பத்தா' vs கவி'

தொலைக்காட்சி, தொலைப்பேசி, இணையம் இவை மூன்றுமே நம் நேரத்தை நாம் அறியாமல் விழுங்கக்கூடியவை.  பத்தா' காலத்தில் இவையில்லை, ரொம்பவே ப்ரொடக்டிவாக பல வேலைகளை அவங்களால் செய்ய முடிந்தது.

குறிப்பாக இணையத்தில் G+, FB, Twitter இவற்றில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் போன்ற விசயங்களில் நம் கவனம் செல்கிறதே ஒழிய.... நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க செய்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர், தான் அறியாமல் தெரியாமல் மற்றவர்களின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் நடக்கிறது.

தலைப்புக்கு வருவோம் : என்னுடைய ஆயா, அப்பாவின் அம்மா பத்மாவதி. தாத்தா ஆயாவை செல்லமாக பத்தா'ன்னு தான் கூப்பிடுவாரு.  ஆயாவிற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பதை இப்போதும் நினைத்து மலைத்துப்போவேன். தோழிகள், உறவினர்கள் வருவார்கள், மணிக்கணக்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடக்கும், ஆனாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க மாட்டாங்க. கைவேலை ஏதேனும் செய்துக்கிட்டே பேசுவாங்க. ஆயாவைப்போல ரொம்ப ப்ரொடக்டிவாக ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போன்று, க்ரியேட்டிவாகவும் யோசித்து வேலைசெய்ய யாராலும் முடியாது.

அப்படியென்ன வேலைகள் என்றால்..?!.ஏதோ ஒரு பாலச்சந்தர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண் என்னவெல்லாம் செய்யறா'ன்னு மளிகை பட்டியல் போல மிக நீளமான ஒரு பட்டியலை அந்த கதாநாயகி எடுத்துக்காட்டுவாள். அப்படிதான் ஆயாவின் வேலைப் பட்டியலும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும். வருடத்திற்கு ஒரு முறை முறத்தை பேப்பர் கூழ் பூசி வைக்கும் பழக்கம் ஆயா சொல்லிக்கொடுத்தது. வருடத்திற்கு ஒருமுறை  3 மணி நேர என் உழைப்பு மட்டுமே. மிக எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு வருடம் ஒரு புதிய முறம் வாங்கிக்கொள்ள முடியும் எவ்வளவோ செலவு செய்யறோம்.. இதை செய்துக்கொள்ள முடியாதா என்ன?. ஆனால்  ஆயா எனக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்தவைகளில் இந்த முறமும் ஒன்று. அவ்வளவு எளிதாக தூக்கிப்போட்டுவிட முடியாது.  முந்தைய இரவு பேப்பர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, காலையில் அரைத்து, முறத்தில் பூசி காயவைத்து எடுக்க வேண்டியது தான்.

இந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நான் அறியாமல் எண்ணெய் பாக்கெட் ஒழுகி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்த முறத்தில் ஊறி, அதை நான் கவனிக்காமல் விட்டு, இரண்டும் பிசு பிசுவென எண்ணெய் கறை படிந்து கறுப்பாக, ஒரே எண்ணெய் நாற்றம் வேறு. சோப்பு போட்டு கழுவி காயவைத்துப் பார்த்தேன் போகவில்லை. பிறகு தண்ணீரில் ஊறவைத்து பழைய பேப்பர் கூழ் முழுக்க பிய்த்து எடுத்து, வெயிலில் காயவைத்து, திரும்ப புதிய கூழ் பூசி புதிதாக ஆக்கினேன்.  சில கவனக்குறைவுகளால் ஏற்படும் தவறுகள், நமக்கு பல புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத்தான் செய்கின்றன.
 **************

