கணினி ஓவியங்கள்

 ஆற்றோரம் குடிசை, அத்தோடு இணைந்த வாழ்க்கை என என் கனவுகளில் வரும் இந்த காட்சியை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி வரைந்து வைத்து அழகுப்பார்ப்பேன். இப்போது பெயின்ட் பிரெஷ்ஷில் தொடருகிறது....

   கூகுள் கிலிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி - நாய்க்குட்டி

 பறவை - இதும் கூகுள் க்லிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி

வினாயகர் சதுர்த்தசி அன்று,  #Ganesh #OneLine #1Min #MsPaint  இப்படியொரு Tag 'ல், G+ ல் , இளா (விவாஜி) ஒரு ஓவியத்தை பதிவிட்டுருந்தார். அட... நாம ஏன் வரைந்துப்பார்க்க கூடாதுன்னு வரைந்தேன்.. என்னுடையது  #Gajananam #OneLine #27 Seconds #MsPaint  - நன்றி விவாஜி

 சில வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டு வாசலில் நான் இடும் கோலம்...


கலர்ஃபுல் கிளி..  இதும் கூகுள் இமேஜ் பார்த்து வரைந்ததே.. :)


மற்றுமோர் இயற்கை காட்சி... என் வானிலே...

* MSPaint ல் வரைந்தவை.

அணில் குட்டி : ஆங்...அம்மணி..?!... கூகுள் பார்த்து காப்பி அடிக்க இவ்ளோதானா கிடைச்சது ???

பீட்டர் தாத்ஸ் : Drawing is rather like playing chess: your mind races ahead of the moves that you eventually make - David Hockney  

எங்க வீட்டு சமையல் : ஆப்பம்

எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.
 
தேவையான பொருட்கள் : 
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு.  படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது. 

செய்முறை :  பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து,  வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில்,  4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும்  நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !! 

தேங்காய் பால் செய்முறை :  தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை  ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும்.  பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.  பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் பாலின் பயன்கள்
 * வயிற்றுப்புண்ணிற்கு நல்லது.  முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
 
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க 

அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு,  அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........

பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel

எருமைமாடாக மாறுவது எப்படி?!

சூழ்நிலைகளால் மாறும் மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் மாறுவதுக்கென்றே சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்பவர்களை பார்க்க ஆயாசமாக இருக்கிறது, அவர்களை கடந்து வர முடியாமல் தவிக்கும் மனதிற்கு ஆறுதலோ அறிவுரையோ சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 

அதே சமயம் யாரையும் நீ இப்படி இரு என்று சொல்வதை விட, நாம் நம்மை மாற்றிக்கொள்வது எளிதெனப்படுகிறது. எது நடந்தாலும் எதற்காக கஷ்டப்பட்டாலும் யாரையும் நொந்து பிரயோசனம் இல்லை,  என்னை நான் நொந்துக்கொள்வதை தவிர... :)

மனித குணங்கள் மாறுவதில்லை என்னையும் சேர்த்தே. கடந்து
வந்தப்பாதைகளை பார்க்கத் தெரிந்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இருக்குமேயானால், நம் குணத்தை சற்றே மெறுகேற்றிக்கொள்ள முடியும்.. தவிர இயற்கையாக அமைந்த குணம் உள்ளேயே பதுங்கியிருக்கும். அதில் மனிதத்தைத்தாண்டி மிருகமே அதிகம் இருப்பதாக கணிக்கிறேன்..

மிருகத்தை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மனிதத்தை வளர்க்க முயற்சி செய்தவாரே இருக்கிறேன்... என்னை சுற்றுயிருப்போர்  மிருகத்தை வெளிக்கொண்டுவரவே முயற்சி செய்கின்றனர். அவர்களை வென்று என் மனிதத்தைக்காப்பாற்ற அதீத போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது என் மனமும் அறிவும்.

