எங்க வீட்டு சமையல் : வற்றல்

வெயில் காலம் வந்தாலே வற்றல், வடவம் போட்டு வைத்துக்கொள்வது வழக்கம். வடவம் கூட ஒவ்வொரு வருடமும் போட வேண்டிவராது. ஆனால் வற்றல் போட்டுவிடுவேன். நவீனுக்கு ரொம்பவும் பிடிக்கும், எனக்கு உதவியும் செய்வான். வற்றல் போடுவதற்கு முன்னர் ரொம்ப வெயில் வந்துவிட்டால்,  வற்றல் பிழியும் வரை குடைப்பிடித்துக் கொண்டு நிற்பான். Missing you my baby.. :(

1. கஞ்சி வற்றல்
தேவையானவை :

ஜவ்வரசி : 1/4 கி
பச்சரிசி மாவு : 1/2 கி
பச்சைமிளகாய் : 7-8
சீரகம் : 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

வற்றல் ஊற்ற பாலித்தின் கவர்கள் அல்லது பாலியஸ்டர் துப்பட்டா/புடவை.

செய்முறை : ஜவ்வரிசியை இரவு ஊறவைத்து, காலையில் மிக்ஸியில் அரைத்து, அடி கனமான பெரியப்பாத்திரித்தில் கொட்டிக்கனும். அதிலிலேயே பச்சரிசி மாவயும் கொட்டி 12-15 டம்ளர் தண்ணீர் விட்டு, கட்டி முட்டி இல்லாமல் நீர்க்கக் கரைத்து உப்பு, அரைத்த பச்சைமிளகாய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் இன்னமும் ஊற்றிக்கொள்ளலாம். மாவு வெந்து கஞ்சி பதத்திற்கு வரும், லேசாக பொங்கும் சமயம் சீரகத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிடவும்.  வெயிலில் துணிப்போட்டு சின்ன கரண்டிக்கொண்டு சிறு சிறு வற்றலாக ஊற்றி, 2 -3 நாட்கள் தொடர்ந்து காயவைத்து எடுக்கவும்.

துணியைவிட்டு வற்றல் வரவில்லையென்றால், பின்புறம் திருப்பி தண்ணீர் தெளித்தால்,  உதிர்ந்துவிடும். தண்ணீர் தெளித்து எடுத்தால் வெயிலில் காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.

2. முறுக்கு வற்றல் :

தேவையானவை :

பச்சரிசி மாவு (அ) பச்சரிசி : 1 கி 
பச்சைமிளகாய் : 12
சீரகம் : 4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசி மாவாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு  உப்பு சேர்த்து  கரைத்து, அதில் பச்சைமிளகாய் அரைத்துவிட்டு சீரகம் கொட்டி, சிறு தீயில் வைத்து கிளரிக்கொண்டே இருந்தால், மாவு வெந்து கெட்டியாகும். நன்றாக கெட்டியானவுடன் அடிபிடிக்காமல் இறக்கிவிடவும்.

பச்சரிசியாக இருந்தால், முதலில் பாத்திரத்தில் தண்ணீர் உற்றி கொதிவந்தவுடன், அரிசியைக்கொட்டி நன்கு குழைய வேகவைக்கவேண்டும். பாதி வேகும்போது பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து கிளரிவிட்டு, சாதம் நன்கு குழைந்து கெட்டியானதும் இறக்கிவிட்டு

வெயிலில் துணியை பரப்பி, தேன்குழல் அச்சில் பெரிய ஸ்பூன் கொண்டு மாவை/வற்றல் சாதத்தை எடுத்து நிரப்பி, பிழிந்துவிடவும்.

3. பக்கோடா வற்றல்

தேவையானவை :

பச்சரசி : 1 கி
பச்சைமிளகாய் : 8-9
பெரிய வெங்காயம் : 4
இஞ்சி : 2 விரல் அளவு
சோம்பு :  2 ஸ்பூன்
லவங்கம் : 2
கருவேப்பிலை : ஒரு பிடி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசியை குழைய வேகவைத்து,  அத்துடன் பொடியாக நறுக்கி ஒன்றும் பாதியாக மிக்ஸியில் அடித்து எடுத்த வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நைசாக அரைத்த இஞ்சி, சோம்பு, லவங்கம் விழுது, இரண்டாக கிள்ளிய கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளரி,  வெயிலில் துணி விரித்து, கைகளில் மாவை அள்ளி, சின்ன சின்னதாய் கிள்ளி வைக்க வேண்டும். மாவு சூடாக இருந்தால் ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளலாம், காற்றில் சூடு குறைந்துவிடும்.  2-3 மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். 

பீட்டர் தாத்ஸ் : One should eat to live, not live to eat.

கீச்..கீச்..கீச்....

பள்ளிக்கூடத்தில் எழுதிய தமிழ். தமிழில் "Assignment/Project " என்றாலே பாரதியார் பாடல்கள் அல்லது காந்தி தாத்தா பற்றிய ஏதாவது ஒன்றைதான் செய்திருக்கிறேன். முண்டாசோடு பாரதியாரை வரைந்து அவருடைய கவிதையை பெரிய சார்ட் பேப்பரில் எழுதிச்சென்றது நினைவிருக்கிறது.

பள்ளிக்கு பிறகு தமிழில் எழுதும் பழக்கமே இல்லாமல் போனது, 2003-04 சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக அறிவாப்பாளராக இருந்தபோது, என் நிகழ்ச்சிகளுக்கு நானே எழுதிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம். 15-20 நிமிடம் வரக்கூடிய கவிதைகள் கூட எழுதவேண்டிய நிர்பந்தம். கட்டாயம் வரும் போது, எழுத்தும் தானாக வந்ததென்னவோ உண்மை. A4 தாளில் 6-7 பக்கத்திற்கு கவிதை எழுதிச்சென்றிருக்கிறேன். அதுவுமே பத்தாமல், நேரத்தை சரிக்கட்ட ஒரு பத்தியை இரண்டு முறை படிக்கவேண்டி வந்தது.
 
நிற்க, தமிழ் எழுதுவது இத்தோடு நின்றது. இணையத்தில் எழுதுவது இல்லை டைப்புவது மட்டுமே. ஆக எழுத்துப்பழக்கம் அறவே நின்று போனது. நவீனுக்கு பள்ளியில் செய்துக்கொடுத்த, வரைந்துக்கொடுத்த "Assignment/Project " எல்லாமே ஆங்கிலம். அவர் பொறியியல் படிக்கும் போதுக்கூட "Practical " நோட்டுப்புத்தகத்தில் வரைந்து கொடுப்பது என் வேலையாகவே இருந்தது. ஆனால் என்ன, பள்ளிக்காலத்தில் கடமை, கல்லூரி காலத்தில் ஒரு படத்திற்கு இவ்வளவு என பேரம் பேசி காசு வாங்கிடுவேன். (ஹி ஹி.ஹி.....). கொடுக்கற காசை எப்படியாச்சும் நாமளே ஆட்டயப்போடனும்னு செய்யற சதி தான் வேற ஒன்னுமில்ல. :)

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு "Project". பாட்டு டீச்சர் இதை சொல்லும் போதே, கிரியேட்டிவாக செய்யனும்னு சொல்லிட்டாங்க. சொன்னவுடனேயே "வாத்தும்,மீனுமே" என் நினைவுக்கு வந்தது. அங்கேயே நோட்டில் குறித்துக்கொண்டு வந்தேன். பிறகு இரண்டு நாட்களுக்கு ரொம்பவே ப்ளாக்' காக இருந்தேன்.  இதுல என் போட்டியாளர்கள் எல்லாம் 3.5 வயது குழந்தையிலிருந்து 10 வயது வரையிலான குழந்தைகள். போட்டியிலிருந்து விலகிடலாமான்னு யோசிச்சேன்."ச்சே.. கூடாது. இதுங்கள எப்படியும் ஜெயிக்கனும்னு" முடிவுக்கு வந்து, இரண்டு நாட்கள் கழித்து, கூகுள் ஆண்டவர் ஏதிரில் வந்தமர்ந்து வாத்தை அன்னமாக மாற்றி "அன்னம், மீன்" படங்களை தேடி எடுத்தேன். அதை தேடப்போக பட் பட்டென்று மற்றவை செய்யவும் ஐடியா வந்துக்கொண்டே இருந்தது.

ரொம்ப யோசிக்க வைத்தது "தாளங்கள்". தாளங்களுக்கு நான் முதலில் தேர்வு செய்தது "பியோனா". பியோனாவின் கருப்புக்கட்டைகளை "லகு" த்ருதம்" மாக மாற்ற உத்தேசித்திருந்தேன்.ஆனால் அதை செயற்படுத்தும் போது தான் சிக்கல் தெரிந்தது. ஆன் தி ஸ்பாட் "குழல்" கண் முன் வர, குழலுக்கு தாவினேன். அடுத்து ஆரோஹணம், அவரோஹணம்" . புத்தகத்தில் படிக்கட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. எப்படி மாற்றலாம்னு யோசிக்கும் போது ஸ்ட்ரைக் ஆனது "சறுக்கு மரம்". ஆனால் ஏணி சரியாகவும் சறுக்கு ஓவராக சறுக்குமே தப்பாகிடுமோன்னு நினைச்சி, அப்புறம் சறுக்கிலும் தேவையான இடத்தில் கால்களை பக்க சுவர்களில் ஊன்றி நம்மை சறுக்காமல் நிறுத்திக்கொள்ள முடியும்னு நினைத்து அதையே எடுத்துக்கொண்டேன்.

எழுத கஷ்டப்பட்ட தமிழ்/ வடமொழி எழுத்துகள். (தயவு செய்து யாரும் துப்பாமல் படிக்கவும்) பலவருடங்களாக தமிழ் எழுதாமல் இருந்ததில் கிடைத்த பலன் இதுன்னு சொல்லனும். "ற" இதை றா என்று அந்தகாலத்தில் வளைத்து எழுதுவாங்க இல்லையா அது எழுதவே வரல. :). பிறகு கால் சேர்த்து "றா" என்றே எழுதினேன். ஏன் வரலன்னு கேட்கக்கூடாது. எழுதிப்பாருங்க தெரியும். அடுத்து இ,ஜ,க்ஷ், ஹ, ஸ போன்ற எழுத்துக்களும் சிலமுறை தனியாக எழுதிப்பார்த்து பழகியப் பின்பே சார்ட்டில் எழுதினேன். எகொகஇ!!  இதனால் சொல்லவருவது என்னவென்றால், கீபோர்ட்டில் தமிழில் டைப்பினால் மட்டுமே போதாது, அவ்வப்போது தமிழை நோட்டுப்புத்தகத்திலும் எழுதிப்பழகனும்.

ஹான்.. சொல்லமறந்துட்டேனே... என்னுடைய "Project" ஐ தான் Display க்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. :). குட்டீஸ் எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளியாச்சி.. ஸ்ஸ்ப்ப்பா.... எத்தனைமுறை நான் பாடுவதைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சி இருக்குங்க இதுங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம்.. !

அணில் குட்டி : நானும் எத்தனைதரம் தான் இந்தம்மாவை கழுவி கழுவி ஊத்தறது??!. சின்ன ....சின்னக்கூட இல்ல.... இப்பதான் நடக்க ஆரம்பிச்ச நண்டு சிண்டுக்கூடவெல்லாம் போட்டிப்போட்டு அதையும் ஜெயிச்சிட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கறாங்களே.... துப்பக்கூட எச்சியில்ல வாயில அவ்ளோ துப்பியாச்சி...ச்சே..!

அதிருக்கட்டும்..இவ்ளோ நேரம் எருமையா படிச்சீங்களே.... ஹி ஹி..டங் ஸ்லிப்டு, பொறுமையா படிச்சீங்களே தலைப்புக்கும் பதிவுக்கும் என்னா சம்பந்தம்னு யோசிச்சீங்களா...?!  பாட்டு வகுப்பில், இவிங்க சொன்ன அந்த 3.5 -10 வயசு குழந்தைகள்  சும்மா கணீர்னு பாடும்.. நம்ம அம்மணி குரல் தான் தெரியுமே ..என்னாட்டுமே.. கீச் கீச். டீச்சர் தனியா அம்மணிய பாட சொல்லும் போது, அம்மணி வாய் அசையும் ஆனா வார்த்தைக்கு பதிலா "கீச் கீச் கீச் னு சத்தம் மட்டும் வரும். எல்லா குட்டீஸும் வாயில் கைய வச்சி மூடிக்கிட்டு, ரகசியமா சிரிக்குங்க... ..அம்மணி முகத்தை அப்ப பாக்கனுமே...  :))))))))))))

பீட்டர் தாத்ஸ் : Education is what remains after one has forgotten what one has learned in school.
.

எங்க வீட்டு சமையல் : கீரை

எங்க ஆயா, "ஆடு, மாடு மாதிரி இந்த பொண்ணு கீரையை சாப்பிடுது, இதுக்கு விருந்துன்னா கீரை செய்துவச்சா போதும் போலருக்கே.." ன்னு சொல்லுவாங்க.  அந்தளவுக்கு கீரையை சாப்பிடுவேன். :) எங்க வீட்டு சமையலில் ஸ்பெஷல் உணவு  "கீரை" தான். ஆயாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ, கீரையின் அனைத்து வகைகளும் அவங்க செய்துக்கொடுத்து சாப்பிட்டு இருக்கேன். அதில் சிலவற்றை எழுதியிருக்கேன்.

1. கீரை பருப்பு கடைசல் : 

தேவையானப்பொருட்கள் :

1. துவரம் பருப்பு :  100 கி
2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை  - இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு.
3. வெங்காயம் -1
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - சிறிது வடவம் & பெருங்காயம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது. துவரம்பருப்பை மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கடைசியாக வடவம் + பெருங்காயம் தாளித்துக்கொட்டி அதையும் லேசாக கடைந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். 

2.  சிறுக்கீரைக்கு மட்டும் பைத்தம் பருப்பு சேர்த்து , மேற்சொன்ன அதே முறையில் செய்ய வேண்டும்.

3. கீரைப்பொரியல் : முளைக்கீரை தவிர மற்ற கீரைவகைகளை பொரியல் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :
1. கீரை : ஒரு கட்டு
2. கடுகு : 1/4 ஸ்பூன்
3. உளத்தம்பருப்பு : 1/2 ஸ்பூன்
4. காய்ந்தமிளகாய் : 2
5. துவரம் பருப்பு / பைத்தம்பருப்பு : ஒரு பிடி
6. தேங்காய் துருவல் : சிறிது
7. எண்ணெய் : தாளிக்க
8. உப்பு : தேவைக்கேற்ப
 
செய்முறை : கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பருப்பை ஒன்றும் பாதியுமாக வேகவைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், உளத்தப்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய் போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி சிறுத்தீயில் வைத்து  மூடவும். 2-3 நிமிடத்தில் கீரை வதங்கிவிடும். பருப்பும், உப்பும் சேர்த்து நீர் நன்கு வடியுமளவு வதங்கியவுடன், கடைசியாக தேங்காய் துருவலைக்கொட்டி இறக்கவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை பொரியல் ரொம்பவே ருசியாக இருக்கும். பருப்பு சேர்க்காமல் வெறும் தேங்காய்துருவல் சேர்த்தும் செய்யலாம். விரும்புவர்கள் வெங்காயம்,பூண்டும் சேர்க்கலாம். தாளிக்கும் போதே இவற்றையும் போட்டு வதக்கி லேசாக தண்ணீர்விட்டு வெங்காயம் வெந்தவுடன் கீரையை சேர்த்து செய்யவேண்டும்.

