ஆற்றங்கரையில்.....
கண்களில் ஒரு கவிதை.....
இருளின் ஒளியில்.....
எட்டுக்குள் நானும் மாட்டிக்கிட்டேன்............
நண்பர் சிறில், விடாது கருப்பு & பிசாசு குட்டி’ யும் என்னை எட்டுக்குள்ளே கூப்பிட்டு இருக்காங்க. இதில் சிறில் என்னை கூப்பிடாம அணிலை கூப்பிட்டு இருக்காங்க.. அணிலுக்கு ரொம்பத்தான் எல்லாரும் இடம் கொடுக்கிறார்கள்..ம்ம் பார்த்துக்கிறேன்...சரி.. எட்டுக்குள் போகலாம் வாங்க......
அணில் குட்டி அனிதா:- சிறில் அண்ணே..என்னை மதிச்சி கூப்பிட்டதோட, கவிதாவை நீங்க ஓரம் கட்டனீங்க பாருங்க. .அங்கத்தான் நீங்க நிக்கறீங்க..! அம்மணி என்னை விட்டுட்டு தனியா எழுதறாங்க. .எப்படி எழுதறாங்கன்னு பாக்கலாம்.. ஆனா....இங்க நான் பேசுறது உங்களுக்கு மட்டும் தான் கேக்கும்..அவங்களுக்கு கேக்காது சரியா........
1. பிறந்தது :- குடும்பத்திற்கே ஒரே பெண், குல விளக்கு என்று முன்பே ஒரு பதிவில் அணில் சொல்லி இருக்கிறது. பிறந்தது, வளர்ந்தது, (பள்ளி) படித்தது எல்லாம் விழுப்புரம். கல்லூரி சென்னை எத்திராஜ். தாத்தா, ஆயாவிடம் தான் வளர்ந்தேன். அதனால் நிறைய கட்டுப்பாடு. நடை, உடை, பழக்கவழக்கம், பேச்சு என்று எல்லாவற்றிலும் கட்டுப்பாடு.
அணில்:- ஓ...கட்டுப்பாடா வளர்த்தப்பவே இவ்ளோ ஆட்டம் ஆடறீங்களா?. இன்னும் free ஆ வளத்து இருந்தா.. ஸ்ஸ்ப்பா.. பூமி தாங்காதுடா சாமி சரி சரி....மேல.......போங்க......!!
2.ஆர்வம்:- பொதுவாக எல்லாவற்றிலும் ஆர்வம் அதிகம். எல்லாவற்றையும் கற்றுக்கொள்ளவேண்டும், தெரிந்து கொள்ளவேண்டும் என்று விரும்புவேன். அதற்கான முயற்சியும் செய்வேன்.
அணில்:- ம்ம்ம் .....முயற்சி செய்யுங்க..அதுங்காக அடுத்துவங்க உசுர வாங்காதீங்க.......... சரி.. மேல சொல்லுங்க..
3.குணங்கள்:- எல்லாவற்றிலும் வேகம், அதனால் பொறுமை இன்மை, அதிவேக கோபம், நினைத்தை செய்து முடிக்க வேண்டும் என்ற பிடிவாதம், அடம், நிறைய பாசம் & அன்பு, தனித்தன்மையோட இருக்க வேண்டும் என்று நினைப்பேன். போராட்ட குணம் அதிகம், கிடைக்காதது, நடக்காதது, முடியாதது என்று எதுவும் இல்லைன்னு முழுசாக நம்புகிறேன். அதிகமா பேசிக்கிட்டே இருப்பேன். ரொம்ப அமைதியாகவும் இந்த பூனையும்.....மாதிரியும் சில சமயம் இருப்பேன். முகத்துக்கு நேராக பட்டேன்று எதையும் பேசிவிடுவேன். அதனால் அதிகமான பிரச்சனைகளையும் அனுபவித்து உள்ளேன். ஆனாலும் திருந்தவில்லை.
அணில்:- நீங்க திருந்தமாட்டீங்கன்னு சொல்லனுமா வேற, அதான் ஊரு உலகத்துல இருக்கற அத்தன பேருக்கும் தெரியுமே......!! ம்ம்..ம்ம்.............மேல.... மேல ....!!
4.பொழுதுபோக்கு:- இயற்கை,குளிர்ந்த நிலவு, இரவில் நட்சத்திரம் எண்ணுதல், மெல்லிய தென்றல், ரயில் பயணத்தில் சன்னல் ஓரம், கிராமத்து பச்சை, மழையில் சாரல், விடியற்காலை பனி, கூட்டமில்லாத கோயில், சாமியுடன் சண்டை, அடர்ந்த மரம், அணிலுடன் பேச்சு, குழந்தைகளுடன் விளையாட்டு, பாட்டு கேட்பது, பாடுவது, தெரிந்தவர் தெரியாதவர் யாராக இருந்தாலும் பேசிவிடுவது, சிரித்துவிடுவது, இதற்காக கணவரிடம் திட்டு வாங்குவது, வீட்டை சுத்தம் செய்வது, மண் கைவேலை பொருட்கள், மரப்பாச்சி பொம்மை, பழைய காலத்து டிசைனில் செய்யப்பட்ட மரப்பொருட்கள், மண் சொப்புகள், சில மணி நேர நிசப்தம், கூட்டமில்லாத கடைகள், அலை அதிகமில்லாத கடல், பரிசல் பயணம், நிலவின் ஒளியில் எனக்கு தோன்றும் கவிதைகள், பச்சை நிறம், கறுப்பின மக்கள், பெரிய கட்டிடங்கள், மரங்கள் சூழ்ந்த சாலை.......... (ஐயோ...இன்னும் நிறைய இருக்கே..)
அணில்:- ஆமா நாங்களே.........எப்படா நிறுத்துவீங்கன்னு காத்துக்கிட்டு இருக்கோம்..இதுல.. இன்னும் வேற..இருக்காமாம்.........எப்பவும். உங்களோட ஒரே காமெடி போங்க....:))))))))))))
5.உணவு:- உணவில் அதிக சிங்கினாதம். மிகவும் பிடித்த குறிப்பிட்ட உணவுகளை மட்டுமே சாப்பிடுவேன். சுவை இல்லையென்றால் தொடவே மாட்டேன். பிடிக்காத உணவுகள் என்பதை விட உடம்புக்கு ஒத்துக்கொள்ளாத உணவுகள் அதிகம். நண்பர்கள், சொந்தங்கள் வீட்டுக்கு செல்லும் போதோ, வெளி ஊர்களுக்கு, இடங்களுக்கு செல்லும் போதோ.. சாப்பாடு ஒரு பெரிய பிரச்சனை. நானே சமைத்தால் கூட ருசி இல்லையென்றால் சாப்பிடவே மாட்டேன்.
அணில்:- நீங்க தின்னா எங்களுக்கு என்ன தின்னாட்டி எங்களுக்கு என்ன.. இது எல்லாம் நாட்டுக்கு ரொம்ப முக்கியமா..... தாங்க முடியலடா சாமி............
6.விருப்பம்:- எல்லாவற்றிலுமே ரொம்ப செலெக்டிவாக இருப்பேன். இது தான் என்று முடிவு செய்த பிறகே செய்வேன். வாங்கும் பொருட்கள், பார்க்கும் சினிமா, நெருக்கமாக பழகும் மனிதர்கள், உடை, அணியும் நகைகள், உணவு என்று ஒரு முடிவுடன் இருப்பதால் எனக்கு நிறைய அமைவதில்லை என்றே சொல்லுவேன். காரணம் பிடித்தது இல்லையென்றால் வேறொன்றை மாற்றிக்கொள்ளாத என் பிடிவாதம்.
அணில்:- இது எல்லாம் உருப்படற கேஸ் இல்லன்னு நான் மட்டும் இல்ல எல்லாருமே முடிவு பண்ணியாச்சி.............ம்ஹீம் மேல......
7.உள்ளே-வெளியே:- பொதுவாக என்னை பார்ப்பவர்கள் மிகவும் சாது என்று நினைப்பதுண்டு. அதற்கு மாறாக இருப்பேன். அடுத்து நான் பேசுவதை வைத்து, ரொம்ப கடுமையான, சீரியஸான பெண் என்றும் நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை.
அணில்:- ஸ்ஸ்ப்பாஆஆ..முடியலப்பா.. ஏங்க இவங்கல 8 போட கூப்பிட்டது யாரு? கவிதாவ ஒரு பாயிண்டு பேச சொன்னாவே...ஓவரா பேசுவாங்க.. இப்ப 8 பாயிண்டா.. அய்யோ.. எப்ப முடிப்பாங்களோ தெரியலையே....
8.லட்சியம்:- ஒரு ஆதரவற்ற குழந்தைகள் இல்லமும், முதியோர் இல்லமும் ஆரம்பிக்க வேண்டும். தரமான கல்வியையும், அளவில்லாத அன்பையும் அவர்களுக்கு தரவேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் ஆசை. செய்வேன் என்று நம்புகிறேன்.
அணில் :- முதியோர் இல்லம்னா.. நீங்க தான கவிதா முதல் உறுப்பினர்...?...
பீட்டர் தாத்ஸ்:- The secret of joy in work is contained in one word-Excellence. To know how to do something well is to enjoy it.
எட்டுக்குள் அழைப்பவர்கள் :-
1. சிவகுமார்ஜி
2. சீனு
3. மங்கைஜி
4. மதுரா
5. உஷாஜி
6. நா.அன்ந்தகுமார்
7. தேகாஜி
8. கொத்ஸ்
விளையாட்டின் விதிகள்:
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.
3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்
Labels: அணில் குட்டி 26 Comments
MNC யில் வேலை பார்ப்பது தவறா?
வெளி நாட்டில் உட்கார்ந்து கொண்டு, இந்தியாவின் மேல் மிகுந்த அக்கறை இருப்பது போல் பேசும் நம் நாட்டு இளைஞர்கள், ஏன் இங்கேயே இருந்து அதே அக்கறையுடன் இந்தியாவையும் , இந்தியநாட்டு மக்களையும் காப்பற்ற வேண்டியது தானே? படிக்கும் போதே எதற்கு வெளிநாட்டு கனவுகளோடு இருக்கிறார்கள்? ஏன் இந்தியாவில் அவர்களுக்கான வாய்ப்புகள் இல்லையா.? பணம் மட்டுமே பிரச்சனை என்றால், போய் சம்பாதித்து, உங்களின் தேவைகளை சுயநலமாக முடித்துக்கொள்ளுங்கள். அத்தோடு நிறுத்திக்கொள்ளுங்கள். உங்களின் வாழ்க்கை உங்களின் குடும்பம், உங்களின் உழைப்பு, உங்களின் பணம். யார் உங்களை கேட்க போகிறார்கள்.?
ஆனால், அங்கே உட்கார்ந்து கொண்டு, இந்தியர்களுக்கும், இந்தியாவிற்க்கும் அறிவுரை சொல்லிக்கொண்டும், நக்கல், நையாண்டி செய்து கொண்டும் இருக்காதீர்கள். இந்தியா இப்படி இருக்கிறது, இந்தியாவிற்கு வயசாகி போச்சி, இந்தியாவில் தலைவர்கள் இப்படி ஆகிவிட்டார்கள் என்று ஆவேசமாக ஏன் ஏழுதவேண்டும். நீங்கள் சம்பாதிப்பது மட்டும் அல்ல, அதனால் ஒரு செளகரியமான வாழ்க்கைமுறையை அங்கு அனுபவிக்கிறீர்கள். அதனால் உட்கார்ந்த இடத்தில் இருந்து, ஒன்று என்ன, ஒரு நூறு அறிவுரைகளை இந்தியாவிற்கு உங்களால் சொல்ல முடியும். ஏதாவது செய்ய முடியுமா என்பது தான் கேள்வி?. உங்களுக்கு பொழுது போகவில்லை என்றால், அதே வெளிநாட்டில் நிறைய விஷயங்கள் இருக்கிறது அதை செய்யுங்கள்.
மேற்கண்ட இந்த கருத்தை நான் சொல்ல “நாகை சிவா” விற்கும் எனக்கும் ஒரு பனிப்போர் நடந்து கொண்டு இருக்கிறது. என்னை அவர் திருப்பி “இவ்வளவு அக்கறையாக MNC யில் வேலை பார்க்கும் நீங்க பேசக்கூடாது” என்று சொன்னார். அதற்கு அவரின் ‘பங்கு” சந்தோஷ் ஜால்ரா தட்டுகிறார். இருவருக்குமாக ஏன் MNC யில் வேலை பார்க்கிறேன் என்று சொல்ல வேண்டியுள்ளது.
MNC யின் வரவு பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவை பொருத்தவரை வெளிநாட்டு தொழில் கொள்கைகளில் நிறைய பிரச்சனைகள் உண்டு. இந்தியாவிற்குள்ளே வேற்று மாநிலத்தில் ஒரு தொழிலை தொடங்கி செய்வது மிக சிரமம். கேரளா அதற்கு ஒரு உதாரணம். தொழிலதிபர் டாடா’ வென்று நினைக்கிறேன். “தெரியாமல் கால் வைத்து விட்டேன், அதனால், என்னுடைய ஒரு கால் செருப்பை கேராளாவில் விட்டுவிட்டு வர வேண்டியதாகிவிட்டது" என்று தன்னுடைய தொழில் நிறுவனத்தை பிரச்ச்னை காரணமாக அங்கே முடியபோது சொன்னதாக எனக்கு நினைவு. இப்போது நம் வெளிநாட்டு கொள்கைகள் ஓரளவிற்கு இளகியதாக இருந்தாலும், ஒரு வெளிநாட்டு கம்பெனி அத்தனை எளிதாக தொழில் செய்ய நம்முடைய Foreign Trade Policy எளிமையானதாக இல்லை. அதையும் மீறி பல வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியாவில் முதலீடு செய்ய காத்திருக்கின்றன. காரணம்,
மிக குறைந்த சம்பளத்தில் கிடைக்கும் வேலையாட்கள்
மிக குறைந்த முதலீடு
இரவு/பகல் நேர வித்தியாசத்தால் பணி விரைவில் முடிகிறது
இந்தியர்களின் - படிப்பு, திறமை, உழைப்பு
பொதுவாக அனுபவத்தின் மூலம் இந்திய கம்பெனிகளுக்கும், MNC களுக்கும் உள்ள வித்தியாசத்தை சொல்கிறேன்.
இந்திய கம்பெனி :-
1. மிக குறைந்த சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் & அதிக இடைவெளி.
3. தனி மனித சுதந்திரம் இல்லை
4. வேலை தரம் குறைவு
5. அடிப்படை வசதி முதல், தேவையான வசதிகள் இல்லை
6. தொழில்நுட்ப வளர்ச்சியை பயன்படுத்தல் குறைவு
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகள் எப்போதும் அன்றாடம் காய்ச்சிகள்
MNC
1. அதிகமான, மிக அதிகமான சம்பளம்
2. முதலாளி - தொழிலாளி வித்தியாசம் இல்லை, இடைவெளியும் இல்லை.
3. தனி மனித சுதந்திரம் உண்டு
4. வேலை தரம் மிக அதிகம்
5. எல்லா வசதிகளும் உண்டு
6. தொழில்நுட்ப வளர்ச்சியை உடனுக்குடன் பயன்படுத்துதல்
7. முதலாளிகள் எப்போதும் கோடிஸ்வரர்கள், தொழிலாளிகளும் வாழ்க்கையின் எல்லா அடிப்படை தேவைகளுடனும் வசதிகளுடனும் வாழ்கிறார்கள்.
இந்திய கம்பெனிகளில், முதலில் மிகவும் சம்பளம் குறைவு. அதற்கு அதன் முதலாளிகள் மட்டுமே காரணம். தான் மட்டுமே சம்பாதித்து வாழ்வை அனுபவிக்க வேண்டும், தனக்கு கீழ் வேலை பார்ப்பவர்கள் முன்னேற அவர்கள் விடுவதே இல்லை.
தனக்கு கீழ் வேலை செய்யும் தன்னைவிட குறைந்த சம்பளம் வாங்கும் ஒருவன், இரு சக்கர வாகனம் வாங்கி, அதே இரு சக்கர வாகனம் தன்னிடம் இல்லையென்றால் இவன் அவனை பார்த்து வெந்து போவான். இவர்களின் எண்ணமும், பக்குவமில்லாத அறிவும், வாழ்க்கை முறையும் இந்தியர்களின் பரம்பரை பழக்கமாகிவிட்டது.
முதலாளிக்கு எத்தனை லாபம் வந்தாலும், 10% , 20% வருடத்திற்கு சம்பளம் கூடம் அதுவும் நேரத்திற்கு கொடுக்கமாட்டார்கள், அவர்களிடம் போராட்டம் செய்து, அடவாடி செய்து, வேலை நிறுத்தம் செய்து வாங்கவேண்டும்.
அடுத்து, வேலைதரம். International Standard தேவையில்லை. Local Standard கூட இருப்பதில்லை. படித்து, இந்த வேலையை இப்படி தான் செய்ய வேண்டும் என்று சொல்லும் வேலை திறமை வாயந்தவர்கள் எல்லாம் இரண்டாம்பட்சம், முதலாளிக்கு, அறிவே இல்லையென்றாலும் கூஜா தூக்கும் சிலரால், வேலை தரம் என்பது சுத்தமாக இல்லாமல் இருப்பது தான் உண்மை.
அடுத்தது, வேலை செய்ய அடிப்படை வசதி - போதுமான காற்று, வெளிச்சம், மேஜை, நாற்காலி, வேலை செய்ய தேவையான சாதனங்கள், தண்ணீர், சாப்பாடு, கழிவறை (ஆண், பெண் என்று தனித்தனியே), சாப்பிடும் அறை, ஓய்வெடுக்கும் அறை, first Aid Facility, பாதுகாப்பு (security) போன்ற எல்லா வசதிகளும் எல்லா இந்திய கம்பெனிகளில் இருப்பதில்லை. நான் வேலை பார்த்த அத்தனை இந்திய கம்பெனிகளிலும் கழிவறை பெரிய பிரச்சனையாக எனக்கு இருந்து இருக்கிறது. ஆண் பெண் தனி கழிவறைகள் இல்லாமல், அதனால் தொற்று நோய் பரவி நான் பாதிக்கவும் பட்டிருக்கிறேன். அதை பலமுறை நேரடியாக, மருத்துவ குறிப்புகளுடன் என்னுடைய மேலாளாரிடம் சொல்லியும் அதற்கான எந்த மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் இந்த விஷயத்தை அவர்கள் ஒரு பொருட்டாகவே கருதவில்லை. நான் மட்டும் இன்றி எல்லா பெண்களுமே கழிவறை தொற்றுவியாதியால் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் அறிந்து கொண்டேன். ஆனால் அவர்கள் கூச்சப்பட்டு கொண்டு வெளியில் சொல்லுவதில்லை. இப்படி அடிப்படை வசதிகள் இல்லாததால் உடல் மட்டும் இல்லை மனமும் நாள் ஆக ஆக வியாதியால் தொற்றிக்கொள்ளும். எடுத்துக்காட்டு - 1. தேவையான வெளிச்சமும், காற்றும் இல்லையென்றால் இயற்கையாக கொஞ்சம் கொஞ்சமாக நம் மனநிலை பாதிக்கப்படும். 2. நாம் தினமும் அமர்ந்து வேலை செய்யும் நாற்காலி, சரியாக இல்லாவிட்டால் முதுகு, இடுப்பு, கழுத்து வலி வரும். இது வாழ்நாள் முழுதும் நம்மின் ஒரு நிரந்தர வலியாக மாறிப்போகும். பலருக்கு நாம் ஏன் எதற்காக பாதிக்கப்பட்டு இருக்கிறோம் என்று கூட தெரியாது.
அடுத்து வேலை செய்ய தேவையான அடிப்படை சாதனங்கள். பேனாவிலிருந்து, வேலை சம்பந்தமான software வரை எல்லா வசதிகளும் செய்து கொடுப்பதில்லை. என்ன கொடுக்கிறார்களோ அதை வைத்து க்கொண்டு, அவர்கள் எதிர்பார்க்கும் வேலையை செய்து கொடுக்கவேண்டும். அதில் கண்டிப்பாக அவர்கள் தரத்தை எதிர்பார்ப்பதில்லை. வேலை முடிந்தால் போதும். தரம் இங்கு பெரிதாக பேசப்படுவதில்லை.
