பாகுபலி' யாக இருக்க வேண்டியதில்லை....

சொந்த ஊர் போக எனக்கு கிடைக்கும்/கொடுக்கப்படும் நேரம் எப்போதும் ஒரு நாள் தான்.  தனியாக போவேன். விடியற்காலை சென்னையில் கிளம்பி 11 மணிக்குள் ஊரில் இருப்பேன். திரும்ப 4-5 மணிக்கு ஊரிலிருந்து கிளம்பி, இரவு 9 மணி அதிகபட்சம் 10 மணிக்குள் வேளச்சேரி வந்துடுவேன்.

ஆனால், அன்று ரயிலில் அனுப்பி வைக்கிறேன், வேகமா போயிடும்னு விழுப்புரத்தில் ரயில் கிளம்பும் போதே மாலை மணி 6.45. தாம்பரம் வந்து பஸ்ஸில் நேரம் பார்க்கும் போது 10.30 கடந்திருந்தது. இரவு, தனியாக பயணம் என்றாலே அதீத கவனம் இருக்கும். தலை முழுக்க காதுகள் முளைத்து, சின்ன சத்தத்தைக்கூட தலை திருப்பாமல் உணரும் கவனம் வந்துடும். வளையலை ரயிலேயே யாருமறியாமல் கழட்டி உள்ளே வைத்துவிட்டேன். துப்பாட்டாவை கழுத்தோடு சுற்றிக்கொண்டேன். செயின் அறுத்துட்டு போயிடுவாங்க என்ற முன்னேச்சறிக்கை.. இதை தவிர என் பாதுகாப்புக்கு தான்  காதுகள் கழுதை காதுகளாக மாறிவிடுவது. யாராவது தொடருகிறார்கள்னு தெரிந்தால் அதற்கு தகுந்தார் போல என்ன செய்யலாம்னு யோசிப்பேன். தனி பயணங்களில் எப்பவும் ஒருவித பய உணர்ச்சி இருக்கும். பொது இடங்களில் அநாவசியமாக பேசாமல் இருப்பது, யாரையும் பார்த்து சிரிக்காமல் இருப்பது குறிப்பாக ஆண்களை என பல ரூல்ஸ்ஸை ஃபோலோ செய்வேன்.

முன்கதவுக்கு பக்கத்தில் உள்ள லேடீஸ் சீட்டில் இரண்டாவதில் கம்பியொட்டி அமர்ந்திருக்கிறேன்.. பெண்கள் அதிகமில்லை, பெண்கள் இருக்கையிலும் ஆண்களே உட்கார்ந்திருந்தனர். பள்ளிக்கரணை தாண்டி பேருந்து வந்தபோது , திடீரென டிரைவர் சீட்டுக்கு பின்னால் இருந்து இருவர் எழுந்து பஸ்ஸின் வேகத்தில் தடால்னு முன்னால் ஓடிவந்து மிக சரியாக எனக்கு முன்னால் இருந்த சீட்டின் கம்பி்யை விழும் முன் பிடித்துக்கொண்டு, எனக்கு பின்னால் இ்ருந்த யாரிடமோ.. எழுந்திருங்கடா போலாம்.. " னு சொல்லும் போதே.. நல்லா தண்ணி அடிச்சிட்டு வந்திருக்காங்கன்னு தெரிஞ்சிது...

என் பின் சீட்டிலிருந்து எழுந்தவர்களும் தண்ணி.. இருவரும் நின்றபடியே ஏதேதோ பேச.. நடுவில் நானும் என் பக்கத்தில் ஜன்னலோர சீட் பெண்ணும்.. தவித்தோம்.  ஏனென்றால், முன்னே கம்பியை பிடித்து நின்றவர்களுக்கும் நிதானமில்லை.. பின்னால் எழுந்து நிற்பவர்களுக்கும் நிதானமில்லை.. இவங்க எப்ப வேணாலூம் என் மேல் விழலாம்.. இல்லாவிட்டால் வாந்தி எச்சில்னு எதாது கருமம் என் மேல் விழலாம்னு ஒருவித படப்படப்பு இருந்தது..

