எட்டுக்குள் நானும் மாட்டிக்கிட்டேன்............

நண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......

அணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க..! அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........

1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு. 

அணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா?. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......!!

2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.

அணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..

3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.

அணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......!! ம்ம்..ம்ம்.............மேல.... மேல ....!!

4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)

அணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))

5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.

அணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............

6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.

அணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......

7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.

அணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு? கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....

8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.

அணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...?...

பீட்டர் தாத்ஸ்:- The secret of joy in work is contained in one word-Excellence. To know how to do something well is to enjoy it.

எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. சிவகுமார்ஜி
2. சீனு
3. மங்கைஜி
4. மதுரா
5. உஷாஜி
6. நா.அன்ந்தகுமார்
7. தேகாஜி
8. கொத்ஸ்

விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்

MNC யில் வேலை பார்ப்பது தவறா?

வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே? படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள்? ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா.? பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.?

ஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.

மேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.

MNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,

மிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்
மிக குறைந்த முதலீடு
இரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது
இந்தியர்களின் - படிப்பு, திறமை, உழைப்பு

பொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.

இந்திய கம்பெனி :-
1. மிக குறைந்த சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.
3. தனி மனித சுதந்திரம் இல்லை
4. வேலை தரம் குறைவு
5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை
6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்

MNC
1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.
3. தனி மனித சுதந்திரம் உண்டு
4. வேலை தரம் மிக அதிகம்
5. எல்லா வசதிகளும் உண்டு
6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.

இந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.
தனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.

முதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.

அடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.

அடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.

அடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.

தொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்டில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.

கடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.

MNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.

MNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்து கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.

அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா!! முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா?, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..!.

அம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே...!! ம்ம் ..அதே தான்........!! வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))

பீட்டர் தாத்ஸ்:- Pursue one great decisive aim with force and determination.

அட பைத்தியகாரர்களா?

என்ன நடக்கிறது இங்கே? நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.

இன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா!!?”என்று பயமாக இருக்கிறது.

எவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதில் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.

சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா?

சினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.

ஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,

“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “
“ஓ..யாரு உங்க தலைவர்? “
“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்!! “
“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா?”
“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா? “
“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு?
“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் !!”..
“சரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”
“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “
“ஓ.....என்ன பாக்கியம்..”
“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”

அதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.

“சரிங்க ஆண்ட்டி ! நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.

இப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.

ஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா? எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....?

அணில் குட்டி அனிதா:- அட அட அட...!! கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ?.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ? ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.!!.) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க..!! அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........!! ஏன்னு கேக்கறீங்களா..??? அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க......!!! ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..

பீட்டர் தாத்ஸ்:- The smallest good deed is better than the grandest intention.