'இரை' - உணவு ன்னு சொல்லலாமா ? ,  ஆங்கிலத்தில் - இரை = Prey - an animal that is hunted and killed by another for food. பொதுவா இரை 'ங்கற சொல்லை மனிதனுக்கு பயன்படுத்த மாட்டோம். ஆனால் மனிதனின் வாழ்க்கையும் ஏதோ 'ஒரு' இரையைத்தேடி தான்.... 😜

இப்போது தங்கியிருக்குமிடத்தில் 'இரை' என்ற சொல்லின் அர்த்தத்தை &  தேவையை உணர்த்தியிருக்கு. சுற்றி ஒவ்வொரு உயிரினமும், தான் வாழ, மற்ற உயிரினத்தை அழித்தவாரே இருக்கிறது. அதன் அன்றாட தேவையே 'தனக்கு தேவையான உணவை - இரையை தேடிப்பிடித்து உயிருடனோ, கொன்றோ தின்பது தான்.

Discovery, Animal Planet n National Geo Channels பார்ப்பதை நேரடியாக இங்கே பார்க்கிறேன்.மரங்கள் காற்றுக்கு தலையசைத்து ஆடும் போது கிளம்பும் சத்தமும், பறவைகள் , பூச்சிகள் & தவளை எழுப்பும் ஒலியும் BGM.

என்ன .....புலி சிங்கம் கரடி யானை னு பெரிய விலங்குகள்  இல்லை. ஆனால் அவற்றிக்கு சற்றேனும் குறையாத விதவிதமான பறவைகள், பாம்புகள், பூச்சிகள், வண்டுகள், குளவி, தேனி, ஈசல், 10-15 செ.மீ நீளமுள்ள கம்பளிப்பூச்சி, தவளை, தேரை, நத்தை, அட்டை, மண்புழு, எலி, அரணை, ஓனாண் விதவிதமான அளவில் சிலந்திகள், மரவட்டை,  பூரான்,கருப்பு பல்லி (இது தோட்டத்தில் மட்டுமே இருக்கிறது,வீட்டிற்குள் வருவதில்லை),தேள், நட்டுவாக்கிலி, செய்யான் பாம்பு நண்டு, மீன், பட்டாம்பூச்சி, தும்பி, கழுகு, பருந்து, கொக்கு, நாரை வகைகள், வெளிநாட்டு பறவைகள், செல் பூச்சி (கறையான்), கரப்பான்பூச்சி, கட்டெரும்பு வகைகள்,  மயில்கள், உடும்பு, கீரி, ஓநாய், ஆமை....  னு...ஸ்ஸ்ப்பா மூச்சு வாங்குது.. இன்னும் பெயர் தெரியா ஜீவராசிகள், கூடவே பெயர் தெரியாத விதவிதமான செடி கொடிகள் மரங்கள்.  
 
தினப்படி இவற்றில் அநேகமானதை சந்திச்சி,  கடிவாங்கி (பொதுவா பூச்சி வகையறாக்கள் தான்), அது பெருசு பெருசா வீங்கி, மருத்துவர் கிட்ட ஓடி, ஊசியப்போட்டுன்னு .... தொடர்ந்து நடந்துக்கிட்டு இருக்கு.  ஒரு மனுஷி எத்தன தடவதான்  ஊசிப்போட்டுக்கறது  அலர்ஜி மாத்திரைய முழுங்கறது? ..சரி என் கதையை அப்புறம் பாக்கலாம். இப்ப இரை'க்கு வருவோம்.

இதுல மேல சொன்ன எல்லாமே ஒன்றை ஒன்று அடிச்சி  புடிச்சி கடிச்சி ன்னு தான் உயிர்வாழ்கிறது. அப்படியான ஒரு இயற்கை சுழற்சி அத்தியாவசியமானது. குறிப்பாக மனிதனின் வாழ்வாதாரத்திற்கு மிக மிக அவசியமானது. மனிதனுக்கு இயற்கை ஒரு வரம், இயற்கையோடு ஒன்றிய வாழ்க்கை அதைவிடப் பெரிய வரம்.
எலி & தவளை யை தேடி பாம்பு, பாம்பை பிடிக்க கீரி,  விட்டேனா பாருன்னு கீரி, மயில், உடும்பு முட்டையை முழுங்க  ஓநாய்,  மீன், நண்டு, பாம்பு, ஆமையை எப்ப தூக்கலாம்னு மேலேயிருந்து கழுகு வட்டம் அடிக்க, பக்கத்திலிருந்து சத்தமேயில்லாம காத்திருந்து தூக்குதுங்கு கொக்கும், நாரையும். இதெல்லாம் பத்தாதுன்னு பாம்பும் உடும்பும் நீயா நானான்னு பூரான், அரணை, பல்லி, பறவைங்கன்னு பதம் பார்க்குதுங்க.  பாம்பு பறவையை பிடிக்கறதெல்லாம் இங்கதான் பாக்கறேன். 