தொழில்நுட்ப வளர்ச்சியும், பயன்படுத்தலும் - உலகம் எங்கேயோ போய் கொண்டு இருக்கிறது. இன்னமும் நோட்டு புத்தகம் வைத்து வேலை மற்றும் கணக்கு எழுதும் இந்திய கம்பெனிகள் ஏராளம். IT, தவிர, மற்ற நிறுவனங்களில் கம்பியூட்டர் என்பது கேள்வி குறியே. பள்ளி அலுவலகங்கள், அரசு அலுவலகங்கள், ரயில்வே, தனியார் நிறுவனங்கள், வங்கிகள் எங்குமே தேவையான, அல்லது நடைமுறையில் உள்ள தொழில்நுட்ப வசதியை கூட பயன்படுத்தவதில்லை. அதற்கான ஆர்வமும் அவர்களிடம் இல்லை. (சென்னையை மட்டும் கவனிக்காதீர்கள், தமிழ்நாட்டில் பிற இடங்களை தயவுசெய்து பாருங்கள்). என் சொந்த அண்ணன் (Railway Guard) வேலை பார்க்கும் “விழுப்புரம் சந்திப்பு” ரயில்வே நிலையத்தில், அவர்களுக்கு என்று ஒரே ஒரு கம்பியூட்டர் உள்ளது. அதுவும் யாரும் உபயோகப்படுத்துவது இல்லை. உபயோகிக்க அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க படவில்லை. நோட்டுப்புத்தகங்களில் தான் எல்லா வேலைகளையும் அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது மொபைல் இருப்பதால் என்னுடைய அண்ணனை அவசர வேலைக்கு அதன் மூலம் அழைக்கிறார்கள். இல்லையென்றால், ஒரு ஆளை வீட்டுக்கு அல்லது அவர் இருக்கும் இடம் தேடி அனுப்பி, “உங்களுக்கு இன்றைக்கு இந்த வண்டியில் வேலை” என்று சொல்லும் அளவிற்குதான் நாம் வளர்ந்து இருக்கிறோம்.
கடைசியாக ஒரு பெண்ணாக நான் உணர்ந்த சுதந்திரம், முதலாளிகள் (ஆண்கள்), தேவையில்லாமல் அங்கே இங்கே என்று பார்ப்பது இல்லை, தனியாக அவர்கள் அறைக்கு அழைத்து தேவையில்லாமல் வழிவதோ, சிரித்துக்கொண்டே மேலே கை வைக்க முயற்சி செய்வதோ இல்லை.
MNCயில் சேர்ந்த புதிதில் வேலையை செய்ய சற்று சிரமாக இருந்தது. ஏனென்றால் அவர்கள் எப்போதும் எதிர்பார்க்கும் வேலை தரம் 100%. செய்யும் அத்தனை வேலைகளிலும் 100% தரம் இருக்க வேண்டும். திறமைக்கும், படிப்பிற்கும் வாய்ப்பளித்து, கை நிறைய சம்பளம் கொடுத்து, அடிப்படை வசதிகள் அத்தனையும் செய்து கொடுத்து, சக மனிதனை சமமாக நினைத்து நடத்தும் MNC களில் வேலை செய்வது சுலபமாக உள்ளது. மேலும், தரமாக வேலை செய்ய கற்றுக்கொள்ள முடிகிறது, சுதந்திரமாக இருக்கமுடிகிறது. இங்கே உள்ள ஒரே பிரச்சனை கலாசார சீர்கேடு. அதை நானே எழுதி இருக்கிறேன். ஆனால், அதை நல்ல முறையில், நமக்கும் நம் கலாசாரத்திற்கும் கேடு வராமல் நாம் தான் பார்த்துக்கொள்ள வேண்டும். நம் இடம் தேடி வந்து இருக்கும், நமக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி நம் வேலை தரத்தையும், அறிவையும், தனி நபர் வருமானத்தையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.
MNCயில் வேலை செய்வதால் நான் வெளிநாட்டில் வேலை செய்வதாக அர்த்தம் இல்லை, என்னுடைய இடத்தில், வேற்று நாட்டுக்காரர், என்னுடைய நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு, கொள்கைகளுக்கு கட்டுப்பட்டு கம்பெனி நடத்துகிறார். அதில் தான் வேலை செய்கிறேன். அவரின் நாட்டை தேடி சென்று அவருக்கு சேவகம் செய்யவில்லை. மேலும் அங்கே உட்கார்ந்து கொண்டு.. இந்தியர்களுக்கு இது இல்லை அது இல்லை என்று அளக்கவும் இல்லை. வெளிநாடு வாய்ப்பு கிடைத்து ஒரு வேலை சென்றாலும், என் வேலையை மட்டும் பார்த்துக்கொண்டு இருப்பேனே அன்றி, இதுபோல் உபதேசம் செய்து கொண்டு இருக்கமாட்டேன்.
அணில் குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா!! முடியல........... அம்மணியோட ஆட்டத்துக்கு ஒரு அளவே இல்லாம போச்சி.. புள்ளைங்க பாவம் எங்கேயோ செவனேன்னு இருக்குங்க. .அதுங்கள கூட்டுவச்சி இவ்வளா.................ஆம் பெரிய லக்சர் வுட்டு இருக்காங்க.. பாவம் என்ன பண்ண போறாங்களோ தெரியல.. (புலி அண்ணே காத குடுங்க.. அம்மணிய வுடாதீங்க.. நல்லா புராண்டிவிடுங்க.....ரத்தம் வரணும் சரியா?, தல சந்தோஷ்க்கு சொல்லவே வேணாம்.. நான் பேசினாவே ஓவராத்தான் டான்ஸ் ஆடுவாரு .......ம்ம்..பாக்கலாம் ..!.
அம்மணிக்கு வேல வெட்டி இல்லன்னு நல்லா தெரியுது..... “சும்மா இருக்கற சங்கை எவ(ளோ)னோ ஊதி கெடுத்தானாம்..... “ உங்களுக்கு எல்லாம் இந்த பழமொழிக்கு அர்த்தம் இப்ப சரியா புரிஞ்சி இருக்குமே...!! ம்ம் ..அதே தான்........!! வாங்க அப்படி ஓரமா உக்காந்து அம்மணி ஒதை வாங்கறத பாக்கலாம்........ரொம்ப நாள் ஆச எல்லாருக்கும் நெரவேற போகுது.....:))))))
பீட்டர் தாத்ஸ்:- Pursue one great decisive aim with force and determination.
Labels: சமூகம் 64 Comments
அட பைத்தியகாரர்களா?
என்ன நடக்கிறது இங்கே? நாம் எதை நோக்கி எங்கே போய் கொண்டு இருக்கிறோம் என்று புரியவில்லை.
இன்று காலையில் எழுந்து பல் விலக்கினார்களா என்று கூட தெரியவில்லை. எல்லா திரை அரங்குகளிலும் அப்படி ஒரு கூட்டம், அதில் ஒருவர் சொல்கிறார், “எனக்கு ஒரே பயமா இருக்குங்க..“ (அவர் மேலே தொடருமுன் நான் மனதில் . சரி..சிவாஜி நல்லா இருக்குமா இல்ல கவுத்துக்குமான்னு; பயப்படுகிறார் என்று நினைத்தேன்) ஆனால் அவரோ.. “காலையில 7 மணிக்கு முன்னால வந்தேன், எனக்கு டிக்கெட் கிடைத்து, நான் படத்தை பார்ப்பேனா!!?”என்று பயமாக இருக்கிறது.
எவ்வளவு பணம் கொடுத்து இவர்கள் டிக்கெட் வாங்கி இருக்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பதை நான் சொல்ல வேண்டியது இல்லை. அதில் ரசிகர்கள் எல்லோருமே இத்தனை பணம் கொடுத்து வாங்கும் பொருளாதார சூழ்நிலையில் இருக்கிறார்களா என்றால் இல்லை என்பது அனைவருக்குமே தெரியும்.
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, நாம் ஒரு தொழில் செய்து சம்பாதிப்பது போல, நடிப்பு என்ற தொழிலை செய்து நடிகர்கள் சம்பாதிக்கிறார்கள். பொழுது போக்குவதற்காக பார்க்க வேண்டிய சினிமாவை, இத்தனை சீரியஸாக எடுத்துக்கொண்டு, இவர்கள் இப்படி பைத்தியம் பிடித்தது போல் நடந்து கொள்வது ரொம்பவும் வருந்தத்தக்கதாக உள்ளது. தன் குடும்பத்திற்காகவும், தனக்காகவும், தன்னை சுற்றி உள்ளவர்களுக்காகவும் இப்படி ஏதாவது செய்வார்களா?
சினிமா & தொலைக்காட்சியை நம்பியே ஒரு கூட்டம், வியாபார நோக்கோடு பெரும் பணத்தை முடக்கி உள்ளது. வியாபார நோக்கோடு மட்டுமே அவர்கள் இருக்கிறார்கள் என்பதை சாமானியர்கள் உணராமல் பைத்தியம் பிடித்து “தலைவா....தலைவா” என்று ஆராதனை செய்கிறார்கள். இது ரஜனிக்கு மட்டும் இல்லை. ஒரு முறை தொலைக்காட்சியில் விஜய்’யின் ரசிகர் ஒருவர், “உடல் மண்ணுக்கு, உயில் விஜய்”க்கு என்று பெருமையுடன் சொல்லுகிறார். இப்படிப்பட்ட அடிமட்ட ரசிகர்கள் கூட்டத்தை முழுவதுமாக நம்பியே தனி நபர்கள் கோடிஸ்வரர்களாக வாழ்கிறார்கள். எத்தனையோ பேர் சினிமாவின் மூலம் வாழ்கிறார்கள் என்றாலும், நம்முடைய அறிவுக்கும், பார்வைக்கும் தெரியாமல் மோசமாக பாதிக்கப் பட்டவர்களும், அழிந்து போனவர்களும் அதிகம்.
ஒரு முறை எங்களுடைய பிறந்த ஊருக்கு சென்றிருந்த போது, எங்களது தெருவில் இருந்த சில இளைஞர்கள், சாக்லெட் எடுத்து வந்து கொடுத்தார்கள். அவர்களிடம் நான் பார்த்த சந்தோஷம் இன்னமும் எனக்கு நினைவிருக்கிறது. எதற்கு என்று கேட்டதற்கு , அதில் எங்கள் குடும்ப நண்பரின் மகன் சதீஷ் என்ற இளைஞர் சொன்னார்,
“இன்னைக்கு தலைவரோட பிறந்தநாள். “
“ஓ..யாரு உங்க தலைவர்? “
“அட என்னக்கா நீங்க ரஜினி’ சார்’ தான்!! “
“ ஓ.. எல்லா வீட்டிற்க்கும் போய் கொடுக்கறீங்களா?”
“இல்லையா பின்ன.. தல பிறந்தநாளைக்கு எல்லாரும் சந்தோஷமா இருக்கவேண்டாமா? “
“தலைவர் உங்களுக்கு என்ன செய்யறாரு?
“அட என்னக்கா நீங்க ..எத்தன வீட்டுக்கு போகனும்.. சும்மா..கேள்வி கேட்டுக்கிட்டு இருக்கீங்க.. தலைவர் செய்யறது எல்லாம் வெளியில சொல்ல மாட்டாரு..... அவரு ஒருத்தருக்கு செய்தா லட்சம் பேருக்கு செய்ததா அர்த்தம் !!”..
“சரி உங்களுக்கு என்ன செய்தாருன்னு சொல்லுங்க..”
“அக்கா எல்லாருக்குக்கும் கிடைக்காத பாக்கியம் எனக்கு கிடச்சதுக்கா.. “
“ஓ.....என்ன பாக்கியம்..”
“அவரோட நின்னு போட்டோ எடுத்துக்கிட்டேன்.. அத என் வாழ் நாள்ல எப்பவும் மறக்கவே முடியாது..”
அதற்குமேல், எனக்கு என்ன சொல்லுவது , கேட்பது என்று தெரியவில்லை, அவனையே வியப்புடன் பார்க்க.. “அக்கா..வரேன் “..ன்னு சென்று விட்டான். மாலை அந்த இளைஞனின் தாயை பார்த்தபோது..இதை பற்றி கேட்டேன்.. அதற்கு அவர்கள், “பெத்த அம்மா அப்பா..க்கு ஒன்னும் செய்யல.....கூட பொறந்த அக்கா 2 இருக்கு..அதுங்களுக்கும் ஒன்னும் செய்யல.. ஏன் அவனுக்கே இன்னும் ஒன்னும் செய்துக்குல.. தலைவர் தலைவர் ன்னு எப்பபார்த்தாலும் ஏதாவது ஒன்னு செய்துகிட்டு, ஒழங்காவும் படிக்காம, இப்ப வேல வெட்டி எதுவும் இல்லாம.. முழுநேரமும் இதே மாதிரி இன்னும் 4, 5 புள்ளைங்ககூட சேர்ந்து வாழ்க்கைய வீணடிச்சிக்கிட்டு இருக்கான். ஏம்மா..நீதான் அவனுக்கு 4 நல்ல வார்த்தை சொல்லிட்டு போயேன்..... “ ஏக்கம் நிறைந்த கண்களுடன் அந்த அம்மா பேசியது இன்னமும் நினைவிருக்கிறது.
“சரிங்க ஆண்ட்டி ! நான் சொல்றேன்.. “ என்று சொன்னேனே தவிர..அந்த பிள்ளையை திருப்பி நான் ஊர் திரும்பும் வரை பார்க்கமுடியவில்லை. நான் சொன்னாலும் ஏற்றுக்கொள்ள கூடிய மனநிலையில் அவன் இல்லை என்பது எனக்கு புரிந்தது..அவனின் அம்மாவுக்கும் புரிந்துதான் விட்டுவிட்டார்கள் என்பதும் தெரிந்தது.
இப்படி எத்தனை எத்தனை இளைஞர்கள் இருக்கிறார்கள் என்பதை இன்றைய “சிவாஜி” படம் திரையிடப்படும் திரை அரங்குகளில் பார்க்கமுடிகிறது.
ஒருவரை பிடிக்கலாம், அதற்காக இப்படியா? எப்போது இந்த சினிமா மற்றும் தலைவர்’களின் பைத்தியங்களும் மாறுமோ....?
அணில் குட்டி அனிதா:- அட அட அட...!! கவிதா ஆரம்பிச்சிட்டீங்களா உங்க அட்வைஸ் அ?.. மக்களா..ரொம்ப உணர்ச்சி வசப்பட்டு கவிதா இந்த பதிவ எழுதிட்டாங்க.....போல.. (அவங்க எப்ப சாதாரணமா எழுதி இருக்காங்க ? ன்னு நீங்க சொல்றது எனக்கு கேட்குது.!!.) இருந்தாலும் உங்களுக்கு எல்லாம் நான் ஒன்னு எப்பவும் போல சொல்லிக்க விரும்புறேன்.. இப்பவும் டிவி’ல ரஜினி பாட்டு, இல்ல படம் வந்தா....தலைவா..ன்னு சொல்லி........வராத விசிலை இழுத்து இழுத்து................. படு கேவலமா அடிப்பாங்க..!! அதை பாத்து அவங்க வூட்டுக்காரரும், பையனும்............. தலையல அடிச்சிக்கிட்டு எடத்தையே காலி பண்ணிடுவாங்க........!! ஏன்னு கேக்கறீங்களா..??? அதான் சொன்னேனே... கேவலமா இருக்கும்னு...... 10, 12 வயசுல இருந்து..விசில் அடிக்க கத்துக்கறாங்களாம்.. இன்னமும் சரியா விசில் கூட அடிக்க தெரியல.. படு கேவலமா ஓரு சவுண்டு வரும்..அதை இவங்க விசில்..ன்னு சொல்லிக்குவாங்க......!!! ஹோ.........சரி நான் ஓவரா விசில் பத்தி பேசி.. அம்மணிக்கு கோவம் வந்து எனக்கு சங்கு ஊதிட போறாங்க.. அதனால..நீங்க மிச்சத்த பாத்துக்குங்க....................... வரட்டா......பை..பை.....சீ.யூ.....ஆல்........சூன்..
பீட்டர் தாத்ஸ்:- The smallest good deed is better than the grandest intention.
Labels: சமூகம் 23 Comments
கேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - லிவிங் ஸ்மைல் வித்யா
இன்று கேப்பங்கஞ்சி' குடிக்க வந்து இருப்பவர் சாதிக்க நினைக்கும், சாதித்து கொண்டு இருக்கும் திருநங்கை லிவிங் ஸ்மைல் வித்யா அவர்கள், நாம் அனைவரும் அறிந்த பத்திரிக்கைகள் மூலமும், இணையதலம் மூலமாகவும் பிரமலமாகி இருப்பவர். இவரை பற்றிய அறிமுகம் தேவையில்லை என்றே நினைக்கிறேன்.
வித்யா, பொதுவாக மற்ற நண்பர்களை இங்கு அழைக்கும் போது அவர்களின் பதிவுகளை படித்து அவர்களை பற்றி கொஞ்சம் தெரிந்துகொண்டு பின்பு கேள்விகள் கேட்பேன். உங்களை பொறுத்தமட்டில், இணையதளத்தில் தேடி தேடி சில விஷயங்களை தெரிந்துகொண்டு வந்து கேள்விகள் கேட்டு இருக்கிறேன். என்னுடைய கேள்விகள் சிறுபிள்ளைதனமாகவும், அறியாமையால் எழுந்தவையாகவும், உங்கள் மனதை புண்படுத்தும் படியாக இருந்தாலும் தயவசெய்து மனம் பொருத்து எனக்கு பதில் அளிப்பீர்கள் என்று நினைக்கிறேன். கேட்கப்பட்ட கேள்விகள் உங்களை மையமாக வைத்து மட்டும் இல்லை, எல்லா திருநங்கைகளையும் மனதில் கொண்டே.. இதோ.. நம்முடன்.. வித்யா......
வாயை புடுங்கற ரவுண்டு :-
கவிதா:- வாங்க வித்யா எப்படி இருக்கீங்க?. உங்களிடம் கேட்கும் முதல் கேள்வி உங்கள் சிறுவயதை பற்றி. நீங்கள் எப்போது மனதளவில், உடலளவில் உங்களிடம் மாற்றத்தை உணர்ந்தீர்கள்?
வணக்கம், ரொம்ப நல்லா இருக்கேன். சிறுவயது பற்றி சொல்வதென்றால், எனக்கு இயல்பான தொரு இளமைப் பிராயம் அமையவில்லை என்று தான் சொல்லமுடியும். கிட்டதட்ட வெறுமையான இளம்பருவம், தாயின் இழப்பு, அப்பாவின் படி, படி என்ற தொடர் கெடுபுடிகள் என கொஞ்சம் சிரமமாகத்தான் இருந்தது.
என் நினைவு தெரிந்து கிட்டதட்ட 10,11 வயது எனக் கொள்ளலாம், அப்போது, சிறுவர்களோடு விளையாடுவதை விட சிறுமிகளோடும், பெரிய அக்காக்களோடும் விளையாடுவதே எனக்கு சௌகரியமாக இருந்தது, வீட்டுக்கெடுபிடிகளையெல்லாம் தாண்டி சில்லாக்கு, தாயம், பல்லாங்குழி இவற்றில் அய்க்கியமாகி இருந்தேன். தாயரற்ற பிள்ளை / நன்றாக படிக்கும் பிள்ளை (சும்மா படி படின்னு இம்ச பண்ணதால வேற வழியில்லாம கொஞ்சம் சுமாரா படிச்சேன்) உறவினர்கள் எனது பெண்தன்மையை, மென்தண்மையாக புரிந்து கொண்டனர்.
நாட்பட 13/14 வயதில் அக்காவின் சட்டை பாவடையை போட்டு அழகு பார்க்க ஆரம்பித்த பிறகு பொம்பள சட்டி, பொட்ட மாரி போன்ற கேலி கிண்டல்கள் ஆரம்பமாயிற்று, அதை தவிர்ப்பதற்காக யாருமற்ற நேரங்களில் அறையில் அக்காவின் ட்ரஸ்ஸை போடுவது, கண்னுக்கு மை தீட்டுவது, தேங்காய் எண்ணெயை உதடுக்கு (லிப்ஸ்டிக்!) தேய்ப்பது, துண்டை தலையில் கட்டிக்கொள்வது (எங்கக்கா குளித்தபின் துண்டை கட்டிக் கொள்வதைப் போல) போன்ற சேட்டைகள் செய்து என் ஆசைகளைத் தீர்த்து கொள்வேன். குறிப்பா, அக்காவோட லாங்க் ஸ்கர்ட்டை கட்டிக் கொண்டு, வேகமா சுத்திகிட்டே சடாரன்னு உட்காருவேன். அப்போது நான் நடுவுல உக்காந்திருக்க, என்னை சுற்றிலும் பாவாடை அழகா வட்டாமா அமைந்திருக்க, அந்த அழகை நானே ரசித்து ரசித்து மகிழ்வேன்.
எந்தளவு என்னை பெண்ணா நினைச்சு மகிழ்ந்தேனோ, அதே அளவு ஜாக்கிரதையாவும் இருந்தேன். மற்றவர்கள் என் பெண்தன்மையை அடையாளம் காணக்கூடாது என்பதில் கவனமா இருந்தேன். ஆனால் அதையும் மீறி ஏதோ ஒன்று என் பெண்தன்மையை அம்பலப்படுத்தி விடும். இதனால், புறவயமாகவும் உளவியல் ரீதியாகவும் பாதிக்கப்பட்டேன். ப்ளஸ் டூ படிக்கும் போது என்னை வெறுப்பேற்றவே நான்கு பேர் டீம் ஒன்று இருந்தது. என்னை கூனிக்குறகச் செய்யும் ஆயுதமாக என் பெண்தன்மை குறித்த இழிசொல்லை பயன்படுத்துவார்கள்.