அடுத்து குளியலறை அறிவுகால் ஓட்டை. இதனால் பலப்பிரச்சனைகள், அதாது நாங்க வாடகைக்கு விடாமலேயே ஓசியில்  ஒய்யாரமாக தங்கி இனவிருத்தி செய்யும் கரப்பான் வகையாறக்கள். குளியலறை என்பதால் மண்புழுக்குளும் வந்து உள்ளே புகுந்துக்கும், இவற்றை சாப்பிட எரும்பு என பல வித ஜீவராசிகள் ஒன்று சேர்ந்து வாழும் இடமாகிவிட்டது. எனக்கு குளியலறைக்கு போனால், போன வேலையை விட்டு, கவனம் முழுக்க எங்கு என்ன இருக்கிறது அது எப்போது என் மேலேறும் என்றே இருக்கும், உண்மைய சொன்னால் "பயம்" & சகிப்புத்தன்மை இல்லை.  இதற்கு முடிவுக்கட்ட ஒருநாள் களத்தில் இறங்கினேன். சின்ன ஓட்டையாக இருக்குமென்று தப்புக்கணக்கு போட்டேன். சரியான பொருட்கள் கையில் இல்லை இருந்தாலும், பழைய சமையல் கத்திகள், தட்டை ஆயுதங்களாக மாற்றினேன், மேலுள்ள புகைப்படத்தில், படம் 1 -ல் பாருங்க.. பார்க்க மெல்லிய ஓட்டையாக இருந்தாலும், அந்த பெரியக்கத்தியின் கத்தி பாகம் முழுக்க உள்ளே செல்லுமளவு பெரிய ஓட்டை.  இப்படியாக அறிவுகாலின் இரண்டு பக்கமும், ஒரு அறைக்கு 4,  இரண்டு அறைக்கு மொத்தம் 8 ஓட்டைகள்.  வேறென்ன சும்மா பூசிட்டு போகலாம் என்று உட்கார்ந்த எனக்கு, அரை நாள் வேலையானது. ஆனாலும் விடாம இனிமே ஓசியில் யாருக்கும் வீடு வாடகைக்கு விடறதில்லைன்னு கலவையை உள்ளே தள்ளி தள்ளி முடிச்சோமில்ல.. ?!
*****************

கடைசியாக குளியலறை டைல்ஸ் ஓட்டைகள்:-  2000த்தில் இந்த வீட்டிற்கு வந்தோம். 14 ஆவது வருஷம் நடக்குது. குளியலறை டைல்ஸ்களுக்கு இடையே இடைவெளி...அதில் அழுக்கு சேர்ந்து பழுப்பு நிறமாகவும், ரொம்ப குட்டி குட்டி மண்புழுக்குள் புகுந்து உள்ளிருக்கும் தரையை மேலும் பாழாக்கி கடுப்பேத்தின. டைல்ஸ் ஒட்டும் வேலை எனக்கு அறவே தெரியாது, யாரும் செய்தும் பார்த்ததில்லை,  என்றாலும் குத்து மதிப்பாக இப்படித்தான் இருக்குமென ஊகித்து, குளியலறைய நன்கு கழுவி காயவைத்து, ஒய்ட் சிமெண்ட் வாங்கிவந்து கெட்டியாக்கி, டைல்ஸ் ஓட்டைகள் ஒவ்வொன்றையும் பூசி அடைத்தேன். ஆஹா... இப்ப எங்க குளியலறை பளீச்'ன்னு ஆகிப்போச்சி... ..

பத்தா'வை போல எனக்கு கூட்டுக்குடும்பம், ஏகப்பட்ட குழந்தைக்குட்டிகள், விருந்தினர் வருகை, சொந்தங்கள் அதை சார்ந்த வெளி வேலைகள், கோயில் குளம், பிராத்தனைகள், வழிபாடுகள்,  பெரிய வீடு,வாடகை விட்ட வீடுகளின் பராமரிப்பு,  தோட்டம், மரங்கள், செடி, கொடிகள் இப்படி ஏதுமில்லை என்றாலும்.. .......பத்தா வழியில்......

அணில் குட்டி : இந்த பதிவின் மூலம் நீங்க சொல்ல வரும் கருத்து என்னவோ.. ?!  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்... ஏன் இந்த தம்பட்டம். ?!!

பீட்டர் தாத்ஸ் :  House work is what a woman does that nobody notices unless she hasn't done it.  Evan Esar

அவர் எப்படியிருக்காரு?

"நீ போனியா? அவரு எப்படியிருக்காரு... ?!! "

பதிலை எதிர்ப்பார்த்து.... ஆவலும் ஆசையும் ஒரு சேர..  பாட்டியின் கண்கள் பளப்பளவென மின்னியது...

