கங்கை @ கொல்கத்தா

செப்டம்பர் மாதம் இங்கு வந்தோம். டிசம்பர் 20 தேதி ஆகுது. சென்னையிலேயே ரொம்ப வெளியில் எல்லாம் போகமாட்டேன்..  இங்க சொல்லவே வேணாம். மொழி தெரியாது..  கடைக்கு எப்பவும் வூட்டுக்கார் கைய பிடிச்சிட்டு போயிட்டு, அவரோட வாயாலேயே பேசி..தேவையானதை வாங்கிட்டு வந்துடுவேன்.

இதுல வூட்டுக்கார் உதவி இல்லாமல் தத்து பித்துன்னு எதையோ பேசி சேர்ந்து, தொடர்ந்து போயிட்டும் வரது டான்ஸ் க்ளாஸ் மட்டும் தான். ஜிம்'மும் வூட்டுக்கார் தான் சேர்த்துவிட்டாரு.. ஆனா அங்கவும்.. கடகடன்னு என்னிடம் பெங்காலில் பேசுவோரிடம் திரு திரு'ன்னு முழுச்சி.. "மவளுங்களா..நானும் இப்படி தமிழ் பேசினா ஒரு மண்ணும் உங்களுக்கு புரியாது" ன்னு மனசுக்குள்ள செம கடுப்பா சொல்லிக்கிட்டு, வெளியில் சிரிச்சிக்கிட்டே "முஜே பெங்காலி மாலும் நய்,ஹிந்தி பி குச் குச் மாலும், அங்ரேஜி சல்தா.. .மே யூ ப்ளீஸ் டாக் இன் இங்லீஷ்  " னு சொல்லின்னா போதும்.. அப்படியே தெறிச்சி ஓடிடுவாளுங்க !! ம்ம்ம்ம் அது! அந்த பயம் இருக்கனும் !!! யார்கிட்ட' ன்னு எஸ் ஆகி ....என் வேலைய நான் பாத்துட்டு வந்துடுவேன்.

இப்படியான தினப்படி வாழ்க்கையில், சுற்றி நடப்பவற்றை, அவர்களின் வாழ்க்கைமுறை, வரலாறுன்னு பார்க்கும் போது ..இந்தியாவில் "பெங்காலி" கள் தான் எல்லாவற்றிலும் முதன்மையானவர்கள், சிறந்தவர்கள்னு எண்ண வைக்கிறது. எந்த புதிய விசயத்தையும் இவர்கள் தான் ஆரம்பிக்கிறார்கள் அறிமுகம் செய்கிறார்கள் என்றும் தெரிகிறது. 

ஆங்கிலம் மட்டுமே இவர்களுக்கு வேற்று மொழியில்லை. ஹிந்தியும் இவர்களுக்கு பிடிப்பதில்லை.  தாய்மொழி ஒன்றை வைத்துக்கொண்டு பல விசயங்களை இவர்களால் சாதிக்க முடிகிறது என்பது இவர்களின் வலிமை.

அந்தமான் சிறையை எத்தனைப்பேர் பார்த்திருக்கிறீர்கள்..?! அங்கு சிறையில் அடைக்கப்பட்ட இந்தியர்களில் அதிகபட்சமானோர் பெங்காலை சேர்ந்தோர். நாட்டுக்காக எத்தனை துன்பத்தை அனுபவித்திருப்பார்கள் என்று சொல்லவேண்டியதேயில்லை. இப்போதும் சென்னை தவிர்த்து கல்கொத்தாவிற்கும் அந்தமானுக்கும் தினசரி விமானப்போக்குவரத்து உள்ளது.  இந்த சிறையில் இந்திய கைதிகள்  பெயர் பட்டியலில் மிக பொறுமையாக நான் தமிழர்களின் பெயர்களை தேடியதில் மூவரின் பெயர் கிடைத்தது. யார்னு கேக்கப்பிடாது. ஃபோட்டோ எடுக்கல.. பெயரும் நினைவில்லை.   3 பேர் மட்டும்னு தலையில் நல்லா பதிஞ்சியிருக்கு..!!

கவிதைகள், கலை, கலாச்சாரம், கல்வி,




கடவுள் என எல்லாவற்றிலும் முதன்மையானவர்களாக இருக்கிறார்கள்.  ரவீ(பி)ந்தரநாத் தாகூர், நேதாஜி, விவேகானந்தர் போன்றோர் சில உன்னத எடுத்துக்காட்டுகள்.  எத்தனை நாகரீகம் வந்துவிட்ட போதிலும், பொருளாதாரத்தில் அனைத்து நிலையிலுள்ள மக்களும் அவர்களின் சொந்தக் கலாச்சாரத்தை தொலைக்காமல் இருக்கிறார்கள், தொடர்கிறார்கள் என்பது அழுத்தமாக பதியப்பட வேண்டிய விசயம். !

இப்படியான இந்த பூமியில் -

புனித நதியான கங்கை
- பெங்காலின் பல பகுதிகளில் வளைந்து நெளிந்து "வருடம் முழுக்க வற்றாமல்" கரைக்கு கரைத்தொட்டு ஓடிக்கொண்டிருந்துக்கிறது. 1.5 -2 கிமி தொலைவு அகலமுடையதாக (மனக்கணக்கு) இடத்திற்கு இடம் இந்த அகலம் கூடும் குறையும்.  இந்த நதியைப்பார்க்க பார்க்க பார்க்க  ஆனந்தம்.. "யப்பாஆ...எவ்ளோ தண்ணீ.." ன்னு என்னை பிரம்மிக்க வைக்கிறது. ஒவ்வொரு முறை இந்நதியை பார்க்கும் போதெல்லாம்...இந்த இரண்டு கண்கள் போதவில்லை இதை ரசிக்க...இன்னும் கூடுதலாக கண்கள்  இருந்தால் என்ன என நினைக்கிறேன்.  

ஒரு நாட்டுக்கு தேவையான முக்கிய மூலதனத்தில் "நீர்" முதன்மை.. அந்த நீர் ஆதாரத்தை கையில் வைத்துக்கொண்டு ...எப்போதும் "வேலையில்லா பிரச்சனை", "வறுமை" என பேசி வருவதோடு, வேலைக்காக கூலிகளாக வேற்று மாநிலத்தை தேடி செல்கின்றனர்.

இப்படி வளமான ஒரு பூமியின், இவர்களின் வாழ்வியல் பிரச்சனைகளுக்கு அடிப்படை காரணம் "கம்யூனிசம்"  என்றால்................

அணில் குட்டி : எப்படி முடிச்சியிருக்காங்க பாத்தீங்களா? எப்பவும் எல்லாந்தெரிஞ்ச ஏகாம்பரம் மாதிரி சீன்...!! .. ஆனா அம்மணிக்கு கம்யூனிசம் பத்தி ஒன்னும் தெரியாது..அதான்.. அப்ரப்ட்டா அப்படியே நிறுத்தியிருக்காங்க...

பீட்டர் தாத்ஸ் : “The river is everywhere.” ― Hermann Hesse, Siddhartha  

Gangai : My clicks
Rest images : Courtesy Google : Thx.

திரைசீலை

எங்களின் ஆட்டோவைப் பார்த்ததும், மாமா வேகமாக இறங்கி தெரு கிரில் கேட்டை நோக்கி ஓடிவந்தார்....

"வாங்கக்கா.. நானே வந்து அழைச்சிட்டு வரேன்னு சொன்னா கேட்டீங்களா?"

"வழி தெரியாட்டி பரவாயில்ல.. நீ எதுக்கு வரனும்?! "

மாமி பின்னாலேயே வந்து வரவேற்றார்..

"மாமா எல்லாம் ஃபோன்ல சொன்னாருக்கா.. ..என்ன அனு எப்படி பிரிப்பேர் செய்திருக்க? " என்னை தோளோடு சேர்த்து அணைத்தபடி கேட்டார்.

"நல்லா பிரிப்பேர் செய்திருக்கேன் மாமா.."

மாமி... தண்ணீர் கொடுத்துவிட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க..
மாமா ஆபிஸ் கிளம்பனும்னு சொல்லிட்டு, குளிக்க உள்ளே செல்ல, அம்மாவும் மாமியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நான் சோபாவில் உட்கார்ந்து மாமாவின் குட்டி மகளுடன் விளையாட ஆரம்பிச்சேன்...

அம்மா... மாமியிடம்.. "என்னமா இது.. ஏன் மேல இருக்க வெண்டிலேட்டருக்கு எல்லாம் ஸ்கீரின் போட்டு வச்சியிருக்கீங்க? "

"ம்ம்க்கும்..அதை உங்க தம்பிய கேளுங்க..எதிர் வீட்டு ஆளு இங்கவே எந்த நேரமும் பாக்கறாராம்... அதும் என்னை தான் பாக்கறாராம்..அதுக்காக இந்த ஏற்பாடு.. " கடுப்பாக பதில் வந்தது..

"ஓஹோ..அது சரி.. ஜன்னலுக்கு ஒக்கே..அது ஏன் மேல வென்ட்டிலேட்டருக்கு எல்லாம் போட்டிருக்கான்.. ?!"

"ஹான் இங்கெல்லாம் ஸ்கிரீன் போட்டுட்டோம்னு, எதிர் வீட்டு ஆளு மேல மாடியில் நின்னு பாக்க ஆரம்பிச்சிட்டாராம். அதனால மேலயும் போட சொல்லி ஒரே வம்பு... "

"என்னமோ போ.. ஹால்ல சுத்தமா வெளிச்சமே இல்ல.."


"உங்க தம்பிக்கிட்ட சொல்லுங்க.. நீங்க சொன்னாவாச்சும் கேக்கறாரான்னு பாக்கலாம்..."

**************

அம்மா, மாமாவிடம் இந்த ஸ்கிரீன் விசயமா பேசல.. என் பரிட்சை விசயமா பேசிட்டு.. மதியம் கிளம்புவதாக சொல்லி, மதியம் சாப்பாடு முடித்த கையோடு கிளம்பிட்டாங்க..

மாமா அலுவலகம் செல்லும் போதே குட்டிப்பொண்ணையும் ஸ்கூலில் விட கூட்டிட்டு போயிட்டாரு...

எனக்கு நாளை தான் பரிட்சை, மாமா தான் கூட்டிட்டு போகனும். என் புத்தங்கங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிச்சேன்..

மாமா சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மாமி, அவசர அவசரமாக ஜன்னல் ஸ்கிரீனை ஒதுக்கி வைத்து, ஜன்னல் கதவை சிறிய இடைவெளி இருக்கும் படி மூடிவைத்து,  (அதாது வெளியிலிருந்து பார்த்தால், உள்ளிருந்து யாரும் கவனிக்கிறார்கள் என்று தெரியாது), ஆர்வமாக எதையோ பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அவங்க முகத்தில் அப்படியொரு பரவசம்.... .....

என்ன பார்க்கறாங்கன்னு தெரியல.... எதையோ பார்க்கட்டும் நமக்கென்னன்னு நான் படிச்சிக்கிட்டே இருந்தேன்.. தீடீர்னு என் நினைவு வந்தவங்களாக என்னை திரும்பி பாத்தாங்க..

லேசாக புன்வறுவல் செய்தேன்..

என்ன நினைச்சாங்கன்னு தெரியல.. "அனு அனு... இங்க வாயேன்.. இந்த சந்து வழியா எதிர்பக்கம் அந்த மூணாவது வீட்டைப்பாறேன்.. அங்க ஒருத்தர் பிங்க் கலர் சட்டைப்போட்டுட்டு பேசிக்கிட்டு இருக்கார் இல்ல..அவரு ஒரு டாக்டர்..  இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி நம்ம வீட்டு வழியா நடந்து போவாரு.. .. அவர் பேசும் போது லேசா சிரிச்சாக்கூட அவர் முகம் சிவந்துடும் பாரேன்..அவ்ளோ கலரு அவர்... "

அவங்க ரகசியமாக பார்ப்பதை பார்த்து, தப்பா நினைச்சிக்க போறேன்னு,  என்னையும் அழைத்து காட்டறாங்கன்னு புரிந்தது. மாமி கூப்பிட்டும் போகாமல் இருந்தால் மரியாதை இல்லையேன்னு, சென்று பார்த்தேன்.