என் மனமும் அறிவுமே எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை... கிழக்கு மேற்காக, மேற்கு கிழக்காகவே இருக்கிறது.. இரண்டும் ஒன்று சேரும், ஒரு நாள் வருமென அறிவு மனதையும், மனது அறிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

என் சுயநலம், எதிர்பார்ப்பு, நான் வைத்த நம்பிக்கை நிறைவேறாத ஒரு சந்தர்ப்பத்தில் பிறர்மீது எனக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு, அவர்களை நம்பிக்கை துரோகிகளாக காண்பிக்கிறது. அவர்களின் இடத்திலிருந்து பார்க்கையில் அவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம், வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையும் என்னைப்போல் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அங்கங்கே இறக்கிவைத்துவிட்டு ஓடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம், யார் முக்கியம் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நானோ தேங்கிவிடுகிறேன்..அந்த தேக்கமே அவர்களை எனக்கு நம்பிக்கை துரோகிகளாகக்காட்டுகிறது. இப்படியானவர்கள் கண்ணில் படும்போது அல்லது அவர்களை மன்னிக்கும் அளவு நான் பக்குவப்படவில்லை எனும்போது, என் மனம் மனிதத்தை இழக்கிறது...உடனே அறிவு சும்மா இருந்து விடுவதில்லை. மனதை பார்த்துக் சரமாரியாக கேள்விகளைத் தொடுக்கிறது. தொடுத்த கேள்விகளின் பதிலில் "என்னைத்தவிர, என் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் வேறு யாரும்  பொறுப்பில்லை... " என்றே பஞ்சாயத்து முடிகிறது. இந்த முடிவில் இன்னொரு ஆரம்பமாக,  என் மேல் தான் தவறு என்பதை ஒருவிதக் குழப்பத்தோடு உணர்ந்து.....தொடர்கிறேன்...

இந்த தொடர்ச்சி மெளனத்தின் மொழியாக மாறுகிறது.  மெளனம் பல பிரச்சனைகளை உள்ளடக்கிவிட்டு, வெளியில் என்னை ரொம்பவே நல்லவளாகக் காட்டுகிறது.. ஆனால் உள்ளுக்குள் நான் நல்லவளில்லை என்பதை எனக்குள்ளேயே நான் பேசிக்கொள்ளும் சண்டையிட்டு மாண்டுக்கொள்ளும் இரு வேறு பிசாசுகள் உணர்த்துகின்றன. அந்த பிசாசுகள் வெளிவந்துவிடாமல் இருக்க என்னை நான் கட்டுப்படுத்தி வளர்ப்பதில் அதிக சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இப்படி பிசாசாக மாறி அதைக்கட்டுப்படுத்துவதற்கு பதில்.. பிசாசாக மாறாமல் இருக்க என்ன வழியென்று யோசிக்கையில். வாழ்க்கையை அதன் போக்கிற்கே எடுத்துக்கொண்டு, எனக்கு நடப்பதை, எனக்கு சுற்றியிருப்பவர்களுக்கு நடப்பதை மிக எளிதாக எருமைமாட்டின் மீது மழைபெய்வதுப்போல சூடு சுரணை எதும் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்கிறேன்.

ஆக,  முடிவின் படி, இப்போது எருமைமாடாக மாறுவது எப்படியென்ற ஆராய்ச்சியில் இருக்கிறேன்... 

அணில் குட்டி : ஹை....?!! . எருமைமாடா அம்மணி ஆவறதப்பத்தி ஒரு பிரச்சனையுமில்ல....ஆனா அப்பவாச்சும் அம்மணி "வாயி" மூடுமான்னு அவங்க வூட்டுல இருக்கவங்க ஆர்வமாக எதிர்ப்பார்தீங்..... வாட் யூ கைஸ் எதிர்பார்த்தீங்...?. சொல்லிட்டுப்போங்க... எனக்கு பிரயோசனப்படும்...

பீட்டர் தாத்ஸ் : Human progress is neither automatic nor inevitable... Every step toward the goal of justice requires sacrifice, suffering, and struggle; the tireless exertions and passionate concern of dedicated individuals. - Martin Luther King, Jr.

தொடர்புடைய மற்றப்பதிவுகள் : (என்னுடைய குறிப்பிற்காக)
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2011/06/blog-post.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/05/2.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/02/blog-post_26.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2006/07/blog-post_05.html 

Images : Thx google.

பைத்தியக்காரி !!

ரயிலில் அவளைப்பார்த்தேன்..
மூவர் இருக்கையை அவளே ஆக்கரமித்திருந்தாள்...
எதிர் இருக்கை காலியாகயிருக்க உட்கார எத்தனித்தேன்...
தோள் தொட்டு வேரிடம் நகர்த்தினார் என் கணவர்
என் மனம் என்னவோ அவளையே சுற்றியது...

