உன்னை யார் அறிவார்...?

சுயநலமறியாது
சுழலும்
வாழ்க்கையில்
சுகமென்று காண
ஒன்றுமில்லை
இது நியதி !!

எந்நேரமும்
ஏதோ ஒரு
மனிதமுகம்
சுயநலம் காட்டி
கடந்து செல்லுகிறது-

கடக்கமுடியாமல்
கலங்கி
நிற்கும் தருணங்கள்..
என்னை
நானுணரவோ. ?!!




















படிப்பினை
பலப்பெற்றும்
எனை
இழக்காமல் 
இவ்வாழ்க்கையில் உழன்று -

பெற்றது ......???!!

என்
தலையில் மட்டும்
என்ன
களிமண்ணோ... ?!! 

***

அணில் குட்டி : அட.. ! :)))) அம்மணி தல நல்ல வளமாத்தான் இருக்கு..  !

பீட்டர் தாத்ஸ் : We must all suffer from one of two pains: the pain of discipline or the pain of regret. The difference is discipline weighs ounces while regret weighs tons.

படம் நன்றி கூகுல்
.

மயிலு...ஆத்தா ஆடு வளத்தா...

என்னோட ரவுண்டு குட்டியோட டெஸ்க்டாப், பப்ளிக் ப்ரொஃபைல் படங்கள் எல்லாமே ஒரு மார்கமாக, டெரராக இருக்கும். அதாவது, பார்த்தாவே முகம் சுளிக்க வைக்கும் ஸ்கல், எலும்புக்கூடு, வாயை பிளந்து, நாக்கு தள்ளி, கண்கள் பிதுங்கி இருக்கும் விகாரமான அனிமேடட் படங்கள், அசிங்கமான ஆங்கில வாசகங்கள் கொண்ட படங்கள், விதவிதமான வானரங்கள் அல்லது எல்லாவற்றையும் மிஞ்சும் அவனுடைய புகைப்படம் என்று பார்த்தவே பயங்கரமாக இருக்கும்.

நேற்று அதிசயமாக, ஒரு மயில் தோகை விரித்து ஆடும் படம் வைத்திருந்தான். நம்ம புத்தி என்னைக்கு நல்லா இருந்து இருக்கு, உடனே என் மண்டை குடைய ஆரம்பித்தது. என் புள்ளைக்குள் ஏதாவது மாற்றம் வந்துடுத்தோன்னு, பக்கத்தில் போயி உட்கார்ந்து நைய நையான்னு புடுங்க ஆரம்பித்தேன்.

"என்னடா அதிசயம் மயில் படம் போட்டு இருக்க... என்ன மேட்டர்?"

"உனக்கு புரியாது மதர்... "

"புரியும் சொல்லு.".

"இல்ல மதர்.. அது பீட்டர் ல சொல்லனும், சொன்னா உனக்கு புரியாது.."

"நீ முதல்ல சொல்லு. .புரியுதா புரியாம இருக்கான்னு பார்க்கலாம்.."

"இல்ல மதர். விடு, .உனக்கு புரியாது.. அதை பீட்டர் ல தான் சொல்ல முடியும்.. பீட்டர் உனக்கு புரியாது.."

"அட..சொல்லுடா. .ஒரு வேள உனக்கே தெரியாதோ. .தெரியாதத பீட்டர் பீட்டர் னு சொல்றியோ. .சொல்லித்தொலடா"

"உனக்கு ஏன் இப்படி மண்டை கொடையுது.? ".

"இல்ல நீ சொல்லாம நான் விட மாட்டேன். .நீ இந்த மாதிரி படம் எல்லாம் வச்சிக்க மாட்ட, எனக்கு காரணம் சொல்லு..."

"ஏன்ன்ன்ன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க. .போய் தொல"

"மாட்டேன். .சொல்லு போறேன்.."

"சரி உன் அறிவுக்கு எட்டுதான்னு பாரு. .இது ஒரு 3 டைமன்ஷன் ...  உனக்கு என்ன  தெரியுது ன்னு பார்த்து சொல்லு..."

"..........................(ரொம்பவும் கூர்ந்து கவனித்து -தேவையா????? )   எனக்கு ஒரு லேடி கோல்ட் கலர் துப்பட்டாவை கழுத்தில் மாட்டி நிற்கற மாதிரி இருக்கு... ம்ம்ம்ம்ம்.......சரியா.."

"ஹி ஹி......... இல்ல.."

"............. இல்லையா..?  (திருப்பி ஒரு கூர்ந்து) இண்டியானா ஜோன்ஸ் ல ஒரு கிரிஸ்டல் ஸ்கல் வருமே.. அது மாதிரி இருக்கு....'

"ஹா ஹா ஹா. .இல்லவே இல்ல.."

"......... கிர்ர்ர்ர்ர்ர்... ((திருப்பி திருப்பி...கூர்ந்து) ஒரு ரவுண்டு.. அதை உற்று பார்த்துக்கிட்டே வந்தா ஒரு புள்ளியா போயிக்கிட்டே இருக்கு உள்ள... "

"ஹா ஹா ஹா ஹா. .அம்மா ஆனாலும் நீ இருக்க.. பாரு. .நானு என்ன சொன்னேன் 3 டைமன்ஷன் தானே சொன்னேன்.. 3 இமேஜ் தெரியுதுன்னா சொன்னேன்.. . :)))) , அப்பவே சொன்னேன் கேட்டியா உனக்கு பீட்டர் புரியாதுன்னு 3 டைமன்ஷன்னு சொன்னதே உனக்கு புரியல.. :)) கிளம்பு..."

"..............?????? அப்ப நீயே சொல்லு உனக்கு என்ன தெரியுது.."

"ரூம் ல "tron ledacy" படம் பார்க்க போனப்ப ஒரு 3D கண்ணாடி கொடுத்தான் அதை போட்டு பார்த்து சொல்லு.."

அவன் ரூமுக்கு போயி அதை தேடி கண்டுப்பிடிச்சி கொண்டுவந்து போட்டு பார்த்தால்..................................... (ஒரு மண்ணும் தெரியல... :(()

"டேய்.. ஒன்னுமே தெரியலடா.. எனக்கு மயில் தாண்டா தெரியுது.."


"ஹா ஹா ஹா. .ஆமா மயில பார்த்தா மயில் தான் தெரியும்.. பின்ன வேற என்ன தெரியுமாம்..??"

" :(( அப்ப 3 டைம்னஷன் அது இதுன்னு சொன்ன??? "

"ச்ச்சும்மா..டைம் பாஸ்... :))))))) ரொம்ப சின்சியரா... கண்ணாடி எல்லாம் போட்டுட்டு வந்து பாக்கற..."

"கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.........7 1/2 ....புள்ளையாடா நீனு..???"

"ஒழுங்கா ஒன்னும் இல்லன்னு சொன்னா நீ போகமாட்ட.. அதான்..கொஞ்சம் அலைய விட்டேன். .இப்ப ஓடி போன்னு சொன்னா..ஓடிப் போவதானே.. ??? :))))))))))

" :((((( ம்ம்ம்ம்ம்.....போறேன்.......... "

***********

இன்னைக்கு பார்க்கிறேன்.. ஒரு டைகர்..படம் இருக்க.. ... "

"ஹை.. என் இம்சை தாங்காம மாத்திட்டியா.. ???"

தலையில் அடித்துக்கொள்கிறான்.. "ஏன்ன்ன்ன்ம்மா இப்படி இருக்க... ?? அது ஆட்டோமேடிக் ம்மா...தினம் மாறிக்கிட்டே இருக்கும்.. !!"

*****************

அணில் குட்டி அனிதா : ஹி ஹி..இதெல்லாம் ஒரு மேட்டரா அம்மணிக்கு????? எப்பவும் போல தொடச்சி விட்டுக்குவாங்க..!! விடுங்க விடுங்க..  !!

அப்பாளிக்கா மயில பத்தி சொல்லி.. நம்ம ப்ளாக் மயில் சொந்தக்காரங்களை  மறக்கலாமா ???? மயிலு ஆன்ட்டி வூட்டுக்காரு ராம் அங்கிள் & பொண்ணு பப்பு  பாப்பாவுக்கு இன்னைக்கு பிறந்தநாள்... அவங்களுக்கு ஹாப்பி ஹாப்பி பர்த் டே....சொல்லிக்கிறேன்...!

பீட்டர் தாத்ஸ் : “It requires a very unusual mind to undertake the analysis of the obvious.”

படங்கள் நன்றி கூகுல்.
.

சரியாத்தான் யோசிக்கிறேனா???

ஒரு வருடத்திற்கு முன் எழுதியது, இன்னும் பல வருடங்கள் சென்றாலும் பதிவிடலாம் என்றே நினைக்கிறேன். நம்முடைய வளர்ச்சி குறித்து எப்போதும் அடிமனதில் ஓடிக்கொண்டிருக்கும் சிலவற்றை எழுதி வைக்க  நினைத்ததின் தொகுப்பு.

அடிப்படையில் இருந்து ஆரம்பிக்க வேண்டியுள்ளது. முன்னேற்றங்கள் பல கண்டு இருந்தாலும் இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் இன்னும் அப்படியே உள்ளன. முக்கியமாக-

1.பொருளாதார ஏற்றத்தாழ்வை இப்போது இருக்கும் 20/80 லிருந்து 40/60 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்
2. எல்லோருக்கும் கல்வி - குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு வரையிலாவது குழந்தைகள் படிக்க வேண்டும், அதற்கு தேவையான அடிப்படை வசதி, அவேர்னஸ் குழுக்குள் அமைத்து கட்டாய கல்வி அடிப்படையில் குழந்தைகளுக்கு கல்வியின் பெருமையையும், அதன் பயன்பாட்டிலும் தேர்ச்சி அளிக்க வேண்டும்.
3. விவசாயத்தின் முக்கியத்துவம், அதற்கு இளைஞர்களின் பங்களிப்பை அதிகப்படுத்த வேண்டும். விளைநிலங்கள், வீட்டு மனைகள் ஆக்கப்படுவதை அறவே நிறுத்தவேண்டும்.
4. தொழிற்கல்வி, வேலைவாய்ப்பு பெருக தேவையாக தொழிற்கூடங்களை நிறுவ சிறிய/பெரிய முதலீட்டு முதலாளிகள் ஊக்கிவிக்கப்படவேண்டும்.
5. அடிப்படை வசதிகள்-தண்ணீர், சாலைகள், மின்சாரம், போக்குவரத்து வசதி சமனாக இருக்க வேண்டும்.
6. குறிப்பிட்ட சுற்றுவட்டத்துக்குள், மக்களுக்கு தேவையான அனைத்தும் கிடைக்க ஆவன செய்ய வேண்டும். எ.க. மாநகரத்திற்கு வந்தால் தான் இந்த வேலை நடக்கும் என்ற நிலை மாறவேண்டும்.
7. அரசு அலுவலங்களின் அடிப்படை வேலை முறை மாறவேண்டும். அவர்களின் வேலை நேரம், சம்பளம், மற்றும் infrastructure போன்றவை நல்ல தரத்திலும், அதை பயன்படுத்த தேவையான தேர்ச்சியையும் அவர்களுக்கு அளிக்க வேண்டும்.
8. துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அதற்கு தகுந்த ஊதியமும் வழங்கி துறை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவேண்டும்

இவற்றை போர்க்கால வேகத்தில் மிக மிக துரிதமாக, ஆனால் நெடுநாள் பயன்பாட்டின் அடிப்படையில் செய்து முடிக்க வேண்டும். அதற்கு நம் அடிப்படை அரசியல் முறை மாற வேண்டும். என்ன செய்யலாம் என்று யோசித்தாலும் அதை செயற்படுத்த தன்னலமற்ற நல்ல தலைமையும், அதிகாரிகளும் அதிகாரத்தில் இருக்க வேண்டும்.

9. நம் இரத்தத்தில் கலந்துவிட்ட கட்சி சார்ந்த/தலைவர்கள்/தனி மனித துதி பாடலும், பக்தியும் அதை சார்ந்த நம்பிக்கைகளும் அடியோடு மாற வேண்டும். அதற்கு நம் ஆட்சி முறைகளும் அவர்களை தேர்தெடுக்கும் முறைகளும் மாற வேண்டும். புதிய அரசியல் சட்டங்களை கொண்டு வர வேண்டும்.

ஜனநாயக நாடு என்று பேசிக்கொண்டு இருந்தால், நிச்சயமாக இன்னும் எத்தனை ஆண்டு காலம் போனாலும் நாமும் மாறாமல் நம் சந்ததியும் மாறாமல் இப்படியே தலைவர்கள் துதி பாடிக்கொண்டு குண்டு சட்டியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருப்போம். நெடுங்கால நோக்குடன் யோசனையும், அதன் வழி நடக்க தேவையானவற்றை செய்யவும் நம்மை நாம் தான் தயார் படுத்தவேண்டும்.

சென்ற பாராளமன்ற தேர்தலில், தெற்கு சென்னையில் மட்டும் 46 வேட்பாளர்கள் தேர்தலுக்கு நின்றார்கள், குறிப்பிட்ட முக்கிய 6 வேட்பாளர்கள் தவிர்த்து வேறு யாரையும் மக்களுக்கு தெரிந்து இருக்கவில்லை என்பது நிதர்சனம். இதனால் எத்தனை பேருக்கு நேரம் விரயம், வேலை பளூ, தேவையற்ற பண இழப்பு ? இதை எல்லாம் சரியான அரசியல் சட்ட அமைப்புகள் மட்டுமே கட்டுப்படுத்த முடியும். தேர்தலுக்கு நிற்கும் வேட்பாளர்களுக்கு சில தகுதிகள் வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டு செயற்படுத்தவேண்டும்.

அ. அடிப்படை கல்வி தகுதி
ஆ. வயது வரம்பு நிர்ணயிக்க படவேண்டும். வயதானவர்கள் Advisory Position னில் மட்டும் இருக்கும் படியாக வைக்கலாம், அதுவும், Rotation Basis & Department துறை சார்ந்தும் இருக்க வேண்டும்.
இ. தேர்தலுக்கு தான் நிற்கும் தொகுதியை பற்றிய அ முதல் ஃ வரையிலான விபரங்கள், அந்த வேட்பாளருக்கு தெரிந்து இருக்க நேர்முக தேர்வும், தேர்ச்சியுற்றவருக்கு தொடர்ந்து அதற்கான அடிப்படை தேர்ச்சியும் கொடுக்க வேண்டும். அதிலும் தேர்ச்சி அடைபவர்கள் மட்டுமே அடுத்தக்கட்டத்திற்கு போகவேண்டும்.
ஈ. அவரவர் தொகுதிக்கான நலத்திட்டங்கள் அடங்கிய தொகுப்பு, அதை செயற்படுத்தும் முறைகள்,கால அளவு, அதற்கு ஆகும் செலவு. செலவிற்கான முதலீட்டு திட்டம் போன்றவை, முன் திட்ட அறிக்கையாக அரசுக்கு ஒவ்வொரு வேட்பாளரும் அளிக்க வேண்டும்.
உ. நலத்திட்டங்களின் அடிப்படையில் ஒவ்வொரு வேட்பாளரும் அந்த துறை சம்பந்தப்பட்ட நிபுணர்களின் நேரடி அலசலின் கீழ் தேர்தெடுக்கப்பட வேண்டும்.
ஊ. தேர்ந்தெடுக்கப்படுபவர்களும், குறைந்த பட்சம் மூன்று அதிக பட்சம் ஐந்து கட்டமாக தேர்ந்தெடுத்தல் நல்ல தரமான தலைவர்களை நமக்கு அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

8. துறை சார்ந்த வேலைவாய்ப்பும் அதற்கு தகுந்த ஊதியமும் வழங்கி துறை சார்ந்த தொழில்களை ஊக்குவிக்கவேண்டும்

எந்த துறையில் படித்தாலும் ஐ.டி யை கண்மூடித்தனமாக நம்பும் நம் இளைஞர்களின் மனப்போக்கும் மாற வேண்டும். அதற்கு அவர்களுக்கு தேவையான வேலைவாய்ப்பையும், ஐ.டி க்கு நிகரான சம்பளம் மற்றும் வசதிகளையும் மற்ற துறைகளிலும் கொடுக்கவேண்டும். சாத்தியக்கூறுகள் உண்டு, ஆனால் அதற்கான முயற்சியில் இறங்கவில்லை என்றே சொல்லலாம்.

