திருவிளையாடல் Vs ஃபார்முலா 1

சின்னவயசுல, குறிப்பாக தேர்வுகள் நெருங்கும் சமயம் அக்கம் பக்கத்து கோயில்களில் லவுட்ஸ்பீக்ர் வைத்து, பக்தி பாடல்கள் & படங்களின் ஒலிநாடாக்களை போடுவார்கள். அது ஏழு ஊருக்கு காதை கிழிக்கும். தேர்வுக்கு படிப்பது ரொம்பவே கஷ்டம். படிக்கும் பிள்ளைகளை, வயதானவர்களை, உடல் நலம் சரியில்லாதவர்களை தொந்தரவு செய்கிறோம் என்ற நினைவு இந்த கோயில் சார்ந்த மக்களுக்கும்/ நிர்வாகிகளுக்கும் இருப்பதே இல்லை. இப்போதும் அது தொடர்ந்தாலும், முன்பு போல், அதிகமாக இல்லாமல், ஆடி மாதங்களில் மட்டும் அம்மன் கோயில்களில் கேட்க முடிகிறது. எப்போதாவது மற்ற கோயில்களில் கேட்க முடிகிறது. குறிப்பாக சென்னையில் மிக குறைவே.

விழுப்புரத்தில், எங்கள் தெருவிற்கு பின் தெருவில் ஒரு முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. அங்கு எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடிய எல்லா அம்மன் பாடல்களும் போட்டபடி இருப்பார்கள். டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.ஆர்.ரமணி அம்மாளின் பாடல்களும் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் தானாக வந்து காதில் விழுந்து விழுந்து, பாட்டு மனப்பாடம் ஆகிவிடும். அதே போன்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ஆதிபராசக்தி போன்ற பக்தி படங்களின் வசனங்களும் அத்துபடியாக இருக்கும்.  திருவிளையாடல் பார்க்கும் முன்னரே, அத்தனை வசங்களையும் வீட்டில் சொல்லிக்கொண்டு இருப்போம். அந்த காட்சி படத்தில் எப்படி இருக்கும் என கற்பனை வேறு இருக்கும். படம் பார்த்தபோது, தட்சன் யாகம் நடத்தும் காட்சி மட்டும், நான் கற்பனை செய்தவாறு இல்லை என்பது என் கவலை. :( .

இப்போது, அதே போல,  வீட்டிற்குள் கொடுமை நடக்கிறது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், காதில்   ஒய்ய்ய்ய்ய்ய்ன்ன்ய்ய்ய்ய்ய்ய்ய்........என்ற ஒரு சத்தமும், ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு செத்து, அதை பார்த்து மக்கள் கத்தி கூப்பாடு போடும் சத்தம் என்னேரமும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்று ஃபார்முலா 1 ரேஸ்,
இரண்டாவது WWE.

நவீனிடம் எவ்வளவு கத்தி திட்டி, அட்டகாசம் செய்து, அடம் பிடித்தாலும் இந்த நிகழ்ச்சிகளை அவன் மாற்றவே மாட்டான்.  இந்த இரண்டிலும் எப்போதுமே வெறித்தனமான ஆர்வம். என் தலையெழுத்து பிடிக்காவிட்டாலும் கூட உட்கார்ந்து பார்க்கனும் இல்லைன்னா, சத்தத்தை சகிச்சிக்கிட்டு உள்ள போயி உட்கார்ந்துக்கனும். இதுல கொடுமை என்னான்னா, என் புள்ள பார்முலா 1 ரேஸ் ஐ  குவாலிஃபைங் ரவுண்டுலிருந்து பார்ப்பான். அந்த கார் ஓடற சத்தம் இருக்கே, ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.. என் காதுக்குள்ளவே அவங்க கார் ஓட்டற மாதிரி  இருக்கும். :(

இப்படி கேட்கும் சத்தம் பழகிப்போய், அடிக்கடி காதில் வந்து விழும் பெயர்.. "மைக்கேல் சூமேக்கர்". அப்படி இப்படி நடக்கும் போது, நவீனைப்பார்த்தும் பார்க்காமலும் "சூமேக்கர் சூமேக்கர்" ன்னு சொல்லிக்கிட்டே போவேன்......அவன் திருப்பி, துப்புவதை எல்லாம் உங்கக்கிட்ட சொல்லமுடியுமா என்ன?.விடுங்க.. எப்படி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் கேட்டு கேட்டே மனப்பாடம் ஆகியதோ அது போல....