ஆமா, அவங்க சொன்ன மாதிரியே அங்க ஒருத்தர் நின்னு பேசிக்கிட்டு இருந்தார்...

"மாமி படிக்க நிறைய இருக்கு" ன்னு சொல்லிட்டு வந்து புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன்..

மாமா போட்டிருந்த  திரைசீலை காற்றில் அசைந்து வந்து என்னைத்தொட்டு சென்றது.... ............

 
Images courtesy Google : Thx. 

நிர்பந்தம்

எதிரில் ஒரு சூப்பர் மார்க்கெட்.  எது தேவைனாலும், சட்டுன்னு ஓடிப்போய் வாங்கிட்டு வந்துடலாம்.

புது ஊர், மொழி தெரியாத இடத்தில், இந்த சூப்பர் மார்க்கெட் எனக்கு பெரியதொரு வரப்பிரசாதம். பொருட்களை நானே தேடி எடுத்து, பில் போட்டு, பணம் கொடுத்து வாங்கிவரும் வரை, யாரிடமும் வாய்த்திறக்க வேண்டிய அவசியமில்லை. ஆரம்பித்தில்"பை கொண்டு வந்திருக்கீங்களா"ன்னு பெங்காலியில் கேட்டாங்க.... நான் முழிப்பதைப் பார்த்து, சைகையில் செய்து காட்டினாங்க..  இப்ப அதுவும் இல்ல, போகும் போதே பை எடுத்துட்டுப் போயிடுவேன்.

அந்தக்கடையில்..ஒரு நாள்,

உள்ளே நுழையும் போது, பொருட்களை எடுக்கும் இடத்தில் நடு மத்தியில், வயதானவர் ஒருவர் கால் மேல் கால்போட்டு நாற்காலியில் அமர்ந்திருந்தார். சுருக்கமில்லாத இன்'செய்யப்பட்ட முழுக்கை சட்டை, பேன்ட், பாலிஷ் போட்ட ஷூ சகதிமாக டிப் டாப்பாக இருந்தார்.  'வாடிக்கையாளர் முடியாமலோ அல்லது  உடன் வந்திருப்பவர் வாங்கும் வரையோ  உட்கார்ந்திருக்கிறார்  போல' என்று ஊகித்தப்படி சென்றேன்.

எப்போதும் அந்த கடையில் 23-26 வயதுள்ள இரண்டு பிள்ளைகள் இருப்பாங்க. நான் பொருட்களை எடுத்துட்டு வந்து பில் போடும் வரை, என் பின்னாலேயே வருவாங்க..எதாது தடுமாறினால் உதவி செய்யலாம் அல்லது என்ன வேண்டுமென கேட்கலாம் என்றிருக்கலாம். அன்று அந்த இருவரில் ஒருவன் நான் உள்ளே சென்று பொருட்களை எடுக்கும் போது பெரியவரைப்பார்த்து அதட்டலாக... (பெங்காலியில் தான்)

"எழுந்து அவங்களுக்கு  உதவி செய்ங்க.. அவங்க தேடறதைக்கேட்டு எடுத்துத்தாங்க"

அட.. இவர் இங்க புதுசா வேலைக்கு சேர்ந்திருக்காரா?! ஓய்வுவெடுக்கும் வயதில், இப்படி வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் வந்துவிட்டதா இவருக்கு ?! சின்னப்பசங்க எல்லாம் அதட்டுதே'ன்னு மனசுல நினைச்சிட்டே பொருட்களை எடுத்தவாறு இருந்தேன்.

உதவிசெய்ய வந்தார், கேட்டார்.. நானே எடுத்துக்கறேன்னு (ஆங்கிலத்தில்) சொல்லி புன்னகைத்துவிட்டு, என் வேலையைப் பார்த்தேன். அப்பாடா.'.ன்னு திரும்பவும் போய் சேரில் உட்கார்ந்துக்கொண்டார். 

**************
எங்கள் வீட்டு ஜன்னலிருந்து பார்த்தாலே கடைத்தெரியும், சில நேரங்களில் நின்று வேடிக்கைப்பார்த்து பொழுதுப்போக்குவேன். அவர் சேர்ந்து ஒரு வாரம் சென்ற ஒரு நாளில்...

வெளியில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார். அன்று, சட்டையை டக்'இன் செய்யாமல் வெளியில் விட்டிருந்தார்..

ம்ம்...வேலைக்கு தகுந்தார் போன்று தன்னை மாற்றிக்கொள்ள முயல்கிறார்.... போல.....

இங்கு கடைகள் மதியம் சரியாக 1.30 மணிக்கு மூடிவிட்டு திரும்ப மாலை 5- 5.30 க்கு தான் திரும்ப திறப்பார்கள். இந்தக்கடை மட்டுமல்ல.. மதிய நேரத்தில் உசுரு போனாலும் இங்க எதும் வாங்கமுடியாது, எல்லா கடைகளுமே மூடி இருக்கும்.

எப்போதும் போல ஜன்னல் வழியே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.  மிக சரியாக மாலை 5 மணிக்கு திறக்கும் சூப்பர் மார்க்கெட் அன்று திறக்கப்படவில்லை. வயதானவர், பக்கத்தில் இருக்கும் சின்ன கடை வாசலில்,  பெஞ்சில் அமர்ந்து தெருவையே பார்த்துக்கொண்டிருந்தார்.

அடடே... சரியான நேரத்திற்கு வந்து காத்திருக்கார், ஆனா, கடை திறக்கறவங்கள காணமேன்னு யோசிச்சிட்டே அவரைப்பார்த்தேன்..ஷூ'வை காணல.. செருப்புக்கு மாறியிருந்தார்.. 

அவரின் நடை, உடை , பாவனை, உடல் மொழி அத்தனையும் அவர் ஏதோ நல்ல வேலையில், நல்ல பதவியில் இருந்து ஓய்வுப்பெற்றவர் போன்று தெரிகிறது.. ஆனால் இந்த சூப்பர் மார்க்கெட்டில் "சேல்ஸ் பாய்" வேலை என்பது நிச்சயம் அவருக்கு நெருப்பு மேல் நிற்பதைப்போன்ற ஒரு நிலையை ஏற்படுத்துகிறது என்பது மட்டும் அவர் முக வாட்டத்திலிருந்து புரிந்தது.

கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆகிவிட்டது....

இப்போதெல்லாம் நாற்காலியில் அமர்வதேயில்லை. நாள் முழுக்க நின்றிருக்கிறார், கடையில் கஸ்டர்மர்கள் இல்லையேல் வாசலில் வந்து கைக்கட்டி நின்று வேடிக்கைப் பார்க்கிறார்.

அவர் முகத்தில் சிரிப்போ சந்தோஷமோ எதையுமே பார்க்கமுடிவதில்லை. தலையெழுத்து இந்த வேலையை ப்பார்த்தே ஆகனும்னு என்கிற ஒரு முகபாவம்..
ஒரு நாளைப்போல, சுயமரியாதையை விட்டுக்கொடுத்து மென்று விழுங்கிக்கொண்டு கடக்கும் கடினமான நொடிப்பொழுதுகள்.. வயதான காலத்தில் ஓய்வூதியத்தின் மதிப்பை புரியவைக்கும் இவர்...

ஏனோ.....  என் கண்ணில் படும்போதெல்லாம்.. ஒரு இனம் புரியாத வேதனையை ஒட்டவைத்து கடக்கிறார்......

கல்யாணி (மேற்கு வங்காளம்)

சென்ற பதிவில் உணவில் நிறுத்தினேன்

பெங்காலில் பிராமணர்களும் காலை உணவுக்கு மீன் சாப்பிடும் பழக்கம் உடையவர்கள் என்பது உண்மையே. மாதத்தில் 2-3 நாட்கள் தவிர, அன்றாடம் அசைவு உணவு சாப்பிடும் பழக்கம் உடையவர்களாக இருக்கிறார்கள். மீன், கோழி, ஆடு இவை பிராதான உணவு. சாலையோர டீ கடைகள் அனைத்திலும் முட்டை வைக்கப்பட்டிருக்கிறது, ஆம்லெட், பிரெட் ஆம்லெட் தயார் செய்து தருகிறார்கள். இங்கு வரும் சைவர்களுக்கு சாப்பாடு மிகவும் கஷ்டம் தான். அதே சமயம் எல்லா காய்கறிகளும், பழங்களும் கிடைப்பதால் சமாளித்தும் கொள்ளலாம்.

அசைவத்திற்கு அடுத்து இனிப்புகள். பாலில் செய்யப்படும் இனிப்புகள் அதிகம். ரசகுல்லா பேர் போனது என்பது அறிந்த விசயம். ஆனால், விநோதமாக அநேக இனிப்பு கடைகளில் இனிப்புகளின் மேல் குளவிகள் ஈக்களை போல மொய்த்துக்கொண்டிருக்கின்றன. அவற்றை அவர்கள் விரட்டவும் இல்லை, வராமல் இருக்க ஏதும் செய்த மாதிரியும் தெரியவில்லை. கேட்டதற்கு "இது இங்கு சகஜம், இதில்லாமல் நீங்க ஸ்வீட் கடை பார்க்க முடியாது.." என்றனர். மீறி தேடிச்சென்று குளவிகள் மிக்காத இரண்டு இனிப்புகள் விற்கும் கடைகளை கண்டுப்பிடித்து வைத்துள்ளோம். சமோசா, பஜ்ஜி போன்றவையும் அவர்களின் மசால் சுவையில் கிடைக்கின்றன. கடுகு எண்ணெய்யை தான் சமையலுக்கு பயன்படுத்துகின்றனர். அதனால் இவர்களின் உணவின் ருசி தனி சுவை, சட்டென்று வேற்று மாநிலத்தவருக்கு பிடித்துவிடாது.  ஊர் முழுக்க தேடியும் நல்லண்ணெய் கிடைக்கவில்லை. கடுகு எண்ணெய் தவிர,  ரிஃபைன் செய்யப்பட்ட மற்ற எண்ணெய் வகைகள் கிடைக்கின்றன.

காய்கறிகள் மிக செழிப்பானதாகவும் ருசியானதாகவும் கிடைக்கின்றன. பூசணி வகையை சார்ந்த காய்கறிகள் அதிகமாக இருக்கின்றன. எல்லா வகை பழங்களும் கிடைக்கின்றன. விலை என்னவோ சென்னை விலை தான்.. !

மிக முக்கியமான விசயம், பிரியாணி. இப்படியொரு சுவையில் பிரியாணியை இந்தியாவில் வேறு எங்கும் சாப்பிடமுடியாது. இரண்டு முறை முயற்சி செய்த என் கணவருக்கு பிரியாணியின் ருசி பிடிக்காமல் கஷ்டப்பட்டார். எந்த வகை சாப்பாட்டையும் ஒரு கைப்பார்க்கும் என் கணவரையே இந்த ஊர் பிரியாணி சோதனை செய்துவிட்டது. திருமண ஆன நாள் முதல் அவர் எந்த சாப்பாட்டையும் பிடிக்கவில்லை என்றோ, ருசிக்காக ஒதுக்கியோ நான் பார்த்ததேயில்லை. முதல் முறையாக இந்த ஊர் பிரியாணியை அப்படியே ஒதுக்கிவைத்தார்.