அவள் ஒரு இருக்கையிலும்
அவளின் சொத்து மூட்டை இரண்டு இருக்கையையும் பிடித்திருந்தது
மூட்டையின் பின்னாலிருந்து ஒரு நாய்க்குட்டி எட்டிப்பார்த்தது
என்னைவிட அதிர்ஷ்டசாலி தான்,  அவளுக்கு தனிமையில்லை !!
இரண்டு ரயில் நிலையங்கள் கடந்திருக்கும்....


நாய்க்குட்டியை தூக்கி இடதுகை அக்கத்தில் இடுக்கினாள்
மூட்டையை தூக்கி தோளில் போட்டாள்
முக்காடிட்டிருந்த துணி மெதுவாக நழுவியது
ஒருப்பக்கத்து சட்டையில்லா மார்பகம் பளீச்'சென தெரிந்தது
வெறித்துப்பார்த்த கூட்டத்தில் நானும் இருந்தேன்...

நாய்க்குட்டியை பாதுகாப்பாய் அணைத்த அந்த கைகள்
அவளின் மார்பை மூட முற்படவில்லை
நாய்க்குட்டியின் கழுத்தில் கிழிக்கப்பட்ட சிகப்புத்துணியில் நீளமான "பெல்ட்"
அவளின் ஊன்றுகோலாக கையில் ஒரு குச்சி !!
இப்போது, ஓடும் ரயிலில் கதவோரம் நின்றாள் !

இறங்கப்போகிறாள் என்றே நினைத்தேன்
அவள் எழுந்த ரயில் நிலையத்திலிருந்து கூட்டம் அதிகரித்திருந்தது -
அவளை சுற்றியிருந்த பைத்தியங்களைப்பற்றி
அவளுக்கு தெரிந்துதான் இருந்தது -
கதவோரம்  உட்கார்ந்தாள் !

முக்காடை சரிசெய்து இறுக்கப்போர்த்திக்கொண்டாள்
அப்படியே சாய்ந்து உறங்கிப்போனாள்-
நாய்க்குட்டி அவள் மடியில் பாதுகாப்பாய் உறங்கியது -
நான் அவளையே நினைத்து விழித்திருக்கிறேன் -

அந்த நாய்க்குட்டி
அவள் மேல் வைத்த நம்பிக்கையைக்கூட
நாம் அவள் மீது வைக்கவில்லை !!

இங்கே
பைத்தியக்காரி யாரென
இன்னமும் நானறியேன் ?!!  

கெஜானனம் பூத கனாதி சேவிதம்...

பட்டை அடித்திருப்பவர்...  (நெல்லையப்பர் கோயில் யானை, திருநெல்வேலி)
************

 காசுக்கேட்க மட்டும் தும்பிக்கை தூக்கற, ஃபோட்டோ எடுக்கவும் தூக்கிக்காட்டுன்னு சொன்னேன்.. .. உடனே போஸ் கொடுத்துட்டார்...

(ஹிஹி.. பாகன், நான் சொன்னதைக்கேட்டு போஸ் கொடுக்கவைத்தார்.. )
*****************
 நாமம்?!???? போட்டவர்...
ஆனா கணபதிக்கும் நாமத்துக்கும் என்ன சம்பந்தம் ?! விட்டால், லிங்கத்திற்குக்கூட நாமம் போடுவார்கள் வைணவர்கள். -(நவ திருப்பதியில் ஒரு கோயிலில், திருநெல்வேலி)

(ராகவன் சார் மிஸ்ஸிங் யூ...)

********************



இவரு, வேல் போட்ட குட்டி குட்டி யானையார்... (திருச்செந்தூர்)
********************
 இவரு வேலும், பட்டையும் அடிச்ச பெரிய பெரிய யானையார். (திருச்செந்தூர்)

********************

 ரிலேக்ஸிங்... :)

(நவத்திருப்பதி கோயில்களில் ஒன்றான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் கோயில் யானை )  
******************
செந்தூரம் வைத்தவர்...
பெருமாள் கோவில்களில் யானை வைத்திருப்பது ......?! எதுக்குன்னு தெரியல..

 (ஆழ்வார்திருநகரி)



**************







இவங்க எல்லாருக்காகவும் "கெஜானனம் பூத கனாதி சேவிதம்..." & அப்பாவிற்கு....