நடத்துனர் கவனித்து, "யோவ் வேளச்சேரி வர நேரம் இருக்கு, போய் உக்காருங்கய்யா" ன்னு சொல்ல, நாங்கள் இருவரும் உடலை சுருக்கி, குனிந்தபடி இருப்பதைப்பார்த்து, மற்ற பயணிகளும் அவர்களை உட்கார சொல்லி சத்தம் போட அவரவர் இருக்கையில் உட்கார்ந்தனர்.

இவர்களை கவனம் வைத்து வேளச்சேரி வரும் முன்னரே எழுந்து நின்றுவிடலாம்னு நான் எழுந்த அதே சமயம், முன் சீட்டில் இருந்த குடிகாரர்களும் முன்னைப்போலவே வேகமாக எழுந்து ஒரே பாய்ச்சலில் கதவு கம்பியை பிடித்து முன்னால் விழும் போது.. அநேகமாக என் மேல் விழவேண்டியது... சட்டெனறு ஒரு கை கம்பியை பிடித்து, அவர்களை என் மேல் விழாமல் தடுத்தது. கைக்கு சொந்தக்காரர் கதவுக்கு நேர் எதிரில் நின்றிருந்தார்.

நெற்றியில் சின்ன திருநீர் கீற்று (அந்த நேரத்தில்???) மெல்லிய வெள்ளை கதர் சட்டை, பாக்கெட்டில் இருக்கும் பணம் மொபைல் எல்லாம் வெளியில் தெரிந்தது. கருப்பு நிற பேன்ட், 30-35 வயதிருக்கலாம், கோதுமை நிறம், கலையான அமைதியான முகம்.

கையை கம்பியில் பிடித்ததோடு இல்லாமல் லேசாக தள்ள..அவர்கள்
பின்னோக்கி போனார்கள்.அவர்களை பார்த்து எனக்கு பின்னால் இருந்தவர்களும் எழுந்து வெளியில் வந்து என் பின்னால் விழும்படி நிற்க.....ஒன்றும் புரியாமல் கைக்கு சொந்தமானவரை நான் பார்க்க...அதை புரிந்து, வேகமாக... கண்களால் "அவருக்கு பின்னால் வரும்படி" செய்கை செய்தார். அடுத்தவினாடி அவரின் முதுகுக்கு பின்னால் நான் ஒளிய, இரண்டு கைகளையும் விரித்து குடிகார்கள் நால்வரும் என் பக்கம் வராமல் தடுத்ததோடு இல்லாமல் நான் இறங்கும் வரை பஸ்ஸின் ஆட்டத்திலும் அதே போஸ்'ஸில் நின்றிருந்தார். கதவருகில், ஒருசேர, நான்கு குடிகாரர்களின் ஆட்டத்தையும் பேச்சையும் தாங்குவது சாதாரண விசயமாக தெரியவில்லை. விஜய்நகர் வந்ததும் அவர் ஒரு கையை இறக்க.. வேகமாக இறங்கி ஓடினேன்.

பொதுவாக சின்ன விசயத்திற்கு கூட நன்றி சொல்லும் நான், அவருக்கு நன்றி சொல்லல.. இறங்கியவுடன் திரும்பிப்பார்த்து ஒரு புன்னகைக்கூட செய்யல...நேரம் அதிகமாகிவிட்டதால், வீட்டுக்கு செல்வதில் மட்டுமே என் கவனம் இருந்தது. ஏன் நன்றி சொல்ல எனக்கு தோணலன்னு இப்ப வரைக்கும் தெரியல.. ஆனால்.. அவரின் சமயோஜிதமான கண் அசைவு, கைகளை கொண்டு 3-5 நிமிடங்கள் என்றாலும் தொடர்ந்து தாய் குழந்தையை அடை காப்பது போல காத்தது..சில ஆண்டுகள் சென்றுவிட்ட பொழுதும்....இன்றும் நினைவில் இருக்கு....