 4. கீரைக்கூட்டு :  முளைக்கீரை & கீரைத்தண்டில் மாத்திரமே கூட்டு செய்யமுடியும். மற்றக்கீரைகளுக்கு கூட்டு பொருந்தாது. 
 
தேவையானப்பொருட்கள் :

1. கீரைத்தண்டு, முளைக்கீரை இதில் ஏதாவது ஒன்று
2. கடலைப்பருப்பு : 100கி
3. வெங்காயம் : 1 
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - கடுகு, சீரகம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : பருப்பை பூண்டு, மஞ்சள்பொடி போட்டு வேகவைத்து, அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கியக்கீரையை சேர்த்து நன்கு வெந்தவுடன் , கடுகு, சீரகம் தாளித்துக்கொட்டி கடைந்து பரிமாறலாம்.

5. முளைக்கீரை பூண்டு கடைசல் :

தேவையானப்பொருட்கள் :

1. முளைக்கீரை
2. பூண்டு : 10 பல்
3. பச்சைமிளகாய் : 2
4. வடவம் : சிறிது
5. பெருங்காயம் : சிறிது
6. சீரகம் : 1 ஸ்பூன்
7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை நீள் வாட்டில் நறுக்கி, பூண்டு வெந்தவுடன் அதில் கொட்டி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் கடைசியில் உப்பு சேர்த்து கலக்கி 1 நிமிடம் வைத்து, வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, சட்டியில் கொட்டி நன்கு மசித்துக் கடைந்து பரிமாறவும்.

6. கீரை புளி கடைசல் : அரைக்கீரையில் மட்டும் இதை செய்யலாம்.

தேவையானப்பொருட்கள் :

1. அரைக்கீரை
2. புளி : 1/2 எலுமிச்சை அளவு
3. பச்சைமிளகாய் : 2
4. வெங்காயம் : 1
5. வடவம் & பெருங்காயம் சிறிது
6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை க்கரைத்துவிட்டு (கெட்டியாக கரைக்கவேண்டும்)  வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், சட்டியில் கொட்டி நன்கு கடையவும்.

7. கீரை சாம்பார் : முன்னரே எழுதியிருக்கேன் இங்கு செல்லவும்.   அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார் ருசியாக இருக்கும். மற்றக்கீரைகள் சாம்பாருக்கு பொருத்தமாக இருக்காது.

8. இவற்றைத்தவிர மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான், தூதுளை, வல்லாரை, பிரண்டை கீரை வகைகளின் செய்முறையைத் தனியாக எழுதுகிறேன். 

அணில்குட்டி : எங்க... புளிக்கடைசல் ஃபோட்டோ மிஸ்ஸிங்....?! 

பீட்டர்தாத்ஸ் : Cooking is like love. It should be entered into with abandon or not at all.

சிரி சிரி சிரி...சிரி....

சிரிப்பைப்பற்றி எழுதனும்னு எனக்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் நண்பர் ஜே.கே. (ஜெயகுமார்). இவரை சந்தோஷ் திருமணத்தில் சந்தித்தேன். மற்ற நண்பர்கள் அனைவரும், விடுதியில் தங்கிவிட, இவர் சந்தோஷ்க்கு ஆஸ்தான ஓசி ஃபோட்டோகிராஃபராக சர்வீஸ் செய்ததால், இரவு வெகுநேரம் மண்டபத்திலேயே இருந்தார், காலையிலும் சந்தோஷ் தூங்கி எழுந்ததிலிருந்து ஃபோட்டோ எடுக்கவேண்டிய கடமை கட்டிப்போட்டதால், 5 மணிக்கு முன்னதாகவே வந்து அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தார். எப்படியாவது சந்தோஷை "அழகாக" ஒரே ஒரு ஃபோட்டோவாது எடுக்க வேண்டுமென்பதே ஜே.கே'வின் அன்றைய லட்சியமாக இருந்ததுன்னா பாருங்களேன் !! ஸ்ஸ்யப்பாஆஆஆ....

அங்க பிரச்சனை என்னன்னா..நம்ம ஜே.கே' இருக்காறே அவருக்கு சிரிக்கவே வரலைங்க. சீரியாஸாக பேசினாலும் முகத்தை உர்ர்ன்னு வச்சி இருக்காரு, யாராவது சிரிக்க சிரிக்கப் பேசினாலும் முகத்தை உர்ர்ன்னே வச்சியிருக்காரு. அப்பப்ப... "நண்பா..இதுக்கு நீங்க சிரிக்கனும்னு" சொல்லித்தரவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அப்பதான் எனக்கு தோணிச்சி, இவரை இப்படி "சிரி சிரி" ன்னு சொல்லவேண்டியதாக இருக்கே. இவருக்குக்காக சிரிப்பைப்பற்றிய நல்ல விசயங்களை தொகுத்து எழுதினால் என்னன்னு. எப்ப?? சந்தோஷ் திருமணம் நடந்த நவம்பர் மாதம், ஆனால் அதை இப்பதான் எழுதறேன். சரி விசயத்திற்கு வருவோம்...

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் சிரிப்பு. சிரிக்கத்தெரியாத மனிதர்கள் என்றில்லை, எந்தவித உணர்ச்சிகளையும் அதாவது நவரசங்களையும் சட்டென்று வெளிப்படுத்தாத மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருமுறை நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணியின் முகத்தை "டைட் க்ளோஸ் அப்" பில் காண்பித்து, "நிகழ்ச்சி ஆரம்பித்திலிருந்து முடியும் வரை, அதாவது 3 மணிநேரத்திற்கும் மேலாக, அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் ஒரே மாதிரியாக அமர்ந்திருந்தார்" என்று குறிப்பிட்டனர். இப்படி ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது எத்தனை சிரமம் என்று அவரின் கணவர் அன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு விளக்கம் அளித்தார். எகொசஇ !!!
 
கொஞ்சம் யோசிங்க, எப்போதும் ஒரே மாதிரியான இறுகின முகத்தோடு இருக்கும் ஒருவரைப்பார்த்தால், எப்படி நம் அன்றாட வேலைகள் சாதாரணமாக நடக்கும்.?! சீக்கிரமே, நம் முகமும் அவர்களைப்போலவே இறுக்கமாக மாறிவிடும். சிரிச்சிட்டா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு கேட்கறீங்களா? சிரிப்பில் என்னவெல்லாம் இருக்கிறது எனப் பார்க்கலாமே:-

=> சிரிக்கும் போது, உடலில் 300 தசைகள் தளர்ச்சி அடைகின்றன.

 => நாம், ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் சிரித்தோமானால் கிட்டதட்ட 40 கலொரிகள் எரிக்கபடுகின்றதாம், அப்படியானால் ஒரு வருடத்தில் எந்த வித உடற் பயிற்சியும் செய்யாமல் 1.82 கி.கி உடல் எடையை குறைக்கலாமாம். ஆக, எந்த செலவும், உடல் உழைப்பும் இல்லாமல் நம்மால் உடல் எடையை குறைக்கமுடியுமானால்? பைத்தியம்னு சொன்னால் கூட சிரிக்கலாமே..

 => ஒரு நல்ல, ஆத்மார்த்தமான சிரிப்பு, நம் உடலின் தசைகளை, 45 நிமிடங்களுக்கும் அதற்கு மேலாகவும் தளர்த்தி, உடல் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்க செய்கிறது.

=> நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கிறது மற்றும் தொற்றுகளை எதிர்க்கவல்ல ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தமுடிகிறது.

 => உடலில் இயற்கையாகவே நல்ல இரசாயனங்களை வெளியிடும் எண்டோர்பின்'ஐ சிரிப்பு தூண்டுகிறது. இந்த எண்டோர்பின்கள் ஒட்டுமொத்தமாக நம் உணர்வுகளை நேர்மறையாக, நல்லமுறையில் தூண்டவும், உடல் உபாதைகளால் ஏற்படும் வலியை தற்காலிகமாக குறைக்கவும் உதவுகிறது.

=> முக்கியமாக, சிரிப்பு , நம் இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பிற இதய பிரச்சினைகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்க உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

சிரிப்புக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதையும் பார்க்கலாம்:-

=> சிரிப்பு, நமக்கு கவலையேற்படுத்தக்கூடிய உணர்ச்சிகளை எளிதாக கரைத்துவிடுகிறது. பொதுவாக நாம் சிரிக்கும் போது, நம் கவலைகளையும், வருத்தங்களையும் அந்த நேரத்திற்கு கண்டிப்பாக மறந்துவிடுவோம்.

 => நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும், மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, மனதுக்கு தேவையான நேர்மறையான சக்தியைப் பெறமுடிகிறது. இதனால், நம் அன்றாட வேலையில் அதிக கவனம் செலுத்தவும், சாதிக்கவும் முடிகிறது

 => நகைச்சுவை, நம்மை மிகவும் யதார்த்தமான, மன அச்சுறுத்துல் இல்லாத நிலையில் பார்க்க/பழக/சிந்திக்க வைக்கிறது.

 => சிரிப்பைத்தவிர, வேறெதுவும், நம் மனதையும் உடலையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேகமாக உதவுவதில்லை.

=> நகைச்சுவை, நம் மனச்சுமைகளை குறைத்து, நம்பிக்கையை தூண்டுகிறது, மற்றவர்களுடன் நம்மை இணைக்கும் கருவியாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க உதவுகிறது.

இப்படி சிரிப்பின் சிறப்புகளை சொல்லிக்கிட்டே போகலாம். இப்போதெல்லாம், சத்தம் போட்டு சிரிக்க நேரமில்லாத நாட்களில் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக பெண்கள் சத்தம் போட்டு சிரிப்பதென்பது நம் சமூகத்தில், சபையில் செய்யக்கூடாத செயல். அதனால் பொது இடங்களில் சிரிப்பு வந்தாலும் அதை வாய்மூடி சிரித்தோ, சிரிப்பை அடக்கியோ தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். மனைவி பொது இடங்களில் அதிகமாக சிரிக்கிறாள் என விவாகரத்து வாங்கிய ஆண்கள் இங்குண்டு. ஆண்கள் சிலரும் கூட பொது இடங்களில் சத்தம் போட்டு சிரிக்க தயங்குவர். நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.

"Laughing Bird " என்ற செல்லப்பெயர் எனக்குண்டு. இதைத்தவிர ஓவராக அடக்கமுடியாமலும், சம்பந்தமில்லாமலும் சிரித்து, "லூசு, கழண்டக்கேசு' ன்னு பேரெல்லாம் அடிக்கடி வாங்குவதுமுண்டு. நமக்கு பேர் வாங்கறதா முக்கியம்? சிரிப்பது தானே முக்கியம்.. சிரிப்பதை வெட்கப்படும் ஒரு செயலாக நான் இதுவரை நினைத்ததில்லை. காரணம் ஒன்னும் பெரிசா இல்லை, என்னால சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அறிந்தவர் அறியாதவர் என யாரைப்பார்த்தாலும் புன்னகைக்கும் பழக்கமும் இருக்கிறது. சோகத்தில்/கவலையில்/பிரச்சனைகளில் இருப்பவரும், நாம் சிரிப்பதைப் பார்த்து பதிலுக்கு சிரிப்பர். சிரிக்கும் போது அடுத்தவர் முகத்தில் ஏற்படும் புத்துணர்ச்சியைப் பார்ப்பதில் எனக்கொரு சந்தோஷம் திருப்தி ஏற்படும், மேற்கொண்டு அவரிடத்தில் எளிமையாக நட்பு பாராட்டிக்கொள்ளவும் முடியும்.

சென்றவாரம் சென்னையில் நடனம் சம்பந்தப்பட்ட ஒரு Workshop' க்கு சென்றேன். அங்கு நவரசங்களையும் சொல்லிக்கொடுத்து, அவற்றிலிருந்து மன அழுத்தத்தை வெளிக்கொண்டு வருவதையும் சொல்லிக்கொடுத்தனர். அதில் ஒன்று சிரிப்பு. Laughter therophy பற்றிய ஒரு வீடியோ : pls watch this -> http://www.youtube.com/watch?v=w5KjERog9uM  

சிரிப்பின் சிறப்பு & வகைகளைப்பற்றி அந்தக்காலத்திலேயே "என்.எஸ்.கே" பாடியிருக்காரு... 
 

மதுரம் அம்மா சிரிக்கறதை பார்த்தப்பிறகும் நீங்க யாராச்சும் சிரிக்காம இருந்தீங்கன்னா... கண்டிப்பா உங்களுக்கு.......... ....... :)

அணில் குட்டி : //"லூசு, கழண்டக்கேசு'//....அட ?!!  புதுசா சொல்லிக்கறாங்களாம்...ஹய்யோ ஹய்யோ....!

 பீட்டர் தாத்ஸ் : To truly laugh, you must be able to take your pain, and play with it!

Thx to : Google & Youtube

கங்கை vs கவிதா

"அதிகாலை பனி" மேடம், "அமுதம் கங்கை" என்ற பெயரில் எழுதறாங்க. அவங்க ஜி+ ல் எழுதிய சில கவிதைகளுக்கு அவர்களின் சம்மத்தோடு எழுதிய எதிர்கவிதைகள்.


*******************
மனதின் குதிரையை நிறுத்த
உடலை வருத்திக் கொண்டேன்.
அளவற்ற உடல் தளர்வில்
முன்னிலும் வேகமாய்த் துயர்க் குதிரை.

                           
மனம் அறுத்துவிட்ட குதிரையாய் பறந்தது
வளைந்தும் குதித்தும் அதே வேகத்தில் நான்-
அதுத் தொட்டவைகளின் உத்வேகத்தில்
முன்னிலும் வேகமாய் மகிழ்க் குதிரை


*********************
புண்ணியம் செய்தேன்
சிரசில் இருந்து பாதம் வரை
ஒற்றைத் தொழல்தான்.

                              
பாவம் செய்தேன்
விரல் நுனியில் நின்று எட்டிப்பார்த்தும்
எஞ்சியது "ஜருகண்டி ஜருகண்டி"


******************

அமைதியான குளிர் இரவில் நைட் குயின் மணக்கும் வீதி . 
அமைதியாய் மனம்.