ஓ...பட்டர்ஃப்ளை...பட்டர்ஃப்ளை

வீணையில் - ஓ... பட்டர்ஃப்ளை...


படம் :  மீரா
இசை : இளையராஜா

Thx to my Guru Madam Saranya 



Default  : ஸ, ரி2, க2, ப, த, நி2, ஸ்



மப மபம கமக ஸரி கமக மபம கம  - (2)

பநிபஸ்..... ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)

நிநிநி பக ககபகநி நிநிநிக கரிகபபப
நிநிநி பக ககபகநி நிநிநிக கரிககரி

ஸரிக மபமபம மபத நிஸ்நிஸ்நி
தநிநிஸ்ஸ்  ரிகஸ்ரிரிஸ்  தநிநிஸ்ஸ்
நிததநி தபபத பமநிமப

மப மபம கமக ஸரி கமக மபம கம - (2)


Note : Red marked second string நி2,
          Blue marked மேல்ஸ்தாயி
.

ஏதோ சொல்கிறேன்...


மனச்சுமை-
என்னையும் உயிரையும்
கூட்டுக்குள்
இழுத்துக்கொள்கிறேன்-

பிழைக்கவுமில்லை
இறந்துவிடவுமில்லை
உள்ளே
உயிர் துடிக்கிறதே...........
********************




 பெளர்ணமி இரவு -

தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-

சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -

 ********************




அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-

பூக்கட்டி விற்கலாமே ?!!

பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !

********************




ஏரிக்கரையை
ஒட்டி
ஒற்றைப் பனைமரம்

பேச்சுத்துணையின்றி
தனியாக -

********************





ஒடுங்கிய கூன் கிழவிகள்-
ஒட்டிப்போன ஒற்றைநாடிக் கிழவன்கள்-
கைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-

ஒர் நடுஇரவில்
வழிநெடுக
சாலையோரங்களில் உறங்கியவர்களின்
தொடர்...

வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -
இவர்களின் குடும்பம்
எங்கோ
இறக்கமின்றி உறங்கிக்கிடக்கிறது !!


************************


நகைக்கடையின்
விற்பனைப்பெண்-
குனிந்து கும்பிட்டு
நகையை
நன்றியோடு தருகிறாள்-
 
ஊக்கத்தொகை
உறுதியானதை-
அவளின் புன்னகை சொல்லியது ! 

                                                                                      *****************************

இலக்கியவாதிகள்  பலருக்கு
"யோனி" மட்டுமே -
வாழ்க்கையாகிப் போனதை
நினைத்து
வெறுமையாக சிரிக்கிறேன் !!

கைப்பிடித்தவன் சொன்னான் -
"அது' வும் ஒருவகை போதை" !!

பெண் குழந்தையைப்
பெற்ற அப்பனுக்குத்தெரியும்
"யோனி" அவனின்
பெண்ணிற்கும் உண்டு !!! 

************************************

என்னால்
சீரணிக்க முடியாதவற்றை
பார்க்காமல்
படிக்காமல்
தெரிந்துக்கொள்ளாமல்
அறிவிலி' யாக
இருக்கவே
விரும்புகிறேன்....
****************************************

என்னை -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
நான் -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
இருக்கிறேன்

        - சுயநலத்தின் பிரதிபலிப்பு

இருவரிடமும்
ஒரே முகமாக மாறும் தினம்
என்னை நான் வெல்வேன் !!

************************************
பழையத்துணிகளை
சேமித்து வைக்கிறேன் !

படுக்கையிலேயே
எல்லாமும் செய்யும்
அம்மா'விற்கு
பழைய உடைகளை அணிவிக்கும்
போதெல்லாம் -

"அவள் குழந்தையாகிவிட்டாள்"
எனக்கு நானே
சமாதானம்
சொல்லிக்கொள்கிறேன்

************************************

திவ்யா'வும் மனதளவில்
நிராகரித்துவிட்ட
வேதனையில்
தன்னை கொன்றுக்கொண்ட
இளவரசன் -

அறியாதொருக்கூட்டம்
சாதிவெறியென
பிதற்றிக்கொண்டிருக்கிறது !