பெண்கள் குறுக்கு சிறுக்காமல் நேரான உடல்வாகு கொண்டவர்களாக இருக்கின்றனர். அதிக பருமன் உடைய பெண்களை பார்க்க முடியவில்லை.  சராசரியாக உயரம் ரொம்பவே குறைந்தவர்களாக எனக்குப்பட்டது அநேகப்பெண்கள் 5 அடி உயரத்துக்குள் தான் இருப்பார்கள்.  99% பெண்கள் புடவை' மட்டுமே அணிகிறார்கள், குறிப்பாக திருமணம் முடித்தவர்கள் புடவையே அணிகின்றனர், நெற்றி வடு முழுக்க குங்குமம் வைத்திருக்கிறார்கள், ஆனால் கழுத்தில் தாலி செயின் போடும் வழக்கம் இல்லை, மாறாக மோதிரம் அணிகின்றனர். வெறும் கழுத்தோடு தான் இங்கு பெண்களை பார்க்க முடிகிறது. கையில் ஒரு சிகப்பு ப்ளாஸ்டிக் வளையல், வெள்ளை நிறத்தில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்ட வளையல் அனைவருமே அணிந்திருக்கின்றனர். பெண்களின் அழகுக்குறித்து எழுத வேண்டுமென்றால், பெங்காலி பெண்கள் சிகப்பாக, கொழு கொழுவென்று இருப்பார்கள் என்ற எண்ணமே இருந்தது, ஆனால் அப்படியில்லை என்பதே உண்மை. மாநிறத்தில் மிக சாதாரண முக அமைப்புக்கொண்டவர்களாகவே இருக்கின்றனர். இன்னும் அழகான பெண்களை நான் பார்க்கவில்லை போலும்.. ?! .
ஆண்கள் எந்நேரமும் கையில் சிகிரெட்'டுடன் இருக்கிறார்கள், இவர்களையும் அழகானவர்கள் என்று சொல்லிவிட முடியாது, சராசரிக்கும் குறைந்தளவே. வியாபாரம் செய்யும் இடத்தில் ஒரு கையில் சிகிரெட் வைத்து புகைத்துக்கொண்டே வியாபாரம் செய்கின்றனர். இந்த புகைப்பழக்கதை மட்டும் சகிக்கமுடியல. இது காய்கறி, மளிக்கைக்கடை, துணிக்கடை என்று எங்கும் நடக்கிறது. சிகிரெட்டை விட பீடி' யெ அதிகம் புகைக்கின்றனர்.

பெண்கள், ஆண்கள் இருவருமே சைக்கிள் அதிகம் ஓட்டுகின்றனர்.  பெண்கள் குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்த வர சைக்கிளை பயன்படுத்துகின்றனர். இருபாலாருமே சர்வசாதாரணமாக ஒரு கையில் குடையை பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் சைக்கிளை பிடித்து ஓட்டுகின்றனர். இவர்கள் வெயில் , மழை எதற்கும் குடை பிடிப்பதால், கேரளாவை நினைவுக்கொள்ள வேண்டியிருக்கு. வெயில் சென்னை அளவிற்கே இருப்பதால், வியர்வையும் அதிகம். அதே சமயம் நவம்பர் மாதத்திலிருந்து குளிர் அதிகமாக இருக்குமென்று சொல்லுகின்றனர். குளிர் ஆரம்பித்திருந்தாலும் இன்னும் அதிகமாகவில்லை.
 
அன்றாட தேவைகளான பால், தயிர், நெய், காய்கறி , பழவகைகள், இனிப்புகள் கார வகைகள் அனைத்துமே சென்னை விலை தான். மீன் வகைகள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. வஞ்சனம் கிலோ 160 ரூ என்பதை என்னால் நம்பவேமுடியவில்லை.  சிறிய வகை மீன்கள் மிகவும் ருசியாக இருந்தாலும், முள் அதிகமாக உள்ளன. இன்னமும் மீன் வகைகள் எங்களுக்கு நன்கு பரிச்சயப்படவில்லை.  தெரிந்தவகை , முள் இல்லாத மீன்களாக பார்த்து வாங்குகிறோம்.

போக்குவரத்துக்கு ரிக்ஷாக்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. தவிர மீன்பாடி வண்டிகளிலும் மக்கள் பயணம் செய்கின்றனர். அதாது அலுவலகம், கடைத்தெருவிற்கு போவோர் இந்த வண்டிகளில் அமர்ந்து செல்கின்றனர், ஒருவருக்கு 5 ரூ.  தவிர மினி பேரூந்துகள் அக்கம் பக்கம் ஊர்களுக்கு இயக்கப்படுகின்றன. அவற்றில் சவுகரியமான பயணம் என்று சொல்லமுடியாது. ரயில் என்பது மிக பிரதானமாக போக்குவரத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. கல்கத்தாவிலிருந்து வரப்போகவும், நடுவில் இருக்குமிடங்களுக்கு செல்லவும் ரயிலே சிறந்தது. ஆனால் கூட்ட நெரிசலில் மிகவும் முரட்டுத்தனமாகவும், சுயநலத்தோடும் மனிதாபிமானமின்றியும் நடந்துக்கொள்கின்றனர். சென்ற பதிவில் சொன்னதுப்போல திருட்டு பயமும் அதிகம். குறிப்பாக ரயிலில், பேரூந்தில் திருட்டுகள் அதிகம்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு என தனியாக குடியிருப்பு பகுதிகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் ஏழ்மையானவர்கள் மட்டுமே இருப்பர் என்று நினைத்தால் அதான் இல்லை, மிகுந்த வசதிப்படைத்த மில்லியனர்களும் பெரிய வீடுகள் கட்டிக்கொண்டு அங்கு வசிக்கிறார்கள். வீடுகளுக்கு வேலை வரும் பெண்கள் அனைவருமே சைக்கிளில் வருகின்றனர். ஒரு வீட்டில், வீட்டு வேலை செய்ய மட்டும் 2-3 வேலைக்காரர்கள் இருக்கிறார்கள்,  தவிர தோட்ட வேலை செய்ய 15 நாளுக்கு ஒரு முறை இருவர் வருகின்றனர், தினமும் காலையில் வீட்டை சுற்றியுள்ள இடங்களையும், வீட்டை ஒட்டிய சாலையோர வெளிப்பகுதிகளையும் சுத்தம் செய்ய இருவர் வருகின்றனர். 
 
பொதுவாகவே இந்த மக்கள் சுயநலவாதிகள் என்றே மற்றவர்களால் வருணிக்கப்படுகின்றனர். உண்மைதானா என்று அறிய எனக்கு வாய்ப்பு இன்னும்
கிட்டவில்லை. அக்கம் பக்கம் ஒருவருக்கு ஒருவர் பேசிக்கொள்வதில்லை, அவரவர் வேலையை அவரவர் பார்க்கின்றனர். காளி, துர்கா பூஜைகளில் அவரவர் பகுதிகளில் ஒன்றாக சேர்ந்து பிரமாண்டமாக கொண்டாடுகின்றனர். பெங்காலிகள் முற்போக்குவாதிகளாகவே எனக்கு தெரிகின்றனர். யாரும் யார் விசயத்திலும் தலையிடுவதில்லை, துக்கம் சந்தோஷம் போன்றவை அக்கம் பக்கத்தில் பகிர்ந்துக்கொள்ளும் பழக்கம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள்.

அரசின், 'வீட்டு குத்தகை நிபந்தனை' காரணமாகவோ என்னவோ, புதியவர்கள் யாரும் குடிபெயர்ந்து இங்கு வாழ விரும்புவதில்லை அல்லது வசதிகள் அதிகம் இல்லாததாலும் இங்கு யாரும் தங்க விரும்புவதில்லை. அதனால் எல்லா வீடுகளில் முதியோர் அதுவும் 60 - 70 வயதுக்கு மேற்பட்ட முதியோரே வாழ்கின்றனர். பிள்ளைகள் வேலை விசயமாகவோ, வசதிகள் தேடியோ வேறு இடங்களுக்கு சென்றுவிட இவர்கள் மட்டும் இங்கே. கூட்டுக்குடும்ப வாழ்க்கை முறை இன்னமும் இங்கே இருப்பது குறிப்பிடத்தக்கது. வட இந்தியாவில் இந்த முறை இன்னும் கைவிடப்படாமல் இருப்பது ஆரோக்கியமான விசயமே.

படித்தவர்கள் அதிகமாக உள்ளனர், படிப்பு என்றால் மருத்துவம், பொறியியல் அல்ல இளநிலை முனைவர்கள், ஆராய்ச்சியாளர்கள் அதிகமாக இருக்கின்றனர். சந்திப்போர் அனைவருமே மருத்துவர்களாகவும், ஆராய்ச்சியாளர்களாகவும் இருப்பது நம்மை "ஒரு ஸ்டெப் பேக்" வைக்க வைக்கிறது. உலகின் பல்வேறு பகுதிகளிலும் மேற்கு வங்கத்தினர் இருக்க இந்த படிப்பும் காரணமாக இருக்கலாம். அரசு மற்றும் தனியார் மருத்துவ, பொறியியல் கல்லூரிகளும், கல்யாணி பல்கலைகழகமும் இங்கு உள்ளது.
 
கோயில்கள், துர்கா, காளி, லட்சுமி பூஜை .... இவைப்பற்றி எழுத எனக்கு இன்னும் அவகாசம் தேவை.  தொடர்ந்து இங்கு சில பூஜைகளும் அது சம்பந்தப்பட்ட  விழாக்களும் நடந்தவாரே இருக்கின்றன... என்ன ஏதுன்னு இன்னும் ஒன்னும் புரியல. இவற்றைப்பற்றி புரிந்து.. பிறகு பொறுமையாக பதிய வேண்டும். நிதானமாக  கொல்கத்தா சென்று ஹவுரா & ஹூக்ளி ஆறுகள், மேம்பாலங்கள், காளிக்கோயில்,படா பஜார்  எல்லாம் பார்த்து.......... வேறென்ன எழுதிவைக்கனும். !

அணில் குட்டி : ஸ்ஸ் யப்பா முடிச்சிட்டாங்களா ?! வந்தாலும் வந்தாங்க.. என்னா கதை.. ?!

பீட்டர் தாத்ஸ் :“Culture is the sum of all the forms of art, of love, and of thought, which, in the coarse or centuries, have enabled man to be less enslaved”

Images courtesy Google : Thanks. &

கொBiதாO (கவிதா)

கல்யாணி, மேற்கு வங்காளத்தில், "நாடியா"  மாவட்டத்தில் அமைந்த மிகச்சிறிய நகரம். கொல்கத்தாவிலிருந்து 50 கிமி தொலைவில் அமைந்துள்ள இந்த நகர் உருவான வரலாறு 65 ஆண்டுகளுக்கு முந்தயதாக இருக்கிறது.  இங்கிருக்கும் வானுயர்ந்த மரங்களே இந்த நகரின் வரலாற்றை பறைச்சாற்றுகின்றன. கொல்கத்தா & கல்யாணி இரண்டையும் இரட்டை தலைநகரங்களாக உருவாக்கவே அன்றைய அரசு இந்த நகரை அமைத்ததாகவும் சொல்லப்படுகிறது.

இரண்டாம் உலகப்போரின் போது, அமெரிக்கா தன் விமானத்தளத்தினை இங்கு ரூஸ்வெல்ட் டவுன் (அ)  ரூஸ்வெல்ட் நகர் என்ற பெயரில் அமைத்திருந்தது. அதன் பிறகு, 1950ல் மேற்கு வங்காளத்தில் இரண்டாவது முதல் அமைச்சரான Bidhan Chandra Roy -அவர்கள் இந்திய தேசிய காங்கரஸின் கூட்டங்களை நடத்தவும், கொல்கத்தாவில் பெருகிவரும் மக்கள் தொகையையும் கருத்தில் கொண்டு,  மக்கள் இங்கு குடியேற வசதியாக முன்கூட்டியே உள் கட்டமைப்புகளை திட்டமிட்டு உருவாக்கினார். / (Kalyani, West Bengal Aerial view).

