எனக்கு தூக்கம் சரியாக இல்லையென முந்தைய இரவு, 'விடியற்காலை 5.30 மணிக்கு எழுந்துக்ககூடாது, ஜிம் போகக்கூடாது' என அதட்டி மிரட்டி தூங்க கட்டளையிட்டிருந்தார் வூட்டுக்காரர்.

ஒருநாள் அவருக்கும், அதிக நேரம் தூங்குவதால் ஏற்படும் விளைவுகளை எடுத்துக்காட்ட நல்லாவே தூங்கினேன். எழுந்த போது மணி காலை 8.30, கூடவே கனவில் கண்ட ரவுடியின் குடும்பமும் எழுந்து வந்தது.

இந்தமாதிரியான கனவு எனக்கு எப்படி ஏன் வந்தது என பிடிபடல. சினிமா எதும் பார்க்கல, தொலைக்காட்சி நிகழ்ச்சிகளும் பார்த்து மாதக்கணக்காகிறது.  ஆகவே அந்த பாதிப்புகளும் இல்லை. கனவிலிருந்து வெளிவந்தபிறகு இதை எழுதும் இந்த நொடி வரை அங்கு நான் ஏன் இருந்தேன், என்ன சம்பந்தம் போன்ற கேள்விகளுக்கு விடையில்லை.

எப்போதும் போல கனவை மறக்கும் முன், குடுகுடுவென அவரிடம் சொல்ல ஓடினேன். வாழ்க்கைப்பட்டவர் தலையெழுத்து கேட்டுத்தானே ஆகனும். கனவை சொல்ல ஆரம்பிக்கும் முன்னமே 'அங்கே நான் எப்படி போனேன், எதுக்கு போனேன்னு கேக்கப்பிடாது..ஏன்னா எனக்கும் தெரியாது..' ன்னு கன்டிஷன் போட்டுவிட்டு ஆரம்பித்தேன்.

கனவுக்குள் செல்வோம். பிஜிஎம் சேர்த்துக்கொண்டு படிக்க ஆரம்பிங்க...

பகலா இரவா ன்னு தெரியாத ஒரு சூழல், பெரிய வீடு... உள்ளே இருக்கிறேன்.  என்னை சுற்றி அழகான ஒரு குடும்பம்.

'உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு
என் உள் நெஞ்சு சொல்கின்றது'

இந்த பாடலில் வரும் அஜித் போல, அங்கிருப்போருக்கு நானிருப்பது ஒரு பொருட்டாகவே இல்லை, நானும் அவர்களை கவனிக்கிறேனே ஒழிய எதும் பேசவில்லை.  பெரிய குடும்பம். குடும்பத்தலைவர் தமிழ் திரைப்படங்களில்
காட்டுவது போல ஒரு ரவுடியாக இருந்து பெரிய அரசியல் வாதியாக மாறியிருக்கலாம், அல்லது வெறும் ரவுடியாகவும் இருக்கலாம்.. அச்சு அசலாக அமைச்சர் ஜெயக்குமார் சாயல், அதே வயது. கொஞ்சம் உயரம் அதிகம், அதே தலை, சொட்டை பளபளன்னு மின்னுது. இந்த மின்னவதை மட்டும் நீங்க நினைவில் வச்சிக்கனும், கடைசியில் திரும்ப வரும். 

அவருடைய மனைவி நல்ல லட்சணம். அந்த வயதிலும்  சுறுசுறுப்பாக  சிரித்த முகத்தோடு வளம் வருகிறார்,  இரண்டு அழகான மகள்கள்,  ஒருவர் மருத்துவர், திருமணம் ஆகி அவருடைய குழுந்தைகளுடன் அதே வீட்டில் இருக்கிறார். ஒரு அறையில் க்ளீனிக் வைத்து, சன்னல் வழியாகவே அக்கம் பக்கம் இருக்கும் ஏழைகளுக்கு இலவசமாக மருந்து மாத்திரை கொடுத்து சேவை செய்துவருகிறார்.  இன்னொரு மகள் கல்லூரியில் படிப்பதாக கருதுகிறேன். அதுபோலவே அவருக்கு வளர்ந்த திருமணமான மகன்களும் இருப்பதாக யூகிக்கிறேன்,அவர்களை பார்க்கவில்லை. பேரக்குழந்தைகளும் அவ்வப்போது வீட்டில் ஓடி ஆடி விளையாடுகின்றனர்.

