காதலிக்க நேரமில்லை..

காதலிக்க வயது வரம்பு இருக்கிறதா என்ன.. ? காதல் என்ற வார்த்தை ஒரு ஆணிடம்/பெண்ணிடம் உடல், மனம் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்காமல் கேட்கப்படும் கேள்வியாக இருந்தாலுமே, வயது வரம்பு இருப்பதாக தெரியவில்லை. அப்படித்தான் வரலாறுகள், நடைமுறை கதைகளும் சொல்கின்றன.

காதல், காதலிக்கும் வயதில் பலமுறை என்னை நெருங்கி வந்து, அதை கடக்கவிட்டு ஒதுங்கி இருக்கிறேன். எனக்குத்தான் என்னவோ காதலிக்க நேரமில்லை.

நேரமில்லை என்பதை இப்படியும் மாற்றி சொல்லாம்.. வயிற்றில் பசி, எதிர்காலத்தைப் பற்றிய பதில் தெரியாத ஆயிரம் கேள்விகள் நிறைந்த வாழ்க்கை பயணம், வளர்ப்பவர்களின் மேல் இருந்த அதீத காதல் இவற்றை எல்லாம் தாண்டி எனக்கு காதல் வரவேயில்லை. 

எந்த ஆணும் என்னை ஈர்க்கவேயில்லை. இந்த பக்கம், என்னிடம் காதல் சொல்லி வந்தவர்களை பார்த்து, அறிவே இல்லாதவர்கள் என்ற எண்ணமே வந்தது. இப்படி வரக்கூடிய வயதல்லவே, இருந்தாலும் வந்தது, அப்போதே வாழ்க்கை கற்றுக்கொடுத்துக்கொண்டிருந்த பாடம்  "காதல்" என்ற வார்த்தைக்கும் எனக்கும் எப்போதும் சம்பந்தம் இல்லை என்பதை உணர்த்தியது.  காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணாக என்னை நானே பார்த்தேன் அல்லது அப்படித்தான் இருக்கவேண்டும் என்ற பிடிவாதம் எனக்கு இருந்தது. அழகு என்பது இதற்கு ஒரு தடையாக இருப்பதாக நினைக்கவில்லை. 

எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு, சென்ரல் ஸ்டேஷனில், ரயிலுக்கு தினமும் மாலை ஓடி வந்து அமருவேன், அந்த ரயிலை விட்டிவிட்டால், இன்னமும் 40 நிமிடங்கள் அடுத்த ரயிலுக்கு நிற்கவேண்டும், காலையில் சாப்பிட்டு இருக்கமாட்டேன், அதிகாலையில் நான் கிளம்பும் நேரத்தில் சித்தப்பாவீட்டில் சாப்பாடு ரெடியாகி இருக்காது. காப்பி குடித்த வயிற்றோடு கிளம்பி இருப்பேன். காலேஜ்'  ஜில் ஆன்ட்டியின் முயற்சியில், கேண்டீனில், மதியம் இலவச சாப்பாடுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இலவச சாப்பாடு வாங்கி சாப்பிடுவதால், கேண்டீனில் வேலையாட்கள், எங்களை ஒரு பொறுட்டாக மதிக்க மாட்டார்கள், பசியோடு வெகு நேரம் ஓரமாக நிற்க வேண்டும், பணம் கொடுத்து வாங்குபவர்கள் அத்தனை பேரும் வாங்கி சென்றவுடன் தான் கொடுப்பார்கள், அப்படி காத்திருக்கும் பல சமயங்களில், உணவு தீர்ந்து போயி இருக்கும். ஏதோ கிடைப்பதை வாங்கி வந்து, தோழிகள் பிடிங்கியது போக சாப்பிட்டாலும், வயிறு காது கிழியும் படி சத்தம் எழுப்பும். வயதுக்கே ஏற்ற கெளரவம் நிறைய இருக்கும், பசி என்று யாரிடமும் சொல்லக்கூடாது, தோழிகளிடமும் காட்டிக்கொள்ள பிடிக்காது.  வெளியில் காட்டிக்கொள்ளாத திருட்டு சிரிப்பை அந்த கெளரவம் வரவழைக்கும்.  கொஞ்ச நாளில் இரண்டு வேளை  "பசி" பழகிப்போனது. 

இத்தனை பசியோடு மாலை ரயிலில் உட்கார்ந்து இருக்கும் போது, எதிரில் வந்து அமரும் "அரசு" என்ற இளைஞர் மூன்றாம் ஆண்டு பிரசிடன்ஸி கல்லூரி மாணவர், என்னை காதலிப்பதாக சொன்னபோது, சிரிப்பு தான் வந்தது. என்னை தினமும் ஒரு 35 நிமிட பயண நேரத்தில்  சில வாரங்களாக பார்த்திருக்கிறார், பேசி இருக்கிறார்.  அவருக்கு காதல் வந்துவிட்டது. என்னைப்பற்றி எதுவும் அவருக்கு தெரியாது, என் படிப்பு, காலேஜ் தவிர.  எனக்கு? எனக்கு அவரைப்பற்றி தெரிந்துக்கொள்ளும் ஆர்வமே இல்லை. என்ன காரணம் அவர் என்னை காதலிக்க? ஒரு மண்ணும் இருப்பதாக எனக்கு அப்போது தோன்றவில்லை.  யாரென்று தெரியாத, ஒரு சீனியர் மாணவர் என்ற பயமின்றி, அவர் ஒரு ஆண் என்ற தயக்கமின்றி, எதை எதையோ பேசிக்கொண்டு வந்தது காரணமாக இருக்கலாம். இருந்த பசியிலும் அவன் வேற்கடலை வாங்கி சாப்பிட்டு எனக்கு கொடுத்த போது, வேண்டாவே வேண்டாம் என்று தடுத்துவிட்டது காரணமாக இருக்கலாம். அவர் கண்ணுக்கு நான் அழகாக தெரிந்திருக்கலாம்.

அழகு என்பதை தாண்டி வாழ்க்கையில் பல விஷயங்கள் இருக்கிறது என்பதை உணர்ந்திருந்தேன். என்னையும் சேர்த்து யாருடைய அழகும் எனக்கு ஆர்வமளிக்கவில்லை, அவரின் காதல், மனிதர்கள் எத்தனை முதர்ச்சி இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்ற அதிருப்தியை தந்தது. ரயிலை மாற்றினேன்,  என்னை த்தேடி சுற்றி வர முயற்சி செய்தாரா என்றால், ஒரே முறை, வழிமறைத்து பேசியதாக நினைவு. வழியையும் மாற்றிக்கொண்டேன். யாரையும் நீ மாறி விடு என்று சொல்வதை விடவும், என்னை மாற்றிக்கொள்வதை அப்போதே வழக்கமாக்கி கொண்டிருப்பதை இப்போது நினைவு கொள்கிறேன்.

காதல் என்பதே பிடிக்காமல் போனது, வித்தியாசம் இல்லாமல் பேசும் பழக்கமே சிலருக்கு என் மேல் காதல் வர காரணமாக எனக்கு தோன்ற ஆரம்பித்தது. அது சரியா இல்லையா என்று அந்த சிலரிடம் கேட்டு தெரிந்துக்கொண்டேன், அதுவும் சரி என்ற பதிலில் எனக்கு திருப்தி. பேசுவதை மாற்றிக்கொள்ளவில்லை, காதலுடன் வந்து நிற்பவர்களை மட்டும் மாற்றிக்கொண்டே வந்தேன். பழகுபவர்களின் எண்ணிக்கை குறைந்தது. ஆண்கள் என்றாலே தள்ளி இருக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகமாக என்னை ஆட்க்கொள்ள ஆரம்பித்து, செயற்படுத்தியும் வந்தேன், வருகிறேன்.

காதல் இல்லாத வாழ்க்கை வேண்டும் என்ற எண்ணமும் எப்போதும் இருந்தது. காதலிக்க தகுதியில்லாத ஒரு பெண்ணை காதலிக்கிறேன் என்று சொல்லுபவர்களை என்னவென்று சொல்வது?!  இதை தான் கண் மூடித்தனமான காதல் என்பார்கள், புரிந்துக்கொண்டு காதலிக்க முடியாதளவு முரண்பாடனவளாக இருக்கிறேன் என்பது எனக்கு தெரியும்.புரிந்தவர்கள் என்னை விட்டு விலகி தான் செல்வார்கள் என்பார்கள் என்பதும் எனக்கு தெரிந்திருந்தது. அதனால் புரிந்ததாக நினைத்துக்கொண்டு, புரியாமல் காதலிப்பவர்களை எனக்கு பிடிக்காமல் போனது. எனக்கு பிடித்தவர்கள் யாரையும் காதல் என்ற வரைமுறைக்குள் கொண்டுவரவில்லை அல்லது என்னுடைய பிடித்தம் காதலாக இருக்க வாய்பில்லாமல் இருந்தது அல்லது அதையும் தாண்டி ஏதோ ஒன்றாக இருந்தது.  எல்லாவற்றையும் கடந்து வரும் போது அல்லது சில பல காலம் அதிலேயே தொக்கி நிற்கும் போது,  அனுபவம் கிடைக்கிறது. அனுபவம் மட்டுமே நம் அறிவை கொஞ்சமாக வளர்க்க உதவுகிறது. அதையும் பலமுறை தவறவிடுவது எனக்கு பழக்கமாகி இருந்தது.  

நண்பர் ஒருவரிடம்,  என்னை உடல் சார்ந்து பார்க்காமல் இருக்கும், ஆண்கள் இருக்கும் இடத்தில் இருக்க விரும்புகிறேன், அப்படி ஆண்கள் உண்டா ? அல்லது அப்படி ஒரு இடம் இருக்கிறதா? என்றேன். நண்பரின் பதில், "இல்லவே இல்லை :)" உலகத்தில் எந்த மூலைக்கு சென்றாலும் ஆண்கள் உண்டு, அவர்களின் எண்ணங்களினால் பெண்களின் மீதான பார்வையை உன்னால் கட்டுப்படுத்தவோ.மாற்றவோ முடியாது , அது இயற்கை" என்றார்.   காதல் என்பது உடலும் சார்ந்தது என்பதில் சந்தேகம் இல்லை. அப்படி இல்லை என்று யாரும் விவாதிக்க வேண்டியதே இல்லை. நேர விரயம்.

காதலிப்பவர்களை பார்க்கும் போது எல்லாம், இவர்களின் வயிற்றுக்கு நேரத்திற்கு சோறு கிடைக்கிறது, தேவையான பணம் கிடைக்கிறது, நாளை எப்படி இருக்கும் என்ற கேள்வியோ, பாதுகாப்பு பற்றிய பயம்மோ இல்லை.  பெற்றோர் இருக்கும் ஒரு வீட்டில், பெற்றோர் இல்லாமல் தனியான தன்னை தானே கவனித்து, மற்றவர்களுக்கு எந்த விதத்திலும் தொந்தரவாக இருக்கக்கூடாது என்பதற்காக எப்படியெல்லாம் இருக்கவேண்டும் என்ற நம் செய்கைகளைப்பற்றிய சுய அலசல், கட்டுப்பாடு, அடுத்து எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனை எதுவும் இவர்களுக்கு இருப்பதில்லை, வாழ்க்கை இவர்களுக்கு மிகவும் எளிமையானதாக, கேள்விகள், பயம் உணர்வு போன்றவை இல்லாததாக இருக்கிறது,அத்தோடு பெற்றோர் சம்பாதிக்கும் பணமும், பாதுக்காப்பும், உதவியும், உடையும், உட்கார்ந்த இடத்தில் சாப்பாடும் கிடைக்கிறது.  அதனால் காதல் வருகிறது.. .அது சுகமாகவும் இருக்கிறது..

எனக்கு வரவில்லை... காதலிக்க நேரமில்லாமல் என் தலையில் ஆயிரம் பிரச்சனைகள் இருந்தன... என்னைப்பற்றி புரிந்துக்கொள்ளாமல் என்னை காதலித்தவர்கள் எல்லாம் எனக்கு இன்னமும் முட்டாள்களாவே தெரிகிறார்கள். பாவம் ஒரு வேளை அவர்களில் யாரையாவது என்னை திருமணம் செய்திருந்தால் நிம்மதியை இழந்திருப்பார்கள், வாழ்க்கையின் அத்தனை கஷ்டமும் என்னாலேயே என என்னை அடித்து, துரத்தி இருப்பார்கள்.  காதலே வேண்டாம் என்று வந்ததால், அப்படிப்பட்ட  துக்கம் எனக்கு இல்லை.

இன்னமும் என்னை நேசிப்பவர்களுக்கும், என்னால் நேசிக்கப்படுவர்களுக்கும் எப்போதும் பிரச்சனையாகவே இருக்கிறேன்...... ம்ம்ம்ம் . :( இதற்கும் மேல் என்ன சொல்ல...

அணில் குட்டி : எச்சுச்சுமீ கவி... எதுக்கு இந்த....ஃப்ளாஷ்ஷூ...பேக்கூ.. ?!! 

பீட்டர் தாத்ஸ் : One of the hardest things in life is having words in your heart that you can't utter
.



க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

 ஏடிஎம் க்யூவில் நிற்கும் குழந்தைகள். உடன் வந்த குழந்தைகளின் அப்பா , வெயில் அதிகமாக இருக்கிறதென்று, குழந்தைகளை வெயிலில் நிறுத்திவிட்டு அவர் நிழலில் போய் நின்றுக்கொண்டார். :(

 :))) ????????? :))))))

 கை, கால் எல்லாம் நல்லாத்தான் இருக்கு,  பஸ்ஸில் வந்து, நோட்டிஸ் கொடுத்து பிச்சை எடுத்து பிழைக்குது !! :(. 
மொட்டைத்தலையில் சுரேஷ் நல்லாத்தான் இருக்கானில்ல ?! :)
 மாரியம்மா மாரியம்மா.. ஆடி மாசம் ! :) சிங்கத்துக்கு ஒரு கண்ணு மிஸ்ஸிங்..!:)
 ஒரு வீட்டு மதில் சுவரில்...
மேலுள்ள அம்மனும் இந்த அம்மனும் ஒரே இடத்தில் மாறி மாறி வருகிறார்கள். லைட்டிங் எஃப்க்ட் ! :)

படங்கள் : மொபைல்' லில் எடுத்தவை.

யாரும் உதவி செய்ய முடியுமா?

பேரூந்தில் தொடர்ந்து பிரயாணம் செய்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், திடீரென பேரூந்து பயணம் செய்ய ஆரம்பித்ததன் விளைவு, இந்த பதிவு. :(. இரு சக்கர வாகனத்தில் போகும் போதும் நம்மைச்சுற்றி நடக்கும் பலவற்றை பார்க்க நேரும் தான், ஆனால், இத்தனை நிதானமாக, வேடிக்கை பார்த்து செல்லும் பயணமாக அது இருந்ததில்லை. பேரூந்து பயணத்தில், அதிக நேரம், நிதானம், பார்வையை வெகுதூரம் செல்ல வைக்கமுடிகிறது, அதற்காக யோசிக்கவும் முடிகிறது.

தினந்தோறும், சென்று திரும்பும் வழியில் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 10-12 திக்கற்ற, தெருவில் தன் நிலை உணராத, வித விதமான மனித உயிர்களை பார்க்கிறேன். இது வரையில் பார்த்ததில் எல்லோருமே ஆண்கள். பெண்கள் இன்னும் கண்ணில் படவில்லை. பெண்கள் பட்டு இருந்தால் இன்னமும் மன உளைச்சலுக்கு ஆளாகி இருப்பேன்.

பல வீடுகளில் பார்த்திருக்கிறேன், நாய், பறவைகள் மற்றும் மரம்,செடி,கொடிகளை தன் வீட்டு குழந்தைகளை போல கவனித்துக்கொள்வார்கள். அந்த அன்பில் ஒரு 5 சதவிகிதமாவது இந்த சக மனித உயிர்களிடம் நாம் காட்டலாம் என்பது என் கருத்து. நேற்று கிண்டி அருகில் ஒரு பெரியவரை பார்க்க நேர்ந்தது. உட்கார்ந்த நிலை, கிழிந்து நைந்துப்போன ஆடைகள், முழங்காலுக்கு கீழே ஏதோ நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார். கூட்டமாக கொசுக்களும், ஈக்களும், பூச்சிகளும், புழுக்கழும் மொய்க்க , நடக்க இயலாத நிலை. அவற்றை பார்த்து பழகிப்போன அவரின் மனம், கண்கள், கைகள்....செயலற்று இருந்தன.  இடுப்பை இழுத்து இழுத்து நகர்ந்து வந்துக்கொண்டு இருந்தார். என்ன கொடுமை இது??!! இதை நான் பார்த்திருக்கிறேன்... :(( ..என் நெஞ்சை விட்டு அவரின் புழுக்கள் மொய்த்த கால்கள் இன்னும் நீங்கவில்லை.