1. பாதாள கழிவுநீர் அமைப்பு
2. செவ்வக கட்டங்கள் உருவாக்கும் சாலைகள்
3. ஒரு பக்கம் வரிசையாக மரங்கள் அமைக்கப்பட்ட நிழற்சாலைகள்
4. மற்றொரு பக்கம் மின்சார கம்பங்கள்
5. சமூக பூங்காக்கள்

என 1950 ல் இந்தியாவில் இவ்வகையான வசதிகளோடு உருவாக்கப்பட்ட முதல் நகரம் கல்யாணி' , கடந்த 65 ஆண்டுகளாக அதிக மாற்றங்கள் ஏதுமில்லாமல் இயற்கை சூழ்ந்த பழைய நகரமாகவே இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்களும் இந்நகரின் இயற்கை வளம் குறையாமல் இருக்க உறுதுணையாக இருக்கின்றனர்.


இங்கு மக்கள் வசிக்க மட்டுமே அனுமதி,அதனால் அதிகளவு மாசு சேர்க்கை இல்லாமல் சுத்தமாகவும் மண் வளம் மிக்கதாகவும் நகரம் விளங்குகிறது. தொழிற்சாலைகள், வியாபார வணிக ஸ்தலங்கள் & கேளிக்கை சார்ந்தவைகளுக்கான இடங்களுக்கு அரசு அனுமதிக் கொடுப்பதில்லை.
அன்றாட தேவைக்கான பொருட்கள், காய்கறிகள் என எல்லாமே கிடைக்கின்றன. இரண்டு- மூன்று சிறிய சூப்பர் மார்க்கெட்டுகள் உள்ளன. தவிர, சாதாரண உணவு விடுதிகளும் இருக்கின்றன. ஆனால் பன்னாட்டு நிறுவனங்களின் உணவு விடுதிகள், சூப்பர் மார்க்கெட்டுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. 4 கிமி தொலைவில் "காஞ்சரப்பாரா" என்ற இடத்தில் பெரிய கடைகளும், உணவு விடுதிகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது. பெரிய அளவில் வீட்டுத்தேவைக்கானப் பொருட்கள் வாங்க வேண்டுமானால் அடுத்த ஊருக்குத்தான் செல்ல வேண்டும், அதையும் விட்டால், கொல்கத்தா செல்லலாம்.  

சாலைகளில் வைக்கப்பட்ட மரங்களின் சிறப்பு அம்சம் என்னவென்றால், வேப்பமரம் என்றால், அந்த சாலை முழுக்க வேப்பமரம் மட்டுமே, அசோகமரம் என்றால்..சாலை முழுதும் அசோகமரங்கள் மட்டுமே. இவையும் நிழற்சாலைகளின் அழகை அழகை அதிகப்படுத்துக்கின்றன.  இந்த மரங்களை வெட்ட யாருக்கும் அனுமதியில்லை. அளவுக்கு மீறி, போக்குவரத்துக்கு, மக்களுக்கு, வீடுகளுக்கு பிரச்சனையாக வளரும் கிளைகளை மாநகராட்சி ஆட்கள் வந்து வெட்டுகின்றனர். கிளைகள் வெட்டப்பட்டு,  இலை வேறு, கிளை வேறாகப் பிரிக்கப்பட்டு, கிளைகளை மட்டும் கட்டுகளாக கட்டி எடுத்துச்செல்கின்றனர். இலைகளும் அப்புறப்படுத்தப்படுகின்றன, அவை உரமாக்க பயன்படுத்தப்படும் என்று ஊகித்தேன்.

குப்பையை தெருவில் கொட்டவும் அனுமதியில்லை அல்லது மக்கள் அப்படியொரு பழக்கத்தை வைத்திருக்கவில்லை. தினம் காலையில் மாநகராட்சி ஆட்கள் வண்டியில் வீடுவீடாக வந்து, ஒவ்வொரு வீட்டுக்காரர்களும் அதற்காக அமைத்து வைத்த இடத்திலிருந்து எடுத்துச்செல்கின்றனர். இந்த இரண்டு மாதங்களில், ஒரு நாள் கூட இவர்கள்  குப்பைகளை எடுக்காமல் இருந்ததில்லை. வெளியில் சென்றுவந்த செருப்போடு வீட்டிலும் நடக்கலாம், அப்படியோரு சுத்தமான சாலைகள். கடைகளில் ப்ளாஸ்டிக் பையகளை விட பேப்பர்களில் கட்டியே பொருட்களை கொடுக்கின்றனர். இது மாநகராட்சியின் உத்தரவு என்று அவர்கள் பேசிக்கொள்வதிலிருந்து தெரிந்தது.
ஆக, நகரம் சுத்தமாக இருக்க மக்களும் சில நடைமுறைகளை பல ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றுகின்ற்னர். சுத்தம் மட்டுமல்ல சத்தமும் இங்கில்லை. "Sleeping Town" என்று இங்கு வசிப்போர் இந்நகரை அழைக்கின்றனர்.

ஒவ்வொரு பேரூந்து நிறுத்தத்திலும் தானியங்கி  குடி தண்ணீர் சாவடி அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் அவற்றில் தண்ணீர் வருகிறது. அடுக்குமாடி குடியிருப்புகள் எண்ணிவிடும் அளவிற்கு இருந்தாலும், அவைக்கட்ட அரசின் அனுமதி கிடைப்பது மிகவும் கடினமான விசயமாக இங்கிருப்பதால், யாரும் அடுக்குமாடி கட்டிடடத்தை விரும்புவதில்லை.

அடுக்குமாடிக்கட்ட முதல் நிபந்தனை, மனையின் அளவு சாதாரண மனையை விட இரண்டு மடங்கு அதிகமானதாக இருக்கவேண்டும். இங்கு சாதாரண மனையின் அளவு 5000 சதுரடி. ஒவ்வொரு வீடும் 5000 சதுரடி மனையில் கட்டப்பட்ட பெரிய பெரிய பங்களாக்கள். வீடுப்போக, பெரிய தோட்டங்கள், பூங்காக்கள் வைக்கும் அளவு இடம் வசதியாக உள்ளது. மேலும், இங்கு யாருமே சொந்தவீட்டுக்காரர்கள் இல்லை, அரசு "Lease" அடிப்படையில் 999 வருடங்களுக்கு மனையை வீட்டுக்காரர்களுக்கு கொடுத்திருக்கிறது. அதாவது, மனையில் வீடுக்கட்டி தங்கிக்கொள்ளலாம்..ஆனால் அது மனைதாரருக்கு சொந்தமில்லை. கடைகள் இருக்கும் பகுதிகளில், கடைகளின் பின்புறம் இருக்கும் வீடுகள் மட்டுமே நம்மூர் வீடுகள் போன்று சிறிய வீடுகளை பார்க்க முடிகிறது.

வீடுகள் அந்தக்காலத்து முறைப்படி கட்டப்பட்டவையாக இருக்கின்றன. பெரிய பெரிய அறைகள் அவற்றிற்கு 2-3 கதவுகள் இருக்கின்றன. "ப்ரைவெட் ரூம்" என்பது இங்கில்லை. கூட்டுக்குடும்ப அமைப்பினால் இந்த மாதிரி கட்டிட அமைப்பு இருந்திருக்கும் என்று உகிக்கிறேன்.  வராண்டா, முகப்பு அறை, சாப்பிடும் அறை, படுக்கை அறை என எல்லாவற்றிற்கும் எந்தப்பக்கதிலிருந்தும் நுழையும் படியாக கதவுகள். பெரிய பெரிய ஜன்னல்கள். குரங்குகள், பறவைகள், மற்ற இயற்கை வாழ் ஜீவன்கள் இருப்பதாலோ என்னவோ, எல்லா வீடுகளிலும் பாதுகாப்பு கருதி சன்னல்களில் வெளிப்பக்கம் ஒரு அடி அளவில் கிரில் அமைக்கப்பட்டுள்ளது.
தவிர, பங்களாதேஷ்'லிருந்து அங்கீகாரம் இல்லாத ஊடுருவல் காரணமாக, திருட்டு பயம் அதிகமாக உள்ளது. அதன் காரணமாகவே இங்கு பெண்கள் நகைகள் அணிவதில்லை, மேலும் இரண்டு சக்கர வாகனங்கள், சைக்கிள் திருட்டும் அதிகம். நம் எல்லை பாதுகாப்பு மிகவும் கடுமையானதாக இருந்தாலுமே, நீர் வழியாக இந்த ஊடுருவல்கள் நடப்பதாக சொல்லப்படுகிறது. பாதுகாவலர்கள் எதிரிலேயே கண் இமைக்கும் நேரத்தில் இக்கறையிலிருந்து அக்கறைக்கு நகைகளை கட்டி தூக்கிப்போட்டு நீரில் குதித்து தப்பிக்கும் சாமர்த்தியம் கொண்டவர்களாக இந்த ஊடுறுவாளர்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

இதனால், கல்யாணி' வாழ் மக்கள் எந்நேரமும் மிகுந்த பாதுகாப்போடு இருக்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. பங்களாதேஷ் ஷிலிருந்து வந்து, சினிமா பார்த்துவிட்டு, தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு அல்லது திருடிக்கொண்டு இவர்கள் திரும்ப சென்றுவிடுவதாக சொல்லப்படுகிறது.

கேரளாவைப்போன்றே இருக்கும் இந்த நகரில் எங்குப்பார்த்தாலும், தேக்கு, மா, பலா, வாழை, பாக்கு மரங்களும், வெற்றிலை, மிளகு போன்றவை ஊடுபயிராகவும்,  வானுயர்ந்த மரங்களும், மரங்களில் வித விதமாக சத்தம் எழுப்பும் பறவைகளில் வாசமும், பூக்கள் பூத்துக்குலுங்கும் செடிகளும் மரங்களும் நிறைந்து மிகுந்த ரம்யமான, பச்சை பசேலென்ற இயற்கை சூழ்ந்த இடமாக இருக்கிறது.

எங்கள் வீட்டிலிருந்து நடந்து செல்லும் தூரத்தில் கங்கை ஆறு, கேரளாவைப்போன்றே பேய் மழை பெய்தாலும் தண்ணீர் தேங்காமல் மண்ணுக்குள் சென்றுவிடுகிறது. கேரளாவில் மண் சிறு சிறு செம்மண் உருண்டைகளாக இருக்கும், தண்ணீரை எளிதாக உறிஞ்சிவிடும் தன்மைக்கொண்டவை மேலும் கேரளாவின் பூமி அமைப்பே கடலை நோக்கி லேசாக சரிந்தவாறு இருப்பதால், தண்ணீர் தேங்காமல் வழிந்தோடுவது இயற்கை. கல்யாணியின் மண் தன்மை வேறுவிதமாக இருந்தாலும், இங்கும் மழை நீர் தேங்காதளவு மண் வளம் மட்டுமல்லாது, ஊரின் உள் கட்டமைப்பும் திட்டமிட்டு அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

உணவு என்று எடுத்துக்கொண்டால்............பதிவு ரொம்ப பெரிசா ஆகிடுச்சி..சோத்து மூட்டையை அடுத்த பதிவில் திறப்போம்...

அணில் குட்டி : அம்மணி .... பெங்காலியில் உங்க பேரின் உச்சரிப்பு ரெம்ப அழ்க்கா ..இருக்கு... ஹான்.. !! .

பீட்டர் தாத்ஸ் : “Travel and change of place impart new vigor to the mind.” – Seneca

துர்கா பூஜை களிமண் சிலைகள் தயாரிப்பு - கல்யாணி (மேற்கு வங்காளம்)

மேற்கு வங்காளத்தில் ஒரு சிறிய நகரம் "கல்யாணி"

நாங்கள் சென்ற நேரம், துர்கா பண்டிகை நெருங்கும் நேரமாக இருந்ததால், ஆங்காங்கே துர்கா சிலைகளும், விநாயகர் சிலைகளும், அது சம்பந்தப்பட்ட பல்வேறு சிலைகளும் மிக வேகமாக செய்துக்கொண்டிருந்தனர். இந்த பொம்மைத்தொழில் ஒரு குடிசைத்தொழிலாகவே செய்யப்பட்டு வருகிறது.  படத்தை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும்.


