திரைசீலை

எங்களின் ஆட்டோவைப் பார்த்ததும், மாமா வேகமாக இறங்கி தெரு கிரில் கேட்டை நோக்கி ஓடிவந்தார்....

"வாங்கக்கா.. நானே வந்து அழைச்சிட்டு வரேன்னு சொன்னா கேட்டீங்களா?"

"வழி தெரியாட்டி பரவாயில்ல.. நீ எதுக்கு வரனும்?! "

மாமி பின்னாலேயே வந்து வரவேற்றார்..

"மாமா எல்லாம் ஃபோன்ல சொன்னாருக்கா.. ..என்ன அனு எப்படி பிரிப்பேர் செய்திருக்க? " என்னை தோளோடு சேர்த்து அணைத்தபடி கேட்டார்.

"நல்லா பிரிப்பேர் செய்திருக்கேன் மாமா.."

மாமி... தண்ணீர் கொடுத்துவிட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க..
மாமா ஆபிஸ் கிளம்பனும்னு சொல்லிட்டு, குளிக்க உள்ளே செல்ல, அம்மாவும் மாமியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நான் சோபாவில் உட்கார்ந்து மாமாவின் குட்டி மகளுடன் விளையாட ஆரம்பிச்சேன்...

அம்மா... மாமியிடம்.. "என்னமா இது.. ஏன் மேல இருக்க வெண்டிலேட்டருக்கு எல்லாம் ஸ்கீரின் போட்டு வச்சியிருக்கீங்க? "

"ம்ம்க்கும்..அதை உங்க தம்பிய கேளுங்க..எதிர் வீட்டு ஆளு இங்கவே எந்த நேரமும் பாக்கறாராம்... அதும் என்னை தான் பாக்கறாராம்..அதுக்காக இந்த ஏற்பாடு.. " கடுப்பாக பதில் வந்தது..

"ஓஹோ..அது சரி.. ஜன்னலுக்கு ஒக்கே..அது ஏன் மேல வென்ட்டிலேட்டருக்கு எல்லாம் போட்டிருக்கான்.. ?!"

"ஹான் இங்கெல்லாம் ஸ்கிரீன் போட்டுட்டோம்னு, எதிர் வீட்டு ஆளு மேல மாடியில் நின்னு பாக்க ஆரம்பிச்சிட்டாராம். அதனால மேலயும் போட சொல்லி ஒரே வம்பு... "

"என்னமோ போ.. ஹால்ல சுத்தமா வெளிச்சமே இல்ல.."


"உங்க தம்பிக்கிட்ட சொல்லுங்க.. நீங்க சொன்னாவாச்சும் கேக்கறாரான்னு பாக்கலாம்..."

**************

அம்மா, மாமாவிடம் இந்த ஸ்கிரீன் விசயமா பேசல.. என் பரிட்சை விசயமா பேசிட்டு.. மதியம் கிளம்புவதாக சொல்லி, மதியம் சாப்பாடு முடித்த கையோடு கிளம்பிட்டாங்க..

மாமா அலுவலகம் செல்லும் போதே குட்டிப்பொண்ணையும் ஸ்கூலில் விட கூட்டிட்டு போயிட்டாரு...

எனக்கு நாளை தான் பரிட்சை, மாமா தான் கூட்டிட்டு போகனும். என் புத்தங்கங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிச்சேன்..

மாமா சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மாமி, அவசர அவசரமாக ஜன்னல் ஸ்கிரீனை ஒதுக்கி வைத்து, ஜன்னல் கதவை சிறிய இடைவெளி இருக்கும் படி மூடிவைத்து,  (அதாது வெளியிலிருந்து பார்த்தால், உள்ளிருந்து யாரும் கவனிக்கிறார்கள் என்று தெரியாது), ஆர்வமாக எதையோ பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அவங்க முகத்தில் அப்படியொரு பரவசம்.... .....

என்ன பார்க்கறாங்கன்னு தெரியல.... எதையோ பார்க்கட்டும் நமக்கென்னன்னு நான் படிச்சிக்கிட்டே இருந்தேன்.. தீடீர்னு என் நினைவு வந்தவங்களாக என்னை திரும்பி பாத்தாங்க..

லேசாக புன்வறுவல் செய்தேன்..

