லட்சத்தீவுகள் எல்லாமே சின்ன சின்னத்தீவுகள். கடலுக்கு அடியிலிருக்கும் கோரல் பாறைகள் பல ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று மோதி,  மணலாகி, அந்த மணல், கடல் அலைகளால் அடித்துத்தள்ளப்பட்டு, சிறு சிறு மேடுகளாக சேர்ந்து, நாளடைவில் அப்படியே தீவுகள் ஆனது என்பதே இந்த தீவுகளின் கதை என அத்தீவிலிருப்போர் சொன்னார்கள். அது தான் உண்மையும் என்பது, தீவுகளின் வெள்ளை வெளீர் மெல்லிய மணல் பரப்பைப் பார்த்தாலே தெரிகிறது. தீவுகளிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் மெல்லிய மணல் வரிகள் தென்படுகின்றன, வருகின்ற காலங்களில் அவையும் சிறு தீவுகளாக மாற நேரிடலாம்.

அந்தமானை ப்போல அல்லாது, இங்குள்ள ஒரு தீவை சுற்றிப்பார்த்ததுமே,அங்கு தண்ணீரைத்தவிர வேறொன்றுமில்லை என நமக்கு புரிந்துவிடிகிறது. தீவில் இருக்கும்போது மட்டும் மொபைல் இணைப்புக்கிடைக்கும். அதும் BSNL மட்டும், லட்சத்தீவின் தலைநகர் தீவான "கவரட்டி'யில் மட்டும் Airtel இணைப்புக் கிடைக்கிறது. 
எல்லா தீவுகளிலும், முக்கியப் பயிராக தென்னை வளர்க்கப்படுகிறது. தென்னை மட்டுமே பிரதானம், தீவில் வசிப்போரின் தொழில்/வருமானம் இவற்றை சார்ந்தேயுள்ளது.  தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து செய்யப்படும் இனிப்புகள் தயாரித்தல் குடிசை தொழில்களாக செய்யப்படுகின்றன. தென்னைக்கு அடுத்து முக்கிய த்தொழில் மீன் பிடித்தல்.  ஏற்றுமதி செய்கிறார்கள்.

தீவுகளுக்கான மின்சாரம் 75%  ஜெனரேட்டர்களை பயன்படுத்தியும், மிச்சம் சோலார் ப்ராஜக்ட்கள் மூலம் உற்பத்தி செய்து சேமித்துக்கொள்கின்றனர். உபயோகப்படுத்தும் அன்றாட தண்ணீர்,  மேலாக 10-12 அடியிலேயே கிடைக்கிறது என தீவிலிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். சுற்றளா பயணிகள் கடையில் விற்கும் மினரல் வாட்டர் பாட்டில்களையே பயன்படுத்தினோம். அங்கிருக்கும் தண்ணீரின் சுவை கிணற்று நீரைப்போல இருந்தது.

தீவில் 100% இஸ்லாமியர்களே வசிக்கின்றனர். தீவுகளின் அரசு & தனியார் நிறுவனங்களில் இவர்களே இருப்பதாக சொல்லப்பட்டது. வேறு ஆட்களை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை, வேறு ஆட்கள் அங்கே வாழ்க்கை நடத்தும் சூழலும் இருப்பதாக தெரியவில்லை. கப்பலில் கூட, வேலைசெய்பவர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருந்தனர்.

நாங்கள், லட்சத்தீவுகளில்  "கவரட்டி, கல்பேனி, கட்மத்" தீவுகளை
சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்பட்டோம்.  இவற்றில் "கவரட்டி" தலைநகர் தீவாக இருப்பதால், அங்கு சரக்கு & பயணிகள் கப்பல் துறைமுகம் என இரண்டும் ஓய்வின்றி இயக்கத்தில்  இருந்ததால், கடல் நீர் நாளடைவில் அசுத்தமாகி, தண்ணீரில் இறங்க தயக்கமாகவே இருந்தது.
அடுத்து, 'கட்மத்' தீவில், "கடல் வெள்ளரி" என்ற ஒருவகை மீன் இனம் அதிக அளவில் கிடந்தது. மருத்துவகுணம் அதிகமிருப்பதால், இதை கொல்ல/பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனக்கு இது ஒருவித அருவருப்பை கொடுத்ததால், தண்ணீரில் கால்வைக்க சங்கடப்பட்டேன். ஆனால் என்னைத்தவிர
எல்லோரும், என் கணவரையும் சேர்த்து, சகஜமாக இறங்கி விளையாடினர். அதற்கு உயிர் இருந்தாலும், கல் போல ஒரே இடத்தில் அசையாமல் கிடந்தது, ஆபத்தில்லை,நம்மை எதும் செய்யாது என்று சொன்னாலும்,  அதற்கு உயிர் இருக்கிறது என்பது மூளைக்குள் ஏறிவிட்டதால், எங்கே அதை மிதித்து விடுவோமோ, அதற்கு வலிக்குமோ, வலிச்சால் கடிச்சிடுமோன்னு என்னால் தண்ணீரில் இறங்க முடியவில்லை. இறங்கினாலும் அதன் மேல் கால் படாமல் நடக்க ரொம்பவே சிரமப்பட்டு, இந்த விளையாட்டே வேணாம்னு மேலேறி நின்றுக்கொண்டேன்.