போர்டில் என் பெயரை எழுதி
.... ஒரு படிப்ப்பலி,
.... ஒரு உழைப்பலி,
..... ஒரு தொழிலலி என்று எழுதி வைப்பார்கள்...
இதனாலேயே கல்லூரி நாட்களில் நண்பர்களுடன் சேருவதையே தவிர்த்தேன். பெண்களுடனும் பழகமுடியாமல், ஆண்களொடும் பழக முடியாமல் தவித்த போது புத்தகங்களே எனக்கு உற்ற தோழியாக இருந்தது. அப்படித்தான், இலக்கியம் பரிச்சயமமனது.
யு.ஜி. முடித்து, பி.ஜி. சேர்ந்த போது, நாடகத்துறையில் கவனம் செலுத்தி வந்தேன். அப்போது, திருச்சியில் உள்ள பாலியல் சிறுபாண்மையோர்க்கான தொண்டு நிறுவனத்திற்கு வரப்போக இருந்ததன் மூலம் திருநங்கைகளை நேரில் கண்டேன், அவர்களைப் பார்க்கும் போதும் அவர்களுடன் பேசும் போதும் நான் என்ன என்பது தெளிவாயிற்று..
கவிதா:- உணர்ந்த பின், உங்களின் மனநிலை எப்படி இருந்தது?. யாரிடமாவது சொன்னீர்களா?. எதனால் இப்படி என்று தெரிந்து கொள்ள முற்பட்டீர்களா?
உணர்ந்த பின் பெரிசா ஒன்னும் தோணல முன்பு சொன்னபடி நாடகம், வாசிப்பு என ஏதோ ஒன்றில் எண்ணத்தை செலுத்தி வந்தேன். ஆனாலும், பி.ஜி.யும் முடிச்சு, பி.எச்.டி சீட் கிடைச்ச நாட்களில் எனக்குள் முழு பெண்ணாக மாறவேண்டும் என்ற வெறி அளவு கடந்து விட்டது. நான் ஏன் இப்படி இருக்கிறேன் என்பதை விட எங்களை ஏன் சமூகம் ஏற்றுக் கொள்ளவில்லை என்று
தான் யோசித்தேன்.
திருச்சியில் உள்ள நண்பர்கள் நேரு மற்றும் குமரன் ஆகியோரிடம் மட்டும் என் நிலைமையை எடுத்துச் சொல்லி, அவர்களின் உதவியுடன் சென்னைக்கு சென்றேன். அப்பாவிடன் சென்னையில் வேலை கிடைத்திருப்பதால் சென்னைக்கு செல்கிறேன் என்று பொய் சொல்லி சமாளித்தேன். அங்கு சென்ற பின் எனது அபிமானமிக்க பேரா. மு. ராமசாமியிடமும் என் நிலைமையை தெரிவித்து என்னால் முனைவர் படிப்பை தொடரமுடியாது என்று கூறி புனேவிற்கும் சென்று விட்டேன்.
கவிதா:- அடிக்கடி எனக்கு தோன்றும் கேள்வி இது, திருநங்கையாக ஆவதற்கு நீங்கள் செய்து கொள்ளும் நவீன ஆப்ரேஷன் ஆகட்டும், அதற்கு முன் பழைய முறைப்படி செய்யப்பட்ட "அறுத்து எரிதல்" நிகழ்வாகட்டும், பெரும் வேதனையும், மனவலி, உடல் வலியையும்,பிழைத்தால் வாழலாம் என்ற நிலையை உங்களுக்கு கொடுக்கிறது. இதற்கு பதில், உங்களின் மனநிலையை மனோதத்துவ (counseling) முறைப்படி மாற்ற ஏதாவது முயற்சி செய்யலாம் இல்லையா?.. அப்படி நீங்களோ இல்லை வேறு யாரோ செய்து இருக்கிறார்களா?.. முயன்று இருக்கிறீர்களா?
பொதுவாகவே, தன்னை திருநங்கையாக உணரும் நபர் முதலில் ஹிஜ்ரா கம்யூனிட்டி (திருநங்கைகள் குழுமத்தில்)யில் சேருவார்கள். அங்கு மற்ற திருநங்கைகளோடு ஊடாடுவது மூலம், ஆப்ரேசன், அங்கீகாரமின்மை, வலி என அனைத்தையும் அறிந்து தெரிந்து கொள்வர். அதையும் மீறி ஆப்ரேசன் செய்து கொள்வேன் என்று உறுதியாக இருப்பவர்களுக்குத்தான் மேற்சொன்ன முறைமைகள் நடைபெறும். சிலர் ஆப்ரேசன் செய்யாமலும் இருப்பதுண்டு. மேலும் சிலர் வெளித்தொற்றத்தில் ஆணாகவும் திருநங்கைகள் மத்தியில் திருநங்கையாகவும் வாழ்வதுண்டு. தீர யோசித்து அவரவர் எடுக்கும் முடிவுதான் இது. ஒரு வகையில் ரியல் டைம் கவுன்சிலிங் என்றே கூறலாம்.
கவிதா:- ஆப்ரேஷன் இல்லாமல் ஹார்மோன் தெரபி முறை ஏதாவது உங்களுக்கு பயன் அளிக்குமா?. அதாவது திருநங்கையாக இல்லாமல் ஆணாக'வே (அ) பெண்ணாகவோ இருக்க சாத்தியகூறுகள் மேற்சொன்ன முறைகளில் முடியுமா?
தன்னை திருநங்கையாக உணரும் நபருக்கு, முறையான மருத்துவ திட்டத்தின் படி முதலில் கவுன்சிலிங் தரப்படும். அக்கவுன்சிலிங்கின் போதே மருத்துவருக்கு அந்நபர் குறித்த ஒரு தெளிவு கிடைத்துவிடும். தொடர்ந்து மேற்கொள்ளப்படும் ரியல் லைப் டெஸ்ட், கடந்த கால வாழ்க்கை குறித்த மனோவியல் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அந்நபருக்கு என்ன சிகிச்சை தேவை என்பதை மருத்துவர் கணித்துவிடுவார். இதில் மருத்துவரை விட அந்நபரின் முடிவிற்கே முக்கியத்துவம் தரப்படும். அந்நபர் எந்த பாலினை தேர்வு செய்கிறாரோ அதுவே மேற்கொள்ளப்படும். ஆனால், மாற்று பாலினமாகவே அனைவரும் விரும்புகிறார்கள்
ஜெண்டர் அய்டெண்டிட்டி டிஸ்ஆர்டர் (GID _ Gender Idnetiy Disorder) உள்ள நபரின் விருப்பமே முதன்மையானது. அவரது விருப்பத்திற்கு மரியாதை தரப்பட வேண்டும் என்பது, திருநங்கைகள் குறித்து முதலில் சிந்தனை செய்த ப்ராய்ட் சொல்கிறார்.
கவிதா:- ஹார்மோன் குறைபாடு உடல் அளவில் ஒரு ஊனம், உங்களுக்கும் உடலில் ஒரு ஊனம் என்று எடுத்துக்கொள்ளலாமா?
சொல்லலாம், அது இடஒதுக்கீடு கேட்பதற்கு உதவலாம். ஆனால், எனது தனிப்பட்ட கருத்தின்படி சொல்வதென்றால், பாலின அடையாள சிக்கல் என்பது குறைபாடு கிடையாது. குறைந்த எண்ணிக்கை அவ்வளவே. சராசரி ஆண்/பெண் க்கு கிடைக்கும் அங்கீகாரமும், வாய்ப்பும் கிடைக்கும் பட்சத்தில் எங்களாலும் எந்த தடையுமின்றி எல்லாத் துறையிலும் சிறப்பாக பணியாற்ற முடியும். வேண்டுமானால் பாலியல் சிறுபாண்மையினர் என்று சொல்லலாம்.
கவிதா:- திருநங்கை'களுக்கு தனி அங்கீகாரம் கொடுக்கனும்னு நினைக்கறீங்க. இந்த அங்கீகாரம் உங்கள் வீட்டிலிருந்து ஆரம்பித்தால் நலம் இல்லையா?. அதற்காக முயற்சி ஏதாவது செய்தீர்களா?.
சரி தான், ஆனால் குடும்பம் என்பது என்ன? சமூகத்தின் சிறிய அலகுதானே?! ஆரம்பத்தில் ஸ்பஸ்டமாக நான் என்ன என்பது தெரியவரும்போது என்னை கண்டு
அதிரும் குடும்பம் நாளடைவில் நாளடைவில் என்ன இருந்தாலும் என் பிள்ளை என்று ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திற்கு வந்துவிடுகிறார்கள்.
மனதால் ஏற்றுக் கொண்டாலும், வெளிப்படையாக ஏற்றுக்கொள்வதற்கு சமூகமும், சமூக நியதிகளுமே காரணமாக உள்ளது. முதலில் வீட்டில் ஒரு திருநங்கை இருப்பது அவ்வீட்டிற்கான அவமானசின்னமாக கருதப்படுகிறது. இது உறவுகள் மத்தியில் தலைகுனிவை ஏற்படுத்துகிறது. சகோதர/சகோதரிகளின் திருமணம் போன்ற சுபகாரியங்களுக்கு தடையாகிறது. உதாரனத்திற்கு சொல்வதென்றால், ஒரு குடும்பத்தில் திருடன், கொலைகாரன் போன்ற குற்றவாளி இருந்தால் எத்தகைய இருக்கமான சூழல் நிலவுமோ அதைவிட மோசமான விளைவுகளை எங்கள் குடும்பம் சந்திக்க நேர்கிறது. மட்டுமன்றி தன்னால் தன் குடும்பத்திற்கு எந்த லாபமும் இல்லை ஆனால், அவமானம் மட்டும் நேர்கிறது என்ற குற்றவுணர்வும் எங்களை வெளியேற்றுகிறது.
சட்டமும், சமூகமும் ஏற்றுக் கொண்டால் குடும்பம் தானாகவே எங்களை ஏற்றுக் கொள்ளும்.
கவிதா:- உங்களுடைய ரத்த சொந்தங்கள் உங்களை அங்கரிக்காத போது எப்படி மற்றவர்கள் அதை ஏற்பார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இதில் ஒரு விசயத்தை நன்கு யோசித்து பார்க்க வேண்டும். நீங்கள் சொல்லும் ரத்த சொந்தங்கள் என்னை பாராட்டி சீராட்டி வளர்த்தவர்கள்; என் சார்ந்து பல கற்பனையை வளர்த்தவர்கள்; அவர்களுக்கு என் மாற்றம் ஒரு பெரும் இடியாகத்தான் இருந்திருக்கும். ஆக, நான் இப்படி இருப்பதால் நஷ்டம் அவர்களுக்கும் தான் அந்த கோபம் அவர்களுக்கு இருக்கத்தான் செய்யும்.
ஆனால், எந்த சம்பந்தமும் இல்லாத மற்றவர்களுக்கு நான் இப்படி இருப்பதால் என்ன கேடு வந்தது? இப்போ நீங்கள் ஒரு பஸ்ஸில் பயணம் செய்கிறீர்கள், அதில் உங்களோடு ஒரு அய்ம்பது பேராவது பயணம் செய்யாலாம். அந்த அய்ம்பதில் ஒன்றாக நானும் பயணம் செய்கிறேன். அப்படி இருக்க என்னை மட்டும் அருவெறுக்கவோ, கேலி செய்யவோ யாருக்கு என்ன அவசியம் இருக்கிறது? என் சொந்தம் ஏற்றுக் கொள்ளவில்லை நடுத்தெருவில் நிற்கிறேன் என்பதற்காக என்னை நிந்திக்கும் அதிகாரத்தை உங்களுக்கு யார் கொடுத்தது?
கவிதா:- இந்த பால் மாற்றம் பற்றி உங்கள் குடும்பத்திற்கும், உங்களை சுற்றி உள்ளவர்களும் சரியாக புரிந்து கொள்ளும் படி (awareness) செய்தால் மட்டுமே அவர்கள் உங்களை ஏற்று கொள்வார்கள். உங்கள் குடும்பத்திற்கு செய்தீர்களா?
நான் புனேக்கு சென்ற சில மாதங்களிலேயே நண்பர்கள் மற்றும் பேராசிரியர் மூலமாக என் பெற்றோர்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது. எனவே அவர்களை சென்னைக்கு வரவழைத்து சில படித்த திருநங்கைகள் முன்னிலையில் அவர்கள் புரிந்து கொள்ளும் படி செய்து (அன்று முழுவதும் அழவும், சண்டை போடவுமே சரியாக இருந்தது) ஆற்றாமையுடன் அவர்களை ஊருக்கு திருப்பி அனுப்புனேன்.
கவிதா:- இதை உங்களை போல உள்ளவர்களுக்கு அறிவுருத்துகிறீர்களா? அவர்கள் ஒதுக்க படாமல் இருக்க வேண்டும் அல்லவா?
இதில் அறிவுறுத்த ஒன்றும் இல்லை. கிட்டதட்ட எல்லோருக்கும் இப்படித்தான் நடக்கிறது.
கவிதா:- நான் படித்து தெரிந்து கொண்ட வரையில், இந்த பால் மாற்று அறுவை சிகிச்சை என்பது அறுவை சிகிச்சையுடன் மட்டும் முடிந்து விடுவதில்லை. பெண்ணிற்கு என்ற சில நடை உடை பாவைனைகள் உள்ளன. அதை தெரிந்து அதற்கு ஏற்றார்போன்று உங்களை மாற்றிக்கொள்ள வேண்டும். உதாரணமாக, இயற்கையாக ஆண்களுக்கு கை, கால், மார்பு போன்ற பகுதிகளில் ரோமம் அதிகம் இருக்கும், அதுவே பெண்களுக்கு அப்படி இருக்காது. அடுத்து ஆண், பெண் குரல் வித்தியாசம்.
நீங்கள் அப்படி ஒரு பெண்ணிற்கான மாற்றத்தை முழுமையாக செய்ய உங்கள் மனதை தயார் படுத்திக்கொண்டு செய்திருக்கிறீர்களா? இந்த கேள்விக்கு காரணம், மற்றவர்கள் உங்களை சமமாக நடத்தவும், மனதளவில் ஏற்றுக்கொள்ளவும் இந்த மாற்றங்கள் முக்கியம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுகிறார்கள்.
முழுமையான பால்மாற்று சிகிச்சை என்பது நீங்கள் குறிப்பிடுவது போல் வெறும் அறுவை சிகிச்சை மட்டுமன்றி Facial Feminasation, Speech Theraphy, என அனைத்தும் உள்ளடக்கியதே இது குறித்து பின்வரும் பதிவில் எழுதியுள்ளேன்.
http://livingsmile.blogspot.com/2007/04/blog-post_25.html
மேற்குறிய முறையான மருத்துவம் இந்தியாவில் இல்லாததால், திருநங்கைகளுக்கும் ஆண்களைப் போல தாடை, கை, கால், மற்ற இதர பாகங்களில் ரோமம் வளரும் ஆனால், எல்லோருக்கும் அப்படி கிடையாது. உதாரணத்திற்கு எனக்கு தாடையில் மட்டுமே ரோமம் இருக்கும், கை, கால் மற்ற பகுதிகள் இயற்கையாகவே கிடையாது.
கை கால்களில் ரோம வளர்ச்சி உள்ளவர்கள் வெல்லப்பாகினை காய்ச்சி ரோமம் உள்ள பகுதிகளில் வெதுவெதுப்பாக தேய்த்து காட்டன் துணி ஒன்றினால் ஒத்தி எடுப்பார்கள். துணியுடன் ரோமம் வேருடன் வந்து விடும். சொல்வதற்கு எளிதாக தோன்றும் இது கொடிய வலி நிறைந்தது. இதனை செய்வதற்கென்று தனி ஆட்கள் உண்டு. சில ப்யூட்டி பார்லரிலும் இந்த வசதி உண்டு.
தாடை ரோமத்தை நீக்க சிம்டா என்னும் கிடிக்கி போன்ற சிறு கருவி பயன்படுத்தப் படுகிறது. இதுவும், வலி நிறைந்தது ஆனால் வேறு வழியின்றி பயன்படுத்த வேண்டியுள்ளது. தாடை தோல் சற்று மென்மையாக இருப்பதால் ரோமத்தை பிடிங்கும் போது சிறு சிறு காயங்களும் ஏற்படும்.
குரலை மட்டும் ஒன்றுமே செய்ய முடியாது. வெகு சிலருக்கு குரல் இனிமையானதாக இயற்கையாகவே அமைவதுண்டு.
கவிதா:- திருநங்கைகள் பொதுவாக பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளார்கள் (அ) ஈடுபடுத்தபடுகிறார்கள். இது பணத்துக்காக மட்டுமா?. இல்லை உங்களுக்கும் உடல் தேவைகள் உண்டா?
வானத்திற்கு கீழ் உள்ள அனைத்து ஜீவராசிகளைப் போல திருநங்கைகளுக்கும் உடல் தேவைகள் உண்டு. ஆனால், உடல் தேவையை தீர்த்துக் கொள்வதற்காக (மற்ற பெண் பாலியல் தொழிலாளிகள் உட்பட) யாரும் பாலியல் தொழிலில் ஈடுபடுவதில்லை. அதிலும் வேறு வேலை வாய்ப்போ, குடும்ப/சமூக பாதுகாப்போ இல்லாத நிலையில் பிச்சை/பாலியல் தொழில் ஏதோ ஒன்றையே தேர்ந்தெடுக்க வேண்டியுள்ளது.
தங்களது உடல் மற்றும் ஆன்ம தேவைக்கு அனைத்து திருநங்கைகளுக்குமே ஆண் நண்பர்கள் உண்டு. சிலர் மணமேடை, ரிஜிஸ்டர் ஆபிஸ் இன்றி திருமணமும் செய்து கொள்வதுண்டு. பொதுவில் மட்டும் தங்களை கணவன் மனைவியாக காட்டிக் கொள்வதில்லை.
கவிதா:- நீங்கள் அவள் விகடனில் சொல்லியிருந்த "பிச்சை எடுத்தல்" முறையை உங்களுக்கு பிறகு மாற்ற ஏதாவது செய்தீர்களா? இல்லை ஏதாவது செய்ய முயற்சிகள் செய்து வருகிறீர்களா?
ஒட்டு மொத்தமாக பிச்சை எடுத்தலையே நிறுத்தும் அளவிற்கு நான் இன்னும் வளரவில்லை. சட்டம், எங்களுக்கு கல்வி வாய்ப்பும், வேலை வாய்ப்பும், தொழில் வாய்ப்பும், பாதுகாப்பும் அளிக்காதவரையில் யாராலும் பிச்சை எடுப்பதையோ/ பாலியல் தொழிலையோ மாற்றவே முடியாது.
கவிதா:- அரசாங்கத்தில் உங்களின் பெயர், பாலினம் போன்ற மாற்றங்கள் செய்ய என்ன வகையான முயற்சிகள் நடந்து வருகின்றன. அதற்காக உங்களின் பங்கு என்ன?
பிப்ரவரி 2006ல் எனது பெயர் (பாலின மாற்றுக்கென எந்த விண்னப்ப படிவமும் கிடையாது) மாற்றத்திற்கு, தலைமை செயலகத்தில் உள்ள எழுத்து மற்றும் பதிப்பு துறை (Gazzette) ஆணையரிடம் விண்ணப்பித்தேன். அக்கோரிக்கை நிராகரிக்கப்பட்ட்து. எனவே, உயர்நீதி மன்றத்தில் எனது பெயர் மற்றும் பாலினத்தை மாற்றித் தரக் கோரி வழக்கு பதித்தேன். அதன் அடிப்படையில் எனது பெயரை (மட்டும்) 12 வாரங்களுக்கும் மாற்றித் தரப் பட வேண்டும் என்ற தீர்ப்பு பிப்ரவரி 2007ல் (கிட்டதட்ட ஒருவருடம்) வந்தது. ஆனால், இன்று வரை (15 வாரங்கள் ஆகிவிட்டது) பெயர் மாற்றித் தரப்பட வில்லை.
கவிதா:- கூத்தாண்டாவர் கோயில் விழா - இதன் நோக்கம், பலன், அவசியமா?
கூத்தாண்டவர் கோயில் திருவிழா
தொண்டு நிறுவனங்களின் நோக்க்கம் : பிசினஸ்,
ஊடகங்களுக்கு : கிளு கிளு செய்தி,
பொது மக்களுக்கு : வித்தியாசமான பொழுது போக்கு,
திருநங்கைகளுக்கு : கெட் டு கெதர்;
என்னைப் பொருத்த வரை : தடை செய்யப்பட வேண்டும்.
கவிதா:- நீங்கள் திருநங்கைகளை பற்றி தவறாக பேசினாலோ, திரைபடங்களில் காட்டினாலோ , தொலைக்காட்சியில் காட்டினாலோ, ஏன் கோபம் கொள்கிறீர்கள்?. அப்படிப்பட்டவர்களும் இருக்கிறார்கள் இல்லையா? அவர்களின் விழுக்காடு அதிகமாக கூட இருக்ககிறது இல்லையா?