அரசு அலுவலங்களின் அமைப்பை நிச்சயமாக மாற்றியே ஆகவேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். தேவையான அடிப்படை வசதி, குடிநீர், சுத்தமான கழிப்பறைகள் வெளிச்சம் உள்ள விசாலமான அறைகள், காற்று, கணினி, மற்றும் இணையதளம். அரசு சார்ந்த எல்லா பணிகளும் கணினியின் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும். காகிதம் மற்றும் கையால் இன்னமும் எழுதிக்கொண்டு இருக்கும் நிலையை மாற்ற வேண்டும். ஆந்திர அரசு இதை 2003 ல் நிறைவேற்றி விட்டதாக நினைவு. அதாவது அரசு சம்பந்தப்பட்ட எல்லாமே அவர்கள் இணையத்தின் மூலமாகவே செய்யலாம். எல்லா அரசு அலுவலகங்களிலும் கட்டாய கணினி முறை செயற்படுத்தப்பட்டுவிட்டது. தேவையானவற்றிற்கு நேரடியாக போகவேண்டும் என்ற அவசியம் இல்லை. இது எல்லா மாநிலங்களிலும் செயற்படுத்த வேண்டும்.

இப்பவும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு நேரடியாக ஒவ்வொரு வீடாக சென்று விபரம் கேட்டு எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். எத்தனை நேர விரயம், எழுதுபவர் நாம் சொல்வதை புரிந்துக்கொண்டு எழுதக்கூடிய கல்வியறிவு பெற்றவராக இல்லை என்பது வருத்தமளிக்கிறது. மாநகரங்களில் இவற்றை கணினிமயமாக்க முடியும். இணையத்தில் நம்முடைய விபரங்களை பதிவிட முடியும். எப்போது இவை மாறும் என்பது கேள்வி குறியாகவே தான் உள்ளது.

அடுத்து, விவசாயம், சிவில், எலக்ட்ரிகல், மெக்கானிகல், லெதர், டெக்ஸ்டைல் பொருள் உற்பத்தி துறைகள், ஏற்றுமதி, இறக்குமதி, கல்வி என்று..இன்னும் எல்லா துறைகளிலும் நம் கவனத்தை செலுத்த வேண்டும், அதற்கு முக்கியத்துவம் கொடுப்பதோடு ஐ.டி க்கு நிகராக அவர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டும்,

உற்பத்தியும் அதன் ஏற்றுமதி யையும் உயர்த்தினால் ஒழிய அதிக ஊதியம்/வருமானம் பற்றிய பேச்சுக்கு இடமில்லாமல் போகும். சீனா இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவர்களுடைய பொருட்கள் உலக தரத்தில் இருக்கும், ஆனால் குறைந்த விலையில் கிடைக்கும். எப்படி இது சாத்தியம் என்று கவனித்தால், ஒரு பொருளை எடுத்தால் அதில் அவர்களின் உற்பத்தி கோடிக்கணக்கில் இருக்கும். 100 பொருளை தயாரிக்க தேவைப்படும் முதலீட்டிற்கும் 1000 பொருளை தயாரிக்க தேவைப்படும் முதலீட்டிற்கும் அதிக வித்தியாசம் இருக்காது. நம்முடைய பிரச்சனை இங்கே தரம் மற்றும் விலையில் வந்து நின்றுவிடும். ஆனால் சீனர்களின் பொருட்கள் உலக தரத்திலும் குறைந்த விலையிலும் இருப்பதால், உலக அளவில் வரவேற்கப்பட்டு விற்கப்பட்டுவிடுகிறது. அவர்களின் தயாரிப்பும் அதிகம் அதுனுடைய முதலீடும் குறைவாக உள்ளாது. எடுத்துக்காட்டாக,  துணி, மற்றும் ப்ளாஸ்டிக் பொருட்களை சொல்லலாம்.

உற்பத்தி ஏற்றுமதி தவிர்த்து, நம் அந்நிய நாட்டு தொழில் சார்ந்த கொள்கையை இன்னமும் எளிமை படுத்தி, முதலீடுகளையும் அதிகப்படுத்த வேண்டும். அந்நிய நாட்டு முதலீகளும் ஊக்குவிப்பும் எல்லா துறைகளிலுமே முக்கியத்துவம் வாய்ந்தது, அந்நிய முதலீடு என்றாலே அதற்கு முக்கிய தேவை நிரந்தரமான அரசாங்கம். அதன் அடிப்படையில் தான் அந்நிய முதலீடுகள் ஆரம்பிக்கின்றன. அரசாங்கம் அடிக்கடி மாறுவதும் அதனால் நம் வெளிநாட்டு கொள்கைகள்  மாறுவதும் மற்ற நாட்டவர் நம் நாட்டில் முதலீடு செய்ய தயங்குகிறார்கள். நிரந்ததரமான அரசாங்கம் என்பது சாத்தியம் இல்லை என்றாலும், ஆட்சிக்கு வந்தால், சில குறிப்பிட்ட வருடங்கள் அவர்கள் தான் தொடரவேண்டும் என்று இருந்தால் கூட, தேவையற்ற தேர்தல், அதற்கான சதித்திட்டங்கள், பிரச்சனைகள் தவிர்க்கப்படும்.  அத்தோடு, ஆட்சியாளர்களின் கை அதிகம் ஓங்காமல் இருக்கவும் கட்டுப்பாடுங்கள் இருக்கவேண்டியது அவசியம் ஆகிறது.

அந்நிய முதலீடுகளை அதிகப்படுத்துவதன் மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கப்பெறும். பண வரத்து புழக்கம் அதிகமாகும். இதில் குறிப்பிட்டு கவனிக்க வேண்டியது, அந்நிய நாட்டு முதலீடுகள் எளிமையாக இருந்தாலும், நம் பிடி அதில் இருக்க வேண்டும். ரொம்பவும் வளைந்து கொடுத்தாலும் திரும்பவும் அவர்கள் நம்மை ஆள நாமே வசதி செய்துக்கொடுப்பதாக ஆகிவிடும். அந்நிய முதலீட்டு கொள்கைகள் சிலவற்றை உள்நோக்கி பார்க்க தனியாக தான் பதிவிட வேண்டும்.

தொடரும்...

அணில் குட்டி அனிதா : என்னது தொடருமா? அம்மணி போன எம்.பி தேர்தல் முடிஞ்சவுடனே எழுதினீங்க போல இது... இதையே இப்பத்தான் போஸ்ட் பண்றீங்க. .அப்ப அடுத்தது...??? .. ஆண்டவா..... ஆ...

பீட்டர் தாத்ஸ் : Our goals can only be reached through a vehicle of a plan, in which we must fervently believe, and upon which we must vigorously act. There is no other route to success.

படம் : நன்றி கூகுல்

கிளிக் கிளிக் கிளிக்.....

1. நேற்று நல்ல மழையில் கடலூர் பயணம். மழையில் ரசித்தவை....



2. இரண்டு கரைத்தொட்டு ஓடும் ஆறு.. மடையில் வழிந்து புரண்டு ஓடும் அழகு :) இதன் சத்தம் இரவில் சுற்றுவட்டத்தில் 3 கிமி தூரத்திற்கும் மேல் கேட்குமாம்.


3. மழையில் மூழ்கிக்கிடக்கும் முக்கால் பகுதி விளைந்துவிட்ட பயிர்கள்.. :( நீர் வடிந்து விட்டால் இப்போதுக்கூட பயிர்களை காப்பாற்றமுடியும் என்றார்கள்....


4. மேகமும், இருட்டும், நடுவே கொஞ்சம் வெள்ளை வானமும்..


5. மும்பையில் மரத்தால் செய்யப்பட்ட கை மிஷனை க்கொண்டு கரும்பு சாறு பிழியும் பெண். இரண்டு பக்கமும் திருகு போன்ற அமைப்புடைய மரத்துண்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நடுவில் கரும்பை சாறு எடுக்க விடவேண்டும். ஒரு மரத்துண்டு அசையாது வைக்கப்பட்டுள்ளது, சுற்றக்கூடிய மற்றொரு திருகு மரத்துண்டோடு, மேற்புறமாக செருகப்பட்டுள்ள நீண்ட மரத்தால் ஆன கைப்பிடியை ஒருவர் சுற்றுகிறார். :) சூப்பர் ஜூஸ் & சூப்பர் மேனுவல் மிஷன்.. :)


6. அடையாரில் எங்களுக்கு முன்னால் வண்டியில் சென்றவர்கள். நித்தயமல்லியை மிக நேர்த்தியாக ஆரஞ்சு கலர் திடமான நூலால், பின்னல் (எப்போதும் கட்டும் முறையாக தெரியவில்லை) போன்று தொடுத்து இருந்தார்கள்.  அழகு... :)

படங்கள் மொபைலில் எடுத்தது.

அணில் குட்டி அனிதா : உம்ம்... ஒரு பிரபல ஸ்டார் பதிவரை கடலூர் ரில் சந்திச்சிங்களே ..அதைப்பத்தி..............

பீட்டர் தாத்ஸ் : “A person is neither whole nor healthy without the memories of photo albums. They are the storybook of our lives. They provide a nostalgic escape from the tormented days of the present.”
.

கவிதா - அம்மா - மிஷ்கின் ...

இந்த படத்தை பார்ப்பதற்கு முன் எந்த விமர்சனத்தையும் படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தாலும், ரீடரில் கண்ணில் படும் பதிவுகள் எல்லாம், இந்த பட விமர்சனமாக இருக்க, கடைசி வரியை மட்டும் படிக்குமாறு பார்த்துக்கொண்டேன். அதில் ஆதிஷா வின் கடைசி வரியை படிக்கும் போது, "அம்மா" பற்றிய கதை என்று புரிந்தது. அம்மா சம்பந்தப்பட்ட படம் என்றால், நாம பார்க்கமுடியுமா, என்ற எண்ண ஓட்டம் இருந்துக்கொண்டே இருந்தது....

அம்மா இல்லங்கற காம்ப்ளக்ஸ் நிறைய இருக்கு.. அது நெகட்டிவாக போயிட க்கூடாதுன்னு நானே எனக்கு கவுன்சலிங் கொடுத்து கொடுத்து, அம்மா இல்லைன்னா என்ன? என்னால் தனியா செய்துக்க முடியும்...னு செய்து செய்து.. :)) எதையும் செய்ய முடியும் ங்கற தன்னம்பிக்கை நிறைய வளர்ந்துடுச்சி.! எங்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை இல்லையா ன்னு, அம்மா இருங்கவங்க எல்லாம் வந்தால், க்யூல வாங்க.. உட்கார்ந்து பேசுவோம். .டீல முடிப்போம்..!!  சரி, இப்ப காம்ப்ளக்ஸ் போயிடிச்சான்னு கேட்டீங்கன்னா.. சில உதாரணம் சொல்றேன்.

இந்த பக்கம், அந்த பக்கம் வீடுகளில் அம்மாக்களின் படையெடுப்பு நடந்து, பெண்கள் ரொம்ப ஓய்வாக, அம்மா சமைத்துப்போட்டு சாப்பிட்டு, அவங்க மடியில் படுத்தாலோ, தலைவாரிக்கிட்டாவோ,  இவங்க குழந்தைகளுக்கு லீவு விட்டால் போதும்னு அம்மாவீட்டுக்கு மாசக்கணக்கில் போனாலோ.. யாரோ கொள்ளிக்கட்டைய என் இரண்டு காதுலேயும் சொருகின மாதிரி புகை வரும் பாருங்க.. ஹும்ம்ம்.!!  இரண்டு பேருக்குமே இன்னைய வரைக்கும் நடுவீட்டில் இப்படி ஒரு வயத்தெரிச்சல் கேஸ் இருக்காள்னு தெரியாது. அவ்வளவு ஏன் என் நெருங்கிய நண்பர்கள் அம்மாவின் மேல் பாசத்தை கொட்டும் போதோ, அவங்க அம்மாக்கள் இவிங்க மேல பாசத்தை கொட்டும் போதும்.. வெளியில் ரொம்ப நல்ல பெண்ணாக :)  உள்ளுக்குள்ள ஒரே புகைச்சலோட இருப்பேன்.. :( . பாவம் இதெல்லாம் இப்ப வரைக்கும் எந்த நண்பர்களுக்கும் தெரியாது. .ஹி ஹி.. :))  I am a Fraud !!

ம்ம்ம்.. தலைப்புக்கு வருவோம். நந்தலாலா.. அம்மாவை பிரிந்த அந்த இரண்டு குழந்தைகளின் மனநிலை என்னை ஒத்தே இருந்ததால், ரொம்ப மனதை பாதித்தப்படமாக இருந்தது. கண்களில் வரும் கண்ணீரை நிறுத்தவே முடியாமல், உள்ளிருந்த வலிகள் அத்தனையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது. காரணக்காரியங்கள் எதுவாக இருந்தாலும், அம்மா இல்லாமல் வளரும் எல்லா குழந்தைகளின் மனநிலையும், ஏக்கங்களும், எதிர்ப்பார்ப்புகளும், கோவங்களும், வெறுப்புகளும், அழுகையும், ஆத்திரமும், தேடுதலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை பல தடவை உணர்ந்திருந்தாலும், இந்த படத்தில் அப்படியே தெரிந்தது, வலித்தது.

மனதை பாதித்த பல படங்கள் வந்துள்ளன, "அன்பே சிவம்" என்ற படத்தில் கூட இரண்டு பேர் பயணத்தின் நெடுகிலும், பல மனிதர்களை, நிகழ்வுகளை சந்திப்பார்கள். மேக்கப் போட்ட கதாநாயகி, கதாநாயகன், டூயூட் , காதல், முத்தங்கள், அன்பு என்ற பலவும் இருந்தது. அதைத்தாண்டி ஒரு சினிமாத்தனம், ஒரு பகட்டு இருந்தது. கடைசியில் சொன்ன இரண்டை தவிர்த்து, மற்றவை எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது, காதல், முத்தம், அன்பு, உண்மை, மனிதம்,  இவற்றின் ஊடே மிக யதார்த்தமான இரண்டு குழந்தைகளின் பயணம் காட்டப்பட்டுள்ளது..

சந்தானம், விவேக், வடிவேலு என்று யாருமே இல்லாமல், படம் முழுக்க நகைச்சுவை. சிரிப்புக்கூட, வெடிசிரிப்பாக சத்தம் போட்டு சிரிக்கவைத்த காட்சிகள் படம் முழுக்க வருகின்றன,  சிரித்துக்கொண்டு இருக்கும் போதே.. நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது, கண்ணீர் மறையுமுன் மீண்டும்  சிரிக்க வைக்கிறார்கள். இவை எல்லாமே மேலோட்டமாக இல்லை, உள்ளிருந்து வருகிறது. மாறி மாறி அழுகையும் சிரிப்புமாக இப்படி ஒரு திரைக்கதை ???? இதுவரையில் எந்த ப்படத்திலும் பார்த்திராத ஒரு திரைக்கதையை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.