ஆக, கடைசியாக  "கல்பேனி" யே எனக்குப் பிடித்த தீவானது. மிக சுத்தமான தண்ணீர், வெகு நேரம் தண்ணீரில் இருந்தோம், வெகு தூரமும் தனியாக சென்றுவந்தோம். குளிக்குமிடம், சாப்பிடுமிடம், ஓய்வெடுக்குமிடமென எல்லாமே மிகவும் வசதியாக, சுத்தமாக இருந்தது.  கல்பேனி தீவு , போக வர மொத்தமாக 11 கிமி தொலைவு, ஒரே ஒரு நீண்ட சாலை. இந்த கடைசியிலிருந்து அந்த கடைசிக்கு சென்று வரலாம். எல்லாத்தீவுகளைப்போல இங்கும் முழுக்க முழுக்க தென்னை மரங்களே ! .

தண்ணீரைத்தவிர, படகு சார்ந்த விளையாட்டுகள், விதவிதமான கோரல் பாறைகள், இதில் மனித மூளையைப்போன்ற கோரல் கவனத்தை ஈர்த்தது. விதவிதமான அளவுகளில் கண்ணைப்பறிக்கும் வண்ண வண்ண மீன்கள், ஆழ்கடல் டைவிங் என சிலது இலவசமாகவும், சிலவற்றிற்கு பணம் செலுத்தியும் பார்க்க முடிந்தது.

உணவு : கப்பல் & தீவுகளில் சைவம், அசைவம் என இரண்டுமே கொடுக்கப்பட்டன. தேவையானவற்றை , தேவையானளவு நாமே எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.  தண்ணீரில் அதிக நேரம்  விளையாடி, களைப்போடு,நல்ல பசியும் எடுப்பதால் ,ருசிப்பார்க்காமல் உணவை ஒரு பிடிப்பிடிக்க முடிந்தது.

எல்லாத்தீவுகளிலும், அவர்களின் பாரம்பரிய கிராமிய நடனங்களை ஆட அதற்கான நடனக்குழுக்களை ஏற்பாடு செய்திருந்தனர். பாடலை மலையாளம்& ஹிந்தி மொழிகளில் பாடினர். சிலவற்றை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளேன். பார்த்து ரசிக்கலாம்.
கப்பல் தவிர, விமானம் மூலமும் தீவுகளுக்கு செல்லலாம். விடுமுறை நாட்களில், இந்த தீவுகளின் ரிசார்ட்டில் சென்று தங்கிவிட்டு வரலாம் என திட்டமிடுவது புத்திசாலித்தனமல்ல, பணவிரயமே ! அங்கு பார்ப்பதற்கோ, நேரம் செலவிடவோ ஒன்றுமில்லை!!  குறிப்பாக வெயில் அதிகமிருக்கும் மாதங்களில் சென்றால், அனல் தாங்கமுடியாது, அறையினுள்ளேயே சுருண்டுக்கிடக்க வேண்டியது தான்.  ஒன்றிரண்டு நாள் பயணமாக சென்று வரலாம்.

லட்சத்தீவு செல்ல விரும்புவோர் : கப்பலில் சுற்றுளா பயணியாக செல்வதை விட,  கொச்சி/மங்களூர்/கோழிகோட்டிலிருந்து கிளம்பும் கப்பலில்,தனிப்பட்ட முறையில் "கல்பேனி" தீவிற்கு ஏசி / சாதா அறை /ஸ்லீப்பர் கோச் என உங்கள் வசதிக்கேற்றவாறு முன் பதிவு செய்து, அங்கு நேரடியாக சென்று, ரிசார்ட்டில் அறை எடுத்து, விருப்பப்படி
பொழுதுப்போக்கிவிட்டு திரும்பவும் இதே வழியாக முன்பதிவு செய்து வரலாம். விமானத்தில் செல்வதானாலும் "அகாட்டி" தீவிலிருந்து ஏதாது ஒரு தீவுக்கு கப்பலில் சென்று திரும்ப வரலாம்.  எல்லா தீவுகளிலும் ஒரே ஒரு ரிசார்ட்தான் இருந்தது. எல்லாத்தீவுகளுமே 10-20 நிமிடங்களுக்குள் முழுமையாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிடலாம் என்பதால், ரிசார்ட்டை தேடி அலைய வேண்டி இருக்காது. பொதுவாக லட்சத்தீவிற்கு பயணசெலவு மிக அதிகமாவதால், மேல் சொன்னபடி பயணிக்கலாம். 

*Thx Google : Lakshadweep maps, Sea cucumber fotos.