வெளியிடங்களில் நேரத்தை பயன்படுத்தி உரசிவிட்டு செல்லும் ஆண்களுக்கு மத்தியில். சமயத்திற்கு ஒரு பெண்ணை காக்கும் இதுபோன்றவர்கள் தான் "ரியல் ஹீரோஸ்"..  பாகுபலி போல வீரம் தேவையில்ல...(தலைப்பை டச் பண்ணிட்டேனா? :) ) இப்படி கொஞ்சமாவது பொறுப்போடு இருந்தால் போதும்....

அணில் குட்டி : எப்பவோஓஓ நடந்தது...... வேல வெட்டி இல்லைன்னா இப்படித்தான்.. எதையாச்சும் .....

பீட்டர் தாத்ஸ் : Courage is contagious. When a brave man takes a stand, the spines of others are often stiffened. -Billy Graham

பேலியோ உணவு முறை - சொரியாஸிஸ் நோய்

ஒரு நாட்டின், இடத்தின் உணவு என்பது அங்கு அமையும் விவசாயத்தை பொறுத்தது. விவசாயம் அவ்விடத்தின் தட்பவெப்ப சூழ்நிலையை சார்ந்து அமைகிறது, தவிர மண் மற்றும் நீரின் தன்மை, வளத்தையும் பொறுத்தது,

ஆதிமனிதன் காலத்தில் இருந்த உணவு பழக்கத்தை கடைப்பிடிக்கனும்னு சொன்னால் ?!! அதே மண் வளமும் நீர் வளமும் இப்பவும் நம்மிடம் இருக்கா? காய்கறி முதலில் இயற்கையானதாக கிடைக்கிறதா?  அவன் பல கிமீ நடந்தான், மரங்களில் ஏறினான், தாவினான், மலைகளில் ஏறினான், நீந்தினான், அவனின்  உடல் உழைப்பு நமக்கு இருக்கிறதா? முதலில் நீங்க காலையில் சாப்பிட சொல்ற கிலோ கணக்கு பாதாம் பெற, அவன் பாதாம் மரங்களை வளர்த்தானான்னு எனக்கு மண்டை காய்ச்சலாக இருக்கு....

குஜராத்தில் விளையும் உருளைக்கிழங்கு, கேரட், முள்ளங்கியை ஒரு போதும் தமிழ்நாட்டில் உள்ள அதே காய்கறியோடு ஒப்பிடவே முடியாது. இங்கு பச்சைமிளகாய் இரண்டை நீட்டு வாட்டில் நறுக்கி உப்புமாவிற்கு சேர்ப்பேன், ஆனால் குஜராத்தில் 5 மிளகாய் போட்டால் கூட காரம் இருக்காது. பச்சையாக நம்மூர் முள்ளங்கியை சாப்பிட முடியாது...அதன் சுவை அப்படி. சற்றே காரமும் இருக்கும். அதுவே குஜராத்தில் முள்ளங்கியை நறுக்கி வெள்ளரிக்காய் போல் சாப்பிடமுடியும்.நீர்வடிந்து, லேசான தித்திப்போடு சுவையாக இருக்கும். உருளைக்கிழங்கு இல்லாமல் இவர்களின் சப்ஜி இருக்காது, ஆனால் நம்மூர் உருளைக்கிழங்கை இப்படிதொடர்ந்து நம்மால் சாப்பிட முடியாது.

இடத்திற்கு இடம் காய்கறியின் தன்மை, நிலம், நீர், மண், வெப்பம், மழை சார்ந்து மாறுகிறது. குளிர் பிரதேசதங்களில் செரிமானம் சார்ந்தும் உணவு பழக்கம் அமைகிறது. இதில் கோதுமையை பற்றியும் அதை தொடர்ந்து  சாப்பிடுவதால் சொரியாஸிஸ் வியாதி வருவதாகவும் படித்தபோது.. நிஜமாகவே ஆச்சரியமாக இருக்கிறது. பஞ்சாப்'பில். கோதுமை தவிர வேறு விளைச்சல் ஆதாரம் இல்லை, என்ன சாப்பிடுவார்கள்? நூற்றாண்டுகளாக வீரம் & வலிமை மிக்க மக்கள். நீங்கள் சொல்லும் தோல் வியாதி சாத்தியமெனில், காலங்காலமாக கோதுமை சாப்பிட்டு வரும் பஞ்சாப் மற்றும் வட மாநிலத்தவர் அத்துனைப்பேரும் சொரியாஸிஸ் அல்லது வேறு தோல் வியாதியால் அவதிப்படுவது வெளிவந்திருக்குமே.. ?!