**************************************

ரங்கோ ரங்கோலி கோலங்கள் நீ போட்டால் #3





* படங்களை க்ளிக்கி பெரிதாக்கி பார்க்கவும் 

ரங்கோலி கோலங்கள் பெயின்ட் பிரஷ்ஷில் வரைந்தது.

எனக்காக குறிப்பு : என் பதிவுகளில் அதிகமாக தேடி பார்க்கப்படும் பதிவு "ரங்கோலி கோலங்கள்" அப்படின்னு ப்ளாகர் ஸ்டேடஸ் சொல்லுது. .



அணில் குட்டி : அம்மணிக்கு பொழுது போகலப்போல...?!!

பீட்டர் தாத்ஸ் : Photography is an immediate reaction, drawing is a meditation.

ஏதேதோ சொல்கிறேன்....

 கண்ணெதிரில்
களையும்
என்
கனவுகள்.....
பகல் கனவுகளோ?!!
**************************
இரவின் கனவுகள்......, ?????!
காற்புள்ளியிட
அவசியமில்லை
அவையும்
முற்றுப்புள்ளி தான் !!


Image : Baby Kaavya - Thekkikattan's daughter. Thx. Dr.Prabhakar.
******************************
நிழலாக
தொடர்கிறேன்..
இருட்டில் சென்றுவிடாதே..

*****************************

மெளனத்தில்
மறைந்திருப்பது -
நம்பிக்கை மட்டுமல்ல
வெறுப்பும் கோபமும்
கூட...

******************************


நாய்'க்கும்
மனிதனுக்கும்
வித்தியாசம் உண்டு
புலர்ந்ததிலிருந்து
புணர்வது வரையில்...


************************************

அடங்காத உடல்பசிக்கு
அறிவை முன்னிருத்தும்
இலக்கியவாதிகள்
பிண அறையின் காவலர்களாக
இருந்திருக்கலாம்
விதவிதமான
பெண்ணின் உடல்கள் அங்குமுண்டு !!

அதைக்கூட அனுபவித்து
இலக்கியம் கலந்து
சுவைப்பட
கவிதையாக்குவர்....
கைதட்டி சிரித்து சிறப்பு
சேர்க்குமொருக் கூட்டம் !!!


*************************************
எங்கோ
இழையோடும் அன்பும்
நம்பிக்கையும்
துடிக்கவைக்கிறது
இதயத்தை....

***************************
காவியின் குறியீடு துறவல்ல..
வெற்றுடலும் துறவல்ல

ஆசைகளற்றது துறவு...

முடிவென்று நினைத்தே
துறவைத்தேடினால்

அதை அடையும் போது
இவ்வாழ்வெதற்கு?!

துறவும் முடிவல்ல...!!!

**********************

இறந்துவிட வேண்டுமென
நெஞ்சம் துடிக்கையில்-
என் இறப்பும் 
என் கையிலில்லை-
வாழ்க்கை !!
****************************************

Images : Thx Google

கதை கதையாம்....

"ப்ப்ப்பாஆ ஒரு கதை சொல்லுங்க. ..."

"என்னாது கதையா? (வர வர இவ இம்சை அளவுக்கு மீறிப்போகுதே??...) கதை சொல்ற வயசுல...கதைக்கேக்கற?"

"இந்த வயசுல இதை தான் செய்யனும்னு எதாச்சும் ரூல்ஸ் இருக்கா?"

"இல்ல...ஆனா..."

"ஆனா ஒனாவெல்லாம் இல்ல....சரி..உங்க வழிக்கே வரேன்.. சின்ன வயசுல குழந்தைங்க..எந்த கஷ்டமும் இல்லாம சந்தோஷமா ஓடியாடிக்கிட்டு இருப்பாங்க... நான் அப்படியெல்லாம் இல்ல.. ரொம்ப ரொம்ப கஷ்டப்பட்டுட்டேன். என் வயசுக்கு மீறி அழுதிருக்கிறேன்.. இதுவேணும் அது வேணும்னு யாரையும் கேட்டதில்ல....ஏன் குறைந்தபட்ச ஆசை.. படிக்கனும். அதைக்கூட யாரும் கண்டுக்கல.. ..... என் படிப்பு முதற்கொண்டு எல்லாமே இப்ப வரைக்கும் செய்துட்டு வரேன்...இதுக்கெல்லாம் எங்கப்போச்சி உங்க ரூல்ஸ்? சின்னக் குழந்தையாச்சேன்ன்னு நிம்மதியாவா விட்டீங்க.?!"