ஃபார்முலா 1 (F1)  : இது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உலக கார் பந்தயம், மொத்தம் 11 குழுக்கள்.  ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இருப்பார்கள். இந்த குழுக்களில் உறுப்பினர்கள் வருடந்தோறும் அதே நபர்களாக இருக்க வாய்பில்லை, மாறவும் செய்யும். வியாபாரமும் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் ஒரு பந்தயம்.  1946-47 ல் தொடங்கப்பட்ட பந்தயம் தொடர்ந்து இன்று வரையில் நடந்துவருகிறது.  பலவிதமான கார்கள் வந்து இருந்தாலும், தற்போதைய கார்களின் டிசைன்,  ஓட்டுனரையும் சேர்த்து வெயிட் 640 கிகி,  350 km/h (220 mph) கிமி/ஹவர் வேகத்திற்கு செல்லக்கூடியவை.  அதிகபட்சமாக ஹோண்டாவின் கார் 2006 ல் 415 கிமி/ஹவர் சென்றது.  கடைசியாக கார் பந்தயம் அபுதாபியில் நடந்தது. நடப்பு ஆண்டு 2011 ல் தொடங்கி இருக்கும் இந்த பந்தயம், இந்தியாவிலும், டெல்லியில் நடக்கவிருக்கிறது, அது இன்னும் திட்டவட்டமாக முடிவு செய்யப்படவில்லை. சர்க்கியூட் எல்லாம் சரியாக அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, வெற்றி அடைந்தால் மட்டுமே டெல்லியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்குபெற்ற ஒரே இந்தியர்.  கோயமுத்தூரில் பிறந்த, நாராயன் கார்த்திகேயன். இவரின் பெயர் நரேன் என்று சுருக்கப்பட்டுள்ளது. 2005 ல், ஜோர்டான் டீமிற்காக பார்முலா 1 ல் டயட்டோV10 காரை ஓட்டினார், இவர் கலந்துக்கொண்ட முதல் பந்தயத்தில் 12 ஆவது இடத்தை பிடித்தார்.  அடுத்து வந்த சில போட்டிகளில் அதிகபட்சமாக அவர் பிடித்த இடம் 11.

இந்த டீம்'களில் அடிக்கடி என் காதுகளில் வந்து விழுந்த பெயர்  "ஃபெராரி".  45 வயது ஜெர்மன் நாட்டை சேர்ந்த, மைக்கல் சூமேக்கர் ஃபெராரி டீம் மிற்காக கார் ஓட்டியுள்ளார். இவர் தொடர்ந்து 7 உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். அடிக்கடி கேட்பதால் மட்டும் அல்ல, என்னவோ மைக்கெல் சூமேக்கரை ரொம்ப பிடித்துப்போனது.  இவர் சூபெர்த் என்ற கம்பெனியுடன் இணைந்து 2004 ல் குறைந்த எடையுள்ள கார்பனால் செய்யப்பட்ட தலைக்கவசத்தை உருவாக்க உதவியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.  

http://www.formula1.com/default.html -  ஃபார்முலா 1 ன் இணையதளம். இதில் கொடுக்கப்பட்டுள்ள காலண்டரில் 2011 ல் போட்டிகள் ஆரம்பநிலையிலிருந்து எங்கெங்கே நடக்கவிருக்கின்றன, நடந்துக்கொண்டு இருக்கின்றன என காணலாம். 

WWE : World Wrestling Entertainment தமிழில் "மற்போர் மகிழ்கலை" ன்னு கூகுல் சொல்லுது. எனக்கு அறவே பிடிக்காத ஒரு மகா கொடுமையான விளையாட்டுன்னு சொல்லனும். நவீன் 2-3 ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பார்க்கிறான். இதனை அமெரிக்காவின் முதன்மையான விளையாட்டுகளின் ஒன்று என்றும் சொல்லலாம்.  Vince McMahon என்பவர் நடத்திவருகிறார், இவரே WWE கம்பெனியின் சொந்தக்காரரும் ஆவார். இவருக்கு அடுத்து இவரின் மனைவி, பிள்ளைகள் தொடர்ந்து இந்த கம்பெனியில் பங்கு தாரர்களாகவும், கம்பெனியையும் நடத்தி வருகின்றனர்.