இவர்களை தவிர வீட்டினுள் இவருக்கு பாதுகாப்பாக முடிக்களைந்து, தொப்பையோடு, கட்டுமஸ்தான மொட்டை தலை உட்பட மூன்று அடியாட்கள் இருக்கின்றனர்.

நம்ம சொட்டத்தலை, அடியாட்கள்  இருக்கும் தெம்பில் சோபாவில் ரிலாக்ஸ் ஆக உக்காந்து வடிவேலு காமெடி பார்த்து சிரித்துக்கொண்டிருக்கிறார்.  வெளியில் ஏதோ சத்தம் கேட்க, சன்னல் அருகில் சென்று பார்க்கிறேன், இரண்டு வெள்ளை நிற போலேரோ வேகமாக வருகிறது, உள்ளிருப்போர் கண்ணாடியை இறக்கிவிட்டு பெரிய பெரிய கத்தி, கம்புகளை சுற்றிவாரே கத்திக்கொண்டு வருகின்றனர்.

அடியாள் ஒருவரும் என்னோடு சேர்ந்து சன்னல் வழியே ப்பார்க்கிறார். என்னன்னு நான் கேக்க, எனக்கு பதில் சொல்ல நேரமில்லாமல், 'கதவு, சன்னல் எல்லாம் சாத்துங்க ' ன்னு கத்திக்கொண்டே  நாங்கள் பார்த்துக்கொண்டிருந்த சன்னல் சேர்த்து ஒவ்வொன்றாக சாத்துகிறார். நம்ம சொட்டத்தலையும் விபரீதம் தெரிந்து அவர் பங்குக்கு ஓடி சென்று சன்னல்களை சாத்துகிறார்.  மருத்துவம் பார்க்கும் பெண் அறைக்கு அடியாள் ஓட , பின்னால் நானும் பரபரக்க செல்கிறேன். முன்னமே அங்கே ஒரு சுருட்டை முடி அடியாள் நிற்கிறான். ஆனால் மருந்துக்கொடுக்கும் சன்னலை மூடவில்லை. உள்ளே சென்றவன் மூட முயல, டாக்டரம்மா 'ஏய்..என்ன செய்யற...வெளியில் பேஷன்ட் நிக்கறாங்க நீ பாட்டுக்கும் மூடற.. போ இங்கிருந்து ' என கருமமே கண்ணாக நிமிர்ந்துக்கூட பார்க்காமல் கத்த, உள்ளே போனவன் அதே வேகத்தில் வெளியே போயிடறான்.

எனக்கு மட்டும் பதட்டம் அதிகமாகி... என்ன இந்தம்மா ஆபத்தை விலைக்கு வாங்க காத்திருக்கே... இதுக்கு என்ன ஆகுமோன்னு நினைக்கும் போதே இரண்டு குழந்தைகள் ஓடிப்பிடித்து விளையாடியவாரே உள்ளே வந்து ஒரு ரவுண்டுப்போட்டு கட்டிலில் எகிறி குதித்து வெளியே ஓடுகின்றனர். என் கவனமோ அந்த அறைக்குள்ளேயே இருக்கும்  அடியாளிடம் சென்றது..'அடேய் பத்தரமாய் அந்தம்மாவை பாத்துக்குவியா?? ' என்பது ப்போல கண்ணாலேயே கேட்க... அவனும் புரிந்து லேசாய் பெருமையாய் 'அதுக்குத்தானே என்னை இங்கவே நிக்க வச்சி இருக்காங்க ' வென கண்ணாலேயே பதில் சொல்றான்.