முன்னரே, இது சம்பந்தப்பட்ட தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு ,இவர்களை ப்பற்றிய தகவல் சொல்லி உதவிக்கேட்டு பழக்கம் இருந்தாலும், தகவல் கொடுப்பதோடு நம் வேலை அங்கு முடிந்துவிடுவதில்லை. தொண்டு நிறுவன ஊழியர்கள் சொல்லும் நேரத்திற்கு, நாம் அங்கு நின்று, ஆட்களை அடையாளம் காட்டி, நாம் தான் அவர்களை அழைத்தோம் என்பதை சொல்லி, இந்த மனிதர்களை அவர்களுடன் அனுப்பி வைக்க வேண்டும். இப்படி, பல சமயங்களில் என்னால் அந்த குறிப்பிட்ட இடங்களில், தொண்டு நிறுவன ஊழியர்கள் வருகிறேன் என்று சொல்லும் நேரத்தில் காத்திருக்க முடியாமல் போகும் போது, அவர்களை பற்றிய விபரங்கள் சொல்லி உதவி கேட்டு வைப்பதிலும் எந்தவித பயணம் இல்லை என்று உணர்கிறேன். ஏனென்றால், நாம் வர முடியவில்லை என்று சொன்னால், தொண்டு நிறுவன ஊழியர்களும் வரமாட்டார்கள்.

இந்த நடைமுறை பிரச்சனையால், நாமே ஏன் இவர்களை அழைத்துக்கொண்டு விட்டுவிட கூடாது என்ற யோசனை தோன்றியது. இதனை என்னால் தனியாக செய்யமுடியுமா என்றால், முடியாது என்ற பதிலோடு, உங்களிடம் உதவி க்கேட்டு நிற்கிறேன்.

எதிர்பார்க்கும் உதவியும் திட்டமும் :-

1. ஒரு வேன் (அதற்கான கட்டனத்தை நான் ஏற்றுக்கொள்கிறேன், இருப்பவர்கள் உதவி செய்யலாம், வாடகைக்கு அமர்த்துவதாயின் அதையும் நான் செய்துக்கொள்கிறேன்)
2. இவர்களை அழைத்து,/தூக்கி செல்ல இரண்டு அல்லது மூன்று நபர். குறிப்பாக ஆண்கள்.
3. ஏதோ ஒரு விடுமுறை நாளில் அரை நாள் / ஒரு நாள் சென்னை நகரில் ஒவ்வொரு பகுதியாக செல்ல திட்டம்
4. இந்த மனிதர்களை தொட்டு தூக்கி/ அழைத்து செல்லும் மனப்பக்குவம் சகிப்புத்தன்மை உடல்வலிமை
5. அவர்களை தொண்டு நிறுவனத்தில் சேர்க்கும் வரை, உடன் வருவது.

தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் முன்னரே பேசி இவர்களை சேர்க்க அனுமதி ப்பெற்று விடுகிறேன். இதை அவர்களிடம் சொல்லி, ஒரு விடுமுறை நாளில் நீங்களே செய்யலாமே என்று கேட்கலாம். தன்னார்வு தொண்டு நிறுவனங்களில் இதுவரை பேசியதில், யாரும் நம் நேரத்திற்கு தகுந்தார் போன்று வர தயாராக இல்லை. அவர்கள் அழைக்கும் நேரத்திற்கு நாம் அங்கு இருக்க வேண்டும். பொதுவாக அவர்கள் அழைக்கும் நேரங்கள், அலுவலக நேரங்களாகவே உள்ளதால் நடைமுறை சிக்கல் ஏற்படுகிறது.

மேலும் இந்த உதவியை செய்ய விரும்புபவர்கள், தானாகவே, நல்ல உள்ளத்தோடு, மனமுவந்து செய்ய முடியுமாயின் வரவும்.

ஆர்வமும் எண்ணமும் இருப்பவர்களும், இதைத்தவிர்த்து இதனை வேறு எப்படி சாத்தியப்படுத்த முடியும் என்று யாருக்கும் தெரிந்தாலும் எனக்கு
gkavith [at] gmail [dot] com என்ற முகவரிக்கு மெயில் அனுப்பவும்.

அணில் குட்டி : ம்ம்ம்ம்... . அம்மணி.. எல்லாத்தையும் தனியா செய்வீங்களே இதுக்கு மட்டும் ஏன் ஆள் சேக்கறீங்க..?


பீட்டர் தாத்ஸ் : If we have no peace, it is because we have forgotten that we belong to each other - Mother Teresa
.

ரேடியோ ஜாக்கி !

ஆல் இந்திய ரேடியோ சென்னை வானொலி நிலையம் ! :) / இதே புதுச்சேரி க்கும் பெயர் மாறி வரும். அறிவிப்பாளாராக இரண்டு வானொலி நிலைத்திலும் தேர்ந்தெடுக்கப்பட்டு, புதுச்சேரி க்கு அவர்கள் அழைக்கும் நேரம் இங்கிருந்து சென்று வர முடியாமல் ஏறக்கட்டி விட்டு, சென்னையை மட்டும் தொடர்ந்தேன்.

காலை 6 மணிக்கு இருக்க வேண்டும். என்ன பேசப்போகிறோம் என்பதை எழுதி வைத்து, நிகழ்ச்சி இயக்குனரிடம் அப்பூருவ் வாங்கிட்டு தான் ஸ்டூடியோ விற்கு போகனும். சென்னை வானொலி நிலைத்தில் ஏகப்பட்ட ஸ்டூடியோக்கள். பலதை நான் பார்த்ததில்லை என்றே சொல்லனும். ஆனால் சில ஸ்டூடியோக்கள் மட்டுமே தொடர்ந்து நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்துவார்கள். தனிப்பட்ட்ட ரெக்கார்டிங் என்றால் நம் இஷ்டத்திற்கு, ஏதோ ஒரு ஸ்டூடியோவிற்கு சென்று செய்துக்கொள்ளலாம். லைவ் நிகழ்ச்சிகள் நடக்கும் ஸ்டூடியோக்கள் மட்டும் பார்க்க ரொம்ப ஆர்வமாக இருக்கும். எல்லோரும் ரொம்பவும் பிசியாக இருப்பார்கள். குறிப்பாக பிரபலங்கள் பலர் வருவார்கள்.

4 மணிக்கு எழுந்து வீட்டு வேலை முடித்து, நவீனுக்கு சாப்பாடு, எனக்கு சாப்பாடு காலை மதியம் எல்லாம் பேக் செய்துவிட்டு, எனக்கு கையில் எடுத்துக்கொண்டு, 5.30 க்கு கிளம்பி. வண்டியை என் வேகத்திற்கு விரட்டுவேன். எப்படியும் சரியான நேரத்திற்கு போகாமல் திட்டு வாங்குவேன். எனக்கு முன் நிகழ்ச்சி செய்பவர் நான் வரும் வரை காத்திருந்து மைக் ஐ தருவார். :). அதனால் கூட பயமில்லாமல் லேட்டாக போவேனோ என்னவோ. :). 8.30 க்கு என் நேரம் முடியும். வானொலி நிலைய கேண்டினில் காலை டிபன் எடுத்து சென்றதை சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து நேராக அலுவலகம், வீடு வர மாலை 6.15 ஆகும்.

என்னால் முடியும் என்று உழைத்த நாட்கள் இவை. இனியும், எப்பவும் இப்படி உழைத்துக்கொண்டு இருக்க ஆவலாக த்தான் இருக்கிறது. இப்போது, பஸ் ஸில் போவதால் தினமும் ரேடியோ கேட்க முடிகிறது. எங்களுக்கு உச்சரிப்பு, வார்த்தை பிரயோகம், எந்த வார்த்தைகள் ஏர்' ல் போகக்கூடாது என்று சொல்லிக்கொடுக்கப்பட்டது. குறிப்பாக "அம்மா" வந்தால் எடுத்து விடுவார்கள் ! :)))))))

ழ என்ற வார்த்தை சரியாக உச்சரிக்கவேண்டும். தேர்வில் அதிகமாக ழ வரும் வார்த்தைகள் தான் கொடுக்கப்பட்டு இருந்தன. அவள் அவல் வாங்கி வந்தாள், ஏழை கிழவன் வாழைப்பழம் வழுக்கி கீழே விழுந்தான். போன்றவை தேர்வில் கொடுக்கப்பட்டது இன்னும் நினைவிருக்கிறது. அது போல நாம் பேசும் சில வார்த்தைகளில் "க" என்பதை "ஹ" வென உச்சரிப்போம். "எடுத்துக்காட்டாக' - இதை சொல்லும் போது கடைசி 'க' வில் ஹ சத்தம் கூட சேர்ந்து வரும். இப்படி பல "வார்த்தைகள்" உள்ளன. உச்சரித்து பார்த்தால் மட்டுமே தெரியும்.

பள்ளி படிப்பின் போது ஷோபனா ரவி அவர்கள் செய்தி வாசிப்பதை பார்த்து, ஈர்க்கப்பட்டு பாடப்புத்தகத்தை அவரைப்போலவே படித்து பார்ப்பேன். இப்படி பழகியே வானொலி குரல் தேர்வின் போது சொல்ல சொன்ன "ஆல் இந்திய ரேடியோ, சென்னை வானொலி நிலையம்" என்று இயல்பாகவே கொஞ்சம் ஸ்டைலிஷ் ஆக சொல்ல வந்தது. "க" வில் தான் தவறு செய்தேன் , திருத்தி திரும்ப திரும்ப பல வார்த்தைகள் சொல்லச் சொல்லி கேட்டார்கள். ஆங்கிலமே கலக்காமல் பேசவேண்டும் :)

ஆனால் இப்போது ?! :))))))))) ஆர்.ஜே க்கள் பேசுவதை கேட்டால், நாம் தமிழை சரியாக படிக்கவும் உச்சரிக்கவும் இத்தனை சிரமப்பட்டு இருக்கிறோம் என்று தெரிகிறது.

மறக்க முடியாதது - இன்று ஒரு தகவல் சொன்ன நிகழ்ச்சி இயக்குனர் தென்கச்சி கோ சுவாமிநாதன் அவர்களுடன் லைவ் நிகழ்ச்சி ஒன்று செய்தது. :). மிகவும் எளிமையானவர். மைக் ஆன் செய்வதற்கு முன் என்ன பேசப்போறீங்க என்பதை கேட்டுக்கொண்டாலும், தவறு செய்தோமே ஆனால் அதை அப்படியே சிரித்தபடி வேறு விதமாக பேசி, தவறு வெளியில் தெரியாமல் செய்து விடுவதில் கெட்டிக்காரர், சுவாரசியமானவர், நகைச்சுவை உணர்வு அதிகம் கொண்டவர்.


அணில் குட்டி : ஆஹா......................... அம்மணி ஆரம்பிச்சிட்டாங்கய்யா...

பீட்டர் தாத்ஸ் : When your hobbies get in the way of your work - that's OK; but when your hobbies get in the way of themselves... well.

திருவிளையாடல் Vs ஃபார்முலா 1

சின்னவயசுல, குறிப்பாக தேர்வுகள் நெருங்கும் சமயம் அக்கம் பக்கத்து கோயில்களில் லவுட்ஸ்பீக்ர் வைத்து, பக்தி பாடல்கள் & படங்களின் ஒலிநாடாக்களை போடுவார்கள். அது ஏழு ஊருக்கு காதை கிழிக்கும். தேர்வுக்கு படிப்பது ரொம்பவே கஷ்டம். படிக்கும் பிள்ளைகளை, வயதானவர்களை, உடல் நலம் சரியில்லாதவர்களை தொந்தரவு செய்கிறோம் என்ற நினைவு இந்த கோயில் சார்ந்த மக்களுக்கும்/ நிர்வாகிகளுக்கும் இருப்பதே இல்லை. இப்போதும் அது தொடர்ந்தாலும், முன்பு போல், அதிகமாக இல்லாமல், ஆடி மாதங்களில் மட்டும் அம்மன் கோயில்களில் கேட்க முடிகிறது. எப்போதாவது மற்ற கோயில்களில் கேட்க முடிகிறது. குறிப்பாக சென்னையில் மிக குறைவே.

விழுப்புரத்தில், எங்கள் தெருவிற்கு பின் தெருவில் ஒரு முத்து மாரியம்மன் கோயில் இருக்கிறது. அங்கு எல்.ஆர்.ஈஸ்வரி அம்மா பாடிய எல்லா அம்மன் பாடல்களும் போட்டபடி இருப்பார்கள். டிஎம்எஸ், சீர்காழி கோவிந்தராஜன், ஏ.ஆர்.ரமணி அம்மாளின் பாடல்களும் விரும்பினாலும், இல்லாவிட்டாலும் தானாக வந்து காதில் விழுந்து விழுந்து, பாட்டு மனப்பாடம் ஆகிவிடும். அதே போன்று திருவிளையாடல், சரஸ்வதி சபதம், ஆதிபராசக்தி போன்ற பக்தி படங்களின் வசனங்களும் அத்துபடியாக இருக்கும்.  திருவிளையாடல் பார்க்கும் முன்னரே, அத்தனை வசங்களையும் வீட்டில் சொல்லிக்கொண்டு இருப்போம். அந்த காட்சி படத்தில் எப்படி இருக்கும் என கற்பனை வேறு இருக்கும். படம் பார்த்தபோது, தட்சன் யாகம் நடத்தும் காட்சி மட்டும், நான் கற்பனை செய்தவாறு இல்லை என்பது என் கவலை. :( .

இப்போது, அதே போல,  வீட்டிற்குள் கொடுமை நடக்கிறது. பிடித்தாலும் பிடிக்காவிட்டாலும், காதில்   ஒய்ய்ய்ய்ய்ய்ன்ன்ய்ய்ய்ய்ய்ய்ய்........என்ற ஒரு சத்தமும், ஒருவருக்கு ஒருவர் அடித்துக்கொண்டு செத்து, அதை பார்த்து மக்கள் கத்தி கூப்பாடு போடும் சத்தம் என்னேரமும் வந்து விழுந்துக்கொண்டே இருக்கிறது.

ஒன்று ஃபார்முலா 1 ரேஸ்,
இரண்டாவது WWE.

நவீனிடம் எவ்வளவு கத்தி திட்டி, அட்டகாசம் செய்து, அடம் பிடித்தாலும் இந்த நிகழ்ச்சிகளை அவன் மாற்றவே மாட்டான்.  இந்த இரண்டிலும் எப்போதுமே வெறித்தனமான ஆர்வம். என் தலையெழுத்து பிடிக்காவிட்டாலும் கூட உட்கார்ந்து பார்க்கனும் இல்லைன்னா, சத்தத்தை சகிச்சிக்கிட்டு உள்ள போயி உட்கார்ந்துக்கனும். இதுல கொடுமை என்னான்னா, என் புள்ள பார்முலா 1 ரேஸ் ஐ  குவாலிஃபைங் ரவுண்டுலிருந்து பார்ப்பான். அந்த கார் ஓடற சத்தம் இருக்கே, ஸ்ஸ்ஸ்ஸ்ப்பா.. என் காதுக்குள்ளவே அவங்க கார் ஓட்டற மாதிரி  இருக்கும். :(

இப்படி கேட்கும் சத்தம் பழகிப்போய், அடிக்கடி காதில் வந்து விழும் பெயர்.. "மைக்கேல் சூமேக்கர்". அப்படி இப்படி நடக்கும் போது, நவீனைப்பார்த்தும் பார்க்காமலும் "சூமேக்கர் சூமேக்கர்" ன்னு சொல்லிக்கிட்டே போவேன்......அவன் திருப்பி, துப்புவதை எல்லாம் உங்கக்கிட்ட சொல்லமுடியுமா என்ன?.விடுங்க.. எப்படி எல்.ஆர்.ஈஸ்வரி அம்மாவின் பாடல்கள் கேட்டு கேட்டே மனப்பாடம் ஆகியதோ அது போல....