அதற்கு முன் எனது சில கேள்விகள், இதற்கு பதில் தேவையில்லை நீங்கள் சிந்தித்து பார்த்தால் போதுமானது. இன்று நல்ல குடும்பத்தில் பிறந்து நல்ல படிப்பும், தொழிலும் இருந்தும் டாகடர், என்ஜினியர், ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள், லஞ்சம், ஊழல்னு கொடி கட்டி பறக்கிறார்களே ஏன்? படிப்பிலையா, பணம் இல்லையா? மக்களின் ஓட்டை வாங்கி மக்களை ஓட்டாண்டிகளாக்கும் அரசியல்வாதிகளிடம் தான் பணம் இல்லையா? சினிமா, பத்திரிக்கை என ஊடகங்கள் ஆபாசத்தை முன்னிருத்தி சம்பாதிக்கிறதே அவர்களிடம் பணம் இல்லையா? இருந்தும் மேலும், மேலும் பணம் சேர்க்க ஆளாய்ப் பறக்கும் இவர்கள் நல்ல்வர்கள்!! கல்வி, வேலை, பாதுகாப்பு, அங்கீகாரம் எதுவும் இல்லாட்டியும் திருநங்கைகள் மட்டும் மகாத்மாக்களாக வாழ வேண்டிய அவசியம் என்ன?
இனி உங்கள் கேள்வி வருவோம் நீங்கள் சொல்வது போல் அப்படிப்பட்டவர்கல் இருக்கிறார்கள் தான். ஆனால், அப்படிபட்டவர்கள் எப்படி அப்படி ஆனார்கள்? அதற்கு யார் காரணம்? இதைப்பற்றி ஒரு படம், ஒரே ஒரு படம் வந்துள்ளதா?
சும்மா உள்ளதை சொல்றேன்னு ஏற்கனவே திருநங்கைகள் குறித்து நிலவி வரும் அவதூறை தொடர்ந்து வளர்த்தெடுப்பதை நாகரீக சமூகம் எப்படி அங்கீகரிக்கலாம்? அல்லது நான்தான் எப்படி பொருத்துக் கொள்ள முடியும்?
ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு:-
1. உங்களுக்கு பிடித்த உடை, அலங்காரம்
ஜீன்ஸ் - குர்தா; லாங்க் ஸ்கர்ட் - குர்தா;
2. உங்களின் நெருங்கிய தோழர்/தோழி
ப்ரியா (இப்ப புனேவில் என்பதால்) எனக்கு நெருங்கிய தோழி/ தோழர் யாரும் இல்லை.
3. உங்கள் குடும்பம் பற்றி
பாசக்கார ஹிட்லர் அப்பா, அம்மா (எனக்கு 4 வயதாகும் போது இறந்துவிட்டார்); சித்தி (என் மூத்த அக்காவை விட 2 வயது இளைய, அப்பாவின் இரண்டாந்தாரம்); அம்மாக்கு இணையா எம்மேல பாசத்தக் கொட்டும் பொறுப்பான மூத்த அக்கா; எல்லா விசயத்திலும் என்னோட போட்டிப் போடும் சின்ன அக்கா; இருவருக்கும் திருமணமாகி, தலா ஒரு பையன் , ஒரு பொண்ணுன்னு செட்டில் ஆகிவிட்டார்கள்; என் மேலும் பாசமும், அபிமானமும் கொண்ட தங்கை;
இவர்களின் கனவுக் கோட்டையை தரைமட்டமாக்கிவிட்ட நான்
4. உங்களுக்கு சமைக்க தெரியுமா? பிடித்த உணவு
சமைப்பேன். ஓரளவிற்கு அட்ஜஸ்ட் பண்ணி சாப்டுக்கலாம். சிக்கன் இன்னும் கொஞ்சம் பெட்டரா சமைப்பேன். எனக்கு பிடிச்சது சிக்கன், சப்பாத்தி, புட்டு, ஆப்பம்.
5. உங்கள் வேலை, அலுவலகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அங்கீகாரம் பற்றி
என் வேலை டேட்டா எண்ட்ரி; சுருக்கம எலக்ட்ரானிக் டேட்ட ப்ராசஸிங் அசிஸ்டெண்ட்; எங்கள் அலுவலகத்தில் 10 ஊழியர்கள் அந்த 10ல் ஒன்று நான் என்பதை தவிர எந்த வித்தியாசமும் கிடையாது;
கூல்!!
6. எழுத்து, சினிமா தவிர உங்களின் பொழுதுபோக்கு
எழுத்து எனது பொழுது போக்கு கிடையாது; வாசிப்பு பிடிதத அளவிற்கு எழுத்து எனக்கு பிடிப்பதில்லை. எழுதியே ஆகவேண்டும் என்ற கட்டாயத்திற்காக மட்டுமே எழுதுகிறேன். நடிப்பார்வம், நாடக ஆர்வம், தொடர்ந்து குறும்படம் எடுக்கும் ஆர்வம் என நிறைய உண்டு. இவற்றை தாண்டி இசையை தரிசிக்கவும், சமைக்க கத்துகிட்ட நாள்ல இருந்து சமைக்கவும் ஆர்வம் உள்ளது.
7. உங்களின் கனவுகள்?
நிறைய உண்டு. சும்மா பேர்/பாலின அங்கீகாரம், சமூக அங்கீகாரம்னு போராடுற அவசியம் இல்லாதபடி இந்தியா மாறனும். நல்ல நடிகை, சிறந்த இயக்குநர், என்ற முகவரி.. பிரேசில், ஜமைக்கா, தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற நாடுகளை சுத்து, சுத்துன்னு நல்லா ஊர் சுத்தனும்.
என்ற கனவு.
8. உங்களுக்கு ஒரு வரம் கிடைக்கிறது. உங்களுக்கு பிடித்த ஒருவராக நீங்கள் மாறலாம். யாராக மாறுவீர்கள்?
தி ஒன் அண்ட் ஒன்லி லிவிங் ஸ்மைல்
9. உங்கள் இசை ஆர்வம், பிடித்த பாடகர்கள், பாடகிகள்
இந்தியாவின் அநேக பாமரர்களைப் போல திரையிசையே எனக்கு வாய்த்த இசையாக இருந்தது. தற்போது, ரெக்கே, கொஞ்சம் ராக் கேட்க ஆரம்பித்துள்ளேன்.
பாடகர்கள் : பாப் மார்லி, ஜிக்கி, லீலா, பி. பி.ஸ்ரீநிவாஸ், ராம்ஸ்டர்ன் (அஸ்ஸே ஜு அஸ்ஸே), ஜிம்மி ஹெண்ட்ரிக்ஸ் ( ஊடோ சைல்ட்), சக் பெர்ரி (கோ ஜானி கோ), கீதா தத் (தக் தீர்), சுவர்ணலதா, வசுந்த்ரா தாஸ், சுனிதி சௌஹன், ஆஷா பொஸ்லே, கவிதா சுப்ரமணியம், சித்ரா,
10. பதிவர்களில் பிடித்தவர்கள்
பிடித்தவர்கள், பிடிக்காதவர்கள்னு இல்லைன்னாலும் தொடர்ந்து தங்களது படைப்பை படிக்க வைத்தவர்கள் என்னும் வகையில் உடண்டி நினைவில் வருபவர்கள் :
தல என்னும் பாலபாரதி, பொடிச்சி, துளசி, உஷா, வரவனை, சுகுணா, ராஜ் வனஜ், அசுரன், பொன்ஸ், ஆழியூரான், நரேன், பாஸ்டன் பாலா, மோகன்தாஸ், தமிழச்சி, திரு, செந்தழல், லக்கி, மகேந்திரன்.பெ, பொட்டீகடை, மலைநாடன், குழலி, தருமி, ராம், பாமரன், ஓசை செல்லா.
வித்யா சொன்ன தத்துவம் :- LOVE ALL; CELEBRATE YOUR LIFE;
Labels: கேப்பங்கஞ்சி 74 Comments
நிழலாக தொடரும் நிலவு - பாகம் 2
சில வருடங்களுக்கு முன்.......
அனுஷாவின் அண்ணன் சந்துருவின் நண்பனாக அறிமுகம் ஆனவன் தான் ரமேஷ். அனுஷா & சந்துருவும் கல்லூரி சென்றுக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய அப்பா மாரடைப்பால் இறந்துபோக குடும்ப பாரத்தை அனுஷாவும், சந்துருவும் சுமக்க துவங்கினர். அனுஷா, சந்துருவுக்கு தங்கையாக இருந்தாலும் நிர்வாக திறமையில் அவனை விட புத்திசாலியாக இருந்தாள். சந்துரு மிகவும் சாதுவான, வாய் திருந்து பேசவே பயப்படும் ஒரு இளைஞன். அனுஷாவும் அப்படியே என்றாலும் அப்பாவின் இடத்தை யாராவது நிரப்ப வேண்டுமே?.
30 வருடங்களாக இந்த குடும்பம் ஒரு சிறிய வீட்டில் (அவுட் ஹவுஸ்) குடியிருப்பதை வைத்தே அவர்களின் குடும்பம் எத்தனை அமைதியான, பிரச்சனை எதுவும் இல்லாத குடும்பம் என்று புரிந்து கொள்ளலாம். வீட்டை விட்டு எங்குமே போயிருந்திடாத பார்வதி அம்மாவை, பிள்ளைகள் இருவரும் அப்பாவின் மறைவுக்கும் பிறகும் அப்படியே வைத்து கொண்டார்கள்.
வெளி உலகம் தெரியாத அந்த அம்மாவிடம் வளர்ந்த பிள்ளைகளும் அப்படியே இருந்தனர். அமைதி, அடக்கம், பேச்சில் நிதானம் என்று எல்லா நல்ல பழக்கத்தையும் கொண்டு எல்லோரிடமும் நல்ல பெயரை மிக எளிதாக பெற்றிருந்தனர்.
சந்துருவிற்கு, நிறைய இல்லாவிட்டாலும் சில நெருங்கிய நண்பர்கள், எப்போதும் வீட்டுக்கு வருவதும் இங்கேயே நேரத்தை கழிப்பதும் வாடிக்கை. அப்படி சிறுவயது முதல் இந்த வீட்டில் இன்னொரு பிள்ளையாக இருந்தவன் தான் ரமேஷ். அனுஷாவின் மீது காதல் வந்ததும், அவன் முதலில் சொல்லியது சந்துருவிடம் தான். சந்துரு சரி என்றால் அனுஷாவிடம் சொல்லலாம் என்று முடிவெடுத்து சந்துருவிடம் சொல்ல, அவனும் சற்று யோசித்தாலும், ரமேஷ்ஷின் குணம், அன்பு, நேர்மை எல்லாவற்றையும் பார்த்து, சரி என்று சம்மதம் தெரிவித்தான்.
சந்துருவின் சம்மதத்துடன் துவங்கிய இந்த காதல் வருடங்களாக தொடர்ந்தது. காதல் என்றால் இதுவரை சினிமா பீச் என்று சென்றதில்லை. இவர்களின் காதல் அண்ணன் மற்றும் அம்மாவின் எதிரில் தான்.
சந்துருவுக்கும் அனுஷாவிற்கும் நல்ல சம்பளத்தில் வேலை கிடைத்தவுடன், இந்த நுங்கம்பாக்கம் வீட்டிற்கு குடிபெயர்ந்தார்கள். இதுவும் வருமானம் அதிகமானதால் எடுத்த முடிவு இல்லை, அவர்கள் வேலைக்கு செல்ல சுலபமாக இருக்கம், அதே சமயம் ரமேஷ்ஷின் மற்றோரு நண்பனின் வீடு இது, அவன் வெளிநாடு சென்று விட வீட்டை இவர்களுக்கு விட்டுவிட்டு சென்றான். இப்படி ஒரு சில காரணங்களுக்காக இங்கே இடம் மாறி இருந்தனர்.
===============
முன் கதையின் தொடர்ச்சி.................
ரமேஷ் சென்றவுடன்............ பார்வதி அம்மாவை சோர்வோடு பார்த்துவிட்டு, அனுஷா அவள் ரூமிற்கு சென்று கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து கொண்டாள்.
பார்வதி அம்மா பின்னாலேயே வந்து.... கட்டிலின் ஓரத்தில் அமர்ந்தார்கள்.
“அனு......... இப்ப அந்த பொண்ணு வேற மாசமா இருக்கா..... நீயும் இப்படியே பிடிவாதமா இருக்கறது எனக்கு சுத்தமா பிடிக்கலை.”
அனுஷா மெளனமாக சுவற்றையே வெறித்து கொண்டிருந்தாள்.
அவள் கால்களை பிடித்து உலுக்கிய பார்வதி அம்மா.......... “அனு.. உன்னத்தாண்டி...” என்றார்கள்.
சுதாரித்து அம்மாவின் பக்கம் திரும்பியவள், “அம்மா.....மீனா கன்சீவ் ஆவங்கன்னு நான் எதிர்பார்க்கல................ “
“ம்ம்......” அவளின் மனக்கலக்கம் புரிந்தவர்களாய், தனியே யோசிக்கட்டும் என்று வெளியே வந்துவிட்டார்கள்.
===============
ரமேஷ் வீட்டிற்கு சென்று சேர்ந்தான்,
காத்திருந்தவளாக மீனா , அவன் உள்ளே நுழைந்ததும் சத்தம் போட ஆரம்பித்தாள். “ரமேஷ், அனுஷா ! அனுஷா !! ன்னு இன்னும் எவ்வளவு நாள் இருக்க போறீங்க...”
“சாகற வரைக்கும் இருப்பேன்.. எல்லாத்தையும் உன்கிட்ட சொல்லிட்டு தான் கல்யாணம் செய்துக்கிட்டேன்.. நீயும் தெரிஞ்சித்தானே கல்யாணம் செய்துக்கிட்ட?.. ஒன்னுமே தெரியாத மாதிரி கேக்கற..?
"ஆமா சொன்னீங்க அதுக்காக, கல்யாணத்துக்கு அப்புறம் கொஞ்சமாவது என்னை பற்றியும் நீங்க யோசிக்கனும் இல்ல......."
“என்ன யோசிக்காம இருக்கேன்....? எவ்வளவோ சொன்ன பிறகும், அடம்மா..... என்னை கல்யாணம் செய்துக்கிட்டது நீ..... இப்ப என்னை குத்தம் சொல்லாத......."
“சொல்லாம தானே இருந்தேன்.....ஆனா முன்ன மாதிரி இப்ப விடமுடியுமா? நமக்குன்னு ஒரு குழந்தை என் வயத்துல வளர ஆரம்பிச்சிடுத்து...... இதுக்கு அப்புறமும் நீங்க இப்படி மாறாம இருக்கறது நல்லது இல்ல............ “
"ஓ..... இதை காரணம் காட்டி என்னையும் அனுஷாவையும் பிரிக்கலாம்னு இருக்கியா?... அது மட்டும் நடக்காது..... "
“அவ்வளவு தெளிவா இருக்கறவர் எதுக்காக என்னை கர்ப்பமாக்கணும், அனுஷா “உங்க மனசுல இவ்வளவு ஆழமா இருக்கும் போது, என்னை ஏன் தொடணும்?”
ரமேஷ் அவளின் கேள்வியில் அதிர்ந்தான், "அடிப்பாவி...... !! மனச தொட்டு சொல்லு, நானா உன்னை தொடணும்னு உன் மேல் ஆசைப்பட்டு உன் கிட்ட வந்தேன்...... ? "
"சரி நீங்க வரல..... நான் தான் காரணம்னு வச்சிக்கோங்க..நீங்க வேண்டாம்னா வேண்டாம்னு இருக்க வேண்டியது தானே..? ஏன் வந்தீங்க?? “
‘மீனா.. வேண்டாம் மீனா.. இப்படி எல்லாம் பேசி என் மனசை நோகடிக்காத...... ஆனா இப்ப நல்லா உன்னோட வேஷத்தை புரிஞ்சிக்கிட்டேன்..... வேணும்னு என்னை அனுஷாக்கிட்ட இருந்து பிரிக்கனும்னு நீ இந்த வேலையை செய்து இருக்கேன்னு புரிஞ்சிக்கிட்டேன்..... ஏன் மீனா.. ஏன் இப்படி செய்த...... ??? , தலையை இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சோபாவில் அப்படியே தொம்' மென்று உட்கார்ந்தான் ரமேஷ்..
மீனா எதுவும் பேசாமல் வேகமாக ரூம்மிற்க்குள் சென்று விட..
ரமேஷ் "இப்படியும் ஒரு பெண் செய்வாளா?" என நம்பமுடியாமல், இனி என்ன செய்வது? இனி இவளை எப்படி சமாளிப்பது ? என்று யோசிக்கலானான்.
நிழல் தொடரும்........................
Labels: கதை 0 Comments
Hel(l)met ட்டினால் எனக்கு வந்த பிரச்சனைகள்..
அன்பான நெஞ்சங்களுக்காக..:- ஈமெயில் மூலம் தலைப்பை மாற்ற கூறி, அன்பாக பாசத்துடன் கடித்துக்கொள்ளும் அனைவருக்காகவும் தலைப்பை மாற்றியிருக்கிறேன்...
ஆமாம், 1993-94 லிருந்து சென்னை மாநகரத்தில், அண்ணாசாலை உட்பட பல இடங்களில் இரு சக்கர வாகனத்தில் சென்று வந்து கொண்டு இருக்கிறேன். இது நாள் வரை இல்லாத பயம் இப்போது வந்துவிட்டது.
காரணம் Hel(l)met தான். ஆமாம் , ஜீன் 1 லிருந்து Hel(l)met போடவேண்டும் என்பதால் நேற்று கணவரை வருத்தி, கடைக்கு அழைத்து சென்று ஒரு Hel(l)met வாங்கி அதை இன்று அணிந்து வந்தேன். வீட்டில் Trail பார்க்கும் போதே கணவரும், மகனும் அடித்த கமெண்ட் காதில் விழவில்லை. சரி காது கேட்காமல் சாலையில் நான் போகும் வேகத்திற்கு இனி எனக்கு சீக்கிரம் சங்கு தான் என்பதை உணர்ந்து, என் கணவரிடம் அவரின் ‘visiting card’ ஒன்று வேண்டும் என்று கேட்டேன், அவரோ “இத்தனை நாள் இல்லாமல் ஏன் இன்று மட்டும் கேட்கிறாய்? “ என்றார். நானும் இதுநாள் வரையில் தினமும் வீட்டிற்கு வந்துவிடுவேன் என்ற நம்பிக்கை இருந்தது, இன்று இந்த Hel(l)met என்னை திரும்பி வீட்டிற்கு கொண்டுவரும் என்ற நம்பிக்கை இல்லை. அனாதையாக சாலையில் கிடக்காமல், உடனே உங்களுக்கு தகவல் சொல்லுவார்கள் அல்லவா?.. என்று புத்திசாலித்தனமாக பதில் சொன்னேன். அவரும் என்னுடைய புத்திசாலி தனத்தை மெச்சி, visiting card’ கொடுத்தார்.
சரி, முதலில் Hel(l)met நன்மையை பார்க்கலாம் :-
1. வேகமாக செல்லும் பழக்கம் இருப்பதால், காற்றின் வேகம் தாங்காமல் கண்களிலிருந்து தண்ணீர் வரும். Hel(l)met டினால் அந்த பிரச்ச்னை இல்லாமல் இருந்தது.
இந்த ஒன்றை தவிர நான் நன்மையாக எதையும் உணரவில்லை
சரி, இப்போது Hel(l)met ட்டினால் அனுபவித்த பிரச்சனைக்கு வருவோம்.
1. அணிந்தவுடன் காது சரியாக கேட்கவில்லை. அதனால் அக்கம் பக்கம் வரும் வாகனங்களின் சத்தம் கேட்கவேயில்லை.
2. வண்டி ஓட்டும் போது ஒரு மயான அமைதி. எனக்கு சந்தேகம், நாம் சென்னை சாலையில் தான் வண்டி ஓட்டுகிறோமா?
3. அதிகமான கணம், முன்னரே தலைகணம் அதிகம் அதனுடன் இதுவும் சேர்ந்து., காலையிலேயே தலைபாரமாக இருந்தது.
4. எல்லோரும் (பெண்கள்) எதையோ சுற்றி சுற்றி உடம்பை மறைத்து (வெயிலுக்காக) வருகிறார்களே நாமும் அப்படி செய்வோம் என்று ஒரு பழைய துப்பட்டாவை தலையில் சுற்றி Hel(l)met ஐ அணிந்ததால், இந்த துணி என்னவோ ராஜா , ராணி க்கு எல்லாம் பின்னால் ஒரு அங்கி பறக்குமே அதுபோல் பறந்து வந்தது. அதனால், நிறைய பேர் என்னை திரும்பி திரும்பி பார்த்தார்கள்.