வெளிநாடுகளில் ஆய் துடைக்க பேப்பர் பயன் படுத்துகின்றனர். தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் நம்நாட்டில் ஏன் இப்பவும் நாம் தண்ணீர் பயன்படுத்துகிறோம்?. உணவு பழக்கமே காரணம், பேப்பரால் துடைத்து போடும் அளவுக்கு தான் அவர்கள் உண்கிறார்கள். அப்படி அவர்கள் உண்ண அந்த நாட்டின் புவியியல், தட்பவெப்பநிலை மட்டுமே காரணம். பிரான்ஸ்'ஸில் மாட்டையும், பன்றியையும் முதன்மை உணவாக எடுக்கின்றனர். அத்துடன் பேக் செய்யப்பட்ட ரொட்டி வகைகள், பச்சை காய்கறி.  மாடு, பன்றியை அவர்கள் அதிகமாக சாப்பிடக்காரணம் உடல் உஷ்ணத்திற்காக..  உடல் உஷ்ணம் அந்நாட்டின் காலநிலைக்கு தேவை, இல்லாவிடல் அன்றாட வாழ்க்கை சாதாரணமாக அமையாது.

இங்கு நமக்கு இருக்கும் சூட்டிற்கு தொடர்ந்து கோழியையும், அசைவ உணவுகளையும் எப்படி சாப்பிட முடியும்?! அதற்கு சமமாக நெய்யை கிலோ கணக்கில் சாப்பிட சொல்லலாம். எதை ஒன்றையுமே முற்றிலுமாக நிறுத்திவிட்டு, அதற்கு மாற்றாக வேறு ஒன்றை தொடர்ந்து சாப்பிடுவது சரியான முறையாக எப்படியாகும்?

நாம் உடுத்தும் உடைக்கூட மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடுகிறது. கேரளத்தின் மழைக்கு துணிகள் காயாது, கனமான துணிகள் காயாமல் துர்நாற்றம் வீசும்.அதனாலேயே அவர்கள் ஆண் பெண் வித்தியாசம் இன்றி வேட்டியை உடுத்துக்கின்றனர்.. வெயிலும் அங்கு அதிகம். ஆக இரண்டு பருவத்திற்கும் ஏற்றது அந்த ஆடை. அப்படியே உச்சிக்கு போனால் கம்பளிஆடை, வயிற்றில் நெருப்பு கட்டிக்கொண்டு வாழும் காஷ்மீர், ஹிமாச்சலபிரதேச மக்கள். எப்படி நமக்கு ஒரே மாதிரி உணவும், உடையும் சாத்தியப்படும்? மாநிலத்திற்கு மாநிலம் இடத்திற்கு தகுந்தார் போன்று மாறுபடும் தானே?

ஐயா, இப்போது நமக்கு கிடைக்கும் காய்கறிகள், பழங்கள் , தானியவகைகள், பால், முட்டை,தயிர் எதாது ஒன்று இயற்கையாக கிடைக்கிறதா? பால் தரும் மாடு பேப்பர்களை தின்று வளர்கிறது.?!??! ஆதிமனிதன் காலத்தில் இப்படிதான் மாடுகள் இருந்தனவா?  இன்றையக்கால கட்டத்தில் கோழிகள் எப்படி வளர்க்கப்படுகின்றன??? ஊசி மூலம் வளர்கின்றன. நீங்கள் பரிந்துரைக்கும் சிக்கன் நாட்டு கோழி மட்டுமா? அப்படியென்றால், அவை என்ன சாப்பிட்டு உடலை வளர்க்கின்றன? கடலிலிருந்து கிடைக்கும் மீன்கள் சுத்தமானது தான் என்று உங்களால் சொல்லமுடியுமா? பிடித்தவுடன் அதை 1-2 நாளாவது ஐஸ்பெட்டியில் வைத்து தான் நமக்கு வந்து சேர்கிறது. அதைத்தான் சாப்பிடுகிறோம். உரம், பூச்சி மருந்து இல்லாமல் காய்கறிகள், பழங்கள் உள்ளனவா?