அந்தம்மா சன்னல் அருகில் அமைக்கப்பட்டுள்ள டேபிலில் உக்காந்து சீட்டில் மருந்து விபரங்கள் எழுதி, மருந்தும் எடுத்துக்கொடுத்துட்டு இருக்கு.. அதுக்கு வேற்று சிந்தினையோ சிதறலோயில்லை. (எல்லாரும் நம்மை மாதிரியேவா இருப்பாங்க??)

 அந்தம்மா வேலை செய்வதை பார்த்தவாரே வெளியில் வரேன். பளீச் சொட்டை & மற்ற இரண்டு அடியாட்களின் முகத்திலும் ஒரு நிம்மதி தெரிய.. சரி வந்தவங்க போயிட்டாங்க போலவே ன்னு ஒரு அடியாளிடம் கேட்க.. 'தட்டிப்பாத்துட்டு போயிட்டானுங்க.. இனிமே பயமில்ல..இன்னைய கோட்டா ஓவர்.. இனி வரமாட்டானுங்க.. '

ஓ' ன்னு வியப்போடு பார்க்கும் போதே... பளீச் சொட்டை கதவை திறந்துட்டு வெளியில் போறாரு. 'எங்கையா போறார்' ன்னு கேட்க முன்ன.. சன்னல் வழியா பார்க்கிறேன். அம்மாடி எவ்ளாம் பெரிய குளம்.?? குளம்னு சொல்லமுடியாது ஜெனிவா ஏரி கணக்கா இருக்கு. அங்கங்க சின்ன சின்ன படகுகள்,  இவர் வீட்டு வாசலில் ஒரு பக்கமா படிக்கட்டுகள் நேராக இந்த ஏரிக்கு படித்துரைப்போல அமைந்திருக்கு..  நெருக்கமா படகுகளும் கட்டப்பட்டு இருக்கு.  இதையெல்லாம் நான் கவனித்துவிட்டு நம்ம பளீச் சொட்டை எங்கன்னு தேடும் போது கண்ணுக்கு எட்டிய தொலைவில் உல்லாசமாக நீந்தி மிதந்து குளிச்சிட்டு இருக்கார்.

அடக்கடவுளே  இத்தனை ஆபத்து இருக்கப்ப , இந்த ஆளு என்ன இப்படி
குளிச்சிட்டு இருக்காரு?? ன்னு நினைச்சபடியே  ரூம்'மில் லுக் விட்ட மாதிரியே இங்க இருக்க அடியாளை லுக் விட.. அவர் என்னை கவனிக்காமல் சன்னல் வழியே பார்க்கும் போதே அவர் முகத்தில் கலவரம் தெரிய.. நானும் திரும்பி பார்க்கிறேன்.

குளத்தில் ஆங்காங்கே தண்ணீருக்குள்ளிருந்து அருவாளோடு ஆட்கள் வெளிவர சொட்டை பாஞ்சி வருசையாய் நிறுத்தி வைத்த படகில் படுத்து தன்னை மறைத்துக்கொள்ள...  எதிராளிங்க.. தள்ளியிருந்த படகிலிருந்து எழுந்து நின்று சொட்டையை தேட.. நம்ம சொட்டை படுத்தவாரே பிரண்டு பிரண்டு நெருக்கமான நிறுத்தப்பட்டிருந்த படகுகளில் மாறிக்கொண்டே வருகிறார். அவரோடு முன்னும் பின்னுமாக 4-5 பேர் ஒரே மாதிரி உருண்டு வருகிறார்கள்.  [ஏது ஆட்கள்னு சின்னப்புள்ளத்தனமா கேட்கப்பிடாது. உள்ளவே 3 பேர் இருக்காங்களே வெளிய இருக்க மாட்டாங்களா? கனவு கண்ட எனக்கே இந்தக்கேள்வி வரல. சும்மா உக்காந்து படிக்கற உங்களுக்கு வரலாமா?]

