கேழ்வரகு என்றாலே தமிழர்களின் உணவு, என்னுடைய ஆயா கேழ்வரகு மாவில் கூழ், களி, அடை, புட்டு செய்வார்கள் அதில் களி'யை தவிர எனக்கு மற்றவை பிடிக்கும். அதில் கேழ்வரகு அடை எனக்கு மிகவும் பிடிக்கும். முக்கிய காரணம் முருங்கைகீரையை அதில் சேர்ப்பார்கள். இப்போதும் எல்லோரும் வீடுகளில் இந்த அடையை செய்கிறார்களா என்று தெரியவில்லை. முயற்சி செய்யுங்கள் very very delicious healthy food!!

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு வாங்கி தண்ணீரில் ஊறவைத்து, நன்கு 10-15 முறையாவது கழுவவேண்டும், பின்பு சில காசுகளை (1 ரூ, 50 பைசா நாணயங்கள்) போட்டு அரிக்கவேண்டும். இந்த காசுகள் கேழ்வரகில் கலந்து இருக்கும் கற்கலை தனியாக எளிதில் பிரிக்க உதவும். நன்கு தண்ணீரை வடிக்கட்டி வெயிலில் காயவைத்து மிஷினில் கொடுத்து வெண்ணெய் போன்று அரைத்து க்கொள்ளவேண்டும்


கேழ்வரகு அடை:-

தேவையான பொருட்கள் :-

கேழ்வரகு மாவு : 2 கப்
வெங்காயம் : பெரியது 1
பச்சைமிளகாய்: 2
முருங்கைகீரை : 1 கப் (ஆய்ந்து வைத்துக்கொள்ளவும்)
உப்பு: தேவைக்கேற்ப
எண்ணெய்:- தேவைக்கேற்ப

செய்முறை:- வாணலில் சிறிது எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம் போட்டு வதக்கவும், நடுவே பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய் சேர்க்கவும் கடைசியாக கீரையை போடு கரண்டியை திருப்பி பிடித்து கரண்டிக்காம்பால் கீரையை வதக்கவும். இதனால் கீரை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் எளிதாக வதக்கவரும்.

வதங்கியவுடன் இதை அப்படியே கேழ்வரகு மாவில் கொட்டி, உப்பு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து வைத்துக்கொள்ளவும். தோசை கல் வைத்து, ஒரு தட்டின் மீது ஈரதுணியை நன்கு பிழிந்து போட்டு இந்த மாவை உருண்டைகளாக நடுவில் வைத்து அடைகளாக தட்டவும். தட்டிய அடைகளை அப்படியே தோசை கல்லில் போட்டு சுற்றி எண்ணெய் ஊற்றி இரண்டு பக்கமும் நன்கு வெந்தவுடன் இறக்கவும்.

சூடான சூப்பர் கேப்பம் அடை ரெடி..!!

கேழ்வரகு புட்டு:-

தேவையான பொருட்கள் :-
கேழ்வரகு மாவு:-
உப்பு: 3 சிட்டிகை
சர்க்கரை :- தேவையான அளவு
தேங்காய் துருவல் :- தேவையான அளவு

செய்முறை:- இது கொஞ்சம் சிரமம் நேரம் பிடிக்கும். கேழ்வரகு மாவில் உப்பு சேர்த்து சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி கெட்டியாக பிசைந்துக்கொள்ளவும். இட்லி தட்டில் துணிப்போட்டு, பின் சல்லடையை அதன்மேல் பிடித்து இந்த மாவை அதில் வைத்து தேய்க்கவேண்டும். மாவு கட்டி கட்டியாக ஆகாமல் மெல்லியதாக விழும். அதை அப்படியே இட்லி பாத்திரத்தில் வைத்து வேகவைத்து எடுத்து தட்டில் கொட்டி, தேங்காய் துறுவல், சர்க்கரை போட்டு கலக்கி பரிமாறவும்.

இதில் சலிப்பது கொஞ்சம் நேரம் பிடிக்கும், அப்படி செய்யாமல் நேராக தண்ணீர் விட்டு பிசைந்து வேகவைத்தல் கட்டி கட்டியாக புட்டு நன்றாக வராது.

அணில் குட்டி அனிதா:- ம்ம்க்கும்!!.. யாரும் இவிங்க வீட்டை காண்டாக்ட் பண்ண மாட்டீங்கன்னு, தைரியம்.. ஒரே ஒரு தரம் வூட்டுக்கு ஃபோன போட்டு அம்மனி புள்ளக்கிட்ட இந்த கேப்ப அடையை பத்திகேட்டுப் பாருங்க.. அவரு நீங்க இதப்பத்தி கேட்டதுக்கே உங்களுக்கு ஊதுவாரு சங்கு...!! .கவி பாவம்..ஒரு வாட்டிக்கூட புள்ள சாப்பிடாத அடைய முக்கி முக்கி முடியாம இவிங்களே சாப்பிடுவாங்க... !! ஹி..ஹி..... நான் கவியோட இருக்க வரைக்கும் நீங்க யாரும் பயப்படவே வேண்டாம் சரியா... !!

பீட்டர் தாத்ஸ் :- Make [food] simple and let things taste of what they are.