ஃபார்முலா 1 (F1)  : இது வருடத்திற்கு ஒரு முறை நடக்கும் உலக கார் பந்தயம், மொத்தம் 11 குழுக்கள்.  ஒவ்வொரு குழுவிலும் 2 பேர் இருப்பார்கள். இந்த குழுக்களில் உறுப்பினர்கள் வருடந்தோறும் அதே நபர்களாக இருக்க வாய்பில்லை, மாறவும் செய்யும். வியாபாரமும் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும் ஒரு பந்தயம்.  1946-47 ல் தொடங்கப்பட்ட பந்தயம் தொடர்ந்து இன்று வரையில் நடந்துவருகிறது.  பலவிதமான கார்கள் வந்து இருந்தாலும், தற்போதைய கார்களின் டிசைன்,  ஓட்டுனரையும் சேர்த்து வெயிட் 640 கிகி,  350 km/h (220 mph) கிமி/ஹவர் வேகத்திற்கு செல்லக்கூடியவை.  அதிகபட்சமாக ஹோண்டாவின் கார் 2006 ல் 415 கிமி/ஹவர் சென்றது.  கடைசியாக கார் பந்தயம் அபுதாபியில் நடந்தது. நடப்பு ஆண்டு 2011 ல் தொடங்கி இருக்கும் இந்த பந்தயம், இந்தியாவிலும், டெல்லியில் நடக்கவிருக்கிறது, அது இன்னும் திட்டவட்டமாக முடிவு செய்யப்படவில்லை. சர்க்கியூட் எல்லாம் சரியாக அமைக்கப்பட்டு, சோதனை செய்யப்பட்டு, வெற்றி அடைந்தால் மட்டுமே டெல்லியில் நடக்க வாய்ப்பிருக்கிறது.

இந்த பார்முலா 1 கார் பந்தயத்தில் பங்குபெற்ற ஒரே இந்தியர்.  கோயமுத்தூரில் பிறந்த, நாராயன் கார்த்திகேயன். இவரின் பெயர் நரேன் என்று சுருக்கப்பட்டுள்ளது. 2005 ல், ஜோர்டான் டீமிற்காக பார்முலா 1 ல் டயட்டோV10 காரை ஓட்டினார், இவர் கலந்துக்கொண்ட முதல் பந்தயத்தில் 12 ஆவது இடத்தை பிடித்தார்.  அடுத்து வந்த சில போட்டிகளில் அதிகபட்சமாக அவர் பிடித்த இடம் 11.

இந்த டீம்'களில் அடிக்கடி என் காதுகளில் வந்து விழுந்த பெயர்  "ஃபெராரி".  45 வயது ஜெர்மன் நாட்டை சேர்ந்த, மைக்கல் சூமேக்கர் ஃபெராரி டீம் மிற்காக கார் ஓட்டியுள்ளார். இவர் தொடர்ந்து 7 உலக சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற பெருமைக்கு உரியவர். அடிக்கடி கேட்பதால் மட்டும் அல்ல, என்னவோ மைக்கெல் சூமேக்கரை ரொம்ப பிடித்துப்போனது.  இவர் சூபெர்த் என்ற கம்பெனியுடன் இணைந்து 2004 ல் குறைந்த எடையுள்ள கார்பனால் செய்யப்பட்ட தலைக்கவசத்தை உருவாக்க உதவியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.  

http://www.formula1.com/default.html -  ஃபார்முலா 1 ன் இணையதளம். இதில் கொடுக்கப்பட்டுள்ள காலண்டரில் 2011 ல் போட்டிகள் ஆரம்பநிலையிலிருந்து எங்கெங்கே நடக்கவிருக்கின்றன, நடந்துக்கொண்டு இருக்கின்றன என காணலாம். 

WWE : World Wrestling Entertainment தமிழில் "மற்போர் மகிழ்கலை" ன்னு கூகுல் சொல்லுது. எனக்கு அறவே பிடிக்காத ஒரு மகா கொடுமையான விளையாட்டுன்னு சொல்லனும். நவீன் 2-3 ம் வகுப்பு படிக்கும் காலத்திலிருந்து பார்க்கிறான். இதனை அமெரிக்காவின் முதன்மையான விளையாட்டுகளின் ஒன்று என்றும் சொல்லலாம்.  Vince McMahon என்பவர் நடத்திவருகிறார், இவரே WWE கம்பெனியின் சொந்தக்காரரும் ஆவார். இவருக்கு அடுத்து இவரின் மனைவி, பிள்ளைகள் தொடர்ந்து இந்த கம்பெனியில் பங்கு தாரர்களாகவும், கம்பெனியையும் நடத்தி வருகின்றனர்.

இந்த விளையாட்டை அமெரிக்காவில் மட்டும் 13 மில்லியன் மக்கள் கண்டுக்களிக்கின்றனர், 30 மொழிகளில், 147 நாடுகளில் இது ஒளிப்பரப்பட்டு வருகிறது.  1952 ல்  Capitol Wrestling Corporation என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த கம்பெனி பின்னர் World Wide Wrestling Federation (WWWF) என்ற பேனருக்கு மாறியது, அதுவே பின்னர் 1982 ல் World Wrestling Federation (WWF), பின்னர், இது அதே குடும்பத்தினருக்கு சொந்தமான Titan Sports company க்கு விற்கப்பட்டது, அதற்கு பின்னர் இவ்விளையாட்டின் பெயர் World Wrestling Federation Entertainment, என்று மாறியது. எனக்குமே இந்த விளையாட்டு, WWF என்றே பழக்கப்பட்டு இருந்தது. 2002 ல் World Wrestling Entertainment  என்று மாற்றப்பட்டு, அதன் சுருக்கமாக, 2011 லிருந்து "WWE" என்று அழைக்கப்பட்டு வருகிறது.

நவீனின் அடிக்கும் பழக்கும் தொடர்வதற்கும், என்னை மட்டுமே அவன் டார்கர் செய்யவும் முழு முதற்காரணமாக அமைந்தது இந்த டிவி நிகழ்ச்சியே. பார்த்துக்கொண்டு இருக்கும் போது உணர்ச்சிவசப்பட்டு, ஓடி வந்து என்னை எட்டி எட்டி உதைப்பான். அம்மா நீயும் நானும் WWF  விளையாடலாம் வா, ன்னு கூப்பிட்டு, நான் தயாராகிவிட்டேனா இல்லையா என்றெல்லாம் கவனிக்காமல் அடிக்க ஆரம்பித்துவிடுவான். அவனிடன் அடிவாங்கியே நான் வளர்ந்தேன்னு சொல்லலாம். இப்போது அடிப்பதை நிறுத்திவிட்டான் என்றாலும், பார்ப்பதை நிறுத்தவில்லை.

இது விளையாட்டா, நிஜமாகவே அடித்துக்கொள்கிறார்களா? இல்லை சும்மாவா என கண்டுப்பிடிக்க முடியாதபடி, முன்னமே தயார்படுத்திக்கொண்டு, பயிற்சி செய்து நடத்துகிறார்கள். பலமுறை அது சும்மா நடிப்பு என்று நவீன் சொல்லியிருந்தாலும், ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் சந்தேகத்தோடே பார்ப்பேன். அத்தனை இயல்பாக, உண்மை என நம்பும் படியாக அடித்துக்கொள்வார்கள். பயமாகவும் இருக்கும். அதில் இந்தியர் ஒருவர் வரும் போது மட்டும் கூப்பிட்டு காட்டுவான்.

இந்த இந்தியரின் பெயர்  "The Great Khaali "  எவ்ளாம் பெரிய உருவம்.. !!  :). கூடியிருக்கும் கூட்டமும்,  உற்சாக மிகுதியில் அவர்கள் போடும் சத்தமும், இந்த விளையாட்டிற்கு இத்தனை லட்ச ரசிகர்களா என வியக்க வைக்கிறது.  இந்த விளையாட்டே பிடிக்காது என்றாலும், கூடுதலாக பெண் போட்டியாளர்கள் வந்தால் சுத்தமாக பிடிப்பதில்லை. அப்போது மட்டும் நவீனிடம் வேற மாத்தி வைன்னு சத்தம் போடுவேன்,   ஆனால் எங்க, இதுவரையில் மாற்றியதே இல்லை. :( . மேலும் படிக்க/பார்க்க  http://wwe.sify.com/ ...

தகவல் & படங்கள் : - நன்றி கூகுல்


அணில் குட்டி : . நவீனூஊ... நீ இனிமேலு எல்.ஆர். ஈஸ்வரி அம்மா அம்மன் பாட்டை போட்டு. .ஆத்தாடி மாரியம்மா.. சோறு ஆக்கிவச்சேன் வாடியம்மா" ன்னு பாட்டு கேப்பியாம்.... இல்லன்னா உங்க அம்மா இதெல்லாம் யார் வீட்டீலேயும் நடக்காத ஒரு மேட்டர் னு எழுது எழுதுன்னு எழுதுவாங்க..

பீட்டர் தாத்ஸ் : “If you read a lot of books you are considered well read. But if you watch a lot of TV, you're not considered well viewed.”
.

க்ளிக்..க்ளிக்...க்ளிக்...

மழை "இதோ வந்துக்கொண்டே இருக்கிறேன்" என்ற ஒருநாளில் எடுத்தது, மாலை 4 மணி இருக்கும்.

 துரைப்பாக்கத்தில் காலியாக இருந்த ப்ளாட் டில் தேங்கியிருந்த தண்ணீரில் தனியாக விளையாடிக்கொண்டு இருந்த குழந்தை. தெரியாமல் விழுந்துவிட்டது என கிட்டே சென்றேன், பார்த்தால் விளையாடிக்கொண்டு இருந்தது. :)

 திருப்போரூர் கந்தசாமி கோயில் குளம், பொரியை சாப்பிட்டே கொழு கொழுவென ஆகியிருக்கும் வாத்துகள். ! :) 
 வீட்டினுள் தீடிரென சிகப்பாக ஒளிவர, கேமரா எடுத்துக்கொண்டு மேலே சென்றேன்... :) மாலை நேரம் செவ்வானம்....

 வேளச்சேரியில் இப்படி ஒருவர் அனுமார் வேஷமிட்டு, வீடு வீடாக, கடை கடையாக சென்று பணம் வாங்கினார். க்ளிக் காமல் இருக்க முடியுமா அந்த அழகை.. :). I like that "வாலூஊ.. !!  :)
 அதே செவ்வானம்... .செவ்வானம் சின்னப்பெண் சூடும் குங்குமம் ஆகாதோ...

ஒரு விஷேஷத்தில், சீராக கொண்டு வந்த வாழைத்தார்...


பீட்டர் தாத்ஸ் : When you photograph people in colour you photograph their clothes.  But when you photograph people in B&W, you photograph their souls!  ~Ted Grant

ஒப்பாரி பாடல்கள் !

நமக்கு, குழந்தை பிறப்புக்கு தாலாட்டும், இறப்புக்கு ஒப்பாரி பாடல்களும் என்பது அறிந்தவை. இவை இரண்டுமே நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை. நகரங்களில் இவற்றையெல்லாம் பல வருடங்களாகவே பார்க்க முடிவதில்லை. எங்கள் வீட்டிலும் இவை நிறுத்தப்பட்டு விட்டது. தாத்தா மறைவின் போது மட்டும் பார்த்த நினைவு. அதிலும் எங்கள் வீட்டு பெண்கள் கலந்துக்கொள்ளவில்லை, ஆயாவையும் சேர்த்து.

புகுந்தவீட்டில் இந்த சடங்குங்கள் இப்போது இல்லை எப்போதுமே நிற்காது என்றே நினைக்கிறேன். திருமணம் ஆன புதிதில் அவரின் சொந்தம் ஒருவர் இறந்தவிட்ட போது, பெண்கள் 4-5 பேராக  சிறு சிறு குழுக்களாக கட்டிக்கொண்டு ஒப்பாரி வைக்க, நான் தனியாக நின்று வேடிக்கை பார்த்தவாறு இருந்தேன். அக்கா (கணவரின் அண்ணனின் மனைவி), நான் சும்மா நிற்பதை பார்த்துவிட்டு,  என்னை மிகவும் கட்டாயப்படுத்தி அழ சொன்னார்கள். எனக்கு அழுகையும் வரவில்லை, ஒப்பாரி வைக்கவும் தெரியவில்லை, அப்போதே வீட்டைவிட்டு ஓடி வந்து விடலாமா என்றே தோன்றியது. அழுகை என்பது தானாக வரவேண்டும். அல்லது ஒப்பாரி பாடல் பாட அந்த மனிதரை ப்பற்றி ஏதேனும் தெரிந்திருக்கவாவது செய்ய வேண்டும்.

அது என்ன பெரிய கஷ்டம்? கூட்டத்தோடு கூட்டமாக குனிந்து அழுதுவிட்டு வரவேண்டியது தானே என்று யாரும் சொன்னால்.. :) அது அத்தனை எளிதானது அல்ல என்றே சொல்லுவேன்.

*  அழுகை வரனும், வராவிட்டால் வர மாதிரியே நடிக்கனும்
* ஒருத்தரோடு ஒருத்தர் தோளோடு கட்டிக்கொண்டு அழவேண்டும்.
* உருவம் சம்பந்தப்பட்ட விஷயமும் கூட, பெரிய உருவங்களுக்கு மத்தியில் மாட்டினால், வெளியில் வரும் போது நைந்து போன துணியாகத்தான் வரவேண்டும். கசக்கிவிடுவார்கள்.
* அழுகையும், நடிப்பும் ரித்தமிக்காக, அவர்கள் குனியும் போது நாமும் குனியனும், இந்த பக்கம் அந்த பக்கம் ஆடி ஆடி அழும் போது நாமும் கூடவே போயிட்டு ஆடிட்டு வரனும்.
*  இறந்தவரை பற்றி பேசி பேசி அழனும்,
* இவைத்தவிர ஒருவர் தலையோடு ஒருவர் முட்டி அழவேண்டும். அங்க இருக்க எல்லாம் நம் தலைக்கு வந்துவிடும்.
* இறந்த வீட்டிற்கு வந்தவர்கள் யாரும் குளித்திருக்க மாட்டார்கள் (முன்னமே, எத்தனை நாள்  குளிக்கவில்லைன்னும் தெரியாது) நெருக்கமாக உட்கார்ந்து அழும் போது அந்த கொடுமையை சகிச்சிக்கனும்.
* மூக்கை சிந்திவிட்டு அதே கையோடு நம் தோளை பிடித்து அழுத்துவார்கள், நைஸாக நம் துணியில் அவர்களின் சளியை துடைத்தும் விடுவார்கள்.
*வெற்றிலை பாக்கு போடும் பெண்களாக இருந்தால், கத்தி அழும் போது, வாயிலிருந்து வெற்றிலை எச்சியும் வந்து அடிக்கும்,

இதெல்லாம் அழாத எனக்கு எப்படித்தெரியும்னு கேட்கப்பிடாது, எதுக்கு நின்னு வேடிக்கை பார்க்கிறோம்? இதையெல்லாம் கூட கவனிக்காவிட்டால் எப்படி.?

என்(ங்களின்) ஆயா, நான் சின்னவளாக இருக்கும் போது  ஒப்பாரி பாடல் ஒன்றை வேடிக்கையாக சொல்லிக்காட்டுவார். நினைவில் இருக்கும் வரை எழுத முயற்சிக்கிறேன்..

"பந்தலிலே காய்த்து
தொங்குதடி பாவைக்காய்
பார்த்தியாடி சின்னவளே....

பார்த்தேன்டி பெரியவளே..
போறப்ப பறிச்சிக்கிட்டு
போவோம்
அடுத்து தொங்கற
அவரைக்காயையும் சேர்த்து.. "
 
இந்த ஒப்பாரி ஒரு பக்கம் இருக்கட்டும், கணவரை இழந்த பெண்கள் முன்னமே நொந்து இருப்பார்கள், அவர்களின் வருத்தம், நினைவுகள், அழுகை, இழப்பு யாராலும் ஈடு செய்ய முடியாது. ஆனால், இறப்பிற்கு வரும் அத்தனை பெண்களும், அவர் எங்கே என பார்த்து, அவரின் தோளை கட்டி ஒரு ஆட்டு ஆட்டி அழும் போது, இந்த அம்மாவின் உயிரும் எங்கே கூடவே போயிவிடுமோ என்ற பயம் வரும். அந்த அளவு மேலே போயி விழுந்து பாசத்தை க்கொட்டுவார்கள். அவர்களோ முன்னமே அழுது அழுது, சாப்பாடும் இல்லாமல் பலகீனமாக இருப்பார்கள். இதை போன்று, சம்பரதாயம் என்ற பெயரில், இறந்தவர்களின் நெருக்கமானவர்களுக்கு கஷ்டங்களை கொடுப்பது, கொடுமையை தவிர வேறு ஒன்றும் இல்லை. ஏன் தள்ளியிருந்து அழுது பாசத்தை காட்டினால் தான் என்ன?

சிலர் பாடி அழும் ஒப்பாரி, நிஜமாகவே கேட்கும் ஆர்வத்தை உண்டு பண்ணும்.  . சமீபத்தில் கேட்டவையில் சில வரிகள்

என்னென்ன சொல்ல நினைச்சியோ..
என் மாமா...
ஒரு வார்த்த சொல்லாம போனியே...
என் மாமா

உன் உடம்பு என்ன பண்ணுச்சோ
என் மாமா
அத தாங்காம போனியோ
என் மாமா

போகிற வயசா உனக்கு
என் மாமா
போகாத இடம் போனியே
என் மாமா..

