்.

ஒரு பெண் புத்தகங்கள் படிப்பதின் மூலம் அறிவை வளர்த்துக்கொள்வது மட்டும் இல்லை, அதையும் தாண்டி, தன்னால் தனியாக இருக்க முடியும், ஆணை விட தான் எந்த விதத்திலும் குறைச்சல் இல்லை, இருவரும் சமம் போன்ற சிந்தனையும் கூடவே வளர்ந்துவிடுகிறது. அதில் என்ன தவறு என்று விதண்டாவாதம் செய்ய தயாராக இல்லை, மேலும் ஆணும் பெண்ணும் எந்த சமயத்திலும் சரிசமமாக இருக்க வாய்பில்லை. இது அறிவியல் சார்ந்த உண்மை. :)

அவருடைய சொந்த வாழ்க்கை, தன் மனைவி எப்படி இருந்தால் தன் வாழ்க்கைக்கும் தன் குழந்தைகள் வாழ்க்கைக்கும் நல்லது என்பதில் தெளிவாக இருக்கிறார், இது ஆணாதிக்கம் என நினைப்பவர்கள் நினைத்துக்கொண்டு போகட்டுமே, அதனால் அவருக்கும் என்ன நஷ்டம் அல்லது லாபம் இருந்துவிட போகிறது. எனக்கு அவர் சொல்லியதில் எந்த தவறும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொரு ஆணும் தன் குடும்பம் அமைதியாக இருப்பது தன் மனைவியின் கையில் இருக்கிறது என்று நினைக்கிறார்காள், தன் மேல் இல்லாத ஒரு நம்பிக்கை தன் மனைவி மேல் வைத்திருக்கிறார்கள் என்பது பெண்களுக்கு பெருமை தானே.. நம்முடைய சென்னை விவாகரத்து நீதிமன்றத்தில் ஒரு வருடத்தில் திருமணமுறிவுக்காக 2000 வழக்குகள் வந்துள்ளன. அதிலும் எல்லாமே காதல் திருமணம் மட்டுமன்றி, அவை திருமணம் ஆன 6 மாதங்களுக்குள் கொடுக்கப்பட்ட வழக்ககுகள் என்பது ஆச்சரியமான அதிர்ச்சியான விஷயம். பெண்கள் இழந்தும், மறந்தும் வருவன

  • ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளதல்
  • விட்டுகொடுத்தலை மறந்துபோனது
  • பொறுமையின்மை
  • அதிகமான படிப்பும் அதனால் வாழ்க்கையை புரிந்து கொள்ளும் விதமும்
  • ஆணுக்கு நிகரான வருமானம் அதனால் ஏற்படும் கர்வம்
  • ஆணுக்கு நிகர் பெண் என்ற தேவையில்லாத சிந்தனை
  • தங்களுது வாழ்க்கையை படிப்போடும், பணத்தோடும் ஒப்பிடும் சிந்தனை.
  • தனது சம்பாத்தியம் தனக்கு சந்தோஷமான வாழ்க்கையை கொடுக்கும் என்ற நம்பிக்கை.
  • வளர்ப்பு முறையில் ஏற்பட்ட மாற்றம்
  • கலாச்சார மாற்றங்களினால் தங்களின் நிலை மறந்த சிந்தனை.

பெண்கள் புரிதலில் தவறு செய்கிறார்கள், ஒரு பெண் எதை செய்ய வேண்டும் எதை செய்ய கூடாது என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். நம் பாட்டி, அம்மா எதை சாதிக்கவில்லை நாம் சாதிக்காமல் போக.?. நல்ல குடும்பத்தை அவர்களால் கொடுக்க முடிந்தது, நல்ல முறையில் குழந்தைகளை வளர்க்க முடிந்தது.அவர்கள் வேலைக்கு செல்லவில்லை பொருள் ஈட்டவில்லை தவிர, ஏதாவது குறை வைத்தார்களா?. வெளி உலகமே தெரியாதவர்கள், ஆனால் வீட்டின் நிம்மதி கெட்டுபோனதா? இல்லையே..! இப்போது நம்மால் நம் பிள்ளைகளை சரியாக வளர்க்க முடிகிறதா?. வேலைக்கு செல்கிறோம் என்பதால் என்ன தலையில் 2 கொம்பு முளைத்து விடுகிறதா ?. பொருள் ஈட்டுகிறோம் என்பதால் என்ன நமக்கு வால் முளைத்து விடுகிறதா? இல்லையே.. வீடு மற்றும் வேலையை சரிவர செய்யமுடியாமையை இயலாமை என்று எடுத்து கொள்ளவேண்டுமே தவிர ஆண்களின் மேல் குறை சொல்லுவதும், பெண் உரிமை பேசி நம் வாழ்க்கையை நாமே கெடுத்து கொள்வதும் தான் நடக்கிறது.

பெண்கள் வளர்ப்பு முறையில் பெரும் பங்கு எடுப்பது பெற்றோர். சிறு குழந்தையிலிருந்தே நம் குடும்ப அமைப்பையும் அதன் பலத்தையும் சொல்லி சொல்லி ஆண், பெண் இருவரையுமே வளர்க்கவேண்டும். ஒரு பெண்ணால் மட்டுமே நல்ல குடும்பத்தை ஆக்கவும் முடியம் அழிக்கவும் முடியம். நம்முடை படிப்பும், வேலையும் நம்மின் பொறுமையையும் நிதானத்தையும் அதிக படுத்த வேண்டுமே தவிர குறைக்கக்கூடாது. என்னுடைய
ஆண்களின் நிழலில் பதிவில் சொன்னது போன்று ஒரு சிறிய குடும்பத்தை, கணவனை கட்டிக்காக்க முடியாத ஒரு பெண்ணால் எப்படி வெளி உலகத்தில் சாதிக்க முடியம். அப்படி அவர்கள் எதையாவது சாதித்தால் அது சாதனையாகாது. குடும்பம் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லவில்லை ஆனால் குடும்ப அமைப்பை முறிப்பது பெண்கள் கையில் அதிகமாகிவருகிறது. அதற்கு முக்கிய காரணம் அவர்களின் படிப்பும் , சம்பாதியமும் என்றால் அதை சரியான முறையில் செயற்படுத்த பெண்கள் முயற்சிக்க வேண்டும்.

அதிக படிப்பினாலும், அதிக சம்பளத்தாலும் பெண்கள் அவர்களின் இயல்பையும் அவர்களின் வாழ்க்கையையும் கொஞ்சம் கொஞ்சமாக இழந்துவருவது என்னவோ உண்மை, உணர்வார்களா?!!

அணில் குட்டி அனிதா:- அடடடடாடாடா டா?!! உபதேசம் ஆரம்பிச்சாச்சிடோய்..! நாட்டுல 2 மாசம் எல்லாரும் நிம்மதியா இருந்து இருப்பாங்க.. அம்மணி. “கஜினி “ சூர்யா ரேஞ்சுக்கு அவங்கல பத்தி மறந்து......ஸ்டார்ட் பண்ணிட்டாங்கடோய்... இவங்களே வூட்டல யாருக்கும் அடங்கறது இல்ல..வேலைக்கு போற திமுரு மட்டுமா... சம்பாதிக்கறோம்னு திமுறுல.. அவங்க ஆடற ஆட்டத்த நாங்க இல்ல தினமும் பாக்கறோம். பாவம்ப்பா அவங்க வூட்டுகாரரும், பையனும், இந்த அம்மணிக்கிட்ட ஒன்னும் முடியாம ......”why blood...! same blood..!, you start..... we close nnu” கம் போட்டு ஒட்ட வச்ச மாதிரி வாய தொறக்கறதே இல்ல. பாவம் ரொம்ப நல்லவங்க..... அம்மணி உண்மைக்கு எதிரா எழுதறத தாங்கமுடியாம புலம்பறேங்க.. நீங்களும் என்கூட join பண்ணிக்கறீங்களா?..