நடுங்கும் குளிர் இரவில் மருதாணி பூக்கள் மயக்கும் வீதி 
அலைப்பாயும் மனம்

********************

பொருந்தாத் துயரம்.

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும் .


பிடிப்பின் வெளிப்பாடு

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும்..


*********************

ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கூட காணோம்.


ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கண்டுக்கொண்டேன்.


ஆவலும் ஆசையே
அழுகைக்கும் ஆசைக்கும் தொடர்பினை கண்டேன்


**********************

தினம் தோலுரித்து மேலுயர்த்துகிறது
தொடர்பற்றிருக்கும் பேரன்பு.

தினம் ஆத்மாவை அரவணைக்கிறது
தொடர்பற்றிருந்தாலும் பேரன்பு


***********************

**********************
அமுதூறும் என் உலகு.

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக் கொண்டிருந்த
தீர்மானத்தின் தோல்விகள் .
நானே நகர்த்தாமலும்
தானாய் நிகழாமலும்
காத்திருப்பின் தடை.
எப்போது நிகழ்ந்தது நிகழ்ந்ததா .
பிறந்த குழந்தை போல் மெத்தென்றானேன் .



அமுதூறும் என் உலகு

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக்கொண்டிருந்த
தீர்மானத்தின் வெற்றிகள்
நானே நகர்த்தியும்
தானாய் நிகழவைத்தும்
காத்திருக்காத வாழ்க்கையின் வேகம்
இப்போது நிகழ்ந்தது நிகழ்த்தியதே
நிகழ்த்திய பெருமையில் திளைத்திருக்கிறேன்


********************

காரணம் கண்டு பிடித்து வெறுக்கலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும் .
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
வெறுமையின் வாசனை.


காரணம் கண்டு பிடிக்காமல் விரும்பலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும்
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
நிறைவின் வாசனை


*************************

வஸ்திரக் காப்பு நடக்கிறது
திரை விலகக் காத்திருக்கிறேன்.
என்னுள் சாமி வெற்றுக் கல்.


வெற்றுக்கல் ஆண்டவனாகினும் ஈர்ப்பதில்லை!
திரை விலகக்காத்திருந்து தரிசிப்போம்
வெளியலங்கார கவர்ச்சியோடு...


***********************

வாழ்விளக்கை அணைத்து எரிகிறது
குழி மாடத்து விளக்கு.


வாழ்விளக்கை அனுபவித்து பூரித்து எரிகிறது
சட்டிவானம்


**********************

தனிமை.

இன்னும் ஒன்றுமற்றுப் போவதை கற்றுக் கொள்கிறோம்
நானும் என் துக்கமும்.
நானும் இல்லாது கற்றுக் கொள்வதும் இல்லாதாகும் நாளுக்காய்
என்னை இறுகக் கட்டிக் கொண்டிருக்கிறது துக்கம்.


தனிமை

இன்னும் மனிதத்தையும் உலகத்தையும் கற்றுக் கொள்கிறோம்
நானும் என் உள்ளமும்
நானும் இருக்கும்போது இல்லாததென்று ஏதுமில்லாத நாட்களில்
என்னை நானே இறுகக்கட்டி கொள்வதில் சந்தோஷம் !


***********************

எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு
எதுவும் மீதமிருப்பதில்லை.


எதையும் எளிமையாய் எடுத்துக் கொள்பவர்களுக்கு
சாதிக்க ஏதுமிருப்பதில்லை.


************************

பரிசுப்பொருளாக செருப்பா??

எங்கள் மூவரின் பிறந்தநாள், நவீனின் / எங்களின் தேர்வு முடிவுகள்,  திருமணநாள், இன்னும் எந்த நல்ல நிகழ்வுகளாக இருந்தாலும் அவரின் சட்டைப்பை தான் காலியாகும். என்னுடைய சம்பாதித்தியம் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இப்படியான விசயங்களுக்கு ஒரு பைசா இங்கிருந்து நகராது.

அவரின் பிறந்தநாளுக்கு முன் தினம், நானும் நவீனும் ஒன்றாகவே கடைக்கு செல்வோம். அவன் அவருக்காக என்ன வாங்கினாலும் அது என் செலவு.  பரிசுப்பொருட்களோடு, "அம்மா உன் புருஷன் சந்தோஷப்படுவார்னு சொல்லிட்டு"  கேக், சாக்லெட் தவறாமல் வாங்குவான், அதுவும் என் செலவே. அதிகபட்சமாக என் செலவு இத்தோடு முடியும்.

ஆனால் பிறந்தநாளன்று வெளியில் உணவருந்தச் செல்லும் போதெல்லாம், அவரின் மாறாத ஒரே டயலாக் : "உங்களுக்கும் நான் தான் செலவு செய்ய வேண்டியிருக்கு, எனக்கும் நானே செலவு செய்துக்க வேண்டியிருக்கு".

இதற்கு, இந்தப்பக்கம் எங்கக்கிட்டயிருந்து பெருசா எதும் ரியாக்ஷன் வராது. அவர் எவ்ளோ ஃப்லீங்ஸ்ஸோட இந்த டயலாக்கை டெலிவரி செய்தாலும் எங்களின் ஸ்டேம்ப் பேட் ரியாக்ஷன். "நக்கல் சிரிப்புதான்". இதையெல்லாம் முன்னேற்பாடாக பேசி வைத்துக்கொண்டு செய்வதல்ல... அவர் இப்படி பேச ஆரம்பித்தாவே, எனக்கும் நவீனுக்கும் அடிவயிற்றிலிருந்து சிரிப்பு தானாவே பொங்கி பொங்கி பெருக்கெடுக்கும். இந்த கொடுமையைப் பார்த்து அவர் இன்னும் நொந்து நூடல்ஸ் ஆவார்னு தெரிஞ்சாலுமே கூட, தானாவே வருவதை எப்படி கன்ட்ரோல் செய்யமுடியும் சொல்லுங்க?.

இதைக்கூட  தொலையட்டும்னு விடுவார், ஆனா அவர் சம்பந்தப்பட்ட எந்த நிகழ்வாக இருந்தாலும், நவீனும் நானும் வீட்டில் என்ன இல்லையோ அல்லது வீட்டிற்கு தேவைப்படும் பொருளை பரிசுப்பொருளாக அவருக்கு கொடுத்து, அப்படியே வாங்கி, வீட்டிற்கு பயன்படுத்துவோம். (என்னா வில்லத்தனம்?)  கடைக்கு செல்லும் போது, நவீன் அவருக்கு என்ன வாங்கலாம்னு தேடிக்கிட்டு இருக்கும் போது, வீட்டில் இல்லாத பொருளை எதையாது சொல்லி, அவனுக்கு ஐடியா கொடுப்பேன். அவனும் எதுக்கு என்னன்னு விசாரிச்சிட்டு, சரி."எப்படியும் உன் புருஷனுக்கு வேற என்ன வாங்கிக்கொடுத்தாலும் ஆயிரத்து எட்டு கேள்வி கேட்டு கொடச்சல் கொடுப்பாரு, அதனால..இப்படி எதையாச்சும் வாங்கிக்கொடுத்தா..வாயத்தொறக்காம பேசாம இருப்பார்னு" முடிவெடுத்து வாங்கிடுவான்.

ஒரு சமயம் "அஷ்ட விநாயகர் படம்" பூஜை அறைக்கு வேண்டுமென்று வாங்க நினைத்ததை அவரின் பிறந்தநாள் பரிசாக கொடுக்க, "ஞே" என்ற முழுத்தவாறே வாங்கி எதும் சொல்லாமல் என்னிடமே திருப்பிக்கொடுத்துவிட்டார்.

அப்புறம் ஒரு முறை ஒரு மாதிரி கன்னாப்பின்னான்னு கிஃப்ட் பாக்கெட் இருப்பதைப்பார்த்து ரொம்பவே ஆர்வத்தோடு பிரித்தார். பிரித்தவர் கையில் கிடைத்தது என்னவோ டார்ச் லைட். என்னைப்பார்த்து "இது எதுக்குடி எனக்கு?" ...ஹிஹி..அது உங்களுக்கு இல்லப்பா... வீட்டில் பெரிய டார்ச் லைட் இல்ல..அதான் வாங்கினோம். " வேற என்ன பதிலை எதிர்பார்க்கறீங்க..எப்பவும் போல  "ஞே" தான்..

வீட்டில் உள்ள பலப் பொருட்களை, ஃபாஸ்ட் ஃபார்வேர்டில் ஒரு சுற்றுச் சுற்றிவந்தால், அநேகமாக ஞாபகமறதியில் விட்டுப்போன அனைத்துப்பொருட்களும் அவரின் பிறந்தநாளுக்கு வாங்கியதாகவே இருக்கும்.

இதில் மாத மளிகைப் பட்டியலில் வரும் சில பொருட்கள் கூட அவரின் பிறந்தநாள் பரிசாக மாறியிருக்கும். அதில் ரூம் ஃப்ரஷ்னர், அவருக்கு டியூடரன்ட், அலுமினிய ஹேங்கர்ஸ் போன்றவைகளும் அடங்கும். (ஏய்ய்.ஏய்...யாரது துப்பறது..? )

இப்படியாக வந்த ஒருநாள் தான் காதலர் தினம்!  காலையிலேயே கேட்டேன். .  "...ப்பா ரொம்ப நாளா செருப்பு????? வாங்கனும்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்களே... காதலர் தினத்துக்கு உங்களுக்கு செருப்பு வாங்கித்தரட்டாப்பா? "  (சீனை சரியா கிரகிக்கனும்.. அப்பாவியாக முகத்தை வச்சிக்கிட்டு, கண்ணைச்  சிமிட்டி சிமிட்டி.... கேட்டேன், போங்க ...போயி திரும்ப ஒருதரம் நான் சொன்னமாதிரி சீனை ப்படிச்சிட்டு வாங்க)

ஒன்னும் பதில் இல்ல...அப்படியே என்னையே சலனமின்றி பாத்துக்கிட்டே இருந்தாரு....அந்தப்பார்வையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கள் புதைந்துக்கிடந்தன. "நான் என்னடி பாவம் பண்ணேன்? உன்னை கல்யாணம் செய்துக்கிட்டு இவ்ளோ நாளா உன்னோட குடும்பம் நடத்தறேனே அது தப்பா? ல ஆரம்பிச்சி ..................................... .............. ......... ......... ........... எல்லாம் என் தலையெழுத்துன்னு" முடிக்கிறவரை ஒரு 2 மணிநேர புலம்பல் அவர் பார்வையில் நீண்டது.

நீங்களே சொல்லுங்க ? ஒரு சமயம் இல்லன்னாலும் ஒரு சமயம் யாரா இருந்தாலுமே பார்க்கப் பாவமாத்தானே இருக்கும். எனக்கும் அப்படிதான், அவரைப்பார்த்தாவே ரொம்ப பாவமா இருந்தது. :( அதே மனைநிலையோடு, "இவருக்கு நம்மோட காதலை எப்படியும் வெளிப்படுத்தியே ஆகனும்னு" ஆவேசத்தோட கடைக்குப்போனேன். 

ஆனா, கடைக்குள் நுழைஞ்சவுடனே ரொம்ப அவமானமா போச்சி. ....இப்படி ஒரு அவமானம் எனக்கு ஏற்படும்னு நான் கனவில் கூட நினைச்சிப் பார்க்கல. அவ்ளோ பெரிய கடையில், காதலர்தினத்திற்கு கார்ட் வாங்கும் இடத்தில் ஒரு பெண் கூட இல்லை, ஒரே ஆண்கள் கூட்டம்!  அவங்க நடுவில் நுழைந்து, கார்ட்டுகளை எடுக்கும் போது, அத்தனை ஆண்களும் என்னயே ஒரு மாதிரியாக பார்த்ததே என் அவமானத்திற்கு காரணமாப்போச்சி. "..ச்சே... காதலர் தினத்திற்கு அவரு தான் கார்டு கொடுக்கனுமோ..நாம வாங்கக்கூடாதோனு அநியாயத்திற்கு சந்தேகமும் வந்துப்போச்சி." இருந்தாலும் அவமானத்தை எல்லாம் சகச்சிக்கிட்டு, நிதானமாக கார்டுகளை படித்து, ஒன்றைத்தேர்ந்தெடுத்து கவுண்டரில் வந்து நிற்கிறேன்.

நான் வாசித்து வைத்தவிட்டு வந்த கார்டை இன்னொருத்தர் எடுத்துவந்து என் எதிரில் என்னைப்பார்த்தவாரே பில் போட கொடுத்தார். சட்டேன்று பார்வையை வேறு இடத்திற்கு திருப்பிக்கொண்டு கவனிக்கிறேன், பில் போட வந்த அத்தனை ஆண்களும் திரும்ப திரும்ப என்னையே கவனித்துக்கொண்டிருந்தனர்.  "ஏன்யா...உங்களுக்கெல்லாம், புருஷனுக்கு ஒரு லவ் கார்டு வாங்கிக்கொடுக்கறது அவ்ளோப்பெரிய அதிசயநிகழ்வா? எதுக்குய்யா இப்படிப்பார்க்கறீங்க" ன்னு கேக்க நினைச்சேன் ஆனாக்கேட்கல..

இதனால் தாங்கள் சொல்ல வரும் நியதி ??

இருங்க ..நானே ரொம்ப அவமானப்பட்டதில் என்னா செய்யறதுன்னு தெரியாம இருக்கேன்...  ...இப்பதான் யோசிக்கிறேன்

ஆங்...நியதி என்னென்னா? பெண்கள் காதலர் தினத்திற்கு கார்ட் வாங்க போவது நல்ல யோசனையில்லை. ஆர்வகோளாரில் அப்படியேதும் நடந்தால், இப்படியான அவமானத்தைக் கண்டிப்பாக சந்திக்க நேரிடும், தவிர,  நிச்சயம் உங்களை கவனிக்கும் அத்தனை ஆண்களது வீட்டிலும், அவர் மனைவியோடு/ காதலியோடு நடத்தும் சண்டைக்கு நீங்களும் ஒரு காரணமாக இருப்பீர்கள்.

அடுத்த நியதி எனக்கு:-  எப்பவும் போல வீட்டுப்பொருட்களையே பரிசாகக்கொடுத்து, இப்படியான அவமானங்களிலிருந்து தப்பிக்கனும்.. கடைசியா, ஆரம்பிச்ச இடத்திற்கே வந்துட்டேனா?   :)

அணில்குட்டி : கிர்ர்ர்.... இதெல்லாம் ஒரு பொழுப்பு.......?! இவங்க கார்ட் கொடுத்தாங்க..அவரு என்ன வாங்கிக்கொடுத்தாருன்னு சொன்னாங்களா பாத்தீங்களா? அம்மணி உஷாரோ உஷாரு......!!!

பீட்டர் தாத்ஸ் : The greatest gift that you can give to others is the gift of unconditional love and acceptance.