5. நடுநடுவே காற்றில் விலகும் என்னுடைய உடையை சரிப்பார்க்க/சரி செய்துக்கொள்ள முடியவில்லை.
6. சிக்னலில் நிற்கும் போது, பின்னால் வந்து நிற்கும் வண்டிகளின் சத்தத்தை உணரமுடியாமல், இன்றே ஒரு சைக்கிள், ஒரு ஆட்டோ பின்னாலிருந்து என் வண்டியை மோதின.. அவர்கள் மோதின பிறகு தான் திரும்பி பார்த்து கொஞ்சம் முன்னால் சென்றேன்.
7. எல்லாவற்றிக்கும் மேல், 60- 70 கிமி வேகத்தில் செல்லும் நான் 30-40 கிமி வேகத்தில் சென்றதால் என்னுடைய பயண நேரம் அதிகமானது.
8. என்னுடைய black bird (Honda Activa) முன்னமே சத்தமில்லாமல் ஓடும்.. இப்போது ஓடுகிறதா நின்றுவிட்டதா என ஒன்றுமே தெரியவில்லை.
9.அலுவலகத்திற்கு சென்று Hel(l)met ஐ கழட்டியவுடன், தலை எல்லாம் கலைந்துவிட்டது. அலுவலகத்தில் உள்ளே நுழைந்ததும் என் தலைவிரி கோலத்தை பார்த்து சிலர் பயந்து அலறினர்.
ஒரு சாதாரண Hel(l)met ட்டினால் ஒரு மனுஷிக்கு இத்தனை பிரச்சனையா?. படிக்கும் நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள். தயவு செய்து, என் உயிர் மேல் இரக்கம் கொண்டு, என்னுடைய பிரச்சனைகளை எப்படி சரிசெய்து கொள்வது என்று சொல்லவும்.
அணில் குட்டி அனிதா:- கவி.. உங்களுக்கு தான் தலையில ஒன்னுமே இல்லையே..... இல்லாத ஒன்னுக்கு எதுக்கு இத்தனை சிரமம்/பாதுகாப்பு?. ஏதோ தலையில இருக்கறவங்க தலைய பாதுகாக்கனும்னு நினைப்பாங்க.. உங்களுக்கு அவசியமே இல்ல..... ஏதோ இருக்கறவங்க சொன்ன கேட்டுக்கோங்க.......
[மக்களா.. என்னை கவிக்கிட்ட இருந்து காப்பாதுங்க...... நீங்க என்ன நினைக்கறீங்களோ..... அதை தான் நான் சொல்லியிருக்கேன்.... அதனால என்னை காப்பாத்துங்க..........]
பீட்டர் தாத்ஸ் :- Many people have a good aim in life, but for some reason they never pull the trigger.
Labels: பழம்-நீ 56 Comments
நிழலாக தொடரும் நிலவு
டூ விலரிலிருந்து இறங்கிய அனுஷாவின் முகத்தில் சோகம் அப்பி கிடந்தது. ரமேஷ் இடம் எதுவும் பேசாமல், தளர்ந்த நடையுடன் வீட்டை நோக்கி நடந்தாள்...
ரமேஷ் வண்டியை பார்க் செய்து கொண்டே அவளையே பார்த்தான்...
அவள் திரும்பவில்லை......
பெருமூச்சுடன் தெருவிலேயே சிறுது நேரம் நின்றுவிட்டு.....பேசித்தானே ஆகவேண்டும்.. என்று வீட்டுக்குள் நுழைந்த ரமேஷின் முகம் இறுகி, சிவந்து கிடந்தது.
அனுஷா...நேரே ரூமுக்குள் சென்று ஹேன்ட் பேகை வைத்துவிட்டு, அங்கிருந்தே குரல் கொடுத்தாள்.. “அம்மா.. சூடா காஃபி தரியா.. ரமேஷ்’சும் வராரு அவருக்கும் சேர்த்து போடு..”
ரமேஷ் கேட்டுக்கொண்டே ஹால் சோபாவில் சோர்வாக உட்கார்ந்தான்......ஏன் இந்த பொண்ணு இப்படி நம்மை இம்சை கொடுக்கிறா......?!! மனசுக்குள் பேசிக்கொண்டான்.
-------------------------------------------------------------------------------
அது ஒரு முன்று அறைகள் அட்டேச்ட் டாய்லெட் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு, அனுஷா வீட்டையும் சேர்த்து மொத்தம் 2 வீடுகள் ஒரு தளத்தில் இருந்தன, மொத்தம் 8 வீடுகள். இவர்கள் முதல் தளத்தில் இரண்டாவது வீட்டில் இருந்தனர்.
மூன்று அறைகளில் ஒன்று அனுஷா’வுடையது, மற்றதில் ஒன்றில் அவளின் அண்ணன் சந்துரூ’ வும் இன்னொன்றில் அவளின் அம்மா பார்வதியும் இருந்தனர்.
இதை தவிர ஒரு டைனிங் அட்டேச்ட் மெயின் ஹால், கிட்சென், ஒரு சின்ன சாமி அறை, காமன் டாய்லட், காற்றோட்டமான தெருவை பார்த்த பால்கனி.
--------------------------------------------------------------------------------
முகம் கழுவி துடைத்துக்கொண்டே ரூமை விட்டு வந்த அனுஷா.. ரமேஷை பார்த்தாள்.....” என்ன மனசுக்குள்ளையே திட்டறீங்களா?.. ரூம்ல டவல் வச்சி இருக்கேன்.. முகம் கழிவிட்டு வாங்க..” புன்முறவலோடு கிட்சென்க்குள் சென்றுவிட்டாள்.
கிட்சென்னில் பார்வதியம்மா காப்பியை ஆற்றிக்கொண்டே “என்னடி..சண்டையா?..”
“இல்லமா.. கல்யாணம் பத்தி பேசவேண்டாம்னு சொல்றேன் திருப்பி திருப்பி அதை பத்தியே பேசி...............................வேற ஒன்னும் இல்ல............”
ரமேஷ்................... “தோசை செய்யறேன்.. தொட்டக்கறத்துக்கு என்ன வேணும்.. சொல்லுங்க....”அனுஷா கிட்சனிலிருந்து குரல் கொடுத்தாள்.
“இல்ல காப்பி போதும்........ நான் கிளம்பறேன்.. மீனு..வெயிட் பண்ணுவா..”
கிட்சென்லிருந்து எட்டி ரமேஷை பார்த்தாள்.....”எப்படியும் நீங்க வீட்டுக்கு போக இரண்டு மணி நேரம் ஆகும், அதுவரைக்கும் பசிதாங்க மாட்டீங்க.. சாப்பிட்டுட்டு போங்க.....”
“ஏண்டி ! ஒன்னுமே நடக்காதது மாதிரி இப்படியே எவ்வளவு நாள் நீ இருக்க போற....”. ரமேஷ் குரலை உயர்த்தி கத்தினான்..
“கதவு திறந்து இருக்கு ரமேஷ்”..............அனுஷா திறந்திருந்த கதவை கண்களால் சுட்டி காட்டினாள்.
ரமேஷ் வேகமாக எழுந்து..கதவை அடித்து சாத்தினான்..
“ஆண்ட்டி..! அவ நடந்துகறதையும் பேசறதையும் பாத்திங்களா.. இவளால நான் தினம் தினம் சாகறேன்.. கொஞ்சமாவது என்னைப்பத்தி நினைக்கறாளா..? இவள பாக்க பாக்க எனக்கு ஏன் நான் உயிரோட இருக்கேன்னு தோனுது.. “
“இப்பத்தான் மீனு வெயிட் பண்ணுவா’ ன்னு சொன்னீங்க.. அதுக்குள்ள சாகறத பத்தி பேசறீங்க..?!! “ அனுஷா சிரித்தாள்..
“ஏண்டி என்னை இப்படி கொல்ற.....”
“மீனு மட்டும் இல்ல.. இப்ப குட்டி ரமேஷ் வேற வெயிட்டிங்........” .அனுஷா சந்தோஷத்துடன் சொன்னாள்.
அதிர்ச்சியான பார்வதியம்மா இவளை உள்ளே இழுத்தார்..... “அனு..நெஜமாவா?.. என்னடி சொல்ற..?? “
“ஆமாம்மா.. வரும் போது தான் சொன்னாரு..........”
“என்னடி இப்படி செய்துட்டாரு...... இனிமே என்னடி பண்றது....” பார்வதியம்மா குரலில் கவலை தோய்ந்து இருந்தது.
“இதுக்கு முன்னாடி மட்டும் நாம என்ன செய்ய முடிஞ்சிது .............??”
பார்வதியம்மா’வும், அனுஷாவும் கிட்செனை விட்டு வெளியில் வந்தார்கள்,
அனுஷாவிடமிருந்து காப்பியை வாங்கி கொண்ட ரமேஷ், ஆண்ட்டி என்ன கேட்க போகிறார்களோ என்று அவரின் முகத்தையே பார்த்தான்.
“என்ன ரமேஷ், அனு சொல்றது...............”பார்வதியம்மா இழுத்தார்கள்..
“ஆமா..ஆண்ட்டி!................. மீனு மாசமா இருக்கா.. நெத்திக்கு தான் கன்ஃபார்ம் ஆச்சி........”
“என்ன ரமேஷ்..... நீங்க சொன்னது எல்லாம் என்ன ஆச்சி....” .கவலையுடன் பார்வதியம்மா கேட்க..........
........................................ரமேஷ் மெளனம் சாதித்தான்....................
அனுஷா இடைமறித்து.. “அம்மா... என்னமா நீ?.............விடு..விடு அவரை எதுவும் கேட்காதே ..... ரமேஷ் கேட்டேன் இல்ல.. தொட்டுகறத்துக்கு என்ன வேணும்..”
“ஏதாவது செய்...................”
பார்வதியம்மா.. அவருடைய ரூம்மிற்குள் சென்றுவிட..அனுஷா. .டிபன் செய்ய கிட்சென்க்குள் சென்றாள்.
ரமேஷ்ஷும் பின் தொடர்ந்தான்....
“அனு.!. ஏன் அனு நீ கூட என்னை புரிஞ்சிகலையா? “
“ம்ம்..நல்ல புரிஞ்சிக்கிட்டேன்..........அதான்...மீனா மாசமா இருக்காங்ளே..............”
“அனு..அது.. வந்து..............கல்யாணம் ஆன நடக்கற ஒரு சாதாரண விஷயம்.... “
“ஓ................சாதாரண விஷயம்.........” அனுஷா கரகரத்த குரலில் இழுத்தாள்..
“அனு..............”
“ப்ளீஸ்...ரமேஷ்....நாம இதை பத்தி பேச வேண்டாம் நீங்க சாப்பிட்டுட்டு கிளம்புங்க..”
“அனு.......................”
“ஹால்’ல போய் உட்காருங்க.. வாங்க..இங்க..” விடுவிடுவென்று ஹாலுக்கு அவனை இழுத்து வந்துவிட்டு, டிவி யை ஆன் செய்து..... ரிமோட்டை அவன் கையில் கொடுத்துவிட்டு கிட்சனுக்குள் சென்றுவிட்டாள்.
ரமேஷ், டிவியை ஆஃப் செய்துவிட்டு திரும்பவும் கிட்சனுக்கு வந்தான்......
“அனு.............................”
அனுஷா தேங்காயை சிறு துண்டுகளாய் வெட்டிக்கொண்டே”............ம்ம்....”
“என்னை நீயும் புரிஞ்சிக்கலையா? “
நிமிர்ந்து............அவனை நேராக பார்த்தாள்................
அவளின் பார்வையை சந்திக்க முடியாமல்.....முகத்தை கவிழ்த்தான் ரமேஷ்...
திரும்ப தேங்காய் வெட்டுவதை தொடர்ந்த அனுஷா.. “ரமேஷ்..இப்ப புரியுதா.. என்னை உங்களால நேராக்கூட பாக்க முடியல..........நீங்க என்க்கிட்ட இப்படி இருக்கனும்னு நான் நினைக்கல...... உங்களை இப்படி பார்க்கவும் பிடிக்கல.....கல்யாணம் ஆயிடுத்து, இப்ப குழந்தையையும் வர போகுது..... சந்தோஷமா இருங்க..
.............................
“என்னை விட்டுடுங்க.. நான் இப்படியே இருக்கேன்.. இன்னொருத்தர கல்யாணம் செய்துக்கிட்டு, நிச்சயமா...புள்ள எல்லாம் என்னால பெத்துக்க முடியாது...........உங்களுக்கு கல்யாணம் ஆகி 4 மாசம் ஆச்சி..... நான் நல்லாத்தானே இருக்கேன்.. அப்படியே எப்பவும் என்னால இருக்க முடியும்..”
“அனு.....அறிவில்லாம பேசாத.. நீ இப்படி இருந்தா நான் எப்படி நிம்மதியா இருப்பேன் சொல்லு.. எனக்காக எனக்காக ன்னு சொல்ற.. என்னை நிம்மதியா இருக்க விட மாட்டியா? “
திரும்பி ரமேஷ்ஷை உற்றுப்பார்த்தாள்...... “எது உங்களுக்கு நிம்மதி..... நான் கல்யாணம் செய்துக்கறதா?.. ஏன் இத்தன சுயநலமா இருக்கீங்க..? நீங்க கல்யாணம் செய்துக்கிட்டதால நான் நிம்மதி இல்லாம இருக்கேனே..அது தெரியலையா உங்களுக்கு?................”
ரமேஷ்ஷின் செல் சினுங்கிது........
நம்பரை பார்த்துவிட்டு, போனை ஆன் செய்து காதில் வைத்தான்.. இறுக்கமான குரலில்....”சொல்லு...........”
....................................
“இங்கத்தான் நுங்கபாக்கத்தில் இருக்கேன்.. “
....................................
“இன்னும் ஒன் ஹவர்ல அங்க இருப்பேன்....”
....................................
“அனுவை ட்ராப் பண்ண வந்தேன்..”
....................................
“இல்ல.....அவளுக்கு தனியா போக தெரியாது.. நான் தான் கூட்டிட்டு வரணும்... “
....................................
“அவளுக்கு என்னை விட்டா யாரும் இல்ல... “
.......................................
“இங்க பாரு மீனா..நீ சொல்ற படி எல்லாம் என்னால இருக்கமுடியாது............... நான் என்ன செய்யனும்னு நீ சொல்லாத.............”
அனுஷா.. வேகமாய் வந்து ரமேஷ்ஷின் செல்’லை பிடுங்கி கட் செய்தாள்.....
ரமேஷ் ! “உங்க மனசுல என்ன நெனச்சிக்கிட்டு இருக்கீங்க?.. என் மேல இருக்கற கோவத்தை ஏன் அவங்கக்கிட்ட காட்டறீங்க..? .அவங்க மாசமா இருக்காங்க. .இப்ப போயி அவங்க கிட்ட இப்படி எல்லாம் பேசிக்கிட்டு.....சாஃப்ட்டா பேசுங்க ப்ளீஸ்.....”
போன் திரும்பவும் சினுங்கியது...
“ம்ம்..சொல்லு மீனா........”
..................................
“இல்லமா........... நான் கட் பண்ணல...”
....................................
“தெரியலமா.. தானா தான் கட் ஆயிடுத்து..”
....................................
“இல்லமா நீ பண்ணுவேன்னு நான் பண்ணல...”
....................................
“இதோ..கிளம்பிட்டேன்.. வந்துடறேன்.. வீட்டுக்கு வந்து பேசறேன்.. “
....................................
“மீனு..... சொல்றேன் இல்ல....................வந்துடறேன்ன்னு சொல்றேன் இல்ல..”
....................................
“ரமேஷ் அனுஷாவை வேதனையோடு பார்த்துக்கொண்டே”
.......................
“ம்ம்..சரி’
.........................
“சரி..வரேன்”
...................................
“இல்ல...நீ தான் முக்கியம்”
............
“ம்ம்......... தெரியும்”
....................
“சரி”
..............
“இன்னையோட லாஸ்ட்”
......................
“சரி”
...........................
போனை நிறுத்திய போது அவன் கண்கள் கலங்கியிருந்தது.............. சிறிது நேர மெளனத்திற்கு பின்............
“அனு.......! தப்பு நான் மட்டும் பண்ணல .....என்னைக்கு நான் வேற ஒருத்திய கல்யாணம் பண்ணிக்கறேன்ன்னு சொன்னேனோ அன்னைக்கே நீ உறுதியா வேண்டாம்னு சொல்லியிருக்கனும்................. நீ மட்டும் அப்படி சொல்லியிருந்தா......”
இடைமறித்தாள் அனுஷா.. “சொல்லியிருந்தா..? நான் சொல்றத நீங்க கேட்டு உடனே.. என்னை கல்யாணம் செய்துக்கிட்டு இருப்பீங்க இல்ல............”
“இல்ல அனு.. வேற ஒருத்திய கல்யாணம் செய்துக்கொள்ளாமல் இருந்து இருப்பேன்.........”
“பழசை பேசி உங்கள் டைம்யும் வீணாக்காதீங்க என்னோட டைம்யும் வீணாக்காதீங்க.. இத பத்தி நிறைய நாம பேசிட்டோம்.... அதுவும் மீனா மாசமா இருக்கும் போது.. இப்ப அதை பேசி ஒரு பிரயோசனமும் இல்ல..........”
சரி.. ரமேஷ், .”....இன்னொரு விஷயம்............நாளையிலிருந்து நீங்க வரவேண்டாம்..நான் தனியா வர பழகிக்கிறேன்.. முடிஞ்சா வண்டி வாங்கிக்கிறேன்.........”
ரமேஷ் அதிர்ந்தான்...........”அனு!! .....ஏன்??...........உன்னை தனியா எல்லாம் விட முடியாது.............. .”
“விடனும்.....”
“முடியாது அனு.. நான் மீனாவை சமாளிச்சிக்கிறேன்.......”
“வேணாம்.......ரமேஷ். தனியா வர நான் பழகித்தான் ஆகனும் .....வரவேண்டாம்னா வேணாம்..”
“இல்ல நான் வருவேன்......................”
திரும்ப திரும்ப பேச விரும்பாமல், அனுஷா..டிபனை டைனிங்க்கு கொண்டு சென்றாள்.
ரமேஷ்.......................... ! “சாப்பிட வாங்க”. ........
முறைத்துக்கொண்டே வந்தான்... அனுஷா வாயை திறக்கவில்லை..........மெளனமாக இருவரும் சாப்பிட்டார்கள்...............
ரமேஷ் கிளம்பினான்..... அனுவை பார்த்து...... “நீயும் எனக்கு செய்த ப்ராமிஸ் எல்லாம் மறந்துட்டு மாறிக்கிட்டே வர...................... செத்து போயிடுவேண்டி.. ‘
.......................... அனுஷா மெளனம் சாதித்தாள்
ரமேஷ்ஷின் சத்தத்திற்கு பார்வதியம்மா உள்ளிருந்து வந்தார்கள்.......’அனு..என்ன ஆச்சி..??..... ரமேஷ், நீங்க கிளம்புங்க.. அவ இப்படித்தான்னு உங்களுக்கு தெரியாதா? “
ரமேஷ்.....”டேக் கேர்.............. மீனாக்கிட்ட பிரச்சனை எதுவும் வேணாம்.. திச் ஈஸ் யுவர் ப்ராமிஸ் ஆன் மீ............” .அனுஷா அவன் கண்களை பார்த்து ஒவ்வொரு வார்தையாக சொன்னாள்
....................... ரமேஷ் அனுஷாவின் பார்வையை தவிர்த்து..........................”ஆண்ட்டி வரேன்.................”
“வரவேண்டாம்னு சொன்னேன்............” அனுஷா வார்த்தைகளுக்கு அழுத்தம் கொடுத்தாள்..
‘வருவேன்...................................” ரமேஷ்ஷும் அதே அழுத்தத்தில் சொல்லிவிட்டு சென்றான்........
நிழல் தொடரும்....................
Labels: கதை 5 Comments
கலைஞர் குடும்பம் - பாருங்க தெளிவாயிடுவீங்க!
அணில் குட்டி அனிதா:- பாருங்க பாருங்க.. எவ்வளவு Clear ஆ படம் போட்டு காட்டி இருக்காங்க. .நம்ப நண்பர்கள்..
கவிதாக்கு நேத்திக்கு ஈமெயில்ல வந்துதுங்க.. நான் சுட்டுட்டேன்.. :)))
படத்தை கிளுக்குங்க...பெருசா தெரியும்..
பீட்டர் தாத்ஸ் :- Team work is working together even when apart
Labels: அணில் குட்டி 8 Comments
கேப்பங்கஞ்சி with கவிதா 'வுடன் - நாகை சிவா
அணில் "தெம்புடன்" ஆரம்பிச்சி, தனியா போயிடுத்து, எனக்கு கொஞ்சம் நிம்மதியே.. இல்லையென்றால், நடு நடுவே நக்கல் செய்து என்னை எரிச்சல் செய்து கொண்டு இருக்கும்.