தாத்ஸ் நீங்க பீட்டர எடுத்து..சொல்லுங்க...........

பீட்டர் தாத்ஸ் :-

  • Success doesn’t come to you, you go to it.
  • In the middle of difficulty lies opportunity.

மறக்கமுடியாத அடி'களில் - ஆறு

குறிப்பு:- அணில் குட்டியை யாருமே ஆறு விளையாட்டுக்கு அழைக்கவில்லை, என்னை மட்டும் அழைச்சிருக்காங்க. அதனால் முன்பை போல என்னை அழைக்கவில்லை என்று ஆட்டம் போடுமோ என்று பயந்து, அணிலுடன் ஆலோசனை செய்து அது விருப்பத்திற்கு இணங்க, அணிலோட language ல இந்த பதிப்பை எழுதியுள்ளேன்.

ஆறு விளையாட்டுக்கு, என்னை எங்க வீட்டில எப்படியெல்லாம் நல்லவிதமா அவங்களால முடிஞ்ச அளவிற்கு கவனிச்சிருக்காங்கன்னு சொல்றேன். ரொம்ப வருஷமா துக்கத்தை மனசுலியே வச்சிருக்கேன். உங்ககிட்ட சொல்லும் போது துக்கம் தொண்டைய விட்டு இறங்கி வந்துடும் இல்லையா?.. சாதாரணமா பெண் குழந்தைகளை வீட்டுல அடிக்க மாட்டாங்க. அதுவும் நான் குலவிளக்கு, புரியலயா..என் அப்பாவுடன் பிறந்தவர்கள் இருவர், இருவருக்கும் பெண் குழந்தை இல்லை. அதனால் நான் தான் எங்கள் வீட்டு குலவிளக்கு. ஆனா எங்க வீட்டுல அதிகமா கவனிக்க பட்டதும் நான் தான். அதுவும் உங்க வீட்டு கவனிப்பு, எங்க வீட்டு கவனிப்பு இல்லைங்க, இப்படி பதிவு போடற அளவுக்கு கவனிச்சிருக்காங்கன்னா பார்த்துக்கோங்க.

எங்க வீட்டுல என்னை நன்றாக கவனித்தவர்கள், என் ஆயா(பாட்டி), தாத்தா, அப்பா, உடன் பிறந்த அண்ணன்கள் இருவர் (பெரிய அண்ணன், சின்ன அண்ணன்), கடைசியா என் பையன். பையன் கூட விளையாடிடான்னு ஆச்சிரிய படாதீங்க, பொறுமையா படிங்க..

1. ஆயா (இது ரொம்ப special.) பொதுவாக எங்களது வீட்டில் கட்டுபாடு அதிகம், வெளி ஆட்கள் வரும் போது, அவர்களை “வாங்க” என்று சொல்லிவிட்டு, முன் நிற்காமல் உள்ளே சென்று விட வேண்டும். அவர்கள் திரும்பி செல்லும் வரை வெளியில் வரக்கூடாது. 12 வயது இருக்கும், யாரோ தெரிந்தவர்கள் வந்திருந்தார்கள், நான் வெளியில் ஈசி சேரில் சாய்ந்து படுத்து கொண்டு கதை புத்தகம் படித்து கொண்டு இருந்தேன். வந்தவர்களை கவனிக்கவே இல்லை..என் ஆயா வெளியில் வந்தவர்கள் என்னை பார்த்து, வந்தவங்கள வா’ ன்னு சொன்னியான்னு கேட்டாங்க.. நான் கதை படிக்கற ஆர்வத்துல சீட்ட விட்டு எழாமல்,(மரியாதை இல்லையாமா?) “இல்ல அதான் புக் படிக்கறேன் இல்லை” என்றேன். அதக்கூட பரவாயில்லை உள்ளேயாவது போயிருக்கலாம் இல்ல..அதுவும் செய்யல. என் ஆயா..இரண்டு, மூன்று முறை கண்ணால் சாடை செய்து உள்ளே போக சொன்னார்கள். என்னவோ எனக்கு நேரம் சரியில்லைங்க.. அன்னிக்குன்னு பார்த்து, எனக்கு என்னதான் செய்யறாங்க பார்க்கலாம் என்று கவனிக்காத மாதிரி உட்கார்ந்திருந்தேன்.

விருந்தாளி வீட்டை விட்டு போனது தான், அங்கிருந்த பூந்தொடப்பத்தை எடுத்து, பின்புறமா திருப்பி வச்சி விலாசிட்டாங்க விலாசி.. விலாசும் போது, திட்டு வேற..மரியாத கொஞ்சம் கூட இல்லாம, சேரை விட்டு எந்திரிக்காம, வயசுக்கு வர போற பொண்ணு, இப்படி வரவன், போரவன் எதுக்க வந்து நிக்கலாமான்னு..ஆஹா..என்ன வலி ..நமக்கு வேற அழவே தெரியாதா.. வாய தொரந்தா போதுமே..ஒரு 7 , 8 கிமீ சத்தம் கேக்கற அளவுக்கு இல்ல கவர் பண்ணி அழுவோம். எப்படியோ நம்ம சவுண்டால அவங்க இவங்கன்னு பஞ்சாயத்து பண்ண கூப்பிட்டா எல்லாரும் நான் என்னவோ கொலை குத்தம் பண்ண மாதிரி, ஆயாவை இன்னமும் ஏத்தி விட்டு அடிவாங்க வைச்சாங்க.. எனக்கா தொடப்பதால அடிச்சிட்டாங்களேன்னு ஒரே அவமானம் வேற... அழும் போதே நடு நடுவே.. அடி..அடி.. இன்னைக்கு நான் தொடப்பத்தால அடி வாங்கினா நாளைக்கு பெரிய பணக்காரியா ஆவேன்னு டயலாக் வேற..
(யாரோ எப்போதோ சொன்னது..செருப்பாலும், தொடப்பதாலும் அடி வாங்கினா பணக்காரா ஆவங்களாம்)

2. தாத்தா.. :- 10 வயது இருக்கும், மதில் சுவர் அருகில் (மாடியில்) ஒரு காலில் (style லு மா style) நின்று கொண்டு நோட்டு புத்தகத்தை புரட்டி பார்த்து,(ஒரே நோட்டில்) மற்றொரு பக்கத்தில் எழுதிகொண்டு இருந்தேன். அந்த பக்கம் போன என் ஆயா, நிற்காமல் , உட்கார்ந்து படி என்றார்கள். நான் பதில் ஒன்றும் சொல்லாமல் திமிரா ஒரு லுக் விட்டுட்டு எழுதி கொண்டே இருந்தேன். தாத்தா கொஞ்சம் தூரத்தில் நாற்காலியில் உட்கார்ந்து சுருட்டு பிடித்து கொண்டு இருந்தார். வில்லி (அதான் என் ஆயா) திருப்பி என்னை கடக்கும் போது இன்னொரு முறை சொன்னார்கள். நமக்குதான் அடி வாங்கனும்னு முடிவாயாச்சே..வாய் சும்மா இருக்குமா.. “ஆயா சும்மா உன் வேல என்னாவோ அத மட்டும் பாரு ஏன் என்னையே கவனிக்கற..போ..” அவ்வளவு தாங்க.. அவங்க வூட்டுகாருக்கு (அதான் என் தாத்தா) கோவம் வந்துடுத்து. என் கிட்ட பொருமையா வந்து பாப்பா, சட்டைய கழட்டு, அப்படின்னாரு.. அடடா..பாசமா ஏதோ தாத்தா சொல்லாறேன்னு கழட்டன அடுத்த நிமிஷம் இடி மாதிரி அடிங்க.. முதுகுல விழுந்தது.. 5 விரலும் பதிந்து போச்சு.. கால் தரையில நிக்கல.. வலியில குதிக்க ஆரம்பிச்சிட்டேன்.. நம்ம சவுண்டு எட்டு திக்கும் பரவ.. எல்லாரும் தாத்தாவின் கோவத்துக்கு பயந்து பேசாமல் நான் குதிப்பதை ரசிக்க.. நம்ம வாய் எப்பவும் போல சும்மா இருக்குமா.. இருங்க எங்க அப்பா வரட்டும் உங்க 2 பேரையும் என் முதுகை காட்டி மாட்டி விடறேன்னு சொன்னதுதான்..தப்பு பண்ணது இல்லாம..அத அப்பங்கிட்ட சொல்றேன் ஆத்தாகிட்ட சொல்றேன் வேற..எதுத்து பேசறையான்னு ..அதே இடத்தில இன்னும் 5 , 6 சகட்டு மேனிக்கு கிடைச்சுது.. வில்லி தான் கடைசில வந்து வில்லன் கிட்ட இருந்து காப்பாதினாங்க..