ஃபீனிக்ஸ் மால் வேளச்சேரிக்கு பெருமையா? பிரச்சனையா?


திருமணத்திற்கு பின், சென்னைக்கு வீடு தேடி வந்த போது, என் கணவர் காண்பித்த இடங்கள் ஐ.ஐ.டி' சுற்றியுள்ள கோட்டூர்புரம், கோட்டூர், தரமணி, மத்தியகைலாஷ்'க்கும் ஐஐடிக்கும் இடைப்பட்ட இடம்,  கடைசியாக வேளச்சேரி. ஈ-காக்கைக்கூட இல்லாமல், மிக அமைதியாக, ஏரித்தண்ணீர் அங்கங்கே தேங்கியிருக்க, வேளச்சேரி என் கண்களுக்கு மிகவும் குளர்ச்சியாகவும் அமைதியாகவும் தெரிந்ததால், இங்கு வந்துவிடலாமென வந்(தேன்)தோம்.

அமைதி ஏரி'யாக இருந்த வேளச்சேரி, 2002 லிருந்து தொடர்ந்து அபரிமிதமான வியக்கத்தக்க வளர்ச்சியை கண்டுவருகிறது. அதில் ஒரு பக்கம் பெருமையும், மறுப்பக்கம் எல்லாவித செளகரியங்களும் கிடைக்கப்பெற்ற ஒரு இடத்தில் இருப்பதின் சந்தோஷமும் எனக்கு எப்போதும் உண்டு. குறிப்பாக பறக்கும் ரயில், சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு எந்த தாமதமுமின்றி 40 நிமிடங்களுக்குள் சென்றுவிட முடிகிறது. சைதாப்பேட்டை, கிண்டி, அடையார், திருவான்மயூர், மீனம்பாக்கம், தாம்பரம் என வேளச்சேரியிலிருந்து மிக விரைவாக சென்றடையக்கூடிய சென்னையின் முக்கிய இடங்கள் உள்ளன. சமீப காலங்களில் போத்தீஸ், தங்கமாளிகை தவிர, வேளச்சேரியில் அனைத்து முக்கிய, பிரபலமான கடைகள், உணவுவிடுதிகள் வந்துவிட்டன.

இங்கு, இரண்டு மில்லியன் சதுர அடி இடத்தில் மிக பெரிய வணிக வளாகம் வரப்போவது தெரிந்ததிலிருந்து எனக்கு பெருமையை விட, போக்குவரத்தை நினைத்து அதிக பயமே இருந்தது. காரணம், பல வருடங்களாகவே அலுவலக நேரங்களில் குருநானக் கல்லூரியிலிருந்து, செக்போஸ்ட் வரையில் போக்குவரத்து நெரிசலில் மண்டை காய்ந்து போயிருக்கிறேன். அந்த சாலை மிகவும் குறுகிய சாலை என்பது இன்னுமொரு மைனஸ். இரண்டு சக்கர வாகனம் கூட எப்படி வேண்டுமானலும் வளைந்து நெளிந்து புகுந்து சென்றுவிட முடியாது. அப்படியொரு சாலையில் இந்த வணிக வளாகம் வருவது எனக்கு அத்தனை எதிர்பார்ப்பை தரவில்லை. அது கட்ட ஆரம்பித்த நாளிலிருந்தே இதே புலம்பல் தான். 

சில ஆண்டுகளுக்கு முன், கனடாவை சேர்ந்த ஒரு நிறுவனத்தில் வேலைப்பார்த்தேன், அவர்கள் விமானங்களுக்குள் குளிரூட்ட பயன்படுத்தப்படும் மென்பொருளைத் தயாரிக்கும் வேலை செய்து வந்தனர். கனடாவிலிருந்து வரும் நிறுவனத்தின் முதல்வர் "A380 Aircraft " பற்றி விளக்கமளித்தார். இது பயணிகளுக்கான மிகப்பெரிய விமானம். 400 லிருந்து 800 பயணிகள் வரை பயணிக்கக்கூடிய வசதிக்கொண்டது. இதை இந்தியா தனக்காக வாங்க வெளிநாட்டு நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருந்தது. எத்தனை விமானங்கள் என்ற தகவல் எனக்கு அறியவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தம் குறித்தே அந்த முதல்வர் அன்று எங்களிடம் பேசினார். அதாவது எந்த வித முன்யோசனையும் திட்டமுமின்றி, இந்தியா இப்படியான ஒப்பந்தங்களை செய்கிறது. இத்தனை பெரிய விமானங்களை வாங்கி நிறுத்தவும், பயன்படுத்தவும் (Runway) போதிய வசதி வாய்ந்த விமான நிலையங்கள் இந்தியாவில் இல்லை. அதில் பயணம் செய்யும் நூற்றுக்கணக்கான பயணிகளுக்கு சென்று/வர ஓய்வெடுக்க தேவையான வசதிகளும் இங்கில்லை. ஆனால், எந்த அடிப்படைத் திட்டங்களின்றி, இந்தியா முதலில் விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துவிட்டது என்று முடித்தார்.

இன்று ஃபீனிக்ஸ் மால் சென்றபோது, இதையே தான் உணர்ந்தேன். மும்பையை சேர்ந்த Phoenix Mills என்ற நிறுவனமே இந்த வணிக வளாகத்தை இங்கே கட்டியிருக்கிறது. உள்ளே நுழையும் போதே தலையை குனிந்தபடி வண்டியோட்டி செல்லவேண்டியிருந்தது. வாகனங்கள் நிறுத்துமிடத்தின் மேல் கூரை அந்தளவு கீழிறங்கி இருந்தது. மேற்கூரை என்னவோ உயரத்தில் தான் இருக்கிறது. அதற்கு கீழே ஏகப்பட்ட தண்ணீர் குழாய்கள், மின்சார இணைப்புகள் செல்லக்கூடிய குழாய்கள் என மேற்கூரை நிறைக்கப்பட்டு கீழே இறங்கி வந்துவிட்டது. கண்டிப்பாக இதில் தலையிடித்து மண்டை உடையக்கூடிய அபாயம் அதிகமாகவே உள்ளது. அது யாருக்கு எப்போது நடக்குமென்பதே இப்போதைய கேள்வி.

இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டியவர்கள், எப்படி இவற்றை திட்டமிடாமல் செய்தனர் என்பது எனக்கு புரியவில்லை. சாதாரணமாக உயரம் 5.10- 6 அடி இருக்கும் ஒரு மனிதர் தலை நிமிர்ந்து நிச்சயம் நடக்க இயலாது. வண்டியில் நிமிர்ந்து உட்கார்ந்தும் வண்டி ஓட்டமுடியாது. இதில் நடந்து செல்லும் போதும் "Mind your head" என்ற பலகையை கண்டு உட்சபட்ச கடுப்பிற்கு ஆளானேன். ஏனென்றால் அது குழாய்கள் இணைப்புகள் ஏதுமில்லாத வெறும் கட்டிடத்தின் மேற்கூரையே. ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்லும் ஒர் இடத்தில் இப்படி ஒரு மோசமான ஆபாயகரமான கட்டிட அமைப்பு, இதற்கு அரசு எப்படி அனுமதி அளித்தது எனத்தெரியவில்லை.

அடுத்து போக்குவரத்திற்கு வருவோம். 40% முடிக்கப்பட்டிருக்கும் வணிகவளாகம் திறக்கப்பட்டு, எந்தவித போக்குவரத்து வசதியும் செய்யப்படாமல், அதே குறுகலான பாதையில் எல்லா வண்டிகளும் செல்ல அனுமதிப்பட்டு இருக்கின்றன. இது மொத்த வேளச்சேரியின் மிக முக்கிய சாலைகளில் ஒன்று. இவ்விடத்தை கடந்தால் மட்டுமே வேளச்சேரியை விட்டு வெளியேற முடியும் அல்லது உள்ளேயும் வரமுடியும். இச்சாலையில் காலையிலிருந்து நல்லிரவு வரை போக்குவரத்து நெரிசல் இப்போதே தாங்கமுடியவில்லை. இத்தனைப்பெரிய வளாகத்தை கட்டுபவர்கள் போக்குவரத்திற்கு என்னமாதிரியான திட்டமிட்டனர் என்பதும் புரியாத புதிரே. எதிர்காலத்தில், விஜயநகரில் கூட போக்குவரத்து வசதிக்காக மேம்பாலம் அமைக்க போதுமான இடவசதிகள் உள்ளன. இங்கு அதுவும் முடியாதக்காரியம்.

இப்பொழுதே இந்த நிலையென்றால், இன்னமும் சத்யம் சினிமாவின் திரையரங்குகள் திறக்கப்பட்டால்..?!! 
பல வருடங்களாக வசித்துவந்த, பழகிவிட்ட ஓரிடம்  தீடீரென மாசுப்பட்டு விட்டதாகவே உணர்கிறேன். இந்த வளாகத்தினால் ஏற்படும் போக்குவரத்தில் வேளச்சேரி ஸ்தம்பிக்க போவதென்னவோ உறுதி.  

எது எப்படியோ, வீட்டிலிருந்து நடந்து செல்லும் தொலைவில் ஒரு மிகப்பெரிய மால்..... வெயில் கொளுத்தும் நாட்களில், சில்லென்று நேரத்தைக் கழிக்க இங்கே சென்றுவிடத் திட்டமிட்டிருக்கேன்.

மிக சாதாரண கட்டிட அமைப்பு என்பதாலோ என்னவோ, மும்பை மால்'களை போன்று ஃபீனிக்ஸ் என்னை கவரவில்லை.

அணில் குட்டி : போனமா...வந்தமான்னு இல்லாம என்னா நோண்டு வேல..?! அய்யோ பாவம் ...வேற யாரு ?!!  அம்மணியின் வூட்டுக்கார் தான்.. :(((((. 

பீட்டர் தாத்ஸ் : Study lends a kind of enchantment to all our surroundings

திரு. கமல்ஹாசன் அவர்களுக்கு,

விஸ்வரூபம் பார்த்துவிட்டு உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவேன் என்று நினைத்தேன். ஆனால், விஸ்வரூபம் வெளியீட்டில் நடந்த சம்பவங்களால், முன்னதாகவே எழுதுகிறேன். 

சினிமாவில் இருப்பவர்கள் மட்டும் பெரிதுபடுத்தி சொல்லும் வசனம் "சினிமாவில் சம்பாதித்ததை சினிமாவில் தான் போடுகிறேன்". பொதுவாக எந்த தொழில் செய்பவரும் அப்படிதானே செய்கிறார்கள். இதில் சினிமாத்துறையில் இருப்பவர்கள் மட்டும் இதை பிரத்யேகமாக அழுத்தி சொல்லி பெரிதுபடுத்த காரணமென்ன?

விஸ்வரூபம்'  பிரச்சனைகளின் கடந்த நாட்களில் உங்களால் முன்னிருத்தப்பட்ட ஒரு விசயம், "என் மொத்த சொத்தையும் முடக்கியுள்ளேன், அது என் கையை விட்டு போய்விடும்" என்பதே. 'விஸ்வரூபம்' தமிழ்நாட்டை தவிர, அமெரிக்கா, கனடா, சிங்கப்பூர் & இந்தியாவில் கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் மகாராஷ்டிராவில் எந்த பிரச்சனையுமின்றி வெளியிடப்பட்டு, நல்ல வசூலோடு ஓடிக்கொண்டு தான் இருக்கிறது. அங்கு வரும் லாபத்தைக்கொண்டு, ஒரு திறமையான வியாபாரியான உங்களால் தமிழகத்தில் உள்ள இக்காட்டான சூழ்நிலையை தற்காலிகமாக சமாளிக்கமுடியும் அல்லது தள்ளிவைக்க முடியும். நீங்கள் மனிதனுக்கு "எதுவும் சாத்தியம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் அறியாதவர் இல்லை

95 கோடிகள் செலவில், இப்படி ஒரு கதைக் கருவைக்கொண்டு (நடுவில் நீங்கள் மருதநாயகம் படம் எடுக்க முயற்சி செய்ததும், முதலீடு உட்பட பலப்பிரச்சனைகள் கருதி முடக்கியதும் அறிவோம்) இத்தனை ஆண்டுகள் கழித்து மீண்டும் சொந்தமாக ஒரு சினிமாவை இயக்கி, வெளியிட காரணம் என்ன? "சினிமாவினுள், வெகு ஆண்டுகளாக உங்களின் உள்ளார்ந்த தேடலின் முடிவு அல்லது மிச்சம்" என்று சொல்லலாமா? இந்த தேடலும் மிச்சமும் யார் சம்பந்தப்பட்டது.?! கமல்ஹாசன் என்ற தனிமனிதன் சம்பந்தப்பட்டது. இதில் கிடைக்கும் லாபம், நஷ்டம், அனுபவம், கல்வி, தொழிநுட்பம், வெற்றி, தோல்வி, பெருமை, பதக்கங்கள் எல்லாமே அந்த தனிமனிதனையும், அந்த மனிதனின் தேடலின் நிறைவை பூர்த்தி செய்வதுமாகவே தானே இருக்கும்?

இப்படியிருக்க, இதில் எங்கிருந்து சமுதாயமும், நாடும், மொழியும், மக்களும் வருவர்?. எங்கிருந்தாலும் சரி நீங்கள் "விழுந்தால் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன் அதில் பல சுதந்திர பறவைகள் வந்து அமரும் மரமாக நானிருப்பேன்" என்றீர். ஆனால் இத்தனை வருடங்களாக உங்களின் படங்களுக்கு காசுக்கொடுத்து பார்த்து ரசித்த, உங்களின் திறமையை கைத்தட்டி இன்று வரை ஊக்குவித்த, நீங்கள் இந்தளவு வளர்ந்து ஒரு பிரமாண்டமான திரைப்படத்தை தயாரிக்கும் அளவு பணத்தளவில் உங்களை உயர்த்திய உங்களின் "பேக்கு" ரசிகர்களுக்கு உங்களின் கைமாறு தான் என்ன?. நாட்டை விட்டு ஓடிவிடுவதா?

பிரச்சனை வருகிறது, உடனே நான் நாட்டைவிட்டு போவேன், இங்கிருக்க எனக்கு வழியில்லை என்று சொல்லும் நீங்கள், என் உடலையும் உயிரையும் இப்பூமிக்கே அற்பணித்திருக்கிறேன் என்ற மாறுபட்ட இரண்டு கருத்தக்களை ஒரே நேரத்தில் சொல்லியிருக்கிறீர். செய்வதறியாத குழப்பமான, மன அழுத்தமான நேரத்தில் நீங்கள் உணர்ச்சிவசப்பட்டு கோவப்பட்டு பேசியவை என்று எடுத்துக்கொள்ள முடியவில்லை, அச்சூழ்நிலையிலும் பல விசயங்களை மிக அழுத்தம் திருத்தமாக நிதானம் தவறாமல் பேசியிருக்கின்றீர். குறிப்பாக உங்களின் இஸ்லாமிய சகோதரர்கள் பாதிக்கப்படாதவாறு பேசியிருக்கிறீர். இதே இடத்தில் திரு.ரஜினியோ வேறு யாரோ இருந்தால், எப்படி பேசியிருப்பார் என்று அனைவரும் அறிந்ததே.