இந்த விளையாட்டை அமெரிக்காவில் மட்டும் 13 மில்லியன் மக்கள் கண்டுக்களிக்கின்றனர், 30 மொழிகளில், 147 நாடுகளில் இது ஒளிப்பரப்பட்டு வருகிறது.  1952 ல்  Capitol Wrestling Corporation என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி பின்னர் World Wide Wrestling Federation (WWWF) என்ற பேனருக்கு மாறியது, அதுவே பின்னர் 1982 ல் World Wrestling Federation (WWF), பின்னர், இது அதே குடும்பத்தினருக்கு சொந்தமான Titan Sports company க்கு விற்கப்பட்டது, அதற்கு பின்னர் இவ்விளையாட்டின் பெயர் World Wrestling Federation Entertainment, என்று மாறியது. எனக்குமே இந்த விளையாட்டு, WWF என்றே பழக்கப்பட்டு இருந்தது. 2002 ல் World Wrestling Entertainment  என்று மாற்றப்பட்டு, அதன் சுருக்கமாக, 2011 லிருந்து "WWE" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நவீனின் அடிக்கும் பழக்கும் தொடர்வதற்கும், என்னை மட்டுமே அவன் டார்கர் செய்யவும் முழு முதற்காரணமாக அமைந்தது இந்த டிவி நிகழ்ச்சியே. பார்த்துக்கொண்டு இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு, ஓடி வந்து என்னை எட்டி எட்டி உதைப்பான். அம்மா நீயும் நானும் WWF  விளையாடலாம் வா, ன்னு கூப்பிட்டு, நான் தயாராகிவிட்டேனா இல்லையா என்றெல்லாம் கவனிக்காமல் அடிக்க ஆரம்பித்துவிடுவான். அவனிடன் அடிவாங்கியே நான் வளர்ந்தேன்னு சொல்லலாம். இப்போது அடிப்பதை நிறுத்திவிட்டான் என்றாலும், பார்ப்பதை நிறுத்தவில்லை.

இது விளையாட்டா, நிஜமாகவே அடித்துக்கொள்கிறார்களா? இல்லை சும்மாவா என கண்டுப்பிடிக்க முடியாதபடி, முன்னமே தயார்படுத்திக்கொண்டு, பயிற்சி செய்து நடத்துகிறார்கள். பலமுறை அது சும்மா நடிப்பு என்று நவீன் சொல்லியிருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சந்தேகத்தோடே பார்ப்பேன். அத்தனை இயல்பாக, உண்மை என நம்பும் படியாக அடித்துக்கொள்வார்கள். பயமாகவும் இருக்கும். அதில் இந்தியர் ஒருவர் வரும் போது மட்டும் கூப்பிட்டு காட்டுவான்.

இந்த இந்தியரின் பெயர்  "The Great Khaali "  எவ்ளாம் பெரிய உருவம்.. !!  :). கூடியிருக்கும் கூட்டமும்,  உற்சாக மிகுதியில் அவர்கள் போடும் சத்தமும், இந்த விளையாட்டிற்கு இத்தனை லட்ச ரசிகர்களா என வியக்க வைக்கிறது.  இந்த விளையாட்டே பிடிக்காது என்றாலும், கூடுதலாக பெண் போட்டியாளர்கள் வந்தால் சுத்தமாக பிடிப்பதில்லை. அப்போது மட்டும் நவீனிடம் வேற மாத்தி வைன்னு சத்தம் போடுவேன்,   ஆனால் எங்க, இதுவரையில் மாற்றியதே இல்லை. :( . மேலும் படிக்க/பார்க்க  http://wwe.sify.com/ ...

தகவல் & படங்கள் : - நன்றி கூகுல்


அணில் குட்டி : . நவீனூஊ... நீ இனிமேலு எல்.ஆர். ஈஸ்வரி அம்மா அம்மன் பாட்டை போட்டு. .ஆத்தாடி மாரியம்மா.. சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா" ன்னு பாட்டு கேப்பியாம்.... இல்லன்னா உங்க அம்மா இதெல்லாம் யார் வீட்டீலேயும் நடக்காத ஒரு மேட்டர் னு எழுது எழுதுன்னு எழுதுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “If you read a lot of books you are considered well read. But if you watch a lot of TV, you're not considered well viewed.”
.