கதாப்பாத்திரங்களில் முன்னனி கதாநாயகி/கதாநாயகன் என்று யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என,  நடிப்பை பிழியோ பிழியோ என்று பிழிந்து, நம்மையும் சக்கையாக பிழிந்து எடுத்து இருப்பார்கள். நல்லவேளை இயக்குனர்,  மிக மிக இயல்பாக நடித்து அசத்திவிட்டார்.

இசைஞானி : வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கனும். படம் முழுக்க பயணம் செய்து இருக்காரு..அதுவும் பல இடங்களில் நம்மை இசை தாலாட்டுது.  டைட்டில்ஸ் போடும் போதே... மயங்க வைக்கறாரு..  சலனம் அதிகமில்லாத ஓடை நீரில் கண்ணை மூடி படுத்திருக்க, தென்றல் வந்து நம்மை வருடிக்கொண்டே இருப்பது போன்ற சுகம்,   இப்படி ஒரு இசையை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டதோ..?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே....அன்பு ஒன்னு தான் அனாதையாய்.......  :))  ஜேசுதாஸ்..  Dedicating to me


படத்தின் தயாரிப்பு :  நம்ம சங்கர் சார் ஒரு பாட்டுக்காக செலவு செய்யும் பணத்தில், இப்படிப்பட்ட படங்கள் 3-4 எடுத்துடலானு நினைக்கிறேன்.

இயக்குனருக்கு சொல்ல நினைப்பது, பேன்ட் பெல்ட் போட பல மைல் தூரம் பல மனிதர்களை கடந்து வந்த பிறகு, ஒரு பெண்ணால் போடப்படுவது கொஞ்சம் மனதை நெருடுகிறது... அதுவரையில் ஏன் யாருக்கும் அது தோன்றவில்லை... ?

இது வரையில் திரைவிமர்சனம் "பார்வைகளில்" எழுதியதே இல்லை. எழுதுவது இல்லை என்ற நிலையை மாற்றிய படம் இதுவாகதான் இருக்கும். :)

அணில்குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்... ஆத்தா.. முடியல ஆத்தா. .எழுதாத வரை நாங்க எல்லாம் நிம்மதியாக இருப்போம். எதையும் நீங்க புதுசா ஆரம்பிக்காதீங்க...

பீட்டர் தாத்ஸ் :  Amma, I love you !

அழகி நீ பேரழகி அழகான கண்ணழகி...

வேளச்சேரி - தாம்பரம் சாலை,  இந்த சாலையில் ஹால்டாவிலிருந்து பள்ளிக்கரணை வரை பிரச்சனை ஒன்றும் இல்லை. பள்ளிக்கரணையை தொட்டு விட்டால், சாலை ஓரங்களில் மட்டுமல்ல நட்ட நடு ரோடில், சாலையை இரண்டாக பிரித்து கட்டியிருக்கும் சின்ன சுவர்களின் பக்கத்திலும், நடுவே திரும்பும் வளைவுகளிலும், ஒன்று இரண்டு இல்லை, கூட்டம் கூட்டமாக மாடுகள் அமர்ந்திருக்கும் அல்லது மேய்ந்துக்கொண்டு இருக்கும்.

இவை 24 மணி நேரமும் சாலைகளிலேயே தான் இருக்கின்றன.  இது பள்ளிக்கரணையிலிருந்து, கிழக்கு தாம்பரம் வரை தொடர்கிறது. மேடவாக்கம் வரை அதிகமாக காணப்படும் இந்த மாடுகள் கூட்டம், கிழக்கு தாம்பரம் நோக்கி செல்ல செல்ல குறையும். ஆங்காங்கே ஒன்றிரண்டு பார்க்கலாம்.. ஆனால் இல்லாமல் இருக்காது.

எப்போது விழுப்புரம் செல்ல வேண்டி இருந்தாலும், தாம்பரம் ஸ்டேஷனில் வண்டியை விட்டுவிட்டு அங்கிருந்து பேரூந்தோ ரயிலோ பிடிப்பது வழக்கம்.  ஒரு நாள் விடியற்காலை 4 மணிக்கு கிளம்பி போகவேண்டி இருந்தது. பள்ளிக்கரணை தாண்டி செல்லும் போது கவனிக்கிறேன், அந்த மாடுகளின் எஜமானர்கள் மாடுகள் எங்கு நின்றிருக்கிறதோ அங்கேயே அவற்றிக்கு வைக்கோலை போட்டு, மடியைக் கழுவி,  பால் கறந்து க்கொண்டு இருக்கிறார்கள். சாலையின் ஓரத்திற்கு அழைத்துச்சென்று கூட இதை செய்யவில்லை. மாடுகள் நிற்கும் இடங்களிலேயே நடந்துக்கொண்டு இருந்தது.

நிஜமாகவே இவர்கள் தான் அந்த மாடுகளுக்கு சொந்த க்காரர்களா என்ற சந்தேகம் கூட வந்தது. 24 மணி நேரமும் தெருவில் இருக்கும் மாடுகளுக்கு யார் வேண்டுமானலும் சொந்தக்காரர்களாக ஆகலாம் அல்லவா? எனக்குமே ஏன் நாமும் விடியற்காலையில் போயி ஒரு படி பால் கறந்து கொண்டுவரக்கூடாது என்று தோன்றாமல் இல்லை. 

மாடுகளை சாலையில் அதுவும் ரொம்பவே போக்கவரத்து அதிகம் உள்ள சாலைகளில் பொதுமக்களுக்கும் வாகனங்களுக்கும் தொந்தரவு தரும் படி விட்டுவைப்பது குற்றம், இதில், அங்கேயே அவற்றிற்கு சாப்பாடு கொடுத்து, துணிமணி கொடுத்து, தூங்க சொல்லுவதும், பாலை- ஆள் அரவமற்ற விடியற்காலை பொழுதுகளில் வந்து கறந்து சென்றுவிடுவதும் எத்தனை அயோக்கியத்தனம்.

இந்த பகுதி மக்கள் இதற்காக எதுவும் செய்தால் நலமாக இருக்கும். பாவம் வாயில்லாத ஜீவராசிகள் பெரிய வாகனங்களில் மோதி அடிபடவும், இறந்து போகவும் நிறையவே வாய்ப்பிருக்கிறது. இரண்டு சக்கர வாகனங்களில் செல்வர்களும், இவற்றின் மோதாமல் போகவேண்டுமென விபத்துக்குள்ளாகும் சம்பவங்களும் நடக்கின்றன.

பள்ளிக்கரணை சென்னை மாநகராட்சி க்கு உட்பட்டது இல்லை, காஞ்சிபுரம் மாவட்டத்தின் கீழ் வருகிறது. இணையத்தில் தேடியதில் கிடைத்தது, இந்த இமெயில் அட்ரஸ்- collrkpm@tn.nic.in, இவருக்கு, மாடுகளை அகற்றுமாறு ஒரு கடிதம் எழுதி இருக்கிறேன். என்னால் முடிந்தது இதுவே. சென்னை மாநகராட்சி சம்பந்தபட்டு இருந்தாலும், புகார் கொடுத்தாலும், அதற்கான சேவையை உடனே அல்லது எப்போதாவது செய்வார்கள் என்ற நம்பிக்கை துளியும் இல்லை. அதில் அனுபவமும் உள்ளது. இருப்பினும்,  "கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே" , ஒரு சமயம் இல்லையேல், ஒரு சமயம் யாராவது கண்டுக்கொள்வார்கள் என்ற அல்ப நம்பிக்கையில், இந்த புகாரையும் எப்போதும் போல் கொடுத்துள்ளேன். பார்க்கலாம்.


இதை ப்படிப்பவர்கள், பள்ளிக்கரணை - கிழக்கு தாம்பரம் சாலையில் நடுரோடில் 24 மணி நேரமும் சுற்றிக்கொண்டு இருக்கும் மாடுகளை அகற்ற, ஏதேனும் நடவடிக்கை எடுக்க  உதவி செய்தால் நலம். அல்லது யாரை அணுகவேண்டும் என்று சொன்னால் என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

இதே போன்று வீடு கட்டுபவர்கள், மணல் ,ஜல்லி, செங்கல் போன்றவற்றை நடுரோட்டில் கொட்டி வைத்து, என்னவோ சாலை அவர்களுக்கு மட்டுமே சொந்தம் என்பதை போல் பயன்படுத்துக்கிறார்கள், இப்படி எல்லாம் செய்யாவிட்டால் நம்மை இந்தியர்கள் என்று யாரும் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் போலவே.

 இது நம்ம ஊரு மாடுகளுக்கு...


அணில் குட்டி : கவி க்கு வர வர கைத்தொழில் அதிகமாயிட்டே போகுது... ம்ம்..  இந்த பதிவை பிரண்ட் ஸ்கிரீன் எடுத்து வச்சிக்கோங்க மக்கா.. பள்ளிக்கரணை பக்கம் எந்த மாட்டுக்கிட்டவாச்சும், பால் மிஸ் ஆச்சின்னா.. கவி ய வந்து பிடிங்க....... அம்மணி க்கு அந்த மாடுங்க ரோடுல சுத்தறது மேட்டர் இல்ல... பாலை எப்படி கறந்து விக்கறது ங்கறது தான் இப்ப மேட்டரே.. புரியுதா..?

பீட்டர் தாத்ஸ் : “Some roads aren't meant to be travelled alone”


படங்கள் : நன்றி கூகுல்.

மீசை

மீசை மேல எப்பவும் எனக்கு ஒரு கண்.. :). கொஞ்சம் வித்தியாசமாக மீசை வைத்து இருப்பவர்களை பார்த்தால், எப்படி இதை வைக்கறாங்க.. மெயின்டெயின் பண்றாங்கன்னு யோசிப்பேன்.  அப்பா, தாத்தா சவரம் செய்யும் போது கிட்டவே உட்கார்ந்து ரொம்ப கூர்ந்து கவனிப்பேன்.  தாத்தா கீழே உட்கார்ந்து தான் செய்வார். தாத்தா சவரப்பெட்டிய கொண்டுவந்தாலே... தாத்தா "சவர கல்யாணம்" ஆரம்பிச்சிட்ட்டார் ன்னு குரல் கொடுப்போம், அவ்வளவு நேரம் ஆகும். சவரம் செய்ய அப்பாவும் தாத்தாவும் சவரக்கத்தியை தான் பயன்படுத்துவார்கள். கத்தின்னா அது கத்தி! அவ்வளவு கூர்மையாக இருக்கும், என்னை தொட விடமாட்டார்கள், பார்க்க மட்டுமே அனுமதி. அதை துடைத்து, பேப்பரில் சுற்றி, துணியில் சுற்றி, அதற்கான கவரில் போட்டு, ஒரு பெட்டியில் வேறு வைப்பார்கள். ரேஸரில் அண்ணன் தான் ஷேவ் செய்துக்கும்.

எங்கள் வீட்டில் இடுப்பு வரையிலான முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். அப்பா அங்கு நின்றுக்கொண்டே ஷேவ் செய்வார். நான் கண்ணாடிப்பக்கமாக நின்று அவர் ஷேவ் செய்வதை பார்ப்பேன். தாத்தாவும், அப்பாவும்  மீசை சரியாக இருக்கிறதா என்று பெரிய மனுஷியான என்னிடம் கேட்பார்கள். நானும் சரியாக சொல்லுபவளாக இருந்து இருக்கிறேன், இல்லைன்னா வீட்டில் உள்ள அத்தனை பேரை விட்டுவிட்டு என்னை கேட்பார்களா..?  பாருங்க சின்ன ப்புள்ளையிலேயே எம்புட்டு புத்திசாலியா இருந்து இருக்கேன் ன்னு ??! சரி.. சரி...நோ புகைச்சல்.... அதெல்லாம் பிறவியிலேயே இருக்கனும்.. நீங்க யாரும் வருத்தப்படக்கூடாது. ஏன்னா இப்ப என் கணவருக்கும் நானே சொல்கிறேன். (பாவம் அவர் தலையெழுத்து.. வேற யார் கிட்டத்தான் கேட்பாரு? )
இதுல இரண்டு பேருமே ரொம்ப மெல்லிய மீசை மேல் உதட்டை ஒட்டிய மாதிரி வைப்பாங்க.. தாத்தா ஒரு காலக்கட்டுத்துக்கு மேல முழுசும் சவரம் செய்ய ஆரம்பிச்சிட்டாரு. அப்பா அப்படி மீசையை வைக்கும் போது, ரொம்ப கவனமாக கத்தியை பயன்படுத்துவார், நான் உற்று கவனிப்பேன்,  விட்டால் அவர் முகத்தோட ஒட்டிக்கற மாதிரி கவனிப்பேன். சில சமயம் திட்டி, தள்ளி நில்லு பாப்பா, கத்தி பட்டுட போகுதுன்னு சொல்லுவாங்க. என்னவோ அவர் மீசையை சரி செய்வதை பார்ப்பதில் அவ்வளவு ஆர்வம். இதில் இடது, வலதில் கடைசியில் செய்யும் போது வாயை ஒரு மாதிரி கோணி செய்வார். அப்போது முகம் அஷ்ட கோணலாக இருக்கும், அதை பார்த்து ரிஜிஸ்டர் செய்துக்கொண்டு, அப்பா முடித்தவுடன், அப்பா நீங்க ஷேவ் செய்யறப்ப இப்படித்தான் முகம் இருந்தது என நானும் வாயை கோணிக்காட்டுவேன். தாத்தா மட்டும்.. "இந்த குட்டி என்னா கிருவி" யா இருக்காளே..அவங்கப்பன் கிட்ட எல்லாரும் நின்னு பேசவே பயப்படுவாங்க.. இவ மட்டும் பயமத்து திரியறாளே.. பத்தா (பத்மா), இதெல்லாம் நீ கொஞ்சம் சொல்லக்கூடாது" ன்னு ஆயாவிடம் சொல்லுவார்.  தாத்தா நீங்க கூட ஷேவ் செய்யும் போது அப்படித்தான் கோணறீங்க ன்னு சொல்லிவிட்டு செல்வேன். :)

மீசை என்பது ஆண்களுக்கு ஒரு பெரிய விஷயம் என்பதாக எனக்குப்பட்டது. அதற்காக நேரம் ஒதுக்கி, அதை சரியாக வைத்துக்கொள்ள பெரும் பாடுபடுவதாக தோன்றும். அலுவலகங்களில் என்னுடைய நண்பர்களும் மீசை க்கு நிறைய முக்கியத்துவம் கொடுப்பார்கள். பள்ளி பருவத்தில் என்னுடன் படித்த பிள்ளைகளுக்கு மீசை வர ஆரம்பித்து இருந்தால், அதை நன்றாக, பெரியதாக வளர்க்க பெரும்பாடு படுவார்கள். மீசை தான் அவனை ஆணாக பிரதிபலிப்பதாக நினைக்கிறார்கள் என்றே எனக்கு தோன்றும். பள்ளியில் எங்களின் சீனியர் அக்கா ஒருவருக்கு மீசை இருக்கும். அவரை "அந்த மீசை அக்கா: என்று அட்ரஸ் செய்வோம். இப்போது நினைத்தால் கவலையாக இருக்கிறது, அவரின் மனது வேதனைப்பட்டு இருக்கும். அப்போது எல்லாம் இப்படி அழகு நிலையங்கள் இல்லை. அத்தோடு, கம்பியூட்டர் க்ளாஸ் போக பஸ் ஸில் போகும் போது, தினம் அதே பஸ்ஸில் வரும் ஒரு தோழிக்கும் மீசை இருக்கும். :( இந்த பெண் மிகவும் கலராக வேறு இருப்பார், அதனால் பளிச்சென்று தெரியும். அதைப்பற்றி பேசவும் தயக்கமாக இருக்கும். அதை காட்டிக்கொள்ளாமல் பேச மிகவும் முயற்சி செய்வேன்.

