சோழிங்கநல்லூர்,  TNHB சிமெண்டு சாலையில் , மாலை 4 மணி வாக்கில் ஒரு காரும், 2, 3 இருசக்கர வாகனங்களும் வந்து நின்றன. அதில் வந்தவர்கள் ஒன்று கூடி பேசியும், தனித்தனி குழுக்களாக பிரிந்தும் பேசினர், சாலையில் அமர்ந்து ஏதோ வரைப்படைத்தை சரிசெய்வது போல தெரிந்தது. சிமெண்டு சாலை அத்தனை சுத்தமாக இருக்கும். 

இதற்கு பிறகு வந்தவற்றை fast forward ல் சினிமா காட்சிகளில் பார்ப்பதுப்போல கோர்வையாக்கி பார்த்துக்கொள்ளுங்கள்.இவை அத்தனையும் அவ்வப்போது போர்ட்டிக்கோவிற்கு வரும் போதும், சமையல் அறை சன்னல் வழியாகவும் கவனித்தவை ; -

1. 2-3 கார்கள் வந்தன. ஆங்காங்கே பார்க் செய்யப்பட்டு, இட நெருக்கடி காரணமாக திரும்ப எடுத்து வேறு இடங்களிலும் பார்க் செய்யப்பட்டன.

2. ஒரு சின்ன தண்ணீர் லாரி வந்தது ஒரு இடத்தில் நிறுத்தப்பட்டது.

3. ஆட்டோக்கள் 2-3 வந்தன, அதிலிருந்தோர்  இறங்க, அவையும் இடம் பார்த்து பார்க் செய்யப்பட்டன.

4. இரண்டு கேரவன் வந்து, எங்களது போர்ட்டிக்கோவிற்கு நேரெதிரில் நிறுத்தப்பட்டன.

5. இரண்டு க்ரேன் லாரிகள், ரிங் ரோட்டின் முகப்பில் நிறுத்தப்பட்டன.

6. இரண்டு பேட்டரி வைத்த லாரிகள் வெவ்வேறு இடங்களில் நிறுத்தப்பட்டன.

இதற்குள் மாலை மணி 5.30-5.45 ஆகியிருந்தது.

7. ஒரு சின்ன லாரி வந்தது, வேக வேகமாக இரண்டு டேபிள், நாற்காலிகள் இன்னும் இதர பொருட்கள்  இறங்கின. சாலையில் ஓரமாக ஒரு இடம் பார்த்து, மேஜைகள் போடப்பட்டு, காபி, டீ க்கான கேன்'கள் வைக்கப்பட்டு, தேவைப்பட்டவர்கள் வந்து வாங்கிக்கொண்டு சென்றனர்.

வேலை மிக வேகமாக நடப்பதே தெரியாமல் நடந்துக்கொண்டிருந்தது. அதாது நான் ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் 7 ஆவது மாடியிலிருந்து கவனிப்பதால் எல்லாமே ஊமைப்படமாக தெரிந்தது. அவர்களது வேலையில் எங்கேயும் ஒரு தடங்கலோ, சோர்வோ, தயக்கமோ இல்லை. வேலை சொல்லிவைத்தார் போல / திட்டமிட்டார் போல அதுப்பாட்டுக்கும் நடந்துக்கொண்டே இருந்தது.

சில பல லாரிகள் அவ்வப்போது வந்து தொழில்நுட்ப கருவிகள், நாற்காலிகள், படப்பிடிப்பிற்குத்தேவையான செட்டுகள் அமைக்க தேவையான பொருட்கள் என இறக்கி வைத்துவிட்டு தொலைவில் மக்கள் நடமாட்டமில்லா இடங்களில்  நிறுத்தி வைக்கப்பட்டன.

கேரவன் நிறுத்தியிருந்த எதிர் வீட்டுக்காரம்மா வெளியில் வந்து வண்டிக்காரர்களிடம் 'இங்கே வண்டியை நிறுத்தக்கூடாது, இங்கே கூட்டம் போடக்கூடாது' என சண்டையிட, வேன் ஓட்டுனர் உடன்பட்டு, இரண்டு வண்டியையும் அவங்க வீட்டின் எதிரிலிருந்து நகர்த்தி சற்று தள்ளி நிறுத்தினார். அந்தம்மா, அடுத்து விடாமல் அவங்க வீட்டு பக்கத்தில் காலி இடத்தில் டீ விநோயகம் நடத்தும் இடத்திற்கும் போய் சத்தம் போட, அவங்களும் சிமெண்டு ரோடுக்கு இடத்தை மாற்றினர். 