என்ன நினைச்சாங்கன்னு தெரியல.. "அனு அனு... இங்க வாயேன்.. இந்த சந்து வழியா எதிர்பக்கம் அந்த மூணாவது வீட்டைப்பாறேன்.. அங்க ஒருத்தர் பிங்க் கலர் சட்டைப்போட்டுட்டு பேசிக்கிட்டு இருக்கார் இல்ல..அவரு ஒரு டாக்டர்..  இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி நம்ம வீட்டு வழியா நடந்து போவாரு.. .. அவர் பேசும் போது லேசா சிரிச்சாக்கூட அவர் முகம் சிவந்துடும் பாரேன்..அவ்ளோ கலரு அவர்... "

அவங்க ரகசியமாக பார்ப்பதை பார்த்து, தப்பா நினைச்சிக்க போறேன்னு,  என்னையும் அழைத்து காட்டறாங்கன்னு புரிந்தது. மாமி கூப்பிட்டும் போகாமல் இருந்தால் மரியாதை இல்லையேன்னு, சென்று பார்த்தேன்.

ஆமா, அவங்க சொன்ன மாதிரியே அங்க ஒருத்தர் நின்னு பேசிக்கிட்டு இருந்தார்...

"மாமி படிக்க நிறைய இருக்கு" ன்னு சொல்லிட்டு வந்து புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன்..

மாமா போட்டிருந்த  திரைசீலை காற்றில் அசைந்து வந்து என்னைத்தொட்டு சென்றது.... ............

 
Images courtesy Google : Thx. 

நிர்பந்தம்

எதிரில் ஒரு சூப்பர் மார்க்கெட்.  எது தேவைனாலும், சட்டுன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்துடலாம்.

புது ஊர், மொழி தெரியாத இடத்தில், இந்த சூப்பர் மார்க்கெட் எனக்கு பெரியதொரு வரப்பிரசாதம். பொருட்களை நானே தேடி எடுத்து, பில் போட்டு, பணம் கொடுத்து வாங்கிவரும் வரை, யாரிடமும் வாய்த்திறக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பித்தில்"பை கொண்டு வந்திருக்கீங்களா"ன்னு பெங்காலியில் கேட்டாங்க.... நான் முழிப்பதைப் பார்த்து, சைகையில் செய்து காட்டினாங்க..  இப்ப அதுவும் இல்ல, போகும் போதே பை எடுத்துட்டுப் போயிடுவேன்.

அந்தக்கடையில்..ஒரு நாள்,

உள்ளே நுழையும் போது, பொருட்களை எடுக்கும் இடத்தில் நடு மத்தியில், வயதானவர் ஒருவர் கால் மேல் கால்போட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுருக்கமில்லாத இன்'செய்யப்பட்ட முழுக்கை சட்டை, பேன்ட், பாலிஷ் போட்ட ஷூ சகதிமாக டிப் டாப்பாக இருந்தார்.  'வாடிக்கையாளர் முடியாமலோ அல்லது  உடன் வந்திருப்பவர் வாங்கும் வரையோ  உட்கார்ந்திருக்கிறார்  போல' என்று ஊகித்தப்படி சென்றேன்.

எப்போதும் அந்த கடையில் 23-26 வயதுள்ள இரண்டு பிள்ளைகள் இருப்பாங்க. நான் பொருட்களை எடுத்துட்டு வந்து பில் போடும் வரை, என் பின்னாலேயே வருவாங்க..எதாது தடுமாறினால் உதவி செய்யலாம் அல்லது என்ன வேண்டுமென கேட்கலாம் என்றிருக்கலாம். அன்று அந்த இருவரில் ஒருவன் நான் உள்ளே சென்று பொருட்களை எடுக்கும் போது பெரியவரைப்பார்த்து அதட்டலாக... (பெங்காலியில் தான்)

"எழுந்து அவங்களுக்கு  உதவி செய்ங்க.. அவங்க தேடறதைக்கேட்டு எடுத்துத்தாங்க"

அட.. இவர் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரா?! ஓய்வுவெடுக்கும் வயதில், இப்படி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதா இவருக்கு ?! சின்னப்பசங்க எல்லாம் அதட்டுதே'ன்னு மனசுல நினைச்சிட்டே பொருட்களை எடுத்தவாறு இருந்தேன்.

உதவிசெய்ய வந்தார், கேட்டார்.. நானே எடுத்துக்கறேன்னு (ஆங்கிலத்தில்) சொல்லி புன்னகைத்துவிட்டு, என் வேலையைப் பார்த்தேன். அப்பாடா.'.ன்னு திரும்பவும் போய் சேரில் உட்கார்ந்துக்கொண்டார். 

