தேவையான பொருட்கள் :

துவரம் பருப்பு : ஒரு சின்ன கப்
சாம்பார் காய் : தேவைக்கேற்ப
சின்ன வெங்காயம் : 8-10
தக்காளி : ஒன்று (நாட்டு)
பூண்டு - 3-4 பல்
மிளகாய்த்தூள் - 1.5 ஸ்பூன் (தனியா, மிளகாய் சேர்ந்து அரைத்தத்தூள்)
மஞ்சத்தூள் - 2 சிட்டிகை
புளி : எலுமிச்சை பழத்தில் பாதி அளவு
எண்ணெய் : தாளிக்க
வடகம் : 1/2 ஸ்பூன்
பெருங்காயம் : 2 சிட்டிகை
உப்பு - தேவைக்கேற்ப
கருவேப்பிலை, கொத்தமல்லி

1. காய்களை வதக்காமல் செய்யும் முறை * : குக்கரில் துவரம் பருப்பை பூண்டு சேர்ந்து குழைய வேகவைத்து, கடைந்து வைத்துக்கொள்ளவும்.  நறுக்கிய வெங்காயம், தக்காளியை கடைந்து வைத்த பருப்பில் கொட்டி, மஞ்சத்தூள் சேர்த்து கொதிக்கவைக்கவும். ஒரு கொதி வந்தவுடன், நறுக்கிய காயை சேர்த்து கொதிக்க வைக்கவும். 2-3 நிமிடம் கொதித்தப்பிறகு, மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து, புளியைக்கரைத்து வடிக்கட்டி ஊற்றி குக்கரை மூடவும். ஒரு விசில் வந்தால் போதுமானது. ஆவி அடங்கியவுடன், வாணலில் எண்ணெய் ஊற்றி வடகம், பெருங்காயம், கருவேப்பிலை தாளித்துக்கொட்டவும். கடைசியாக கொத்தமல்லியை பொடியாக நறுக்கி மேலே தூவி விடவும்.


2. வதக்கும் காய்கறி சாம்பார் செய்யும் முறை ** :  வாணல் வைத்து, வடகம், பெருங்காயம் , கருவேப்பிலை தாளித்து, வதங்கியவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து தக்காளி நன்கு வதங்கியவுடன் காயை சேர்த்து வதக்கவும். காய் நன்கு வதங்கியவுடன் வேகவைத்த பருப்பை கடைந்து, இவற்றை அதில் கொட்டி, மஞ்சத்தூள் , மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், புளியை கரைத்து ஊற்றி குக்கரை மூடி , ஒரு விசில் வந்தவுடன் இறக்கிவிடவும்.

3. கீரை சாம்பார் : முதல் செய்முறைதான். ஆனால் கீரையை கழுவி, நறுக்கிக்கொட்டி குக்கரை மூடாமல், அப்படியே கொதிக்கவைத்து கீரை வெந்தவுடன் இறக்கி, தாளித்துக்கொட்ட வேண்டும். கீரை சாம்பாருக்கு கொத்தமல்லி, கருவேப்பிலை தேவையில்லை.

4. வெங்காய சாம்பார் செய்முறை : காய்கறி எதுவும் இல்லாத நேரத்திலும், நெத்திலி கருவாடு, இறா, மீன் போன்றவை வறுக்கும் போதும் இந்த சாம்பார் வைப்பாங்க. குக்கரில் துவரம் பருப்பு+ பூண்டை வேகவைத்து, கடைந்து வைத்துக்கொள்ளவும். வாணலில் எண்ணெய் ஊற்றி, கடுகு, சீரகம், காய்ந்தமிளகாய் , பெருங்காயம், கருவேப்பிலை சேர்த்து தாளித்து, வெங்காயம் சேர்த்து நன்கு வதங்கியவுடன் அதில் பருப்பைக்கொட்டி, மஞ்சத்தூள், உப்பு சேர்த்து கொதித்தவுடன், கரைத்து வடிகட்டிய புளித்தண்ணீர் சேர்த்து நன்கு கொதித்தவுடன்  கொத்தமல்லி தூவி இறக்கிவிடவும். இந்த சாம்பாருக்கு வெங்காயம் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.

5. நோன்புக்கு அடுத்த நாள் 21 காய் சேர்த்து செய்யும் சாம்பார், இரண்டாவது முறைப்படி காய்கறிகளை வதக்கி செய்யவேண்டும். 

குறிப்பு :-

எங்க வீட்டில், நாட்டு காய்கறி & கீரை இவற்றை  கொண்டு தான் சாம்பார் செய்வாங்க.

* நாட்டு காய்கறிகளில் கத்திரிக்காய், முருங்கைக்காய், அவரைக்காய், பூசணிக்காய், வெண்டைக்காய்,மாங்காய், வாழைத்தண்டு, பாகற்காய், முள்ளங்கி (வெள்ளை/சிகப்பு),தக்காளி, சுண்டைக்காய், கீரையில் அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை ஆகியவற்றில் சாம்பார் செய்யலாம்.

சென்னை வந்து நான் கற்றுக்கொண்டவை : செளசெள, குடைமிளகாய், கேரட்+ பீன்ஸ், முளைக்கீரைத்தண்டு சாம்பார், இருந்தாலும் அடிக்கடி செய்வதில்லை.

**பாகற்காய் கசப்புப்போவதற்காகவும், முள்ளங்கி நீர் உறிஞ்சவும், வெண்டைக்காய் கொழக்கொழப்பு ப்போகவும், தக்காளி & சுண்டைக்காய் பச்சை வாசனைப்போகவும் வதக்கிவிட்டு சாம்பார் வைப்பார்கள்.


பருப்பு வேகவைக்கும் போதே பூண்டை சேர்த்துவிடுவதால், பூண்டு வாசனை வராது. பிடிக்காதவர்கள் பூண்டை தவிர்த்துவிடலாம்.

முருங்கக்காய்'க்கு குக்கரை மூடினாலும், ஒரு விசில் வருவதற்கு முன்னரே  இறக்கிடனும். அதிக நேரம் தாங்காது , காய் வெடிப்பு விட்டுடும். மாங்காய் 2-3 கொதியில் வெந்து விடும், குக்கரில் வைக்க அவசியமில்லை.

மாங்காய், பூசணிக்காய், கீரை வகைகள், மற்றும் ஆங்கில காய்கறி சாம்பாரில் புளியின் அளவு மற்ற சாம்பாருக்கு சேர்க்கும் அளவை விடக் குறைவாக சேர்க்கவேண்டும். மாங்காய் / தக்காளி சாம்பார் வைக்கும் போது அவற்றின் புளிப்பிற்கு தகுந்தார்ப்போன்று சில சமயங்களில் புளியே சேர்க்காமலும் சாம்பார் வைக்கலாம்.

அணில் குட்டி : "அட ஒரு சாம்பாரே சாம்பார் செய்ய சொல்லித்தருகிறதே ?! ?! " அப்படி சொல்லாம மறக்காம என்டர்க்கீயை தட்டி கவுஜச்சொல்றவங்க எல்லாரும் என் கட்சி..

பீட்டர் தாத்ஸ் : Part of the secret of a success in life is to eat what you like and let the food fight it out inside.