இன்று நம்முடன், கேப்பங்கஞ்சி' யை குடிக்க வந்து இருப்பவர், அணிலிடமிருந்து தப்பத்து போன சிவாவே!!.. தப்பித்தவரை தடுத்து நிறுத்தி, கேப்பங்கஞ்சி' க்கு அழைத்து வந்துள்ளேன்.
வாயை புடுங்கற ரவுண்டு:-
கவிதா:- வாங்க சிவா.. எப்படி இருக்கீங்க..?
நல்லா இருக்கேன் கவிதா, அது என்ன வாய புடுங்குற ரவுண்டு.... வாயில் இருந்து வார்த்தைகளை தானே புடுங்குறீங்க. அப்ப அது வார்த்தை புடுங்குற ரவுண்டு தானே!
கவிதா:- உங்களுடைய பதிவில் எல்லா விஷயங்களையும் கலந்து கட்டி எழுதறீங்க, ரொம்ப சீரியஸான விஷயத்தை கூட சாதாரணமாக சொல்லிடறீங்க..எப்படி இது? குறிப்பா எனக்கு எல்லாம் இப்படி சுட்டு போட்டாலும் வராது
இது நக்கலா, பாராட்டானு எனக்கு தெரியல. எந்த ஒரு விசயத்தையும் ஒழுங்கா எழுதுவது இல்லை, நாய் வாய் வைத்த மாதிரி எல்லாத்திலும் வாய் வைக்குறேன்னு சொல்ல வறீங்க அப்படி தானே? எந்த விசயத்தையும் சீரியஸா எடுத்துப்பது இல்லை, அதான் சாதாரணமாக வந்து விடுகிறது, போல. உங்களுக்கு மட்டும் இல்லை, யாருக்குமே சு(ட்)டு போட்டா வராது. தோணுறதை எழுதுறேன், அதான் என் பதிவுகே ஏதோ சொல்கிறேன் என்று வைத்து உள்ளேன்.
கவிதா:- அடுத்து நகைசுவை, நக்கல்...நான் சொல்லவே வேணாம்.. கலக்கறீங்க.. குறிப்பா.. பதிவை விட பிற பதிவர்களின் எழுத்துக்களுக்கு உங்களின் மறுமொழிகள் நன்றாகவும், நகைசுவையாகவும் உள்ளது.. இதைப்பற்றி-
மகிழ்ச்சிங்க, ஆக என் பதிவுகள் சுமார்னு சொல்லிட்டீங்க. அடுத்தவர்கள் பதிவில் போடும் போது நம் மறுமொழி அப்பதிவரையோ, மற்ற பதிவர்களையோ ஒரு புன்முறுவல் பூக்க வேண்டும் என்ற ஆவல் காரணமாக இருக்கலாம்.
கவிதா:- நிறைய பதிவர்களிடம் கேட்ட கேள்வி, இருந்தாலும் உங்களிடம் கேட்டு, கிளர ஆசை. MNC ல வேலை செய்கிற நான் இந்த கேள்வியை கேட்க கூடாதுன்னு நீங்க சொல்லலாம், ஆனால் அதற்கு சரியான காரணத்தை பிறகு சொல்லுகிறேன். கலாம் அவர்கள் இந்தியா இளைஞர்கள் கையில் இருக்கின்றது என்று பெரும் நம்பிக்கையில் இருக்கிறார், ஆனால் இளைஞர்கள் நம்பிக்கை கனவுகளோ படித்துமுடித்தவுடன் வெளிநாடு சென்று விட வேண்டும் என்பதே.. ஏன்? பணம் சம்பாதிக்க என்ற பதிலை தவிர வேறு சொல்லுங்கள். பணம் சம்பாதிக்க இங்கேயே நிறைய வழிகள் உள்ளன. (நேர்மையாக)
நீங்க என்ன காரணம் வச்சு இருக்கீங்கனு எனக்கு தெரியல. சொல்லுங்க பாக்கலாம். சரியா நேரடியாகவே பேசலாம்.
நம் நாட்டு இளைஞர்கள் வெளிநாடு போவதால் இந்தியாவிற்கு நட்டமா, லாபமா சொல்லுங்க? நட்டம் இல்லை என்று கூற வில்லை. அந்த நட்டத்தை ஈடு செய்யும் விதமாக லாபம் வருகிறது என்பது தான் உண்மை. உலக நாடுகள் பொருளாதார தடை விதித்த போது அதை தைரியமாக எதிர்த்த நிக்கும் துணிவை கொடுத்தது என். ஆர். ஐ. களை நம்பி தான். சிம்பிள் லாஜிக், உலகத்தில் இருக்குற அத்தனை கம்பெனியும் இந்தியாவில் தொழில் தொடங்க விட்டாச்சு. அவர்களுக்கு நம் மக்கள் உழைத்து கொடுத்து காசாக்கி அதை அவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்புவதை விட நாங்க இங்க இருந்து உழைத்து பணத்தை இந்தியாவிற்கு அனுப்புகிறோம். மருத்துவம், விஞ்ஞானிகள் பெரும் அளவில் வெளியெறுவது சிறிது வருத்தமான விசயம் தான். அதே போல பெரும்பாலோனார் சூழ்நிலையின் காரணமாக அங்கே தங்கி விடுவதிலும் எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை. ஆனால் இப்பொழுது நிலைமை மாறுகின்றது, நம் இளைஞர்கள் வெளிநாடு வாய்ப்புகளை மறுக்க தொடங்கி விட்டார்கள். அவ்வளவு ஏன் ஆன் சைட்டை மறுக்கும் நண்பர்கள் எனக்கு பலர் இருக்காங்க. நான் போனதுக்கு காரணம் என் குடும்பத்தின் நிலை போதுமான அளவில் இருந்தாலும் என் ஜெனேசரனில் இன்னும் ஒரு அளவு மேலே உயர்த்த வேண்டும் என்ற சுயநலத்தால் தான். எனக்கு இருக்கும் கனவுகளை நிறைவேற்றுவதற்குகான பொருளையும், அனுபவத்தையும் சேர்க்கவும் தான். அங்கு நம் மக்கம் போவதற்கு 90% பணம் என்பது தான் துணிவு. ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும், எங்கு இருந்தாலும் நாங்கள் இந்தியர்கள், இந்தியாவை பற்றி தான் எங்கள் எண்ணம் இருக்கும். விரிவாக பேச வேண்டிய விசயம், பேசலாம் எதிர்காலத்தில்.
கவிதா:- பெண்கள் தினம், அன்னையர் தினம் போன்ற தினங்களுக்கு வாழ்த்துக்களும், தனி பதிவும் போட்ட வெகு சில தோழர்களில் நீங்களும் ஒருவர். ஏதாவது குறிப்பிட்ட காரணம் இருக்கிறதா?
அப்படி எல்லாம் இல்லை. அந்த சமயத்தில் பதிவு போட எண்ணம் தோன்றிய காரணத்தால் போட்டு இருக்கலாம். எனக்கு இது மாதிரி வகைப்படுத்தி எல்லாம் ரொம்ப யோசிக்க முடியாது. இப்படி போட்டுமே ஆண்கள் என்னும் மிருகம், MCP எல்லாம் சொல்லுறாங்க, போடலைனா என் நிலைமை ரொம்ப மோசம் தான் போல்.
கவிதா:- மனதை நடுங்க வைத்த சுனாமி, நாகை மாவட்டம் அதிகபட்சமாக தாக்கப்பட்டது, நாகை மாவட்ட இளைஞனாக வங்காள விரிகுடாவை திட்டியதை தவிர உங்களின் பங்களிப்பாக ஏதாவது செய்தீர்களா?
வங்காள விரிகுடாவை திட்டினேனா? கிடையவே கிடையாது, கோபம் ஏற்பட வில்லை, வருத்தம் உண்டு, உன்னையே எல்லாம் என்று இருந்தவர்களை உன்னால் எப்படி அழிக்க முடிகின்றது என்ற வருத்தம் தான். இந்த இயற்கையின் பேரழிவுக்கு ஒரு வகையில் நாமும் காரணமாக இருக்கிறோம் என்ற ஒரு எண்ணம் வந்ததும் உண்டு.
பங்களிப்பு என்று பார்த்தால் பெரிதா ஒன்னும் இல்லங்க. சுனாமி ஏற்பட்ட அன்றும், பிறகும் சுமார் 70 % மேல் மக்கள் ஊரை காலி செய்து போன போதும் என்ன ஆனாலும் இங்கு தான் என்று உறுதியாக அங்கு தங்கியதை சொல்லாம். முதலில் சுயநலத்துடன் நம் குடும்பத்திற்கு ஒன்றும் ஆக வில்லை என்று தெளிவான பிறகு நண்பர்கள் நல்லா இருக்கார்களா என்று பார்க்க விரைந்தோம். சில நண்பர்களுக்கு உதவினோம் பணத்தால், உடையால், உணவால், மனத்தால், பொருளால். உதவிகள், ராணுவம் அனைத்தும் விரைவில் வந்ததால் எங்கள் உதவி உயிர் நீத்தோர் உடல்களை அகற்ற அவ்வளவாக தேவைப்பட வில்லை. வெளி ஊர், மாநிலம், நாடு போன்ற இடங்களில் வந்தவர்களுக்கு எங்களால் முடிந்த அளவு சரியான தகவல், போக வேண்டிய இடத்திற்கு உதவி, தங்க உதவி, வரும் பொருள் உதவிகளை கலெக்டர், டி.ஆர்.ஒ போன்ற அரசு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சரியான இடத்தில் சேர்ப்பது போன்ற பங்களிப்பை மற்றும் தான் வழங்க முடிந்தது. வெளி நண்பர்கள் என்னை தொடர்புக் கொண்டு உதவி புரிய முன்வந்ததும் தேவைக்கு அதிகமாக நாகைக்கு உதவி வந்து சேர்ந்ததால் முதல்வர் நிவாரண நிதிக்கு திசை திருப்பி விட்டேன். பதற்றம், மனதளவில் ஏற்பட்ட அழுத்தம், தெளிவு இல்லாமை போன்றவற்றால் சரியான பங்களிப்பை அளிக்கவில்லை என்ற குற்ற உணர்ச்சி எனக்கு இன்னும் உண்டு.
கவிதா:- தமிழ்மணம், நாம் எல்லோரும் நண்பர்களாக ஆன இடம், ஆனால் அதிகமான அரசியல் சாதி, மத சண்டைகள், பெண்களை குறிவைத்து அசிங்கப்டுத்தும் ஒரு கும்பல், ஒருவரின் எழுத்தையும், சிந்தனையையும் முடிந்தவரை விமர்சனம் செய்யும் பதிவுகள் அதிகமாக உள்ளன. மாற்றம் வேண்டும் என்றால், என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்கள்.
ஒன்னும் பெரிதாக செய்ய வேண்டாம், கண்டு கொள்ளாமல் இருங்கள், நேரமும், பொறுமையும் இருந்தால் எதிர்த்து குரல் கொடுங்கள். நீங்கள் சொன்னவர்கள் பற்றி ஒன்றே ஒன்று தான் - அவர்கள் தானாக திருந்தினால் தான் உண்டு. த.ம. தற்சமயம் மேற்கொண்டு இருக்கும், சில நடவடிக்கைகள் பயன் தரும் என்று எண்ணுகிறேன்.
கவிதா:- திரைவிமர்சனம் நிறைய எழுதறீங்க. தேவையா?..
தேவை, தேவையில்லை அப்படினு பகுத்தறிய ஆரம்பித்தால் நான் எல்லாம் பதிவே போட முடியாது. நான் பெரும்பாலும் நல்ல தமிழ் படங்களுக்கு விமர்சனம் எழுதுவது இல்லை. நல்ல படம் வருதா என்று கேள்வி எழுப்பக் கூடாது. மொழி போன்ற நடுத்தர வகைப் படங்களையே தலையில் வைத்து கொண்டாடும் நிலைமையில் இருக்கிறோம், சரி இதை அப்பாலிக்கா பாக்கலாம். நான் பார்த்து நொந்த படங்களுக்கு தான் விமர்சனம் எழுதி வருகிறேன். நிறையாவா போட்டு இருக்கேன்? தமிழ் படங்களுக்கு ஒரு 4 விமர்சன பதிவு எழுதி இருக்கேன், ஒரு பதிவு ஆங்கில திரைப்படங்களுக்காக விமர்சனம் எழுதி இருக்கேன், அம்புட்டு தாங்க. என்ன பண்ணுறது, சினிமாவை கண்டே வளர்ந்த மற்றும் ஒரு தமிழன் தானே நானும். இருந்தாலும், முடிந்த அளவு குறைத்துக் கொள்ள முயல்கின்றேன்.
கவிதா:- மொக்கை பதிவுகள் எழுதுவதோடு இல்லாமல், அனானிகளை அவிழ்த்து விட்டு ஆட்டம் போடும் பதிவர்களுக்கு உங்களின் நல்ல /சிறந்த ஆலோசனைகள் சில-
மொக்கை பதிவு என்பது அது ஒவ்வொரு பார்வையாளர்களின் பார்வை பொறுத்து உள்ளது. பதிவு போடுவது அவர் அவர்கள் விருப்பம், இதில் நாம் சொல்ல என்ன இருக்கு. மொக்கை பதிவை ரசிக்கவும் ஆட்கள் இருக்காங்களே. நானே ஒரு மொக்கை தானே! எல்லாரும் சீரியஸ் பதிவுகள் போட ஆரம்பித்து விட்டால் போர் அடிக்கும் பாருங்க.
அனானிகளை பற்றி சொல்ல ஒன்னும் இல்லை. சில சமயங்களில் அவர்கள் கமெண்ட் ரொம்ப அருமையாக இருக்கும். "அட" போட வைக்கும் ஆனால் இதையே அவர்களின் பெயர் போட்டு போட்டால் இன்னும் அருமையாக இருக்கும் என்பது என் எண்ணம். நான் அனானி ஆட்டங்களில் கலந்து கொண்டது இல்லை.
கவிதா:- தமிழ்மணத்தில் ஸ்டார்’ ஆன தகுதிகள் என்ன என்ன வேண்டும்?
இதை நீங்க விடவே மாட்டேன், அடம் பண்ணுறீங்களே... உங்களை சீக்கிரம் ஸ்டார் ஆக்க நான் பரிந்துரை செய்யுறேங்க போதுமா?
மற்றவர்களை பற்றி எனக்கு தெரியாது, தொடர்ந்து எழுதுங்கள். எல்லா பதிவுகளுக்கும் சென்று முடிந்த அளவு சென்று விவாதத்தில் கலந்து கொள்ளுங்கள். அவர்களே உங்களை ஒரு நாள் ஸ்டார் ஆக்குவார்கள். ஆனால் நிலைமை தற்பொழுது அப்படி இல்லை என்று தான் எனக்குப்படுகின்றது.
கவிதா:- மொழி’ (திரைப்படம் இல்லை) பற்றிய உங்களின் சிந்தனை மிக குறுகியதாக இருக்கிறது என நினைக்கிறேன். தமிழ் நாட்டை தவர இந்தி, பிற மாநிலங்களில் ஒரு பாடமாக உள்ளது. தமிழ்நாட்டில் இருக்கும் நாம் தான் இந்திய மொழிகளில் பொது மொழியாக உள்ள இந்தியை படிக்காமல், அடுத்த நாட்டுகாரின் மொழியான ஆங்கிலத்தை படித்து அதை வைத்து பிற மாநிலங்களிலும், பிற நாட்டிலும் காலம் கடத்துகிறோம். இது சரியா? இந்திய மொழியான இந்தியை நாம் கற்றுக்கொள்வதில் என்ன தவறு?.
உண்மை, ரொம்பவே குறுகியது தான். காரணம் பெரிசா ஏதும் இல்லை, ஆர்வம் இல்லை, அம்புட்டு தான். ஆனால் எனக்கு இந்தி தெரியாது என்பதை என் பலவீனமாக காட்ட முற்பட்டால் அதற்கு நான் ஆள் கிடையாது. இந்தி இந்தியாவின் தேசிய மொழி அப்படினு ஒரு பொய்யை திரும்ப திரும்ப சொல்லி உண்மையாக்கும் முயற்சி ரொம்ப நல்லாவே நடக்குது, இது தான் உண்மை என்று எண்ணம் ஏற்கனவே பெரும்பாலான வட இந்தியர்களுக்கு வந்து விட்டது. ஆனால் என்னை யார் கேட்டாலும் சலிக்காமல் அது உண்மை இல்லை என்று சொல்லுவேன். நீங்க எதை வைத்து பொதுவான மொழி என்று சொல்லுறீங்க, பொதுவாக ஆக்க முயற்சி எடுக்கும் மொழியாக வேண்டுமனால் கூறுங்கள். ஒரு மொழி வளர அடுத்த மொழியை அழிக்க கூடாது, ஆனால் இந்தியின் வளர்ச்சியை எடுத்துப் பார்த்தால் அதனால் அழிவுண்ட, அழிவை நோக்கி போய் கொண்டு இருக்கும் மொழிகள் அனேகம். இந்தியை தமிழகத்தில் எதிர்க்க காரணம், அந்த மொழியை செலுத்த முயலாமல், திணிக்க முயன்றது தான். திணிக்க முயன்றால் திமிற தான் தோன்றும், அது தான் நடந்து உள்ளது நம் தமிழகத்தில். பின் இதை அரசியல் ஆக்கி ஒரு விளையாட்டு விளையாடி விட்டார்கள் நம் வியாதிகள்.
வெள்ளைக்காரன் விட்டு போன கட்டமைப்பு போன்ற பலவற்றை பயன்படுத்தும் போது அந்நிய தேசத்தவரால் உருவாக்கப்பட்டதை நாம் உபயோகப்படுத்துகிறோமே என்று நினைத்தது உண்டா? அது போல தாங்க இதுவும். அந்த மொழியின் தேவை நமக்கு இருந்தது, தொடர்ந்து உபயோகப்படுத்துகிறோம். அவ்வளவு தான். அதும் இல்லாமல் ஆங்கிலத்தை வைத்து எல்லா நாட்டிலும் காலம் தள்ள முடியாது, ஆங்கிலமே புரியாத பல நாட்டு மக்கள் இருக்கிறார்கள். அங்க எல்லாம் நமக்கு சைக்கை பாஷை தான்.
கவிதா:- மனிதர்களை கடவுளாக ஆக்கும் நம்மை பற்றி- (நடிகர்கள், அரசியல் தலைவர், தலைவிகள், சாமியார்கள்..)
எனக்கு நம்பிக்கை இல்லை, நம்பிக்கை உள்ளவர்களை பற்றி சொல்ல ஒன்றும் இல்லை.சொல்லி தான் ஆகனும் என்றால் - " போய் புள்ளக் குட்டிகளை படிக்க வைங்கய்யா..." (அது சாமியார்களுக்கு).
கடவுள் இல்லை என்று சொன்ன பெரியாரையே கடவுளாக கும்பிடும் பகுத்தறிவு கூட்டத்தில் இருந்து வந்தவன் தான் நானும், ப்ரீயா விடுங்க.... ஆனால் என் லிஸ்டல நடிகர்கள், இன்றைய அரசியல் தலைவர்கள், தலைவிகள் சத்தியமா இல்லை. நான் சில இடங்களில் ரஜினியை தலைவர் என்று வளித்து இருக்கலாம், அது ஒரு ரசிகன் என்ற முறையில் மட்டுமே அவரை பின்பற்றுபவன் என்று இல்லை.
கவிதா:- சூடானில் பிடித்தது, நாமும் இப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தது-
இது வரை அப்படி ஏதும் தோன்றியது இல்லை. எப்படி எல்லாம் இருக்க கூடாது என்ற நினைத்த விசயங்கள் பல இருக்கு.
கவிதா:- வவாச’ வில் உங்களின் பங்களிப்பும், அதனால் உங்களுக்கு ஏற்படும் பயணும் என்ன?
பெரிதாக ஒன்றும் இல்லை.
சங்கத்து சிங்கங்களில் ஒருவன் என்று சொன்னால் பதிவுலகில் அனைவருக்கும் தெரியும்படியான விளம்பரம், அன்பான, பண்பான நண்பர்கள்.
ரவுண்டு கட்டி அடிக்கும் ரவுண்டு
கட்டி வச்சு வேற அடிப்பீங்களா, தாங்குவேனா?