அதே சமயம் வெளிநாடுகளில், வட இந்தியாவில் மீசை இல்லாமல் தான் ஆண்கள் இருக்கிறார்கள்.  சிலருக்கு மீசை ரொம்பவே அழகைத்தரும், சிலர் மீசை இல்லாமல் தான் அழகாக இருப்பார்கள். மீசை இல்லாதவர்கள் முகம் இன்னமும் இளமையாக தெரியும்.  எனக்கு கொஞ்சம் அறிமுகம் ஆகி பழகி இருந்தாலே போதும், அவரிடம் அவரின் மீசை யை பற்றி சொல்லாமல் இருக்கவே மாட்டேன்.. :). அவங்க என்னைப்பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதைப்பற்றி கவலைப்படாமல், மனதில் நினைப்பதை சொல்லிவிடுவதும் பழக்கமாக இருந்தாலும், இந்த மீசை விஷயத்தில் மட்டும் என்னவோ ரொம்பவே ஓவர்.

தென் இந்தியாவில் கடவுள்'களுக்கு மீசை இல்லை. அதாவது சிவன், பெருமாள், கனேஷ், முருகன் & குடும்பத்தில் யாருக்கும் மீசை இல்லை. அதுவே வட இந்தியாவில் சிவனுக்கு மிசைவைத்து இருக்கிறார்கள். பூரி கோயில் ஜெகனாத்' க்கு மீசை இருக்கிறதா என்ற சந்தேகம், உதட்டை அப்படி வரைந்து இருக்கிறார்களா இல்லை மீசையா என்று தெரியவில்லை.  இருப்பினும், வட இந்திய க்கோயில்களில் சிவனை மீசையோடு பார்க்கும் போது ஒரு அந்நியம் தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை. நாம் வழிவழியாக பார்த்த உருவம் வேறு மாதிரி தெரியும் போது அதை உடனடியாக எளிதில் எடுத்துக்கொள்ள முடிவதில்லை. தவிர்த்து நம் அய்யனாரும்,  சார்ந்த கடவுளர்களும் மீசை வைத்துக்கொண்டுத்தான் இருக்கிறார்கள்.

எனக்கு மீசை என்றாலே அப்பாவின் மீசை தான் முதலில் நினைவுக்கு வரும். பிறகு சார்லி சாப்ளின், ஹிட்லர், பாரதியார், கமலின் எல்லா மீசைகளும் பார்க்க பிடிக்கும், ரஜினி, வீரப்பன், மாபோசி & காந்திஜி. மீசை இல்லாதவர்களில் நெதாஜி , நேரு மாமா, தில்லு முள்ளு ரஜினி.

மீசை என்பது எதன் அடையாளம் என்று தெரியவில்லை. அதற்கு ஏன் பலர் ரொம்பவே முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்றும் புரிவதில்லை. :) தெரிந்தவர்களை விளக்கச்சொல்லி கேட்கவே இந்த பதிவு.


அணில் குட்டி : ஹி ஹி..அம்மணி ரெம்ப பிடிக்கும்னா... நீங்க வேணா மீசை வளத்துக்கோங்களேன்... ... :))


பீட்டர் தாத்ஸ் : “A man without a mustache is like a cup of tea without sugar” 

உள்ளே..... வெளியே.......

:))) சிலரோட சமூக அக்கறை.. தாங்ங்ங்க முடியலைங்க........... :))))))), சிரிக்கத்தான் முடிகிறது !! என்னமா சமுகத்தின் மேல் இருக்கும் தன் அக்கறையை தன்னுடைய (சிலமுறை பலமுறை படிக்கப்பட்டு, திருத்தப்பட்டு...டம்மா டம்மா டம டம டம்மா....) எழுத்தின் மூலம் கொட்டிக்காட்டறாங்க.. ..ஸ்ஸ்யப்பா...

ம்ம் அதையெல்லாம் படித்த பிறகும் நாம் திருந்தாட்டி.. நாம எல்லாம் மனுஷங்களே இல்லை. .இந்த சமூகத்தில் வாழவே தகுதியில்லாதவர்கள். அப்படி யார் என்ன எழுதிட்டாங்கன்னு கேட்டீங்கன்னா...  அதை எல்லாம் சொல்லி தெரியப்படுத்தற அளவு நமக்கு அறிவு இல்லைங்க.. .. வெளி உலகத்தில் (அழகிய) முகத்தை காட்டியும்..  உள்ளுக்குள்ள  (அழுகிய) வேறு முகத்தோடையும் இருப்பவர்களுக்கான, அறிவையும் சாமர்த்தியத்தையும் கடவுள் நமக்கு கொடுக்கல'ன்னு சொல்ல வந்தேன்.. .நிறைய மனிதர்களிடம் இதை கண்டுவிட்டேன் என்றாலும் சிலரின் நடிப்பை பார்த்து, என்னை மறந்து, வியந்து வாய் பிளப்பதில் கொசு உள்ளே சென்று குட்டி போட்டு இனப்பெருக்கும் கூட செய்துவிடுகிறது... அதற்கு கிடைத்த சான்ஸை அது சரியாக பயன்படுத்திக்குது.. :))).

இப்படி பார்த்து பார்த்து, ஏன் மனிதன் இப்படி முகமூடி மாட்டி திரிகிறான் என்ற கேள்விக்கு விடைத்தெரியாமல்.. இப்படி இருந்தால் தான் வாழமுடியும்..?? இல்லை வாழ்க்கை என்பதே முகமூடிகளுடன் கூடியதா? அல்லது இப்படி வாழ்ந்தால் தான் சந்தோஷமாக வாழ முடியும் என்ற நம்பிக்கை மனிதனுக்கு இருக்கிறதா என்ற சந்தேகமும் இருக்கிறது.

சரி அதை விடலாம்...பிரச்சனையும் கோபமும் - சமூக அக்கறையை, தன்  எழுத்தின் மூலம் தானாக பறைசாற்றுபவர்கள் மேலில்லை.. அதனை படித்து "ஆஹா ஓஹோ..என ஜல்லி அடித்து, நீ ஒரு அது.. நீ ஒரு இது.. " என ஏற்றிவிடுவதால், இந்த வேஷதாரிகள் இன்னமும் தன் முகத்தை அழகாக க்காட்டிக்கொள்ள  என்னென்ன முடியுமோ அத்தனையும் தங்கள் எழுத்தில் கொண்டு வருகிறார்கள்... :))  அதே சமயம், அவர்களின் "அழுகிய" முகம் தெரிந்த நமக்கு, கருமம் சகிச்சிக்க முடியல.!!  பாருங்க இப்படி எல்லாம் எழுத வேண்டி வந்துடுது.. !!

இப்படிப்பட்டவர்கள் வளர்வதால் என்ன பயன்னு ஓரமா உக்காந்து யோசிச்சி ப்பார்த்தேன்...  முதலில் தோன்றியது.. நல்ல அரசியல் வாதியாக வரலாம். .அப்பத்தான் "உள்ளே வெளியே" விளையாட்டு மிகச்சரியாக மக்களுக்கு சந்தேகம் வராமல் செய்து நம் நாட்டையும் மக்களையும் சமுக அக்கறை என்ற பார்வையில் எளிதாக ஏமாற்றமுடியும். இவர்களை போன்று வளர்ந்தவர்கள் தான் அரசியல்வாதிகளோ என்ற கேள்வியும் எழாமல் இல்லை. நல்ல அரசியல் செய்ய இந்த "உள்ளே..வெளியே" குவாலிட்டி இருந்தால் போதும் என்றே தோன்றுகிறது. அதாவது எத்தனை கேவலமான மனமும் குணமும் நடத்தை இருந்தாலும், வீட்டைவிட்டு வெளியில் வந்தவுடன், ஒரு மந்தகாச புன்னகை ஏந்திய முகமும், பார்ப்பவர்கள் ஆச்சரியப்பட்டு பூரித்து பொங்கி வழியும், பேச்சும் நடத்தையும் கண்டிப்பாக வேண்டும். இதை தொடர்ந்து செய்பவர்களை பார்த்து.. ஹி ஹி. .எனக்கு ரொம்ப பொறாமையாக இருக்குங்க..!! :))

அடுத்து, இவர்களை பார்த்து வளரும் இவர்களது குழந்தைகள் எதிர்காலத்தில் இவர்களை விட தில்லாலங்கடிகளாக வந்துவிடுவார்கள், அல்லது இரட்டை வேஷத்தை பார்த்து சகித்துக்கொள்ள முடியாமல், மன அழுத்ததில் சமூகத்தில் ஒன்றாமல் தனித்து நிற்கக்கூடிய சூழலுக்கு தள்ளப்பட்டு,  பெற்றவர்களை வெறுப்பது போல சமூகத்தையும் வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.

மூன்றாவது, இவங்களால பலருக்கு பொழுதுப்போக்கு, இப்ப என்னையே எடுத்துக்கோங்களேன். .இவங்க எழுதறதை எல்லாம் பல நேரம் படிக்கறது இல்லை என்றாலும், வலிந்து என் வாசலில் வந்து நிற்கும் சில எழுத்துக்களை படிக்கும் போது, இப்படியும் மனிதர்கள் என்று இன்னமும் மனிதர்களின் மேல் உள்ள நம்பிக்கை குறைந்து, இப்படி எழுதி என் பொழுதை கழிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறேன். 

நான்காவது, தன் முதுகில் இருக்கும் அழுக்கை யாராலும் பார்க்க இயலாது என்ற பழமொழி இப்படிப்பட்டவர்களால் உறுதியாகிறது. :)))

ஐந்தாவது, என் எழுத்தை படித்து பார்த்து, நான் இப்படித்தான் என்று, முன் முடிவு செய்து அதற்கு தகுந்தார் போன்று பேசி, நடந்து என் மனதை புண்படுத்திய நல்லவர்களும் நினைவுக்கு வருகிறார்கள்.

எழுத்து என்பதை நம்மை தனிப்பட்ட முறையில் யூகிக்க உதவுகிறது என்பதை உணர்ந்ததே "என்னை யார்" என்று என் எழுத்தின் மூலம் முன் முடிவுக்கு வந்து அதை என்னிடமே சொன்னபோது தான்... !! அது வரையில் அப்பாவியாக இவர் என் 'நண்பர்/தோழி' என்ற நம்பிக்கையை இழந்த போது என் வலியை ... .... வார்த்தைகளால் சொல்லவே முடியாது.

என் எழுத்தின் மூலம் என்னை அறிந்தவர்கள் யாருக்குமே என்னை தனிப்பட்ட முறையில் தெரியாது. பக்கம் பக்கமாக எழுதும் ஒருத்தி, ஊமையாக க்கூட இருக்கலாம். ஏன் குருடாகக்கூட இருக்கலாம். எழுத்து என்பது, நம்மை பிரதிபலிப்பதாகவா இருக்கிறது? என்பதை பலநேரம் நான் கேள்வியாக்கி எனக்குள்ளவே கேட்டு இருக்கிறேன். பொதுவில் வாய் கிழிய எழுதுவதை, தனிப்பட்ட முறையில் செயற்படுத்தக்கூடியவராக இருக்கிறார்களா, நடந்துக்கொள்கிறார்களா என்று கவனிக்காமல், அல்லது அதை பற்றி தெரியாமல் ஒருவரை பற்றிய எண்ணங்களை, தனக்கு புரிந்தபடி அமைத்துக்கொள்வது மனித இயல்பாகிவிட்டது. அப்படி அமைத்துக்கொள்வது சரியில்லை என்பது கூட பலருக்கு தெரிவதில்லை.

பல வருடங்களாக நம்முடன் பழகும் ஒருவருக்கு கூட நம்மை பற்றி சரியாக தெரியாமல் இருக்கும் போது, எழுத்தை படிப்பதின் மூலம் இவர் இப்படித்தான் என்பதை யூகிப்பது மட்டுமில்லாமல், அவர் அப்படித்தான் ன்னு ஒரு முடிவுடன் எப்படி அணுகமுடியும்? இது தொடர்புடைய பதிவு

மனிதர்கள் யாரும் தன் நெகட்டிவ் வெளியில் தெரிவதை விரும்பமாட்டார்கள், நெகட்டிவ் என்று சொன்னது, ஒவ்வொருவருக்கும் வேறுபடும். அதுவே பாசிட்வ்'விற்கு கிடைக்கும் மதிப்பை கண்டு மயங்கி, அதனை இன்னமும் அதிகமாக்கி க்கொள்ள வேண்டும் என நினைப்பார்கள்.  நம்மின் நெகட்டிவ், பாஸிட்டிவ் என்ன, எதில் தவறு செய்கிறோம், எங்கே சரியாக இருக்கிறோம் போன்ற சுய அலசல்கள் இருந்தால், அந்த மனிதனை எதுவும் சஞ்சலப்படுத்திவிடாது. சுய அலசல் இருப்பவர்கள், வேஷதாரிகளாக இருப்பதில்லை. :). 

சரி சரி எங்கேயோ ஆரம்பித்து அங்கே இங்கே என எங்கெங்கோ வளைந்து நெளிந்து போயிட்டேன், தலைப்புக்கு வருகிறேன். என்னென்னவோ எழுதிய பிறகும், இது எதற்கு என்று புரியாதவர்களுக்கு ஒரு சின்ன உதாரணம்-

சமூக அக்கறையும், சாமானியர்களின், கீழ்மட்ட மக்களின் மீதும் அக்கறை மண்டி கிடக்கும் எத்தனை பேர் நம் வீட்டு வேலைக்கு நாம் சாப்பிட்டு போடும் தட்டை கழுவ, நமக்கு சமைத்து போடவும், நம் வீட்டு கழிவறைகளை கழுவ, சுத்தம் செய்ய, இந்த மனிதர்களை காசு (காட்டி) கொடுத்து,  கழவ சொல்லாமல் இருக்கிறோம்? - இவர்களுக்கு சம்பளம் என்ன? 50 ரூ - 4000 ரூ வரை. இது சீமாட்டிகளின்/சீமாட்டன்'களின் சம்பளத்தை பொறுத்து மாறுபடும்.

என்னை நோக்கி உங்கள் கை நீளும் முன்.. - எங்கள் வீட்டில் வேலையாள் எப்போதும் வைப்பதில்லை. எங்கள்வீட்டு கழிவறையை நான் என் கையை கொண்டு தான் சுத்தம் செய்கிறேன். நாங்கள் கழிக்க  பயன்படுத்தும் ஒரு இடத்தை, சக மனிதனை விட்டு சுத்தம் செய்ய விடுவதில்லை..அதற்கு என் மனம் இடம் கொடுப்பதில்லை... இதை நான் இப்போது முடிவு செய்யவில்லை, சின்ன வயதில் தோட்டத்து சந்தின் வழியாக, இரண்டு பக்கெட் தூக்கிக்கொண்டு வந்து, மனித கழிவை, முகம் சுளிக்காமல் அள்ளிக்கொண்டு சென்ற எங்கள் வீட்டு கக்கூஸ் க்காராம்மை'வை பார்த்து முடிவு செய்தது. அந்த அம்மா, மாதம் சம்பளம் வாங்கும், ஒரு மாநில அரசு ஊழியர். பிச்சை எடுக்காமல், மற்றவர் பொருளுக்கு ஆசைப்படாமல், திருட்டு வேலை செய்யாமல், உள்ளே வெளியே நாடகம் நடத்தாமல், செய்கின்ற வேலையை கவனமாக செய்வார். தெருவில் அந்த வண்டியை அவர் தள்ளிக்கொண்டு போவதை பார்க்கும் போது எல்லாம், என் வீட்டில் இப்படி ஒரு வேலையாள் இருக்கக்கூடாது என்று முடிவு செய்து மனதில் பதிய வைத்ததை இன்னமும் தொடர்கிறேன்.