இதுல என்ன high light னா.. பொம்பல பிள்ளைய கண்ட இடத்துல அடிச்சி காயப்படுத்த கூடாதாம்மா.. அதனாலதான் சட்டைய கழட்ட வச்சி பிண்னி எடுத்தாங்களாம்மா.. என்ன நல்ல எண்ணம் பாருங்க.....வீங்கின முதுக சரி பண்ண 3 நாளாச்சுங்க..

3. அப்பா:- அப்பா ரொம்ப அமைதி, கோவமே வராது.. அவர் கிட்ட அடிவாங்கன முதல் ஆள் நானாத்தான் இருப்பேன். இதுவும் ஒன்னும் பெரிய விஷயம் இல்லைங்க. வீட்டுல எல்லாரும் வெளியில போயிருந்தாங்க.. நாம தனியாத்தானே இருக்கோம்..கொஞ்சம் விசில் அடிச்சி (தேவையில்லா தான் என்ன செய்ய , ஒரு ஆர்வ கோளாறு தான்) பழகலாம்னு..விசில் அடிச்சி பழகிட்டு இருந்தேன்.. அப்பா பின்னாடி வந்தத கவனிக்கல.. என் விசில் practice ஐ கேட்டு டென்ஷன் ஆயிட்டாரு போல.. தலையில நல்லா கட்டைவிரல மடக்கி வச்சு“நறுக்குன்னு” ஒரு ஸ்டார்ங் கொட்டு.. அய்யோ.. யம்மா..தல ஒரு இன்ச் உள்ள போய்ட்டு வந்த மாதிரி ஒரு feeling. அழுக எல்லாம் வரவே இல்ல.. ஏன்னா நம்ம சீன் போட்டா கவனிக்க யாராவது வேணுமே.. வீட்டிலேயும் யாரும் இல்ல..அடிச்சிட்டு இவரும் ஒன்னுமே பேசல.. அவரு பாட்டுக்கும் போயிட்டாரு.. எனக்கோ.. என்னடா நாம பெத்த புள்ளைய இப்படி கொட்டினோமே.. அது தல இருக்கா..இல்லை உடம்புகுள்ள போச்சான்னு பாக்காம.. அவரு பாட்டுக்கு போயிட்டாரேன்னு தான் கவல (இந்த விஷயத்தை அவரும் யார் கிட்டேயும் சொல்லல நானும் யார் கிட்டேயும் சொல்லல). ம்ம் இப்படி ஒரு கொட்டு வாங்கின பிறகும் நான் விசில் அடிக்கறத நிறுத்தி இருப்பேன்னு நீங்க நெனச்சா அது உங்க தப்பு.. இப்பவுமே விசில் சரியா அடிக்க வரலைன்னு எனக்கு வருத்தம் தான்...

4. பெரிய அண்ணன் :- ஒரு நாள் ஆயாவோட காசு பைல இருந்து யாருக்கும் தெரியாம காசு எடுக்கும் போது பார்த்துட்டேன். நாம தான் ஹானஸ்டுராஜி ஆச்சே சும்மா இருப்போமா.. அண்ணனை பார்த்து இரு இரு ஆயாகிட்ட சொல்றேன்ன்னு சொன்னேன். அண்ணனோ வேணா, பாப்பா (நானே தான்) உனக்கு வேண்ணா முட்டாய் வாங்கி தரேன்னு சொன்னாங்க. நாம இந்த லஞ்சத்துக்கெல்லாம் தலை வணங்கிட்டா என்னா ஆவறது.. ..ஓடி போய் முதல்ல சொல்லிட்டு தான் மறுவேலையே. அண்ணன் சமயம் பாத்துக்கிட்டே இருந்தாரு, ஒரு நாள் வசமா மாட்டினேன்.. தனியா ரூம்குள்ள போட்டு சாத்து சாத்துன்னு சாத்தினாரு.. பெரிய அண்ணாவுடைய style லே direct ஆ தலையில தாக்கறது தான். நான் என்ன நெனப்பேன்னா.. என்னடா நம்ம பாப்பா நம்மவிட புத்திசாலியா இருக்காளேன்னு பொறாமையில தலையில வச்சி வாங்கறாறோன்னு.. சரி single gape ல தப்பிச்சோம் பிழைச்சோம்னு ஓடி வந்து, நம்ம as usual style ல சவுண்டு விட ஆரம்பிச்சது தான்.. எங்க ஆயா..வந்து விசாரிச்சிட்டு, நேரா உள்ள போய் அடிக்கற மாதிரி ஒரு பிரம்ப எடுத்து கிட்டு வந்து, அண்ணன் கிட்ட கொடுத்து.. வாடா இப்ப இதால்ல நல்லா அடி, பொம்பல புள்ளன்னு இல்லாம.. அவள இப்படி போட்டு அடிச்சி இருக்கியே..(என்னவோ இவங்க என்ன அடிக்காத மாதிரி) உனக்கு அந்த பொண்ணு மேல எவ்வளவு கோவம் இருந்தா இப்படி அடிச்சி இருப்ப..வா வந்து ஆசை தீர அடின்னு சொல்ல.. நமக்கு இங்க கதி கலங்கி போச்சு... என்னா இந்த கிழவி same side goal போடறாங்களேன்னு, ஆனா..அண்ணன் பாவம் பாத்து விட்டுடாங்க.. ஆயா விடலயே.. அவங்க அடிக்க ஆரம்பிச்சிடாங்க.. நல்லா கண் குளிர அந்த பொண்ணு அழுறத பார்த்துகோடான்னு.. வச்சி விலாச ஆரம்பிச்சிடாங்க.. ம்ம்..பஞ்சாயத்து பண்ணாம ஒழுங்கா அண்ணன்கிட்ட மட்டும் அடிவாங்கனமா போனமான்னு இருந்திருக்கலாமா.. எங்க..

5. சின்ன அண்ணன். :- இவர் கிட்ட வாங்கினது சூப்பர். கேரம் போடு ஆடும் போது, 2 பேருக்கும் சண்டை ஆரம்பிச்சது.. நான் தான் சரி, நீதான் சரி..ன்னு ஆரம்பிச்சு.. அதுபாட்டுக்கும் நடக்குது. நாமத்தான் எதையும் சாமான்யத்துல சரின்னு ஒத்துக்க மாட்டோமே.. அண்ணன் பொறுமை இழந்து போய் ஒரே குத்து மூக்கு மேல.. வெத்தல பாக்கு தான்..வேற என்ன..கொட கொடன்னு ரத்தன் வர ஆரம்பிச்சிடுத்து.. அவருக்கு தான் நம்மல பத்தி நல்லா தெரியுமே.. உடனே ஓவர் சவுண்டு விடுவோம்னு.. குத்தன அடுத்த செகண்ட் என் வாய சத்த இல்லாம பொத்தி.. “இங்க பாரு.. ஓவரா சீன் போட்டு ஊற கூப்பிட்ட மவளே முஞ்சியில ஒரு பார்ட் ஒழுங்கா இருக்காதுன்னு சொல்லிட்டு ...’லேசா கைய என் வாயில இருந்து எடுத்து சவுண்டு (test ஆம்) வருதான்னு பார்த்தாரு.. எங்க வரும்.. வரலியே...