க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

மழை "இதோ வந்துக்கொண்டே இருக்கிறேன்" என்ற ஒருநாளில் எடுத்தது, மாலை 4 மணி இருக்கும்.

 துரைப்பாக்கத்தில் காலியாக இருந்த ப்ளாட் டில் தேங்கியிருந்த தண்ணீரில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை. தெரியாமல் விழுந்துவிட்டது என கிட்டே சென்றேன், பார்த்தால் விளையாடிக்கொண்டு இருந்தது. :)

 திருப்போரூர் கந்தசாமி கோயில் குளம், பொரியை சாப்பிட்டே கொழு கொழுவென ஆகியிருக்கும் வாத்துகள். ! :) 
 வீட்டினுள் தீடிரென சிகப்பாக ஒளிவர, கேமரா எடுத்துக்கொண்டு மேலே சென்றேன்... :) மாலை நேரம் செவ்வானம்....

 வேளச்சேரியில் இப்படி ஒருவர் அனுமார் வேஷமிட்டு, வீடு வீடாக, கடை கடையாக சென்று பணம் வாங்கினார். க்ளிக் காமல் இருக்க முடியுமா அந்த அழகை.. :). I like that "வாலூஊ.. !!  :)
 அதே செவ்வானம்... .செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ...

ஒரு விஷேஷத்தில், சீராக கொண்டு வந்த வாழைத்தார்...


பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes.  But when you photograph people in B&W, you photograph their souls!  ~Ted Grant

ஒப்பாரி பாடல்கள் !

நமக்கு, குழந்தை பிறப்புக்கு தாலாட்டும், இறப்புக்கு ஒப்பாரி பாடல்களும் என்பது அறிந்தவை. இவை இரண்டுமே நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை. நகரங்களில் இவற்றையெல்லாம் பல வருடங்களாகவே பார்க்க முடிவதில்லை. எங்கள் வீட்டிலும் இவை நிறுத்தப்பட்டு விட்டது. தாத்தா மறைவின் போது மட்டும் பார்த்த நினைவு. அதிலும் எங்கள் வீட்டு பெண்கள் கலந்துக்கொள்ளவில்லை, ஆயாவையும் சேர்த்து.

புகுந்தவீட்டில் இந்த சடங்குங்கள் இப்போது இல்லை எப்போதுமே நிற்காது என்றே நினைக்கிறேன். திருமணம் ஆன புதிதில் அவரின் சொந்தம் ஒருவர் இறந்தவிட்ட போது, பெண்கள் 4-5 பேராக  சிறு சிறு குழுக்களாக கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க, நான் தனியாக நின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். அக்கா (கணவரின் அண்ணனின் மனைவி), நான் சும்மா நிற்பதை பார்த்துவிட்டு,  என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழ சொன்னார்கள். எனக்கு அழுகையும் வரவில்லை, ஒப்பாரி வைக்கவும் தெரியவில்லை, அப்போதே வீட்டைவிட்டு ஓடி வந்து விடலாமா என்றே தோன்றியது. அழுகை என்பது தானாக வரவேண்டும். அல்லது ஒப்பாரி பாடல் பாட அந்த மனிதரை ப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்கவாவது செய்ய வேண்டும்.

அது என்ன பெரிய கஷ்டம்? கூட்டத்தோடு கூட்டமாக குனிந்து அழுதுவிட்டு வரவேண்டியது தானே என்று யாரும் சொன்னால்.. :) அது அத்தனை எளிதானது அல்ல என்றே சொல்லுவேன்.