கழிவறை கழுவுவது என்பது சாமானிய வேலை இல்லை என்பது, அதை செய்வதால் எனக்கு தெரியும்.  அதை பணம் கொடுத்தாலும் இன்னொரு வீட்டில் சென்று செய்வேனா என்றும் யோசிப்பேன். :). ஒரு வேளை, அப்படியும் என் வேலை இருந்திருந்தால்...???!! அதையும் செய்திருக்க க்கூடும், ஏனென்றால், ஊராருக்கு உபதேசம் செய்யும் சீமாட்டிகளும்/சீமாட்டன்'களும் இருக்கும் இந்த சென்னை மாநகரத்தில் எளிதாக அந்த வேலைகள் கிடைக்கும்,  :))).

ஆக, சொல்லவந்தது, சீமாட்டிகளை/சீமாட்டன்'களை பற்றியல்ல, நமக்கு சமூகத்தில் சக மனிதன் மேல் உள்ள அக்கறை என்பது நம் வீட்டிலிருந்து ஆரம்பிக்க வேண்டும்... தெருவில் இருந்து அல்ல............

அணில் குட்டி :.............................. ம்ம்...... ம்ம்........................( அம்மணி ரெம்ப கோவமா இருக்காங்களோ....  ) சரிங்க ஆப்பிசர்..!! (அடி ஜூட்......இதுக்கு மேல பேசப்பிடாது இப்ப..)


பீட்டர் தாத்ஸ் :Faith is the first factor in a life devoted to service. Without it, nothing is possible. With it, nothing is impossible.

ஏன்ன்ன்ன்ன் இப்படி?

கவி : GM

சிபி :  AC

கவி : AC ன்னா?

சிபி: நீங்க General Manager ன்னு சொன்னீங்க.. இல்ல, நானு Associate Consultant ன்னு சொன்னேன்.. 

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் !

****************
கவி : காலை வணக்கம்

சந்தோஷ் : யார் காலை தொட்டு வணக்கம் சொல்றீங்க..

கவி: ஞே.....!.
***************
 ஸ்டேடஸ் மெஸேஜ் - "அகம் பிரம்மாஸ்மி"

குசும்பர் : "அகம் பிரம்மாஸ்மி " ன்னா என்னங்க அர்த்தம்

கவி : நானே கடவுள் ன்னு அர்த்தம் ..........

குசும்பர் : கருமம் !!

கவி : ஹல்ல்லோஒ நானா வந்து கேக்க சொன்னேன்.. கேட்டுட்டு என்ன கருமம் ன்னு சொல்றீங்க?!

குசும்பர் : அதே தான் !! வந்து கேட்டேன் பாருங்க.. என்னை சொல்லிக்கிட்டேன் "கருமம்" ன்னு ...

*********************
எஸ்.எம்.எஸ்

சிபி : உங்க கதை சூப்பர் ! அந்த ஹூரோ கேரக்டர் ரொம்ப நல்லா இருக்கு, எனக்கு பிடிச்சிது, நெக்ஸ்ட் எப்ப தொடரும்?

கவி : இந்த மெசேஜ் யாருக்கு?

சிபி : அட உங்களுக்கு தாங்க. .உங்க கதை புக் ல வந்து இருக்கு இல்ல, அதுக்கு கமெண்டு ங்க..

கவி : கமெண்டு...??? அதுவும் எஸ் எம் எஸ் ல..????! கதைய படிச்சீங்களா? அதுல ஹூரோவே இல்ல

சிபி : ஹோ ஹீரோ இல்லையா ...ஏங்க கதைன்ன ஒரு கரு இருக்கனுமே .. அது தாங்க ஹூரோ.. அதை சொன்னேன்..

கவி :   :((((( சிபி வேணாம்.....

********************
கவி : தாலாட்டு பாட்டு பாடி வச்சி இருக்கேன். இனியன் தூங்கலன்னு சொன்னீங்க இல்ல, அனுப்பறேன்.

குசும்பர் : அவ்வ்வ்... நோ மர்டர் வெறி பாவம் சின்ன குழந்தை...

கவி : ஹல்லோ, என் புள்ள என் பாட்டை கேட்டுத்தான் தூங்குவான்

குசும்பர் : ரைட்டு! இப்ப புரியுது ஏன் இப்படி கருப்பா ஆனான் தம்பின்னு !

கவி:  ...இப்ப எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும், பாட்டு பாடறத்துக்கும் கருப்புக்கும் என்ன சம்பந்தம்??

குசும்பர் : வாங்க வாங்க..இதுக்காகத்தான் வெயிட்டிங், உங்க பாட்டு கேட்பது கரண்டு ஒயரை புடிப்பதுக்கு சமம். அப்படி கரண்டு ஒயர புடிச்சா என்ன ஆவோம்??

கவி : அய்ய அய்ய அய்ய.ன்ஏ...

குசும்பர் : ஏங்க தினம் தேடி வந்து பல்பு வாங்கிட்டு போறீங்க...?!!

*******************

கவி : எதிர்ல வந்த பொண்ணை பாத்தியாடா?

நவீன் : ம்ம் ம்ம் பாத்தேன்..

கவி : அதானே...!! அந்த மாதிரி பொண்ணை பாத்துத்தான் உனக்கு கல்யாணம் செய்ய போறேன்..

நவீன் : அய்யோஓஒ...யம்மாஆஆஆ ஏன்ம்மா...சரியான கன்ட்ரி ஃபிகர், நான் வீட்டை விட்டு ஓடிடுவேன்....

கவி : ஹை நிஜம்மாவா? .சரி நீ ஒடு, நான் உன்னை துரத்தி பிடிக்கிறேன்.. .. ஓடிப்பிடிச்சி விளையாடி ரொம்ப வருஷம் ஆச்சிடா..

நவீன் : அம்மாஆஆஆ. .ஐம் சிரீயஸ்..

கவி : அட நான் கூட சீரியஸ் தாண்டா. .நிஜம்மாவே ரொம்ப வருஷமா ஓடிப்பிடிச்சி விளையாடலடா... :((

நவீன் : கிர்ர்ர்ர்ர்... :(
 *****************

சந்தோஷ் : கார் வாங்கினா நேனோ வாங்குங்க.. நல்ல மூவிங் ல இருக்கு..

கவி : நவீனா சந்தோஷ் நம்மளை நேனோ வாங்க சொல்றாங்கடா...

நவீன் : நீ மட்டும் நேனோ வாங்கின.. நம்மவீட்டு ரேஷன் கார்டல என் பேர் இருக்காது சொல்லிட்டேன் !!!.

கவி :  ஹை ஜாலி.... இது தெரிஞ்சி தான் சந்தோஷ் சொல்லி இருக்காங்க போல  .:))  இரு தாங்ஸ் சொல்லிட்டு வரேன்..!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. !!
***********

நவீன் : யம்மா உனக்கு எத்தனை தரம் சொல்லி இருக்கேன், என் ரூமுக்கு வந்து நோண்டாதன்னு.. இங்க என்ன பண்ற நீ.. போ வெளிய.....ம்ம்ம்.. போ....

கவி : .......................

நவீன் : உன்னைத்தாம்மா.. .காது கேக்கல. .வெளியில போ....

கவி: .........................

நவீன்:.. எஸ்கியூஸ்மீ... கேன் யூ ஹியர் மீ, நான் உன்கிட்ட தான் பேசிக்கிட்டு இருக்கேன்....வெளியில போ...

கவி : எனக்கு தமிழ், இங்லீஷ் எதுவும் தெரியாது.. I know only French.!!

நவீன் : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...!!!!



நிறைய வேலை.. நடுவே இதுவும்..

காலை எழுந்ததிலிருந்து தீபாவளி வேலைகள் நடந்துக்கொண்டு இருக்கின்றன, முறுக்கை பிழிந்துவிட்டு நடுவே நடுவே கணினியில் கொஞ்சம் வேலைப்பார்த்துகொண்டே இருந்தேன். முறுக்கு முடிந்து, தட்டை, நடுவே பாதுஷா, ஜாமுன்..என்று நடந்து முடிந்தது.

தீபாவளி நோன்பு , மாமியார் எப்படி செய்தார்கள் என்பதை அச்சு பிசுகாமல் காப்பி அடிக்கமுடியவில்லை, எனக்கு பிடித்தமாதிரி அவர்களுக்கும் கஷ்டம் இல்லாமல் செய்ய பழகி வருடங்கள் ஆகிவிட்டன. தீபாவளி நோன்பு க்கு ஒன்றும் அதிக வேலை இல்லையென்றாலும், நாளை முழுதும், இட்லி, தோசை தான். அதனால் இட்லி மாவு ஒரு பக்கம் ஓடிக்கொண்டு இருக்கிறது.

நடுவே வந்த போது அய்யனார் கதையை படித்தேன்... ஏதேதோ சிந்தனைகள், நீ ஆண், நான் பெண் என்ற எண்ணங்களோடே வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கிறது. யாரிடமும் இந்த வித்தியாசம் இல்லாமல், நீ மனிதன் நானும் மனிதன் என்று எளிதாக பேசிவிட முடிவதில்லை. ரொம்ப தெளிவான மனிதர்கள் என்னை சுற்றியில்லை என்று தோன்றியது. எல்லோருக்கும் என்னையும் சேர்ந்து நிறைய வரைமுறைகள் இருக்கின்றன. அவற்றை பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும் நாம் கடைப்பிடிக்க வேண்டும். நமக்காக இல்லாவிட்டாலும் மற்றவர்களுக்காக.

நண்பர் ஒருவரிடத்தில் இந்த வித்தியாசம் இல்லாமல் பேசுவேன் தான், இருவருக்கும் அந்த பிரஞ்ஞை பலநேரம் இருப்பதில்லை, இதற்கு  காரணம் தெளிவு என்று சொல்லிவிட முடியாது, அதே சமயம் ஒருவரை ஒருவர் புரிந்து வைத்திருப்பதால், எளிதாக பலவற்றை பேசிவிட முடியும். அவை பிறகு மண்டையில் இருப்பதே இல்லை, மறைந்துவிடும். என்னுடன் பேசி அவரும் அப்படி ஆகிவிட்டாரா இல்லை அவருடன் பேசி நான் அப்படி ஆகிவிட்டேனா தெரியவில்லை.

தட்டை வெந்துக்கொண்டு இருக்கிறது, கிரைண்டர் ஓடும் சத்தம், ஷகிராவின் "வக்கா வக்கா" பாட்டை நினைவுப்படுத்துகிறது. நடுவே "கபடி கபடி" என்ற விளையாட்டில் சொல்லும் பாட்டும் நினைவில் வந்து செல்கிறது. தட்டையை பதமாக எடுக்க வேண்டும், கிரைண்டரில் மாவை தள்ளிவிடவேண்டும்,. நடுவே மீண்டும் ஆண் ஏன் தன்னை எப்போதும் தான் ஆண் என்று ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொள்ள வேண்டும் என நினைக்கிறான் என்ற கேள்வி விழுந்தது.

அதிகம் யோசிக்கல, வீட்டுக்காரருக்கு ஃபோன் செய்து சீக்கிரம் வர சொல்லனும், கடைக்கு போகனும், இன்னமும் டைலரிடம் கொடுத்த துணி வாங்கவில்லை. நவீன் பட்டாசு வேண்டும் என கேட்கவில்லை, ஆனால் போனவருடம் மிச்சமானதை கொண்டு போய் காயவைத்துவிட்டு வந்தான். செய்த எதையும் நன்றாக இருக்கிறது என்று சொல்லவில்லை. ஆனால் சாப்பிட்டான். முறுக்கில் கொஞ்சம் உப்பு "ஏத்து" என்றான். :) என்ன மொழியோ இவையெல்லாம் தெரியல. நாங்கள் வீட்டில் பேசாத ஒரு மொழி. :)

நேற்று இரவில் இருந்து காதில் கம்மல் போடாமல் இருக்கிறேன். பெரிய விஷயமா? என்னமோ என் கணவர் அது ரொம்பவும் பழசாக இருக்கிறது என்று சொன்னார், உடனே அவரெதிரில் கழட்டியது, வேறு எடுத்து போட த்தோன்றாத மனநிலை, இல்லை, காலையில் எழுந்ததிலிருந்து என் முகத்தை நான் கண்ணாடியில் பார்க்கவில்லை.

இப்போது அவர் வருவதற்குள் போட்டுவிட வேண்டும் இல்லையேல் அதற்காக ஒரு சண்டை வர வாய்பிருக்கிறது..

தீபாவளி ஒரு நாளாக ஆகிவிட்டது. மற்றுமொரு நாள். :)) பல வேலைகள் கூடுதலாக செய்ய வேண்டிய ஒரு நாள்.. .. இன்னும் தொடரும் வேலைகளோடு, இந்த சிந்தனைகளையும் ..தொடர...போகனும்... :
.
அணில் குட்டி அனிதா : வெயில் ல தான் பலருக்கு பிரச்சனை.. அம்மணிக்கு பலகாரம் செய்தா க்கூட பிரச்சனை போலவே... :( ம்ம்ம்..

பீட்டர் தாத்ஸ் : Many Deepavali festivals have come and gone. Yet the hearts of the vast majority are as dark as the night of the new moon. The house is lit with lamps, but the heart is full of the darkness of ignorance. O man! wake up from the slumber of ignorance. Realize the constant and eternal light of the Soul which neither rises nor sets, through meditation and deep enquiry.

நினைவோ ஒரு பறவை... விரிக்கும் அதன் சிறகை....

பூம்பூம்மாடு : எப்பவோ பார்த்தது. இப்போது எல்லாம் கண்ணில் படுவதேயில்லை. முதுகின் மேல் வேலைப்பாடுகளுடன் கூடிய துணி அல்லது பல நிறங்களில் புடவைகள் போத்திவிட்டு, அழகாக அலங்காரம் செய்யப்பட்டு, கழுத்தில், உடம்பில், கொம்புகளில் சலங்கைக்கட்டி, பலூன் கட்டி பூ மாலை மற்றும் இன்னும் பிற மாலைகள் எல்லாம் போட்டு, "ஜில் ஜில் ஜில்" சத்தத்துடன் மாட்டை ஓட்டிவருவார்கள், ஓட்டிவருபவரும் முண்டாசு கட்டி, காலில் சலங்கை க்கட்டி, கையில் ஒரு பீப்பியுடனும் வருவார். பீப்பியால் ஊதுவார், நடுநடுவே மாடிடம் என்னென்னவோ பேசுவார், கேள்விக்கேட்பார். அதற்கு மாடும் "பூம் பூம்" என தலையாட்டும். இந்த சத்தம் தெருவில் கேட்டால் போதும், ஓடி போயி நின்று மாடு தலையாட்டுவதை வேடிக்கப்பார்ப்பது தான் வேலை. இவருக்கு பணமோ, அரசியோ  தருவார்கள். முக்கால்வாசி அரிசி தான், தோளில் மாட்டியிருக்கும் ஒரு ஜோல்னா பையை திறந்துக்காட்டி வாங்கிக்கொள்வார். அதில் விதவிதமான அரிசி வகைகள் போடப்பட்டு இருக்கும்.