6. கடைசியா என் பையன் ;- நாங்க குடும்பத்தோட 25-30 பேர் இருக்கும் திருப்பதிக்கு பஸ்ல போய்க்கிட்டு இருந்தோம். என் பையனுக்கு அப்போ 2.5 வயசு..பஸ்ல என் மடியில உட்கார்ந்துகிட்டு, கைல ஒரு ரோஜா பூ வை வச்சிக்கிட்டு விளையாடிட்டே வந்தவன் தூங்கிட்டான். கீழ் திருப்பதி பஸ் ஸ்டாண்டில், பஸ் நிற்கும் போது அவனும் எழுந்துட்டான். எழுந்து முதல் கேள்வி “அம்மா, பூ? ‘ எந்த பூவை கேக்கறான்னு நான் யோசிக்கறதுக்கு முன்ன கீழ இறங்கி அவனே தேட ஆரம்பிச்சிட்டான். அவன் கையில இருந்த ரோஸ் கீழ உதிர்ந்து விழுந்து கிடந்தது.. பார்த்தவுடனே அழ அரம்பிச்சான்.. அந்த ரோஸ் முழுசா வேணும்னு அழ ஆரம்பிச்சவந்தான்..என்னவோ சமாதானம் சொல்லியும் கேட்கல.. என் பையனாச்சே சவுண்டு 'மேல் திருப்பதி வெங்கட்’டுக்கு கேட்டு அவரே ஒரு பூ கொடுக்கற ரேஞ்சுக்கு கத்தறான். என் வீட்டுகாரர் எங்கயோ தேடி கண்டுபிடிச்சி ஒரு ரோஸ் வாங்கிட்டு வந்தாரு.. அவனோ..”என்ன பார்த்தா என்ன கேன மாதிரி இருக்கான்னு (சொல்லல) ஒரு லுக்கு விட்டுட்டு அத ஜன்னல் வழியா தூக்கி எறிஞ்சான். அழுகையும் நிக்கல.. எல்லாரும் சாப்பிட ஹோட்டலுக்கு போனாங்க.. நானும் இவன அழுகையோடேயே தூக்கிட்டு போனேன். ஹோட்டலுக்கு உள்ள கால வைக்கல, நான் இங்க ஒருத்தன் பூ கேட்டு அழுதுகிட்டு இருக்கேன்..நீ சாப்பிடவா போறே...எப்படி சாப்பிடறன்னு பாக்கறன்டீ நானுன்னு நெனச்சி.. பளார் பளார் ன்னு கண்ணதுல அடிக்க ஆரம்பிச்சிட்டான். என் பையன் face specialist. முகம் தான் அவனோட டார்கெட்டெ. இத பார்த்த என் பாசமலர் அண்ணன் ஓடி வந்து..’டேய்.. ஏண்டா என் பாப்பாவ இப்படி அடிக்கற (இவரு நம்மல அடிச்சது நமக்கு தானே தெரியும்), அழுகைய நிறுத்திட்டு ஒழுங்கு மரியாதையா சாப்பிடு இல்லைனா அடி நொறுக்கிடுவேன்னு சொன்னது தான் என் பையனுக்கு ஆவேசம் அதிகமாகி இன்னும் வேகமா என்னை சாத்த ஆரம்பிச்சான். சரி நம்ம பையன் நம்மல அடிக்கட்டும்னு பஸ்ல வந்து உட்கார்ந்து “அடிப்பான்னு” சொல்லிட்டேன். கிடச்ச chance அ அவன் மிஸ் பண்ணாம தலைமுடிய பிச்சி எடுத்து, காது கம்மலை பிடிச்சி இழுத்து, கண்ணத்திலே போட்டு சாத்தறான். தாயாச்சே எருமையிலும் பொறுமையா இருக்கனும்னு..பார்த்தேன்..ஆனா வலி தாங்க முடியாம என் கண்லேர்ந்து தண்ணியா வர ஆரம்பிச்சிடுத்து.. என் பையன் உஷார் ஆயிட்டான்.. ஆஹா..அம்மா அழ ஆரம்பிச்சா ஓவர் சீன் ஆயிடுமே..ன்னு அப்புறம் நம்மல எல்லாரும் சாத்த ஆரம்பிச்சிடுவாங்கலேன்னு, என் கண்ண தொடச்சி விட்டுட்டு.. கீழ கடந்த உதிர்ந்த ரோஸ்ஸின் காம்பை கைல எடுத்து வச்சிகிட்டு அமைதியா விளையாட ஆரம்பிச்சிட்டான்.....

மனசின் ஆவேசங்கள்…மெளனப்புலம்பல்களாக…

மனசு அடக்கமின்றி திரியும் பலநேரங்களில் மெளனமாய் மனதுடன் அறிவை பேசவைக்கும் தருணங்கள் அதிகமாகி, இரண்டும் விவாதித்து விடைக்கிடைக்காத பல நேரங்களில் அறிவும், மனசுடன் கைக்கோர்த்து கொண்டு ஆனந்த கூத்தாடும். அடக்கமுயலும் பிரச்சனைக்கு திர்வு இன்றி, பதில் விளங்காத மெளனப் புலம்பல்களாகவே தொடரரும்..

பதில்கள் இல்லாத கேள்விகளாய்…ஏன் இந்த மனசு இப்படி.. என்னேரமும் குரங்கை போல் தாவி தாவி…… தாவும் போது….ஏதோ மிக தூரத்தில் இருந்து விழுந்துவிடுவோமோ என்ற பயம் கூட சில நேரம். எப்போதோ அப்படி விழுந்தவிட்ட தருணங்களின் நினைவுகள் நெஞ்சை அடைக்கும். கண்கள் குளமாகும். எத்தனை முறை விழுந்தாலும், அடிப்பட்டு ரத்தம் சிந்தினாலும் விடாது முயற்சிக்கும் மனதை பாராட்டுவதா..அதனுடம் கைக்கோர்த்து கொள்ளும் அறிவை சீ… அறிவே உனக்கு அறிவில்லையா…..என கோபப்படுவதா..?

மாடு தன் உணவை வேகமாய் உண்டு விட்டு, பிறகு, பொருமையாய் அமர்ந்து நாளெல்லாம் அசைபோடுமே..அதுபோல் எப்போது பார்த்தாலும் அறிவும், மனசும் நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை என அசைப்போட்டு கொண்டே இருக்கிறது…

1. நடந்தவை சரியாக இருந்துவிட்டால், இப்படியே செய்து இனிமேலும் எல்லாவற்றையும் சரியாக்கிவிடாலாம் என்றால்
2. அடுத்து நடப்பவை தவறாக முடியும் போது..
3. நடக்க இருப்பவை பற்றி, சரியான கோணத்தில் மட்டும் இல்லை, தவறான கோணத்திலும் சிந்திக்காமல் இருக்க முடியவதில்லை..

ஏன் இத்தனை சிரமம் எடுத்து சிந்திக்க வேண்டும், இப்படி எல்லாவற்றிக்கும் யோசிக்க ஆரம்பித்து, எல்லாமே நல்லபடியாய் ந்டந்து விட்டால், எல்லோருமே எல்லாவற்றையும் யோசித்தே செய்வார்களே..அது விதி..என்று கை பிசைய வேண்டிய அவசியம் இல்லையே. எது எப்படி அமைகிறதோ அதை அப்படியே எடுத்து கொண்டு, வருவது வரட்டும்..போவது போகட்டும்.. என்று எளிமையாக வாழ்க்கையை அனுபவிக்க வேண்டும் என கூறுபவர்களை பார்க்கும் போது எப்படி இவர்களால் முடிகிறது என்று ஆச்சரிமாக தான் இருக்கிறது.