உனை இப்படிப்பாக்கத்தான்
வந்தேனோ
என் மாமா
உனக்கு முன் நான்
போயிருக்கக்கூடாதோ
என் மாமா...

தொடர்ந்து ஒப்பாரிப்பற்றி கூகுலில் தேடிய போது..

விக்கியில் ஒப்பாரிப்பற்றிய குறிப்பும் பாடல்களும் :-
அதில் ஒப்பாரி ஒன்று ..
ஆலமரபோல அன்னாந்து நிப்பேனு நான் ஒய்யாரமா வந்தேனே இப்ப நீ பட்ட மரம்போல பட்டு போயிட்டையே.
பொட்டு இல்ல பூவில்லை பூச மஞ்சலும் இல்ல நான் கட்டன ராசாவே என்ன விட்டுத்தான் போனிங்க.
பட்டு இல்லை தங்கம் இல்லை பரிமார பந்தல் இல்ல படையெடுது வந்த ராசா பாதியியில போரிங்க்கலே
நான் முன்னே போரேன் நீங்க பின்னே வாருங்கோ என சொல்லிட்டு இடம்பிடிக்கப் போயிதங்களா.
நான் காக்காவாட்டும் கத்தரனே, உங்க காதுக்கு கேக்கலையா கொண்டுவந்த ராசாவே உங்களுக்கு காதும் கேக்கலையா.
***************
http://cinema.nakkheeran.in/Talkies.aspx?T=315

இந்த பதிவில் லட்சுமியம்மா என்ற பெண்ணிடம் பணம் கொடுத்து ஒப்பாரி பாடல்களை பாடச்சொல்லுகிறார்கள் என்பது புது செய்தி. அதுவும் எல்லோர் முன்னிலையிலும் அழ அசிங்கப்பட்டு உறவினர்கள் இதை செய்வதாக எழுதப்பட்டுள்ளது !..
************
ஒப்பாரி பாடல்கள் பதிவுகள் :-

http://kavithamil.blogspot.com/2011/06/blog-post.html

இதில் உள்ள பாடல் - முழுக்க முழுக்க ஒவ்வொரு மனிதனின் உள்ளே இருக்கும் சுயநலம் வெளிப்பட வைத்திருக்கிறது. :((.
*****************

ஒப்பாரி பாடல்களும் நாட்டுப்புற பாடல் வகையை சேர்ந்தவை என்பதற்கு, இப்பாடல் ஒரு உதாரணம்.

தந்தநானே தானநன்னே
தந்தநானே தானநன்னே
தந்தானே தானநன்னே
தானநன்னே தந்தநானே

வானம் கருத்திருக்கு
வட்டநிலா வாடிருக்கு
எட்டருந்து பாடுறேனே
எங்கப்பா எங்கபோன?

இவை எதிலுமே ஆண்களின் பங்கு அறவே இல்லை என்பது ஏன் என்று தெரியவில்லை. :(.

அணில் குட்டி :  நல்ல வேள இதையெல்லாம் பாடி போஸ்ட் பண்ணாம இருந்ததுல நாம எல்லாம் தப்பிச்சோம்..  :)

பீட்டர் தாத்ஸ் :   “We celebrate people's memories here. We acknowledge death through the celebration of people's lives.”

இணைப்புகள் :- கூகுல் மற்றும் இதைப்பற்றி எழுதியுள்ள நண்பர்களுக்கும் நன்றி

விதியும் மதியும் ... புலம்பல்களும்....

அண்ணன் சொன்னான், "எந்த தாய்க்கும் தன் குழந்தை தான் முதல், பிறகு தான் மற்றவர்கள். நீ அதிலும் மீறிவிட்டாய், வியக்கிறேன், நீ நல்லவள்".  வெற்றுப் பார்வையும், விரக்தி சிரிப்பையும் உதிர்த்துவிட்டு மெளனமாய் என் வேலையை தொடர்ந்தேன்.  முன்னதாக என் குழந்தை சொல்லிவை மட்டுமே என்னுள் ரீங்காரமிட்டுக்கொண்டு இருந்தது.  "நீ பெற்ற குழந்தையிடம் கூட, மற்றவர்களுக்காக சண்டையிடுகிறாய், நீ வித்தியாசமானவள் ! " .

எதை எடுக்க எதை விடுக்க. :) என் குழந்தையை மிஞ்சும் அன்பு அண்ணன் மேல்  இருக்கிறதா என்றால், இல்லை, என்னை சுற்றியுள்ள அத்தனை பேரின் மேலும் அன்பு இருக்கிறது. "பகையாளி" யாரென கேட்டால், இதுவரையிலும் அப்படி யாருமில்லை என்றே  சொல்லுவேன். அதிகமாக மனிதர்களை நேசிக்கும் அளவிற்கு, அவர்களை விட்டு விலகியும் வந்துவிடுவதுண்டு. வெறுப்பு என்று சொல்வதை விட, எல்லோரையும் போல என்னால் தாமரை இலை தண்ணீர் போல இருக்க முடியாமல் போவது முதல் காரணம். அடுத்து "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி"   இதற்கு மேல் வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை. கொடுப்பது என் வேலை.  பல சமயங்களில் இவை வலியே. 

எங்கிருந்தோ கூவும் குயில், 2, 3 முறை அதன் குரலை கேட்டப்பிறகு, தொடர்ந்து நானும் குரல் கொடுப்பேன்.. அது...."கூஊஊஊ....  "... நான் "கூஊஊஊ..." பின்னால் வந்து நின்று என் குடும்பத்தினர் வினோதமாக பார்ப்பார்கள், திரும்பி பார்த்தால் அவர்களின் உதடுகள் சத்தமில்லாமல் சொல்லும்."லூசு..".. அவர்களையும் நான் வினோதமாக பார்ப்பேன், என் உதடுகள் சொல்லும் "ரசனையற்ற ஜந்தூஸ்".

என்னைப்போலவே மற்றவர்களும் இருக்க வேண்டும் என எதிர்பார்க்கவில்லை, இருப்பினும் எப்படி தங்களை சுற்றி நடப்பவற்றை எந்த பிரஞ்ஞையும் இல்லாமல் எளிதாக கடக்கிறார்கள், சாத்தியப்படுகிறது என்ற வியப்பு இருக்கிறது. பாதையோரம் கிடக்கும் மனிதனை கடக்க நேர்ந்தால், என் பார்வையும் மனமும் கட்டுக்கடங்காமல் அந்த மனிதனை சுற்றும். அவன் ஏன் இப்படி கஷ்டப்பட வேண்டும்?அவனுக்கு என்னால் அல்லது என் மூலமாக ஏதேனும் செய்துவிட முடியுமா என மூளை திட்டங்கள் வகுக்கும். பக்கத்தில் வரும் என் கணவர் அதைப்பற்றி என்ன, அந்த பக்கம் கூட திரும்ப மாட்டார். நானே குறிப்பிட்டாலும்... ம்ம்ம்.. என்ற வார்த்தையை தவிர வேறேதும் வராது.

பிறப்பு, இறப்பு, சந்தோஷம் , துக்கம், சிரிப்பு, வியப்பு, வீழ்ச்சி, உடல் உபாதைகள் எல்லாமே அவரிடம் சத்தமின்றி, உணர்ச்சிகள் இன்றி ஒரே மாதிரியாக இருக்கும். எப்படி என்பதை அவரிடம் கேட்டாலும் அதற்கும் பதில் இருக்காது.   இதனை வைத்து அவர் ஒரு "ஞானி" என்று சொல்லிவிடமுடியாது. முதிர்ச்சி என்று காரணம் சொன்னாலும், இருக்கலாம் ஆனால் இப்படிப்பட்ட முதிர்ச்சி தேவையா என கேள்வி, ஏன் அப்படி நாமும் இருந்தால் என்ன? என்னை நானே கேட்டுக்கொண்டு கண்ணை மட்டும் இல்லை, என் மனம், உணர்ச்சிகள் எல்லாவற்றையும் அடக்கிக்கொண்டு இருந்து விட முயற்சி செய்து தோற்றுள்ளேன் அல்லது முயற்சிகளின் வெற்றிகளாக, உடல் உபாதைகள், நிம்மதியற்ற தூக்கமில்லா இரவுகளை கடந்து முகம் கண்கள் வீங்கி, அவரே என்னைப்பார்த்து. "என்னடி உனக்கு பிரச்சனை? முகம் ஏன் இப்படி இருக்கு? தலைக்குள்ள ஏதேனும் கொடஞ்சிக்கிட்டே இருக்கா? " என்று கேட்டதும் உண்டு.   திரும்பவும் ஒரு வரி இங்கே  "கடவுளின் படைப்பில் இப்படியும் ஒரு பிறவி" :).

மழை, வெயில், சாக்கடை, தாஜ்மகல், கிரிக்கெட் உலகக்கோப்பை வெற்றி, ரஜினியின் உடல்நிலை, அம்மாவின் ஆட்சி, ஜப்பான் பூகம்பம், திமுக வின் தோல்வி  எல்லாமே அவருக்கு ஒன்று தான். எதற்கும் அவரிடம் எந்த சலனமும் இருக்காது.  பூக்கள், பனித்துளி, பச்சைக்கிளியின் அழகு, தென்னங்கீற்றீன் அசைவு, அசைவின் வழியே நம்மை த்தொடும் காற்று, இசை, ஏசி யின் பின்புறம் கட்டியுள்ள அணில் குட்டியின் கூடு, அது போடும் சத்தங்கள், பக்கத்து வீட்டு தண்ணீர் தொட்டியில்  நிரம்பி வழியும் தண்ணீரின் சத்தம், சமையல் அறை கரப்பான் பூச்சி என எதுவும் அவரை கவர்ந்ததோ, தொந்தரவு படுத்தியதோ இல்லை, ஏன் இப்போது கண்ட நேரத்து மின்சார துண்டிப்புக்கூட அவரை புலம்ப வைத்தது இல்லை. இதற்காகவெல்லாம் அவர் நேரம் செலவிட்டது இல்லை.

இதைப்போலவே அவரின் அணுகுமுறை மனிதர்களிடமும் இருக்கிறது. எதுவும், யாரும் அவரை பாதித்து இல்லை. எதற்காகவும் அவர் சலனப்பட்டது இல்லை அல்லது இப்படி எது அவருக்குள் நிகழ்ந்தாலும் அதை அடுத்தவர் அறியாதவாறு மிக கவனத்தோடு பார்த்துக்கொள்கிறார்.  "சூர்யா படிப்புக்கு உதவுகிறார்" என்றால், "விஜய் செய்வது உனக்கு தெரியாது, விஷயம் தெரியாமல் சூர்யாவை ஆஹா ஓஹோ என புகழாதே" என்பார். ரஜனிஜி' க்காக கஷ்டப்பட்டால், உங்க தலைவர் ராணா ஹீரோயினை பார்த்து மொத்தமாக கவுந்துட்டாரு போல"  சொல்லிவிட்டு போகிறார். உடனே என் மூளை, அந்த ஹூரோயின் பின்னால் ஒரு நிமிடம் சென்றுவிட்டு திரும்பும். " சே..சே..ரஜினிஜி யை கவரும் அளவுக்கு அந்த பெண் இல்லை என்று தேவையில்லாத நினைவும், அதற்கான பதிலையும் அதுவே சொல்லிவிட்டு திரும்பும்"  ஏதும் பேசாமல் இருப்பதை பார்த்து. ."என்னடி யோசனை.. எப்படி கவுந்தார்ன்னு யோசிக்கிறியா?"  அவர் என்னை படித்துவிட்டது தெரிந்தும், பதில் வேறு மாதிரியாக கொடுப்பேன்."சம்பந்தமே இல்லாமல் உளராதீங்க.. அவருக்கு வேறு உடல் பிரச்சனைகள்.  யோகம் பழகி வருபவர், எப்படி அவருக்கு சுவாசம் சம்பந்தப்பட்ட பிரச்சைகள் வரும் என்று யோசிக்கிறேன்" என பதில் சொல்லுவேன்.  இதை அப்போது யோசித்திருக்காவிட்டாலும், எப்போதோ யோசித்ததை இப்போது பயன்படுத்திக்கொண்டு இருக்கிறேன்.

தேவைகள், ஆசைகள், தேடல்கள், முடிவுகள் எல்லாமே தனிமனிதன் ஒவ்வொருவரையும் பொறுத்து மாறுபடுகிறது. மற்றவரிடமிருந்து கிடைக்கும் சின்ன புன்னகைக்கூட சிலரின் நாள் நல்லபடியாக அமைய வழிவகுக்கும். ஒரு பெண்ணுக்கு, அவள் நினைத்த விலையில் நினைத்த புடவை கிடைத்து விட்டால் அன்றைய நாள் மகழ்ச்சியுடன் நகரும்.  இதை பல புடவைக்கடைகளில் பெண்களின் முகத்தில் காணலாம். ஆணுக்கு ஒரு தம் & குவாட்டர் என்று சொல்லி ஆணையும் பெண்ணையும் இங்கே சமன் படுத்திவிட்டு மேலே செல்கிறேன்.  திருமதி.கனிமொழி' க்கு இன்றைய தேவை வெளியில் வருவது. அதற்காக என்ன செய்யலாம் என அவரும் அவரை சுற்றி இருப்பவர்களும் சதா யோசித்து, அதற்காக எல்லாவிதமான சாத்தியக்கூறுகளையும் செய்துக்கொண்டு இருப்பார்கள். தேவையும் தேடல்களும் மனிதனுக்கு மனிதன் பலவாறு வேறுபடுகிறது.

இங்கே சூழ்நிலைகளும் சந்தர்பங்களும் நம் வாழ்வியல்பை பெருமளவு மாற்றி அமைக்கிறது. எல்லோருமே நம் பாதை இப்படி இருக்கவேண்டும் என்றே காலை முன் எடுத்து வைக்கிறார்கள். ஆனால் அவர்களின் பாதை அவர்கள் நினைத்தபடி இல்லாமல் மாறிக்கொண்டே செல்கிறது. அந்த மாற்றங்களை அறிவை க்கொண்டு அவ்வப்போது நேராக்கி கொள்ளவேண்டிய அவசியம் ஒவ்வொரு மனிதனுக்கும் இருக்கிறது, அவசியம், அவசியமில்லை என்பதும் ஓவ்வொருவருக்கும் அவர் எண்ணங்கள், தேவைகளுக்கு ஏற்றபடி மாறுபடும். எண்ணங்கள், தேவைகள் என்பதும் நிரந்தரமானவை அல்ல.  மாற்றங்களை தன் விருப்பப்படி சரிபடுத்தி செயற்படுத்துவது சிலர், அந்த சிலருக்கு பலவித போராட்டாங்கள் வாழ்க்கையில் கிடைப்பது தான் யதார்த்தம். போராட்டாங்கள் என்றுமே எளிமையாக, இனிமையாக அமைந்து விடுவதில்லை. போகிற வரை போகட்டும் என அதன் பின்னாலே சென்று, விதி யாரை விட்டது என விதியை நொந்தவர்கள் பலர்.

"நம் விதியை கூட மதியால் வெல்லலாம்" என்று நான் சொன்ன போது, நண்பர் "அதுவும் உன் விதியில் எழுதியிருக்கும்." என்றார். ம்ம்ம்.. அப்படியா? அது எப்படி?" என்று கேட்டாலும் அவர் சொன்னதும் சரியாக இருக்குமோ என்று நினைத்ததுண்டு.

இதற்குமுன் இப்படி புலம்பியவை :-  மனதின் ஆவேசங்கள்...மெளனப்புலம்பல்களாக... -2

அணில் குட்டி அனிதா : என் தலவிதி இந்த அம்மணிக்கிட்ட வந்து மாட்டீக்கிட்டது. !! ம்ம்ம்ம்ம்.. விதி யாரை விட்டது... எனக்கு கவிதா மூலம்.. ? உங்களுக்கு ????

பீட்டர் தாத்ஸ் : “Fate is for those too weak to determine their own destiny.”
.

வெண்மேகம்

வெள்ளை உடை தேவதைகள்..
நடுவில் நானும் ...

உணர்வுகள் ???
உடல் பஞ்சாக .......

பார்வைகள் சந்திக்கின்றன...
தேவதைகள் சிரிக்கிறார்கள்...
நானும் !

விடுபட்டு வந்தவர்கள்....
நானும் !
.



.

திரைக்கதை / Screen Play

திரைப்படங்களில்   "கதை, திரைக்கதை, இயக்கம்" இப்படி போடுவார்கள். இதில் திரைக்கதை என்பது என்ன?. திரைக்கதை என்ற வார்த்தையை சாமானியர்கள் கூட மிக சாதாரணமாக பயன்படுத்துவதை பார்த்து இருக்கலாம். திரைக்கதை என்பதின் அர்த்தம் புரிந்து தான் பயன்படுத்துகிறார்களா? ம்ம் தெரியவில்லை பார்ப்போம். !