குடுகுடுப்பைக்காரர் : இவர் வந்தாவே வீட்டிலிருந்து யாரும் வெளியில் செல்லாமல் அவர் சொல்லுவதை சத்தமின்றி கவனிக்க சொல்லுவார்கள். அவர் எப்போதும், வீட்டில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகளை முன்கூட்டியே சொல்லுவார். அது நல்லதா கெட்டதா என தெரிந்துக்கொள்ளவே கவனிப்பார்கள். நல்ல விஷயம் சொன்னால், மகிழ்ச்சியோடு காசு போடுவார்கள், இல்லையென்றால், சீக்கிரம் சென்று காசுப்போட்டுவிட்டு, கிளம்புப்பா என்று விரட்டிவிடுவார்கள். பொதுவாக இவர்  "நல்ல காலம் பொறக்குது, நல்ல காலம் பொறக்குது, இந்த வீட்டு மகாலட்சுமிக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு, ஜக்கம்மா சொல்றா.. இந்த வீட்டு மகாலட்சுக்கு ஒரு நல்ல செய்தி இருக்கு.. ஜக்கமா சொல்றா ன்னு ஆரம்பித்து,, குடுகுடுப்பை படப்படவென அடிப்பாரு.. :) இதுக்கு மேல நினைவில்லை. இவரை பிள்ளைப்பிடிப்பவர், பூச்சிக்காரன் வரான் என்றும் சொல்லுவார்கள். இவரை க்காட்டி பயமுறுத்தி குழந்தைகளுக்கு சாப்பாடு ஊட்டிவிடுவார்கள் :)

நவீன்  பூம்பூம்மாடு, குடுகுடுப்பைக்காரர்  இருவரையுமே பார்த்தது இல்லை. பிறந்ததிலிருந்து சென்னையில் தான் இருக்கிறான், விடுமுறைக்கு கூட அவனை வேறு இடங்களுக்கு அழைத்து போனதில்லை. இவை எல்லாம் ஏதோ சில நேரங்களில் நினைவுக்கு வரும், எழுதி வைப்போம் என எழுத ஆரம்பித்ததும் நினைவுக்கு வந்த மற்றும் சில..


தண்டோரா : நகராட்சியில் பொதுமக்களுக்கு ஏதாவது தகவல் சொல்லவேண்டி இருந்தால், தண்டோரா போட்டு தெருத்தெருவாக சொல்லி வருவார்கள். அதாவது வீட்டு வரி கட்ட கடைசி தேதி, புது வரி செய்திகள் போன்றவை இருக்கும்.  இந்த தண்டோரா க்காரர்களுக்கு பணம் கொடுத்தால், வீட்டில் யாரும் இறந்து போனால், நாம் சொல்லும் பகுதிகளுக்கு தண்டோரா ப்போட்டு, யார் இறந்தார்கள், எத்தனை மணிக்கு இறந்தவர் உடல் தகனத்திற்கு எடுத்துச்செல்லப்படுகிறது என்றும் சொல்லுவார்கள். என் அப்பா & தாத்தா இறந்த போது விழுப்புரத்தில் பல இடங்களுக்கு தண்டோரா போட்டு தெரியப்படுத்தினர். :(.  படத்தில் இருப்பது தான் தண்டோராவா என தெரியவில்லை, ஆனால் இப்படித்தான் இருக்கும்.


தயிர்க்காரம்மா : இவங்க தினம் தலையில் கூடையில் வைத்த பானையை சுமந்து, படி ஏறி எங்கவீட்டுக்கு வருவாங்க. ஒரு பானையில் தயிர் இருக்கும், அந்த பானை மேலே உட்காரும் அளவு சின்ன பானை இருக்கும் அதில் வெண்ணெய் இருக்கும்.  அதில் தினமும் வெண்ணெய் இருக்காது. மாதத்தில் 2, 3 நாள் வெண்ணெய் வரும், மற்ற நாட்களில் கெட்டி தயிர். அது யாருக்கோ ஸ்பெஷல் என்று கொண்டு வரும் அந்த தயிர்க்காரம்மா.  பாலை கருப்பஞ்செத்தை  (கரும்பின் காய்ந்த சோலை) எரியவைத்து காயவைத்தால் ஒரு ருசியும், எருமுட்டை எரியவைத்து காயவைத்தால் ஒரு சுவையும், கருவேல மரத்து விறகு எரியவைத்து வைத்து காய்த்தால் ஒரு ருசியும் வரும் என சொல்லுவார்கள்.  எரிக்கும் விறகை பொறுத்துக்கூட செய்யும் உணவின் ருசி மாறும் என்பது அந்த தயிர்க்காரம்மா சொல்லித்தான் தெரியும். அது வந்தால் போது, ஓடி போயி ஓசி தயிர் க்கு பக்கத்தில் நின்று க்கொள்வேன். வீட்டுக்கு கொடுத்துவிட்டு எனக்காக மேலோட்டமாக டம்ளரில் கொஞ்சம் எடுத்து வாயில் ஊற்றும், இல்லைன்னா கரண்டியாலேயே உட்காருன்னு சொல்லி வாயில ஊத்தும் :)))) யம்மி யம்மி.. சூப்பரா இருக்கும்.. :)) அன்னாந்து வாயை திறந்து, சைட்ல எல்லாம் வழிய குடிப்பேன் :)))

கழனித்தண்ணீர் கலெக்ட் செய்பவர்கள் : அரிசி கழுவிய தண்ணீரை தோட்டத்தில் அதற்காக கட்டியிருக்கும் சின்ன ரவுண்டு த்தொட்டியில் ஊற்றிவைப்போம். இதில் இந்த தண்ணீர் தவிர, பழைய சாதம், புளித்து ப்போன இட்லிமாவு, கழுவி எடுத்த கருப்பு உளுந்து தோல் போன்றவையும்  சாக்கடையில் கொட்டாமல், இந்த தொட்டியில் தான் ஊற்றிவைப்போம்.  மாடு வைத்திருப்பவர் வீட்டு ஆயா, சந்து வழியே வந்து தினமும் இந்த தண்ணீரை எடுத்து செல்லும். ஆயா வரும் போது, போய் நின்று கவனிப்பேன், தொட்டியில் கையால் ஒரு கலக்கு கலக்கி, கொண்டு வந்த பானையை உள்ளே விட்டு தண்ணீரை மொண்டு நிரப்பிக்கொள்ளும். ஒரே நாற்றம் அடிக்கும், ஆனால் அது தான் மாட்டுக்கு டிலீஷியஸ் ஃபுட். :)) .

கோவிந்தா : மஞ்சள் நிற உடை அணிந்து, நெற்றியில் பெரிய நாமம் போட்டு, பெருமாள் க்கு வேண்டுதல் என்று கையில் ஒரு தட்டில் பெருமாள் படம் வைத்து அதற்கு பூமாலை எல்லாம் போட்டு வந்து "கோவிந்தா... கோவிந்தா" என்று குரல் கொடுப்பார்கள். இவர்களுக்கும் அரிசி போடுவது தான் வழக்கம். :) பிச்சாந்தேகி என்றும் கேட்பார்கள்.  அரிசி போடவில்லை என்றால் பணமும் போடலாம். இவர்கள் அதிகமாக வருவது புரட்டாசி மாதத்தில் தான். இவங்க இப்பவும் எப்போதோ ஒரு தரம் கண்ணில் படுகிறார்கள், ஆனால் நான் கராராக இவர்களுக்கு பணம் , அரிசி எதுவும் போடுவதே இல்லை. :)

அணில் குட்டி அனிதா : எனக்கு அந்த பூம்பூம்மாடு ரொம்ப பிடிச்சி இருக்கு.. :) ஏன் இப்பவெல்லாம் அது வரமாட்டேங்குது..???, அம்மணி நீங்க  வெட்டியா தானே இருக்கீங்க.. மாடு ஒன்னு பிடிக்கறது?? காசுக்கு காசுமாச்சி, எனக்கும் பொழுது போகுமில்ல.... உங்கள பாத்தா மத்தவங்களுக்கும் பொழுது போகுமில்ல... ??!! .. :))

பீட்டர் தாத்ஸ் : When we're young we have faith in what is seen, but when we're old we know that what is seen is traced in air and built on water.
.
படங்க: : நன்றி கூகுல்.

நண்பர்களின் பின்னூட்டங்களில் இருந்து எடுத்து சேர்த்தது : :)  

1. ஐஸ்வண்டி  -
2. சவ் சவ் ரோஸ் மிட்டாய்க்காரர்
3. விறகு வெட்டுபவர்
4. மரம் ஏறி
5. பால்வண்டி க்காரர், நெய் க்காரர்
6. பொரிக்காரப்பாட்டி
7. அவல்காரர்
8. சாணைப்பிடிக்கறவர்
9. அம்மி, உரல் கொத்துபவர்
10. நாவிதர்
11. பஞ்சுமிட்டாய் தாத்தா
.

கேப்பங்கஞ்சி வித் கவிதா’வுடன் அபிஅம்மா

வாங்க அபிஅம்மா...எப்படி இருக்கீங்க? அபி, நட்டு & அபிஅப்பா எப்படி இருக்காங்க? ஊருக்கே விருந்து வைக்கறவங்க நீங்க. .ஆனா உங்களுக்கு வெறும் கேப்பஞ்கஞ்சி ய கொடுக்க கூப்பிட்டு இருக்கேன்.:) என்ன செய்ய..அதுக்கு மேல எனக்கு இங்க வசதி இல்ல :)) எப்படியோ சகிச்சிக்கிட்டு குடிச்சிக்கிட்டே என்னோட கேள்விகளுக்கும் பதில் சொல்லிடுங்க. கேள்வியும் அப்படித்தான் இருக்கும் :)). உங்களை கேப்பஞ்கஞ்சி’க்கு அழைக்க காரணம், நீங்க ஒரு சக்சஸ்ஃபுல் குடும்ப தலைவி, அப்படி இருப்பதே இந்த காலத்தில் மிகப்பெரிய சாதனை. :).அந்த சாதனைக்காக உங்களை அழைத்து பேச விரும்பினேன்.

உட்காரவைத்து மரியாதையாக கேட்ட கேள்விகள் : -

கவிதா : உங்களை பற்றி சின்னதா ஒரு அறிமுகம் செய்துக்கோங்க. (உங்க ஊர், படிப்பு, குடும்பம் பற்றி )
வணக்கம் கவிதா! கேப்பங்கஞ்சி எனக்கு ரொம்ப பிடிச்ச உணவு. வசதிக்கும் கேப்பைக்கும் தானே எப்பவும் பத்து பொருத்தம். பணக்காரங்க வியாதின்னு செல்லமா சொல்ற சர்க்கரை வியாதிக்கு அருமருந்தே கேப்பைதானே. அதனால இன்னைக்கு பணக்கார உணவு கேப்பை தான்:-). 
என்னோட பெயர் கிருஷ்ணா தொல்காப்பியன். படிப்பு D.C.E., எங்க சொந்த  ஊர், புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர். ஆனால் அப்பா மாயவரம் மாற்றலாகி வந்து, அங்கவே வீடு வாங்கி செட்டில் ஆகிட்டோம். படித்து முடித்ததும், பழனி தேவஸ்தானத்தில் ஜூனியர் இன்ஜினியராக (சிவில்) வேலை கிடைத்து செய்து வந்தேன்.

கவிதா: அட நீங்க சிவில் என்ஜினியரா  சொல்லவே இல்ல?  அப்படீன்னா தனிப்பட்ட உங்களின் ஆர்வம், விருப்பம் காரணமாக தான் படிச்சி இருப்பீங்க... வேலைக்கு போறீங்களா?
ஆமாம். டிகிரி இல்லை. டிப்ளமா தான். தனி ஆர்வம்'ன்னு சொல்ல முடியாது. என்னோட விருப்பம் னா அது டீச்சர்’ ஆவது தான். அந்த காலேஜ் பழனியில் நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு அதிக தூரம் என்பதால் பக்கத்தில் இருந்த பாலிடெக்னிக்கில்  சேர்த்துவிட்டாங்க. விரும்பியது கிடைக்காட்டியும் கிடைத்ததை விரும்புகின்ற மனோநிலை எப்போதுமே எனக்குண்டு. அதனால் அதிலே எனக்கு பிடிச்ச சிவில்' எடுத்தேன். படித்து முடிச்ச பிறகு பழனி தேவஸ்தானத்தில் வேலை கிடைச்சது.  கல்யாணத்திற்கு பின்னே வேலைக்கு போகவில்லை.

கவிதா: வேலைக்கு போயிக்கிட்டு இருந்த நீங்க திருமணத்திற்கு பின் வேலையை விடனும்னு வந்தப்ப உங்க மனநிலை எப்படி இருந்தது..?
அது முன்பே எடுத்த முடிவு. அதே சமயம், அப்பாவிற்கும் சிதம்பரத்திற்கு வேலை மாறியது. அதனால் சிதம்பரத்தில் B.E.,சேர்ந்துவிடலாம் என வேலையை விட்டேன். ஆனா, உடனே கல்யாணம் ஆயிடுத்து. அதுக்கு அப்புறம் படிக்கவும் மனசில்ல, வேலைக்கு போகவும் முடியல. ஆற்றில் ஒரு கால், சேற்றில் ஒரு கால் ன்னு எனக்கு சரிப்பட்டு வராதுன்னு நினைத்து விட்டுட்டேன்.

அணில் : அபிஅம்மாஅக்கா....... (ஸ்ஸ்ஸ் இவிங்கள எப்படி கூப்பிடனும்னே தெரியலையே.)) ஹி ஹி...கிருஷ்ணாக்கா,  கவி ய பத்தி என்ன தெரியும்னு பேட்டிக்கொடுக்க வந்தீங்க?
அணிலு ஆஞ்சநேயர் பலம் ஆஞ்சநேயருக்கு தெரியாது. அம்மாம் பெரிய பாலம் கட்டினபோது கூட இருந்து பார்த்த அணிலுக்குமா தெரியாம போச்சு? முத்துக்கு கேப்பங்கஞ்சி ஊத்தினப்ப, அதை படிச்சி இருக்கேன். அதனால கவிதா'வின் கேப்பங்கஞ்சி பத்தி ஓரளவு தெரியும். என்னை கேப்பங்கஞ்சி க்கு கூப்பிட்டவுடனே அபிஅப்பாவை, கவிதாவின் பதிவில் படிக்க நல்லதா லிங் எடுத்து கொடுங்க என கேட்டு படிச்சது. ல்விங்ஸ்மைல் வித்யாவின் கேப்பங்கஞ்சி. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம். நல்ல பதமான பேட்டி அது. 

கவிதா : திருமணத்திற்கு முன் and பின் - இதை இழந்தீர்கள் எதை பெற்றீர்கள் ?!  (பெற்றவையில் குழந்தைகள், அபிஅப்பா பற்றி எல்லாம் சொல்ல க்கூடாது)
திருமணத்துக்கு முன் இழந்தது B.E படிப்பை மட்டுந்தான். வேறு எதையும் இழந்ததாக நினைவில்லை. அது போல திருமணத்துக்கு முன்பு அடித்து போட்ட மாதிரி வருமே ஒரு தூக்கம், அதை திருமணத்திற்கு பின் இழந்தேன்னு சொல்லலாம். அப்பெல்லாம், நினைச்ச நேரத்தில் தூங்கலாம். குடும்ப ரெஸ்பான்சிபிலிட்டி இல்லை.. ஆனா, திருமணத்துக்கு பின் வெறும் 1000 ரூபாயில் குடும்பம் நடத்துவது எப்படி, மாசம் 75 ஆயிரம் வந்தால் குடும்பம் எப்படி நடத்தறதுன்னு திட்டமிட வேண்டியிருக்கு. அதனால, படுத்த பின்னும் வீட்டுவரி, பாலிசி, கேபிள், ஸ்கூல் பீஸ் ன்னே கனவுகள் வருது. ஆக திருமணத்துக்கு பின்னாடி எனக்கு கிடைப்பது நல்ல அனுபவம் தான்.

