பெண்ணிற்காக ஒரு தாஜ்மகல், ஆணிற்காக..?

காதல் சின்னம் என்று அழைக்கப்படும் தாஜ்மகல், காதலிக்காக கட்டப்பட்டது இல்லை என்பதை தெரிந்து கொண்டது, மிக சில வருடங்களுக்கு முன் அங்கு சென்ற போது தான்.

சிறு வயதில் பள்ளியில், ஷாஜஹான் தன் காதலி மும்தாஜுக்காக ஆக்ராவில் தாஜ்மகல் கட்டினார். இது உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.. என்று படித்தது மட்டுமே.. கொஞ்சம் பெரிய பிள்ளை ஆனாதும், சினிமாக்களில் காட்டும் போது, பிரம்மிப்பாக இருக்கும், நேரில் சென்று ஒருமுறையாவது பார்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் ஆசை நிறைவேறிற்று.. அங்கு மகலின் உள்ளே செல்வதற்கு முன் தாஜ்மகலின் வரலாறை பதித்துள்ளனர். அதை படித்தபிறகு தான் ஷாஜஹான் தன் காதல் மனைவிக்காக கட்டியது என்று தெரிந்தது. மும்தாஜ் தன் 15 ஆவது குழந்தை பிறந்தவுடன், இறந்து போனார், அதற்கு பிறகு அவரின் நினைவாக கட்டியது தான் தாஜ்மகல்.

தாஜ்மகலை நேரில் பார்த்த போது, ஷாஜகான் அவர் மனைவி மேல் வைத்த அன்பு எத்தனை ஆழமானது என்று புரிந்தது.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வளவு பெரிய மகலை கட்டியிருக்கிறாரே..என்று மிக பிரம்மிப்பாக இருந்தது.. ஒவ்வொரு கல்லிலும் அவரின் காதல் தெரிகிறது. மறைந்து போன அந்த மனிதரை பார்க்க முடியாவிட்டாலும் அவரின் ஆழமான அன்பை அந்த மகலில் உணரமுடிந்தது.

காதலிக்கும், மனைவிக்கும் நிறையவே வித்தியாசம் உண்டு.. காதலிக்கும் போது ஆண்களுக்கு பெண்களிடம் உள்ள காதலும் அன்பும், மனைவியான பிறகு இருக்காது என்பது தெரிந்த விஷயம்.. மனைவிக்காக..அதுவும் 15 குழந்தைகள் பிறந்த பிறகும் க்கூட ஒருவர் மனைவி மேல் இருக்கும் அன்பை இப்படி வெளிப்படுத்தமுடியுமா என ஆச்சரியமாக இருந்தது.. என் கணவரிடம் கூட இதைப்பற்றி சொன்னேன்.. “நீங்களும் நம் அன்பின் வெளிப்பாடாக எனக்கு இப்படி ஒரு மாளிகை கட்டுங்களேன்னு...” அவரோ “இது ஷாஜஹான் அவர் மனைவி இறந்தபிறகு கட்டியது.. உனக்கு எப்படி வசதி என்றார்.........”

சரி விஷயத்திற்கு வருவோம்... தாஜ்மகலை பார்த்த போது, ஏன் பெண்கள் ஆண்களுக்காக எதுவுமே இப்படி செய்வதில்லை.. பெண்கள் என்ன அன்பில்லாதவர்களா?.. காதல் இல்லாதவர்களா.. கல் நெஞ்சக்காரர்களா?.. காதலனுக்கோ, கணவருக்கோ இதுவரை எந்த பெண்ணாவது (வரலாற்று கதைகளை தவிர) இப்படி நினைவு சின்னங்களோ, இல்லை ஏதோ ஒரு வகையில் வியக்கும்படி தங்களது அன்பை வெளிப்படுத்தி இருக்காங்களான்னா?.. எனக்கு தெரிந்து இல்லை. தாஜ்மகலை விடுங்கள், ஒரு தெருவில் நடந்து போகும் போது பார்த்தால் வீடுகளின் பெயர் “லஷ்மி இல்லம்” “பத்மாவதி இல்லம்”... இப்படி அந்த வீட்டு குடும்ப தலைவியின் பெயரில் இருக்கும். நிச்சயம் இவை பிள்ளைகள் பெயர் இல்லை, (பொதுவாக பிள்ளைகள் பெயர் வாகனங்களில் (கார், பைக்..) பார்க்கலாம்.) இப்படி ஆண்கள் எல்லாவற்றிலும் அதிகமாக தங்களின் அன்பை வெளிபடுத்தும் போது, பெண்கள் ஏன் வெளிபடுத்துவது இல்லை..?!!