கதை என்பதைவிடவும்,திரைக்கதை என்பது ஒரு படத்திற்கு மிகவும் முக்கியமானது. திரைக்கதை சரியாக அமைக்கப்படாத படங்கள், கதை எத்தனை சுவாரசியமாக எழுதப்பட்டு இருந்தாலும் வெற்றி பெறுவது என்பது கடினம். கதையை ஒரே வரியில் கூட சொல்லிவிட முடியும், ஆனால் அந்த கதையை காட்சிப்படுத்துவது திரைக்கதையே. திரைக்கதை போன்றே "எடிட்டிங்" ங்கும் ஒரு படத்தின் வெற்றிக்கு உதவக்கூடியது. எந்த காட்சி எந்த இடத்தில் வரவேண்டும், எத்தனை நீளமாக இருக்கவேண்டும், எது தேவை, தேவையில்லை என்பதை மிக சரியாக ஊகித்து படத்தை "எடிட்" செய்வதின் மூலம், திரைப்படத்தின் தேவையில்லாத காட்சிகளை எடுத்தும், தேவையான காட்சிகள் மிக சரியான இடத்தில் புகுத்தியும் பார்வையாளர்களை நெளியாமல் உட்காரவைக்கமுடியும். 

திரைக்கதை என்றால் என்ன ?. கதாப்பாத்திரம் எங்கிருந்து பேசுகிறான், எதில் அமர்ந்து, நின்று, நடந்து பேசுகிறான், அமரும் போது எந்த கோணத்தில் அமருகிறான், அவனின் உடை, அலங்காரம், அவனை சுற்றியுள்ள கதாப்பாத்திரங்கள் என்ன செய்துக்கொண்டு இருக்கிறார்கள் போன்றவற்றை திரைக்கதையே நிர்ணயம் செய்கிறது. சில மாதங்களுக்கு முன் பார்த்தப்படங்களில் "நான் மகான் அல்ல" படத்தின் திரைக்கதை மிகவும் என்னை கவர்ந்தது. ஒவ்வொரு காட்சியும் எப்படி இருக்கவேண்டும் என்பதை முன்கூட்டியே யோசித்து, திட்டமிட்டு, அதன்படியே காட்சியை அமைத்தலே திரைக்கதை என்பதாகும்.  அதாவது, ஒரு காட்சி தொடங்கியது முதல், அந்த காட்சி முடியும் வரை, காட்சியில் வரும் கதாப்பாத்திரங்கள், அவர்கள் இருக்கும் இடம், இடத்தை சுற்றி பின்னால் நடப்பவை, காட்சிக்கு சம்பந்தமில்லாதவர்களின் நடை உடை பாவனைகள், ஒரு வீடாக இருக்குமாயின் அது கதையில் சொல்லப்பட்ட கதாப்பாத்திரங்களுக்கு  தகுந்த மாதிரி அமைப்பது வரை எல்லாமே திரைக்கதையில் அடக்கமாகும்.

நான் மகான் அல்ல படத்தில் மிக யதார்த்தமாக காட்டப்பட்ட "ஒரு லோயர் மிடில் க்ளாஸ் வீடு", அங்கங்கே கிடக்கும் பொருட்கள், அந்த வீட்டு சமையல் கட்டு, திரைப்படத்திற்காக ஒரு செயற்கைத்தனம் இல்லாமல், எப்படி ஒரு வீட்டின் சமையல் அறை இருக்குமோ அப்படியே இருக்கும். பல படங்களில் இவையெல்லாம் செட்'போடப்படும் அல்லது மிகவும் அழகாக யதார்த்திற்கு அப்பாற்பட்டு காட்டப்படும். அப்படி இல்லாமல் மிக யதார்த்தமாக, அல்லது மிக சரியாக கவனமாக அமைக்கப்படும் காட்சிகளில் திரைக்கதை சரியாக அமைக்கப்பட்டு இருக்கிறது எனலாம்.

திரு.கமல்ஹாசன் படங்களில் இந்த யதார்த்தங்களை நிறைய காணமுடியும். காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக, தனிப்பட்ட முறையில் அவர் எல்லாவித முயற்சிகளையும், உழைப்பையும் கொட்டி இருப்பார். "அன்பே சிவம்" மிக சிறந்த உதாரணம். இருப்பினும்,சில காட்சிகளில் நாடகத்தன்மை, சினிமாத்தனம் தெரியும் தான். "உன்னை போல் ஒருவன்" திரைப்படத்தில், கமல்ஜி, அந்த கட்டிடத்தில் ஏறும் முதல் காட்சியில் தக்காளி சிலது கூடையில் இருந்து கீழே விழும். அதை திரும்ப எடுத்து தன் கூடையில் போட்டுக்கொண்டு மேலே செல்வார். அந்த காட்சி வரும் போதே, அந்த தக்காளி கூடை கண்டிப்பாக வேறொரு காட்சியில் வருமென்று ஊகிக்கமுடிந்தது. அதே கூடை கடைசி காட்சியில், அவர் திரு.மோகன்லால் அவர்களோடு பேசும் போதும் வரும். தக்காளி கீழே விழும். இவை எல்லாம் திரைக்கதையில் தொடர்புடைய காட்சிகள். இதில் கவனித்தது, முதல் காட்சியை விடவும், கடைசி காட்சியில் கூடையில் தக்காளி அதிகமாக இருக்கும்,   தக்காளி கூடையிலிருந்து விழவேண்டும் என்பதற்காக கொஞ்சம் அதிகமாக வைக்கப்பட்டு இருக்கலாம். பார்வையாளர்கள் இதனை ஒரு பெரிய விஷயமாக எடுத்துக் கொள்ளமாட்டார்கள் என்று எண்ணியிருக்கலாம்.. இருப்பினும், இதை ஒரே அளவாக  வைத்திருக்கலாம் என்பதே பார்வையாளனாக நான் எதிர்ப்பார்த்தது. அப்படி இருந்தால் தான் அது யதார்த்தம் இல்லையேல் சினிமாத்தனம்/கவனமின்மை ஆகிவிடுகிறது.

சில காட்சிகள் நன்றாக வரவேண்டும் என்பதற்காக யதார்தத்தை மீறுதல் மிகைப்படுத்திக்காட்டுதல், அப்படிக்காட்டும் போது பல நேரங்களில் அந்த காட்சிகள் மனதில் நேர்மறையாகவோ, எதிர்மறையாகவோ பார்வையாளனை சேர்ந்துவிடும் வாய்ப்பு இருக்கிறது.  இதைத்தாண்டி நாம் அத்தனை உன்னிப்பாக காட்சிகளை கவனிக்கமாட்டோம் என்றும் இயக்குனர், மற்றும் திரைக்கதை வடிவமைப்பாளர் நினைத்திருக்கலாம். 

இன்னுமொரு உதாரணம், மைனா படத்தில், அனைவரும் பேரூந்தில் பயணம்  செய்யும் போது ஒரு பாடல் வரும், அந்த பாடலின் நடுவே சம்பந்தமே இல்லாமல் ஒரு "எவர்சில்வர் தூக்கை" காட்டுவார்கள். அது, விபத்து நடந்து, இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரம் கண்ணாடியில் விழுந்து கிடக்கும் போது, நமக்கு பயத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும். அந்த தூக்கு விழுவதற்கும், கதாநாயகன், இன்ஸ்பெக்டர் கதாப்பாத்திரத்தை தூக்கி, மயிரிழையில் காப்பாற்றுவது போன்று காட்டப்படும். அந்த தூக்கிற்கு பதிலாக எதை வேண்டுமானாலும் அங்கே காட்டியிருக்கலாம். ஆனால் ஒரு சின்ன தூக்கை பயனபடுத்தி இருப்பது திரைக்கதையின் புதிய உத்தி அல்லது சாமர்த்தியம். 

எப்படியோ திரைக்கதை என்பது - ஒரு காட்சியினை, அதனை அழகுப்படுத்த, மெருகேற்ற படம் முழுக்க  பெருந்துணையாக தொடர்ந்து வரக்கூடிய காட்சி அமைப்புகள் எனலாம். சில திரைக்கதை அமைப்புகள் நம்மை வெகுவாக கவர்ந்து இழுத்துவிடும்.

நான் மகான் அல்ல" திரைப்படத்தின் திரைக்கதையும், எடிட்டிங்கும் மிக நன்றாக இருந்ததாக எனக்கு தெரிந்தது.  உதாரணமாக ஒரு பெண்ணின் கொலை, அது எந்த சந்தர்பத்தில் நடந்தது என எளிதில் நாம் கணித்து விடாதபடி அமைந்த திரைக்கதை நிச்சயமாக"சபாஷ்" போட வைத்தது.  ஏனென்றால், கடற்கறையில் ஒரு காதல் ஜோடியினை பிரித்து, அந்த பெண்ணை மாணவர்கள் தூக்கிசெல்லவதாக ஒரு காட்சி இடம்பெறும். நடுவே ஒரே ஒரு முறை, மாணவர்களின் வீட்டில் கட்டிலுக்கு அடியில் மறைத்துவைக்கப்பட்ட பெண்ணின் உடல் வெளியில் இழுக்கப்பட்டு, தலைத்துண்டாக நறுக்கப்படுவது காட்டப்படும். ஆனால் முன்னர் தூக்கிச்சென்ற பெண்ணும், இந்த பெண்ணும் வேறுபட்டவர்கள் என்பது, கதையில் நாம் எதிர்ப்பார்க்காத ஒரு சந்தர்ப்பத்தில் காட்டப்படும். படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்ட விதம் தான், நமக்கு கொலைசெய்யப்பட்ட பெண்ணும், கடற்கரையில் தூக்கிச்சென்ற பெண்ணும் வேறு என்பதை உணர்த்தும். நல்ல திரைக்கதைக்கு இது ஒரு எடுத்துக்காட்டு. விஜய் நடித்த "கில்லி" திரைக்கதை யில் ஒரு வேகம் இருக்கும், அடுத்து என்ன அடுத்து என்ன? என்ற ஆர்வத்தை உண்டாக்கும்.

சொதப்பல் திரைக்கதைக்கு நிறையவே எடுத்துக்காட்டுகள் உண்டு.  ஒரு படத்தை நல்ல திரைக்கதை அமைத்து எடுப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். இரண்டரை மணி நேரம் அமர்ந்து பார்த்துவிட்டு விமர்சனம் என்ற பெயரில் குத்தம் குறைகளை பார்த்த காசு செரிக்க எழுதிவிட முடியும். ஆனால் சினிமா எடுப்பது என்பது அத்தனை எளிதான விஷயம் இல்லை.  நம் விஜி ஒரு லைவ் டாக் ஷோ விற்கு சென்று அது எடுக்கும் விதத்திலும், இயக்குனர் சார்ந்து எல்லா விஷயங்களும் நடப்பதையும் பார்த்து பொறுமையின்றி வந்துவிட்டார். அதனை ஒரு பதிவாக எழுதி இருந்தார்.  தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மட்டும் இல்லை, தொடர்கள், படங்கள் என்று எல்லாமே இப்படி மிகவும் சிரமப்பட்டு, நேரம் காலமின்றி, பல மனிதர்களை ஒருங்கிணைத்து, சரிக்கட்டி, சின்ன சின்னதாக, பல கெடுபிடிகளை சந்தித்து, பல மணி நேரம் இரவு பகலாக படப்பிடிப்பு நடத்தி,  பிறகு அதனை கோர்வையாக்கி வெட்டி, ஒட்டி நாம் பார்த்து மகிழ ஒரு நிகழ்ச்சியாக, தொடராக, திரைப்படமாக கொடுக்கிறார்கள்.

எந்திரன் திரைப்படத்தில் ஆசியாவில் இரண்டாவதாக அதிக சம்பளம் வாங்கிய திரு.ரஜனிகாந்த் அவர்களின் உழைப்பு?? தேவையா என்ற கேள்வியை எழுப்பாமல் இல்லை. அவர் இப்படிப்பட்ட ஒரு படத்தில் நடித்துதான் அந்த சம்பளத்தை பெற முடியும் என்பதில்லை. ஆனாலும் உழைப்பை கொட்டி எடுக்கப்பட்ட ஒரு படம். நாம் நான்கு வரிகளில் படத்தைப்பற்றிய நெகட்டிவ் விமர்சனங்களை வைத்துவிடமுடியும்.

ஆரம்பத்திலிருந்தே  பார்வைகளில் சினிமா விமர்சனம் எழுதுவதில்லை என்று முடிவு செய்து எழுதுவதில்லை. நந்தலாலா முதலும் கடைசியுமாக இருக்கும். காரணம் மிகவும் கஷ்டப்பட்டு எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு நாம் மிக எளிதாக ஒரு பதிவின் மூலம் "நன்றாக இல்லை" என்று விமர்சனம் செய்துவிட முடியும், ஆனால் மாதக்கணக்கில் உழைப்பை கொட்டி, எதிர்காலத்தை எதிர்ப்பார்த்து பிழைக்கும் பலரை அப்படி எழுதும் போது மறந்துவிட முடிவதில்லை. மிகவும் கஷ்டமான சூழ்நிலைகளில்,  நிறைய எதிர்ப்பார்ப்புகளை, அளவே இல்லாத கனவுகளை தேக்கிய வேலை இது. அது தான் வாழ்க்கை என இருப்பவர்கள், தங்களது உழைப்பை சரிவர பயன்படுத்தி வெற்றிப்பெற வாழ்த்துவதை தவிர்த்து, வேற என்ன செய்துவிட முடியும் நம்மால். :)

நன்றி : கேபிள்ஜி (நேரம் ஒதுக்கி, பதிவை வாசித்து, திரைக்கதை என்பதை பற்றிய என் புரிதலில் உள்ள தவறுகளை சுட்டிக்காட்டினார். திருத்திக்கொண்டேன்)

அணில் குட்டி : வூட்டுல படம் பாக்கும் போது வாய மூடாம அடிக்கிற கமெண்டு பத்தாதுன்னு.. இது வேறையா...  ???

பீட்டர் தாத்ஸ்: You convince yourself you can fix the screenplay, because there`s a lot of money involved. But you can never make it work. If the script has a hole in it, it will always have that hole.Nick Nolte

உனக்கு 20 - எனக்கு 18

கவி : நவீனா........ அடி வாங்கப்போற நீனு இப்ப...

நவீன் :  இரு இரு..!!  நானும் சின்ன புள்ளையில இருந்து பாக்கறேன், இந்த அம்மாங்க புள்ளைங்கள அடிக்கறது " ஒன் சைட்" ஆவே இருக்கே.... ??என்ன கதை இது???  பேலன்ஸ் இல்லாத இந்த  ஒன் சைட் ரூல் போட்டது யாரு..???  காலம் பூரா அம்மாங்க அடிப்பாங்க...புள்ளைங்க வாங்கனுமா..? என்ன நியாயம் இது? அதுக்கு முதல்ல நீ...பதில் சொல்லு...

கவி: இப்ப என்ன....?  உனக்கு என்னை அடிக்கனுமா?

நவீன் : ஹா ஹா ஹா.. .ஆனாலும் உன் காமெடி சென்ஸ் க்கு  அளவே இல்லாம போச்சிம்மா...... நீ இருக்க சைஸ் க்கு நானெல்லாம் அடிச்சா...  ஹய்யோ ஹய்யோ.. .. .. என் கால் ஹைட் கூட இல்ல நீனு... ..போ..போ... போ.....வேலைய பாரு.. போ.........

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.... !!

*************************
காலிங் பெல் அடிக்க, கதவை திறக்கிறேன்.. நவீன்  & ஃப்ரெண்ட்ஸ் குரூப் நிற்கிறார்கள்

கவி ; :)) ஹாய் கைஸ்... :)) வாங்க.வாங்க....

வெங்கட் : ஹாய்....ஆன்ட்டி, யூ லுக் வெரி சிலிம்ம்ம்ம்...

கவி : ஏன்ன்டா???

வெங்கட் : நிஜம்மா த்தான் ஆன்ட்டி, லாஸ்ட் டைம் பாத்ததுக்கு ..ரியலி யூ பிக்கெம் தின் ஆன்ட்டி...

கவி : திருப்பியும் ஏன்ன்டா.. ???

நவீன் : டேய் சனியனே.. ...........மதியம் கண்டிப்பா சோறு போடுவாங்க........... போதும்......வந்து தொல... !!

கவி :  கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....
**********************************

துணி துவைக்கும் போது ஏகத்துக்கு திட்டிக்கொண்டே இருக்கிறேன்..