"போனேனே... நல்லாயிருக்காரு பாட்டி..."

"என்னா சொன்னாரு...?! " அதே எதிர்ப்பார்ப்பு மின்னியது....

"உன்னை விசாரிச்சாரு... ஒடம்பு சரியானதும் வந்துடுறேன்னு சொல்ல சொன்னாரு..."

"ம்ம்ம்... விசாரிச்சாரா..... நான் இல்லாம எப்படிதான் இருக்காரோ... ?! நான் இல்லாம இருக்கவே மாட்டாரே........ "  அதே கண்களில் இப்போது நீர்க்கோர்த்து கவலை..ஏக்கம்....தவிப்பு....

"அவர் ஒடம்பு  சரியாகி வர வரைக்கும் தனியா இருந்து பழகிக்கோ பாட்டி.... "

கண்களை விரித்துக்கோபத்தோடு... "என்ன பேசற நீ? ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க....?! "

"சரி சரி..கோச்சிக்காதப்பாட்டி,  உனக்கே தெரியுமில்ல....அவருக்கு ஒடம்பு சரியில்லையே...என்ன செய்யறது... ?! வந்துடுவாரு... ...வந்துடுவாரு..."

".ம்ம்ம்.... . வந்துடுவாரு..."  பார்வை குத்திட்டு நிற்க... ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து உடலுக்கு கையை ஊன்றி முட்டுக்கொடுத்து ஒருக்களித்து படுக்கிறார்.... .

*********************

முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்த என்னிடம், உதவியாளர் பாட்டிக்குத்தெரியாமல் -

 "பாவம்.... தாத்தா இறந்து நாலு நாள்..ஆச்சி.. இன்னும் இதுக்கு தெரியாது.... எவ்ளோ நம்பிக்கையா இருக்குப்பாருங்க..."

"அடடே....இறந்துட்டாரா..?!  ஏன் சொல்லல.... ஏன் சொல்லாம இருக்கீங்க... ..இவ்ளோ எதிர்பார்ப்போட இருக்காங்களே..... பாவமில்லையா.....?! "

"சொன்னா தாங்காதுங்க... தாங்காதுன்னு தெரிஞ்சி எப்படி சொல்றது? இரண்டுப்பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கமாட்டாங்க..."

"ம்ம்ம்ம்"

*********************

நான்கு நாட்களுக்கு முன் உடல் நிலை மிகவும் மோசமாகி, மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப்பாட்டியின் கணவர் அன்றே மருத்துவனையில் இறந்துவிட்டார்.

இவர்களுக்கென்று யாருமில்லை, குழந்தைகள் 4-5 பிறந்து இறந்துவிட்டன, தாத்தா ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்று, மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெற்றுவந்திருக்கிறார்.

அவர் இறந்ததறிந்த அந்தப்பாட்டியின் அக்காப்பிள்ளைகள், பாட்டிக்கு விசயத்தை சொல்லாமல், தாத்தாவின் ஈமச்சடங்குகளை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.  இருந்த ஒரே உறவும் இறந்ததுத்தெரியாமல்,  வழிமேல் விழிவைத்து அவர் வந்துவிடுவார் எனக் காத்திருக்கும் பாட்டியைப்பார்க்க நெஞ்சு நெகிழ்ந்தது.

பாட்டியின் எதிர்ப்பார்ப்பில் "விரிந்து பளப்பளத்த"  அந்தக் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு விலகவில்லை...

வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதா...இல்லை அடுத்த மணித்துளியில் நடக்கவிருக்கும்  .....சுவாரசியங்களும், சூழ்ச்சிகளும், மாயங்களும், அதிசயங்களும் ஆச்சரியங்களும் அறியாத "மாயை" என்பதா... ?!

அணில் குட்டி : ஆக்சுவலி.... இதைப்பார்த்ததிலிருந்து அம்மணிக்கு அவங்க எதிர்காலத்தை நினைச்சி அள்ளுவிடுது.. !! அதை வெளியில சொல்லிக்காம பாட்டியோட லைஃப் லைவ் ஸ்டோரி எழுதறாங்க....... ......  .......

பீட்டர் தாத்ஸ் : Life is what happens while you are busy making other plans - john_lennon 

Image : Thx Google