**************
எங்கள் வீட்டு ஜன்னலிருந்து பார்த்தாலே கடைத்தெரியும், சில நேரங்களில் நின்று வேடிக்கைப்பார்த்து பொழுதுப்போக்குவேன். அவர் சேர்ந்து ஒரு வாரம் சென்ற ஒரு நாளில்...

வெளியில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அன்று, சட்டையை டக்'இன் செய்யாமல் வெளியில் விட்டிருந்தார்..

ம்ம்...வேலைக்கு தகுந்தார் போன்று தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார்.... போல.....

இங்கு கடைகள் மதியம் சரியாக 1.30 மணிக்கு மூடிவிட்டு திரும்ப மாலை 5- 5.30 க்கு தான் திரும்ப திறப்பார்கள். இந்தக்கடை மட்டுமல்ல.. மதிய நேரத்தில் உசுரு போனாலும் இங்க எதும் வாங்கமுடியாது, எல்லா கடைகளுமே மூடி இருக்கும்.

எப்போதும் போல ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  மிக சரியாக மாலை 5 மணிக்கு திறக்கும் சூப்பர் மார்க்கெட் அன்று திறக்கப்படவில்லை. வயதானவர், பக்கத்தில் இருக்கும் சின்ன கடை வாசலில்,  பெஞ்சில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அடடே... சரியான நேரத்திற்கு வந்து காத்திருக்கார், ஆனா, கடை திறக்கறவங்கள காணமேன்னு யோசிச்சிட்டே அவரைப்பார்த்தேன்..ஷூ'வை காணல.. செருப்புக்கு மாறியிருந்தார்.. 

அவரின் நடை, உடை , பாவனை, உடல் மொழி அத்தனையும் அவர் ஏதோ நல்ல வேலையில், நல்ல பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றவர் போன்று தெரிகிறது.. ஆனால் இந்த சூப்பர் மார்க்கெட்டில் "சேல்ஸ் பாய்" வேலை என்பது நிச்சயம் அவருக்கு நெருப்பு மேல் நிற்பதைப்போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் அவர் முக வாட்டத்திலிருந்து புரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது....

இப்போதெல்லாம் நாற்காலியில் அமர்வதேயில்லை. நாள் முழுக்க நின்றிருக்கிறார், கடையில் கஸ்டர்மர்கள் இல்லையேல் வாசலில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்.

அவர் முகத்தில் சிரிப்போ சந்தோஷமோ எதையுமே பார்க்கமுடிவதில்லை. தலையெழுத்து இந்த வேலையை ப்பார்த்தே ஆகனும்னு என்கிற ஒரு முகபாவம்..
ஒரு நாளைப்போல, சுயமரியாதையை விட்டுக்கொடுத்து மென்று விழுங்கிக்கொண்டு கடக்கும் கடினமான நொடிப்பொழுதுகள்.. வயதான காலத்தில் ஓய்வூதியத்தின் மதிப்பை புரியவைக்கும் இவர்...

ஏனோ.....  என் கண்ணில் படும்போதெல்லாம்.. ஒரு இனம் புரியாத வேதனையை ஒட்டவைத்து கடக்கிறார்......

கல்யாணி (மேற்கு வங்காளம்)

சென்ற பதிவில் உணவில் நிறுத்தினேன்

பெங்காலில் பிராமணர்களும் காலை உணவுக்கு மீன் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் என்பது உண்மையே. மாதத்தில் 2-3 நாட்கள் தவிர, அன்றாடம் அசைவு உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீன், கோழி, ஆடு இவை பிராதான உணவு. சாலையோர டீ கடைகள் அனைத்திலும் முட்டை வைக்கப்பட்டிருக்கிறது, ஆம்லெட், பிரெட் ஆம்லெட் தயார் செய்து தருகிறார்கள். இங்கு வரும் சைவர்களுக்கு சாப்பாடு மிகவும் கஷ்டம் தான். அதே சமயம் எல்லா காய்கறிகளும், பழங்களும் கிடைப்பதால் சமாளித்தும் கொள்ளலாம்.