*  அழுகை வரனும், வராவிட்டால் வர மாதிரியே நடிக்கனும்
* ஒருத்தரோடு ஒருத்தர் தோளோடு கட்டிக்கொண்டு அழவேண்டும்.
* உருவம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட, பெரிய உருவங்களுக்கு மத்தியில் மாட்டினால், வெளியில் வரும் போது நைந்து போன துணியாகத்தான் வரவேண்டும். கசக்கிவிடுவார்கள்.
* அழுகையும், நடிப்பும் ரித்தமிக்காக, அவர்கள் குனியும் போது நாமும் குனியனும், இந்த பக்கம் அந்த பக்கம் ஆடி ஆடி அழும் போது நாமும் கூடவே போயிட்டு ஆடிட்டு வரனும்.
*  இறந்தவரை பற்றி பேசி பேசி அழனும்,
* இவைத்தவிர ஒருவர் தலையோடு ஒருவர் முட்டி அழவேண்டும். அங்க இருக்க எல்லாம் நம் தலைக்கு வந்துவிடும்.
* இறந்த வீட்டிற்கு வந்தவர்கள் யாரும் குளித்திருக்க மாட்டார்கள் (முன்னமே, எத்தனை நாள்  குளிக்கவில்லைன்னும் தெரியாது) நெருக்கமாக உட்கார்ந்து அழும் போது அந்த கொடுமையை சகிச்சிக்கனும்.
* மூக்கை சிந்திவிட்டு அதே கையோடு நம் தோளை பிடித்து அழுத்துவார்கள், நைஸாக நம் துணியில் அவர்களின் சளியை துடைத்தும் விடுவார்கள்.
*வெற்றிலை பாக்கு போடும் பெண்களாக இருந்தால், கத்தி அழும் போது, வாயிலிருந்து வெற்றிலை எச்சியும் வந்து அடிக்கும்,

இதெல்லாம் அழாத எனக்கு எப்படித்தெரியும்னு கேட்கப்பிடாது, எதுக்கு நின்னு வேடிக்கை பார்க்கிறோம்? இதையெல்லாம் கூட கவனிக்காவிட்டால் எப்படி.?

என்(ங்களின்) ஆயா, நான் சின்னவளாக இருக்கும் போது  ஒப்பாரி பாடல் ஒன்றை வேடிக்கையாக சொல்லிக்காட்டுவார். நினைவில் இருக்கும் வரை எழுத முயற்சிக்கிறேன்..

"பந்தலிலே காய்த்து
தொங்குதடி பாவைக்காய்
பார்த்தியாடி சின்னவளே....

பார்த்தேன்டி பெரியவளே..
போறப்ப பறிச்சிக்கிட்டு
போவோம்
அடுத்து தொங்கற
அவரைக்காயையும் சேர்த்து.. "
 
இந்த ஒப்பாரி ஒரு பக்கம் இருக்கட்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னமே நொந்து இருப்பார்கள், அவர்களின் வருத்தம், நினைவுகள், அழுகை, இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால், இறப்பிற்கு வரும் அத்தனை பெண்களும், அவர் எங்கே என பார்த்து, அவரின் தோளை கட்டி ஒரு ஆட்டு ஆட்டி அழும் போது, இந்த அம்மாவின் உயிரும் எங்கே கூடவே போயிவிடுமோ என்ற பயம் வரும். அந்த அளவு மேலே போயி விழுந்து பாசத்தை க்கொட்டுவார்கள். அவர்களோ முன்னமே அழுது அழுது, சாப்பாடும் இல்லாமல் பலகீனமாக இருப்பார்கள். இதை போன்று, சம்பரதாயம் என்ற பெயரில், இறந்தவர்களின் நெருக்கமானவர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பது, கொடுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏன் தள்ளியிருந்து அழுது பாசத்தை காட்டினால் தான் என்ன?

சிலர் பாடி அழும் ஒப்பாரி, நிஜமாகவே கேட்கும் ஆர்வத்தை உண்டு பண்ணும்.  . சமீபத்தில் கேட்டவையில் சில வரிகள்

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

தொடர்ந்து ஒப்பாரிப்பற்றி கூகுலில் தேடிய போது..

விக்கியில் ஒப்பாரிப்பற்றிய குறிப்பும் பாடல்களும் :-
அதில் ஒப்பாரி ஒன்று ..
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க.
பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்ல படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.
***************
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=315

இந்த பதிவில் லட்சுமியம்மா என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஒப்பாரி பாடல்களை பாடச்சொல்லுகிறார்கள் என்பது புது செய்தி. அதுவும் எல்லோர் முன்னிலையிலும் அழ அசிங்கப்பட்டு உறவினர்கள் இதை செய்வதாக எழுதப்பட்டுள்ளது !..
************
ஒப்பாரி பாடல்கள் பதிவுகள் :-

http://kavithamil.blogspot.com/2011/06/blog-post.html

இதில் உள்ள பாடல் - முழுக்க முழுக்க ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்பட வைத்திருக்கிறது. :((.
*****************

ஒப்பாரி பாடல்களும் நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை என்பதற்கு, இப்பாடல் ஒரு உதாரணம்.