ஆனால், உங்களின் பேச்சும், மிகச்சிரமப்பட்டு வரவழைத்த அந்நேரத்து நிதானமும், உங்களின் முதிர்ச்சியையும், வாழ்க்கையில், சினிமாவில், சமுதாயத்தில் உங்களின் அனுபவத்தை நிச்சயம் வெளிக்காட்டியது.

இப்படியிருக்க, உங்களின் சுயதொழிலான சினிமாவினால், அதில் ஏற்படும் பிரச்சனைகளினால், உங்களின் ரசிகர்களும், அவர்களை சார்ந்தவர்களும் இத்தனை மன அழுத்தத்திற்கும், வருத்தத்திற்கும் ஆளாக்கும் படியாக உங்களின் பேச்சு அமைந்தது மிகுந்த வருத்தத்தையும் கலக்கத்தையும் எனக்கும் ஏற்படுத்தியது என்பதை இங்கு சொல்லிக்கொள்கிறேன்.

வேறு எந்த தொழில் செய்பவராக இருந்தாலும் இதுப்போன்ற பிரச்சனைகள் வரும், சிலர் பிச்சைக்காரர்களாக கூட ஆகியிருக்கின்றனர். உங்கள் சினிமாத்துறையை சார்ந்த சிலரும் மிக மோசமான நிலைமைக்கு சென்றிருக்கின்றனர், அவர்கள் சினிமாத்துறையினாராலேயே கைவிடப்பட்டும் இருக்கின்றனர். அதில் நீங்களே சொல்லி வருத்தப்பட்ட ஒரு மாபெரும் நடிகை, நடிகையர் திலகம் சாவித்திரி அம்மா. நீங்கள் வாழும் இக்காலத்திலேயே எத்தனையோ தயாரிப்பாளர்கள் இருந்த இடம் தெரியாமல் போய் இருக்கின்றனர். இப்படியாக பாதிக்கப்பட்ட யாருமே பிழைப்பைத்தேடியோ, அசிங்கப்பட்டோ, அவமானப்பட்டோ தப்பித்து நாட்டைவிட்டு ஓடுகிறேன் என்று சொல்லிவிட்டு ஓடிவிடவில்லையே ?

"விழுந்தால் இம்மண்ணில் விதையாக விழுவேன் மரமாக வளர்வேன்" என்று சொல்லியிருந்தீர்கள் என்றால் இன்னமும் பெருமைப்பட்டிருப்போம். ஏனென்றால் உங்களின் ஒவ்வொரு காசும், தமிழ் மக்களின் காசு. உங்களின் ஒவ்வொரு வளர்ச்சியும் உங்களின் உழைப்பிற்கும் திறமைக்கும் கிடைத்ததாக இருந்தாலும் அதை ஊக்கப்படுத்தியது தமிழ்மக்கள். நீங்கள் கற்றவை பெற்றவை எல்லாமும் இந்த மண் கொடுத்ததே.  நீங்கள் வீழும் போது பார்க்க பொறுக்காத இம்மக்கள் உங்களுக்கு பணம் அனுப்ப ஆரம்பித்துவிட்டனர்  இது தான் நாங்கள்....அந்த நாங்களில் நீங்களும் இருந்தீர்கள் என்றால், இனி ....வேறு இடம் தேடுவேன் என்று சொல்லமாட்டீர்கள் என்ற நம்பிக்கையோடு இக்கடிதத்தை முடிக்கிறேன்.

இவள் -
உங்களின் படங்களை ரசித்துப்பார்க்கும் ஒரு ரசிகை

இதற்கு முன்னர்  உங்களின் திரைப்படம் பார்த்து எழுதிய இரண்டு கடிதம், லெட்டர் இல்ல கடுதாசின்னு கூட சொல்லலாம்.

http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/09/blog-post_22.html
http://kavithavinpaarvaiyil.blogspot.com/2008/09/blog-post_28.html

அணில் குட்டி : ஸ்ஸப்பாஆஆஆ.....

பீட்டர் தாத்ஸ் : There are some things he can do that others can but there are many things Kamal can do that no other actor can - Maniratnam

அமிர்தசரஸ் - பயணக்குறிப்பு

பொற்கோயில் : பஞ்சாப், அமிர்தசரஸ்ஸில் அமைந்துள்ளது.  மிகப்பெரிய கோயில், கோயில் வாசல் எப்போதும் திறந்திருக்கிறது, எந்த மதத்தினரும் செல்லலாம். பாதுகாப்பு கருதி நம்மூர் கோயில்களில் செய்யப்படும் எந்த பரிசோதனையும், கட்டுப்பாடுகளும்,
இம்சைகளும் இங்கு இல்லாதது அவர்களின் தைரியத்தையும் நம்பிக்கையையும் காட்டியது. ஈட்டி ஏந்திய ஒன்றிருண்டு காவலாளிகளை பார்க்கமுடிந்தது. புகைப்படமும் எடுக்கலாம். செருப்பு அணியக்கூடாது, பெண்கள் தலையில் முக்காடும், ஆண்கள் தலையில் துணியும் கட்டியிருக்க வேண்டும். இதுத்தவிர வேறு எந்த தடையும் கட்டுப்பாடும் இல்லை.

அவர்களின் வேதப்புத்தகம் சகல மரியாதையுடன் வைக்கப்பட்டிருக்க, பஜனைப்பாட்டை சிலர் மூல அறையில் உள்ளேயே அமர்ந்து பாடிக்கொண்டிருக்க கோயிலின் உட்பகுதி, மேல் பகுதி (2 மாடிகள்)  சுற்றி தரிசனம் செய்துவிட்டு வெளியில் வரும் போது சுடசுட சர்க்கரை பொங்கல் போன்றதொரு பிரசாதத்தை (அதே சுவை, ஆனால் அரிசியில் செய்தது இல்லை) வரும் அனைவருக்கும் வழங்கியவாறே உள்ளனர். ஏனோ திருப்பதி கோயிலும் அதன் பாதுகாப்பு, கூட்ட நெரிசல், எதைத்தொட்டாலும் பணம், கால் வைக்கமுடியாத அசுத்தம்,  பிரசாதம் கொடுக்கும் இடம், சுற்றியுள்ள இடங்கள் நினைவுக்கு வந்தன.

அழுத்தமாக சொல்லவேண்டிய தகவல், இங்கு பலதரப்பட்ட மக்களின் வசதிக்காக வசதிவாரியாக தரிசன வரிசைகள் இல்லை. எல்லோருக்கும் ஒரே வரிசை. பணம் செலுத்தி வேகமாக பார்க்கக்கூடிய வசதிகள் இங்கு செய்யபப்டவில்லை. உள்ளே சென்று வெளியில் வரும் வரை ஒரு பைசா செலவு இல்லை.
 
கோயிலில் சுத்தம் வியக்க வைத்தது. வேலையாட்கள் தொடர்ந்து கோயிலை சுத்தப்படுத்தியவாறே இல்லை, சுத்தம் செய்யும் ஒரு ஆளைக்கூட நான் பார்க்கவில்லை. வரும் மக்களே சுத்தமாக தான் வைத்திருக்கின்றனர்.  கோயிலை சுற்றியுள்ள தடாகத்தில் பெரிய பெரிய மீன்கள் இருந்தன. அவற்றிற்கு பக்கதர்களால் எந்த பிரச்சனையும் இல்லை, குளித்தில் குளிப்பவர்களும் எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் மூழ்கி எழுந்து வருகின்றனர். பிரசாதம் சாப்பிடும் இடமும் அதனைச்சுற்றியுள்ள இடங்களும் கூட அதே சுத்தத்தோடு இருப்பது குறிப்பிடத்தக்கது.

திருப்பதியை போலவே இங்கும் அன்னதானம், அதுவும் இடைவிடாது நேரம் காலம் இல்லாத அன்னதானம் நடைபெறுகிறது. இங்கு ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசம் இல்லாமல் எல்லோரும் தரையில் அமர்ந்து சாப்பிடுகின்றனர். வருகின்ற அனைவரும் இங்கு சாப்பிடாமல் செல்வதில்லை. திருப்பதியில் வசதி படைத்தோர் அன்னதானம் இருக்கும் பக்கமே தலையை திருப்பமாட்டர். இங்கு அனைவரும் சமமாக அமர்ந்து சாப்பிடுகின்றனர். உள்ளே செல்லும் போது ஒரு தட்டு, ஒரு கிண்ணம், ஒரு ஸ்பூன் தருகிறார்கள். சப்பாத்திக்கு சப்ஜி கொடுக்கும் போது, நான் அகலமான பேசின் போன்ற அந்த கிண்ணத்தைக்காட்ட, பரிமாறுபவர் அது தண்ணீருக்கு என்று சொல்லி தட்டிலேயே சப்ஜியை வைத்துவிட்டுப்போனார்.   கிட்டத்தட்ட 50000 பேர் உட்கார்ந்து உண்ணும் அளவு பெரிய இடம், எவ்வளவு சாப்பிட்டாலும் கேட்டு கேட்டு கொடுத்துக்கொண்டே இருப்பதையும் கவனித்தேன். வரும் பக்தர்கள் காய்கறி நறுக்குதல், பாத்திரம் கழுவுதல் போன்ற வேலைகளை செய்துவிட்டு செல்கின்றனர்.

பல ஆண்டுகளாக பொற்கோயில் சென்றே ஆகவேண்டும் என்ற ஆவலைத்தூண்டிய வரலாற்று நிகழ்வு அன்னை இந்திராவின் Operation Blue Star - http://en.wikipedia.org/wiki/Operation_Blue_Star.  கோயில் அருங்காட்சியகத்தில் கோயில் இடிககப்பட்டப்பிறகு எடுத்தப் புகைப்படங்கள் வைக்கப்பட்டிருந்தன.  இந்த நிகழ்வை படித்தப்பிறகே கோயிலை பார்க்கவேண்டும் என்ற என் ஆவல் அதிகமாகியது. இந்திராஜி' ஐ சுட்டவரின் புகைப்படமும் கோயிலில்  வைக்கப்பட்டிருந்தது. என் கனவுகளில் என்னைக்கவர்ந்த இக்கோயில் நேரிலும் கவர்ந்துவிட்டது.
 
வாகா எல்லை : அமர்தசரசில் இந்திய பாக்கிஸ்தான் எல்லையில், தினமும் கொடி ஏற்றம் & கொடி இறக்கும் விழா நடைபெறுகிறது. இங்கு நம் எல்லையில் செய்யும் அதே நேரம், பாக்கிஸ்தான் எல்லையிலும் இதே விழா நடைபெறுகிறது. அந்தப்பக்கம் "பாக்கிஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும், அதை மிஞ்சும் படியாக இந்தப்பக்கம் "ஹிந்துஸ்தான் சிந்தாபாத்" என்ற சத்தமும் காதைக்கிழித்தது. மிக அருகில் பாக்கிஸ்தான் எல்லைக்கதவு, அந்த ராணுவ வீரர்கள், அந்த மக்களைப்பார்க்கும் போது, உள்ளிருந்து "இந்தியன்" என்ற உணர்வும், தொடர்ந்து அவர்களை எதிர்த்த கோஷங்களும் நமுக்குள்ளிருந்து தானாகவே பொங்கிவருகிறது.
அனைவரும் பார்க்கவேண்டிய நிகழ்வு. கோவா சென்றிருந்த போது கொடி இறக்க நிகழ்ச்சியை எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாமல் கண்டுகளித்தேன். ஆனால் வாகா எல்லையில்  நாட்டுப்பற்றோடு வெறித்தனமாக கொண்டாடடிய ஒரு நிகழ்ச்சி என்று சொல்லலாம். :)



ஜாலியன்வாலா பாக் : பொற்கோயிலிலிருந்து நடக்கும் தொலைவில் இவ்விடம் இருக்கிறது. மனதை பிசைந்தெடுக்கும் வரலாற்று நிகழ்வு. சுவற்றில் குண்டடிப்பட்ட சுவுடுகள் இன்னும் பரமாரிக்கப்பட்டு வருகின்றன.கனத்த இதயத்தோடு சுற்றிப்பார்த்தேன். ஜெனரல் டயர் சந்ததியினர் மற்றும் அவரது
நாட்டவர்கள் வெட்கி தலைகுனிய வேண்டிய இழிச்செயல்.
Wagah border Video : Thx Youtube

உனக்கு 20 எனக்கு 18

பழம்நீ : பரிட்சை எப்படிடி எழுதின?

கவி : ம்ம் நல்லா எழுதியிருக்கேன்ப்பா... ஆனா ஹால் மாத்தி உக்காந்துட்டேன்..ஒரே டென்ஷனாப்போச்சி..கொஞ்ச நேரம் வீணாப்போச்சி..

பழம்நீ : அட லூசே..ஏண்டி?

கவி : 10 நிமிஷம் முன்னாடி போர்ட்ல ஹால் நம்பர் ஒட்டறாங்கப்பா... ஒரே கூட்டம்.. தூரக்கிருந்து பார்த்தேனா..சப்ஜெக்ட் மட்டும் ஓரளவு தெரிஞ்சிச்சி...என் நம்பர் சரியா கண்ணுத்தெரியல..குத்துமதிப்பா இந்த ஹால் தான்னு போய் உக்காந்துட்டேன்..

பழம்நீ : என்னது கண்ணுத்தெரியலையா? அப்ப சப்ஜெக்ட் மட்டும் எப்படி படிச்ச?

கவி : அது ரெட் கலர் மார்க்கர்ல பெரிய எழுத்தா எழுதி இருந்தாங்க..நம்பர் எல்லாம் கம்பியூட்டர் பிரிண்ட் தூரக்கிருந்து ஒன்னும் தெரியலப்பா...

பழம்நீ: கண்ணாடி போட்டிருந்தியா?

கவி : ஹி ஹி..இல்ல...

பழம்நீ : ..நமக்கு தான் நொள்ளக்கண்ணாச்சேன்னு கண்ணாடி போட்டா என்னவாம்.. ஏழு கழுத வயசாச்சி..அட்டண்டன்ஸ்ல கையெழுத்து போடாட்டி ஆம்சென்ட் தெரியுமில்ல..? உன்னால அடுத்தவங்களுக்கு எவ்ளோ பிரச்சனை? ஒழுங்கா பாத்து ஒக்கார வேணாமா?...ஒன்னுக்கு 2 பிஜி முடிச்சி இருக்க..இதுக்கூட தெரியல.?...இதுல இன்னொரு பிஜி வேற எழுதற...10 பேருக்கு நீ சொல்லித்தரனும்..நீயே இப்படி இருக்கி........