அசைவத்திற்கு அடுத்து இனிப்புகள். பாலில் செய்யப்படும் இனிப்புகள் அதிகம். ரசகுல்லா பேர் போனது என்பது அறிந்த விசயம். ஆனால், விநோதமாக அநேக இனிப்பு கடைகளில் இனிப்புகளின் மேல் குளவிகள் ஈக்களை போல மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டவும் இல்லை, வராமல் இருக்க ஏதும் செய்த மாதிரியும் தெரியவில்லை. கேட்டதற்கு "இது இங்கு சகஜம், இதில்லாமல் நீங்க ஸ்வீட் கடை பார்க்க முடியாது.." என்றனர். மீறி தேடிச்சென்று குளவிகள் மிக்காத இரண்டு இனிப்புகள் விற்கும் கடைகளை கண்டுப்பிடித்து வைத்துள்ளோம். சமோசா, பஜ்ஜி போன்றவையும் அவர்களின் மசால் சுவையில் கிடைக்கின்றன. கடுகு எண்ணெய்யை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் இவர்களின் உணவின் ருசி தனி சுவை, சட்டென்று வேற்று மாநிலத்தவருக்கு பிடித்துவிடாது.  ஊர் முழுக்க தேடியும் நல்லண்ணெய் கிடைக்கவில்லை. கடுகு எண்ணெய் தவிர,  ரிஃபைன் செய்யப்பட்ட மற்ற எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன.

காய்கறிகள் மிக செழிப்பானதாகவும் ருசியானதாகவும் கிடைக்கின்றன. பூசணி வகையை சார்ந்த காய்கறிகள் அதிகமாக இருக்கின்றன. எல்லா வகை பழங்களும் கிடைக்கின்றன. விலை என்னவோ சென்னை விலை தான்.. !

மிக முக்கியமான விசயம், பிரியாணி. இப்படியொரு சுவையில் பிரியாணியை இந்தியாவில் வேறு எங்கும் சாப்பிடமுடியாது. இரண்டு முறை முயற்சி செய்த என் கணவருக்கு பிரியாணியின் ருசி பிடிக்காமல் கஷ்டப்பட்டார். எந்த வகை சாப்பாட்டையும் ஒரு கைப்பார்க்கும் என் கணவரையே இந்த ஊர் பிரியாணி சோதனை செய்துவிட்டது. திருமண ஆன நாள் முதல் அவர் எந்த சாப்பாட்டையும் பிடிக்கவில்லை என்றோ, ருசிக்காக ஒதுக்கியோ நான் பார்த்ததேயில்லை. முதல் முறையாக இந்த ஊர் பிரியாணியை அப்படியே ஒதுக்கிவைத்தார்.

பெண்கள் குறுக்கு சிறுக்காமல் நேரான உடல்வாகு கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிக பருமன் உடைய பெண்களை பார்க்க முடியவில்லை.  சராசரியாக உயரம் ரொம்பவே குறைந்தவர்களாக எனக்குப்பட்டது அநேகப்பெண்கள் 5 அடி உயரத்துக்குள் தான் இருப்பார்கள்.  99% பெண்கள் புடவை' மட்டுமே அணிகிறார்கள், குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் புடவையே அணிகின்றனர், நெற்றி வடு முழுக்க குங்குமம் வைத்திருக்கிறார்கள், ஆனால் கழுத்தில் தாலி செயின் போடும் வழக்கம் இல்லை, மாறாக மோதிரம் அணிகின்றனர். வெறும் கழுத்தோடு தான் இங்கு பெண்களை பார்க்க முடிகிறது. கையில் ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் வளையல், வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட வளையல் அனைவருமே அணிந்திருக்கின்றனர். பெண்களின் அழகுக்குறித்து எழுத வேண்டுமென்றால், பெங்காலி பெண்கள் சிகப்பாக, கொழு கொழுவென்று இருப்பார்கள் என்ற எண்ணமே இருந்தது, ஆனால் அப்படியில்லை என்பதே உண்மை. மாநிறத்தில் மிக சாதாரண முக அமைப்புக்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இன்னும் அழகான பெண்களை நான் பார்க்கவில்லை போலும்.. ?! .
ஆண்கள் எந்நேரமும் கையில் சிகிரெட்'டுடன் இருக்கிறார்கள், இவர்களையும் அழகானவர்கள் என்று சொல்லிவிட முடியாது, சராசரிக்கும் குறைந்தளவே. வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு கையில் சிகிரெட் வைத்து புகைத்துக்கொண்டே வியாபாரம் செய்கின்றனர். இந்த புகைப்பழக்கதை மட்டும் சகிக்கமுடியல. இது காய்கறி, மளிக்கைக்கடை, துணிக்கடை என்று எங்கும் நடக்கிறது. சிகிரெட்டை விட பீடி' யெ அதிகம் புகைக்கின்றனர்.