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே
தானநன்னே தந்தநானே

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

இவை எதிலுமே ஆண்களின் பங்கு அறவே இல்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. :(.

அணில் குட்டி :  நல்ல வேள இதையெல்லாம் பாடி போஸ்ட் பண்ணாம இருந்ததுல நாம எல்லாம் தப்பிச்சோம்..  :)

பீட்டர் தாத்ஸ் :   “We celebrate people's memories here. We acknowledge death through the celebration of people's lives.”

இணைப்புகள் :- கூகுல் மற்றும் இதைப்பற்றி எழுதியுள்ள நண்பர்களுக்கும் நன்றி

விதியும் மதியும் ... புலம்பல்களும்....

அண்ணன் சொன்னான், "எந்த தாய்க்கும் தன் குழந்தை தான் முதல், பிறகு தான் மற்றவர்கள். நீ அதிலும் மீறிவிட்டாய், வியக்கிறேன், நீ நல்லவள்".  வெற்றுப் பார்வையும், விரக்தி சிரிப்பையும் உதிர்த்துவிட்டு மெளனமாய் என் வேலையை தொடர்ந்தேன்.  முன்னதாக என் குழந்தை சொல்லிவை மட்டுமே என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.  "நீ பெற்ற குழந்தையிடம் கூட, மற்றவர்களுக்காக சண்டையிடுகிறாய், நீ வித்தியாசமானவள் ! " .

எதை எடுக்க எதை விடுக்க. :) என் குழந்தையை மிஞ்சும் அன்பு அண்ணன் மேல்  இருக்கிறதா என்றால், இல்லை, என்னை சுற்றியுள்ள அத்தனை பேரின் மேலும் அன்பு இருக்கிறது. "பகையாளி" யாரென கேட்டால், இதுவரையிலும் அப்படி யாருமில்லை என்றே  சொல்லுவேன். அதிகமாக மனிதர்களை நேசிக்கும் அளவிற்கு, அவர்களை விட்டு விலகியும் வந்துவிடுவதுண்டு. வெறுப்பு என்று சொல்வதை விட, எல்லோரையும் போல என்னால் தாமரை இலை தண்ணீர் போல இருக்க முடியாமல் போவது முதல் காரணம். அடுத்து "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி"   இதற்கு மேல் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. கொடுப்பது என் வேலை.  பல சமயங்களில் இவை வலியே. 

எங்கிருந்தோ கூவும் குயில், 2, 3 முறை அதன் குரலை கேட்டப்பிறகு, தொடர்ந்து நானும் குரல் கொடுப்பேன்.. அது...."கூஊஊஊ....  "... நான் "கூஊஊஊ..." பின்னால் வந்து நின்று என் குடும்பத்தினர் வினோதமாக பார்ப்பார்கள், திரும்பி பார்த்தால் அவர்களின் உதடுகள் சத்தமில்லாமல் சொல்லும்."லூசு..".. அவர்களையும் நான் வினோதமாக பார்ப்பேன், என் உதடுகள் சொல்லும் "ரசனையற்ற ஜந்தூஸ்".

என்னைப்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் எப்படி தங்களை சுற்றி நடப்பவற்றை எந்த பிரஞ்ஞையும் இல்லாமல் எளிதாக கடக்கிறார்கள், சாத்தியப்படுகிறது என்ற வியப்பு இருக்கிறது. பாதையோரம் கிடக்கும் மனிதனை கடக்க நேர்ந்தால், என் பார்வையும் மனமும் கட்டுக்கடங்காமல் அந்த மனிதனை சுற்றும். அவன் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்?அவனுக்கு என்னால் அல்லது என் மூலமாக ஏதேனும் செய்துவிட முடியுமா என மூளை திட்டங்கள் வகுக்கும். பக்கத்தில் வரும் என் கணவர் அதைப்பற்றி என்ன, அந்த பக்கம் கூட திரும்ப மாட்டார். நானே குறிப்பிட்டாலும்... ம்ம்ம்.. என்ற வார்த்தையை தவிர வேறேதும் வராது.