கவி : ப்ப்ப்பா....... சும்மா இருங்கப்பா..!!!!  மாற்று திறனாளிகளை திட்டக்கூடாது அது ரொம்ப...பாவம்ப்பா.....

பழம்நீ : மாற்று திறனாளிய நான் எங்கடி திட்டினேன்..?! அவங்கள ஏன்டி நடுவுல வம்புக்கிழுக்கற?

கவி : அட..நாந்தாம்ப்பா... கண்ணுத்தெரியலல்ல..அப்ப நானும் மாற்று திறனாளி தான..?

பழம்நீ :அடி செருப்#$@$#@....#$@% @$%#^%^ @%$$#  $#%$#  $%@%  @%$%$%  @%$%$ %%$^%   @$^%#$^  @#$#@ #@$%$#^%$^&

கவி : எச்ச்சூமி பழம்...ஹோல்ட்...!!!  இதுக்கு மேல ஒரு வார்த்தைக்கூட வரக்கூடாது. ! இப்ப என்ன பிரச்சனை உங்களுக்கு ?? என் கண்ணு தானே. என்னால பகல்ல கூட  நட்சத்திரத்தை ஒன்னு விடாம எண்ணமுடியும் .... என் கண்ணு அவ்ளோ பளீச்..பளீச்....போதுமா? .....

பழம்நீ : ம்ம்ம்ம்ம்ம்ம் ...அது..! 

*******************



கவி : ப்பாஆ....ப்பாஆ.. இப்ப நல்லாயிருக்கா?  (தலைவிரி கோலம்)

பழம்-நீ : இருக்கு......

கவி : இப்ப ?

பழம்-நீ : இருக்கு......

கவி : இது?!

பழம்-நீ : நல்லாயிருக்கு...

கவி : என்னப்பா நீங்க?  எப்படியிருந்தாலும் நல்லாயிருக்குன்னு சொல்றீங்க? இது சீட்டீங்...

பழம்-நீ :.............................
............................. நீஈஈஈ.... ரஜினிகாந்த் மாதிரிடி........ எங்க இருந்தாலும், எப்படி இருந்தாலும் சூப்பர்ர்ர்ர்ர் தான். வேற மாதிரி மாத்தி சொல்லவே முடியாதுடி..........

கவி : அவ்வ்வ்வ்...!!


*************************

கவி : பின்னாடி வீட்டுல புதுசா ஒரு நாய் வளக்கறாங்க போல எந்த நேரமும் வாயமூடாம குலைச்சிக்கிட்டே இருக்கு...எரிச்சலா இருக்குப்பா...அவங்க வீட்டுல இருக்கவங்க அதை ஏன் வாயமூடு" ன்னு சொல்லவே மாட்டேங்கறாங்க?

பழம்-நீ : ..............................
...

(என்ன பதிலைக்காணமேன்னு திரும்பி பார்த்தால்...என் பின்னாடி அமைதியாக என்னைப்பார்த்தவாறே  புன்முறவலோடு நிற்கிறார்)

கவி :.(.நானும் புரியாமல் திரும்பிவிட்டு....... புரிந்து மீண்டும் ) ஆவ்வ்வ்வ்வ்...என் வாயக்கூடவாஆஆஆ????

பழம்-நீ : ஹா ஹா ஹா ஹா...

கவி : கிர்ர்ர்ர்ர்ர்.... :))

*************

கவி : நேருஜி ஜெயில்ல இருக்கப்ப அவரோட பொண்ணு இந்திராஜிக்கு லெட்டர் எழுதினாராம்..அதை படிச்சி படிச்சி அவங்க ரொம்ப வீராதி வீரியா வளந்தாங்களாம்.. அது மாதிரி நான் உனக்கு இனிமே லெட்டர் எழுதப்போறேன்...  

நவீன் : இப்ப ஜெயில்ல இருக்கறது நீயா? நானா?

கவி : ஜெயில்ல நேருஜி வெட்டியா இருந்தாரு...இப்ப அதே மாதிரி நானும் வெட்டியா இருக்கேன்னு வச்சிக்கோயேன்... .
 

நவீன் : நீ வெட்டி............ஆனா நான் வெட்டியில்ல.....அது மாதிரி எதாச்சும் வந்துச்சி.... நேரா ட்ரேஷ்க்கு போகும்...சொல்லிட்டேன்
 

கவி: என் செல்லக்குட்டி..பட்டுக்குட்டி....ராஜாகுட்டி..தானே..? படிடா குட்டி...நீ எதையும் இம்பிளிமென்ட் பண்ண வேணாம்..ஒன்னு இரண்டு பாயின்ட்ஸ் படிக்கும் போது தானா மனசுல பதிஞ்சுடும்..  
நவீன் : சரி சரி அனுப்பித்தொல..படிச்சித்தொலைக்
கிறேன்...

கவி : (அது!!)... குட் செல்லம்.!


**************************

கவி : கத்திரிக்காயில் இருக்க ஒரு என்சைம், மூளைய சுத்தி இருக்க கொழுப்பை சரியான % ல் வச்சிக்க பயன்படுதாம்..நீ கத்திரிக்காயே சுத்தமா சாப்பிடமாட்டற..உன் மூளைய நினைச்சி எனக்கு ரொம்ப கவலையா இருக்குடா...

நவீன் : ஹா ஹா...மூளைய பத்தியெல்லாம் நீ பேசறப்பாரு..அதான் இங்க காமெடி..:))) .  நானு... வெளியில் பிரியாணி சாப்பிடுவேன் இல்ல..அதுக்கு கத்திரிக்காய்  தான் தொட்டுக்க வைப்பாங்க..அப்ப சாப்பிட்டு இருக்கேனே...

கவி : அடி செல்லமே..?! கத்திரிக்காய் சாப்பிடுவியா நீனு? இது எனக்கு தெரியவே தெரியாதே?......  ஏண்டா இதை முன்னமே சொல்லல்ல ..!!! நான் வீட்டுல செய்தா துளிக்கூட சாப்பிடாம ஒதுக்கி வைக்கிற... ஹோட்டல சாப்பிடுவேன்னு வெக்க மானமே இல்லாம சொல்ற...

நவீன் : ஹே ஹே.. நீ செய்யறதை எவன் சாப்பிடறது..

கவி :கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்..சோத்துக்
கு சிங்கி அடிக்கும் போதே உனக்கு இவ்ளோ திமிரா...?

நவீன் : நான் சாப்பாடே கிடைக்காம பட்டினி கிடந்தாக்கூட உன் சாப்பாடு நல்லாயிருக்குன்னு சொல்லுவேன்னு கனவுல கூட நினைக்காதே..நடக்காது..!!

கவி :... :(((((((( நீயெல்லாம் ஒரு புள்ளையா..?!

நவீன் : :))))))))


***************

அணில் குட்டி : .........

பீட்டர் தாத்ஸ் :  Miss U Naveen



ப்ப்ப்பாஆ....யார்ரா இது..?!

மெளனங்களின்
குவியங்களாய்

உணர்ச்சிகளற்ற
வழுக்கல்களாய்

கண்ணீர் சொறியும்
மரபாச்சியாய்

கிறுக்கல்களின்
முதல்வியாய்

ஆக்கமெடுத்து
வளர்கிறது (என்) மனிதம்..


வெல்லத் துடிக்கிறேன்
எனை நானே...




Image :Thx Google

முனுகல்

சுட்டெரிக்கும் வெயில், வெயிலை சொல்லிக்குறையில்லை, எனக்கு அப்போது தான் நேரம் வாய்த்தது. கையில் குடை, வெயிலுக்காக முகத்தை மறைக்கும் கண்ணாடி என அந்த இல்லத்துக்குள் நுழையும் போது மதியம் 12.30 இருக்கும். தூரத்திலிருந்து கவனித்துவிட்ட பாட்டிகள் "கவிதா வர்ரா.."ன்னு சொல்லியது காதில் விழுந்தது. எல்லாருக்கும் வயசாச்சின்னு நாந்தான் நினைச்சிக்கிறேன். ஆனா கூர்மையாக கவனித்து, தொலைவிலிருந்தே நாந்தான்னு கண்டுப்பிடிச்சிட்டாங்க. 

நேராக அவர்களை கவனித்துக்கொள்ளும் சிஸ்டரிடம் சென்று, "எல்லோருக்கும் பாயாசம் செய்து கொண்டுவந்தேன் கொடுக்கட்டுமா? " கையிலிருந்த ஒரு துணிக்கவரை சிஸ்டரிடம் கொடுத்து.."இது உங்களுக்கு"


வாங்கிக்கொண்டு சிரித்தபடி..."தாங்க்ஸ் கவி....நீ ஒவ்வொருத்தரா பேசிட்டு வா.. சாப்பாடு நேரம் எல்லாரும் டைனிங் ஹாலுக்கு வருவாங்க.. அங்க கொடுத்துடு...... கவி "புதுசா இரண்டு பேர் சேர்ந்து இருக்காங்க... மூணாவதா ஒருத்தங்க இன்னைக்கு வந்துடுவாங்க... உனக்குக்கூட அவங்கள தெரியும்..முன்னமே இங்க இருந்தவங்க..லட்சுமி அம்மா.."

"பெரிய பொட்டு வச்சி இருப்பாங்களே அவங்களா??

பின்னாலிருந்து ஒரு பாட்டி.. "கவிதா.. பொட்டெல்லாம் முன்னாடி..இப்ப அவ புருஷன் செத்துட்டான்..அதான் யாருமில்லாத ஆளா திருப்பி இங்கவே வர்ர்ர்ரா.."

சில பாட்டிங்க இப்படித்தான் ...மனசுல எதுவும் வச்சிக்காம சொல்லிடுவாங்க..  "சரி..வரட்டும்..முகத்தை பார்த்தா நினைவு வந்துடும்" ..... டைனிங் ஹால் சென்றேன்.

***********

டிவி பார்த்தபடி மத்த பாட்டீஸ் எல்லாம் சாப்பிட ரெடியாகிட்டே இருந்தாங்க. தட்டுகளில் உணவு பரிமாறப்பட்டிருந்தது. முள்ளங்கி சாம்பார், கீரை பொரியல், ஏதோ ஒரு வற்றல் இருந்தது. சில பாட்டிகள் சாம்பாரை கப்'பில் ஊற்றி வாங்கிக்கொண்டனர். எல்லோரையும் பார்த்து "பாயசம் எடுத்து வந்திருக்கேன், எதுலக் கொடுக்கட்டும்"

முதல்ல ஒரு பாட்டி, "கவி.. அந்த ஷெல்ப்ல நீலக்கலர் கப் இருக்குப்பாரு அதை எடுத்து, எனக்கு அதுல கொடுத்துடு.."

அடுத்தப்பாட்டி, "கவி..எனக்கு இதுல.."

இன்னொருப்பாட்டி, "கவி.. இந்த கப்புல சாம்பார் ஊத்திட்டேன்.. .சும்மா ஒரு அலசு அலசிட்டு இதுல கொடுத்துடு.."

4ஆவது பாட்டி... "ஆமா எதுக்கு பாயசம்..?"

"நீயூ இயர் வந்துச்சில்ல..அதை நீங்கெல்லாம் இனிப்போட ஆரம்பிக்கனும்னு பாயாசம் செய்து எடுத்துட்டு வந்தேன்.."

"ஓ....அதுக்கா... ? நீ கேக் இல்ல எடுத்துக்கிட்டு வருவேன்னு நினைச்சேன்.."

"கேக்  கடையில் கிடைக்கறது, எப்ப வேணாலும் கிடைக்கும் ..இது நானே செய்த பாயாசம்..... கிடைக்குமா..?

முதல் பாட்டி.."அடி யார்டி இவ.. நமக்குன்னு செய்து எடுத்துட்டு வந்திருக்கு ...எதாச்சும் நொட்டு சொல்லிக்கிட்டு பேசாம வாங்கி வச்சிக்கிட்டு குடி"

நடுநடுவில் எல்லாப்பாட்டிகளும் மாறி மாறி கவிதா சாப்பிடுன்னு ஒரே உபசரிப்பு. :). நமக்கு அவங்களை எல்லாம் பார்த்தப்பிறகு சாப்பாடே உள்ள இறங்காதுன்னு அவங்களுக்கு தெரியாதே... :(. 

எல்லோருக்கும் பாயாசத்தை கொடுத்துவிட்டு, திரும்ப படுக்கைகள் இருக்கும் அறைக்கு புதிதாக சேர்ந்தவர்களை பார்க்க வந்தேன். நான் இருந்த மறு மூளையில் முனுகல் சத்தம்...

ரொம்ப மெதுவாக யாரோ  சக்தியற்றக்குரலில் முனுகும் சத்தம் கேட்டது...

கிட்டேச்சென்றேன்.. எலும்பும் தோலுமாக  ஒரு பாட்டி படித்திருந்தார்,  யூரின் டியூப் இணைத்திருந்தனர்.

"பாட்டி...பாட்டீ..எங்கையாச்சும் வலிக்குதா..? உங்களுக்கு என்ன செய்யுது...? வலிக்குதாப்பாட்டி? "

"நீ ..யாஆ... ரு..?"

"கவிதா... "

"க..வி..தா..ஆஆ வா...? " இப்படியே ஒவ்வொரு எழுத்தாக விட்டு விட்டு மெல்லிய குரலில் பேச ஆரம்பித்தார்... கட்டிலில் கைவைத்து..எனக்கு காதும் கேட்கும் வரை குனிந்து  கவனித்தேன்....

"எ ன் ன.. அ ப்பா.... அம் மா .......அ னா தை யா........ விட் டு ட் ......  செ..த் து ட்டா ங் க........... அவ ங்க  ஒ ரு வீ ....... டு  கு...டுத் தா ங்க...... இ ங்க அ னா தை ...  யா ...கெ ட க் க.... றேன்.... ..

................................    "பாட்டி..... நீங்க அனாதை இல்ல..இங்க நிறையப்பேர் இருக்காங்க. இதோ நான் இருக்கேனே....உங்கள வந்து பாக்கறேன்..உங்களோட பேசறேன்..சரியா..??. இங்க இருக்க எல்லாரும் உங்களுக்கு சொந்தக்காரங்க தான்..... உங்கள நல்லா பாத்துக்குவாங்க...  ஜாலியா இருக்கலாம்......"

"இ ங்க... இ ப்ப.. டி .....அ னா த...யா...கெ..ட..க்..க...றே..னே.. .... எ..னக்...கு  வீ...டு இ..ரு..க்..கு.. பெ..ர்ர்..ர்...ரிய ......வீ....டு..  அ...ம்மா அ....ப்பா..... கு...டு...த்..தது...."

சிஸ்டரும், இன்னொரு பாட்டியும் உள்ளே வந்தனர். "கவிதா இந்த வாழைப்பழத்தை அந்த பாட்டிக்குக்கொடு".

"படுத்துக்கிட்டு இருக்காங்களே.. சாப்பிடுவாங்களா?"