நேரம் ஓடியது, நடுவில் நான் கடைக்கு செல்ல  வெளியில் செல்லும் போது 'ஹோட்டல் சென்னை கிங்' , ஒரு மளிகைக்கடை பெயர் பலகையும் எங்கள் குடியிருப்பின் மதில் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது.கடைக்கு செல்லும் வழியெங்கும் சாலையோரங்களில் கார்கள் நிறுத்தப்பட்டு இருந்தன. காரில் இருந்தோர், அங்கிருந்து தொலைவில் படப்பிடிப்பு நடக்கவிருக்கும் இடத்தை நோட்டம் விட்டவாரே கைப்பேசியை நோண்டிக்கொண்டு இருந்தனர். 

இதில் அநேகமாக இளைஞர்/இளைஞிகள் இருந்தனர்.  வழியிலிருந்த டீ கடையில் விரைவாக தொழில் நடந்துக்கொண்டிருந்தது. படப்பிடிப்புக்கு வந்தவர்வர்கள் குழுக்களாக அங்கு இருக்கும் எல்லா டீ கடை சிற்றூண்டி கடைகளை ஆக்கிரமித்து இருந்தனர், சிலரின் கைகளில் சிகிரெட். திரும்ப வரும் போது எங்கள் குடியிருப்பு செக்கியூரிட்டி, 'ராகாவா மாஸ்டர்' நடிக்கும் படம் என்றார்.

வீட்டுக்கு வந்து என் வேலையை பார்க்க ஆரம்பித்து, படப்பிடிப்பை மறந்தேவிட்டேன். 8-8.30 மணியிருக்கும், எப்படியிருந்தாலும் இங்கிருந்து ராகவா மாஸ்டரை பார்க்க முடியாது , ஆனாலும் படப்பிடிப்பு எந்த நிலையில் இருக்குன்னு பார்க்க போனால்- அங்கு நடப்பவை எனக்கு புதிதாக, பார்த்திராத ஒரு விசயமாக இருந்தது. 

இப்போது கேரவன் விளக்குகள் எரிந்தன, ஏசி ஆன் செய்யப்பட்டிருந்தது. இரண்டு கேரவன்'களுக்கும் முன் ஒரு டேபில் போட்டு அதில் ஒருவர் துணிகளுக்கு பொட்டிப்போட்டுக் கொண்டிருந்தார். 

இன்னொரு பக்கம் சாப்பாடு ஒரு வேனில் வந்து இறங்கியது, இரண்டே பெண்கள், பாத்திரம் கழுவ (அந்த தண்ணீர் லாரி இப்போது சாப்பாடு இருக்கும் இடத்திற்கு அருகில் வரவைக்கப்பட்டு அதிலிருந்து தேவையான தண்ணீரை அவ்வப்போது கொடுத்துக்கொண்டிருந்தது), வந்த உணவுகளை சிறிய பாத்திரங்களுக்கு மாற்றினர்.  ஆண்கள் இடைவெளி விட்டு 3 டேபில்களை   போட்டு, ஒவ்வொரு டேபிலின் முன்னும் அரைவட்ட வடிவில் நாற்காலிகளை அடுக்கினர். இப்போது இவ்விடத்தை நோக்கி வேலை செய்துக் கொண்டிருந்தவர்கள் நகர்ந்தனர். சாப்பாட்டை வாங்கிக்கொண்டு, நாற்காலியில் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தனர். 

3-4 பேரில் ஆரம்பித்த இந்த படப்பிடிப்பு முன்னேற்பாடு 250-300 பேர் வரை கூடியிருந்தது. 

இன்னொரு பக்கம் கேமரா வைக்குமிடம், லைடிங் என தொழில்நுட்ப கலைஞர்கள் ஆவன செய்துக்கொண்டிருந்தனர்.

சினிமா, ஒரு நாளையில் சில மணி நேரங்களுக்கு எத்தனைப்பேருக்கு சாப்பாடு போடுகிறது, அவர்களின் வாழ்க்கைக்கு வழிவகுக்கிறது என்பதை கண்கூடாக பார்க்க முடிந்தது. இரவு 9-30 வரை படப்பிடிப்பு ஆரம்பிக்கவில்லை.  எப்போது ராகவா வந்தார் , எப்போது படப்படிப்பு முடிந்தது எனத்தெரியவில்லை.

காலையில் எழுந்து ப்பார்த்த போது,அந்த இடத்தில் இத்தனைக்கூட்டம் இருந்த சுவடே தெரியவில்லை.. குறிப்பாக சாலை சுத்தமாக இருந்தது.