முருங்கக்கீ்ரை எடுத்துக்கோங்க..தினம் வீட்டு தோட்டத்திலிருந்து உடைத்து, ஆய்ந்து கழுவாமல் சமையல் செய்வாங்க. அதே வீட்டுத்தோட்டத்தில் அந்த கீரையை இப்போது எடுத்து கழுவாமல் செய்யமுடிவதில்லை.காரணம் அதில் காற்றில் கலந்து வந்து படியும் தூசியும் பெட்ரோல் புகையும்.... கழுவினால்..அதிலிருக்கும் விட்டமின் சக்தி தண்ணீரோடு சென்றுவிடும் என்பதே அந்தக்கீரையை கழுவாமல் செய்யக்காரணம், இப்போது கழுவாமலும் சாப்பிடமுடியாது, கிடைக்கும் வரை சக்தி கிடைக்கிட்டும் என்றே செய்கிறோம். அப்படிதான் நமக்கு கிடைக்கும் எல்லா காய்கறி, தானிய, பழ வகைகளும்.

கேரளாக்கு போனால் அவர்களின் தண்ணீர் பழக்கத்திலிருந்து எல்லாமே வேறு, சீரகம் சேர்ந்து காய்ச்சிய தண்ணீர்தான்  குடிப்பாங்க. காரணம் அவங்களுக்கு அவர்களின் தண்ணீரின் தன்மை தெரியும். ஏன் இங்கே கொல்கத்தாவில் ஒரு டம்ளரில் தண்ணீர் பிடித்து ஒருநாள் வைத்திருந்தால் போதும், கருப்பு நிறத்தில் மிக மெல்லிய வண்டல் படியும் , அதில் ஏகப்பட்ட நச்சுத்தன்மை மிகுந்த Arsenic Elements இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இங்கு அநேக வயதானோர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர், பல ஆண்டுகளாக தொடர்ந்து அதையே அருந்திவருவதால், இதை தவிர வேறு நோய்களும் தாக்கப்படுவதாக சொல்கிறார்கள்.

இப்போது உங்களின் பேலியோ டயட்டில்  குடிக்கும் தண்ணீருக்கு என்ன மாற்று நீரை பரிந்துரை செய்வீர்கள்.?

இஸ்லாமியர்களை எடுத்துக்கோங்க, பிரியாணி செய்யும் போது புதி்னா சட்னி ஒன்னு செய்வாங்க, தயிரோடு பச்சையாக அரைத்து சேர்க்கப்பட்ட புதினா... (முழு சமையல் குறிப்பு தெரியாது) இது செரிமானத்திற்காக. குஜராத்தில் காலையில் டிபனுக்கு ஒரு தட்டு நிறைய ஜிலேபி வைத்து சாப்பிடுவார்கள். ஆனால் பச்சையாக வெங்காயம், முள்ளங்கி, எலுமிச்சை, பச்சைமிளகாய் ஒரு கிண்ணம் வைத்தும் சாப்பிடுவார்கள்.

ஒவ்வொரு இடத்திலும் நம் உணவுமுறை மிக சரியாகதான் அமையப்பெற்றிருக்கிறது. அளவைத்தாண்டி நாம் அதிகாக உண்ணும் போதும், உடல் உழைப்பு இல்லாத போதும் அது நமக்கு பிரச்சனையாகிறது. எத்தனைப்பேர் இங்கே ஜிம் போறீங்க? ஒர்க் அவுட் செய்யும் முன் எடையை பாருங்கள், செய்து முடித்தப்பின் எடையை பாருங்க. 1 லிருந்து 1.5 கிலோ குறைந்திருக்கும். நாம் அன்றாடும் உண்ணும் உணவிற்கு தகுந்தார் போன்று தகுந்த உடற்பயிற்சிகளை தொடர்ந்து செய்துவந்தாலே கொழுப்பு , சர்க்கரை கூடாமல் இருக்கும்.