இன்று பார்க்கும் பொம்மைகள் அடுத்த நாள் அந்த கடையில் இருப்பதில்லை. கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 50 க்கும் மேற்பட்ட ஆள் உயர சிலைகள் முழுமையாக செய்யப்பட்டு விற்கப்படுவதாக கணக்கிட்டேன். என் கணிப்பு சரியா என்றும் தெரியவில்லை.   

அவர்களின் அனுமதியோடு சிலைகளை புகைப்படும் எடுத்தும், அவர்கள் சிலைகளை செய்யும் முறையையும் பார்த்தேன். பொதுவாக களிமண் சிலைகள் சூலையில் இட்டு வேகவைப்பார்கள் என்றே நினைத்திருந்தேன். விநாயர் சதுர்த்தசி சிலைகள் வேறு, அவை தண்ணீரில் கரைக்கப்படுவதால், அவற்றை சூலையில் இட அவசியமில்லை. மற்றவை சூலையில் இட்டால் தானே அபிஷேகம் & மழைத்தாங்கும்?, ஆனால் துர்கா பூஜைக்கான எந்த சிலையும் அப்படி செய்வதாக தெரியவில்லை.

பொம்மைகள் செய்ய அவர்கள் அடிப்படை  மூலப்பொருளாக "வைக்கோல்" பயன்படுத்துகின்றனர், அதன் பிறகே களிமண்.

=> வைக்கோல் கொண்டு எந்த உருவ பொம்மை வேண்டுமோ அதை உருவாக்குக்கின்றனர்.

=> கைகள் தனியாக வைக்கோலால் செய்யப்பட்டு சேர்க்கப்படுகின்றன

=> அதற்கு மேல் கல் நீக்கப்பட்ட நைசான களிமண் குழைத்து பூசப்பட்டு சிலைகளாக வடிவமைக்கப்படுகின்றன.

=> களிமண்ணை தண்ணீரில் குழைத்து, மெல்லிய துணிக்கொண்டு வடிக்கட்டி எடுக்கின்றனர். இப்படி எடுக்கப்பட்ட களிமண் கூழ், சிலைக்கு கடைசியாக மெருகேற்ற பயன்படுத்தப்படுகின்றன.


=> தலைகள் முழுக்க முழுக்க களிமண்ணால் தனியாக செய்யப்பட்டு கடைசியாக உடலோடு இணைக்கப்படுகிறது.

இப்படி செய்யப்பட்ட சிலைகள் உலரவைக்கப்பட்டு, நன்கு உலர்ந்தவுடன் வர்ணம் பூசப்பட்டு விற்கப்படுகின்றன.

துர்கா பூஜை' பற்றி எனக்கு எதுவும் தெரியாததால், இந்த சிலைகள் பூஜை முடிந்தவுடன் என்ன ஆகும் என்றும் தெரியவில்லை.  கூகுள் ஆண்டவர் உதவியில் தெரிந்துக்கொள்ளலாம் என்றால், என் கண்ணில் எதுவும் படவில்லை.

அணில் குட்டி : ஒரு ஊருக்குப்போன, போனமா வந்தமான்னு இல்லாம, வேல செய்யற இடத்தில் உள்ளப்போய் நொய் நொய்ன்னு தெரியாத மொழிக்காரங்கக்கிட்ட, தெரியாத மொழியில் ஒன்னும் பாதியுமா ஆக்ஷனில் பேசி இம்சை செய்து ஃபோட்டோ எடுத்து........ ....இதுக்கு தான் பெத்தப்புள்ளையே... அம்மணிய வச்சி சமாளிக்க முடியாதுன்னு  ஃபரான்ஸ் பக்கம் வரவேக்கூடாதுன்னு சொல்லியிருக்கான் போல... 

பீட்டர் தாத்ஸ் : If art is to nourish the roots of our culture, society must set the artist free to follow his vision wherever it takes him. -John F. Kennedy

ஊசி


மருத்துவமனை. காத்திருக்கும் இருக்கைகளில் ஒன்றுக்கூட காலியில்லை. மருத்துவர் இருக்கும் அறையைப்பார்த்தேன்.  யாரோ உள்ளிருக்கிறார்கள், நிச்சயம் உடனேவோ.. சிறிது நேரம் கழித்தோக்கூட அவரைப்பார்க்க முடியாது.


என்னால் முடியவில்லை.. ஏதோ உடல் உபாதை, மயக்கம் தள்ளுகிறது, நிற்க முடியவில்லை, சமாளிக்கிறேன். உட்காரவும் இடம் இல்லாததால் சிஸ்டரை பார்த்து, அப்பாயின்ட் வாங்கிய விபரம் சொல்லி, என்னால் நிற்க முடியவில்லை, உடனேயே டாக்டரை பார்க்க அனுமதிக்குமாறு கேட்கிறேன்.

சிஸ்டருக்கு என் நிலைமை புரிந்தாலும், மருத்துவர் யாரோ ஒரு நோயாளியை பார்ப்பதால் என்னை உள்ளே அனுமதிக்க முடியவில்லை. கொஞ்சம் யோசித்தவர்,என்னை வேறொரு அறைக்கு அழைத்து சென்று, ஏதோ ஒரு மருந்தை எடுத்து ஊசியில் செலுத்தி, மருத்துவரை பார்க்கும் வரை, இது உங்களுக்கு நல்லாயிருக்கும், போட்டுக்கோங்கன்னு சொல்லி, போடுகிறாள்.

ஊசிப்போட்ட சிறிது நேரத்தில், மருந்தின் தாக்கம் உடல் பிரச்சனையை விட அதிகமாக, அங்கிருக்கும் பெட்டிலேயே முடியாமல் படுக்கிறேன். 5-10 நிமிடங்கள் சென்றிருக்கும்.... ஊசிப்போட்ட கையை தூக்க முடியவில்லை.. தலையை தூக்கி கையைப்பார்த்த எனக்கு  சொல்லமுடியாத அதிர்ச்சி.......

கையில் நரம்பு குழாய்கள் செல்லும் அத்தனை இடங்களும் மேல்பக்கம் கருப்பாக மாறி கோடு கோடாக தெரிந்தது....

"சிஸ்டர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... "

நான் கத்திய கத்தில், சிஸ்டர் தவிர பக்கத்து அறையில் இருந்த டாக்டரும் வந்துவிட்டார்...ரூமுக்கு வெளியில் கூட்டம் சேருகிறது.
கையைப்பார்த்த இருவருக்கும் என்னைவிட அதிர்ச்சி.....
"என்ன செய்தீங்க.. ?!  ஊசிப்போட்ட இடம் கூட பாருங்க..எப்படி வீங்கியிருக்கு... இதுமாதிரி எனக்கு ஆனதேயில்ல.. என்ன ஆச்சி எனக்கு... டாக்டர்...சீக்கிரம் எதாச்சும் செய்ங்க." .
டாக்டர் கோவமாக சிஸ்டரிடம் ..."என்னமா செய்த.. நான் சொல்லாம என்ன ஊசிய இவங்களுக்கு போட்ட... யார் உனக்கு இந்த அதிகாரத்தைக்கொடுத்தா.. என்ன ஊசிப்போட்ட காட்டு..."
சிஸ்டர் வேகமாக மருந்து பாட்டிலை எடுக்க செல்கிறார், டாக்டர் முதலுதவிக்கு திரும்பவும் வேறு ஏதோ ஒரு மருந்தை எடுத்து வந்து எனக்குக்கொடுத்து "சீக்கிரம் இந்த மாத்திரையை முழுங்குங்க.."ன்னு தண்ணி பாட்டிலைக்கொடுக்கிறார்...
கருப்புக்கோடுகள் கையில் தெரிய...  கட்டிலிருந்து இறங்கி... முடியாமல்  வெளியில் வருகிறேன்....

பின்னாலேயே டாக்டரும் சிஸ்டரும் "மேடம் எங்கப்போறீங்க.. நில்லுங்க... சரிசெய்து அனுப்பறோம் நில்லுங்க... " ன்னு சத்தம் போட்டுக்கொண்டே துரத்துகிறார்கள்..

திரும்பி பார்த்தவாரே... "ஹாஸ்பிடலா நடத்தறீங்க?...  இதோ இந்த கையை காட்டியே உங்கள உள்ள தள்றேன் பாருங்க.".ன்னு அழுகையும் ஆத்திரமும் ஒன்று சேர ஓட்டமும் நடையுமாக வெளியே வருகிறேன்..

கேட்டில் இருவர் என்னை தடுத்து நிறுத்தப்பார்க்கிறார்கள்.. அவர்களை என் உடல் வலுவெல்லாவற்றையும் வரவைத்து, ஒரே தள்ளாக தள்ளிவிட்டு ஒருவழியாக தப்பித்தோம் பிழைத்தோம் என்று வெளி வந்துவிட்டேன்..

... என்னை யாராவது துரத்துகிறார்களா? என அவ்வப்போது திரும்பி ப்பார்க்கிறேன்......


********
மருத்துவமனைக்குள் செல்லும் போது, முகப்பு அறை, காத்திருக்கும் அறை எனத்தனி தனியாக இருந்தது, வரும் போது என்னவோ எங்கேயோ மேலே ஏறி, இறங்கி, தடுக்கி விழுந்து, எழுந்து, பல தடைகளை தாண்டி தப்பித்து வருகிறேன்.... ம்ம்ஹூம்..  # நேற்று இரவு வந்த கனவு....

Images Courtesy : Thx Google. 

கன்யா - வீட்டுக்குறிப்புகள்/அழகுக்குறிப்புகள்

பார்வைகளில் இது ஒன்னு தான் பாக்கி. வருசங்களாக இந்த லேபிலின் கீழ் பதிவுகள் எழுதனும்னு நினைப்பேன், இருப்பதையே தொடர்ந்து சரியா எழுதமுடியல..இதுல இது வேறையான்னு நினைச்சி விட்டுடுவேன். சில அழகு மற்றும் வீட்டுக்குறிப்புகளை தேவைப்படும் போது மறந்துப்போறேன்,  சரி, எழுதி வைத்தால் பயன்படுமேன்னு......

அழகுக்குறிப்புகள் :
=> வீட்டில் எப்போதும் கஸ்தூரி மஞ்சள் பொடி வைத்துக்கொள்வது நல்லது.
கஸ்தூரி மஞ்சளை - எலுமிச்சை சாறு, முல்தாணிமட்டி, வேப்பிலை விழுது,
துளசி விழுது, கடலைமாவு, பைத்தம்மாவு, கசக்கசா விழுது, பார்லி விழுது, தேன், பப்பாளி பழம், தக்காளி என எவற்றோடும் சேர்த்து பயன்படுத்தலாம். .

பயன்கள் : முகத்தில் கரும் புள்ளிகள் மறையும், பருக்கள் வராது. தொடர்ந்து செய்துவந்தால் முகச்சுருக்கம் நீங்கும். பரு, சூடுக்கட்டிகள், காயங்களை குணப்படுத்தும்.


=> பாதங்களை வீட்டில் சுத்தம் செய்துக்கொள்ள, சுடு தண்ணீரில் எலுமிச்சை சாறு, உப்பு (கல் உப்பாக இருந்தால் சிறந்தது), ஷாப்பூ சேர்த்து நன்கு கலக்கி அதில் பாதங்களை ஊறவைத்து சுத்தம் செய்யலாம். 

=> பாதங்களில், முட்டிகளில் ஏற்படும் கருப்பு மறைய சியக்காய் (வீட்டில் தயாரித்த) பொடியை குழைத்து 15 நிமிடம் ஊறவைத்து, குளிர்ந்த நீரில் சுத்தம் செய்துவர நீங்கும்.

வீட்டுக்குறிப்புகள் :
=> வீட்டு சுவற்றில் ஆணி அடிக்காமல், முடிந்தளவு சுவிட்ச் போர்ட் கீழ்பக்கம் இருக்கும் ஸ்க்ரூக்களை லூசாக்கி, அதில் காலண்டர், லெட்டர் பாக்ஸ், சாவி ஸ்டான்ட் போன்றவற்றை மாட்டிவைக்கலாம்.