நவீன் : எச்சூச்சுமி... ஏன் என்னவோ தனியா பேசிக்கிட்டேஏஏஏஏ இருக்க? எனி கிளைமெட் சேன்ஜ் ப்ராப்ளம்..??

கவி : (செம கடுப்பில்) ம்ம்ம்ம்...எல்லாம் என் தலை எழுத்து. .எரும மாடுங்களோட துணியெல்லாம் துவைக்கனும்னு இருக்கு..........

பழம்நீ:  ஏன்டா, அவ கை தான் வீங்கி இருக்குன்னு தெரியுமில்ல, உன் துணிய நீ துவைச்சிக்கோன்னு சொன்னேனில்ல.. ஏன் செய்ய மாட்டற. .அவ பாரு எவ்ளோ கேவலமா திட்டறான்னு......

நவீன் : ஹா ஹா.. :))) எது கேவலம்.?!! அம்மா புள்ளைய திட்டறதெல்லாம்.... காலங்காலமா நடக்கற ஒரு சாதாரண விஷயம். இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணவே கூடாதுப்பா..
.
பழம்நீ : உன்னால...... என்னையும் சேர்த்து திட்டறாடா...

நவீன் : அய்யய்ய என்ன உங்களோட பெரிய பிரச்சனையா போச்சி... பொண்டாட்டின்னா அப்படித்தான்ப்பா.... நீங்களும் ரியாக்ட் செய்யாம இருங்க.. அவங்க பாட்டுக்கும் கத்திட்டு....  இருப்பாங்க... ஆனா ஒரு ஸ்டேஜ்ல ....பாருங்க...வேலயும் முடிஞ்சி இருக்கும் .. இதுக்கெல்லாம் ரியாக்ட் பண்ணா அப்புறம் நாம வேல செய்ய வேண்டியதா போயிடும்ப்பா...!

கவி : அடப்பாவி... :(((((( !
********************************

நவீன் : அப்பா, சனிக்கிழமை, க்ளாஸ் வைக்கறாங்க.. என்னால வர முடியாதுன்னு சொல்லிட்டு வந்துட்டேன். உங்களுக்கு ஃபோன் வரும், காலேஜ் வந்து, கையக்கட்டிக்கிட்டு பவ்யமா நின்னு, "என் புள்ள மேல தான் தப்புன்னு சொல்லாதீங்க." என் மானம் மரியாதை எல்லாம் போயிடும்....அவங்கக்கிட்ட "ஆமா அவன் வரமாட்டான் அவனுக்கு வேற வேல இருக்குன்னு சொல்லுங்க " சரியா...!

பழம்நீ: ................................... (என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : என்ன அவங்கள பாக்கறீங்க. சொன்னது புரிஞ்சிச்சாஆ...?

பழம்நீ: ............................(என்னைப்பார்க்கிறார்).. அப்படியே.. .......

நவீன் : அப்பா உங்க கிட்ட தான் பேசறேன்..என்ன அவங்கள லுக் விடறீங்க..???

கவி :  டேய்...புரியலையா..? நீ  அப்படியே என்னை மாதிரி இருக்கியாம். !! :))))))))))  ஆனா, இந்த சீன் க்கு எல்லாம், அப்பா சரி வரமாட்டார்டா....  நான் வேணும்னா காலேஜ்'க்கு வரேன்.......சண்டப்போட்டு ரொம்ப நாள் ஆச்சிடா.. ப்ளீஸ், ப்ளீஸ்...நான் வரேண்டா....

பழம்நீ :.............. (என்னைப்பார்க்கிறார்.. பல்லை நற நறவென கடித்துக்கொண்டு) .......அதான்......அப்படியே.. .......
 

கவி :...ஹி ஹி... எப்படிப்பா உங்களுக்கு மட்டும் பல்லை கடிச்சா இவ்ளோ  சத்தம் வருது.. நாங்க கடிச்சா வரலியே.. ?!
 
பழம்நீ:  (ரொம்பவும் கடுப்பாகி.. வேற என்ன நற நற நற தான்... )

*******************
சமையல் அறையில் இருக்கிறேன், பழம்நீ தனியாக ஹாலில் பேசிக்கொண்டு இருப்பது கேட்கிறது..

பழம்நீ: ...கடவுள் கிட்ட.. ஒரு சாதாரண.. .ரொம்ப சாதாரண பொண்ணு வேணும்னு தான் கேட்டேன்.. .ஆனா.. எனக்கு இப்படி ஒரு எக்ஸ்ட்ராடினரி பொண்ணை கொடுத்து...................

கவி : (கொடுத்து ன்னு சொல்லும் போது - வெளியே எட்டி பார்க்கிறேன்..........)

பழம்நீ: (நான் பார்ப்பதை கவனித்தவர்) என்னை பெருமைப்படுத்திட்டாரேஏஏஏ..!! ( :(((((((((((( )

கவி:  ப்பா...நான் எட்டி பாத்ததுக்கு அப்புறம் ஒரு கேப் விட்டீங்களே.. அதை ஃபில் பண்ணுங்க.....உண்மையில என்ன சொல்ல வந்தீங்க??? அதை சொல்லுங்க..

பழம்நீ: சே..சே.... இல்லையே..... நிஜம்மாவே உன்னை நினைச்சி எனக்கு எப்பவுமே பெருமைத்தாண்டி... நீ ஒரு .................நீ ஒரு..........

நவீன் :  நீ ஒரு லூசு .... ன்னு சொல்றாரு ம்மா..!! :)))))

கவி :   அவ்...... இவன் எப்ப வந்தான்... . ?!!  :(((((((( 
************************

கவி : ஏன்டா..அந்த பொண்ணு ஏன் இவ்வளாம் குட்டியா ஒரு ஷார்ட்ஸ் போட்டுக்கிட்டு இருக்கு... ஃபேஸ் புக் ல பார்த்தேன்...

நவீன் : அவ ஸ்டெல்லா மெரிஸ் ல ப்டிக்கறா...அப்படித்தான் ட்ரஸ் பண்ணுவா... அது இருக்கட்டும், அவ ஷார்ட்ஸ் போட்டு இருந்தா உனக்கு என்ன?

கவி :  .  வீட்டுல ன்னா பரவாயில்ல.. காலேஜ் கூடவா அப்படி போறா?

நவீன் :  அவ என்ன ட்ரஸ் போட்டா உனக்கு என்னம்மா. .ஏன்ம்மா என் உயிர வாங்கற...நீ ஏன் இதெல்லாம் கேக்கற...

கவி : இல்லடா.. ச்சும்மா பொது அறிவை வளக்கலாம்னு தான்...

நவீன் : அது அறிவு இருக்கவங்க செய்ய வேண்டியது ..

கவி : :((((((((((((((


****************
பழம்நீ : ஆமா ஏதோ ஆசிரமத்துல போயி சேர போறேன்னு சொன்னியே எப்ப போக போற....??

கவி : ...............????????? ................... (என்ன குடும்பம் டா இது ?!! )

நவீன் : ஹா ஹா ஹா ஹா ஹா..... ஹய்யோஓ ஹய்யோஒ.... இந்த மாதிரி அவங்க சொன்னதை நீங்களும் நம்பிட்டீங்களா??? ஹா ஹா :))))))

பழம்நீ:  அடிக்கடி சொல்றாடா... அதான் கேட்டேன்

நவீன் : ம்க்கூம்.. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளா சொல்றாங்க ஆனா போகத்தான் மாட்டறாங்க... :)))))), உங்களுக்கும் கொஞ்ச நாள்ல பழகிடும்..... .விடுங்க :)))))))

பழனி : அப்ப போகவே மாட்டாளா...:(((((((

கவி :  :(((((((( . .. மே ஐ கம் இன்..... ..நீங்க இரண்டு பேரும் என்னைப்பத்தி பேசிக்கிட்டு இருக்கீங்கன்னு நினைக்கிறேன். வில் யூ போத் க்ளோஸ் தி டோர்.!!

நவீன் : அத நீ செய்தா இந்த வீடே நிம்மதியா இருக்கும் நீயும் ஆசிரமத்துக்கு  போக வேண்டி இருக்காது. !!

கவி : கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...
************

நவீன் : (சீரியஸாக) அம்மா  காலையில் செய்யற டிபன் எல்லாம் நீ ஏன் மதியம் செய்யற ???

கவி : ??????????????????????

நவீன் : (மறுபடியும் சீரியஸ்) எப்பவுமே பொங்கல் எல்லாம் காலையில் தானம்ம்மா செய்வாங்க??

கவி : ஞே !!

(அவ்வ்வ் நான் செய்து வைத்திருந்தது என்னவோ சிக்கன் பிரியாணி..?!!! .. :(((((((, என்னா கிருவித்தனம்!!  புள்ளையா இது..?!! )
*******************

அணில் குட்டி : காமெடி பீஸ் ன்னு உலகத்துக்கே தெரியும். இதுல இதை வரலாற்றுல வேற பதிஞ்சி வக்கறாங்களாமாம்..... ... வெளங்கிடும்..!!.

இந்த தலைப்புக்காக டைம் ஆனாலும் பரவாயில்லைன்னு க்யூல வந்து  ..ஒவ்வொருத்தரா அம்மணிய துப்பிட்டு போங்க.. யாரும் மிஸ் ஆகக்கூடாது சொல்லிட்டேன்.. !!

பீட்டர் தாத்ஸ் : A man loves his sweetheart the most, his wife the best, but his mother the longest

பிரார்த்தனை

எனக்கு மிகவும் பிடித்த பிரபலங்கள் இருவருக்காக அவர்களின் நீண்ட ஆயுள், அமைதியான வாழ்க்கை மற்றும் ஓய்விற்காகவும் பிரார்த்தனை செய்துக்கொள்கிறேன்.

கலைஞர் :-  தோல்வியை முதன் முதலாக பார்ப்பவர் அல்ல. இருப்பினும் இந்த தேர்தலின் முடிவுகள் மிகவும் மோசமானவை. இந்த தள்ளாத வயதில் இது வேதனை. தேர்தல் முடிவுகள் அறிவிக்கும் ஒரு நாளில், அவரின் கோபாலபுரத்து வீட்டு மாடியில், எந்தவித டென்ஷனும், எதிர்ப்பார்ப்பும், பரப்பரப்பும் இல்லாமல் கதை எழுதியவர். அந்த அளவு மனதளவில் திடமான, நிதானமான, பதட்டம் இல்லாத மனிதர்.


80 வயதுக்கு மேல் இந்த அளவு ஞாபக சக்தியோடும், சோர்ந்து போகாத அவரின் உழைப்பும், பேச்சு மற்றும் எழுத்து ஆற்றலும் பாராட்டுக்குறியவை.  

அவரின் இந்த வயதான காலத்தில், அவரைச்சுற்றி நடக்கும் எல்லாவிதமான நல்லது கெட்டதுகளை தாங்கும் உள்ளத்தையும், தளராத மனதையும், மன அமைதியையும், உடல் மற்றும் அறிவுக்கு தேவையான ஓய்வையும்  கடவுள் அவருக்கு கொடுக்க வேண்டிக்கொள்கிறேன். 

திரு.ரஜினிகாந்த் : தலைவாஆஆஆஆஆ ??? என்ன இது மூன்றாம் முறையாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறீர்கள். கலைஞர் கூட பரவாயில்லை போலவே உங்களைப்பற்றிய கவலை ஆட்கொள்கிறது. :(.  இன்னும் எத்தனை குட்டி குட்டி கதாநாயகிகள் உங்களோடு நடிக்க வேண்டும் என்ற கனவோடு இருக்கிறார்கள் என்று தெரியுமா? எல்லோருக்கும் கால்ஷீட் கொடுங்கள். நேற்று பிறந்த குழந்தைக்குக்கூட உங்களின் படங்கள் தான் பொழுதுப்போக்கு.

என் குழந்தை பல வருடங்கள் கழித்து உங்களின் எந்திரன் படம் பார்த்து ரசிகன் ஆகியிருப்பது ஆச்சரியம். படம் முடிந்து வந்து  " ரஜினி.. இல்லன்னா படம் இல்லம்மா.. ரஜினி க்காக படம் பார்க்கலாம்.. one man runs the movie " என்றான்.  அதற்கு பிறகு தொடர்ந்து உங்களின் படம் எப்போது டிவி யில் வந்தாலும் ஆர்வமாக பார்க்க ஆரம்பித்து இருக்கிறான். இன்னும் எத்தனை குழந்தைகள் உங்களின் விசிறிகளாக...என்னையும் சேர்த்து... (ஏய் யாராது கல்லை எடுக்கறது..பேச்சு பேச்சா இருக்கனும்.!! )

உங்களின் உடல்நலம் சீக்கிரமே குணமடைய பிரார்த்தித்து கொள்கிறேன். மிக சீக்கிரம் உங்கள் உடல் நலம் தேறி வந்து....... உங்களுக்கு கொஞ்சமும் மேட்ச் ஆகாத அந்த மொக்கை ஃபிகர்.... யாராது ..ஹான்.அதான் அந்த... தீபிகா படுகோன் கூட ராணா படத்தை நடித்து முடிச்சி, அந்த அம்மாவை வீட்டுக்கு அனுப்பி விடுங்க......

தலைவர் ஸ்டைலுக்காக... எப்பவும் எனக்கு பிடித்த அவரின் எவர் கிரீன் பாடல்... 

"சிங்கம் ஒன்று நேரில் வந்து ராஜ நடை போடுதே.. " அவர் கோட் போட்டு இருக்க ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்.... ஹேர் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்டைல்... டான்ஸ் மூவ்மென்ட்ஸ் (அவருக்கு ஆட வராதுன்னு சொல்றவங்க இந்த பாடல் மற்றும் மன்னன் படத்தில் குஷ்பூ'வோடு ஆடும் பாடலை பார்க்கலாம்).....
தலைவா நீங்க சூப்பர்..!! உங்க ஸ்டைல் சூப்பர்.. !! உங்க டான்ஸ் சூப்பர்..!! உங்க சிரிப்பு சூப்பரோ சூப்பர்.. ....!! மொத்தத்தில் ....சரி வேணாம் விடுங்க.. பொறாமை பிடிச்ச கூட்டம் பின்னால் நிக்குது...



ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால்...




தேடலும் சுவடுகளும்..


கடற்கரை-
இருள் சூழும் நேரம்
மழை வரும் வானம்
தனிமை-

முழங்கால்களை
கட்டிக்கொண்டு-

சுழன்று வரும் காற்று
சற்றே வேகமாய்
மோதிச்செல்கிறது -
முகர்ந்ததில்
உப்பின் வாசம் -

தன்னிச்சையாக
நாக்கை சுழட்டி
உதட்டோரம் சுவைக்கிறேன்
கரித்தது!

கடலின் எல்லையை
தேடி
கண்கள்
நெடுந்தொலைவு
பயணக்கிறது 

தொலைவில்
தள்ளாடும் குட்டி படகு
பெரிய வெள்ளை கப்பல்
கடல் பட்சிகள்
அலைகள் அடங்கிய
நிதானமான சாம்பல்
நிறக்கடல்  -

சிமிட்டாத இமைகள்
சுருக்கிய புருவங்கள்
பார்வையில் கூர்மை
நிற்காமல் அலைகிறது
எல்லை கிட்டவில்லை...

புரிந்த தருணத்தில்
வேகமாய் மீண்டு வந்த பார்வை
அருகில் '
மெதுவாய் மணற்பரப்பில்
உலாவுகிறது -

எட்டிய தூரம் வரை
பாதச்சுவடுகள் -
ஒவ்வொன்றும்
ஒவ்வொரு திசை நோக்கி
வெவ்வேறு அளவுகளில்-

எதையோ
தேடி தேடி... தேடி தேடி...

என் பாதங்களை
சாய்ந்து பார்க்கிறேன்
பாதங்களின் அடியில்
சுவடுகள்....சிரித்தன..

தேடல் எனக்கு மட்டுமல்ல..........

லக்கிலுக் - இதுதான் உங்களுக்கு கடைசி எச்சரிக்கை !!!

என்ன எடுத்தவுடனே கடைசி? முதல், மிடில் எச்சரிக்கை எல்லாம் எங்கன்னு கேக்காதீங்க . அதெல்லாம் மெயில் ல முடிஞ்சிப்போச்சி. அவரு எதையும் கேக்கறாப்ல இல்ல, அதனால இது கடைசி எச்சரிக்கை ....தொடர்ந்து படியுங்கள்...  எச்சரிக்கை நடுவில் வரும்...

இணைய நண்பர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து பகல் இரவு பாராமல், மீனவர்களின் வாழ்வியல்பு மாற்றத்திற்காகவும், இலங்கை கடற்படையால் தன் வாழ்க்கையை இழந்து வரும் மீனவர்களின் பாதுக்காப்பு வேண்டியும் பல்வேறு விதங்களில் தங்களின் ஆதரவையும், தற்போதைய அரசுக்கு எதிராக தங்களின் எதிர்ப்பையும் பதிவு செய்து வருகின்றனர்.