"சின்ன சின்னதா கிள்ளி வாயில போடு..அது நல்லா சாப்பிடும்.."

:) சின்ன துண்டாக்கி ."பாட்டி ஆஆஆ காட்டுங்க" .....வாயை உலகம் தெரியும் படி திறந்து காட்டிய பாட்டிக்கு ஒரு துண்டை ஊட்டிவிட்டேன்.

இரண்டாவது துண்டிலிருந்து..வலதுகையை நீட்டி தானே வாங்கி சாப்பிட்டாங்க...(சரியா ஊட்டலையோ?! :) )

சிஸ்டரிடம் "அம்மா அப்பான்னு சொல்லிக்கிட்டே இருக்காங்க.. இந்த பாட்டிய அவங்க அம்மா அப்பாவா கொண்டுவந்து சேர்த்தாங்க..?

"இல்ல கவிதா.. எல்லாத்தையும் மறந்துப்போயிட்டாங்க, ஏதோ பழைய நினைப்புல பேசறாங்க. டிசம்பர் மாதம் அவங்க புள்ள தான் கொண்டு வந்து சேர்ந்துட்டு போனாரு...பிறகு வந்து பார்க்கவேயில்லை.. எழுந்து ரொம்ப மெதுவா நடப்பாங்க..நல்லா சாப்பிடுவாங்க....வயசாச்சியில்ல ரொம்ப தள்ளாமை அவ்ளோதான். ....அடிக்கடி ஒன்னுக்கு போறேன்னு முடியாம எழுந்திருப்பாங்க....அதனால எழுந்துக்காதன்னு சொல்லி யூரின் டியூப் மாட்டிவிட்டுடறது,."

***********
இந்த நிகழ்வை எழுத முக்கியக்காரணம்..: பெற்றப்பிள்ளைகள் இருக்கும் போது இல்லங்களில் விடப்படும் அத்தனை வயதானோரும்.. தான் அனாதையாக்கப்பட்டோம் என்றே நினைக்கின்றனர். ஒரு சிலர் வீட்டை விட இங்கு நன்றாக இருக்கிறேன் என்றும் சொல்கின்றனர். இருப்பினும் 98%  முதியோர் தனிமையையும்.. பிள்ளைகளின் பிரிவையுமே நினைத்து வாடுகின்றனர், பிள்ளைகளின் பாசத்திற்காக ஏங்குகின்றனர்.

பெற்றோர் பிள்ளைகளை படிக்கவைத்து எல்லாமும் செய்து உருவாக்கிவிடுவதைப்போன்று, பிள்ளைகளும் பெற்றோரை கடைசிவரை வேலை, சூழ்நிலை, வசதி போன்ற காரணங்கள் காட்டி தள்ளாத வயதில் தள்ளிவைக்காமல், நேரடி கண்காணிப்பில் வைத்து பாதுகாப்பதை ஒரு கடமையாக நினைக்கவேண்டும். இதை அரசு ஒரு சட்டமாக்கினால் கூட வயதானோருக்கு ஒரு விடிவுக்காலம் பிறக்கும். 

அணில் குட்டி : அம்மணிய நினைச்சா எனக்கு சிப்பு சிப்பா வருது... அம்மணியோட புள்ள இரண்டு வருசம் முன்னமே இவிங்க இம்சை தாங்கமுடியாம, அம்மணிக்கு வயசானா எங்க கொண்டுப்போய் சேர்க்கனும்னு முடிவு பண்ணி சொல்லியும் வச்சிட்டாரு..வருங்காலத்தில் இவிங்க நிலைமையே காத்துல டண்டனக்கா டணக்குனக்கான்னு ஆடுது......... ஆனாலும் அம்மணியின் கடமை உணர்ச்சிய பாத்தீங்களா???... ..

பீட்டர் தாத்ஸ் : I die a little inside every time when I see an old person crying for being in an Old Age Home.  


Images : Thx Google

நிசப்த நிமிடங்கள்..

அன்று நாகமணிக்கு முதல் தேர்வு, அறையை கண்டுபிடித்து, செளகரியமாக ஒரு இடத்தைப்பார்த்து அமர்ந்து கொண்டாள். விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பூர்த்திசெய்து, கேள்வித்தாளுக்காக காத்திருந்தாள். அப்போது தான் அந்த பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.

பெரியவர் அந்தப்பெண்ணை, நாகமணிக்கு முன் இருந்த காலி இருக்கையை காட்டி அங்கே அமரசொன்னார்.  உட்காரும் முன் பெண் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை பெரியவரிடம் கொடுத்தாள், அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசாமல் நின்றாள். பெரியவர் அவளை உட்காரசொல்லிவிட்டு, அறையில் இருந்த சூப்பர்வைசரிடம் அந்த பெண்ணைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"இவ்ளோ பெரிய பெண்ணிற்கு தனியாக வந்து அமர்ந்து பரிட்சை எழுதத்தெரியாதா? அதுவும் இது மூணாவது மாடி, அந்த வயதானவரை இங்கு வரை அழைத்து வர வேண்டுமா?" நாகமணியின் மனதுக்குள் எழுந்த தேவையற்ற எரிச்சலின் நடுவே கேள்வித்தாள் வந்தது. அத்தோடு அந்த பெண்ணை மறந்து தேர்வெழுத ஆரம்பித்தாள்.

நாகமணியின் பக்கத்தில் வந்த சூப்பர்வைசர்களில்  ஒருவர் மற்றவரிடம்,  "அந்த பெண்ணிற்கு காது கேட்காது, பேசவும் வராது அதனால் என்ன கேள்வி தாள் வேண்டுமென ஹால் டிக்கட்டைப்பார்த்து கொடு" என்று சொன்னது நாகமணியின் காதில் விழு. "அடடா... இது தெரியாமல் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் பட்டோமே, அந்த பெரியவர் பெண்ணின் அப்பாவாக இருக்கும்... " தனக்குள் உச் கொட்டிக்கொண்டாள்.

தேர்வு முடிந்து வந்து, இரண்டு சக்கர வண்டியை எடுக்கும் போது, அந்த பெண்ணின் நினைவு வர சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் தென்படவில்லை. அவளின் நினைவூடே வண்டியை ஓட்டிச்சென்றாள். போரூர் பூந்தமல்லி சாலை, மாலைவேளை போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. பெரிய வாகனங்கள், ஷேர் ஆட்டோ டுபுடுபு சத்தங்களுக்கு நடுவே நாகமணியின் நினைவு மட்டும் அந்தப் பெண்ணைத் துரத்தியது.

ஒரு வேளை அந்த பெண்ணைப்போல தானும் இருந்தால்???? வினாடித்துளிகளில் போரூர் பூந்தமல்லி சாலையில் வாகனம் செல்ல, இவளின் நினைவுகள் படு வேகமாய் அதே சாலையின் வழியே பின்னோக்கி ஓடியது..... பேரூந்துகள், ஷேர் ஆட்டோக்கள், டூவிலர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக,  இவள் மட்டும் வேக வேகமாய் பின்னோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தாள்......

"நிச்சயம் அப்பா கூட வந்திருக்க வாய்ப்பில்லை. திருமணம் கூட ஆகியிருக்காது, அதனால் கணவரோ அவர் சார்ந்தவர்களோ வந்திருக்க வாய்ப்பேயில்லை. தேர்வெழுத நிச்சயம் நான் தனியாக தான் வந்திருப்பேன், பேசவும் கேட்கவும் முடியாததால், ஒரு காகிதத்தில் நானே என்னைப்பற்றிய குறிப்புகளை எழுதி சூப்பர்வைசருக்கு சைகைக்காட்டி, அதைப்படிக்க செய்திருப்பேன்.......நிச்சயம் நன்றி சொல்ல புன்னகைத்திருப்பேன். வாழ்க்கை இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.. எல்லாரிடமும் சைகை செய்தே பேசியிருப்பேன், என்னைக்கிண்டல் செய்து பார்த்து சிரிப்பவர்களை பார்த்து விசயமறியாது மரியாதைக்கருதி நானும் சிரித்திருப்பேன். ... இந்தளவு யாரையும் கவனித்திருக்க முடியாது..இப்படி யோசித்திருக்கக்கூட முடியாது...

எல்லாமே நிசப்தம்....ஆமாம்.. நான் நிசப்தம்..என்னை சுற்றிலும் நிசப்தம்...அந்த நிசப்தத்தை சற்றே கண்ணைமூடி ரசிக்க .........."  பின்னோக்கி வேக வேகமாய் ஓடிய நினைவுகளின் வேகம் இரத்த அழுத்தம் சோதிக்கும் போது குறையும் நாடித்துடிப்பை போல குறைந்துக்கொண்டே வந்தது...

வெகு நெருக்கத்தில் "ப்ப்பாம் ப்பாம்ம்ம் "  ..சட்டென்று சாலையில் வந்து குதித்தவளாய்.... அதிர்ச்சியோடு வலதுப்பக்கம் பார்த்தாள்..பெரிய லாரி ஒன்று இவளை ஒட்டி வந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தது..  சன்னலோரம் அமர்ந்திருந்தவன் எட்டிப்பார்த்து கெட்ட வார்த்தைகளில் எக்கச்சக்கத்து திட்டினான்.....

நாகமணியின் முகம் சுருங்கி, உதடுகள் சத்தமில்லாமல் அசைந்தன... "நிஜமாகவே காதுக்கேட்காமல் பிறந்திருக்கலாமோ.... ?! "



*படங்கள்: நன்றி கூகுள்!

நடுவுல & முன்ன பின்னவும் கொஞ்சம் பக்கத்த காணோம்..!

நவீன் சந்தர் எங்க?

அம்மா நவீன்' மா.. உங்கக்கிட்ட வந்து சொல்லிட்டு தானம்மா போனான். படிக்கப்போயிருக்கான் ம்மா..

ஆங்...ஆமா நீ சொன்னியே.. மறந்துட்டேன்..

நவீன் சந்தர் எப்ப வருவான்?

அம்மா நவீன்'மா.. நவீன்னு சொல்லுங்க..

அவன் பொறந்தப்ப நவீன் சந்தர்னு தானே பேர் வச்சீங்க.. (இதெல்லாம் மட்டும் தெளிவு)

ஆமாம்மா... அப்புறம் நவீன்'னு மாத்திட்டோமே...

ஆங்க்...ஆமாம்மா மறந்துட்டேன்...நவீன் சந்தர் எப்ப வருவான்..?!

அவன் படிக்கனுமா இல்லையா..படிப்பை முடிக்க 2 வருசம் ஆகும்....ஃபோட்டோ பார்க்கறீங்களா?. (மொபைலிலிருந்த அவன் ஃபோட்டோவை எடுத்து காட்டினேன்.. உடனே ஃபோனை வாங்கி..)

ஹல்லோஒ....நவீன் சந்தர்.....எப்ப வருவ???

அம்மா, ஃபோட்டோ பாக்க கொடுத்தேன்...அவன் லைன்ல இல்ல..

நான் சொல்லுவதை துளியும் காதில் வாங்காமல், "ஹல்லோ, நவீன் சந்தர்..அம்மும்மாவை பாக்க எப்படா வர?

ஞே..!!

***************

கவிதா... இவ்ளோ லேட்டா வரியே இப்பதான் அப்பா இங்க வந்துட்டு...அதோ அந்த பக்கமா போனாரு...பாரு......

ஓ..(நானும் அவங்க சொன்ன திசையில் பார்த்துவிட்டு), சரிம்மா அப்புறமா நான் போயி பாக்கறேன் ....

பக்கத்து பெட்டில் துணையிருந்த பெண் : ஏங்க, அப்படி யாரும் இங்க வரலங்க...

தெரியுங்க....அப்பா இறந்து பல வருஷம் ஆச்சிங்க............

ப.பெ.து.பெ: ஞே! 

********************

கவிதா...இங்க வா.... என் பக்கத்தில் உக்காரு... நவீன் சந்தர் ஐ கூட்டிட்டு வர சொன்னேனே...கூட்டிட்டு வரல?

(ஸ்ஸ்ஸ்ஸ்.... ) முதல் பத்திய திரும்ப படித்துக்கொள்ளவும்..

*********************

கையில் போட்டிருந்த வளையல் எங்கம்மா? (திக்க்...)

என் கையில வளையலே போடலியே...

அம்மா..... நாந்தானமா போட்டுவிட்டேன்... எங்கம்ம்ம்ம்மா?

இங்க பாருடி கழுத........என் கையில் வளையலே இல்ல...

இப்ப இல்லம்மா..இதுக்கு முன்ன வளையல் இருந்துச்சே எங்க??

சிஸ்டர் : கவிதா.. கழட்டி வச்சிட்டாங்க.. எடுத்து வச்சி இருக்கேன். இனிமே போட்டுவிடாதே...

தாங்ஸ் சிஸ்டர்..

********************

கவிதா உன் வீட்டுக்கார் எப்ப மும்பை போறாரு... ?

அம்மா, அவர் சென்னை வந்து இரண்டு வருசம் ஆச்சே...மறந்துட்டீங்களா? நவீனோட உங்களை வந்து பார்த்தாரே...

ஆமாம்ம்மா..வந்தாரே...டிரஸ் வாங்கி கொடுத்தாரே..பீச் போனோமே.... (இதெல்லாம் மட்டும் தெளிவு)

அட... பீச் போனது ஞாபக இருக்கா..?

ஏன் இல்ல...(ஒரே சிரிப்பு)...ஐஸ்க்ரீம் வாங்கி தந்தியே... (நெற்றிய சுருக்கிக்கொண்டு) ஆமா அவரு மும்பாய்க்கு எப்ப திரும்ப போறாரு...??

(ஆத்தா முடியல ஆத்தா என்னைவுட்ரூ.)

*************************

லைட்டா ஃபீவர் இருக்கும்மா..

ஆமா...இருக்கு..எனக்கு அப்பவே தெரியுமே....  (சரிங்க டாக்டர்)

சிஸ்டர்கிட்ட மாத்திரை வாங்கி தரவா?

உனக்கேன் இந்த வேல? அவங்க இப்ப வந்து செக் பண்ணிட்டு, அவங்களே மாத்திரை கொடுப்பாங்க. நீ அமைதியா உக்காரு...

சரி..(ங்க டாக்டர்) .:(.

*********************

அம்மா... அம்மா இங்க பாருங்களேன்..நான் சொல்றதை கொஞ்சம் கவனிக்கறீங்களா..?

கவனிச்சிட்டு தான் இருக்கேன் கவிதா..என்ன சொல்லு? (ம்க்கும் கேக்கும் போது தெளிவு தான்)

பாத்ரூம் போனா மறக்காம தண்ணீ ஃப்ளஷ் பண்ணிவிடனும். தண்ணீ  ஊத்தாம வந்தீங்கன்னா..நாத்தம் அடிக்கும்..க்ளீன் பண்றவங்க பாவம் இல்லையா?