அணில் : கிருஷ்ணாக்கா நீங்க இருக்கும் வீடு, நீங்க ப்ளான் செய்த படி கட்டியதுன்னு சஞ்சய் அங்கிள் ஒரு போஸ்ட் ல எழுதி இருந்தாங்க நிஜம்மாவா க்கா?  உங்களுக்கு உங்க வூட்டுல அப்படி எல்லாம் ஃபிரிடம் கொடுத்தா வச்சி இருக்காங்க? இல்லாட்டி நீங்களே அதை புடுங்கி வாங்கனீங்களா?
சஞ்சய் எழுதின அந்த பதிவை படிச்சேன், பின்னூட்டம் கூட போட்டு இருக்கேன் அதிலே. நாங்க கல்யாணத்துக்கு பின்னே பேசிய முதல் பேச்சே வீடு பற்றியது தான். ஒரு தனி வீடு, பார்க்க அழகா, சின்னதா, தினமும் அதை நானே சுத்தம் செய்யும் அளவான வீடு என ஏகப்பட்ட கனவு. அப்போது மனதில் போட்ட பிளான் இந்த வீடு. அதில் கொஞ்சமும் மாறாமல் கட்டியது தான் என் வேலை. மற்றபடி பிளான் என்பது எங்க இரண்டு பேரின் பிளான் தான். பொதுவா பத்து மாதம் தான் கரு சுமக்கும் காலம். ஆணால் நாங்க இந்த வீட்டு பிளானை பத்து வருஷம் கருவாக சுமந்தோம்.
சுதந்திரம் 'ங்கறது கொடுக்கல் வாங்கல் பிஸினஸ் இல்லை. சுதந்திரத்தை எடுத்துப்பது, விடுப்பது தான். அவங்க அக்கறையா செய்யும் ஒரு காரியத்தை அவங்க கிட்டே விடுவதும்,நான் அக்கறையா செய்யும் காரியத்தை நானே செய்வதும் தான் நடந்தது. மார்பிளா, டைல்ஸா' ங்கறது முதல், மாடி கைப்பிடி டிசைன் வரை சண்டை என்பது நடந்து கொண்டு தான் இருந்தது. சண்டையில் யார் ஜெயிக்கிறோமோ, அவங்க சொன்னத் நடந்திடும். இப்போது கூட வீட்டில் தன் தலைவர் படம் மாட்ட வேண்டும் என அடம். குழந்தைகள் படமே மாட்டக்கூடாது என்கிறேன், தலைவர் படம் மாட்டவிடுவேனா? மாட்டவே கூடாதுன்னு சொல்லிட்டேன். இப்படி நானும் அவரோட சுதந்திரத்தை பறிப்பது உண்டு:-)) 

கவிதா : நீங்க ஒரு குடும்ப *குத்துவிளக்கு" ஆச்சே....  உங்களின் பார்வையில் - ஒரு பெண் எப்படி இருக்கனும்னு நினைக்கிறீங்க? ,
ஹாஹா! குடும்பம் பார்த்துப்பது என்பதும் ஒரு வேலை தானே. அதக்கு மட்டும் என்ன குத்துவிளக்கு பட்டம் தனியே வேண்டி கிடக்கு:-)) அப்படி பார்த்தா ஆபீஸ் குத்துவிளக்கு, பிஸினஸ் குத்துவிளக்கு,ன்னு சொல்லலாமே. :)).  ஆண்/பெண் யாராக இருந்தாலும் சரி தன் கடமை இது தான்னு தெரிந்த பிறகு, அதை சரியா செய்து முடித்தால் போதும். அது அத்தனை பெரிய கம்பசூத்திரம் ஓன்னும் இல்லை. விட்டு கொடுக்க வேண்டிய நேரத்தில் விட்டு கொடுப்பதும், தட்டி கேட்கும் நேரத்தில் தட்டிகேட்பதும் பரஸ்பரம் நடக்க வேண்டியவை. அதிலே ஆண் என்ன பெண் என்ன?  

கவிதா: உங்க கணவர், ப்ளாக் எழுதுகிறார். அவரை "பெண்களிடம் ஜொள்ளுவிட்டு திரிபவர்" என்று வினவு தளத்தில் எழுதப்பட்டு இருந்தது. இது உங்களுக்கும் தெரிந்திருக்கும் என நம்புகிறேன், இதனால், அவரின் மனைவியாக உங்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு என்ன?   (உங்களின் நேர்மையான பதிலை எதிர்பார்க்கிறேன்)
என்னை பொறுத்த வரை இது ஒரு விஷயமே இல்லைங்க. ப்ளாக்ல எப்போதும் யார் யார் பற்றியோ கிசுகிசு வருது. இது மாதிரி மத்தவங்கள பத்தி பேசறது என்ன புதுசா? சகஜம் தானே. அது மாதிரி இதுவும் ஒன்னுங்க. 15 வருஷமாக அவரை எனக்கு நல்லா தெரியும், இதை ஒரு மேட்டராகவே நான் நினைக்கல...கவலையும் படல.... என்னைப் பொருத்தவரை கண்டுக்காம ஒதுக்கித்தள்ள வேண்டிய ஒரு கிசுகிசு.. :) 

அணில்: யக்கோவ், மங்சிங் அண்ணாச்சி ய பத்தி கூட அதுல எழுதி இருந்தாங்க.. பாவம் அண்ணாச்சி தொண்ட கிழிய கத்தி கூப்பாடு போட்டாரு (ஒன்னியம் வேலைக்கு ஆகல அது பெரிய சோகக்கதை, அதை அப்பாளிக்கா உங்கக்கிட்ட தனியா சொல்றேன் சரியா..) ஆனா, உங்க வூட்டுக்காரு செம சைலன்ட் ஆ கமுக்கமா இருந்தாரே' ன்னு எங்க கவி க்கு டவுட் வந்து,  நேராவே "நீங்கள் இப்படி செஞ்சீங்களா? ஏன் உங்க பேரு வந்து இருக்குன்னு கேட்டுட்டாங்க" ஆனா நீங்க அவரோட வூட்டுக்காரம்மணி, சும்மாவா வீட்டீங்க? பூரி கட்டைய வச்சி அடிச்சி உதச்சி அவரு என்ன செய்தார் ஏன் அப்படி பேர் வந்துச்சின்னு கேட்டீங்களா?
அணிலம்மா, போன பதிலிலேயே சொல்லிட்டேனே.. அது ஒரு மேட்டரே இல்ல, இதுல என்ன அதைப்பத்தி பேசிக்கிட்டு, துருவி தோண்டிக்கிட்டுன்னு விட்டாச்சி,  நானு, அபிஅப்பாவை இந்த விஷயமா கேக்கக்கூட இல்லை :), தலையில ஏத்தி வச்சிக்கிற அளவு ஒர்த் இல்லாத விஷயம். அதான் சொல்லிட்டேனே.. 'கிசு.கிசு' ன்னு.. அதுக்கெல்லாமா முக்கியத்துவம் கொடுப்பாங்க :))) விடு..விடு..போட்டும்.

கவிதா : புடவை, நகை, அக்கம் பக்கத்து கதைகள், டிவி சீரியல், குழந்தைகள், கணவருக்கு சாப்பாடு கொடுப்பது தவிர்த்து, சமுதாயம் சார்ந்த பிரஞ்ஞை உங்களுக்கு இருக்கிறதா? ஆம் என்றால் அவை என்ன? இல்லை என்றால் ஏன்?
முதலில்ல என் வீட்டை, என் குழந்தைகளை கவனிக்கிறேன். யாருக்கும் எந்த தீங்கும் என் குழந்தைகளால் வராதபடி வளர்கிறேன். அதுவே என்னால் சமூகத்துக்கு முடிந்த பெரிய கடமை. எனது வீடு, குழந்தைகள், குடும்பம், வீட்டுக்கு வெளியே வாசல்,தெரு இதுதாங்க என் உலகம். இதை தாண்டி எல்லாம் நான் போறது இல்லைங்க. டிவி சீரியல் பார்க்கறதை எல்லாம் வேணாம்னு சொல்ற அளவு நானு இண்டலக்சுவல் இல்லை. பார்த்தால் தப்பில்லை ன்னு தான் நினைக்கிறேன்.  எந்த நேரமும் லேப்டாப் முன் அமர்ந்து பஸ் அரட்டை, பேஸ்புக், ட்விட்டர், எல்லாத்திலியும் குட்மார்னிங், என் மனைவி புளிகுழம்பு வைத்தாள் என சொல்லிகொண்டு இருப்பதற்கும், டிவி சீரியல் பார்க்கும் பெண்ணுக்கும் அதிக வித்தியாசம் இல்ல. (நான் டி வி சீரியல் பார்ப்பது அரிது. அது வேற விஷயம்) அது தப்பு, கேலிக்குரியது ன்னு சொன்னால் அதையே கம்பியூட்டர்ல செய்யும் நீங்களும் அதே கேட்டகிரியில தானே வரீங்க.. :))

கவிதா : பெண்ணியவாதிகள், பெண் போராளிகள் பற்றிய தங்களின் புரிதல் ?
என் பாட்டி வயது 95 ஆகிறது. அவங்க ஒரு பெண் வயதுக்கு வந்தால் படிப்பை நிறுத்திடனும்னு உறுதியா சொல்லுவாங்க, அதான் பெண்மைக்கு அழகுன்னு சொல்லுவாங்க. அவங்க கண் வழி பார்த்தா அதான் அவங்களோட பெண்ணீயம். என் அம்மா காலத்தில் அது வேற மாதிரி இருந்தது. என் காலத்தில் அது இன்னும் கொஞ்சம் மாறி போனது. இப்போதிய காலக்கட்டத்தில் பிடிக்கலையா. டைவர்ஸ் பண்ணு என்கிற ரீதியில் வந்தாச்சு. எது பெண்ணீயத்துக்கு அளவுகோள்னு யாரும் சொல்லமுடியாது, அது அவங்கவங்களை பொறுத்தது. 

சந்தர்ப்பமும் சூழ்நிலையும் தான் பெண்ணை கூட போராளியாக மாத்துது. இந்திராகாந்திம்மா, அவங்க அம்மாவோட இல்லாம அப்பா கூடவே அவரை பாத்து பாத்து வளந்தாங்க. அரசியல்ல அவங்க ஈடுபட காரணம் அவங்க வளந்த சூழல். இலங்கையில் பெண்கள், வீட்டிலே இருந்த அப்பா, மாமனார், புருஷன், மகன் னு எல்லாம் அழிந்த பின்னே அவங்க போராளியா ஆக வேண்டிய சூழ்நிலை. ஏன் அவங்களுக்கு மட்டும் குழந்தை, புருஷன், மெகந்தி, வளையல், கர்ப்பம், டிவி சீரியல் ஆசை எல்லாம் இருந்திருக்காதா என்ன? சூழ்நிலை பாவம் அப்படி ஆகிபோச்சு:-( இதுக்கு மேல இதைப்பத்தி விளக்கம் எனக்கு சொல்ல தெரியலை

அணில்: உங்களை உக்காரவச்சி  என்னிக்காவது இந்த அபிஅப்பா சமைச்சி போட்டு இருக்காறா? இல்லாட்டி நீங்களாச்சும் யோவ் சமைச்சி போடுய்யா.. அப்படின்னூ கேட்டு இருக்கீங்களா?
அபிஅப்பாவுக்கு சமைக்க தெரியும். ஆனால் நான் சமைக்க விடுவதில்லை. ஏன்னா சமைத்து கொடுப்பதை மத்தவங்க ருசித்து சாப்பிடனும்னு நினைக்கிறதை விட இதை பதிவாக்கி பின்னூட்டம் எத்தனை வருங்கற கணக்குத்த்தான் அவங்க மனசில் அதிகம் ஓடும். அதனால் சமைக்க விடுவதில்லை. மேலும், என் வேலைகளை மற்றவர்கள் செய்யும் போது எனக்கு திருப்தி வராது. 
கவிதா : ஒரு வீடு கட்டும் போது அத்தியாவசியமாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
பல்வலி வந்தால் உலகிலேயே அதிக வலி அதான் என்போம், வயிற்று வலி வந்தால் அதான் வலி என்போம். அது போல வீடு கட்ட ஆரம்பிக்கும் போது சாயில் டெஸ்ட் அதாவது மண் பரிசோதனையிலேயே அதன் பைலிங், ஃபூட்டிங் எல்லாம் எப்படி செய்ய வேண்டும் என தெரிந்து விடும். அப்ப ஆரம்பிக்கும் சவால்கள், பிரச்சனைகள் இல்லை. வீடுகட்டி முடித்த பின்னர் காலம், பீம்ல எல்லாம் நீட்டி கொண்டிருக்கும் கம்பிகளில் ரஸ்ட் ப்ரூப்ஃ பார்க்காம விட்டா வரும் ஸ்டீல் கேன்சர் எனப்படும் வியாதி வரை சவால் தான் எல்லாமே. அப்போதைக்கு மற்றது மறந்து போய் புதியது தான் நியாபகம் இருக்கும். இதை விரிவாக தான் சொல்ல முடியும். பத்து பதிவா போட மேட்டர் இருக்கு அபிஅப்பாவுக்கு:-))

அணில்: அட இம்புட்டு மேட்டர் உங்களுக்கு தெரியுது அப்புறம் ஏன் நீங்களும் அபிஅப்பா மாதிரி எழுதறது இல்ல?  அபிஅப்பா உங்க கைய கால எல்லாம் கட்டி போட்டு ஹவுஸ் அரஸ்ட் செய்து வச்சி இருக்காறா?
மேட்டர் தெரிஞ்சவுடன் இதை எழுதினால் அதிகபட்சமாக கட்டுமானதுறையை ஒரு இருபது பதிவில் முடிச்சிடலாம். ஆனா இதை எல்லாம் நேரிடை அனுபவத்தால் தான் முழுசா கொடுக்க முடியும். சமீபத்தில் திரு. வேலன் அவர்களின் வீட்டு பிளான் போடும் சாஃப்ட்வேர் பதிவு படிச்சேன், அது போல சில நல்ல பதிவுகள் போடலாம். அதையே தான் திரு.வேலன் மாதிரி இருக்கவங்க எழுதறாங்களே..நான் தேவையா? அவரோட பதிவுக்கு இந்த லிங் பாருங்க. அபிஅப்பா என் கையை கட்டி எல்லாம் போடவில்லை. அப்படியே போட்டா அப்ப என் ரியாக்ஷன் எப்படி இருக்கும் என இது வரை அனுபவம் இல்லை.