=> ஸ்டிக்கர் பொட்டுகளை பீரோ, வாஷ் பேசின் கண்ணாடி, பாத்ரூம்
சுவர்களில் ஒட்டுவதற்கு பதிலாக, அங்கே காலியான பொட்டு பாக்கெட்டை கட்டி வைத்தால், அதில் இந்த பொட்டுகளை ஒட்டுவைத்து பயன்படுத்தலாம். கண்ணாடி & சுவரில் அழுக்கு சேராது.

=> அவன் (oven) சுத்தம் செய்ய வினிக்கரை பயன்படுத்தினால் எண்ணெய் பசை நீங்கி.. பளீச்'சுனு சுத்தம் ஆகிடும்..

=> எந்த துணியில் சாயம் பிடித்தாலும் கைகளால் நன்கு துவைத்து, வெயிலில் 2-3 நாள் காயவைத்தால் சாயம் முழுமையாக போய்விடும்.. துணியின் கலர் லேசாக மாறவும் செய்யும். 

=> செடிகளுக்கு தேதிகள் முடிந்தப்போன பழைய மாத்திரைகளை நுனுக்கி போடலாம். உரமாக இருக்கும்.

=> வீடு துடைக்கும் போது தண்ணீரில் சிறிது ஷாப்பூ போட்டுத்துடைத்தால், நறுமணம் + சுத்தம்.

சமையல் குறிப்புகள் :
=> கட்டி பெருங்காயத்தை சின்னத்துண்டுகளாக உடைத்து, சிறிது எண்ணெய் விட்டு பொரித்து, ஆறவைத்து டப்பாவில் கொட்டிவைத்துக்கொண்டால்,
சமையலில் சேர்க்கும் போது எளிதாக கரைந்துவிடும்.  தாளிக்கும் போது மறந்தாலும் பின்பு சேர்ந்துக்கொள்ளலாம்.

=> தேங்காய் சேர்த்த எந்த பொரியலிலும்,
தேங்காவோடு கொஞ்சம் இஞ்சியையும் சேர்த்து துருவி சேர்த்தால் சுவையும் சூப்பர், செரிமானத்துக்கும் நல்லது.




Images courtesy :  Google.

அணில் குட்டி :  ஒய் த லேபிள் நேம் ஈஸ்.. "கன்யா"  ?!! அம்மணி.... நேம் காரணம் ப்ளீஸ்...

பீட்டர் தாத்ஸ் : “The career of motherhood and homemaking is beyond value and needs no justification. Its importance is incalculable.”  ― Katherine Short

தண்ணியில் தண்ணி.....


தண்ணீர் சூழ்ந்த ரம்யமான சுற்றலா இடங்களில், தண்ணி'யில் திளைத்திருக்கும் நல்லவர்களை பற்றி நாலு வார்த்தை..........

நமக்கு பக்கத்திலிருக்கும் புதுச்சேரியிலிருந்து ஆரம்பிப்போம்.  விழுப்புரம் சொந்த ஊர், அதனால் புதுச்சேரியின் "தண்ணி" ப்பற்றி சிறுவயது முதலே ஓரளவு தெரியும். புதுச்சேரி-விழுப்புரம் பேரூந்துங்களில் பயணம் செய்யும் போது அப்படி ஒரு துர்நாற்றம் வீசும்... உளரல்கள், சண்டைகள், கத்தல்கள், வாந்திகளும் பார்த்தது உண்டு.

புதுச்சேரி'ஐ தொடர்ந்து குற்றாளம், கோவா, ஹோக்கேனக்கல் போன்ற இடங்களிலும் இதேக்கதை தான்.  மிக மோசமாக அருவருத்து முகம் சுளிக்கும் விதமாக இருந்தது 'ஹோக்கேனக்கல்'.  திரும்பியப் பக்கமெல்லாம் குடிகாரர்கள், கெட்டவார்த்தை, தள்ளாட்டம், வாந்தி, சண்டை, துர்நாற்றம். பார்க்குமிடங்கள் எல்லாம் காலி பாட்டில்கள் சிதறிக்கிடந்தன. ஒரு சில இடங்களில் பாட்டில்களை போட்டிப்போட்டு பாறைகளில் சரமாரியாக அடித்து உடைத்து வைத்திருந்தார்கள். ஓடையிலும் ஆற்றிலும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் மிதந்தன.புதுச்சேரி, குற்றாளம் & கோவா 'விலும் குடிகாரர்களை அதிகம் பார்த்தாலும் 'ஹோக்கேனக்கல்' அளவிற்கு மோசமில்லை.

குறிப்பாக குடிப்பதற்கென்றே இங்கே வருகிறார்கள் போல தெரிகிறது. மீன் வறுவல் ஒரு பெரிய வியாபாராமாக இருப்பதால், குடிகாரர்களுக்கு கேட்கவே வேணாம் கொண்டாட்டம் தான். தண்ணி, சைட் டிஷ் மீன், எண்ணெய் மஸாஜ், அருவி , ஆறு குளியில் என அடித்து ஆட்டம் போடுகிறார்கள். 

இதற்காகவே அங்கீரக்கப்படாத மதுபானக் கடைகள் மலை இடுக்குகளில் ஜெனரேட்டர் வசதியோடு அமைக்கப்பட்டுள்ளன. அனைத்து ரக மதுபானங்களும் இங்கு கிடைக்கின்றன. இக்கடைகளுக்கு குடிகாரர்களை அழைத்து வரும் பரிசல்காரர்களுக்கு கமிஷனும் வழங்கப்படுகிறது. 

நிற்க, குடித்துவிட்டு ஆட்டம் போட நினைப்பவர்கள் கவனிக்க வேண்டியவை. நீங்கள் செல்லுமிடம் -

1. பொது இடம்
2. குழந்தைகள் மற்றும் பெண்களும் ஓய்வையும் சந்தோஷத்தைத்தையும் நிம்மதியையும் தேடிவரும் இடம்
3.  அருவி,ஆறு, கடல், காடு, மலைகள் சார்ந்த இடங்கள் என்பதால் விபத்து ஏற்பட அதிக வாய்ப்புகள் அதிகம்.
4. குடித்துவிட்டு வீசும் பாட்டில்கள், ப்ளாஸ்டிக் டம்ளர்கள் போன்றவை சுற்றுப்புறத்தை அசுத்துமாக்குவது மட்டுமில்லாமல், ஆறு, அருவி நீரோட்டங்களில் மிதந்து அவற்றின் அழகையும் குலைக்கின்றன.
5. ஆறு, கடல் வாழ் உயிரினங்களுக்கும் இவை தீங்கை விளைவிக்கும். 
6. இவை எல்லாவற்றையும் விட,  குடி போதையில் பேசும் வன்மையான முகம் சுளிக்க வைக்கும் கெட்ட  வார்த்தைகள், பொது இடங்களில், நடக்கும், உட்காரும் இடங்களில் வாந்தி எடுத்தல்,  நிதானம் இழந்து வருவோர் போவோர் மேல் வந்து விழுதல் போன்றவை சகித்துக்கொள்ள முடியாதவை.

குடித்து கும்மாளம் அடிக்க விரும்புவோர், யாருக்கும் தொந்தரவு இல்லாத தனிமையான இடங்களைத்தேடி செல்லலாமே. ஒருத்தன் குடிச்சிட்டு இருந்தாலே கஷ்டம், இதில் கூட்டம் கூட்டமாக குடித்துவிட்டு ஒன்றாக  ஆட்டம் போட்டால்..?!! என்ன கொடுமை இது?  குடித்து நிதானம் இழக்க விரும்புவோர், பொது இடங்களை கண்டிப்பாக தவிர்க்கவேண்டும். அதை நிதானத்தில் இருக்கும் போதே முடிவு செய்யலாமே.. ? 

அவங்க கடமை போல, ஆங்காங்கே "குடித்துவிட்டு அருவியில் குளிக்காதீர்கள்" ன்னு எழுதி வைத்திருக்கிறார்கள். ஆனால் அங்கீகரிக்கப்படாத கடைகள் இவர்களுக்கு தெரியாமல் நடக்க வாய்ப்பிருப்பதாகத் தெரியவில்லை. என்றோ ஒருநாள் சென்ற எனக்கே மலையை சுற்றி இடுக்குளில் எத்தனை கடைகள் இருக்கின்றன என்பதை தொலைவிலிருந்து பார்த்தே ஊகிக்க முடிந்தது.

நன்றாக குடித்துவிட்டு, எண்ணெய் மஸாஜ் செய்துக்கிட்டு, போதை இறங்காமல் இருக்க கையில் பாட்டில், டம்ளர்களோடு அருவியிலும் ஆற்றிலும் இறங்கி கும்மாளம் அடிக்கும் கூட்டத்தை தொடர்ந்து பார்க்கமுடிந்தது.

என் கணவரோடு சென்றிருந்தாலுமே, எப்ப எவன் வந்து நம்ம மேல விழுவான், வாந்தி எடுப்பான்னு ஒரு பயம் இருந்துட்டே இருந்தது. அவர்கள் நிதானத்தில் இல்லை என்பது தெரிந்த விசயம்... அவர்கள் தவறாக நடக்க முயன்றால் அவர்களை என்ன செய்ய முடியும். யாருமே தனியாளாக இல்லை, எல்லோருமே கூட்டமாக வந்திருக்கின்றனர். பொது இடங்கள் தவிர்த்து,  நல்ல பாதுகாப்பான விடுதியில் தங்கியிருந்தாலும், எந்த நேரத்தில் அக்கம் பக்கத்து அறைகளில் இருக்கும் குடிகாரர்கள் வந்து கதவைத்தட்டி கலாட்டா செய்வார்கள் என்ற பயம் எனக்குள் இருந்தது. "நீங்க தமிழ் சினிமா நிறைய பார்க்கறீங்கன்னு" சொல்ல நினைப்பவர்களுக்கு, நாட்டில் உண்மையில் நடக்கும் விசயங்கள் நிச்சயம் அறிந்திருக்கும்.

ஹோக்கேனக்கல், அருவிகள் பல சூழ்ந்து, சில்லென்று சிலுசிலுவென்ற சத்தத்தோடு வேகமாக ஓடும் ஆறு, பாறைகளுக்கு நடுவில் ஆற்றில் பரிசல் பயணம் என மிக ரம்யமான இடம்.. ரசிக்க முடிந்தது தான்.. ஆனால் ஆற்றிலோ, அருவியிலோ நிம்மதியாக அக்காடான்னு நம்மை மறந்து குளிக்க முடியவில்லை....

குடிகாரர்களே, கண்ணுக்கு குளிர்ச்சியையும், மனதுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் தரக்கூடிய சுற்றலா இடங்களை எந்தவிதத்திலும் அசுத்தப்படுத்தாமல் அச்சுறுத்தாமல் தயவு செய்து வேறு இடம் தேடுங்கள்......

இந்தப்பதிவு - எல்லா குடிகாரர்களுக்கும் சமர்ப்பணம்.

அணில்குட்டி : ம்க்கும்..... எங்கப்போனாலும் இந்த அம்மணிக்கு மட்டும் இந்த மாதிரி எழுத எதாச்சும் மேட்டர் கிடைச்சிடும்........

பீட்டர் தாத்ஸ் : “First you take a drink, then the drink takes a drink, then the drink takes you.” ― F. Scott Fitzgerald

படங்கள் : நன்றி கூகுள்

ஆத்மலயா'வின் வண்ணமிகு நடன நிகழ்ச்சி

நவீன் வெளிநாடு சென்றதும், தனிமையில், வெறுமையில் மனம் சோர்ந்த நிலையில் இருந்த போது ஆத்மலயாவின் விளம்பரத்தை பார்த்தேன்.  கடந்த 1 1/2 வருடமாக ஆத்மலயாவில் நடனம் கற்று வருகிறேன்.  மனதிற்கும், உடலுக்கும் நல்லதொரு பயிற்சி,  மனசோர்விலிருந்து முழுமையாக என்னால் வர முடிந்ததற்கு இந்த நடன வகுப்புகள், அதில் கிடைத்த நட்பு என இவையும் பெரும் பங்கு வகிக்கிறது.