இப்படி படகுகளில் அமைச்சர் ஜெயகுமார் வயதுக்காரர் உருண்டால் என்னாகும்?... அதே..கடைசி படகுக்கு முதல் படகில் கழுத்து சுளுக்கி..வலி தாங்காமல் கழத்தை பிடிச்சிக்கிட்டு லேசா நிமிரும் போதுதான்.. அவரோட அந்த மின்னும் சொட்டைத்தலை பளீச் பளீச் ன்னு லைட்டு மாதிரி மின்ன..[நோட் பண்ண சொன்னேனில்ல இதுக்கு தான், எனக்குமே அப்பதான் அவர் எங்க இருக்கார்னு தெரிஞ்சிது.. ஹிஹி...] ..மின்னலில் சொட்ட எங்க இருக்கார்ன்னு தெரியவர... எதிராளிங்க பாய்ந்து தாக்க ஆரம்பிக்க.. இவரை காப்பாற்ற அடியாட்கள் முன்னே பாய்ந்து அடிவாங்க..  சொட்ட சொட்ட நனைந்த சொட்டை சந்தில் புகுந்து துண்டக் காணோம் துணியைக் காணோம்னு ஓடிவர.. ஒருவித பதட்டத்தோடு வாய்ப்பொலந்து பார்த்துக்கிட்டு இருந்த அடியாளை..'யோவ்..அந்த ஆளு ஓடிவராரு ப்பாரு ஓடு ஓடு கதவை திற... அவனுங்கக்கிட்ட சிக்கிட போறாருன்னு நான் கத்த...  அவன் ஓடி கதவை திறக்க.. ஜஸ்ட் மிஸ்ஸிங் ல..சொட்டை தப்பிச்சி உள்ளே வந்து குனிந்து முட்டியை பிடிச்சிட்டு மூச்சு வாங்குகிறார்.

இப்பதான் அடியாளிடம் நான் கேக்கறேன். 'ஆமா.. வீட்டுக்குள்ள வந்துட்டா விட்டுடுவாங்களா...கதவ சன்னல உடைச்சிட்டு உள்ள வரமாட்டாங்களா??'

அடியாள்... தெனாவட்டாய் சிரித்தபடி 'முடியாதே.. நம்ம வீட்டுக்கு மேல் ஏ ஜி ச்ர்ச் இருக்கே.. கட்டடத்தில் கை வைக்கவே மாட்டாங்க.. மத கலவரமாகிடுமில்ல .'... ன்னு சொல்ல...

'என்னது ஏ ஜி ச்ர்ச் ஆ'..ன்னு அண்ணாந்து மேல பார்க்க..எனக்கு தெரிஞ்சது என்னவோ..அந்தவீட்டின் சீலிங் தான்.... 

சீலீங் பார்த்துட்டே முழிச்சிட்டேன்...

**************

வூட்டுக்கார்... 'செமயா இருக்குடி..எழுதி வை.. அப்படியே டெவலப் செய்து பெருசாக்கு.... ஆமா நீ ஏன் அங்க போன.. ? ..அந்த வீட்டுல உனக்கென்ன வேல?'" ... நான் பதில் சொல்லாமல் முறைக்க...  'ஓ.... நீ..இந்த கதைப்பார்த்து சொல்ல போய் இருக்க போல..' ன்னு அவரே முடிச்சிட்டார்.

கவுதம் மேனன் படத்தில், ஹீரோ ஒருபக்கம் பின்னாடி கதை சொல்லிட்டே இருப்பாரே..அதுமாதிரின்னு வச்சிக்கலாம்.. ஆனா நானு இந்த கதைக்கு சம்பந்தமேயில்லாத ஒரு ஆள்.  இந்த ஏ ஜி ச்ர்ச் எல்லாம் என் வாழ்க்கையில் ஒருதரம் கூட சொன்னது இல்ல. ச்ர்ச் னு தெரியுமே தவிர ஏஜி ச்ர்ச் எல்லாம் வேற லெவல்.

பீட்டர் தாத்ஸ் ;  I always get  long dreams. It is always contain a solid story with different characters, clear tone, body languages, silent speeches, with people faces, dialogs , dress colour etc., - Kavitha