ஒரு டாக்ஸியில் பயணம் செய்துக்கிட்டே, ஹவுரா மேம்பாலத்தை Top, Side னு ஏதோ ஒரு angle லில் காட்டனும், இல்லைன்னா drone ஐ பறக்கவிட்டு ஹவுரா மேம்பாலத்தை இந்தப்பத்திலிருந்து அந்தப்பக்கமா ஒரு தரம் காட்டிட்டா ..நாம் கொல்கத்தாவில் இருக்கோம்னு அர்த்தம்.

ஆனால் கொல்கத்தா நகரம் இது மட்டுமல்ல, பழமை மிகுந்த, பெருமை வாய்ந்த ,இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் முதன்மையான, அதிக வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு நகரம்.

முதல் முதலாக ஹவுரா ரயில் நிலையத்திற்கு போனது, டார்ஜிலிங் சுற்றுப்பயணத்தின் போது தான்.  சென்னை-ஹவுரா , ஹவுரா-நியூஜல்பாய்குரி, அங்கிருந்து டார்ஜலிங் செல்ல ரயில் பிடிக்கனும். ஹவுரா ரயில் நிலையத்தில் மாடியில் பயணிகள் தங்குமிடத்தில் தங்கி குளித்து,  சீக்கியர் ஒருவர், குளியலறை கண்ணாடியில் ஒரு முழு காட்டன் புடவையை தலையில் முண்டாசாக லாகவமாக கட்டிக் கொண்டிருந்ததை வியந்து பார்த்தது.. நீங்காது நினைவு. 

 ஆனால் இப்போ கொல்கத்தா பயணம் என்பது, அங்கேயே வேலை, சில வருடங்கள் அங்கேயே தங்கியிருக்க போறோம். கொஞ்சம் பயம், பதட்டமென இருந்ததென்னவோ உண்மை. சென்னையிலிருந்து ரொம்ப தொலைவு, அம்மாவின் எண்ணம் சுமையாக இருந்த போதிலும், கொல்கத்தா செல்வதறிந்து அம்மாவின் உயிர் முன்னமே பிரிந்து,அவரின் இறுதி சடங்குகளை சரிவர செய்து முடித்துவிட்ட திருப்தியோடு கிளம்பினேன்.

ஹவுராவில் ரயிலை விட்டு இறங்கினோம், அலுவகத்திலிருந்து சுப்ரியா என்ற நபர் (ஆண்) வந்திருந்தார், கார் ரயில் நிலையத்தின் உள்ளேயே அனுமதிக்கப்படுகிறது, சுமைகளை தூக்கிக்கொண்டு ரயில் நிலைய முகப்புவரை நடக்கவேண்டி இல்லாமல், காரில் ஏறிக்கொண்டோம். ஹவுரா ரயில் நிலையம் முன்னைப்போல இல்லாமல் கொஞ்சம் சுத்தமாக இருந்தது.

சுப்ரியா போகிற வழியில் எதைஎதையோ க்காட்டிக்கொண்டே போனார். பெங்காலி'கள்  மெதுவாக ஆரம்பித்து அதிகமாக பேசக்கூடியவர்கள்.  அதிக சத்தம், அதிக அசுத்தம், அதிக கூட்ட நெரிசல் என எல்லோருக்கும் தெரிந்த கொல்கத்தாவின் வாழ்க்கையில், அதி மேதாவிகளாக ஒவ்வொரு பெங்காலியும் தன்னை நினைத்துக்கொண்டு நடந்துக்கொள்வது பேசுவது போன்றவை எனக்கு சற்றே ஆற்றாமையை கொடுத்தது.ஆனால் அவர்களுக்கு நம்மேல் அதிக மரியாதை இருப்பது என்னவோ உண்மை. தவிர, நாமெல்லோரும் சைவர்கள் (Vegetarians) என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்களின் வாழ்க்கையில் சில பல முக்கிய நிகழ்வுகள் அங்கே நடந்தன. முதல் கார் அங்கே வாங்கினோம். மேற்கு வங்க பதிவில் கார் இருந்ததால், அநேகமாக சுற்றியுள்ள பல ஊர்களை எளிதாக பார்த்துவந்தோம். அதிகமாக கிராமங்கள், வீட்டுக்கு ஒரு குளம், தென்னை, வாழை, பலா, மாங்காய், தேக்கு என மரங்கள், இமயத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளும், கிளை நதிகளும், வாய்க்கால்களுமாக வருடத்தின் 365 நாட்களும் தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லையே தெரியாத

ஹூக்ஹ்லி நதியின் அத்தனை தண்ணீரும் கடலில் கலக்கும் கொடுமை.  தண்ணீரீன் அளவு, வரத்து போன்ற காரணங்களால் நதிகளின் நடுவே மேற்கு வங்கத்தில் அணைகள் கட்ட வாய்ப்பே இல்லாத நிலை, ஒருவேளை கட்டினால் மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். அதனால் நதி தன்னோடு சேர்த்து மொத்த நீரையும் கடலில் கொண்டு சேர்த்துவிடுகிறது.

எப்படியாவது கடலோர மாநிலங்கள் வழியாகவே கங்கையை வளைத்து கொண்டு வந்தால், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடுன்னு ஓஹோ ன்னு செழிக்கும். ஆனால் நடக்கும் மத்திய ஆட்சியில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் என்பதால், இதைப்பற்றி யோசிப்பதே அபத்தம். இந்தியா எத்தியோப்பியாவை போல மாறும் காலம் கண்முன்னே தெரிகிறது. 

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன்.. தொடர்ந்து அடுத்த பதிவில் கொல்கத்தா நாட்கள் தொடரும் ...