சென்ற நவராத்திரியில்,  தேனாம்பேட்டை ரயில்வே சங்கத்தினர் நடத்திய நவராத்திரி விழாவில் அவசர அவசரமாக ஒரு மேடை நிகழ்ச்சி செய்தோம். நன்றாக ஆடியிருந்தாலும் இப்போது பார்க்கையில் அது சுமாராக தெரிகிறது.. :)

இந்த வருடம்  ஆத்மலயா'வின்   ஆண்டுவிழா 27.04.2014 அன்று வெகு விமர்சையாக சென்னை செட்டிநாடு வித்யாசரமம் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்கள் ஆத்மலயாவில் நடனம் கற்றுக்கொள்கின்றனர், இரண்டு மாதம் முழுமையாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.


அத்தனைப்பேரும் அதாவது 77 பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனம் ஆடினோம். ஜெயா டிவி, நிகழ்ச்சியை படம் பிடித்து செய்திகளில் காண்பித்தனர்.  முன்னாள் நீதிபதி. பிரபா ஸ்ரீதேவன்  தலைமை வகித்து, அனைவரையும் கவரும் வகையில் உரையாற்றினார்.

அம்மா'க்கள் நடனம் புரிய குழந்தைகள், கணவர் உட்பட மாமியார், மாமனார், அம்மா அப்பாவென அவர்களின் குடும்பங்கள் கண்டுக்களித்த முதல் விழா இதுவாகவே இருக்கும். 2 மணி நேரம் நகர்ந்ததே தெரியாமல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.  வேளச்சேரி குழுவினர் இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினோம்.

இந்த வயதில் " நீ டான்ஸ் கத்துக்கிட்டு என்னத்த செய்யப்போற" ன்னு என்னை, எனக்கு நடனத்தின் மேலிருந்த ஆர்வத்தை முடக்கிவிடாமல், நடன வகுப்புகளுக்கு முழு மனதோடு செல்ல அனுமதித்த என் கணவருக்கு இந்நேரத்தில் என் நன்றியை சொல்லனும். குறிப்பாக இந்நிகச்சியின் பயிற்சிக்காக அங்கே இங்கே என நான் செல்லும் போது தடை சொல்லாமல், முகம் சுளிக்காமல் என்னை ஊக்கிவித்தும், ரிகர்சலின் போது உடல் நலமில்லாமல் இருந்தபோது, எனக்கு களைப்பு வராமல் இருக்க பழச்சாறுகள், பிஸ்கெட்கள் வாங்கிக்கொடுத்து, நடனம் ஆடும் இடத்திற்கு கொண்டுவந்து விட்டுச்சென்றது, மேடையில் நடனம் ஆடும் அன்று எனக்கிருந்த டென்ஷனை குறைக்க அவர் கொடுத்த அறிவுரைகளும், ஊக்குவிப்பும், எளிமையான சில மனப்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை.   #ஒய் ஹஸ்பண்ட் ஈஸ் தெய்வம்' மொமன்ட்: :)

நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை அவளின் அம்மா ஆடும் போது எடுத்த விடியோ ஒன்று பொதுவில் பகிரப்பட்டுள்ளது... கண்டு மகிழுங்கள்... 
எனக்கு மிக மிக பிடித்தப்பாடலும் நடனமும்...




அணில்குட்டி :  ஃபோட்டோ எடுக்கும் போதே இவங்களப்பாத்து ஃபோட்டோகிராஃபர் ஜர்க் ஆகி  2 அடி பின்னாடிப்போனாரு... பாவம் யார்
பெத்தப்புள்ளையோ... எப்படி இருக்காரோ என்னவோ ??!  இன்னும் அம்மணி ஆடின டான்ஸ் வீடியோ வரல.. அது வந்தாத்தெரியும்...சேதி..  கடவுளே அதைப் பாக்கப்போற எல்லாரையும் தயவுசெய்து காப்பாத்து...



பீட்டர் தாத்ஸ் :  Passion is energy. Feel the power that comes from focusing on what exist in you and  excites you

Dance Photos & Video courtesy : Thanks Ms. Pavithra Suresh, Athmalaya-Annanagar
& Ms. Malabharath, Founder - Athmalaya.


சினிமா, காரம், காஃபி - சிவகார்த்திகேயன்

சிவகார்த்திகேயன், டிவியில் இருந்தவரை நிஜம்மாவே ரொம்ப பிடிச்சிது. ரசிச்சிப்பார்த்துக்கிட்டு இருந்தேன்.

சினிமாக்கு வந்தாலும் வந்தாரு.... உஸ்ஸ்ஸ்ஸ்...

கதாநாயகன் ஆனப்பிறகு விஜய் டிவி நடத்திய ஏதோ ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளாராக கேள்விக்கேட்ட சிவகார்த்திகேயனை, டாக்டர் விஜய்ண்ணா அவர்கள், "நீதான் ஹீரோவாயிட்டியே...இன்னும் இங்க என்னப்பண்ற?! " ன்னு கேட்டாரு.. அதுவரையில் எந்தபந்தாவும் இல்லாமல், எப்போதும் இயல்பாக இருந்தவர் அந்த நொடியிலிருந்து மாற ஆரம்பித்துவிட்டதாகவே எனக்குத் தெரிகிறது.

இப்பவெல்லாம் அவர் அடிக்கிற ஜால்ராவும், குறிப்பாக தனுஷ் பற்றி பேசும் போது.....#$#@$%$#%... (திட்டியிருக்கேன் வேற ஒன்னுமில்ல)  ...   ஓவர் பந்தாவும், நேர்காணல்களில் தேவையில்லாமல் தோள் குலுக்கி பேசுவதும் (இது டிவியில் இருந்தவரை அவரிடம் இல்லை என்பது தான் எரிச்சல்), எல்லாத்தையும் விட மான் கராத்தே'விற்கு பெட்ராமாக்ஸ் லைட்டே தான் வேணும்னு தயாரிப்பாளர்களை தொல்லைக்கொடுத்து ஹன்சிக்காவை புக் செய்ய சொல்லி கட்டாயப்படுத்தியதாக பத்திரிக்கை செய்திகள் படித்ததிலிருந்து அறவேப்பிடிக்காமல் போனது.

என்னால் முடிந்தது, அவருடைய படங்களை பார்க்காமல் இருப்பது. முதல் படத்திலிருந்தே இதுவரையிலும் எதையும் தியேட்டரில் போய் பார்க்கல. டிவியில் பார்த்ததோடு சரி..அதுவும் விளம்பரங்களில் அரை குறையாக...

மனுஷன் முன்னுக்கு வர வேண்டியது தான்.. இதுவரையில் யாரும் வராமல் இருந்ததில்லை. அதுவும் சிவகார்த்திகேயன் போன்று படிப்படியாக முன்னுக்கு வருபவர்களிடம் எத்தனை எளிமையும் நிதானமும் இருக்கவேண்டும்.  காற்றுள்ள போதே தூற்றிக்கொள் என்பதை சிவகார்த்திகேயனுக்காக "காற்றுள்ள போதே தயாரிப்பாளர்களைத் தொற்றிக்கொள்" என்று மாற்றி எழுதி வைக்கலாம்.

அட்லியின் ராஜாராணி' போன்ற மிக மொக்கையான சக்கையான லாஜிக் இல்லாத தமிழ் திரைக்காவியங்கள் ஹிட்'டாகி வசூலை குவிக்கும் போது, என்னே தமிழ் சினிமாவிற்கு வந்த கேடுன்னு நினைச்சேன். இப்ப அதே கேடு மான் கராத்தே' விற்குமென பட்சி சொல்கிறது. 


இப்படியான ஊத்தல் படங்கள், விளம்பரங்களால் மக்களை ஈர்த்து வசூலை குவிக்கின்றன. பண்ணையாரும் பத்மினி'யும் போன்ற குறைந்த பட்ஜட்டில் எடுக்கப்பட்ட தரமானப்படங்கள் பேசப்படாதது நிஜமாகவே வருத்தம் அளிக்கிறது. தமிழ் சினிமாவில் மக்கள் என்னத்தான் எதிர்ப்பார்க்கிறார்கள் எனப்புரியவில்லை.

இதில் இணைய விமர்சனங்கள் படித்தால் .......நமக்கு பைத்தியம் தான் பிடிக்கும். அனைவருமே இங்கு இயக்குனர்கள், ஒளிப்பதிவாளர்கள், இசையமைப்பாளர்கள், எடிட்டர்ஸ், கலை, நடன இயக்குனர்கள் & தயாரிப்பாளர்கள். அதுவும் சிலர் இசைஞானி & கமல்ஜி' யை எல்லாம் மிக மட்டமாக விமர்சனம் செய்வார்கள். ஏன் இவங்க விமர்சனத்திற்கு அப்பார்ப்பட்டவர்களா?ன்னு கேட்டால், அப்படியில்லை.. இசை என்றால் என்ன? சினிமா நுட்பங்கள், அனுபவங்கள் என்ன என ஏதுமே அறியாதவர்களே விமர்சனம் செய்கிறார்கள் எனும் போது ஏற்படும் ஆயாசமேயன்றி ஏதுமில்லை. வரவர இணையத்தில் திரைவிமர்சனம் கண்ணில் பட்டாவே தெறிச்சி ஓடிடறேன்.

அப்பா,  குமுதம் ஆனந்தவிகடன் திரைவிமர்சனம் படித்துவிட்டு, அந்தப்படத்தைப்பற்றி சொல்லி, என்னையும் படிக்க சொல்லுவார். என்னமோ சிறுவயதிலிருந்தே திரைவிமர்சனம் படிக்காமல் எந்தப்படத்தையும் பார்ப்பதில்லை. ஆரம்பத்திலிருந்து யுவா'வின் விமர்சனம் அநேகமாக என்னுடைய எதிர்ப்பார்ப்பை ஒட்டி இருப்பதால். அவருடைய திரைவிமர்சனங்கள் மட்டும் தவறாமல் படித்துவிடுவேன். நடுநிலையாக தான் எழுதுகிறாரா என எனக்குத்தெரியவில்லை. இருந்தாலும் அவர் நன்றாக இருக்கிறது என எழுதும் அத்தனைப்படங்களுமே எனக்கும் பிடித்திருந்தது. 

சினிமாவை ப்பற்றி இப்படித்தான் அதாது விமர்சனம் என்றப்பெயரில் வீட்டிலும் எதையாது புலம்பிக்கிட்டு இருப்பேன். அதனாலேயே நவீன் என்னை "நீ ஏன் ஒரு சினிமா க்ரிட்டிக்" ஆகக்கூடாது? இப்படி வெட்டியா எங்கக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கறதை விட எழுதேன்." ன்னு சொல்லுவான்.  உணர்ச்சிவசப்பட்டு எதையும் செய்துவிடக்கூடாதுன்னு இன்னமும் அதையெல்லாம் செய்ய ஆரம்பிக்கல. நாட்டு மக்களின் மேல் எனக்கும் அக்கறை இருக்கிறது என்பதை சபையில் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.

அணில் குட்டி : வேல வெட்டியில்லாத ஒருத்தன்............  ... யாரச்சும்  வந்து இந்த பழமொழிய அம்மணிக்கு சொல்லிட்டுப் போங்க..

பீட்டர் தாத்ஸ் : We will always tend to fulfill our own expectation of ourselves - Brian Tracy

பத்தா' vs கவி'

தொலைக்காட்சி, தொலைப்பேசி, இணையம் இவை மூன்றுமே நம் நேரத்தை நாம் அறியாமல் விழுங்கக்கூடியவை.  பத்தா' காலத்தில் இவையில்லை, ரொம்பவே ப்ரொடக்டிவாக பல வேலைகளை அவங்களால் செய்ய முடிந்தது.