கவிதா: கோல்டன் ஹவர்ஸ் - (அதிகாலை 4-6 வரை) - இதைப்பற்றிய விளக்கம் சொல்ல முடியுமா?
எப்பவும் 3.30க்கு எழுந்துக்குவேன். காலை 4 மணிக்கு பூஜை செய்ய ஆரம்பித்து 5.30க்கு முடித்துவிட்டு, சில சமயம் படுத்துகூட விடுவேன். அந்த ப்ரம்ம நேரத்தில், நம் மூளை நல்ல புத்துணர்ச்சியுடன் வேலை செய்யும், அப்போது வீசும் காற்று மாசு இல்லாமல் உடலுக்கு நன்மை செய்யக்கூடியது, அவற்றை பெறவே இந்த பூஜை நேரம் வீட்டில பழக்கப்படுத்தப்பட்டது. முக்கியமாக பூஜைக்கு எந்த தொல்லையும் இருக்காது

கவிதா: கணவர் - இவங்க ஒரு காலக்கட்டத்தில் மனைவிக்கு இன்னொரு குழந்தையாக ஆகிடறாங்க..- விளக்கம்
கணவரின் மேல் இருக்கும் ஆசையில், அன்பில் எல்லோரும் கணவரை தாயை போல் கவனிச்சிக்குவாங்கத்தான். ஆனா அதையே இவங்க அட்வான்டேஜ் ஆ எடுத்துக்கிட்டு, தன் வேலையை கூட பொண்டாட்டி செஞ்சுட்டா நல்லா இருக்கும் என நினைக்கும் நினைப்பு சோம்பேறி தனத்தின் உச்சம். அதுவும் ஒரு "ஐஸ்" வைக்கும் விஷயம் தான். எனக்கு எதும் தெரியாது. எல்லாம் அவ பார்துப்பா என மற்றவர்கள் மத்தியில் அள்ளிவிடுவது. இது தெரியாத பேக்குகள் அதை பாராட்டா நினைச்சு "ஹய்யோ நான் இல்லாட்டி அவரு சோத்தை எடுத்து காதிலே வச்சாலும் வச்சிப்பாரு' என உருகும் பெண்கள். இதெல்லாம் சுத்த அக்மார்க் அயோக்கியத்தனம்.

கவிதா: அபியை பற்றிய ஒரு பதிவு ரொம்ப கோபமாக எழுதி இருந்தேன். திருமணம் செய்து கொடுத்தப்பின் ஒரு பெண், அவளின் வாழ்நாள் முழுதும் தம் குடும்பத்தின் நலன் கருதி பொறுப்பாகவும், அதற்கான வேலைகளை சரிவரவும் செய்துக்கொண்டு தான் வர வேண்டும். நிற்க, அவள் பிறந்தவீட்டிலாவது எந்த வேலை பளுவும் இல்லாமல் சந்தோஷமாக வைத்திருக்கலாமே? ஏன் அவளைக்கும் இந்த வயதிலேயே பொறுப்புகளை கொடுக்கிறீர்கள்?
குழந்தைகளுக்கு அவங்க அவங்களுக்குன்னு வேலையை பிரிச்சு கொடுத்து செய்ய பழக்கனும். முதலில் தான் சாப்பிட்ட தட்டை கழுவ சொல்லி பழக்க ஆரம்பிக்கனும். பின்னே டாய்லெட் போனா தானே சுத்தம் செய்யும் பழக்கத்தை சொல்லி தரனும், அப்புறம் படிப்படியாக எல்லாம் சொல்லித்தர வேண்டியது தான். இதிலே ஆண் குழந்தை, பெண் குழந்தை பாகுபாடு பார்க்கக்கூடாது. அபிக்கும் தன் வேலையை தானே செய்ய சொல்லி பழக்கி வைக்கிறேன். நட்டுவுக்கும் பழக்குவேன். ஆண் குழந்தையையும் வேலை செய்ய சொல்லி பழக்கும் போது, நாளை வரும் மனைவியை அவன் அவனுடைய வேலையை செய்ய சொல்ல மாட்டானே

இதிலே கொடுமை சில பேர் பெண் குழந்தைகளுக்கு குறிப்பாக அப்பாக்கள் "அய்யோ அவ போற இடத்திலே தான் கஷ்ட்டப்பட போறாளே, என் வீட்டிலாவது சந்தோஷமா இருக்கட்டும்" என சொல்லி தன் மனைவியை கஷ்ட்டப்படுத்துவாங்க. என்னய்யா இது அப்ப உன் மனைவியும் இன்னும் ஒரு அப்பனுக்கு பொண்ணு தானே என்கிறது தெரியலையா. நீ பெத்த பொண்ணுன்னா ஒரு சட்டம்.இன்னும் ஒருத்தன் பொண்ணுன்னா ஒரு சட்டமா.?. அதாவது அந்த பொண்ணுக்கு கல்யாணம் ஆன பின்னே அடிமை வாழ்க்கை வாழனும் என மனதளவில் மறைமுகமாக தயார் படுத்துறான் ன்னு அர்த்தம். .

அணில் : யக்கோவ் வுட்டா அம்மணி உங்களையும் அவிங்களமாதிரி டென்ஷன் கேஸா மாத்திடுவாங்க. .சோ நீங்க எனக்கு பதில் சொல்லுங்க... உங்களோட ஸ்கூல், காலேஜ், ஆபிஸ் பிரண்ட்ஸ் பத்தி சொல்லுங்க... இன்னும் அவர்களோட கனக்ஷன் இருக்கா.. ?
இல்லை. அணில். எனக்கு அத்தனை நண்பிகள்,நண்பர்கள் இல்லை. இப்போது பழக்கமும் விட்டு போச்சு.

கவிதா : நேரம் காலம் இல்லாம இந்த அபிஅப்பா  யாரையாச்சும் விருந்துக்கு கூட்டுட்டு வராரே... அவரை விறகு கட்டையாலயே அடிக்கனும் போல உங்களுக்கு தோணி இருக்கா.. இல்ல அடிச்சே இருக்கீங்களே.. ?
இல்லை. விருந்து, சமையல் எல்லாம் எனக்கு பெரிய சுமை இல்லை. நான் அபி மாதிரி இருக்கும் போதே சமைக்க தொடங்கிட்டேன். என் அம்மாவுக்கு உடம்பு சரியில்லாததால், சீக்கிரமே சமைக்க ஆரம்பிச்சிட்டேன். நான் புகுந்த வீட்டிலும் என் மாமியார் எப்போதும் அனையா அடுக்களைக்கு சொந்தக்காரி ன்னு சொல்லலாம். எப்போது யார் வந்தாலும் நல்ல சாப்பாடு சமைத்து அதிலே ஒரு வகை இன்பம் காணும் குடும்பம். அதனால் எனக்கு சமையல் என்பது ஒரு பிடித்தமான விளையாட்டு.

ஓடவிட்டு அடித்து கேட்ட கேள்விகள் :

1.ப்ளாக் நண்பர்கள் உங்கள் வீட்டிற்கு இதுவரை வந்தவர்களை நினைவு கூற முடியுமா? உங்களுக்கு மிகவும் பிடித்த நண்பர்/தோழி யார்?ஏன்?
பிளாக் நண்பர்கள் என சொன்னாசீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர்,முத்து, இம்சைஅரசி ஜெயந்தி, கவிதாயினி காயத்ரி, இராம், ஜி(ஜியாவுதீன்), கோபி, சென்ஷி, ஆயில்யன், நாமக்கல் சிபி & அவரோட மனைவி, பாலராஜன் கீதா, தினேஷ், மாலா(நட்புவலை), கீதாம்மா, வழிப்போக்கன் யோகேஷ், வேலன் அண்ணாச்சி, கும்க்கி, சஞ்சய், மங்களூர்சிவா, இம்சைவெங்கி, இளையகவி கணேஷ்குமார், குசும்பன்,ஷோபா அக்கா, மாயவர்த்தான், நீடூம்நிஜாமுதீன் இன்னும் சிலர் பெயர் உடனே நியாபகம் வரவில்லை. இன்னும் நாகைசிவா, சுரேகா, ஜி3, ஜே கே போல பலரை குசும்பன் திருமணத்தில் பார்த்தேன். நான் போன வலைபதிவர்கள் வீடு என்றால் சீமாச்சு அண்ணா, கண்மணி டீச்சர், மயில் விஜி, மஞ்சூர் ராஜா வீடுன்னு போயிருக்கேன். கோவை போன போது சந்தனமுல்லை, தாரணி பிரியா, வீட்டுபுறா சக்தி, செல்வா ஆகியோரை பார்த்து இருக்கேன்.  எனக்கு நண்பர்கள் வட்டம் தனிப்பட்டு இல்லை.அபிஅப்பாவுக்கு நண்பர்கள் எனக்கும் நண்பர்கள் ஆகிவிடுவது தான் வழக்கம்..

2.அபி - நட்டு - இரு குழந்தைகளிடம் உங்களின் மனம் கவர்ந்த விஷயம் என்ன? 
அபியிடம் சின்சியாரிட்டி. எதிலும் ஒரு வரைமுறை இருக்கும். கோடு போட்டு வாழும் வாழ்க்கை. அது பிடிக்கும். 
நட்ராஜிடம் ரெஸ்பான்சிபிலிட்டி. எதிலும் ஒரு பொறுப்பு இருக்கும். டாய்லெட் போகும் போது லைட் போட்டு போனால் கூட வரும் போது சேர் எடுத்து போட்டு ஆஃப் செய்து விட்டு வருவதும், கேட் திறந்து வைக்காமல் அதை சாத்தி விட்டு வருவதும், வீடு பூட்டிய பின் அதை இழுத்து பார்ப்பதும், சிலேட்டில் எழுதிய பின் அதை உள்ளே வைக்கும் போது அழகாக அழித்து விட்டு வைப்பதும்

3.அபிஅப்பா வின் மைனஸ் , ப்ளஸ் என்ன? (பர்சனலாக இருந்தால் இந்த கேள்வி வேண்டாம்)
அவங்க மைனஸ், பிளஸ் இரண்டுமே ஒரே விஷயமாக தான் இருக்கும் எல்லா விஷயத்திலும். எந்த கெட்ட பழக்கம் ஆனாலும் அதில் எக்ஸ்ட்ரீம் லெவல் வரை போவது பெரிய மைனஸ் பாயிண்ட் அதை ஒரே நாளில் தூக்கி போட்டு பின்னர் அதை சீந்தாமல் ஒதுக்குவது பிளஸ் பாயிண்ட். அது போல முக்கியமான ஒன்று he is an unperdictable man.  அவரை எளிதில் கணிக்க முடியாது.

4. எது உங்களின் வாழ்க்கையில் உங்களுக்கு பூரண திருப்தி அளிக்கிறது என்று நினைக்கிறீர்கள்? ஏன்? 
அஃப்கோர்ஸ் கணவர், குழந்தைகள், குடும்பம் எல்லாமே பூரணதிருப்தி தான்.

5.உங்களுக்கு பிடித்த நடிகர், கலர், உணவு, சினிமா, உடை ? 
சினிமாவில் அத்தனை ஆர்வம் இல்லை. அதனால் இந்த நடிகர் படம் பிடிக்கும்னு ஆசையாக எல்லாம் பாக்கமாட்டேன். கலர் பற்றி கவலைப்பட்டது இல்லை. எதுனாலும் ஒக்கே தான். உடை - புடவை மட்டுமே. காட்டன் புடவை பிடிக்கும். படிக்கும் காலத்தில் ஜீன்ஸ் போட்டதுண்டு. அதும் சைட் விசிட்க்கு மட்டுமே.

6. பொது வாழ்க்கையில் உங்களை கவர்ந்த அல்லது பிடித்த பெண் /ஆண் யார்?
கர்மவீரர் காமராஜர், ராஜீவ்காந்தி, பெரியார், அன்னை இந்திராவை, விஜயலெஷ்மி பண்டிட்டை பிடிக்கும், கலைஞரின் மகள் செல்வி' யை மிகவும் பிடிக்கும்.

7. கலைஞர் - பிடித்த பிடிக்காத விஷயங்கள்
பிடித்தது : உழைப்பு, பிடிக்காதது : ஒன்றும் இல்லை.

8. உங்கள் பிறந்தவீட்டில் இருந்த ஒன்று புகுந்த வீட்டில் இல்லாதது - நீங்கள் மிஸ் பண்ற ஒரு பொருள்
அம்மாதான். ஆனால் பொருள் என்று கேட்டதால் எதும் இல்லை. என் உண்டியல் முதல்கொண்டு எல்லாவற்றையும் எடுத்து வந்துவிட்டேன்:-)

9. இசை ஆர்வம் பற்றி. பிடித்த இசை, இசைக்கலைஞர்.
எனக்கு அண்ணன் முறையான திரு.மாணிக்கவினாயகம் தான். காரணம்  என்னை குழந்தை முதல் அவர் பார்க்கும் போது எல்லாம் "கிருஷ்ணா முகுந்தா முராரே" என்ற கீர்த்தனையை பாடுவார், அது பிடித்து போனது. என் பெயரில் பாடுவதால் ரொம்பவே சந்தோஷமாக இருக்கும். அது போல அவர் பாடலில் தாளம் கட்டுக்குள் அடங்கி வரும். கைமீறி போகாது. ஒரு சிக்கனமான குடும்ப தலைவி குடும்பம் நடத்துவது போல தாளம் கட்டுக்குள் இருக்கும். ஸ்ருதி பிசகாது. அது போல டி ஆர் மகாலிங்கம் அவர்கள் பாடும் போது பிருகா அடிக்கும் வேகம்.... ஆலாபனையின் போது சர்னு ஒரு பிருகா அடிப்பது எனக்கு ரொம்ப பிடிக்கும். விரும்பி கேட்பேன். அது போல பெண்களில் எஸ். வரலஷ்மி. அதே டைப் பிருகா அடிப்பதில் கெட்டிகாரங்க. ரொம்ப பிடிக்கும். 

ஹைலைட்ஸ்:

1. கேள்வியை அனுப்பி, அபிஅப்பாவின் தலையீடு இருக்கவே கூடாதுன்னு பலமுறை சொல்லியும், ஒன்னும் நடக்கல, நானும் விடல, அபிஅம்மாவும் விடல. இருவரும் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு கடைசி நேரத்தில் அபிஅப்பா வின் எக்ஸ்ட்ரா மேட்டர் எல்லாத்தையும் எடுத்துவிட்டோம்.(எங்களோட கூட்டு சதி ன்னு சொல்லமுடியாது, 2 பெண்களும் சேர்ந்து, சதியை மதியால் வென்றோம்னு சொல்லிக்கலாம் :), அபிஅம்மா கைக்கொடுங்க..:)) )

2. அபிஅம்மா ரொம்ப தெளிவாக இருந்தாங்க. என் கேள்விகளுக்கு அவங்களோட பதில் என்னவாக இருக்கனும், எப்படி இருக்கனும், எது இருக்கக்கூடாது, எந்த வார்த்தைகள் வரனும், வரக்கூடாது என்பதில் ரொம்பவே கவனமாக இருந்தார்கள். (இது ரொம்ப பிடிச்சிது எனக்கு). சில வார்த்தைகளை குறிப்பிட்டு இப்படி எல்லாம் நான் பேசவே மாட்டேன் எடுத்துடுங்கன்னு ரொம்ப கிளையரா சொல்லிட்டாங்க. ஏனோ தானோன்னு, அபிஅப்பா சொன்னா என்ன தான் சொன்னா என்ன? என்று விடாமல், நிதானமாக, தெளிவாக தன் பதில்களை சொல்லியது மட்டும் இல்லாமல், தேவையில்லை என்று நினைத்த என் பொதுவான கேள்வி ஒன்றையும் எடுங்கன்னு சொல்லிட்டாங்க. 

அபிஅப்பா இப்படி ஒரு மனைவி கிடைக்க நீங்க கொடுத்து வச்சி இருக்கனும். பல்லாண்டு வாழ்க வளமுடன் !! :)
.