எனக்கு தெரிந்து, பொதுவாக பெண்கள் ஆண்களை விட மன வலிமை பெற்றவர்கள். எதையும் எளிதில் வெளியில் சொல்லிவிட கூடியவர்கள் இல்லை. பெண்ணின் மனதை இதுவரை முழுதும் அறிந்தது யாரும் இல்லை எனும் அளவிற்கு மனதளவில் வலிமை கொண்டவர்கள் என்றாலும் உள்ளுக்குள் ஆண்களை விட அதிக அன்பு, நேசம், பாசம் கொண்டவர்கள் பெண்களே.

ஒரு பத்திரிக்கையில் படித்த உண்மை சம்பவம் இது, ஒரு பெண்ணின் கணவர், சிறு வயதிலேயெ ஒரு விபத்தின் மூலம் நடக்கும் மற்றும், பேசும் சக்தியை இழந்து, படுத்த படுக்கையாகிவிட்டார். அவரை அவரின் மனைவி விட்டு விலகி செல்லாமல், வருட கணக்காக ஒரு குழந்தையை போல் கவனித்து வருகிறார். அவரின் பார்வையில் மட்டுமே அசைவு இருக்கிறது..அதையே தன் வாழ்க்கையாக நினைத்து அந்த பெண்மனி இன்னமும் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அவருக்கு முழு பணிவிடையும் இவரே செய்கிறார் (உணவு கொடுப்பது, குளிப்பாட்டுவது, உடைகள் மாற்றுவது, சிறுநீர், மலம் சுத்தம் செய்வது). இத்தனை வருடம் ஆன பிறகும் கூட அவர் இதை செய்ய சோர்ந்து போகவில்லை என்பது வியக்கதக்க பெண்ணின் குணம் அல்லவா?.. இதில் எத்தனை காதல் உள்ளது. அடுத்து கேரளாவிலும் இதை போன்றே ஒரு பெண் தன் கணவரை பார்த்து கொள்கிறார்..அவர் வெளி உலகை பார்த்தே ஆண்டுகள் பல ஆகிவிட்டன என்ற செய்தியும் கூட என்னை பெண்ணின் அன்பையும் காதலையும் எண்ணி வியக்கவைத்தது. இந்த உண்மை கதை, மலையாளத்தில் நடிகை ரேவதி, நடிகர் மோகன்லால் நடித்து திரைபடமாக வெளிவந்துள்ளது. (படம் பெயர் தெரியவில்லை)

ஆக, ஆண்களை போன்று பெண்கள் காதலை வெளிப்படுத்துவது இல்லையே தவிர..ஆண்களை விட பெண்களின் அன்பிற்கே சக்தியும், ஆயுட்காலமும் அதிகம். ஒரு தாஜ்மகல் என்ன ஒராயிரம் தாஜ்மகல் ஒவ்வொரு பெண்ணின் மனதிற்குள்ளும்......