ஃபாஸ்ட் ஃபுட் கூடாது, எண்ணெய் உணவுகள் கூடாது, பேக்கரி ஐட்டம்ஸ் கூடாது, பெப்ஸி, கோலா போன்ற செயற்கை பானங்கள் கூடாது..... இதுப்போல நிஜமாகவே உடலுக்கு கேடு விளைவிக்கும் பழக்கங்களை வேண்டாம் என்று சொல்லுவதில் எந்த பிரச்சனையும் இல்லை. நல்ல விசயமே.. அதே சமயம்....

கார்போஹைட்ரேட் அதிகமாக இருக்கிறது என்ற ஒரு காரணத்திற்காக கோதுமை, தானியங்கள், அரிசி , சில காய்கறிகள் ஒவ்வாது என்று சொன்னாலும் பரவாயில்லை...சொரியாஸிஸ் வரும்..என்று சொல்வது எல்லாம் ரொம்பவே அதிகமாக தெரிகிறது.  எனக்குத்தெரிந்து என் முன்னோர்கள் அரிசி உணவை மட்டுமே சாப்பிட்டு வந்தவர்கள், யாருமே தோல் வியாதியால் அவர்கள் சாகும் வரை அவதிபடவில்லை என்று உறுதியாக சொல்லமுடியும். நெல் பயிர் வேரிலிருந்து அதன் உமி வரை நம் உடலுக்கு பல விதத்திலும் பயன் தரக்கூடியது. நம் நாட்டு வைத்தியத்தில் இதன் நற்பயன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

முடிவாக : 
1. உடல் இளைக்க வேண்டி தற்காலிகமாக பேலியோ உணவை எடுத்துக்கொண்டால் சரி...

2. இல்லை இதுவே தான் நம் உணவு, இது பல நற்பயன்களை தருகிறது, பல நோய்களை மருத்துவம் இன்றி தானாகவே குணப்படுத்துவது நிரூபிக்கப்பட்டு வருகிறது, அதனால் தொடர்ந்து எடுத்துக்கொள்வது நல்லது என்று சொன்னால் -

2. குறைந்தபட்சம்,  7-8 தலைமுறையாவது ஆணும் பெண்ணும் பேலியோ  உணவை மட்டுமே எடுத்து வந்து, அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கும் பிறந்த நாள் முதல் பேலியோ உணவை மட்டுமே கொடுத்து வளர்த்து, குழந்தைகளின் அறிவு, உடல் வளர்ச்சி, இத்தியாதிகள் எல்லாவற்றையும் அறிவியல் மருத்துவ ரீதியாக ஆய்ந்து, பிரச்சனைகள் இல்லை என்றால் மட்டுமே இதனை அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து பயன்படுத்துவதற்கான சாத்தியங்களை யோசிக்கவே முடியும்

அதற்கு முன் -

பேலியோ டயட்டில் இருப்பவர்கள், தாராளமாக இருங்கள், ஆரோக்கயமாகவும்,, உடல் மெளிந்து என்றும் 16 ஆகவும் இருங்கள்., உங்கள் உணவின் தன்மை காரணமாக ஏன் உங்களுக்கு இறப்புக்கூட இல்லாமல் இருக்கலாம். ...தொடருங்கள், மனமார்ந்த வாழ்த்துகள்.. பிரச்சனையேயில்லை..

ஆனால், தயவுசெய்து, டயிட்டில் இல்லாதவர்களுக்கு இல்லாது பொல்லாதை சொல்லி ஒரு வாய் சாப்பிட பயப்படும்படி செய்யாதீர்..

அணில் குட்டி : ஒன்னுமில்ல... அம்மணி  இடதுகாலில் லைட்டா சொரிஞ்சாங்க.... அந்த சமயம் பாத்து சொரியாஸிஸ் பதிவு கண்ணுலப்பட... ஒருவேள கோதுமை சாப்பிடறதால அவங்களுக்கும் சொரியாஸிஸ் வந்துடுத்தோன்னூ பக்' ன்னு ஆகி.. இவ்ளாம் பெர்ரிய போஸ்ட்....

பீட்டர் தாத்ஸ் : Nothing burns more calories than dancing in 5-inch heels... try it! -Ariana Grande
(G+ ல் பகிர்ந்தது)