வீட்டில் பாலாடையை சேர்த்து வைத்து, நெய் எப்படி காய்ச்சலாம்னு பார்க்கலாம். வீடியோவும் பதிவிட்டிருக்கேன்.

முன்னதாக,  என்னுடைய சின்ன வயசில், எங்க வீட்டுக்கு தயிர் கொண்டு வரும் தயிர்காரம்மா லட்சுமி பத்தி சொல்லனும்.

லட்சுமிம்மா ,மூங்கிலால் பின்ன கூடையில், ஒரு பெரிய பானை வைத்து, அது ஆடாமல் இருக்க கூடைக்கும் பானைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியை வைக்கோல் வைத்து சுத்தி, கச்சிதமா எடுத்துட்டு வரும். கிராமத்து கட்டு புடவை, ஒரு பெரிய மூக்குத்தி, பெரிய பெரிய கம்மல் , அதோட கருப்பு நிறத்துக்கு பள பளன்னு மின்னும். தினம் தயிர் அந்தம்மாக்கிட்ட தான் ஆயா வாங்குவாங்க.

எங்க வீடு முதல் மாடி, கூடையை தூக்கிக்கிட்டு குரல் கொடுத்துட்டே மேல வந்து நின்னுடும். கூட்டுக்குடும்பம், யாராவது இருப்பாங்க. கூடையை இறக்கி விட்ருவாங்க. அப்பா , தாத்தா வை தவிர யார் வேணாலும் இந்த வேலை செய்வாங்க. அது என்னவோ,  அவங்க இரண்டு பேரும் இதெல்லாம் செய்து நான் பார்த்ததில்லை. இப்பவா இருந்தா கேட்டு இருப்பேன். 'நீங்க என்ன பெரிய இதுவா??? ன்னு. அப்ப கேக்கவே தோணியதில்ல.

எனக்கு தயிர் வாங்கறதுல அலாதிப்பிரியம், அதுக்கு காரணமிருக்கு, தயிர் வாங்கினப்பிறகு கொஞ்சமா கரண்டியில் எடுத்து என் வாயில ஊத்தும். ;) தயிர்காரம்மா சத்தம் கேட்டா போதும், சொம்பை எடுத்துட்டு குடுகுடுன்னு ஓடுவேன். அந்த பெரிய தயிர் பானைக்கு மேல , வெண்ணெய் இருக்கும் குட்டி பானை ஒன்னோ இரண்டோ எடுத்துட்டு வரும். யாராவது நெய் வேணும்னு கேட்டால், அவங்க வீட்டிலேயே வெண்ணெய்யைக் காய்ச்சி கொடுத்துட்டு போகும்.

இப்படி எங்க வீட்டில காய்ச்சும் போதும் நான் அங்க ஆஜர் ஆகிடுவேன். இது எதுக்குன்னா , நெய்யில் வாசனைக்கு போடற முருங்கைக் கீரையை சாப்பிடத்தான்.   தயிர்காரம்மா, விறகு அடுப்பில் வாணல் வைத்து காய்ச்சும், காய்ச்சிட்டு அளக்கும் போது , ஆயாவிற்கும் தயிர்காரம்மாவுக்கும் சண்டை வந்துடும். ஆயா, நெய் சூடா இருக்கப்ப அளக்க விடமாட்டாங்க. தயிர்காரம்மா அடுப்பிலிருந்து இறக்கியவுடனே அளக்கும். சூடா இருக்கப்ப அளந்தால் நமக்கு அளவு குறையும், இப்ப 200 மிலி நெய்ன்னு வைங்க, சூடு குறையும் போது 190-195 மிலி தான் இருக்கும்.  இதுக்கு தான் சண்டை நடக்கும். எப்படியோ ஒரு ஆழாக்கு நெய் வாங்க, எவ்ளோ வேலைப்பாப்பாங்க.


1 லிட்டர் பாலில் ஒரு வாரத்திற்கு பாலாடையை சேர்த்து வைத்தால், இந்த கப் அளவிற்கு கிடைக்கும். தயிர் மேல படியும் பாலாடையையும்  (லேசா மஞ்சளா படிஞ்சிருக்கும்) இதுக்கூடவே எடுத்து வைக்கலாம்.

1.பாலாடையை கப்பிலிருந்து மிக்ஸியின் பெரிய ஜாடியில் கொட்டி, அத்துடன் ஐஸ் க்யூப்ஸ் ஐ கொட்டி, தண்ணீரை முக்கால் ஜாடிக்கு ஊற்றிக்கனும். இந்த ஒரு கப் ஐ நான் பாதி பாதியா தான் எடுத்து செய்திருக்கேன்.
 

 2. மிக்ஸியை 30 வினாடி 1 ல் வைத்து சுற்றவும்.  பிறகு , 3 ல் 1 நிமிடம் தொடர்ந்து ஓட்டினால் வெண்ணெய் திரண்டு வரும். ஒருவேளை வரலைன்னா, 3 ல் வைத்து சுற்றிக்கொண்டே இருக்கவும், கண்டிப்பாக வெண்ணெய் திரண்டு வரும்
 3. ஜல்லிக்கரண்டியால் வடிகட்டி எடுத்து கணமான அடி இருக்கும் பாத்திரத்தில் கொட்டி இளந்தீயில் வைத்து வெண்ணெய்யை காய்ச்சனும்.



 4. படத்தில் இருக்கும் பதம் வந்ததும், கொழுந்தாக முருங்கைக்கீரை +  1/4 உப்பு பொட்டு பொரிந்தவுடன்,  கலக்கி கொதித்தவுடன் இறக்கி சூடு குறைந்தவுடன். பாட்டில் அல்லது எவர்சில்வர் பாத்திரத்தில் சேமித்து வைக்கவும் 👇
 ப்ளாசிடிக் குடுவைகளை தவிர்க்கவும்.
 வண்டலில் சாதம் போட்டு பிசைந்து சாப்பிடலாம்.  அல்லது அன்று செய்த சமையல் சாம்பார் , குழம்பு அப்படி எதும் இருந்தால் இந்த பாத்திரத்தில் கொட்டி கலக்கி எடுத்துவைத்துக்கொள்ளலாம். வண்டலை வீணாக்க வேண்டியதில்லை.