தெருவோரம், வயிற்று பசியில் பிச்சை எடுக்கும் ஒரு வயதான மூதாட்டி, இவர்கள் காசு போடுவார்கள் என வயதுக்கு மீறி, தள்ளாட்டத்தையும் மீறி ஓடி வந்து கை நீட்டும் போது, ஒதுக்கும் பார்வையோடு ஒதுங்கி போகும் மனிதர்களை பற்றி யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

8 வயதுக்கூட ஆகாத குழந்தை, சோற்றுக்கு வழி இல்லாமல், பெற்றவர்கள் “போடா போய் உன் வயிற்று பிழைப்பை பார்” என்று எவருடனோ அனுப்பி வைக்க, மளிகை கடையில் ஒரு கூலியாக தன் வயிற்றை கழுவிக்கொள்வதை கேட்டு/பார்த்த பிறகும் எல்லோரையும் போல் “டேய் ஒரு பால் பாக்கெட் கொடு” என்று வாங்கிகொண்டு வந்துவிடமுடிவதில்லை..

பக்கத்து வீட்டில் செடி வளர்க்கிறார்கள் என்று தானும் தொட்டி வாங்கி வைத்து, வளர்க்கிறேன் பேர்விழி என்று, தண்ணீர் சரிவர ஊற்ற முடியாமல் அந்த செடி வாடி வதங்கி..”ஐயோ மனிதர்களே எனக்கு தண்ணீர் ஊற்றுங்கள் என கதுறும் சத்தம் கேட்டும், திரும்பிபார்க்காமல் எனக்கென்ன அது அவர் வீட்டு செடிதானே என வந்து விடமுடிவதில்லை.. ஒருமுறை ஊற்றுவதை யாரேனும் பார்த்து விட்டால் போதும், மேடம்! கொஞ்சம் செடியை பார்த்துகோங்க என்று சொல்லும் மனிதர்களின் நிலை குறித்து நினைக்காமல் இருக்க முடிவதில்லை..

பஸ்ஸில் அமர்ந்து வரும் கொஞ்ச நேரத்தில் பக்கத்து சீட்டு பெண்மணி சொல்லும் அவரின் சொந்த இன்ப/துன்ப கதைகளை பொருமையுடன் கேட்டுவிட்டு..ஏன் இவர்கள் என்னிடம் சொன்னார்கள் என்ற விடை தெரியாத கேள்வியை மனதுக்குள் கேட்காமல் இருக்க முடிவதில்லை ..

எல்லோரும் பேசி சிரித்து கும்மாளம் இட்டுகொண்டு மதிய உணவு உண்ணும் போது, என்னிடம் பேச நினைக்கும் நண்பரின் பார்வையை புரிந்து, என்ன சொல்லுங்க..ஏதோ சொல்லனும்னு நினைக்கறீங்க , ஏன் யோசிக்கறீங்க என்று கேட்டால், ஆச்சரியத்துடன்..எப்படிங்க என் மன ஓட்டத்தை கண்டுப்பிடிச்சீங்க என்ற அவரின் கேள்விக்கு பதில் சொல்லாமல், “நாளைக்கு லன்ச்’க்கு எல்லோரும் வெளியில போறீங்களே என்னையும் வரச்சொல்லனுமா?.. நண்பர் “இல்லைங்க”.. அப்போ நான் வரவேண்டான்னு சொல்லனுமா?! நண்பர் “அய்யோ..இல்லைங்க…”சரி, உங்களுக்கு பெண் பார்க்க சொல்லி இருந்தீங்களே? அதை பற்றி கேட்கனுமா?.. நண்பர் “இல்லைங்க” அதற்கு மேல் பொறுமை இல்லாமல், பாருங்க ..நீங்க ஏதோ சொல்ல நினைக்கறீங்க என்னன்ன சொல்லுங்க இதற்கு மேல் என்னால் ஊகிக்க் முடியாது என சொல்லி அவர் சொல்ல வந்ததை தெரிந்து கொள்ளாமல் விடவதில்லை என்ற நிலைக்கு மனமும், அறிவும் ஒன்றாக தள்ளபடுவதை தடுக்கமுடியாத நிமிடங்களை நினைக்கும் போது..நாம் ஏன் நம்மிடம் இல்லை என …அசைபோடும் நேரங்களில் யோசிக்காமல் இருக்க முடிவதில்லை.

இப்படிதான் எல்லோருடைய சிந்தனை ஓட்டமும் இருக்குமோ ..இல்லை நாம் மட்டுமே இப்படி எதையும் செய்யும் முன்னும், செய்த பின்னும் யோசிக்கிறோமோ….வினா, பதில், பிரச்சனை, அமைதி, ஆட்டம், எரிச்சல், கோபம், சிரிப்பு., அழுகை என அலையும் புத்தியை அவ்வபொழுது உணர்ந்து பிடித்து இழுத்து நம் பிடிக்குள் வைப்பது கூட எத்தனை சிரமமாகிறது. அலுவலகத்தில் பரவாயில்லை.. வீட்டில் மோசம்..இருமுறை கூப்பிட்டு திரும்பவில்லை என்றாலே “யேய் லூசே”..என்று பெயர் மாறி போகிறது…..

எத்தனை எத்தனை மனிதர்கள், அவர்களின் எண்ணங்களிலும். செயல்களிலும் எப்போதுமே ஒரு முரண்பாடு….உதடுகள் ஒன்று பேசும், அவர்களின் கண்களை உற்று நோக்கினால், உள்மனசின் விகாரம் பேயாய் நம்மை பயமுறுத்தும்..

நல்லவைகளை யோசிக்க யோசிக்க முடிவில் மிஞ்சி இருப்பதோ.. அதற்கு நேர் எதிர்.. ஊரோடு ஒத்து வாழ்..தனி மரம் தோப்பாகாது., ஊர் வம்பு நமக்கெதற்கு, சமுதாயம் என்பது சாக்கடை அதில் நீ மட்டும் பன்னீராய் எப்படி இருப்பாய், புத்தி இருப்பவர்கள், உன்னை போன்று யோசிக்க மாட்டார்கள், வேலையை முடித்து விடுவார்கள் என்று அறிவுரை கூறுபவர்கள் அத்தனை பேரும் ஒரு புரம் இருக்க..சிந்தித்து இது தான் சரி.. இது தவறு என்று முடிவுடன் இருக்கும் நாம் பலரின் கண்களுக்கு கேலி கூத்தாகி போய் கொண்டிருப்பது என்னவோ நிஜம்தான்… செயற்படுத்த முடியாத நிஜங்கள் ஆவேச புலம்பல்களாய் மனதுக்குள் மெளனமாய்..தொடர்கிறது……….

அணில் குட்டி அனிதா :- ம்ம்..ஹா.. …..கவி.. எனக்கு தூக்கம் தூக்கமா வருது.. …பாருங்க கண்ணு சொக்குது.. என்ன அதுக்குள்ள தூக்கம்ன்னு கேக்கறீங்களா?.. எல்லாம் மேல இருக்கறத படிக்க போனதால வந்த.து… சரி.. நீங்க ஓவர் தெளிவா எத பத்தியோ எழுதி இருக்கீங்களே....அது என்னா?!! மக்கா உங்களுக்கு ஏதாவது புரிஞ்சா எனக்கு லெட்டர் போடுங்க.. அட்ரஸ் கவிதாவோடது தான்..எப்படியாவது எனக்கு வந்துடும், கவலபடாதீங்க..