1. பிடித்த பெண் பதிவர்கள்
ஒரு லிஸ்டே இருக்கு, அவை எல்லாம் நான் படிக்கும் பெண் பதிவர்கள். ஒவ்வொருவரும் ஒரு விதத்தில் ரசிக்க வைத்து உள்ளார்கள்.(தோடா, சினிமா ஹிரோயின் பேட்டி மாதிரி பதில் சொல்ல வேண்டியாதா இருக்கு, என்ன பண்றது, இல்லாட்டி வம்பாயிடுமே)
2. உங்களின் ‘அப்பா” என்றவுடன் உங்கள் நினைவுக்கு வருவது
எளிமை, பிடிவாதம், கோவம், அமைதி
3. உங்களுக்கு பிடித்த உங்களின் பதிவுகள்
எல்லாமே நான் பெற்றெடுத்த முத்துக்கள் தானே என்று சத்தியமா சொல்ல மாட்டேன். ஒசியில விளம்பரம் கொடுக்க சொல்லுறீங்க, விடுவேனா, இதோ
தேசியம் - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_15.html
அறிவியல் - http://tsivaram.blogspot.com/2006/11/1.html
அழகுக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html
மொக்கைக்கு -http://tsivaram.blogspot.com/2006/07/blog-post_20.html
சுவைக்கு - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_02.html
பக்தி - http://tsivaram.blogspot.com/2006/11/blog-post_04.html
சந்து கேப்ல சிந்து பாடுறது - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_24.html
குசும்புக்கு - http://tsivaram.blogspot.com/2006/08/blog-post_07.html,
நக்கலுக்கு - http://tsivaram.blogspot.com/2006/10/blog-post_09.html,
கோபத்திற்கு - http://tsivaram.blogspot.com/2006/05/blog-post.html
லொள்ளுக்கு - http://tsivaram.blogspot.com/2007/02/blog-post_20.html
4. பதிவுலகில் கற்றுக்கொண்டவை
எங்கு போனாலும் நாம் திருந்த மாட்டோம், அது போக, தமிழில் சரளமாக டைப் பண்ண, பலவற்றை தெரிந்துக் கொள்ள முயற்சிக்க வைத்தது, யோசிக்க வைத்தது.
5. உங்களின் தோழி’கள் பற்றி
உரிமையுடன் கடிந்து கொள்பவர்கள், எதையும் பகிர்ந்து கொள்பவர்கள், என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவர்கள், எனக்காக பலவற்றை செய்தவர்கள், செய்பவர்கள்.
6. வ.வா.ச சிங்கங்களை வரிசைப்படுத்துங்கள்
ஆங்கில அகர வரிசைப்படி
சொந்த பெயர்
பாலாஜி
தேவ்
இளா
சிபி
மோகன்
பாண்டி
ராம்
சிவா
புனை பெயர்
கச்சேரி தேவ்
ஜொள்ளு பாண்டி
கைப்புள்ள மோகன்
நாகை சிவா
ராயல் ராம்
தளபதி சிபி
வெட்டி பாலாஜி
விவசாயி இளா
வார்த்தைகளில்,
பாலாஜி - சுட்டிப்பயல்,
தேவ் - பக்குவமான ஒருங்கிணைப்பாளர்,
இளா - இன்"சீனியர்",
மோகன் - மெத்த படித்த மேதை,
பாண்டி - எனக்காக ஸ்கூல்களை விட்டு கொடுத்து கல்லூரி வாசலுக்கு மாறிய பண்பாளர்,
சிபி - லொள்ளாணந்தா,
ராம் - சிணுங்கும் மதுரை தங்கம்.
7. உங்கள் சமையலில் உங்களுக்கு பிடித்தது /மற்றவர்களுக்கு பிடித்ததும் சொல்லலாம்
எனக்கு பிடித்தது இறா வறுவல், சிக்கன் 65, உ.கி. பொடிமாஸ், ரசம் இப்படினு சொல்லிக்கிட்டே போகலாம்.
மற்றவர்களுக்கு - இந்தியாவில் நான் சிக்கன் 65வும், இறாலும் தான் செய்வேன். இங்கன எதை சமைத்து போட்டாலும் கண்ணீர் மல்க(காரத்தினால்) நல்லா இருக்குனு சொல்லுறாங்க, ரொம்ப காய்ந்து போய் கிடக்குறாங்க போல. அதிலும் முட்டை குழம்பு, சாம்பார்னா பாத்திரத்தை மண்டிட்டு தான் மறு வேலை பாக்குறாங்க.
8. சாப்பாட்டை தவிர, வேறு எந்த விஷயங்களுக்கு, உங்கள் அம்மாவின் அருகாமை வேண்டும் என நினைப்பீர்கள்
திட்டுவதற்கு, மடியில் தலை வைத்து படுக்க, டிவி சீரியல்களை மாற்ற சண்டை போடுவதற்கு...
9. கலாம் அவர்களின் - பொன்மொழிகளில் உங்களுக்கு பிடித்தது
அவரின் பொன்மொழிகள் அனைத்தையும் நான் படித்தது இல்லை. அக்னி சிறகுகளில் இருந்து சில வைர வரிகளை வைத்து ஒரு பதிவு போட்டு இருக்கேன், அது http://tsivaram.blogspot.com/2006/11/blog-post.html
*** படித்த வரையில் தோல்விகளுக்கிடையே தான் வெற்றி இருக்கிறது.
குழப்பங்களுக்கிடையே தான் நம்பிக்கை இருக்கிறது.
பிரச்சனைகளுக்கிடையே தான் சத்தியம் இருக்கிறது.
*** எதை செய்தாலும் மனப்பூர்வமாக ஈடுபட்டு, அதில் உங்களின் அதிகபட்ச ஆர்வத்தையும் சக்தியையும் வெளிப்படுத்துங்கள். அது உங்களைச் சுற்றி அன்பையும், மகிழ்ச்சியையும் பரவச் செய்யும்.
10. ஜார்ஜ் புஷ்- ஐ நேராக பார்க்க நேர்ந்தால் என்ன கேட்க நினைப்பீர்கள்.?
கடன் கூட கேட்கலாம், ஆனா அதை விட முக்கியமான விசயம் இருப்பதால்,
உங்க பொண்ணுக்கு எப்ப மாப்பிள்ளை பாக்க போறீங்க?
இப்பனா நான் ரெடி
கொஞ்சம் லேட்டானா வெட்டி ரெடி
ரொம்ப லேட்டான பங்காளி ஷாம் ரெடி
கொஞ்சம் கன்சீடர் பண்ணுங்கனு கேட்ப்பேன்.
அட என்னங்க நீங்க, அவரு போய் நான் பாப்பதா, அந்த அளவுக்கு நான் இன்னும் மோசம் ஆகல, நாங்க எல்லாம் பாக்கெட்டில் நாலணா இருந்தாலே பெரிய ரவுடி, எங்கிட்ட போய்... போங்க போய் பொழப்ப பாருங்க....
கவிதா..! - இந்த கேத்து தான் ஆம்பிளைங்க சொத்தே!!!!!
Labels: கேப்பங்கஞ்சி 27 Comments
அழவைக்கும் சாலை ஓர மரங்கள்.....
முக்கிய பகுதிகளில் நெடுஞ்சாலைகளில் இருக்கும் மரங்களை இப்போது மிக வேகமாக அகற்றி வருகிறார்கள். அதுவும் மரங்கள் என்றால் இவை எல்லாம் வானுயர்ந்த மரங்கள். மழை, வெயில் இரண்டு காலங்களிலும் நமக்கு உதவுபவை.
ராஜ்பவன் அருகில், சர்தார் வல்லபாய் சாலையில் உள்ள மரங்கள் மிக வேகமாக அகற்றப்பட்டு விட்டன. நேற்று பார்த்த மரங்களை இன்று பார்க்க முடியாது..அவை இருந்த இடங்கள் வெறும் சிமெண்ட் பூசப்பட்ட சாலைகளாக மாறிவிடுகின்றன.
வெயில் காலங்களில் அந்த சாலையில் செல்லும் போது மிகவும் குளுமையாக இருக்கும். ஏன் சிறுது நேரம் வெயிலின் தாக்கத்திற்கு நின்று கூட போகலாம், மழை காலத்திலும் சரி இந்த மரங்களுக்கு கீழ் நின்று விட்டு செல்பவர்கள் பலர்.
ஹால்டா சிக்னலில் இருந்து, மத்யகைலாஷ் வரை உள்ள மரங்கள் அத்தனையும் ஒவ்வொன்றாக அகற்றப்பட்டுக்கொண்டே வருகின்றன. அதில் ஹால்டா’ அருகில் இருந்த எந்த ஒரு மரமும், சாலைக்கும், போக்குவரத்துக்கும் இடைஞ்சல் இல்லாமல் ஓரமாகத்தான் இருந்தன. அவற்றை ஏன் அகற்றினார்கள் என்ற கேள்விக்கு விடை இன்னமும் தெரியவில்லை. அதே போல், கோட்டூர் புரம் சாலையில் உள்ள மரங்களும் அகற்றப்பட்டு விட்டன. அந்த மரங்களால் போக்குவரத்துக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் தான் இருந்தது.
இந்த மரங்கள் அத்தனையும் அத்தனை உயரமாகவும், பருமனாகவும் வளர எத்தனை ஆண்டுகள் ஆகியிருக்குமோ தெரியவில்லை..ஆண்டுகள் 100 களை தாண்டி க்கூட இருக்கலாம். இப்படி வளர்ந்த மரங்களை வெகு எளிதாக போக்குவரத்துக்கு தொந்தரவு இல்லாத இடங்களில் கூட ஏன் அகற்றுகிறார்கள் என்பது புரியவில்லை.
2000 ஆம் ஆண்டு வேளச்சேரியில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாங்கி, அங்கு சாலையில் சில வேப்பமர கன்றுகளை நட்டு, இந்த வருடம், 2007 ல் அந்த மரங்கள் தெருவிளக்கை தொடும் அளவிற்கு உயரமாகி இருப்பினும், இன்னமும் அதன் பருமன் நான் ஒரு கையால் பிடிக்கும் அளவிற்கு தான் வளர்ந்திருக்கிறது. அதை பாதுகாத்து வளர்ப்பதற்க்குள் படாத பாடு பட்டுவிட்டேன் எனலாம். அது வளர்ந்து வேர் வீட்டு உள்ளே புகுந்து அடுக்குமாடி கட்டிடம் இடிந்து அவர்கள் தலையில் விழுந்து விடும் என்று அதை பிடுங்கி போட்ட அக்கம் பக்கத்தினரும் உண்டு. இன்று அவர்கள் வீட்டு இரு சக்கர வாகனம் இந்த மரங்களுக்கு அடியில் தான் நிறுத்திவிட்டு வருகிறார்கள்.
எங்கள் வீட்டு முன் இருக்கும் மரங்களின் வளர்ச்சியை பார்க்கும் போது, இப்போது வெட்டப்படும் மரங்களின் உயரத்தையும், பருமனையும் பார்த்து எனக்கு பிரம்மிப்பாக இருக்கிறது.. எத்தனை ஆண்டுகளாய் இந்த மரங்கள் பூத்து குலுங்கிக்கொண்டு இருந்தன இப்படி ஒரே நாளில் செத்து போகவா?..
இப்படி மரங்களை பார்த்து எல்லாம் அழுது கொண்டு இருக்கும் என்னை வீட்டில் மட்டும் இல்லை நண்பர்கள் கூட ஒரு மாதிரியாக தான் பார்க்கிறார்கள். நாட்டில் என்ன என்னவோ பெரிய விஷயங்கள் இருக்க ஒரு சாதாரண மரத்திற்காக இவள் அழுகிறாளே, புலம்புகிறாளே என்று நினைக்கிறார்கள்.
ஜி.என்.செட்டி சாலையில் மரங்களை அகற்றும் போது அங்கு இருந்த குழந்தைகள் அந்த மரங்களை கட்டியணைத்து வெட்ட விடாமல் செய்தார்களாம். அந்த குழந்தைகளை போன்று தான் எனக்கும் தோன்றும்..ஆனால் இப்படி தொலைவில் இருந்து அழும் போதே என்னை ஒரு மாதிரி பார்க்கும் ஆட்கள், மரத்தை கட்டிக்கொண்டு, அழுது வெட்டவிடாமல் செய்தால்..நிச்சயம் ஆஸ்பித்திரியில் கொண்டு சேர்த்து விடுவார்கள் என்று நினைக்கிறேன்..
அணில் குட்டி அனிதா:- வாவ்..!! கவி..சூப்பர் ஐடியாவா இருக்கு.!! சொல்லவே இல்ல?!! .ஆமா நீங்க எப்ப எந்த மரத்தை கட்டிக்க போறீங்கன்னு சொல்லுங்க..ரெடியா நான் ஆம்புலன்ஸ்’ ஓட காத்துக்கிட்டு இருக்கேன்..சரியா..
ம்ம்.. நீங்க எப்பவோ ஆஸ்பித்திரியில இருக்க வேண்டியவங்க.... நாட்டுல நடமாடிக்கிட்டு இருக்கீங்க என்ன செய்யறது.. எனக்கு தெரிஞ்ச.. இந்த விஷயம் ஊரு உலகத்துக்கு தெரியனும்னா.. நீங்க கண்டிப்பா ஏதாவது மரத்தை போய் கட்டிக்கோங்க..ப்ளீஸ்..............
பீட்டர் தாத்ஸ் :-Winners can tell you, where they are going, what they plan to do along the way and who will be sharing the adventure with them.
Labels: சமூகம் 14 Comments
தமிழ்மணம் மூலம் பெற்ற பரிசு -நன்றி தமிழி
நண்பர் தமிழி அவர்கள் நடத்திய தடாலடிப்போட்டி’யில் வெற்றி பெற்று, ரூ.500/- க்கான பரிசாக புத்தகங்கள் பெற்றேன்.
தமிழி அவர்கள் என்னுடைய அலுவலகத்திற்கு நேற்று நேரடியாக வந்து இந்த மூன்று பரிசு புத்தங்கங்களை (நான் விரும்பி கேட்ட புத்தங்களை) கொடுத்து சென்றார். அதன் மொத்த மதிப்பு ரூ.508/-
1. வைரமுத்து கவிதைகள்
2. மரப்பசு
3. விக்கரமாதித்தன் கதைகள்
தமிழி அவர்களுக்கு என்னுடைய நன்றிகள். தமிழ்மணம் மூலமே இந்த போட்டியில் நான் கலந்து கொண்டதால் , தமிழ்மணத்திற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.
எனக்கு ஓட்டு அளித்து பரிசுபெற செய்த அன்பு நெஞ்சங்களுக்கு என்னுடைய நன்றிகள்.
அணில்குட்டி அனிதா:- ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ப்பா!! தாங்கலடா சாமீயோவ்.. ஆமா கவிதா எத்தனை கள்ள ஓட்டு போட்டு இந்த புக்கை வாங்கனீங்கன்னு சபைல சொல்லனாலும், எனக்கு மட்டும் தனியா சொல்லுங்க..
பீட்டர் தாத்ஸ் :- Praise loudly and blame softly
அணில்குட்டி அனிதா:- அட...தாத்ஸ்..இன்னைக்கு என்ன தத்துவம் கவிதா’க்கு மட்டும் போல.. ம்ம்.. என்ன சொன்னாலும் அம்மணிய..திருத்த முடியாதே.......!!!
Labels: கதம்பம் 7 Comments
தெம்புடன்........! (தூங்குவோம்) - அணிலுடன் - நாகை புலி
தெம்புடன்......! (தூங்குவோம்) - என்ற புதிய பகுதி ஆரம்பிச்சி, தெம்புடன் தூங்கிகொண்டே நிறைய பேசலாம்னு இருக்கேன்.!!. அம்மணியோட "கேப்பங்கஞ்சி" எனக்கு போர் அடிக்குதுங்க! அம்மணிய இந்த புது கான்செப்ட் வச்சி அடக்கி வச்ச மாதிரியும் இருக்கும் இல்ல? !! அதனால, நானு தனியா ஆரம்பிச்சிட்டேனுங்க .. எல்லாருடைய ஆதரவும் எனக்கு இருக்கும்னு நினைக்கிறேன்... சரி எப்படி நான் பேச போறேன்னு கேட்டீங்கன்னா?..
ம்ம்..!! கொர்ர்ர்ர்ர்
ஹாங்... !! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
வெல்.. !! கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்..
எக்ஸ்லென்ட்!! கொர்ர்ர்ர்ர்ர்ர்
ஆங் அப்,..(புறம் ) கொர்ர்ர்ர்ர்ர்ர்.
நடுவுல பேசிக்கிட்டு இருக்கும் போதே நான் கொஞ்சம் வாய தொறந்துகிட்டு தூங்குவேன் .. யாரும் கண்டுக்காம ..பேசவந்தவங்க பேசினத மட்டும் நீங்க வாயதொறந்துக்கிட்டு படிக்கனும் .. சரி இதுல என்க்கிட்ட முதல்ல மாட்டியவரு, நம்ம "புராண்டற புலி" தாங்க.
சரி நம்ம தெம்புடன்......!(தூங்குவோம்) முதல் இன்டர்வியூவை ஆரம்பிப்போம்..
(*** இதுல பிராக்கிட்ல வரது எல்லாம் நீங்க fill பண்ணி படிச்சிக்கனும் நானு..பாதி பாதித்தான் பேசுவேன் நீங்க முழுசா நான் என்ன சொல்ல வந்தேன்னு தெரிஞ்சிக்கனும் சரியா ?! )
அணில்:- வாங்க பலி .. சாரி புலி.. அண்ணே !! How a(re) (u)?
என்னை பலி கொடுக்கனும் என்று முடிவு பண்ணிட்டு வந்த மாதிரி இருக்கே, அணிலு... நீ நம்ம பக்கம் தானே , இப்படி எல்லாம் பேச மாட்டியே. எங்கயோ சூது நடந்து இருக்க. உசாரா இருக்க வேண்டியது தான். ஆங்.. என்ன கேட்ட., சு(ம் )மா ரா இருக்கேன் சொன்னா வெட்டி சண்டைக்கு வருவான் , சூப்பராவும் இல்ல அதுனால சு(ம்)மாராவும் இல்லாம சூப்பராவும் இல்லாம "ஏதோ " கவிதா மாதிரி பெரியவங்க ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன் .
அணில்:- ம்ம்..good..........சொல்லுங்க .................................(கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
இவ்வளவு நேரம் சொன்னதை நீ அப்ப கேட்கலையா? ஆப்பை ஆப் பாயில் ஆக்கி சாப்பிட்டும் நமக்கே இந்த அணில் தண்ணீ காட்டுதே, ஒய் , நல்லா இருக்கேன், நல்லா இருக்கேன், நல்லாவே இருக்கேன்... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
அணில்:- உங்க ஸ்கூல் 'ல உங்க பேபி லவ்' பத்தி........................( கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
லவ்வா.....?? அந்த கொடுப்பினை எல்லாம் நமக்கு ஏது அணிலு .... அதும் இல்லாம நாம் எல்லாம் ஒன்றில் அவ்வளவு சீக்கிரம் கமிட் ஆவுற ஆளு கிடையாது. வாழ்க்கை பயணத்தில் போய் கிட்டே இருக்கும் போது பிக்கப் ஆகுறதை பிக்கப் பண்ணி போய்க்கிட்டே இருக்குற ஆளு.... பிக்கப் ஆனது ட்ராப் ஆனாலும் வருத்துப்படுற ஆளும் கிடையாது. ஒன்றை இழப்பது மற்றொன்றை பெறுவதற்காக தான் என்ற வாழ்க்கையின் தத்துவத்தை உண்ர்ந்தவன் நான். சோ, நோ பேபி லவ், பப்பி லவ்....
ஒகே..... (கொஞ்சம் காத கொண்டா, ஏய் அணில் உனக்கு கொஞ்சமாச்சும் ஏதும் இருக்கா, இப்படி சபையில் வச்சு கேட்டா எப்படி... அப்பால தனியா வா வகுப்புக்கு ஒன்னு இருக்கு சொல்லுறேன். அதுல பேபினு யாரும் இல்ல, புரியுதா.... அ....., சா....., நி.... இப்படினு பலது இருக்கு..... இது எல்லம் ஸ்கூல் மட்டும் ஒகே )
அணில்:- எக்ஸ்லென்ட்....... !! ம்ம்.........உங்க அம்மாக்கிட்ட நீங்க ரொம்ப............ பேசி ........... அடம்பிடிச்ச ஒரு ...day..... ஞாபகம் இருக்கா உங்க...(ளுக்கு).............. (கொர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்)
சரி போன பதிலுக்கு நீ எதுக்கு எக்ஸ்லென்ட்....... !! சொன்ன?? சரி வுடு..என்னவோ ஒரு மாதிரியாத்தான் பேசற இன்னைக்கு.. ஒன்னியும் புரியல..
என் அம்மாக்கிட்ட பெரிசா நான் ஏதும் அடம் பிடித்து சாதித்தாக ஞாபகம் இல்லை. நான் கேட்பதை பெரும்பாலும் மறுத்தது இல்லை. அவர்கள் மறுத்த எதையும் நான் அடம் பிடித்து சாதித்தது இல்லை. நாம் மறுக்குற மாதிரி எந்த விசயத்தையும் கேட்க மாட்டோம்ல.... எல்லாமே சின்ன சின்ன விசயமாக தான் இருக்கும், அப்பாக்கிட்ட ரெகமண்டு பண்ணற வேலை தான் பல தடவை நடக்கும்.
ரொம்ப பேசியது நிறைய இருக்கு. வெகுளியாக இன்னும் எவ்வளவு நாள் தான் இருப்பிங்க, சொந்தங்களை பற்றி, பிறர்காக வாழுவதை சற்றே மறந்து நமக்காக நமக்காகவே மட்டும் வாழ முயலுங்கள் என நிறைய பேசி இருக்கேன்.