பிறப்பு, இறப்பு, சந்தோஷம் , துக்கம், சிரிப்பு, வியப்பு, வீழ்ச்சி, உடல் உபாதைகள் எல்லாமே அவரிடம் சத்தமின்றி, உணர்ச்சிகள் இன்றி ஒரே மாதிரியாக இருக்கும். எப்படி என்பதை அவரிடம் கேட்டாலும் அதற்கும் பதில் இருக்காது.   இதனை வைத்து அவர் ஒரு "ஞானி" என்று சொல்லிவிடமுடியாது. முதிர்ச்சி என்று காரணம் சொன்னாலும், இருக்கலாம் ஆனால் இப்படிப்பட்ட முதிர்ச்சி தேவையா என கேள்வி, ஏன் அப்படி நாமும் இருந்தால் என்ன? என்னை நானே கேட்டுக்கொண்டு கண்ணை மட்டும் இல்லை, என் மனம், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருந்து விட முயற்சி செய்து தோற்றுள்ளேன் அல்லது முயற்சிகளின் வெற்றிகளாக, உடல் உபாதைகள், நிம்மதியற்ற தூக்கமில்லா இரவுகளை கடந்து முகம் கண்கள் வீங்கி, அவரே என்னைப்பார்த்து. "என்னடி உனக்கு பிரச்சனை? முகம் ஏன் இப்படி இருக்கு? தலைக்குள்ள ஏதேனும் கொடஞ்சிக்கிட்டே இருக்கா? " என்று கேட்டதும் உண்டு.   திரும்பவும் ஒரு வரி இங்கே  "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி" :).

மழை, வெயில், சாக்கடை, தாஜ்மகல், கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றி, ரஜினியின் உடல்நிலை, அம்மாவின் ஆட்சி, ஜப்பான் பூகம்பம், திமுக வின் தோல்வி  எல்லாமே அவருக்கு ஒன்று தான். எதற்கும் அவரிடம் எந்த சலனமும் இருக்காது.  பூக்கள், பனித்துளி, பச்சைக்கிளியின் அழகு, தென்னங்கீற்றீன் அசைவு, அசைவின் வழியே நம்மை த்தொடும் காற்று, இசை, ஏசி யின் பின்புறம் கட்டியுள்ள அணில் குட்டியின் கூடு, அது போடும் சத்தங்கள், பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில்  நிரம்பி வழியும் தண்ணீரின் சத்தம், சமையல் அறை கரப்பான் பூச்சி என எதுவும் அவரை கவர்ந்ததோ, தொந்தரவு படுத்தியதோ இல்லை, ஏன் இப்போது கண்ட நேரத்து மின்சார துண்டிப்புக்கூட அவரை புலம்ப வைத்தது இல்லை. இதற்காகவெல்லாம் அவர் நேரம் செலவிட்டது இல்லை.

இதைப்போலவே அவரின் அணுகுமுறை மனிதர்களிடமும் இருக்கிறது. எதுவும், யாரும் அவரை பாதித்து இல்லை. எதற்காகவும் அவர் சலனப்பட்டது இல்லை அல்லது இப்படி எது அவருக்குள் நிகழ்ந்தாலும் அதை அடுத்தவர் அறியாதவாறு மிக கவனத்தோடு பார்த்துக்கொள்கிறார்.  "சூர்யா படிப்புக்கு உதவுகிறார்" என்றால், "விஜய் செய்வது உனக்கு தெரியாது, விஷயம் தெரியாமல் சூர்யாவை ஆஹா ஓஹோ என புகழாதே" என்பார். ரஜனிஜி' க்காக கஷ்டப்பட்டால், உங்க தலைவர் ராணா ஹீரோயினை பார்த்து மொத்தமாக கவுந்துட்டாரு போல"  சொல்லிவிட்டு போகிறார். உடனே என் மூளை, அந்த ஹூரோயின் பின்னால் ஒரு நிமிடம் சென்றுவிட்டு திரும்பும். " சே..சே..ரஜினிஜி யை கவரும் அளவுக்கு அந்த பெண் இல்லை என்று தேவையில்லாத நினைவும், அதற்கான பதிலையும் அதுவே சொல்லிவிட்டு திரும்பும்"  ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்து. ."என்னடி யோசனை.. எப்படி கவுந்தார்ன்னு யோசிக்கிறியா?"  அவர் என்னை படித்துவிட்டது தெரிந்தும், பதில் வேறு மாதிரியாக கொடுப்பேன்."சம்பந்தமே இல்லாமல் உளராதீங்க.. அவருக்கு வேறு உடல் பிரச்சனைகள்.  யோகம் பழகி வருபவர், எப்படி அவருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சைகள் வரும் என்று யோசிக்கிறேன்" என பதில் சொல்லுவேன்.  இதை அப்போது யோசித்திருக்காவிட்டாலும், எப்போதோ யோசித்ததை இப்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