அணில் குட்டி அணிதா
C/o. கவிதா கெஜானனன்
கீல்பாக் 3வது மெயின் ரோடு
கீல்பாக்கம்
சென்னை

SMS முலம் வரும் அசிங்கமான தகவல்களின் பாதிப்பு

Mobile phone இருப்பது எத்தனை வசதி என்பது உபயோகிக்கும் அத்தனை பேருக்கும் தெரியும், ஆனால் எனக்கு மட்டும் அது உபத்திரமாக தான் இருக்கிறது. அதை நான் இப்போது வைத்திருப்பது என் கணவர், மகனுக்காக மட்டுமே என சொல்லலாம். எனக்கும் எல்லோர் போலவும் உபயோகிக்க ஆசைதான்.. என்ன செய்வது.. எனக்கு ஏற்பட்ட மிக கசப்பான அனுபவம் காரணமாக நான் யாருக்கும் நம்பர் கொடுப்பதில்லை. இந்த நம்பர் கொடுக்காமல் இருப்பது கூட நண்பர்களுக்குள் மிக சங்கடத்தை ஏற்படுத்துகிறது.

நான் உபயோகித்தது, உபயோகிப்பது எல்லாமே pre paid தான். முன்னர் வைத்திருந்த நம்பரை யார் கேட்டாலும் கேட்காவிட்டாலும் எழுதி கொடுத்துவிடுவேன். என்னை சுற்றி உள்ளவர்கள் மேல் எனக்கு அத்தனை நம்பிக்கை.

Mobile phone ல் அலாரம் வைப்பதால், தலை மாட்டில் வைத்துக்கொண்டு தூங்குவது வழக்கம். ஒரு நாள் இரவு மணி 11 இருக்கும், தூங்கி கொண்டிருந்த நான் சத்தம் கேட்டு எடுத்து பார்த்தேன், SMS ல் தகவல்.. “ I Love you “ என்று இருந்தது. நான் பயந்து போய்விட்டேன்.. என்னை சார்ந்தவர்கள், தெரிந்தவர்கள் அத்தனை பேருக்கும் என் தூக்க பழக்கம் தெரியும், இத்தனை மணிக்கு மேல் யார் இப்படி அனுப்புகிறார்கள் அதுவும் இப்படி ஒரு தகவலை..என்று யோசிக்கும் போதே என் கணவர் விழுத்துக்கொண்டு... “என்ன..இந்த நேரத்துல Mobile ல வைச்சுக்கிட்டு என்ன பண்ற” என்றார். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அவரின் தூக்கத்தை கெடுக்க வேண்டாம் என, "இல்லை அலாரம் செட் பண்ண மறந்துட்டேன்" என்று சொல்லிவிட்டு Mobile லை ‘off‘ செய்துவிட்டு, யாராய் இருக்கும் என யோசித்து கொண்டே தூங்கி போய்விட்டேன்..

காலையில் எழுந்து எனக்கு Mobile லை ‘On’ செய்யவே பயமாக இருந்தது. சரி அலுவலகம் சென்று பார்த்துக்கொள்ளலாம் என்று விட்டுவிட்டேன்.. அலுவலகம் சென்று எனக்கு தெரிந்த அத்தனை நம்பர்களையும் செக் செய்து பார்த்தும், தெரிந்த நம்பராக இல்லை. சரி பார்க்கலாம் என விட்டுவிட்டேன். படுக்கும் முன் silent mode ல் வைத்து விட்டு படுத்துவிட்டேன், அடுத்த நாள் பார்த்தால் முந்தைய இரவும் 11 மணிக்கு மேல் தகவல் வந்திருந்தது..

உன் கண்கள்.............. உதடுகள்........... என்று மிக அசிங்கமாக வர்ணித்து கடைசியில் படுக்கை அறை வரை அவன் என்னை அழைத்திருந்தான் என்பது தாங்கமுடியாத மன உளைச்சலை எனக்கு தந்தது. எத்தனை நம்பிக்கையாக நான் எல்லோரிடமும் என் நம்பரை கொடுத்திருக்கிறேன். ஏன் இத்தனை அசிங்கமாக தகவல் அனுப்புகிறார்கள். பார்க்கும் அத்தனை பேரையும், இவராக இருக்குமோ இவராக இருக்குமோ என என் மனது எண்ண ஆரம்பித்தது. அந்த நம்பரை திருப்பி கூப்பிட்டால் யாரும் எடுப்பதில்லை. பிறகு நானாக “ if you don’t stop this, I’ll call Police” என்று தகவல் அனுப்பினேன். ஆனால் அவனோ..திருப்பி யாரிடம் வேணுமாலும் போ..ஆனால் உன்னை.............தீருவேன் என்றான் இப்படி தினம் தினம் அசிங்கம் அதிகமானது, என் மன உளைச்சலும் அதிகமாகி போனது.

இதில் நான் அதிகம் பயந்தும், அசிங்கபட்டதும் என் மகனின் கண்ணில் இந்த தகவல்கள் பட்டுவிடுமோ என்று தான். செல் ஃபோன் ஆன் செய்யவே பயமாகி போனது. என் மகன் games விளையாட செல் ஃபோனை எடுப்பான்.. என் கணவரும் ஏதாவது நம்பர் தேவைக்கு எடுப்பார்..அவர்கள் இந்த அசிங்கத்தை பார்த்துவிட்டால் என்ன செய்வது என்று என்ற எண்ணமே என் நிம்மதியை குலைத்தது.

ஆனால் நாளுக்கு நாள் அதிகமாகி பொறுக்க முடியாமல் என் கணவரிடம், மிக மோசமான தகவல்களை அழித்து விட்டு படிக்கும் படியாக இருந்ததை மட்டுமே காட்டினேன். அவரோ உடனே ‘police’ க்கு போகலாம் என்றார். நான் அதற்கு உடன்படவில்லை. போலிஸ்ஸிடம் போனால் எல்லா தகவல்களையும் காட்டவேண்டும், என்னையே நான் அசிங்கபடுத்தி கொள்ள வேண்டுமா? என தோன்றியது. இது ஒரு 10 நாட்கள் தொடர்ந்தது.. நான் போலிஸ்க்கு வராததால் எனக்கும் என் கணவருக்கும் பிரச்சனையும் ஆனது. பின்பு ஒரு முடிவு செய்து ‘pre paid’ தானே தூக்கி எரிந்து விடலாம் என சிம்’மை எடுத்துவிட்டு புது நம்பர் போட்டுவிட்டேன்.

இப்போது யாருக்குமே கொடுப்பது இல்லை.. இந்த 10 நாள் அனுபவம் என்றாலும் மிக மோசமான அனுபவம்..இது.. இத்தனை அசிங்கமாக எப்படி என்னை சார்ந்தவர்கள், நண்பர்கள் என நான் நம்புபவர்கள் நடந்து கொள்ளுகிறார்கள் என்பதை என்னால் சகித்து கொள்ளவே முடியவில்லை..யாரை நம்புவது என்று ஒட்டு மொத்தமாக யாருக்குமே நான் நம்பர் கொடுக்காமல் இருக்கிறேன் (பெண்கள் உட்பட-அவர்கள் மூலம் யாருக்காவது தெரிந்துவிட்டால்) என்பது தான் உண்மை....

அணில் குட்டி அனிதா:- கவிதா ...நீங்க நினைக்கற மாதிரி உங்களுக்கு பக்கத்துல, இல்ல..உங்கள நேர்ல பாத்தவங்களா இருக்க வாய்ப்பே இல்ல.. ஏன்னா.. உங்கள நேர்ல பாத்தவாங்க எல்லாம் அம்மன் கோயில்ல போய் விபூதி வாங்கி வச்சிக்கிட்டு இராத்திரி ஆன அத பூசிக்கிட்டு தான் தூங்கறதா கேள்விப்பட்டேன்.. அதனால அநாவசியமா அப்பாவிங்க மேல சந்தேக படா...தீ..ங்க.. ..

ஆஆ..அய்யோ....யம்மா..ம்ம்..யப்பா........கவிதா..ப்ளீஸ்..விடுங்க.. இனிமே இப்படி எல்லாம் சொல்லமாட்டேன்...பொய்யா இருந்தாலும் நீங்க 40 kg தாஜ்மகல்’ னு சொல்றேன்.. அய்யோ.. ! யம்மா. ! வலிக்குது... கவிதா..ப்ளீஸ்...விடுங்க..வலிக்குது.. .விடுங்களேன்.. கவிதா ஜஸ்ட்..ஒன் நிமிட் ப்ரேக் ப்ளீஸ்........யா டான்க்ஸ்.......