பெண்கள், ஆண்கள் இருவருமே சைக்கிள் அதிகம் ஓட்டுகின்றனர்.  பெண்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்த வர சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இருபாலாருமே சர்வசாதாரணமாக ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் சைக்கிளை பிடித்து ஓட்டுகின்றனர். இவர்கள் வெயில் , மழை எதற்கும் குடை பிடிப்பதால், கேரளாவை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கு. வெயில் சென்னை அளவிற்கே இருப்பதால், வியர்வையும் அதிகம். அதே சமயம் நவம்பர் மாதத்திலிருந்து குளிர் அதிகமாக இருக்குமென்று சொல்லுகின்றனர். குளிர் ஆரம்பித்திருந்தாலும் இன்னும் அதிகமாகவில்லை.
 
அன்றாட தேவைகளான பால், தயிர், நெய், காய்கறி , பழவகைகள், இனிப்புகள் கார வகைகள் அனைத்துமே சென்னை விலை தான். மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வஞ்சனம் கிலோ 160 ரூ என்பதை என்னால் நம்பவேமுடியவில்லை.  சிறிய வகை மீன்கள் மிகவும் ருசியாக இருந்தாலும், முள் அதிகமாக உள்ளன. இன்னமும் மீன் வகைகள் எங்களுக்கு நன்கு பரிச்சயப்படவில்லை.  தெரிந்தவகை , முள் இல்லாத மீன்களாக பார்த்து வாங்குகிறோம்.

போக்குவரத்துக்கு ரிக்ஷாக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. தவிர மீன்பாடி வண்டிகளிலும் மக்கள் பயணம் செய்கின்றனர். அதாது அலுவலகம், கடைத்தெருவிற்கு போவோர் இந்த வண்டிகளில் அமர்ந்து செல்கின்றனர், ஒருவருக்கு 5 ரூ.  தவிர மினி பேரூந்துகள் அக்கம் பக்கம் ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. அவற்றில் சவுகரியமான பயணம் என்று சொல்லமுடியாது. ரயில் என்பது மிக பிரதானமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கல்கத்தாவிலிருந்து வரப்போகவும், நடுவில் இருக்குமிடங்களுக்கு செல்லவும் ரயிலே சிறந்தது. ஆனால் கூட்ட நெரிசலில் மிகவும் முரட்டுத்தனமாகவும், சுயநலத்தோடும் மனிதாபிமானமின்றியும் நடந்துக்கொள்கின்றனர். சென்ற பதிவில் சொன்னதுப்போல திருட்டு பயமும் அதிகம். குறிப்பாக ரயிலில், பேரூந்தில் திருட்டுகள் அதிகம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனியாக குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏழ்மையானவர்கள் மட்டுமே இருப்பர் என்று நினைத்தால் அதான் இல்லை, மிகுந்த வசதிப்படைத்த மில்லியனர்களும் பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு அங்கு வசிக்கிறார்கள். வீடுகளுக்கு வேலை வரும் பெண்கள் அனைவருமே சைக்கிளில் வருகின்றனர். ஒரு வீட்டில், வீட்டு வேலை செய்ய மட்டும் 2-3 வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்,  தவிர தோட்ட வேலை செய்ய 15 நாளுக்கு ஒரு முறை இருவர் வருகின்றனர், தினமும் காலையில் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும், வீட்டை ஒட்டிய சாலையோர வெளிப்பகுதிகளையும் சுத்தம் செய்ய இருவர் வருகின்றனர். 
 
பொதுவாகவே இந்த மக்கள் சுயநலவாதிகள் என்றே மற்றவர்களால் வருணிக்கப்படுகின்றனர். உண்மைதானா என்று அறிய எனக்கு வாய்ப்பு இன்னும்
கிட்டவில்லை. அக்கம் பக்கம் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை, அவரவர் வேலையை அவரவர் பார்க்கின்றனர். காளி, துர்கா பூஜைகளில் அவரவர் பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். பெங்காலிகள் முற்போக்குவாதிகளாகவே எனக்கு தெரிகின்றனர். யாரும் யார் விசயத்திலும் தலையிடுவதில்லை, துக்கம் சந்தோஷம் போன்றவை அக்கம் பக்கத்தில் பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அரசின், 'வீட்டு குத்தகை நிபந்தனை' காரணமாகவோ என்னவோ, புதியவர்கள் யாரும் குடிபெயர்ந்து இங்கு வாழ விரும்புவதில்லை அல்லது வசதிகள் அதிகம் இல்லாததாலும் இங்கு யாரும் தங்க விரும்புவதில்லை. அதனால் எல்லா வீடுகளில் முதியோர் அதுவும் 60 - 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரே வாழ்கின்றனர். பிள்ளைகள் வேலை விசயமாகவோ, வசதிகள் தேடியோ வேறு இடங்களுக்கு சென்றுவிட இவர்கள் மட்டும் இங்கே. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இன்னமும் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவில் இந்த முறை இன்னும் கைவிடப்படாமல் இருப்பது ஆரோக்கியமான விசயமே.