அணில்:- வவாச - ல நீங்க என்ன செய் ..(யறீங்க?) (கொர்ர்ர்ர்ர்ர்)
இதுல எந்த உள்குத்தும் இல்லல , இல்ல நீ வேற இன்னிக்கு ஒரு மார்க்கமா இருக்க, அதுனால
* ஒரு வருத்தப்படாத வாலிபன் வ.வா.ச வில் இருப்பது தான் அவனுக்கும்(எனக்கு) அழகு, அந்த சங்கத்துக்கும் அழகு.
** தெரியலயே அணிலு தெரியலயே..... (இத யாரு மாதிரி படிக்கனும் என்று நான் சொல்லி மற்றவர்களுக்கு தெரிய வேண்டியது இல்லை, அவங்களே அவர மாதிரி படிச்சுப்பாங்க)
*** வ.வா.ச.வில் இருந்த ஐவரும், சிவா வா, வா, வ.வா.ச.விற்கு, ஐவருடன் சேர்ந்து ஆற்வர் ஆகலாம் என்றார்கள்.... வயதிலும் அனுபவத்திலும் மூத்த அந்த நல்லோர்கள் வார்த்தைக்கு தலைவணங்கி, நானும் போய் ஜோதியில் ஐக்கியம் ஆயிட்டேன்.
அணில் :- (ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் முழூசா தூங்கவிடாம.. பாதி..பரங்கிமலை ஜோதி’ ன்னு!! )
(என்னது பரங்கிமலை ஜோதியா, ஏய் அணில் உன் வயதுக்கு கேட்குற கேள்வியா இது, கவிதா வுக்கு தெரிஞ்சா உன்னை மிதிச்சே ஒட விடுவாங்க சொல்லிட்டேன்). திருவண்ணாமலை ஜோதி போல பிரகாசமாக எரியும் நகைச்சுவை ஜோதியில் கலந்து நான் ஜெகஜோதியாக ஜொலித்து கொண்டு இருக்கேன் சங்கத்தில்.
அணில்:- ஹான்.........வெல்...! so....you mean that “Jothi” Excellent !! Excellent !! அப்பு .....றம் நீங்க ரொம்ப சமத்து பிள்ளையாமே அப்படியா.. ? இல்ல.. அம்மாக்கிட்ட பேசும்போது சொன்( னாங்க)..... (கொர்ர்ர்ர்ர்ர்)
அம்மாக்கிட்ட மட்டும் தான் கேட்டீயா, அண்ணன், பன்னிக்குட்டி ராமசாமி, டாக்டர் ஐயா, சின்னய்யா, தோட்டவெட்டி, மூதறிஞர் தமிழன காவலர், தளபதி, அஞ்சாநெஞ்சன், பாசப்புயல், தோழர் சிறுத்தை இவங்ககிட்ட எல்லாம் கேட்கலையா ? கேளு அவங்களும் அதை தான் சொல்வார்கள். நான் அம்புட்டு சமத்து. அது போகட்டும் அது ஏன் அம்மாவை மட்டும் இங்கன குறிப்பிடுற , ஏற்கனவே எனக்கு இருக்கு ற முத்திரைகள் பத்தாதா, இன்னுமா.... தாங்குவேனா சொல்லு, எதையும் தாங்கும் நல்லவன் நீ நினைச்சா அதுக்கு நான் பொறுப்பாக முடியாத..... இதை இத்தோட விட்டுட்டூ.....
அணில்:- சரி..வெய்ட் .. நான் கொஞ்சம் தூங்கிட்டு திருப்பி வரேன் .இப்ப ஒரு குட்டி பிரேஏஏக்.!! (கொர்ர்ர்ர்ர்ர்)
என்னது கொஞ்சம் தூங்கிட்டு திருப்பி வறியா? இப்பவே எனக்கு மண்டபத்துல தனியா வர்காந்து புலம்புற மாதிரி தான் இருக்கு, இன்னமுமா.... வேணாம் அணிலு வேணாம்.... ஏதோ சொல்லிக்கிட்டு திரிஞ்சவனை இப்படி கண்டமெனிக்கு புலம்ப விடாதே, ஏதா இருந்தாலும் சீக்கிரம் கேட்டுட்டு என்னைய ஆள விடு.....
அணில்:- ஹான்..புலி ..அண்ணே.. ஏன் உங்க பேரு புலி'ன்னு இருக்கு.. ரசம்' ன உங்களுக்கு ரொம்ப புடிக்குமா.....?? (ஜோக்.. ப்பா சிரிங்க..ஹ ஹா ஹா..!!!!)
என்ன ஒரு தைரியம்..... புளியையும் புலியையும் ஒன்றுப்படுத்தி பார்ப்பதற்கு ..... சோழப் பரம்பரைக்கே ஏற்பட்ட அவமானம். நம் வலையுலகில் இருக்கும் சோழ குடி வழி வந்தவர்கள் கேட்டால் உன் கதி அதோ கதி தான்.
ஏய், மதி கெட்ட அணிலே, சொல்கிறேன் கேள்
சோழனின்
கொடி புலி,
இமயத்தில்
பறந்த கொடி புலி
வங்காளத்தின்
பெருமை புலி
இந்தியாவின்
கர்வம் புலி
வீரத்திற்கு
புலி
தீரத்திற்கு
புலி
பதுக்குவது
புலி
பாய்வது
புலி
மொத்ததில்
இது யாருக்கும் அஞ்சாத பாயும் புலி.
உஸ்ஸ்ஸ்
, அப்ப்பா....ஒரு சோடா சொல்லு......!!!
அணில்:- கொர்ர்ர்ர்ர்ர்..........
ஏலேய் , இம்புட்டு சத்ததுக்கும் நடுவில் தூக்குற.... நிறைய அரசியல் மீட்டிங் / கச்சேரி கலந்து இருப்பீயோ..... ஹெய்ய்ய்ய்ய்ய்
அணில்:- ஹோ..அயம் சாரி ..புலி அண்ணே are you still here? Well, I mean..நீங்க இங்க தான் இருக்கீ...(ங்களா?) கொர்ர்ர்ர்ர்ர்..........
தப்பு! இன்னமுமா இங்க இருக்கீங்கனு கேளு அணிலு.... உன்னையும் ஒரு விலங்கினமா மதிச்சு இம்புட்டு தூரம் வந்தா என்னை அசிங்கப்படுத்துனும் என்று முடிவு பண்ணி அதை செஞ்சும்புட்ட... திருப்தி தானே!
உன்னை விலைப்பேசி என் டோட்டல் இமெஜை டேமேஜ் பண்ணியவன்/ள் மட்டும் என்க்கிட்ட மாட்டினா பிராண்டி வச்சுடுவேன் சொல்லிட்டேன். உன்னைய பிராண்டின என் சோழ பரம்பரைக்கு இழுக்கு ஏற்ப்பட்டு விடும், வரலாற்றில் ஒரு கரும்புள்ளி ஏற்பட்டு விட கூடாது என்ற காரணத்துக்காக உன்னை விடுறேன். ஒடிப் போயிடு.... வேணாம் நானே கிளம்புறேன்.
அணில்:- ஹ்யோ..!! அண்ணே.. இருங்க அண்ணே........... இன்னும் நிறைய கேக்......(கனும்..!!..) கொர்ர்ர்ர்ர்ர்..........
Labels: அணில் குட்டி 16 Comments
உண்மைய சொன்னா யாரும் டென்ஷன் ஆகப்பிடாது!!
அணில் குட்டி அனிதா:- கவிதாவோட ஈமெயில்ல இந்த உண்மை வந்து இருக்குங்க.. பாருங்க நம்ம வடிவேலு அண்ணாச்சி எப்படி உன்மைய புட்டு புட்டு வைக்கறாருன்னு... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....
பீட்டர் தாத்ஸ் :- Take time to laugh; it is the music of the soul.
Labels: அணில் குட்டி 9 Comments
கவிதாவின் மற்ற ஐந்து முகங்கள்
நம்ம துர்கா என்னவோ என்னோட weird குணங்களை எழுத சொல்லி என்னை கூப்பிட்டு இருக்கிறார். ரொம்ப யோசிக்காம பட்டுன்னு எனக்கு தோன்றியதை..
அணில் குட்டி அனிதா:- அம்மணி hold hold......... என்ன உங்கள பத்தி நீங்களே சொல்லிக்க போறீங்களா?.. வூட்டுடுவனா..நானு.. மக்களே கேளுங்க..இவிங்கள பத்தி இவிங்களே சொல்லிக்கிட்டா.. ஓவர் பில்டப்’ஆ இருக்கும், அதனால் நான் அவங்க கதைய அவுத்து வுடறேன்.. பாருங்க..
கவிதான்னாவே..எல்லாரும்.. நிக்காமா..ஓடற ஒரே விஷயம் அவங்களோட அடம் பிடிக்கற குணம் தான்.. பெத்த புள்ளக்கிட்ட கூட அடம் பிடிச்சி நெனச்சத சாதிக்கிற ஒரே ஆளு ஒலகத்துல இந்த அம்மணிதான் தாங்க..
அடம் பிடிக்கறது..:- அவிங்க பிரண்ட்ஸ், சொந்தகாறங்க., பெத்துவச்ச புள்ள, வூட்டுகாரு எல்லாரும் அம்மணிய. ”சீ..!! உன்க்கிட்ட யாரால முடியும்” ன்னு சொல்லிட்டு ஓடிடுவாங்க..அந்த அளவுக்கு அம்மணி அடம் famous ங்க!! அம்மணி வேணும்னு ஒன்னை நினச்சிட்டா போதும் அடம் புடிச்சு நடத்தாம வுடமாட்டாங்க.. அவ்வளோ நல்லவங்க.. எப்படி அடம் பிடிப்பாங்கங்கன்னு கேட்டீங்கன்னு வைங்க.. கேவலமா பாத்து சிரிச்சிட்டு, திட்டிட்டு போவீங்க..
சூப்பரா அழுவாங்க- அழறதுன்னா.. சும்மா எல்லாம் இல்லீங்கோ..!! சத்தம் போட்டு ஊரையே கூட்டுவாங்க..இப்பக்கூட சவுண்டு ஓவர் தான்.. ஏரியா நிச்சயம் கவர் ஆகும்..அதுவும் விடாம..ராத்திரி பூரா அழறது.. நாள் பூரா அழறது.. அப்படி எல்லாம் போவும் கத..
இது அதவிட சூப்பர்ங்கோ.. சாப்பிடாம உண்ணாவிரதம் இருக்கறது..இதுவும் காலவரையற்றது தாங்க.. சாதிக்கிற வரைக்கும் சாப்பிட மாட்டாங்க.. மிச்சம்ன்னு நிறைய தரம் வூட்டுக்காரு வுட்டுடுவாரு..அது வேற விஷயம்..!!
அடுத்தது பேசாம இருந்து சாதிப்பாங்க..- இது அவங்க செய்யற ஒரு நல்ல விஷயம்னு வச்சிக்கலாம். .அவங்க பேசாம வாய மூடிட்டாவே.. பாதி பிரச்சன சால்வ் ன்னு வச்சிக்கலாம்..
வாயாடறது :- வாயாடி, BBC, chatterbox இப்படி பல பெயர்களை வச்சிக்கிட்டு இருந்தாலும், இன்னும் சில கேவலமான பேரை வெளியில சொல்லமுடியாத அளவுக்கு இவிங்க வாயல சேத்து வச்சி இருக்காங்க.. நானே சொல்லமுடியாத அளவுக்கு அம்மணிக்கு சூப்பர் பேரு எல்லாம் இருக்குங்க.. எல்லாம் இவிங்கள சுத்தி இருக்கறவங்க வச்சது தாங்கோ..
அம்மணி பாக்கத்தான்.. இந்த பூனையும் பால் குடிக்குமான்னு இருப்பாங்க.. வாய தொறந்தாங்க அவ்வளோத்தான்.. எல்லாரும் கை எடுத்து கும்பிட்டு தாயே ஆளை வுட நான் கிளம்பறேன்..ன்னு கிளம்புடுவாங்க.. அம்மணி வாய் சாகசத்த பாத்த அவிங்க வீட்டு மக்கள் எல்லாம் வக்கீல்’லுக்கு படிச்சா பெரிய ஆள வருவா..ஆனா.. இவ கோர்ட்க்கு போய் பேச ஆரம்பிச்சா..அங்க ஜட்ஜ் கூட ஏன்சி..ஓடிடுவாரு..ன்னு சொல்ற அளவுக்கு அம்மணி வாய் பெருசுங்கோ..!! அதுமட்டும் இல்ல.. இப்ப அவிங்க வூட்டுக்காரு நிலமைய நீங்க எல்லாரும் கொஞ்சம் யோசிச்சி பாக்கனும் பரிதாப படணும் சரிங்களா?!!
சுத்தம் ஊர்ல இல்லாத சுத்தம் :- அம்மணிக்கு இது ஒரு வியாதின்னு கூட வச்சிக்கலாம்.. சுத்தம் சுத்தம் ன்னு 108 டிகிரி சொரம் வந்தாக்கூட..குளிக்காம இருக்க மாட்டேன் ன்னு அடம் புடிப்பாங்க.. வூட்டுக்குள்ள கெட்ட நாத்தம்..லேசா எங்கயாவது வந்தத கூட நாய் ரேஞ்சுக்கு மோப்பம் புடிச்சி..க்ளீன் பண்ணிடுவாங்க.. வூட்டுல எல்லாம் வச்சது வச்ச எடுத்துல இருக்கனும்.... எங்கயாவது மாறிப்போச்சி.. இவிங்க ஆடற ஆட்டம் தாங்கமுடியாம..வுட்டுக்காரும் புள்ளையும் ஒரு வாக்கிங் போறேன்ன்னு வெளியில போய்டுவாங்க.. க்ளீன் பண்றேன் பண்றேன்..ன்னு இவிங்க பண்ற அமக்களம் தாங்காதுங்க.. இம்சை’னாலும் இம்சை அப்படிப்பட்ட இம்சை.. இவிங்க சுத்தம்’ டார்சர் தாங்க முடியாம.. இவிங்க புள்ள.. அவரோட ரூம்க்கு இவுங்க வரக்கூடாதுன்னு வூட்டுக்குள்ளேயே..“No Entry” போர்டு மாட்டிடார்ன்னா பாத்துக்கோங்க..அம்ம்ணி எவ்வளோ டார்ச்சர் ன்னு தெரியும்....
அடுத்தது சூப்பருங்க..அம்மணிய ரொம்ப சீக்கிரம் ஏமாத்திடலாம்.. அவிங்கக்கிட்ட போய் ரொம்ப சோகமா..ஓவர் பிரச்சன.. அது இதுன்னு சொல்லி பணமோ வேற ஒதவியோ கேளுங்க.. வுடனே மின்னல் வேகத்துல செஞ்டுவாங்க.. இப்படி அவிங்கள ஏமாத்தி பணம் கறந்தவங்க ஏராளம்.. ஆனா ஒன்னுங்க..எவ்வளோ வுட்டாலும் இன்னமும் திருந்த மாட்டாறாங்க.. நீங்க யாராவது கூட ட்ரை பண்ணாலாம்.. ஏமாற சான்ஸ் நிறைய இருக்கு... நானே அப்படித்தான் இங்க ஒட்டிக்கிட்டு இருக்கேன்.. அம்மணிக்கிட்ட போட்டு குடுத்துடாதீங்க.. அப்புறம் சங்குதான் எனக்கு.....
சரி இவ்வளோ சொல்லிட்டேன்.. பாவமா இருக்கு ஏதாவது ஒரு நல்லவிஷயம் ஒன்னே ஒன்னு சொல்றேன்.. அதாங்க.. அவங்க பொருள்களை பாதுக்காக்கற விஷயம்.. எதுவானாலும்..சரி..என்னையும் சேத்துத்தான்னு வச்சிக்கோங்களேன்.., வீட்டு சாமான்கள், புஸ்த்தகம்,போட்டுக்கற துணி, எதுவா இருந்தாலும் எத்தனை வருஷம் ஆனாலும் அழகா பத்திரமா வச்சிக்குவாங்க.... இதுக்காக.. மட்டும் அவிங்க வூட்டுக்காரு எது புதுசா கிடைச்சாலும் இவிங்க புள்ளக்கிட்ட குடுக்காம.. இவிங்கக்கிட்ட குடுப்பாரு.. ஜாக்கரதையா.. அழகா வச்சிக்குவாங்கன்னு..
சரிங்க.. இம்புட்டுதான்.. சரி நாங்க 5 பேரை கூப்பிடனுமா..இவிங்கத்தான்..
1. கைப்புள்ள
2. சிறில் அலெக்ஸ்
3. உஷாஜி
4. மதுரா
5. மங்கை
பீட்டர் தாத்ஸ் :- Talk time to think it is the source of the power.
Labels: அணில் குட்டி 19 Comments
மன அழுத்தமும் - பாப் உல்மரின் மரணமும்...
மன அழுத்தத்திற்கு (stress) இந்த மரணத்தைவிட சிறந்த உதாரணம் கூறமுடியாது அன்றாட வாழ்க்கையில் நம்மில் பலர் பலவிதமான மன அழுத்தத்திற்கு உள்ளாகிறோம். இந்த “stress” விட்டு வெளிவர முதலில் தெரிந்து கொள்ள வேண்டியது “நாம் மன அழுத்தத்தில் இருக்கிறோம்” என்பதை உணரவேண்டும்.
நமக்கு தெரியாமலே நம் மனஅழுத்தம் அதிகமாகி நம்மை கொல்லும் அளவுக்கு சென்றுவிடுகிறது. மனஅழுத்ததில் நாம் இருக்கும் போது முதலில் செய்ய வேண்டிய சில எளிதான வழி முறைகள்-
1. தனிமையில் இருப்பதை தவிர்ப்பது
2. நாம் விரும்புபவரிடம் நம் மன உளைச்சலை பகிர்ந்து கொள்வது
3. மனம் விட்டு, வாய்விட்டு அழுதுவிடுவது
4. நல்ல இசையை கேட்பது (விருப்பம் உள்ளவர்கள்)
5. மன உளைச்சலை சொல்ல இயலாத நிலையில், தனிமையை தவிர்த்து நண்பர்கள் (அ) உறவினர்களிடம் வேறு விஷயங்களில் மனதை செலுத்தி பேசுவது, உரையாடலில் கலந்து கொள்வது.
6. தனக்கு தானே “self counseling” செய்துக்கொள்வது.
o இதற்கு - நாம் ஏன் மன அழுத்தத்தில் இருக்கிறோம் என்பதை முதலில் உணரவேண்டும்,
o அதற்கான காரணத்தை தெளிவாக ஆராயவேண்டும்
o காரணம் தெரிந்தபின், இந்த மன அழுத்தம் அவசியம் தானா? என்பதை புரிந்துக்கொள்ள வேண்டும்.
பாப் உல்மரின் இணைய பக்கத்திலிருந்து சில -
ABOUT LIFE!
10 rules or morals that you live by each day
• My mantra is this:“Yesterday is history, tomorrow a mystery and today is the present – a gift make the most of it”
• I use the six "S" for success as a guide line to do well: Improve your:
o Skill
o Speed
o Stamina
o Suppleness
o Strength
o Spirit.
My Philosophy is:
“ Your mind is like a parachute if it does not open it will not work!”
CAN'T LIVE WITHOUT:
Q:-Products or people you couldn't go a day without ?
A:- I like to be in contact with my wife Gill every day as I travel a lot, so my Cellphone comes in as a real necessity.
We email and sms each other every day when we are apart.
Favourite quote:
When things are tough 400-1 on day two – Stuart Leary (late of Kent and Charlton Athletic) “Don't worry you could be down a pit working on the coal face but there is one thing you can't stop and that is the clock”
அணில் குட்டி அனிதா:- இந்த கருத்து கந்தசாமி வேல எல்லாம் நல்லாத்தான் செய்யறீங்க.. நீங்க முதல்ல இதை எல்லாம் செய்யறீங்களா?.. எனக்கு உங்கக்கூட bore அடிச்சி போச்சி கவிதா.. எப்பவுமே..நீங்க ஊருக்கு உபதேசம் செய்யற ஆளவே இருக்கீங்க.. நானும் சொல்லி சொல்லி பாத்துட்டேன்.. ம்ஹூம் எங்க.. மக்கா நீங்களும் என்னைய மாதிரிதானே ஆயீட்டீங்க..?!!
பீட்டர் தாத்ஸ் :- You cannot always control circumstances, but you can control your own thoughts
Labels: சமூகம் 3 Comments
உலக மகளிர் தினம் அறியாத ஒரு விடியல்......
இங்கே சர்வதேச மகளிர் தினத்தன்று பெண் ஒருவர் விடியலில் அவர் கடமையை செய்கிறார்... நாமும் இங்கே... மகளிர் தினம் கொண்டாடுகிறோம்..
நன்றி:-தினமலர்
Labels: சமூகம் 2 Comments