அட உங்களத்தான்...எங்களதான் தான் இங்க நொக்கறாங்கன்னு தெரியுது இல்ல... அப்புறம் என்ன லுக்கு.. டீசன் ட்டா கிளம்ப வேண்டியது தானே...?.. படிச்சமா.. போனமான்னு இல்லாம...ம்ம்..ம்ம் கிளம்புங்க.. சீக்கிரம்.. வெளியில யாரும் மூச்..புரிஞ்சிதா.....ம்ம்..அது... அம்மனி .நீங்க ஆரம்பிங்க...நாம..அப்படி கொஞ்சம் உள்ளுக்கு போயி..க்...க்..க..லா...மா....................ஆஆஆ.....

திருமணத்திற்கு பிறகு பெண்கள் என்ன பீப்பா’வா??

ஏன் திருமணத்திற்கு பிறகு இந்திய பெண்கள் பீப்பா’ மாதிரி ஆகிவிடுகிறார்கள்..விவரியுங்கள் பார்க்கலாம்? நண்பர் தரண் அவர்கள் ‘கூந்தலும் கணவனும்” பதிவில் இப்படிதான் குறிப்பிட்டு இருந்தார். எங்கேயோ வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு, எப்போது பார்த்தாலும், இந்தியர்களையும், இந்திய கலாசாரத்தையும், இந்திய பெண்களின் அழகை ?!! யும் குறை கூறுவதே அவருக்கு வேலையாய் போயிற்று..

என் முதல் கேள்வி - ஏன் திருமணதிற்கு பிறகு ஆண்கள் ரோட் ரோலர் போல ஆவதில்லையா.?.. உதாரணத்திற்கு அவர்களின் தொப்பை ஒன்றே போதுமே.. ஒரு எண்ணெய் விளம்பரத்தில், “ஏங்க இவங்க தொப்பையை குறைக்கக்கூடாதா? “ என வித விதமான தொப்பைகளை காட்டுகிறார்கள்.. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் அடக்கமுடியாது..சிரிப்பு சிரிப்பா வரும்...இப்படி தொப்பைக்கு சொந்தமானவர்கள் பெண்களை கிண்டலடிப்பது எப்படி பொருந்தும் என்று புரியவில்லை.

திருமணத்திற்கு பின் ஆண்கள் குண்டாவதற்கு முக்கிய காரணம் மாமியார் வீட்டில் பந்தாவாக மாப்பிள்ளை என்ற புது சர்டிவிக்”கேட்” டோடு மூன்றுக்கு 5 முறை மூக்கு முட்டவும், அதற்கு மேலும் சாப்பிட்டு விட்டு, வீடு வீடாக விருந்தும் என்று, ஒரு வாரத்திற்குள் பாருங்கள்..”மாப்புள நீயா?” ன்னு கேட்கற அளவுக்கு குண்டாகிவிடுகிறார்கள்.. ஆனால் பெண்கள் அப்படியா?.. மனசுல கை வைச்சு சொல்லுங்க பார்க்கலாம். பெண்கள் ஏன் குண்டாகி போகிறார்கள் என்பதற்கான எனக்கு தெரிந்த காரணங்களை கூறுகிறேன்..

1. குழந்தை பிறந்தவுடன், தன்னை கவனிப்பதை விட குழந்தையை கவனிக்கவும், குழந்தைக்கு பாலூட்டவும் அவர்கள் நிறைய சாப்பிட தொடங்குகிறார்கள். தனக்கும், தன் குழந்தைக்கும் சேர்த்து சாப்பிடுவதால் சதை விழுந்து போகிறது..
2. நிறைய பெண்களுக்கு ஹார்மோன் இன்பேலன்ஸ் காரணமாக சதை விழுகிறது என்பது தெரிவதில்லை.
3. கர்ப்பபை பிரச்சனை, சரியான இடைவெளி இல்லாத உதிரப்போக்கு, அதிக (அ) மிக குறைந்த உதிர போக்கு காரணமாகவும் குண்டாகி போகிறார்கள்.
4. மன ரீதியான பாதிப்பு, திருமணம் ஆன பிறகு அவர்கள் மேல் உள்ள அழகின் அவசியம் போய், மற்றவர்களின் மீது (கணவன், குழந்தை) திரும்புவதும் இதற்கு காரணம்.
5. எந்த உடல் பிரச்சனையும் இல்லாத பெண்கள், கணவரும், குழந்தைகளும் வெளியில் சென்றபிறகு, வேலை எதுவும் இல்லாமல் போவதால், பகல் நேரங்களில் தூங்குவதாலும், தொலைக்காட்சியே கதி என்று உட்கார்ந்து விடுவதும் காரணங்களாகிறது.
6. வீட்டில் மீந்து போன சாப்பாட்டை (வீணாக போகிறதே என்று) தலை எழுத்தே என்று சாப்பிடுவதாலும் குண்டாகிறார்கள்.
7. உடலுக்கு சரியான உடற்பயிற்சி இல்லாமல் போவதும் ஒரு முக்கிய காரணம். (எல்லாவற்றிக்கும் இப்போது தான் மிஷின் வந்துவிட்டதே)
8. கடைசியாக, வேலைக்கு போகும் பெண்கள், காலையில் சீட்டில் போய் உட்கார்ந்தால், மாலை தான் எழுவார்கள். உடலுக்கு எந்த பயிற்சியும் இல்லாது போகிறது.

இப்படி தன் நலம் பாராட்டாமல், தன் கணவன், குழந்தை நலம் பாராட்டுவது மட்டுமன்றி, உழைத்து உழைத்தே குண்டாகி போகும் பெண்களை, சும்மா கிண்டல் செய்வதை விட்டுவிட்டு உங்களின் தொப்பை ஏன் வளர்ர்ர்ர்ர்ர்ந்ந்ந்ந்ந்ந்தூ..வந்து கொண்டே இருக்கிறது என்பதற்கு 7 காரணம் வேண்டாம் ஒரே ஒரு உருப்படியான காரணம் சொல்லுங்கள் பார்க்கலாம்.

அணில் குட்டி அனிதா:- அம்மனிக்கு வாய் சும்மாவே இருக்கறது இல்லை.. நம்மளயே தினமும் ஒருத்தர் உருட்டி விடற மாதிரி இருக்கோமே.. இந்த மாதிரி subject எல்லாம் எழுதலாமா.. ம்ம்ம்...அம்மனிக்கு கொஞ்சம் கூட அடக்க ஒடுக்கம் இல்லங்க.!

அப்புறம்..ஒரு விஷயம்., இவங்க வீட்டுல renovation க்கு அவங்க hubby ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்காரு.. என்னான்னு கேக்கறீங்களா?.. single door எல்லம் double door ஆ மாத்தறாங்க.. அட..நீங்க நினைக்கற மாதிரி “வாஸ்து “ சாஸ்த்திரம் எல்லாம் பாக்கலைங்க.. அம்மனி சைஸ்’ க்கு single door பத்தலையாமா...!! ஹி..ஹி.. விட்டுகுள்ள ஆட்டோ வைச்சி தான் இவங்கள ஒரு சுத்து சுத்த வேண்டி இருக்கு .!! .. பஸ், ட்ரைன் எல்லாத்திலுமே 1-1/2 டிக்கட் தான்.. இப்படியே போனா.. இருந்தாலும், செத்தாலும்.. அம்மனிக்கு பெரிய பெரிய வாசல் வச்சி..”கவிதா மகல்” தான் கட்டனும்...