படித்தவர்கள் அதிகமாக உள்ளனர், படிப்பு என்றால் மருத்துவம், பொறியியல் அல்ல இளநிலை முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். சந்திப்போர் அனைவருமே மருத்துவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பது நம்மை "ஒரு ஸ்டெப் பேக்" வைக்க வைக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு வங்கத்தினர் இருக்க இந்த படிப்பும் காரணமாக இருக்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும், கல்யாணி பல்கலைகழகமும் இங்கு உள்ளது.
 
கோயில்கள், துர்கா, காளி, லட்சுமி பூஜை .... இவைப்பற்றி எழுத எனக்கு இன்னும் அவகாசம் தேவை.  தொடர்ந்து இங்கு சில பூஜைகளும் அது சம்பந்தப்பட்ட  விழாக்களும் நடந்தவாரே இருக்கின்றன... என்ன ஏதுன்னு இன்னும் ஒன்னும் புரியல. இவற்றைப்பற்றி புரிந்து.. பிறகு பொறுமையாக பதிய வேண்டும். நிதானமாக  கொல்கத்தா சென்று ஹவுரா & ஹூக்ளி ஆறுகள், மேம்பாலங்கள், காளிக்கோயில்,படா பஜார்  எல்லாம் பார்த்து.......... வேறென்ன எழுதிவைக்கனும். !

அணில் குட்டி : ஸ்ஸ் யப்பா முடிச்சிட்டாங்களா ?! வந்தாலும் வந்தாங்க.. என்னா கதை.. ?!

பீட்டர் தாத்ஸ் :“Culture is the sum of all the forms of art, of love, and of thought, which, in the coarse or centuries, have enabled man to be less enslaved”

Images courtesy Google : Thanks. &

கொBiதாO (கவிதா)

கல்யாணி, மேற்கு வங்காளத்தில், "நாடியா"  மாவட்டத்தில் அமைந்த மிகச்சிறிய நகரம். கொல்கத்தாவிலிருந்து 50 கிமி தொலைவில் அமைந்துள்ள இந்த நகர் உருவான வரலாறு 65 ஆண்டுகளுக்கு முந்தயதாக இருக்கிறது.  இங்கிருக்கும் வானுயர்ந்த மரங்களே இந்த நகரின் வரலாற்றை பறைச்சாற்றுகின்றன. கொல்கத்தா & கல்யாணி இரண்டையும் இரட்டை தலைநகரங்களாக உருவாக்கவே அன்றைய அரசு இந்த நகரை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா தன் விமானத்தளத்தினை இங்கு ரூஸ்வெல்ட் டவுன் (அ)  ரூஸ்வெல்ட் நகர் என்ற பெயரில் அமைத்திருந்தது. அதன் பிறகு, 1950ல் மேற்கு வங்காளத்தில் இரண்டாவது முதல் அமைச்சரான Bidhan Chandra Roy -அவர்கள் இந்திய தேசிய காங்கரஸின் கூட்டங்களை நடத்தவும், கொல்கத்தாவில் பெருகிவரும் மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டு,  மக்கள் இங்கு குடியேற வசதியாக முன்கூட்டியே உள் கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கினார். / (Kalyani, West Bengal Aerial view).

1. பாதாள கழிவுநீர் அமைப்பு
2. செவ்வக கட்டங்கள் உருவாக்கும் சாலைகள்
3. ஒரு பக்கம் வரிசையாக மரங்கள் அமைக்கப்பட்ட நிழற்சாலைகள்
4. மற்றொரு பக்கம் மின்சார கம்பங்கள்
5. சமூக பூங்காக்கள்

என 1950 ல் இந்தியாவில் இவ்வகையான வசதிகளோடு உருவாக்கப்பட்ட முதல் நகரம் கல்யாணி' , கடந்த 65 ஆண்டுகளாக அதிக மாற்றங்கள் ஏதுமில்லாமல் இயற்கை சூழ்ந்த பழைய நகரமாகவே இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களும் இந்நகரின் இயற்கை வளம் குறையாமல் இருக்க உறுதுணையாக இருக்கின்றனர்.


