இந்த லே பயணம் என் வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத மிகவும் கடினமான அனுபவத்தை எனக்குக் கொடுத்துள்ளது.

அந்த அனுபவத்தைப் பகிர்வதற்கு முன், என் உடல்நிலை குறித்து ஒரு சிறிய குறிப்பு. 2025 ஜூலை மாதம் முதல் சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால்,  லே பயணம் இந்த ஜூலை மாதத்தித்தில் செல்லலாம் என முடிவானது.

விமானத்திலிருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டேன், ஆனால், என் உடம்பு எங்கேயோ சென்றது. மூளையை செயற்படுத்தி விமான நிலையத்தினுள் நுழைந்தேன். நிற்க முடியாத அளவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் உடனே அமர ஒரு இடத்தைத் தேடினேன். என் கணவர் பெட்டிகளை எடுக்க சென்றார்.  அதைப் பற்றிய கவனமில்லாமல், ஒரு இருக்கை கண்டுபிடித்து அமர்ந்தேன். கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீர் வந்தது. தலை தொங்கிவிட்டது. இரண்டு கைகளும் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் கீழே விழந்தன. 

என் கணவர் விரைந்து வந்து முதலில் என் கண்ணீரைத் துடைத்தார். உயரமான இடத்தின் (High Altitude) தாக்கம் எனக்குத் தொடங்கியிருப்பதை அவர் புரிந்து கொண்டார். Diamox மாத்திரை கொடுத்து, மீண்டும் பெட்டிகளை எடுக்கச் சென்றார்.

தட்டு தடுமாறி வெளியே வந்த பிறகு, ஹோட்டல் வண்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வெளியே அமர இடமே இல்லை. என்னால் நிற்க முடியாததால் தரையில் அமர்ந்தேன். மீண்டும் கண்களில் கண்ணீர். என் நிலையைப் பார்த்த டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் என்னைச் சுற்றி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்கச் சொல்லி, ஆறுதல் படுத்த முயன்றனர்.ஆனால் தண்ணீர் குடித்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. மாறாக உடல்நிலை இன்னும் மோசமானது.

ஹோட்டலுக்கு வந்ததும்  நவீனை அழைத்தேன். என்னால் அடக்க முடியாமல் கதறி அழுதேன். உடலில் இருந்த சக்தி முழுவதும் இழந்தது போல மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். நான் ஏன் அழுகிறேன் என்று அவனுக்குப் புரியவில்லை. என் கணவர் போனை வாங்கி என் நிலையை விளக்கினார். அவர் நவீனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே தூங்கிவிட்டேன்.

அவர்கள் ஏற்கனவே பேசியபடி, என் கணவர் 6 லி கொள்ளளவு கொண்ட போர்ட்டபிள் ஆக்ஸிஜன் கேனை வாங்கி வந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்ததால் என்னை எழுப்பாமல், ஆக்ஸிஜன் கேனை என் அருகில் வைத்து புகைப்படம் எடுத்து நவீனுக்கு அனுப்பினார். அதாவது, "அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள், தொந்தரவு செய்யவில்லை. ஆனால் ஆக்ஸிஜன் வாங்கிவிட்டேன்" என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். :)

மாலை எழுந்த பிறகு ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். மிகவும் மெதுவாக உணவகத்திற்குச் சென்று தேநீர் குடித்தேன். பிறகு சிறிது தூரம் நடந்து என் உடல்நிலை சற்று சீராக இருக்கிறதா என்று பார்த்தேன். கொஞ்சம் பரவாயில்லை போலவும், இன்னும் சரியில்லை போலவும் இருந்தது.

இரவு உணவுக்குப் பிறகு அறைக்குத் திரும்பி சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். மெதுவாக தலைவலி ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தலைவலி அதிகரித்து, பத்து பேர் சுத்தியலால் தலையை அடிப்பது போல் தாங்க முடியாத வலியாக மாறியது.

என் கணவர் தூங்கிக் கொண்டிருந்தார், அவரை எழுப்ப விரும்பவில்லை. அதற்குள் காய்ச்சலும் ஆரம்பித்தது. காய்ச்சல் மெதுவாக அதிகரிக்க, வேறு வழியில்லாமல் அவரை எழுப்பினேன். அவர் பேராசிட்டமால் மாத்திரை கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றார். ஆனால் தலைவலி மட்டும் குறையவே இல்லை.

அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரை எழுப்பி, "என்னை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்றேன். அவர் எங்கள் சுற்றுலா வழிகாட்டியைத் தொடர்புகொண்டு மருத்துவர் குறித்து விசாரித்தார். லே'வில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே இருப்பது தெரியவந்தது. புறப்படுவதற்கு முன் தலைவலிக்காக நீராவி பிடித்தேன். அதனால் சற்று நிவாரணம் கிடைத்தது போல உணர்ந்தேன்.

மருத்துவமனைக்குச் செல்ல டாக்ஸிக்கு ₹300 செலவானது. மருத்துவமனையில் நுழைவுக் கட்டணம் ₹10.

மருத்துவர் முதலில் என் ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் அளவையும் பரிசோதித்தார். ரத்த அழுத்தம் 137/65. ஆக்ஸிஜன் அளவு வெறும் 72% மட்டுமே இருந்தது. நான் கடுமையான தலைவலி பற்றி சொல்லிக் கொண்டிருந்தாலும், அவர் என்னை திரும்பிக்கூட பார்க்காமல் நேரடியாக "admit" என்று எழுதிவிட்டார்.

பின்னர் ₹30 கட்டணம் செலுத்தினோம். எங்களுடன் வந்த டாக்ஸி ஓட்டுனரே என்னை வார்டுக்குள் அழைத்துச் சென்று, ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்.

வேகமாக ஒரு செவிலியர் வந்து ஆக்ஸிஜன் பொருத்தினார். இடது கை நரம்பில் ஒரு ஊசியும், இடுப்பில் மற்றொரு ஊசியும் போட்டார். ஆக்ஸிஜன் கொடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்கு நன்றாக இருந்தது. தூங்கவும் ஆரம்பித்தேன்.

இவை அனைத்தும் காலை 7.30 மணிக்குள் நடந்துவிட்டன.

சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர் மீண்டும் வந்து, ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்கச் சொன்னார். என்னால் நடக்க முடிந்தது. என் கணவர்,  "என்னால் இந்த லே சுற்றுலாவைத் தொடர முடியுமா?" என மருத்துவரிடம் கேட்டார்.

மருத்துவர், "போர்ட்டபிள் ஆக்ஸிஜன் போதாது. 2000 லி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் பயணித்தால் தொடரலாம்" என்றார். அதற்கு மேல் வேறு எந்த மருந்து, மாத்திரை, ஊசி, ஆலோசனையும் வழங்கவில்லை.

வேறு வழியில்லாமல் லே-லாடக் சுற்றுலா ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடர்ந்தது. கார்டுங்லா 18 ஆயிரம் அடி உயரம், பேங்காங் ஏரி 14 ஆயிரம் அடி உயரம், சாங்லா 17.6 ஆயிரம் அடி உயரம் - இந்த 3  இடங்களிலும் தலை வலி  உயிர் போனது, ஆக்சிஜனும் குறைந்து, மிகவும் கஷ்டப்பட்டேன். சிலிண்டர் கொண்டு போனாலும் இந்த வலி, மூச்சு திணறலில் மிகவும் கஷ்டப்பட்டேன். பேங்காங் ஏரியில் மயக்க நிலையிலேயே இருந்தேன், நடு இரவில் தலை சுற்றல் காரணமாக  நிலநடுக்கம் வந்துவிட்டதென சொல்லி அவரை பயமுறுத்தி, அன்றிரவு ஆக்சிஜன் வைத்தவாரே தூங்கினேன். 

திரும்பி லே விற்கு வரும் வரை, அவ்வப்போது ஆக்சிஜன் வைத்துக்கொண்டே வந்து சேர்ந்தோம். பல இடங்களில் வண்டியை விட்டு நான் இறங்கவேயில்லை. 

சென்னை திரும்ப விமானநிலையம் வந்தபோது, ஆக்சிஜன் குறைந்து, ஸ்ப்ரே ஆக்சிஜனை கொண்டு சமாளித்து விமானம் ஏறி மும்பை வந்தவுடன் பாதி உயிர் வந்தது. சென்னை வந்ததும் -

'சென்னை டா, ஆக்சிஜன் பூமி டா, நாங்க யாரையும் கொல்ல மாட்டோம் டா..' னு உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை பகிர்ந்தேன். 

அணில் குட்டி : எங்க எப்படி தகனம் செய்யனும்னு வூட்டுக்கார் கிட்டவும், புள்ள கிட்டயும் சொன்னதை எல்லாம் விட்டுட்டாங்க....  பொழச்சி வந்து இருக்காங்க... அடுத்த பதிவில் வச்சி செய்வோம்.. இப்ப விட்ருவோம்..