தேவைகள், ஆசைகள், தேடல்கள், முடிவுகள் எல்லாமே தனிமனிதன் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடுகிறது. மற்றவரிடமிருந்து கிடைக்கும் சின்ன புன்னகைக்கூட சிலரின் நாள் நல்லபடியாக அமைய வழிவகுக்கும். ஒரு பெண்ணுக்கு, அவள் நினைத்த விலையில் நினைத்த புடவை கிடைத்து விட்டால் அன்றைய நாள் மகழ்ச்சியுடன் நகரும்.  இதை பல புடவைக்கடைகளில் பெண்களின் முகத்தில் காணலாம். ஆணுக்கு ஒரு தம் & குவாட்டர் என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் இங்கே சமன் படுத்திவிட்டு மேலே செல்கிறேன்.  திருமதி.கனிமொழி' க்கு இன்றைய தேவை வெளியில் வருவது. அதற்காக என்ன செய்யலாம் என அவரும் அவரை சுற்றி இருப்பவர்களும் சதா யோசித்து, அதற்காக எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்துக்கொண்டு இருப்பார்கள். தேவையும் தேடல்களும் மனிதனுக்கு மனிதன் பலவாறு வேறுபடுகிறது.

இங்கே சூழ்நிலைகளும் சந்தர்பங்களும் நம் வாழ்வியல்பை பெருமளவு மாற்றி அமைக்கிறது. எல்லோருமே நம் பாதை இப்படி இருக்கவேண்டும் என்றே காலை முன் எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாதை அவர்கள் நினைத்தபடி இல்லாமல் மாறிக்கொண்டே செல்கிறது. அந்த மாற்றங்களை அறிவை க்கொண்டு அவ்வப்போது நேராக்கி கொள்ளவேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது, அவசியம், அவசியமில்லை என்பதும் ஓவ்வொருவருக்கும் அவர் எண்ணங்கள், தேவைகளுக்கு ஏற்றபடி மாறுபடும். எண்ணங்கள், தேவைகள் என்பதும் நிரந்தரமானவை அல்ல.  மாற்றங்களை தன் விருப்பப்படி சரிபடுத்தி செயற்படுத்துவது சிலர், அந்த சிலருக்கு பலவித போராட்டாங்கள் வாழ்க்கையில் கிடைப்பது தான் யதார்த்தம். போராட்டாங்கள் என்றுமே எளிமையாக, இனிமையாக அமைந்து விடுவதில்லை. போகிற வரை போகட்டும் என அதன் பின்னாலே சென்று, விதி யாரை விட்டது என விதியை நொந்தவர்கள் பலர்.

"நம் விதியை கூட மதியால் வெல்லலாம்" என்று நான் சொன்ன போது, நண்பர் "அதுவும் உன் விதியில் எழுதியிருக்கும்." என்றார். ம்ம்ம்.. அப்படியா? அது எப்படி?" என்று கேட்டாலும் அவர் சொன்னதும் சரியாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு.

இதற்குமுன் இப்படி புலம்பியவை :-  மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக... -2

அணில் குட்டி அனிதா : என் தலவிதி இந்த அம்மணிக்கிட்ட வந்து மாட்டீக்கிட்டது. !! ம்ம்ம்ம்ம்.. விதி யாரை விட்டது... எனக்கு கவிதா மூலம்.. ? உங்களுக்கு ????

பீட்டர் தாத்ஸ் : “Fate is for those too weak to determine their own destiny.”
.