இங்கு மக்கள் வசிக்க மட்டுமே அனுமதி,அதனால் அதிகளவு மாசு சேர்க்கை இல்லாமல் சுத்தமாகவும் மண் வளம் மிக்கதாகவும் நகரம் விளங்குகிறது. தொழிற்சாலைகள், வியாபார வணிக ஸ்தலங்கள் & கேளிக்கை சார்ந்தவைகளுக்கான இடங்களுக்கு அரசு அனுமதிக் கொடுப்பதில்லை.
அன்றாட தேவைக்கான பொருட்கள், காய்கறிகள் என எல்லாமே கிடைக்கின்றன. இரண்டு- மூன்று சிறிய சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தவிர, சாதாரண உணவு விடுதிகளும் இருக்கின்றன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. 4 கிமி தொலைவில் "காஞ்சரப்பாரா" என்ற இடத்தில் பெரிய கடைகளும், உணவு விடுதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் வீட்டுத்தேவைக்கானப் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அடுத்த ஊருக்குத்தான் செல்ல வேண்டும், அதையும் விட்டால், கொல்கத்தா செல்லலாம்.  

சாலைகளில் வைக்கப்பட்ட மரங்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வேப்பமரம் என்றால், அந்த சாலை முழுக்க வேப்பமரம் மட்டுமே, அசோகமரம் என்றால்..சாலை முழுதும் அசோகமரங்கள் மட்டுமே. இவையும் நிழற்சாலைகளின் அழகை அழகை அதிகப்படுத்துக்கின்றன.  இந்த மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதியில்லை. அளவுக்கு மீறி, போக்குவரத்துக்கு, மக்களுக்கு, வீடுகளுக்கு பிரச்சனையாக வளரும் கிளைகளை மாநகராட்சி ஆட்கள் வந்து வெட்டுகின்றனர். கிளைகள் வெட்டப்பட்டு,  இலை வேறு, கிளை வேறாகப் பிரிக்கப்பட்டு, கிளைகளை மட்டும் கட்டுகளாக கட்டி எடுத்துச்செல்கின்றனர். இலைகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன, அவை உரமாக்க பயன்படுத்தப்படும் என்று ஊகித்தேன்.

குப்பையை தெருவில் கொட்டவும் அனுமதியில்லை அல்லது மக்கள் அப்படியொரு பழக்கத்தை வைத்திருக்கவில்லை. தினம் காலையில் மாநகராட்சி ஆட்கள் வண்டியில் வீடுவீடாக வந்து, ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் அதற்காக அமைத்து வைத்த இடத்திலிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த இரண்டு மாதங்களில், ஒரு நாள் கூட இவர்கள்  குப்பைகளை எடுக்காமல் இருந்ததில்லை. வெளியில் சென்றுவந்த செருப்போடு வீட்டிலும் நடக்கலாம், அப்படியோரு சுத்தமான சாலைகள். கடைகளில் ப்ளாஸ்டிக் பையகளை விட பேப்பர்களில் கட்டியே பொருட்களை கொடுக்கின்றனர். இது மாநகராட்சியின் உத்தரவு என்று அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து தெரிந்தது.
ஆக, நகரம் சுத்தமாக இருக்க மக்களும் சில நடைமுறைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றுகின்ற்னர். சுத்தம் மட்டுமல்ல சத்தமும் இங்கில்லை. "Sleeping Town" என்று இங்கு வசிப்போர் இந்நகரை அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பேரூந்து நிறுத்தத்திலும் தானியங்கி  குடி தண்ணீர் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவற்றில் தண்ணீர் வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிவிடும் அளவிற்கு இருந்தாலும், அவைக்கட்ட அரசின் அனுமதி கிடைப்பது மிகவும் கடினமான விசயமாக இங்கிருப்பதால், யாரும் அடுக்குமாடி கட்டிடடத்தை விரும்புவதில்லை.