அணில் குட்டி அனிதா:- ஹா..ஹா..ஹா.. கவிதா சூப்பரா வூடு(தாஜ்மகல்) கட்டி இருக்கீங்க போங்க.. ம்ம்... பெண் மனசு பெண்ணுக்கு தானே தெரியும்.. அது இருக்கட்டும்... உங்களுக்கு போய்.. ஹா..ஹா....தாஜ்மகல் ஹா..ஹா... எல்லாம் கட்ட சொல்லி.. ஹா..ஹா...தமாஷ்ஷு போங்க..வர வர நீங்க பண்ற தமாஷ் தாங்க முடியல...அய்யோ..அய்யோ..இது எல்லாம் கேட்டு வரக்கூடாது..அம்மனி..தானா வரனும்.......ஆனா உங்க hubby correct ஆ பதில் சொல்லி இருக்காரு.. என்னைய மாதிரி அவரும் எப்ப விடுதலை கிடைக்கும்னு காத்துக்கிட்டு இருக்காரு போல........அடடா..உடனே..சும்மா முட்ட கண்ண வச்சிக்கிட்டு முறைக்காதீங்க.. பயம்ம்ம்ம்ம்ம்மா இருக்குது இல்ல......

பெண்கள் சுடுக்காட்டிற்கு செல்வதில்லை...ஏன்?

ஏதோ ஒரு நல்ல காரணத்துக்காக தான் பெண்களை தெருவுடன் விட்டு செல்கிறார்கள் என்றால் அது என்ன?.. எங்களது வீட்டில் சொல்லப்பட்ட விளக்கம்- பெண்கள் மிகவும் மென்மையானவர்கள், அவர்களால் சுடுக்காட்டில் நடப்பவைகளை பார்த்து மனம் தாங்கமுடியாது..செய்ய வேண்டிய வேலைகளை கவனிப்பார்களா..இல்லை பெண்கள் அழுவதை பார்த்து கொண்டும், சமாதானம் செய்து கொண்டும் இருப்பார்களா?. அதனால் தான் வீட்டுடனே அவர்களை நிறுத்தி விடுகிறார்கள் என்பதே

இந்த விளக்கம் சரியானதா என எப்பவும் ஒரு கேள்வி. ?.. பெண்கள் மென்மையானவர்கள், அதிக துக்கத்தை தாங்கமாட்டார்கள் என்றால், கிறுத்துவ மதத்தில் துக்கத்தில் கடைசி வரை பெண்கள் இருக்கிறார்களே?.. மதத்திற்கு மதம் பெண்களின் இயல்பான குணம் மாறி போகிறதா?.. இதற்கு அவர்கள் சிறு வயது முதலே அப்படியே வளர்க்கப்படுகிறார்கள், அதனால் அது அவர்களுக்கு பழகி விடுகிறது என்றே வைத்து கொள்வோம். ஏன் நாமும் அப்படி பழகக்கூடாது... ஏன் தெருவுடன் நிற்க வேண்டும்.

பல காரணங்களை யோசிக்கும் போது...தோன்றிய ஒன்று....எல்லா ஆண்களும், பெண்களும் சுடுகாடு வரையில் சென்றுவிட்டால், வீட்டை சுத்தம் செய்வது யார்?.. இதற்காக பெண்கள் வீட்டோடு நின்று விட்டால்.. இந்த வேலைகள் தானாக நடக்கும் என்று இப்படி நடைமுறை படுத்தி இருப்பார்களோ..?! என்பது தான்.

இந்த பதிவிற்கு முக்கிய காரணம், எங்களது அடுக்கு மாடி குடியிருப்பில், ஒரு நண்பர் மாரடைப்பால் திடீரென்று காலமாகிவிட்டார். அவருக்கு ஒரே மகள் (22 வயது), அவருடைய உறவினர்கள், அந்த பெண்ணின் சித்தப்பா மகனை எல்லா காரியங்களையும் செய்ய சொல்ல, அந்த பெண், தன் உறவினர்களிடம், என் அப்பாவிற்கு எல்லாம் நான் தான் செய்வேன் என வாதம் செய்து எல்லாமே அவள் தான் செய்தாள். கடைசியாக சுடுக்காட்டிற்கு அவள் வரக்கூடாது என உறவினர்கள் மறுக்க, அவர்கள் சொன்ன காரணம் அவள் அங்கு வந்தால் பயந்து போவாள் என்பதே. ஆனால் அந்த பெண்ணோ..”அவர் என் அப்பாங்க..நான் எப்படி அவரை பார்த்து பயப்படுவேன்..நான் தான் அவருக்கு சுடுக்காட்டிலும் எல்லாம் செய்வேன்” என்று விடாப்பிடியாக சென்று செய்து விட்டு வந்தாள்.