நான் என்ன சின்னக்குழந்தையா கவிதா.. உபதேசம் பண்ற...(ஆவ்வ்வ்வ்.......)

சிஸ்டருங்க தினம் கம்ப்ளைட் பண்றாங்கம்மா...உங்க வேலைய நீங்கதான்ம்மா செய்யனும்.. நம்ம வீடு இல்லமா இது ஹாஸ்பிட்டல்....

சரி.... .நானு போயி பாத்ரூம் கழுவி விட்டுட்டு வரட்டா....?!

அய்யோஒ... பாத்ரூம் கழுவ சொல்லல்லமா..நீங்க தண்ணி மட்டும் ஃபள்ஷ் பண்ண மறந்துட்டு வந்துடறீங்க..

இல்லையே........சரியாத்தானே செய்யறேன்...நீ வேணா போயிப்பாரு...

(ஸ்ஸ்ஸ்........இதை இத்தோட முடிச்சிப்போம். அடுத்து சிஸ்டரை சமாளிக்கனும்)  

*************************

பக்கத்து பெட் பாட்டி : கஸ்தூரி, இது யாரூஊ?

அம்மா : என் மக

ப.பெ.பா : பேர் என்ன?

அம்மா : க்க்கவிதாஆஆ

ப.பெ.பா: கவிதா என் பொண்ணாச்சே... நானும் கவிதாவும் இப்ப வெளியில் போகப்போறோம்...

அம்மா : இல்லல்ல கவிதா என் மக.. (என்னை இறுக்கி கட்டிக்கொள்கிறார்)

ப.பெ.பா: என்ன படிக்குது?

அம்மா : அவ எம்.பி.ஏ படிச்சி இருக்கா..


ப.பெ.பா: இதுல எல்லாம் தெளிவாத்தான் இருக்க..ஆனா செத்துப்போன உன் புருஷன் வந்தாரு வந்தாருன்னு சொல்லி எங்க எல்லாத்தையும் ராத்திரியும் பகலுமா ஆட்டி வைக்கறியே தாயீ.....

அம்மா : (ரொம்ப கேஷுவலாக) ஆமா, கெஜானனன் இங்க தான் எப்பவும் இருக்காரு...

ப.பெ.பா: ஞே...!! (பீதியோடு சுத்திப்பார்க்கிறார்)

********************

சிரிக்கவும் முடியாம அழவும் முடியாம ந.கொ.ப.கா நண்பர்கள் போல, பேஎஎஎ...ன்னு...உக்காந்து,  அம்மா பேசறதை வேடிக்கை பார்ப்பது தான் எனக்கு வேலையாப்போச்சி.

அம்மாவிற்கு கொஞ்சம் மாதங்களாக நினைவாற்றலில் அதிக தடுமாற்றம். இப்போது அடிக்கடி அப்பாவை பார்த்ததாக சொல்லுகிறார். மறக்காத எப்போது கேட்டாலும் தடுமாற்றம் இல்லாமல் நினைவில் இருக்கும் ஒரே விசயம், 3 பிள்ளைகள் அதில் 2 ஆண், 1 பெண், பேரக்குழந்தைகளில் நவீன். நவீனை தவிர, அண்ணனின் பிள்ளைகளும் இருக்காங்க. ஏனோ அவங்களைப்பற்றிய நினைவே அம்மாக்கு இல்லை. :(


வீடு, மருத்துவமனை என அம்மாவின் காலம் ஓடுது. நினைவாற்றல் தவிர்த்து வேறு எந்த பெரிய உடல் பிரச்சனையும் இப்போதைக்கு அவங்களுக்கு இல்லாமல் இருப்பது நிம்மதியை தருகிறது. எனினும் குழந்தையாகவே மாறிவிட்டார். சாப்பாடெல்லாம் அப்படித்தான்.  ஏதோ ஒரு சில நேரங்களில் மிகத்தெளிவாகவே ஞாபகசக்தியோடு பேசுகிறார்.  மற்ற நேரத்தில் எல்லாம்..............ம்ம்ம்..தலைப்பை படிங்க...

அணில்குட்டி : அவங்களாச்சும் இந்த வயசுக்கு மேல இப்படி இருக்காங்க.. அம்மணி இப்பவே அப்படித்தான் இருக்காங்க... எப்படியோ ஹாஸ்பிட்டல் போகாமல் வீட்டிலேயே நாங்க சமாளிச்சிக்கறோம்..

பீட்டர் தாத்ஸ் :  At a stage, parents become our children.

சாவு வீடு

அபிராமி நுழையும் போதே கவனித்தாள், ஒவ்வொருவரும் தன்னால் முடிந்தளவு நடித்துக்கொண்டிருந்தனர். நெருங்கிய உறவினர் சிலருக்கு நிஜமான துக்கம் இருக்கத்தான் செய்தது, அது அவர்களின் முகத்திலும் தெரிந்தது, இருந்தாலும் சுயநலங்களும் இருந்தன. இறந்தவர் விட்டுச்சென்றவையில் தனக்கு என்ன கிட்டும், கிட்டசெய்ய வேண்டுமென்ற யோசனை உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தது அவர்களின் கண்களில் தெரிந்தது.

அபிராமிக்கும் இறந்தவர் நெருங்கிய சொந்தம் தான், அப்பாவின் சொந்த தங்கை. ஆனால் ஏதேதோ பிரச்சனைகளை கடந்து, ஒதுங்கி வந்து பல வருடங்களாக யாருடனும் தொடர்பில் இல்லாமல் இருந்தாள். யார் மூலமாகவோ இறந்த விசயத்தை அபிராமி காதில் போட சொல்லியிருந்தனர் உறவினர். நல்லதுக்கு போகாட்டியும் கெட்டதுக்கு தலைக்காட்டனும்னு வந்திருந்தாள்.

அழுகை வரவில்லை. இறந்தவர் உடலுக்கு பக்கத்தில் சென்றாள், பல வருடம் கழித்து உறவினர்கள் சூழ இருந்த ஒரு இடத்தில் இவள் உள்ளே நுழைவதால், அனைவரும் இவளையே கவனித்தனர். இவள் வயதை ஒத்த பெண்களுக்கு அவளின் தலைமுடி, உடல்வாகு, காது, கை, கழுத்து நகைகள் சார்ந்து கவனம் சென்றது. சிலர் அணிந்திருந்த புடவையைக்கூட விட்டுவைக்கவில்லை. பார்வைகள் இவளைத்தொடர்ந்தாலும், இவள் யாரையும் பொருட்படுத்தாமல் இறந்தவரின் காலைத்தொட்டு கும்பிட்டாள். கண்ணை மூடி, அத்தையின் நினைவுகளில் மூழ்கினாள். அப்பாவிற்கு மிகவும் பிடித்த தங்கைகளில் ஒருத்தி, ஆனால் அவளே அதிக வில்லத்தனம் பிற்காலத்தில் செய்தாள் என்பதை நினைத்தபோது கண்கள் பட்டென்று திறந்துக்கொண்டன. ஒருத்துளிக்கூட கண்ணீர் வரவில்லை. சாவு வீடு அழவேண்டும் என்ற கட்டாயம் இருப்பதாக அவளுக்குத்தெரியவில்லை. அழுகைதான் வரவில்லையே. பார்த்தவர்கள் அனைவருக்கும் "கண்ணில் ஒரு சொட்டு கண்ணீர் இல்லையே? சொந்த அண்ணன் பொண்ணு.."  என்ற ஆச்சரியம் இருக்கத்தான் செய்தது.

வருடங்கள் பல ஓடிவிட்டதாலோ என்னவோ யாரும் இவள் பக்கத்தில் வரவில்லை. இவளும் உறவினர்கள் யாரிடமும் செல்லாமல், முகமறியாத சிலர் இருக்கும் திசை நோக்கிச்சென்று அமர்ந்துக்கொண்டாள்.

அப்போதும் விட்டேனே பார் என, அறிமுகம் இல்லாதவர்களும் இவளை விசாரிக்க ஆரம்பித்தனர். எந்தக்கேள்விக்கும் பதில் சொல்லாமல் மெளனமாக இருந்தாள். கேட்டவர்கள் மனதுக்குள் சபித்தபடி கேள்விகளை நிறுத்திக்கொண்டனர். சற்றே அசுவாசப்படுத்திக்கொண்டு, கண்களால் சுற்றி வட்டமிட ஆரம்பித்தாள்.

அப்போது தான் கவனித்தாள். பேரூந்தில் இவளுடன் பயணம் செய்த இரண்டு பெண்கள் அங்கு தென்பட்டனர். பேரூந்தில் அவர்கள் பேசி வந்தது நினைவுக்கு வந்தது.

"அக்கா, சாவு வீட்டுக்கு போறோம்..எதுக்குக்கா நெக்லஸ்..உள்ள வச்சிடேன்..திரும்ப வரும்போது போட்டுக்கறேன்.".

"ஒன்னுமில்லாதவன்னு நினைச்சுக்குவாளுங்க.. போட்டுக்க..".

"இல்லக்கா, ரொம்ப பளப்பளன்னு இருக்கு..உள்ளவே வய்... (வேகமாக கழட்டிக்கொடுத்தாள்)"

"அதுவுஞ்சரிதான்..ஒப்பாரி வெக்கற வீட்டுக்கு எதுக்கு நெக்லஸ்.. அதான் கைல நன்னாலு வளையல் போட்டு இருக்கியே..அது போதாது..?"

"போதும் போதும்..இதுங்க கெட்ட கேட்டுக்கு..."

அத்தை மாமாவிற்கு சொந்தமாக இருக்குமோ..? இவர்களும் இங்குதான் வருகிறார்கள் என அப்போது அபிராமி அறியவில்லை. வருவோர் போவோரை பார்க்கும்போதேல்லாம்...முகத்தை சுருக்கி அழுதனர்.. சிலரை கட்டிக்கொண்டு சத்தம் போட்டு அழுதனர், அழுது அவர்கள் விலகும்முன், தன் நகைகளை அவர்கள் பார்த்து விசாரிக்கும் படி கை, கழுத்து, காதுகளில் கவனம் செல்லும் படி பேசினர். அபிராமிக்கு அவர்கள் பேசிவந்தது முன்னமே தெரிந்ததால், பேச்சிலும், அழுகையிலும் இருந்த போலித்தனம் அப்பட்டமாக தெரிந்தது.

அழுகை வராமலேயே திடீரென்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழும் அந்த பெண்களை பார்க்க பார்க்க அபிராமிக்கு சிரிப்பை அடக்கமுடியவில்லை. தன்னை மறந்து குபுக்"கென சிரித்தும் விட்டாள்.

சாவு வீட்டில் இருந்தோர் அபிராமியை ஒரு மாதிரியாக திரும்பி பார்த்தனர்......

என்றோ ஒருநாள் அபி நண்பனுடன் சண்டையிட்ட போது அவன் ரொம்பவும் கடுப்பாகி,  "யதார்த்தம் என்றால் என்னவென்றே தெரியாத உன்னுடன் எனக்கு சரிப்பட்டு வராது ....." என்றான்.  ஆமாம் அவன் சொன்னது எத்தனை உண்மை?!!  சாவு வீட்டில் யாராவது சிரிப்பார்களா?! அழத்தானே வேணும். அழுகை வராவிட்டால் என்ன? சிரிக்காமலாவது இருக்கலாமே?.  மற்றொரு நாள் இன்னொரு தோழியோ "யதார்த்தம் என்றால் என்னவென்றே அறியாதவர்கள் ஆசிர்வதிக்கப்பட்டவர்கள்" என்றாள். உடனேயே சந்தோஷப்பட்டுக்கொண்டாள், நண்பன் சொன்னதில் இருந்த வருத்தம் அபிக்கு காணாமல் போனது. 

அவளின் பெரியப்பா இறந்தபோது அக்காக்களில் ஒருத்தி சொன்னாள், "அபி,  அப்பா இறந்துடுவார்னு தெரியும், அப்பா இறந்துபோறது தான் அவருக்கு நல்லது, கோமாக்கு போயிட்டாரு...ஆனா மருந்து, ஊசி, ஆக்ஸிஜன், ட்ரிப்ஸ்'ன்னு அவரை உயிர்வாழ வச்சி என்ன பயன்?. கடைசி நேரம் இங்க வந்து பார்த்தப்ப, அப்பா இவ்ளோ கஷ்டப்படாம இறந்து போயிடலாம்னு தான் நினைச்சேன். இப்பக்கூடப்பாரு,  எனக்கு அழுகை வரல. ஆனா, என்னோட சிஸ்டர்ஸ் எல்லாரும் அழறாங்க..நான் மட்டும் அழாமல் இருந்தா அவங்களே என்னை எதாச்சும் சொல்லுவாங்க.. அதுக்காக சும்மாவாவது அழவேண்டி இருக்கு..."


இது தான் வாழ்க்கை. இது தான் சொந்தம். இந்த நடிப்பு தான் நிஜம். இந்த நிஜத்தைத்தான் நம்மைச் சுற்றியுள்ளோர் நம்மிடம் எதிர்பார்க்கின்றனர். இந்த நிஜம் தான் சொந்தங்களையும் நட்புகளையும் பிடித்து வைக்கிறது. உள்ளத்தில் என்னவிருந்தாலும் சபை மரியாதை கருதி உதட்டோரம் சிரிப்பதோ, பல்காட்டி சிரிப்பதோ தான் இயல்பு, யதார்த்தம், நடைமுறை. இதோ அழுகை வராவிட்டாலும் அழுது நடிக்கனும் அல்லது ஒரு டன் சோகத்தை முகத்தில் தேக்கி வைக்கனும். அப்போது தான் உன்னையும் சக மனுஷியாக ஏற்றுக்கொள்ளும் இந்த கூட்டம்....

அபிராமியும் நடிக்க தயாரானாள்...



*படங்கள் நன்றி கூகுள்

க்ளிக்..க்ளிக்..க்ளிக்....

 தெரியாமல் எடுத்தது, யாரென்றும் தெரியாது. சட்டையின் பின்னால் அவரவர் பெயரும் எழுதியிருந்தது.

 ஊன்றுகோல் 2 in 1
 பட்டுப்போன மரங்கள் தான் இருந்தாலும் அழகு... :)

 தென்னைமரத்தை முன்னமே இதுப்போன்று எடுத்திருக்கிறேன். பனை மரத்தை ஆகாயம் நோக்கி எடுத்துப்பார்க்க ஆசைப்பட்டு... :)
 கொஞ்சல்ஸ்... 
(இவங்க இரண்டு பேரும் பொறுப்பாக நிறைய ஃபோட்டோக்கு போஸ் கொடுத்தாங்க.)
எவ்ளாம் பெரிய குச்சி...

தேடல்...

எங்கேயோ எதையோ
தொலைத்து
அதை
எதனிடலித்தோ
தேடி...
........
..........
............
.................

தேடி...தேடி
தெளிந்து 
வளர்கிறது புத்தி
இனி தேடல் வெளியில்லை-



Image : Thx Google.