அடுக்குமாடிக்கட்ட முதல் நிபந்தனை, மனையின் அளவு சாதாரண மனையை விட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கவேண்டும். இங்கு சாதாரண மனையின் அளவு 5000 சதுரடி. ஒவ்வொரு வீடும் 5000 சதுரடி மனையில் கட்டப்பட்ட பெரிய பெரிய பங்களாக்கள். வீடுப்போக, பெரிய தோட்டங்கள், பூங்காக்கள் வைக்கும் அளவு இடம் வசதியாக உள்ளது. மேலும், இங்கு யாருமே சொந்தவீட்டுக்காரர்கள் இல்லை, அரசு "Lease" அடிப்படையில் 999 வருடங்களுக்கு மனையை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதாவது, மனையில் வீடுக்கட்டி தங்கிக்கொள்ளலாம்..ஆனால் அது மனைதாரருக்கு சொந்தமில்லை. கடைகள் இருக்கும் பகுதிகளில், கடைகளின் பின்புறம் இருக்கும் வீடுகள் மட்டுமே நம்மூர் வீடுகள் போன்று சிறிய வீடுகளை பார்க்க முடிகிறது.

வீடுகள் அந்தக்காலத்து முறைப்படி கட்டப்பட்டவையாக இருக்கின்றன. பெரிய பெரிய அறைகள் அவற்றிற்கு 2-3 கதவுகள் இருக்கின்றன. "ப்ரைவெட் ரூம்" என்பது இங்கில்லை. கூட்டுக்குடும்ப அமைப்பினால் இந்த மாதிரி கட்டிட அமைப்பு இருந்திருக்கும் என்று உகிக்கிறேன்.  வராண்டா, முகப்பு அறை, சாப்பிடும் அறை, படுக்கை அறை என எல்லாவற்றிற்கும் எந்தப்பக்கதிலிருந்தும் நுழையும் படியாக கதவுகள். பெரிய பெரிய ஜன்னல்கள். குரங்குகள், பறவைகள், மற்ற இயற்கை வாழ் ஜீவன்கள் இருப்பதாலோ என்னவோ, எல்லா வீடுகளிலும் பாதுகாப்பு கருதி சன்னல்களில் வெளிப்பக்கம் ஒரு அடி அளவில் கிரில் அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, பங்களாதேஷ்'லிருந்து அங்கீகாரம் இல்லாத ஊடுருவல் காரணமாக, திருட்டு பயம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே இங்கு பெண்கள் நகைகள் அணிவதில்லை, மேலும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள் திருட்டும் அதிகம். நம் எல்லை பாதுகாப்பு மிகவும் கடுமையானதாக இருந்தாலுமே, நீர் வழியாக இந்த ஊடுருவல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாதுகாவலர்கள் எதிரிலேயே கண் இமைக்கும் நேரத்தில் இக்கறையிலிருந்து அக்கறைக்கு நகைகளை கட்டி தூக்கிப்போட்டு நீரில் குதித்து தப்பிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இந்த ஊடுறுவாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், கல்யாணி' வாழ் மக்கள் எந்நேரமும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

கேரளாவைப்போன்றே இருக்கும் இந்த நகரில் எங்குப்பார்த்தாலும், தேக்கு, மா, பலா, வாழை, பாக்கு மரங்களும், வெற்றிலை, மிளகு போன்றவை ஊடுபயிராகவும்,  வானுயர்ந்த மரங்களும், மரங்களில் வித விதமாக சத்தம் எழுப்பும் பறவைகளில் வாசமும், பூக்கள் பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் நிறைந்து மிகுந்த ரம்யமான, பச்சை பசேலென்ற இயற்கை சூழ்ந்த இடமாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கங்கை ஆறு, கேரளாவைப்போன்றே பேய் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் மண்ணுக்குள் சென்றுவிடுகிறது. கேரளாவில் மண் சிறு சிறு செம்மண் உருண்டைகளாக இருக்கும், தண்ணீரை எளிதாக உறிஞ்சிவிடும் தன்மைக்கொண்டவை மேலும் கேரளாவின் பூமி அமைப்பே கடலை நோக்கி லேசாக சரிந்தவாறு இருப்பதால், தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுவது இயற்கை. கல்யாணியின் மண் தன்மை வேறுவிதமாக இருந்தாலும், இங்கும் மழை நீர் தேங்காதளவு மண் வளம் மட்டுமல்லாது, ஊரின் உள் கட்டமைப்பும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு என்று எடுத்துக்கொண்டால்............பதிவு ரொம்ப பெரிசா ஆகிடுச்சி..சோத்து மூட்டையை அடுத்த பதிவில் திறப்போம்...

அணில் குட்டி : அம்மணி .... பெங்காலியில் உங்க பேரின் உச்சரிப்பு ரெம்ப அழ்க்கா ..இருக்கு... ஹான்.. !! .

பீட்டர் தாத்ஸ் : “Travel and change of place impart new vigor to the mind.” – Seneca