இது சென்னை போன்ற நகரங்களில் சாத்தியமானது.. இதுவே..நம் கிராமங்களில் சாத்தியப்படுமா?.. பெண்கள் இப்படி செய்ய அனுமதிப்பார்களா..?!!

தன் சொந்த அப்பாவிற்கு கடைசியாக செய்யும் ஈமச்சடங்கை க்கூட ஒரு பெண் போராடித்தான் செய்ய வேண்டி உள்ளது என்பதை நினைக்கும் போது நம் சமுதாயத்தின் பார்வைகளும், பழக்கவழக்கங்களும் எப்போது மாறுமோ என வேதனையாக இருக்கிறது....

அணில் குட்டி அனிதா:- ஏன் கவிதா நீங்க வேதனை படறீங்க.. உங்களுக்கு என்ன பையன் தானே....ஆனா நான் ஒன்னு..சொல்றேன்.. நீங்க மூச்சு விட மறந்த பிறகு..உங்கள பாக்கவர அத்தனை ladies ஐயும், வேன், கார், ஆட்டோ ன்னு வச்சி எப்படியாவது உங்கள எரிக்கிற இடத்துக்கு கூட்டிட்டி வரது என் பொறுப்பு....அது சரி.....நீங்க எப்ப மூச்சு விட மறப்பீங்க.. அதுக்காக....ரொம்ப நாள் எடுத்துக்காதீங்க சரியா?!!!

அணில் குட்டியின் வருத்தம் - வாருங்கள்..கேளுங்கள்..

அடடடடா.. என்ன வெயில்... என்ன வெயில்.. இந்த வெயில் தாங்க முடியாம தாங்க குளிர் பிரதேசமா போய், அங்க இருக்கற தோப்புங்களை எல்லாம் ஒரு ரவுண்டு அடிச்சிட்டு வராலான்னு “கோடை” போனேங்க.. ..

இந்த அம்மனி கவிதா இருக்காங்கலே...நான் லீவு கேட்டவுடனே ..காத்திருந்த மாதிரி ..போய்ட்டு மெதுவ்வ்வ்வ்வ்வா வா..ன்னு அனுப்பிட்டு..இங்க blog ல நமக்கு அல்வா குடுத்துட்டாங்க.....

இத்தனை பேர் இருக்கீங்க..ரெண்டு பேர் வேணாம்..அட..ஒருத்தர்...ஒரே ஒருத்தர்.. இந்த அம்மனிய ஒரு வார்த்தை க்கூட கேக்கலையே ..அதுதாங்க எனக்கு வருத்தம்.. வருத்தமோ வருத்தம்..அழுக அழுகையா..வருது...ம்ம்ம்ம்ஸ்ஸ்ஷ்ஷ்.. (ஒன்னும் இல்ல கொஞ்சம் மூக்கை சிந்திக்கிட்டேன்..)

மேட்டர்க்கு இன்னும் நான் வரலையோ...இதோ வந்துட்டேன்.. என்னை இந்த அம்மனி (க)பாவிதா..அவங்க எழுதின “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே..

ஆற்றலரசி..ஆருயிர் அக்கா பொன்ஸ்...அமெரிக்கா போங்க..இல்லை ஆஸ்திரிலியா போங்க..ஆனா..என்னைய மறக்கலாமா.. இப்படி ஒன்னுக்குள்ள 2, 3 , 4 பழகிட்டு ஒரு வார்த்தை க்கூட..என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா.. அவங்கள மட்டும் புகழ்ந்து பதில் போட்டுட்டுடு போயிடீங்க...நியாமா...

அடுத்தது..நற..நற..நற..பாலா...பல் இருக்கா அண்ணாச்சீ..சீ சீ.. இப்படியே பல்லை கடிச்சீங்க..ஒரு நாள் “பொக்கை பாலா “ வா ஆகபோறீங்க.. சரி நம்ம மேட்டருக்கு வாங்க.. நீங்களாவது என்னடா..அணில காணமேன்னு கேட்டீங்களா..