ஒரு இரவு மழையின் விடியலில், சொன்னாக்கூட யாரும் நம்ப மாட்டாங்க. வீட்டு வாசலில் ஆயிரக்கணக்கில் ஈசல் செத்துக்கிடக்க, அதன் இறக்கைகளை பெருக்கி அள்ள முடியல.. காற்றில் பறந்து வாசல் முழுக்கவும் இண்டு இடுக்கெல்லாமும் பரவி..ஒரு நிமிஷம் தலை சுத்திருச்சி.. நான் ஒரு பக்கம் பெருக்க, இன்னொருப்பக்கம் எனக்கு சரிசமமாக, கொஞ்சக்கூட பயமில்லாம, மதிக்காம பறவைகள் கூட்டமாக வந்து ஒரு ஈசல் விடாம கொத்தி முழுக்கிட்டு போச்சிங்க.  இதுல கொச்ச முச்சா கொச்ச முச்சான்னு அதுங்களுக்குள்ள பேசி சிரிப்பு வேற...கண்டிப்பா என்னைய கிண்டல் செய்து தான் பேசியிருக்குங்க... 😩


இதுல என்ன சுவாரசியம்னா, எப்படி ஒரு புலியோ, சிங்கமோ மானை துரத்திப்பிடிக்க வெறித்தனத்தோடு ஓடுதோ..அதனிடமிருந்து தப்பிக்க மான் எப்படி உசுர கையில பிடிச்சிட்டு ஓடுதோ.... அந்த வெறித்தனத்தை இங்க ஒவ்வொரு உயிரனமும் அதன் இரையைத்தேடி பிடிக்கும் போது பார்க்கமுடிகிறது. வேகம், வெறித்தனம், விட்டுட்டா நாம பட்டினி, திரும்ப இப்படியொரு வாய்ப்பு கிடைக்காது ங்கற மாதிரி தான் துரத்திப்பிடிக்கின்றன. தன்னை எதிரியிடமிருந்து காத்துக்கொள்ள நினைக்கும் உயிரனங்களும் முடிந்தளவு உயிர் போகும் வரை போராடுகின்றன... 

பாம்பு தன் இரையைப்பிடித்து விழுங்கும் போது அந்த இரை உள்ளே செல்ல செல்ல, இரை நகரும் இடத்தில் பாம்பின் மேல்புறத் தோல் விரிந்து அதன் Normal Texture, design, colour மறைந்து வேறு புதுவிதமான design, colour தெரிகிறது. தோலில் சுருக்கத்தில் ஒரு மாதிரியும், அதுவே விரியும் போது வேறு மாதிரி design னும் பார்க்கவே அழகு. அய்யோ பாவம் உள்ள இருக்க 'இரை ''. அந்த இரையும் இப்படி எதையோ ஒன்னை முழுங்கிட்டு த்தானே உயிர் வாழ்ந்துட்டு இருந்துச்சி ன்னு நாம அழகை மட்டும் ரசிச்சிட்டு இப்படிக்கா வந்துடுவோம்... 


இது போன்ற இயற்கை சுழற்சியில், ஒன்றை ஒன்று சார்ந்த எல்லா ஜீவராசிகளின் இனப்பெருக்குமும் நிச்சயம் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கும்.  அவைக் கட்டுப்பாட்டுக்குள்  இருக்கும் வரை மனிதனுக்கு இயற்கை சார்ந்த பிரச்சனைகள் வராமல் இருக்கும். இது மனிதனுக்கு சுற்று சூழல் சார்ந்த  காவல்.

Picture Courtesy : Thx Google.