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கமும், கலாச்சார சீர்கேடும்

பன்னாட்டு நிறுவனங்களின் ஆதிக்கம் சென்னையில் அதிகமாகிவிட்ட நிலையில் அயல்நாட்டவரின் கலாசாரமும் நாளுக்கு நாள் அதிகமாகிவிட்டது. அலுவலகத்தில் மாதம் ஒருமுறை 5 ஸ்டார் ஹோட்டலில் லன்ச், (அ) டின்னர் ஏற்பாடு செய்கிறார்கள் நட்சத்திர ஹோட்டல்களுக்கு எப்போதாவது இதுபோல் அலுவலக வேலை காரணமாக சென்றிருந்தாலும், வெளிநாட்டரவுடன் சேர்ந்து செல்லும் போது தனி அனுபவமாக தான் இருக்கிறது. குறிப்பாக அசைவ உணவு, வெளிநாட்டு உயர்ந்த வகை மது வகைகள் நிச்சயம் இருக்கும். இவை இல்லாமல் ஆண், பெண் என்ற வித்தியாசம் எங்களிடம் இல்லாமல் எங்களுது வெளிநாட்டு மேலாளர் பார்த்துக்கொள்வார். அவ்வப்போது நடுநடுவே எங்களுக்கு அதற்கான அறிவுரை வழங்கப்படும் அதேசமயம் நம் கலாசாரமும் அவருக்கு தெரிந்து இருப்பதால் எங்களை எதற்கும் அவர் கட்டாயபடுத்துவதும் இல்லை.

இப்படி செல்லும் போது நம் இந்திய நண்பர்களிடம் பார்த்த சில பழக்கவழக்கங்கள், எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அதாவது நாங்கள் விருப்பப்பட்ட எதையும் அங்கே சாப்பிடலாம். Standard Menu கிடையாது. ஆண்கள் சிலர், மது சாப்பிடும் பழக்கம் மிக அறிதாக இருந்தாலும், உயர்ந்த ரக மதுபானத்தை பார்த்தவுடன் அதிகமாக குடிப்பார்கள். சொல்லும் காரணம் “ஓசியில் கிடைக்கும் போது அனுபவிக்கனும் என்பதே”. குடித்தாலும் பரவாயில்லை, நேரம் ஆக ஆக அவர்களின் முன்பே அழகாக இருக்கும் முகம் லேசாக மாறிவிடும், பேச்சும் தான்.. தாங்கமுடியாத அளவுக்கு பேசுவார்கள். திருமணம் ஆகாதவர்கள் அதிகம், அதே சமயம் எங்களுடன் சாப்பிட வந்த வெளிநாட்டவர்களும் இவர்களை விட அதிகம் மது அருந்துவார்கள் தான், ஆனால், அவர்கள் முகத்திலோ, பேச்சிலோ அதிக மாற்றம் இருக்காது. இதை நான் நண்பர்களிடம் கேட்கும் போது, அவர்கள் எப்போதுமே சாப்பாட்டுடன் குடிப்பதால் பழகி போய் விட்டாரகள். நாம் அப்படியா, இப்படி எப்போதாவது ஓசியில் கிடைக்கும் போது சாப்பிடுவாதால் உளர ஆரம்பித்துவிடுகிறோம் என்பார்கள். இதில் குறிப்பிட்ட நண்பர்களுக்கு வயது 22- 25 க்குள் தான் இருக்கும். இவர்கள் மட்டும் அல்ல பன்னாட்டு நிறுவனங்களில் வேலை பார்க்கும் பல இளைஞர்கள் குடிப்பது என்பதை தங்களது அன்றாட வாழ்க்கையில் ஒன்றாக ஆக்கி கொண்டார்கள். இதற்கு அவர்களின் அதிகமான சம்பளம், வாழ்க்கை முறை, நிறுவனங்களில் சொல்லித்தரப்படும் கலாசாரம் எல்லாமும் காரணமாகிறது.

பிச்சா கார்னரில் மொய்க்கும் கூட்டம், எப்போதும் சாட் உணவு என்று தங்களை வெளிநாட்டில் இருப்பது போன்று பாவித்து கொள்கிறார்கள். இந்த உணவு பழக்கவழக்கங்களால், 20 வது வயது மதிக்க தக்க பிள்ளைகள் 30 பது வயது போல் தோற்றமளிக்கிறார்கள். குடி பழக்கம், தூக்கமின்மை காரணமாக கண்களுக்கு அடியில் எப்போதும் ஒரு சிறு வீக்கம் தெரிகிறது.

சாஃப்ட்வேர் டிவலப்மெண்டு என்று எப்போது பார்த்தாலும் கம்பூயட்டரையே வெறித்து கொண்டும், எப்போதும் அதைப்பற்றிய கவனத்துடம் இருப்பது இல்லாமல், “டென்ஷன்னா இருக்கு , ஒரு தம் போட்டுடு வந்தால் சரியாகி போகும்” என்று புகைப்பதும் கூட நிரந்தர பழக்கமாகிவிட்டது. இந்த சாஃப்ட்வேர் கம்பெனிகளில் வேலை பார்க்கும் பல பிள்ளைகளுக்கு தலையில் முடி பஞ்சம். 22-25 வயதுக்குள்ளேயே முடி கொட்டி போகிறது, இள நரை வேறு. முதிற்ச்சியான, வயதான தோற்றம், திருமணம் ஆகி இரண்டு குழந்தை இருக்குமோ என்று எண்ண தோன்றும்.

பெண்களும் இதற்கு விதிவிலக்கல்ல. ஜன்க் உணவை அதிகமாக சாப்பிட்டு மிகவும் குண்டாகி போய் இருக்கிறார்கள். உடம்பை குறைக்க ஜிம் வேறு தனி. ஜிம், அழகு நிலையத்திற்கு இவர்கள் கொடுக்கும் காசுக்கு இவர்களின் கல்யாண செலவையே பார்த்து விடலாம்.

உணவு பழக்கங்களையும், குடி மற்றும் புகைக்கும் பழக்கத்தை மாற்றினாலே இவர்களின் தோற்றத்தில் நல்ல வேறுபாடு தெரியும். சம்பாதித்தல் என்பது முக்கியமே….அதற்காக சம்பாதிப்பதை இப்படி தான் பயன்படுத்த வேண்டுமா.. அலுவலக நேரம் போக.மீதி நேரத்தை விளையாட்டு, டிரைவிங், நீச்சல் , குடும்பம், நண்பர்கள் என்று செலவிட எத்தனையோ வழிகள் இருக்கிறது..

ஆரோக்கியம் எதில் உள்ளது என்பதை உணர்வார்களா நம் இளைஞர்கள்?.

அணில் குட்டி அணிதா:- முடிச்சிட்டிங்கீங்களா அம்மனி?.. அது எப்படி அம்மனி எப்பவுமே ஊருக்கே உபதேசம் பண்றீங்க?.. என்னவோ நீங்க என்னவோ மார்கேண்டேயினின்னு நெனப்பா?.. வயசானாவே..இப்படிதான்.. சின்ன பசங்க எது பண்ணாலும் உபதேசம் பண்ண தோனும்.. ஆனா நம்ம கவிதா உபதேசம் பண்ணல.. புலம்பறாங்க.. ம்ம்..என்னடா.. நம்மால தம் போட முடியலயே.. ராத்திரியல நைட் கிளப்’ல போய் பீர் அடிச்சிட்டு, dance பண்ணமுடியலேன்னு.. பொறாம.. விடுங்க..அவங்க அப்படிதான்..! அப்புறம் இன்னொரு விஷயம்..காத குடுங்க.. அம்மனி புள்ளைய எப்படி வளக்கறாங்கன்னு கேளுங்க.. புள்ள கேட்கும் போது எல்லாம்..pizza, burger, sandwidch..தான்.. ம்ம்.. வூட்டுகுள்ள ஒன்னும் ..வேளியில ஒன்னு.. கேப்பாரு இல்ல… நானும் ஒவ்வொரு வாட்டியும்..நீங்க யாராவது கேப்பீங்கன்னு டிப்ஸ் குடுக்கறேன்.. ம்ம்ம்.. கவனிங்க!!.