அடுத்தது.. நக்கீரர் நெ.1. அருள்..நான் இருந்தாலும் ஒரம் கட்ட பாப்பீங்க..இல்லைனாலும் கேட்பீங்க.. “வலைப்பூடேட்டா “ விட்டுபுட்டாங்களே.. கேட்டீங்களா.. உங்களுக்கு தான் நான் இல்லைனா..கொண்டாட்டாமாச்சே..!

பெருமதிப்பிற்க்கும், மரியாதைக்கும் உரிய ஐயா பெருந்தகை..பேனை 106 பெருமாள் ஆக்கிய...சந்தோஷ் அவர்களே.......... (போதுமா மரியாதை…..யப்பா...இதுவே மூச்சி வாங்குது..ஒரு fanta ப்ளீஸ்) நான் வாய் தொறக்க கூடாதுன்னு அம்மனி சொல்ற அளவுக்கு பண்ணீங்களே.. அந்த அம்மனி என்னைய வலைப்பூடேட்டா லிருந்து கழட்டி விட்டுட்டாங்களே.. கேட்டீங்களா....

சிங்கபூர்லேர்ந்து ஒருத்தர் சென்னையில கால் வைக்கல அதுகுள்ள phone பண்ணி, கவிதா..கவிதா..அந்த அணில் குட்டி யாருன்னு கேக்க தெரியுது இல்ல... “வலைப்பூடேட்டா “ வில இல்லையே எங்கனு கேக்க தெரிஞ்சிதா.. ஆமா நான் தான் சொல்லியிருக்கேன் .இல்ல... செயகுமார்...புரியலனா விட்டுடனும்னு..திருப்பி திருப்பி அது என்ன.. அணில் குட்டி யாரு? அணில் குட்டி யாருன்னு.?.

நான் தெரியாமா தான் கேக்கறேன்.. ஆமா.. இந்த கவிதா..யாரு.. நான் இல்லாமே இந்த அம்மா தனியா..எப்படி எழுதுவாங்க.. இவங்க பதிவ படிக்க வர கொஞ்ச நஞ்சம் பேரும் என் அறிவையும்,ஆற்றலையிம் மதிச்சி, என் முகத்துக்காக வராங்க.. அது தெரியாம..இவங்க..என்னடான்னா.. என்ன விட்டுட்டு ஒரு “வலைப்பூடேட்டா” பதிவாக்கி இருக்காங்க.. இதுல இருந்து ஒரு விஷயம் புரியது..நம்மல ஒரு ஜீவனாவே இந்த blog ல யாரும் மதிக்கல.. சே..! ஹ்ம்ம்..என் அறிவுக்கும், ஆற்றலுக்கும்..அழகுக்கும் வந்த சோதனை அல்லவா இது..!

ஆனா ஒன்னு சொல்லிட்டேன்.. எனக்கு நீங்க அத்தன பேரும் அந்த அம்மனிக்கிட்ட கேட்டு..பதில் சொல்லியே தீரனும்..

புரியுது..இவ்ளோ சீன் போடற நான் ஏன்..அந்த அம்மனிய நேரா கேக்க கூடாதுன்னு தானே கேக்கறீங்க.. அக்காங்களா...தம்பிகளா... அண்ணாச்சிகளா.. தங்கச்சிகளா.. ஒரு சின்ன விஷயத்தை நீங்க எல்லாரும் புரிஞ்சிக்கனும்.. இந்த விஷயத்தை நான் நேரா கேட்டா.. அம்மனி என் சீட்டை கிழிச்சி. ஒரேடியா அனிப்பிடுவாங்க... அப்புறம்.. நான் ooti, kodai ன்னு டிரிப் அடிக்க முடியாது....ஓட்ட சட்டி வைச்சு பிச்ச இல்ல பிச்ச அதுதான் எடுக்கனும்.....