குறிப்பாக இணையத்தில் G+, FB, Twitter இவற்றில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் போன்ற விசயங்களில் நம் கவனம் செல்கிறதே ஒழிய.... நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க செய்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர், தான் அறியாமல் தெரியாமல் மற்றவர்களின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் நடக்கிறது.

தலைப்புக்கு வருவோம் : என்னுடைய ஆயா, அப்பாவின் அம்மா பத்மாவதி. தாத்தா ஆயாவை செல்லமாக பத்தா'ன்னு தான் கூப்பிடுவாரு.  ஆயாவிற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பதை இப்போதும் நினைத்து மலைத்துப்போவேன். தோழிகள், உறவினர்கள் வருவார்கள், மணிக்கணக்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடக்கும், ஆனாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க மாட்டாங்க. கைவேலை ஏதேனும் செய்துக்கிட்டே பேசுவாங்க. ஆயாவைப்போல ரொம்ப ப்ரொடக்டிவாக ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போன்று, க்ரியேட்டிவாகவும் யோசித்து வேலைசெய்ய யாராலும் முடியாது.

அப்படியென்ன வேலைகள் என்றால்..?!.ஏதோ ஒரு பாலச்சந்தர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண் என்னவெல்லாம் செய்யறா'ன்னு மளிகை பட்டியல் போல மிக நீளமான ஒரு பட்டியலை அந்த கதாநாயகி எடுத்துக்காட்டுவாள். அப்படிதான் ஆயாவின் வேலைப் பட்டியலும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும். வருடத்திற்கு ஒரு முறை முறத்தை பேப்பர் கூழ் பூசி வைக்கும் பழக்கம் ஆயா சொல்லிக்கொடுத்தது. வருடத்திற்கு ஒருமுறை  3 மணி நேர என் உழைப்பு மட்டுமே. மிக எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு வருடம் ஒரு புதிய முறம் வாங்கிக்கொள்ள முடியும் எவ்வளவோ செலவு செய்யறோம்.. இதை செய்துக்கொள்ள முடியாதா என்ன?. ஆனால்  ஆயா எனக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்தவைகளில் இந்த முறமும் ஒன்று. அவ்வளவு எளிதாக தூக்கிப்போட்டுவிட முடியாது.  முந்தைய இரவு பேப்பர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, காலையில் அரைத்து, முறத்தில் பூசி காயவைத்து எடுக்க வேண்டியது தான்.

இந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நான் அறியாமல் எண்ணெய் பாக்கெட் ஒழுகி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்த முறத்தில் ஊறி, அதை நான் கவனிக்காமல் விட்டு, இரண்டும் பிசு பிசுவென எண்ணெய் கறை படிந்து கறுப்பாக, ஒரே எண்ணெய் நாற்றம் வேறு. சோப்பு போட்டு கழுவி காயவைத்துப் பார்த்தேன் போகவில்லை. பிறகு தண்ணீரில் ஊறவைத்து பழைய பேப்பர் கூழ் முழுக்க பிய்த்து எடுத்து, வெயிலில் காயவைத்து, திரும்ப புதிய கூழ் பூசி புதிதாக ஆக்கினேன்.  சில கவனக்குறைவுகளால் ஏற்படும் தவறுகள், நமக்கு பல புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத்தான் செய்கின்றன.
 **************

அடுத்து குளியலறை அறிவுகால் ஓட்டை. இதனால் பலப்பிரச்சனைகள், அதாது நாங்க வாடகைக்கு விடாமலேயே ஓசியில்  ஒய்யாரமாக தங்கி இனவிருத்தி செய்யும் கரப்பான் வகையாறக்கள். குளியலறை என்பதால் மண்புழுக்குளும் வந்து உள்ளே புகுந்துக்கும், இவற்றை சாப்பிட எரும்பு என பல வித ஜீவராசிகள் ஒன்று சேர்ந்து வாழும் இடமாகிவிட்டது. எனக்கு குளியலறைக்கு போனால், போன வேலையை விட்டு, கவனம் முழுக்க எங்கு என்ன இருக்கிறது அது எப்போது என் மேலேறும் என்றே இருக்கும், உண்மைய சொன்னால் "பயம்" & சகிப்புத்தன்மை இல்லை.  இதற்கு முடிவுக்கட்ட ஒருநாள் களத்தில் இறங்கினேன். சின்ன ஓட்டையாக இருக்குமென்று தப்புக்கணக்கு போட்டேன். சரியான பொருட்கள் கையில் இல்லை இருந்தாலும், பழைய சமையல் கத்திகள், தட்டை ஆயுதங்களாக மாற்றினேன், மேலுள்ள புகைப்படத்தில், படம் 1 -ல் பாருங்க.. பார்க்க மெல்லிய ஓட்டையாக இருந்தாலும், அந்த பெரியக்கத்தியின் கத்தி பாகம் முழுக்க உள்ளே செல்லுமளவு பெரிய ஓட்டை.  இப்படியாக அறிவுகாலின் இரண்டு பக்கமும், ஒரு அறைக்கு 4,  இரண்டு அறைக்கு மொத்தம் 8 ஓட்டைகள்.  வேறென்ன சும்மா பூசிட்டு போகலாம் என்று உட்கார்ந்த எனக்கு, அரை நாள் வேலையானது. ஆனாலும் விடாம இனிமே ஓசியில் யாருக்கும் வீடு வாடகைக்கு விடறதில்லைன்னு கலவையை உள்ளே தள்ளி தள்ளி முடிச்சோமில்ல.. ?!
*****************

கடைசியாக குளியலறை டைல்ஸ் ஓட்டைகள்:-  2000த்தில் இந்த வீட்டிற்கு வந்தோம். 14 ஆவது வருஷம் நடக்குது. குளியலறை டைல்ஸ்களுக்கு இடையே இடைவெளி...அதில் அழுக்கு சேர்ந்து பழுப்பு நிறமாகவும், ரொம்ப குட்டி குட்டி மண்புழுக்குள் புகுந்து உள்ளிருக்கும் தரையை மேலும் பாழாக்கி கடுப்பேத்தின. டைல்ஸ் ஒட்டும் வேலை எனக்கு அறவே தெரியாது, யாரும் செய்தும் பார்த்ததில்லை,  என்றாலும் குத்து மதிப்பாக இப்படித்தான் இருக்குமென ஊகித்து, குளியலறைய நன்கு கழுவி காயவைத்து, ஒய்ட் சிமெண்ட் வாங்கிவந்து கெட்டியாக்கி, டைல்ஸ் ஓட்டைகள் ஒவ்வொன்றையும் பூசி அடைத்தேன். ஆஹா... இப்ப எங்க குளியலறை பளீச்'ன்னு ஆகிப்போச்சி... ..

பத்தா'வை போல எனக்கு கூட்டுக்குடும்பம், ஏகப்பட்ட குழந்தைக்குட்டிகள், விருந்தினர் வருகை, சொந்தங்கள் அதை சார்ந்த வெளி வேலைகள், கோயில் குளம், பிராத்தனைகள், வழிபாடுகள்,  பெரிய வீடு,வாடகை விட்ட வீடுகளின் பராமரிப்பு,  தோட்டம், மரங்கள், செடி, கொடிகள் இப்படி ஏதுமில்லை என்றாலும்.. .......பத்தா வழியில்......

அணில் குட்டி : இந்த பதிவின் மூலம் நீங்க சொல்ல வரும் கருத்து என்னவோ.. ?!  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்... ஏன் இந்த தம்பட்டம். ?!!

பீட்டர் தாத்ஸ் :  House work is what a woman does that nobody notices unless she hasn't done it.  Evan Esar

அவர் எப்படியிருக்காரு?

"நீ போனியா? அவரு எப்படியிருக்காரு... ?!! "

பதிலை எதிர்ப்பார்த்து.... ஆவலும் ஆசையும் ஒரு சேர..  பாட்டியின் கண்கள் பளப்பளவென மின்னியது...

"போனேனே... நல்லாயிருக்காரு பாட்டி..."

"என்னா சொன்னாரு...?! " அதே எதிர்ப்பார்ப்பு மின்னியது....

"உன்னை விசாரிச்சாரு... ஒடம்பு சரியானதும் வந்துடுறேன்னு சொல்ல சொன்னாரு..."

"ம்ம்ம்... விசாரிச்சாரா..... நான் இல்லாம எப்படிதான் இருக்காரோ... ?! நான் இல்லாம இருக்கவே மாட்டாரே........ "  அதே கண்களில் இப்போது நீர்க்கோர்த்து கவலை..ஏக்கம்....தவிப்பு....

"அவர் ஒடம்பு  சரியாகி வர வரைக்கும் தனியா இருந்து பழகிக்கோ பாட்டி.... "

கண்களை விரித்துக்கோபத்தோடு... "என்ன பேசற நீ? ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க....?! "

"சரி சரி..கோச்சிக்காதப்பாட்டி,  உனக்கே தெரியுமில்ல....அவருக்கு ஒடம்பு சரியில்லையே...என்ன செய்யறது... ?! வந்துடுவாரு... ...வந்துடுவாரு..."

".ம்ம்ம்.... . வந்துடுவாரு..."  பார்வை குத்திட்டு நிற்க... ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து உடலுக்கு கையை ஊன்றி முட்டுக்கொடுத்து ஒருக்களித்து படுக்கிறார்.... .

*********************

முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்த என்னிடம், உதவியாளர் பாட்டிக்குத்தெரியாமல் -

 "பாவம்.... தாத்தா இறந்து நாலு நாள்..ஆச்சி.. இன்னும் இதுக்கு தெரியாது.... எவ்ளோ நம்பிக்கையா இருக்குப்பாருங்க..."

"அடடே....இறந்துட்டாரா..?!  ஏன் சொல்லல.... ஏன் சொல்லாம இருக்கீங்க... ..இவ்ளோ எதிர்பார்ப்போட இருக்காங்களே..... பாவமில்லையா.....?! "

"சொன்னா தாங்காதுங்க... தாங்காதுன்னு தெரிஞ்சி எப்படி சொல்றது? இரண்டுப்பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கமாட்டாங்க..."

"ம்ம்ம்ம்"

*********************

நான்கு நாட்களுக்கு முன் உடல் நிலை மிகவும் மோசமாகி, மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப்பாட்டியின் கணவர் அன்றே மருத்துவனையில் இறந்துவிட்டார்.

இவர்களுக்கென்று யாருமில்லை, குழந்தைகள் 4-5 பிறந்து இறந்துவிட்டன, தாத்தா ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்று, மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெற்றுவந்திருக்கிறார்.

அவர் இறந்ததறிந்த அந்தப்பாட்டியின் அக்காப்பிள்ளைகள், பாட்டிக்கு விசயத்தை சொல்லாமல், தாத்தாவின் ஈமச்சடங்குகளை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.  இருந்த ஒரே உறவும் இறந்ததுத்தெரியாமல்,  வழிமேல் விழிவைத்து அவர் வந்துவிடுவார் எனக் காத்திருக்கும் பாட்டியைப்பார்க்க நெஞ்சு நெகிழ்ந்தது.

பாட்டியின் எதிர்ப்பார்ப்பில் "விரிந்து பளப்பளத்த"  அந்தக் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு விலகவில்லை...

வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதா...இல்லை அடுத்த மணித்துளியில் நடக்கவிருக்கும்  .....சுவாரசியங்களும், சூழ்ச்சிகளும், மாயங்களும், அதிசயங்களும் ஆச்சரியங்களும் அறியாத "மாயை" என்பதா... ?!

அணில் குட்டி : ஆக்சுவலி.... இதைப்பார்த்ததிலிருந்து அம்மணிக்கு அவங்க எதிர்காலத்தை நினைச்சி அள்ளுவிடுது.. !! அதை வெளியில சொல்லிக்காம பாட்டியோட லைஃப் லைவ் ஸ்டோரி எழுதறாங்க....... ......  .......

பீட்டர் தாத்ஸ் : Life is what happens while you are busy making other plans - john_lennon 

Image : Thx Google