அதில் முதற்கட்டமாக, நாம் ஒன்றுகூடி "கீச்சின்" மூலம் நம் எதிர்ப்பை தெரிவித்துக்கொண்டு இருக்கிறோம்.  அடுத்து, நம் நண்பர்கள் பலர் சமீபத்தில் மென்பொருள் வல்லுனர்களின் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்துக்கொண்டு மீனவர்களுக்காக தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.

இதற்கு நடுவே, இணைய நண்பர்கள் சிலர், மீனவர்கள் பிரச்சனை சம்பந்தமாக அரசியல் தலைவர்களையும், மீனவ பிரதிநிதிகளையும் சந்தித்து பேசி வருகின்றனர். சந்திப்பு மற்றும் பேச்சு விபரங்களை tnfisherman கூகுள் குழுமத்திற்கு அனுப்புகிறார்கள். http://groups.google.com/group/tnfisherman.

30 ஆண்டுகளாக தொடரும் இந்த பிரச்சனையை இத்தோடு  நாம் விட்டுவிடாமல்,  மீனவர்களை அவர்கள் இடத்தில் சந்தித்து, அவர்களின் வாழ்வியல் முறைகளையும், பிரச்சனைகளையும் நேரில் கண்டு, அதனை நம் வாயிலாக எழுத்தாக்கி பலரை சென்றடைய முயற்சி நடந்து வருகிறது. வருகின்ற மார்ச் 4,5 தேதிகளில் நாகையிலும் - 6, 7 தேதிகளில் ராமேஷ்வரத்திலும் மீனவ கிராமங்களுக்கு நேரடியாக சென்று, அவர்களின் பிரச்சனைகளை கேட்டறிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. திட்டமிடப்பட்டுள்ள நான்கு நாட்களில், இரண்டு நாட்கள் அல்லது ஒரு நாள் கலந்துக்கொள்ள முடியுமானால் கூட வரலாம்.

இதற்கான போக்குவரத்து மற்றும் உணவு செலவு மட்டும் நாம் பார்த்துக்கொண்டால் போதுமானது. தங்கும் வசதி, கிராமங்களுக்கு அழைத்து செல்லுதல் போன்றவற்றை அங்கிருக்கும் உள்ளூர் நண்பர்கள் செய்வதாக ஒப்புக்கொண்டு உள்ளனர்.  உங்களுக்கு அதில் சிரமம் ஏதும் இருக்காது.

*************************
விளம்பர இடைவேளை - 

விளம்பரம் உத்தி ன்னு கேள்விப்பட்டு இருப்போம்.  விளம்பரங்களால் மக்களின் கவனத்தை ஈர்த்துவிட்டால் போதும், நம் விளம்பரப்படுத்தும் பொருளினை பற்றிய விபரம் எளிதில் மக்களை சென்றடைந்துவிடும். அப்படி ஒரு விளம்பரம் தான் இது. :) லக்கி க்கு என் நன்றிகள். ஒரு நல்ல விஷயத்திற்கு அவர் பெயரை பயன்படுத்திக்கொள்கிறேன். பத்திரிக்கைகளில் கவர்ச்சிப்படத்தை முன் அட்டையாக போட்டு, பார்வையாளர்களின் கவனத்தை இழுப்பதை போன்று இங்கு கவர்ச்சி நாயகன் "லக்கி".  அவ்வளவு தான், எனக்கும் அவருக்கும் வாய்க்கால் வரப்பு தகறாரு என்று ஒன்றுமில்லை. :)) எவ்வளவு தான் மாங்கு மாங்கென்று எழுதினால் கூட, தலைப்பை வைத்து தான் மக்கள் பதிவினை படிக்க வருகிறார்கள். உங்கள் அனைவரின் கவனத்தை கவரவேண்டி வைக்கப்பட்ட பொய்யான ஒரு தலைப்பு. :) லக்கியின் பெயரை சொல்லி நன்மை நிகழ்தால் எல்லாம் லக்கிக்கே... :)  
*************************

இந்த பயணம் பற்றிய அறிவிப்பை தொடர்ந்து, இது வரையில் 8 நண்பர்கள் கலந்துக்கொள்ள முன் வந்துள்ளனர்.

1    மா சிவகுமார்
2    நாகை சிவா
3    அறுசுவை பாபு
4    கவிராஜன்
5    ரோசா வசந்த்
6    உண்மை தமிழன்
7    சாந்தப்பன்
8    அபிஅப்பா

உங்களுக்கும்  கலந்துக்கொள்ள ஆர்வம் இருப்பின், masivakumar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பெயர், தொலைபேசி எண், கலந்து கொள்ளும் நாட்கள் என்ற விபரங்களை குறிப்பிட்டு பதிவு செய்து கொள்ளுங்கள்.

மேலும், இதனைப்பற்றிய முழுவிபரங்கள் அறிய கீழ்கண்ட பதிவுகளை படிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

1. வலைப் பதிவர்களுக்கு ஒரு அழைப்பு 
2. நம் மீனவர்களுக்காக - செயல்படும் நேரம் இது !
3. பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

தினம் தினம் செத்து பிழைக்கும் மீனவர்களுக்காக, நம்மால் முடிந்த உதவிகளில், இந்த எள்ளளவு உதவியும் ஒன்று.  ஆர்வமும், விருப்பமும் இருப்பவர்கள், இதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். விரைந்து உங்களின் பெயர்களை பதிவு செய்யுங்கள், உங்களை பின் தொடர்ந்து பலரும் வருவர்....

நன்றி !!

அணில்குட்டி : ம்ம்ம்.. இவிங்களுக்கு முன்ன மூனு நல்லவங்க இது சம்பந்தமா போஸ்ட் போட்டு இருக்காங்க. . எவ்ளோ டீசன்ட்டா, ரிலேட்டடா தலைப்பு வச்சி இருக்காங்க..  அம்மணி மட்டும்.. .. ...... ஒன்னும் பண்ணமுடியாது..  தலைப்பு ஹூரோ லக்கிலுக் வந்து கழுத்தை திருப்பினா தெரியும்... கதை :)) நமக்கென்ன...!
.

உ.த & லக்கி - என்னை கொலகாரி ஆக்காதீங்க சொல்லிட்டேன்!

திரை விமர்சனம் எழுதறேன் ன்னு சொல்லிக்கிட்டு இரண்டு பேரும்..... அய்யோ யம்மா.. இந்த படத்தை பாக்கதீங்கன்னு ஒவரா சவுண்டு விட்டு, பொங்கோ  பொங்கோன்னு பொங்கி.............. அதை நானும் படிச்சி,  பொங்கி உணர்ச்சி வசப்பட்டு பயந்து போயி, இந்த படத்தை என் குழந்தை பார்த்துட்டா என்ன செய்யறதுன்னு ஓவரா யோசிக்க ஆரம்பிச்சி.................... ............... அப்புறம் என்ன??............  படத்தை அவனுக்கு முன்ன நான் பார்க்கனும்னு முடிவு செய்துட்டேன். அவன் பார்த்தப்பிறகு, உக்காச்சி பொறுமையா அவனுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம்னு வூட்டுக்காரை இம்சை செய்து (எவ்ளோ முடியுமோ) , அர்ஜன்ட் அர்ஜன்ட் ஆ டிக்கட் புக் செய்து.. போயி பார்த்தா ஆஆஆஆ.... அவ்வ்வ்...................

மரண மொக்கை படம்.... !!  உங்கவீட்டு எங்கவீட்டு மொக்கை இல்லைங்க..  அப்பவே இவங்க இரண்டு பேரும் கிடைச்சி இருந்தா. .டிக்கெட் காசையாச்சும் திருப்பி கொடுங்கன்னு கேட்டு வாங்கி இருப்பேன்.

ம்ம்ம்ம்... இந்த மாதிரி ஒரு மொக்கை படத்துக்கா இரண்டு பேரும் இம்புட்டு பில்டப் கொடுத்து  விமர்சனம் எழுதி இருக்கீங்க..?? எனக்கு தெரிந்து இப்படிப்பட்ட நிஜ சைக்கோ' க்களை பற்றிய தொடரை ஜீவி யில் பலவருடங்களுக்கு முன்னமே படித்திருக்கிறேன். அதுவும் டாக்டர்களின் விளக்கங்களோடு.... ஏன்ப்பா நீங்க இரண்டு பேரும் பத்திரிக்கை துறையில் தானே இருக்கீங்க.. ? அங்க இருக்கும் போதே இந்த மாதிரி படத்துக்கெல்லாம் பொங்குவீங்களா என்ன?

ஜூவி யிலிருந்து ஒரே ஒரு உதாரணம் இன்னுமும் நினைவில் இருப்பதை சொல்றேன். நம்ம அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பிணவறைகளில் வேலை செய்யும் ஊழியர் சொன்னது இது, அவரிடம்  இறந்த பெண்களின் உடல்கள் வந்தவுடன் சொல்ல சொல்லி வைத்து இருப்பார்களாம். இவர்களும் பணத்துக்காக சொல்வதுண்டு, பெண் சடலம் கிடைத்த தகவல் வந்ததும், நேரே பிணவறைக்கே சென்று, அந்த உடல்களுடன் உடல் உறவு வைத்துக்கொள்வார்களாம். இது உண்மையில் நடந்த விஷயம். இப்படிப்பட்டவர்கள் மத்தியில் தான் நாமும் வாழ்கிறோம். அவர்கள் மனநிலை சரியில்லாதவர்கள், அவர்கள் மேல் கோபப்பட என்ன இருக்கிறது? அவர்களுக்கு தேவை தகுந்த சிகிச்சை. :( அவ்வளவே. அந்த கோணத்தில் மட்டுமே இந்த படத்தை பார்க்கலாம்..

அப்படி பார்க்கும் போதே.. ஒரு கட்டத்துக்கு மேல்.. அந்த ஹீரோ பேசும் போதெல்லாம் சிப்பு சிப்பா வருது....  ஆனா நீங்க இரண்டு பேரு மட்டும் எப்படி இம்புட்டு டென்சன் ஆகிட்டீங்கன்னு புரியல. .நான் மட்டுமே சிரிக்கல.. ஒரு கட்டத்துக்கு மேல் எல்லாருமே சிரிக்க ஆரம்பிச்சிடறாங்க.. இதுக்கு காரணம் ..இந்த மாதிரி ஒரு மொக்கை படத்திற்கு.. காசு செலவு செய்து வந்து உக்காந்துட்டுமே ன்னு கூட ஒரு காரணம் இருக்கலாம்..

அது மட்டுமல்ல தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் னு பலமொழிகளிலும் இதைவிட மிக மோசமான கொடூரமான படங்கள் எல்லாம் வந்து இருக்கின்றன.  ஆங்கிலத்தில் சொல்லவே வேணாம்...  ஆங்கிலப்படங்கள் தொடர்ந்து பார்ப்பவர்களுக்கு இது ஒரு மல்டி மரண மொக்கை ப்படமே..

ஆனாலும் என்னைய ரொம்பத்தான் பயமுறுத்திவிட்டு. .லக்கி போஸ்டை நானு ரீடர்ல வேற ஷேர் பண்ணேன். .அதுவும் எப்படி???  ஓவர் ஃபீலிங்கோ ஃப்லீங் ஆஃப் மை குழந்தை ........... லக்கி........ஆட்டோ அனுப்பினா நீங்க தான் முதல். .இரண்டாவது எங்கப்பன் முருகன்.. க்கு...

(வீரா மீனாட்சியம்மா ன்னு அடிக்கடி பேசறது தாங்கமுடியாம... )  படம் முடிய போகும் நேரத்தில், பின்னாடி இருந்த ஒருத்தர்  "டேய்..அப்பவே "எங்கம்மா" சொன்னாங்கடா.. இந்த படத்துக்கு எல்லாம் போவாதன்னு.. கேக்காம வந்துட்டேண்டா. ..என் தப்புன்னு இப்பத்தாண்டா எனக்கு தெரியுது... "

மக்கா இவிங்க இரண்டு பேரும் சொல்லிட்டாங்கன்னு என்னைய போல உணர்ச்சிவசப்பட்டு போயி காசை வீணாக்காதீங்க. .சீக்கிரம் இந்திய தொலைக்காட்சிகளில்ல்ல்ல்ல்ல்ல்ல்.. முதல்முறையா வந்துடும் அப்ப பாத்துக்கலாம்... சொல்லிட்டேன்... :)))) அவ்ளோ மொக்கை. .!!

அணில் குட்டி : அம்மணி செம பல்பு போல.. ராவணன் படத்துக்கு வாங்கின பல்பை விட ரொம்ப பெருசா இருக்கும் போல.... :) முருக்ஸ் அண்ட் லக்கி.. யூ கைஸ் ராக்ஸ்.. :))


நீயும் நானும்...


பழைய
ஆடைக்கேட்டு
கதவை தட்டி
கையேந்துகிறாய்-

உனக்கு
ஏதேனும் கொடுக்க
உள்ளே
திரும்புகிறேன்............

எங்கள் வீட்டு
கதவும்
ஜன்னலும்
கூட
புதிய 
ஆடையுடன்.. :((




கனவுகளை கட்டுப்படுத்துதல் ?!


கனவுகளை கட்டுப்படுத்துதல் என்பது சாதாரண விஷயமா என்றால் இல்லை என்றே சொல்லுவேன். அதிக மனக்கட்டுபாடு தேவை. இது தான் இப்படித்தான் என்ற முடிவுகள் தேவை. மேலும், அட.. கனவு, அதுவும் என் கனவு, இது எனக்கு மட்டுமே தெரியும், பிறர்/வெளியாள் அறிய வாய்பில்லை என்ற எண்ணம் என்னிடம் இருந்ததில்லை. அது எனக்கு சொந்தமானதாக இருந்தாலும், வந்த கனவு சரியா. .வரலாமா? கனவு என்பது அடிமனதின் ஆசையா?  என் அடி மனதில் அப்படி ஒரு ஆசை/ தேவை/தேடல்/பயம் இருக்கிறதா? அந்த ஆசை/தேவை/தேடல்/பயம் சரியா?  என்று என்னை நானே கேள்வி கேட்கும் போது, தேவை என்றால், வந்தால் வரட்டும் என்றும், தேவையில்லை என்றால் அது கனவாக வராமல் இருக்க, என் மனதை சரிபடுத்திக்கொள்ளவும், இரண்டுக்கும் நடுவில் "தெரியாத" விடையாக இருந்தால், தெரியும் வரை அதை விடாமல் துரத்துவதும் வேலையாக கொள்ளுவேன். முடிவு தெரிந்த பிறகே அதை விடுவதை பழக்கமாக்கி க்கொண்டுள்ளேன் அல்லது அப்படி ஒரு குணமுடன் பிறந்துவிட்டேன் னு சொல்லலாம். 

தேவையில்லை அல்லது அப்படி ஒரு கனவு நமக்கு வரக்கூடாது என்று நினைக்கும் நேரங்களில் வந்தால், அது தொடராமல் இருக்க வேண்டி, என் அறிவு என்னை இத்துடன் நிறுத்து என்று எழுப்பி விடுவது, ஒரு விஷயத்தை எந்த அளவு உள்நோக்கி சென்று கவனித்து, என் மூளையை அதற்காக பழக்கப்படுத்தி வைத்திருக்கிறேன் என்பது தெரிகிறது. எனக்கு பல சமயங்களில் கனவுகள் சந்தோஷம் கொடுத்தாலும், வேண்டாமென தொடராமல் நிறுத்திவிடுவது பிடித்திருக்கிறது.

ஆனால் இந்த கட்டுப்படுத்துதல் ஒருவித அழுத்தத்தைக்கொடுக்கிறது என்பது உண்மை. இதையும் நானே உணர்ந்திருக்கிறேன். அதாவது பிடித்த கனவுகளை கட்டுப்படுத்தாமல், அதனுடன் நான் பயணிக்கும் போதும், அதை தூங்கி எழுந்தவுடன் நினைவில் கொள்ளும் போதும், வெளியில் சொல்லும் போதும் என் மனம் லேசாக பறப்பதை போன்ற உணர்வை பெருவேன்.  அதே சமயம் கட்டுப்படுத்தும் போது, ஒரு வித இறுக்கும் பரவி அது நாளுக்கு நாள் வளர்ந்து வருவதும் உணர முடிகிறது. 

நிற்க, இதுவரையில், மூளையின் எந்த பகுதி கனவு வருவதற்கான காரணம் என்று கண்டுபிடிக்கபடவில்லை ஆனால், எந்த நேரத்தில் கனவு வருகிறது என்பதை ஆராய்ந்து கண்டுப்பிடுத்து இருக்கிறார்கள். நாம் தூங்கும் போது இரு வேறு நிலைகளில் தூங்குகிறோம். ஒன்று ஆழந்த சாதாரண தூக்கம், மற்றொன்று rapid eye movement (REM) sleep, இது ஒரு இரவில் 4-5 முறை வேவ்வேறு நேரங்களில் ஏற்படுகிறது, நம் தூக்கத்தின் 20-25% பகுதியை இது எடுத்துக்கொள்கிறது. அதாவது ஒரு இரவில் நம் தூக்கத்தில் 90-120 நிமிடங்கள் இது எடுத்துக்கொள்கிறது.  REM sleep ல், நம் மூளை நாம் விழித்திருக்கும் போது செயல்படுவது போன்றே செயல் படுகின்றது. இது வரையில் நம் மனம் அல்லது உடம்பு  எது சம்பந்தப்பட்டு கனவுகள் வருகிறது என்று இன்னும் கண்டுபிடிக்க ப்படவில்லை.  Parietal Lobe என்ற மூளையின் பகுதி பாதிக்கபட்ட நோயாளிகளுக்கு கனவுகளே வருவதில்லை என்றும் கண்டுப்பிடித்துள்ளார்கள்.

REM sleep ல் நம் மூளையை இயக்கத்தில் இருந்தாலும், அதன் செயல்பாட்டை கட்டுப்படுத்தும் திறன் மூளைக்கு அந்த நேரம் இருக்கிறதா என்பது தெரியவில்லை. கட்டுப்படுத்தும் திறன் இருந்தால், கனவினை நம் இஷ்டத்திற்கு எடுத்துச்செல்லவும் முடியுமல்லவா? அப்படி ஒரு முயற்சியை நான் செய்ததில்லை. ஆனால் கனவு தொடராமல் இருக்க எழுந்து விடுவதையே இங்கு கட்டுப்படுத்துதல் என்று சொல்கிறேன். பல கனவுகளில் பயத்தில் திடுக்கிட்டு எழுந்துவிடுவது என்பது போல இல்லை இவை, வேண்டுமென்றே, தேவையில்லை என்று மூளையை கட்டுப்படுத்தி எழுந்துவிடுவது என்றே சொல்லவேண்டும்.

இதில் எனக்கு வரும் ஒரு சில கனவுகளை ரொம்பவே ரசித்து தொடருவேன். அந்த கனவுகளில் ஒரு குழந்தை வரும். அந்த குழந்தை வரும் கனவுகள் எல்லாமே நீண்ட நேரமுடையதாக 10-15-20 நிமிடங்கள் மேல் நீடிக்கும். அந்த கனவுகளில் ஒரு தொடக்கம், கதை, திரைக்கதை எல்லாமே இருக்கிறது. பகலில் அவற்றை ரீகால் செய்து, மறக்காமல் இருக்க எழுதியும் வைத்திருக்கிறேன். ஆனால் இந்த அதிக நிமிடங்களில் கனவுகள் வரும் போது, அது சந்தோஷமானதாக இருந்தாலும் கூட, எழுந்தவுடன் தலை பாரமாக இருக்கும்.

சில நிகழ்வுகள் முன்கூட்டியும் வருவதுண்டு. என் கனவில் நடந்தவை எப்போது நடக்கும் என்று தெரியாவிட்டாலும், இது நடக்கும் என்று எழுந்தவுடன் உள்மனது சொல்லும் அதை அறிவும் கூட இருந்து ஆமோதிக்கும்.  அப்படிப்பட்ட கனவுகள் நினைவில் நின்று, எப்போது அது நடக்கும் என்று காத்திருக்கும். அதே போல் அவை எல்லாமே அட்சரம் பிசுகாமல் நடக்குமென்றும் சொல்லிவிட முடியாது. சம்பந்தப்பட்டதாக, ஏதோ ஒன்று கண்டிப்பாக நடக்கும், நடந்தும் இருக்கிறது.

அப்பா இறந்து கிட்டத்தட்ட  20 வருடங்கள் ஓடிவிட்ட பிறகும், அப்பா என் கனவில் எப்போது வந்தாலும் "நான் இங்கே இருந்தேன் பாப்பா, அங்கே இருந்தேன் பாப்பா" என்று சொல்லி, ஏதோ ஒரு இடத்தை பற்றி விபரம் சொல்லி பேசுவார், அவர் அணிந்திருக்கும் சட்டை கலர், சட்டை கை மடிப்பு, தலை முடி உட்பட, எல்லாமே எழுந்தவுடன் எனக்கு நினைவில் இருக்கும். அப்பா இல்லை என்ற உண்மையை இந்த கனவுகள் மறைக்க பார்க்கும். அப்பா இப்படி என்றாவது என் முன் வந்து நிற்பார் என்றே தோன்றும்.

கனவுகள் மெய்ப்பட வேண்டும் என்று சொன்னாலும், அந்த கனவுகள் எப்படிப்பட்ட தாக இருக்கவேண்டும் என்பதையும் நாமே தான் முடிவு செய்கிறோம். இது டே டீரிம்ஸ் க்கு மட்டும் இல்லைங்க..  :)

அணில் குட்டி : .ச்ச்ச்சச்ச்சோஓஒ......அம்மணி ஆஸ்பித்திரிக்கு போக நேரம் வந்தாச்சி.....போலவே..... :(

பீட்டர் தாத்ஸ் : Do not spoil what you have by desiring what you have not; remember that what you now have was once among the things you only hoped for.”
  .
படம், தகவல் - நன்றி கூகுல்.

 

வா..... தாயீஈஈஈ.....வாம்மா...வாஆ.....

உடுக்கை சத்தம் கேட்டால், தன் நிலை மறந்து ஆடும் ஆண், பெண்களை கோயில்களிலும், திருவிழாக்களிலும் பார்த்திருப்போம். உடுக்கைக்கு மனிதனின் மூளையை மழுக்கி, நினைவிழக்க வைத்து, இழுத்து வந்து ஆடவைக்கும் சக்தி இருக்கிறது என்பது வியப்பான விஷயம் தான். அதன் ஒலிக்கு அத்தனை சக்தி இருக்கிறது. ஆனால் எல்லோரும் ஆடுவதில்லை. ஏன் அந்த ஒரு சிலர் மட்டும்?

என் சின்ன வயதில் அப்பாவின் சித்தி மகள் இப்படி ஆடுவார். "அத்தை ஏன்ப்பா ஆடறாங்க..நான் ஏன் ஆடல.. நீங்க ஏன் ஆடல" ன்னு கேட்டு இருக்கேன். அப்பா "Nerve Weakness" என்ற பதில் சொன்னார்.  நரம்பு சம்பந்தப்பட்ட வியாதின்னு சொல்லலாமா? ஆனால் சமீபத்தில் ஒரு காதுக்குத்தல் விழாவிற்கு சென்றிருந்தோம். அங்கு பார்த்த பொழுது தான், இது பூசாரி யின் தில்லாலங்கடி வேலை என்று தெரிந்தது. விழாவை நடத்தியவர்கள் முத்திரை க்குத்திய வைணவர்கள், இவர்கள் எங்கள் குடும்பத்தில் நிறையவே இருக்கிறார்கள். நாங்கள் சைவம் என்றாலும், பல உறவினர்களின் குடும்பத்தில் திருமணத்தின் போது வைணவமும் கலந்துவிட்டது. 

எடுத்துக்காட்டாக என் அம்மா வைணவம்-அப்பா சைவம்,  என் கணவர் சைவம் - நான் சைவம், என் அண்ணன் சைவம்-அண்ணி வைணவம், நாத்தனார் சைவம்- அண்ணன் வைணவம், அத்தை சைவம்- அத்தை மாமா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்)பெரியம்மா வைணவம்- பெரியப்பா வைணவம் (முத்திரைக்குத்திய குடும்பம்), தாய் மாமா வைணவம்- மாமி வைணவம். இப்படி குடும்பம் முழுக்க நிறைய சைவம்-வைணம் கலப்பு இருக்கிறது.
இதில் முத்திரை க்குத்திய வைணவர்கள் என்பவர்கள் வைணவத்தில் தீவிரமாக இருப்பவர்கள், சங்கையும் சக்கரத்தையும் கைகளில்  முத்திரையாக குத்திக்கொண்டு தங்களின் மதத்தின் மீதுள்ள, பெருமாள் மீதுள்ள பற்றை தீவிரமாக வெளிப்படுத்திக்கொண்டவர்கள்.

இவர்களை நேரில் நான் பார்த்ததில்லை. முத்திரைக்குத்தியவர்கள் எல்லோருமே தாத்தாவிற்கு தாத்தா என்ற நிலை தான். அதற்கு பிறகு வந்தவர்கள், இவர்களை தொடர்ந்து வருபவர்களாக, மிக சுத்த, உசத்தியான வைணவர்களாக தங்களை நினைத்தும், காட்டியும், இன்று வரை அப்படியே பழகியும் வருகிறார்கள்.  இதை ப்பற்றி விரிவாக சொல்ல தனியாகத்தான் பதிவிடவேண்டும். 

நிற்க, நாம் சாமி ஆட்டத்திற்கு வருவோம். இப்படி ஒரு வைணவ க்குடும்பம் நடத்திய காதுக்குத்தல் திருவிழா,  108 பிள்ளையார் மண்ணில் பிடித்து, அதை ஒரு கட்டுக்குள் வைத்து, தனித்தனியாக பூஜை செய்து, மாவிளக்கு, பஞ்சாமிருதம், பொங்கல் பொங்கி, உடுக்கை , பம்பை, சிலம்பம் அடித்து, பூசாரி பாட்டு பாட, நடந்த அந்த விழாவில் தான் சாமி ஆட்டத்தையும் பார்க்க முடிந்தது.

மூன்று பெண்கள் ஆடினார்கள், முதலில் ஆடிய பெண் உடுக்கை அடிப்பவருடன் வந்த பெண்.  அடுத்து என் நெருங்கிய உறவினர் பெண் ஆட ஆரம்பித்தவுடன் எனக்கு உள்ளுக்குள் ஆட ஆரம்பித்தது. இது வரையில் அந்த பெண் இப்படி ஆடுவார் என்று தெரியாமல் இருந்ததால் எனக்குள் ஆட்டம் எடுத்தது எனலாம்.  அந்த பெண்ணின் ஆட்டத்தின் நடுவில் பூசாரி உடுக்கை அடித்தவாறே கேட்கிறார்.

"தாயீ வந்து இருக்கறது யாரு..."

"முக்காத்தம்மன்"

"எந்த குறையும் இல்லையே..."

"இல்லடா.."

"சந்தோஷமா..."

"ரொம்ப சந்தோஷன்டா..."

பூசாரி கூட்டத்தை பார்த்து சத்தமாக - "எல்லாரும்  கேட்டுக்கோங்க... ஆத்தாவிற்கு எந்த குறையும் இல்லையாம் எல்லாம் திருப்தியாம்,,...ரொம்ப சந்தோஷமா.. வேற யாருக்காச்சும் எதாவது கேக்கனுமா?"

கூட்டத்தில் இருந்து ஒருவர் "இந்த கோயில் எப்ப புதுப்பிப்பாங்கன்னு கேளுங்க.."

ஆத்தாஆ... தாயீ... "இந்த கோயிலுக்கு எப்ப கும்பா அபிஷேகம் நடக்கும்...?"

"ஒரு வருஷன்டா....வர ஆடிக்குள்ள நடக்கும் டா.... நான் இருந்து நடத்தறேண்டா....... நடத்துவேண்டா......"

:நன்றி தாயீ........"  (கூட்டத்தை பார்த்து , "இன்னும் எதா கேள்வி இருக்கா?", எல்லோரும் அமைதியாக இருக்க) தட்டில் இருந்து வீபூதியை எடுத்து நெற்றியில் வைத்த அடுத்த வினாடி சாமி இறங்கி ஓடி ப்போகிறது. என்ன மாயம் இது? :)

இதில் பூசாரியின் கை நிறைய இருப்பதாகப்பட்டது.  எடுத்த வீடீயோவிலும் அது தெரிகிறது. அதாவது, பூசாரி தான் செய்தவை திருப்தி அளிப்பதாக தன்னை அமர்த்தியவர்களுக்கு சொல்ல வேண்டி, இதை செய்கிறார். கூட்டத்தில் யாரும் ஆடவில்லை என்றால் தன்னை சார்ந்தவர்கள் யாரையாவது ஆடவைத்து, இதை நிறைவேற்றிக்கொள்கிறார்கள், ஒரு வேளை கூட்டத்தில் யாரும் ஆடினால், அவர்களிடம் இப்படி கேள்வி கேட்டு சாமர்த்தியமாக நடந்துக்கொள்கிறார்கள். இதில் ஒரு முறை ஆடிய பெண் மீண்டும் ஆடுவதில்லை. :)  ஆடாமல் இருந்தாலும் பூசாரிகள் விடுவதில்லை.. உடுக்கையை வேகமாக அடித்து, அந்த பெண்ணை ப்பார்த்து ". .வாம்மா வா... வா தாயீ.. .வா வா. " .என்று சொல்லியே அடிக்கிறார்கள். அந்த பெண்ணும் கொஞ்சம் கொஞ்சம் தலையை ஆட்டி ஆட ஆரம்பித்து, வேகம் எடுக்கிறார்.

இப்போது சாமி ஆடும் பெண் பக்கத்திலிருந்து பார்க்கலாம். ஒரு முறை தன்னை சாமி என்று சுற்றி இருப்பவர்களால் நம்ப வைக்கப்படும் (அ) நம்பும் அந்த பெண், அதை தக்க வைத்துக்கொள்ள தொடர்ந்து அதே யுத்தியை கடைப்பிடிக்கிறார். மனிதனின் இயற்கை குணம் இது. இப்படி சாமியாக பார்க்கப்படும் அந்த பெண்ணிற்கு ஊரில் கிடைக்கும் மரியாதை, மதிப்பு, தன் வார்த்தையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள, இதையே தொடர்ந்து அவர் செய்கிறார்.


கவனித்து பார்த்த வரை அவர்கள் சாமி ஆடும் போது செய்வது பேசுவது அவர்களுக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. சிலம்பு வைத்திருப்பவரிடம் சென்று சிலம்பை பிடுங்கி ஆடுகிறார்கள். உடுக்கை, பம்பை வைத்திருப்பவர்களிடம் இவர்கள் செல்வதில்லை. ஏன்? அதை எல்லாம் அடிக்க பயிற்சி த்தேவை.  சட்டென்று பிடுங்கி தாளம் தப்பாமல் அடித்துவிடமுடியாது.:)

கூகுலில் சாமி ஆட்டம் னு தேடினால், தமிழர்களின் மூட நம்பிக்கை பட்டியலின் கீழ் வருகிறது. :). அப்பட்டமான ஒரு மூட நம்பிக்கை இது என்றாலும் இன்னமும் இதை தொடர்ந்து நம் மக்கள் பழகி வருவது வருந்தத்தக்கது.  விழாவில் எடுத்த வீடியோ, இதில் ஒரு வயதான பெண் ஆடுவார் பாருங்கள், ரொம்ப குதித்து ஆடாமல், (6.00 -7.11) தன் வயதுக்கு தகுந்தார் போன்று நாசுக்காக ஆடுகிறார். அவரிடம் பூசாரி பேசுவதும், ஒரு வினாடித்துளியில்  பூசாரி அவரின் உள்ளிருக்கும் சாமியை வெளியே அனுப்பதும் இருக்கும்.



அருள்வாக்கு சம்பந்தப்பட்ட ஒரு பதிவு கூகுகில் கிடைத்தது - http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=4542:2010-03-03-05-38-00&catid=3:short-stories&Itemid=266

அணில் குட்டி : நம்மையும் மதிச்சி ஒரு வீட்டு விஷேஷத்திற்கு கூப்பிட்டா,  போனமா குட்டிய விஷ் பண்ணமா ..நல்லா கொட்டிக்கிட்டோமா.. வந்தமான்னு இல்லாம ..என்னா கிருவித்தனம் !! ..  ... அந்த பூசாரி என்னவோ இவிங்க விடியோ எடுக்கும் போது ரொம்ப ரசிச்சி எடுக்கறாங்க. .ன்னு உடுக்கைய வேக வேகமா அடிச்சி சூப்பரா போஸ் எல்லாம் கொடுத்தாரு. .ஆனா அம்மணி  இம்புட்டு கொலவெறி யோட எடுக்கறாங்கனு தெரியுமா ????  ம்ம்ம்ம்.. .... யாராவது முட்டு சந்துல வச்சி மொத்து மொத்துனா த்தான் அடங்குவாங்க..

பீட்டர் தாத்ஸ் : I know God will not give me anything I can't handle.  I just wish that He didn't trust me so much.  ~Mother Teresa