"ஏன்டி உங்கவீட்டுல கேக்கற கேள்வி எல்லாம் என்ன கேக்கற?."

"ரூல்ஸ் யார் பேசறாங்களோ அவங்கக்கிட்ட தான் பேசமுடியும். .எனக்கு இப்ப கதை சொல்லுங்க...!! .அதுவும் "ஒரு ஊர்ல" ன்னு ஆரம்பிக்கற கதை தான் வேணும்..அப்பதான் தூங்குவேன்...."

"ம்ம்.......... .."

(என்ன செய்யலாம்னு யோசிக்கிறார் போல..விடுவேனா....?!  விடாம நச்சரிக்க....... ஒரு கதை சொல்ல ஆரம்பிச்சிட்டாரு)

***************

"ஒரு ஊர்ல ஒரு நாய் இருந்திச்சாம்...."

(அவ்வ்....நாய்ன்னு என்னைத்தான் சொல்றாரோ?) ம்ம்ம்...

"அந்த நாய்க்கு ஒருத்தர்..தினம் ஒரு பிஸ்கட் போடுவாராம்.."

ம்ம்ம்...

"இப்படி தினம் பிஸ்கட் போட்டுக்கிட்டு வந்தாரா... தீடீர்னு ஒரு நாள் பிஸ்கட் போடலையாம்...."

ம்ம்ம்...(ஸ்ப்பா நானில்ல)

"அந்த நாய்... ரொம்ப நேரம் பிஸ்கட்டுக்காக வெயிட் பண்ணிப்பாத்துட்டு.. பிஸ்கட்டை காணமேன்னு,,...அவர் கிட்டப்போய்..அவரைப்பாக்குதாம் கைய பாக்குதாம்.. கைய பாக்குதாம்..அவரைப்பாக்குதாம்..
.."

ம்ம்ம்...

"பிஸ்கட் கையில காணோம்னு......அந்த நாய்க்கு கோவம் வந்துடுச்சி... அவரோட கைய எகிறி லபக்'னு கடிச்சி வச்சிடுச்சாம்.."

"அய்யயோஓஒ..அப்புறம்..?"

"இதனால் தெரியவர நீதி என்ன..?"

"நாய்க்கு பிஸ்கட் போடக்கூடாது..! இதானே....?!! "

"இல்லடி..... எதையும் தொடர்ச்சியாக நல்லவிசயமாக இருந்தாலும் செய்யக்கூடாது.. அதனால என்னாச்சி? செய்தவருக்குத்தானே பிரச்சனை? இது பிஸ்கட் போட்ட ஆளுக்கு!!"

ம்ம்ம்..

"தொடர்ந்து நமக்கு ஒரு விசயம் கிடைக்குதுங்கறதுக்காக...அதுவே நிரந்தரம்னு நினைச்சிடக்கூடாது. . எப்ப எது கிடைக்குதோ அதை பயன்படுத்திக்கனும், கிடைக்காதப்ப அதுக்காக கோபமோ வருத்தமோ பட்டு அடுத்தவங்கள கடுச்சி வைக்கக்கூடாது.. .. எதுவுமே உலகத்தில் நிரந்தரம் இல்லை.... இது நாய்க்கு!!"

"அட... நல்லா இருக்கே...!! சூப்பார்ப்பா... சூப்பரா இருக்கு கதை..!!  உங்களுக்கு இந்த கதையை...யார் சொன்னா??"

"கிர்ர்ர்ர்ர்ர்ர்.. உன் இம்சை தாங்கமுடியாம..இப்ப யோசிச்சி சொன்னேன்...ஆனாலும் உன் அளவு உப்புப்பொறாத சின்ன விசயத்தைக்கூட "நேரேட்டிவா"  என்னால சொல்லமுடியாது.. நீ தான் அதுல ஜீனியஸ்..."

"ஹி ஹி....ரொம்ப அனுபவிக்கறீங்க போலவே? "

"இல்லையா பின்ன..இரு சின்ன விசயத்தை நீ எப்படி பில்டப் செய்வன்னு சொல்றேன். கேளூ..".

ம்ம்ம்...சொல்லுங்க ..


************************************************


"ப்ப்பாஆ... நான் ஒரு விசயம் சொல்லனும் இங்க வாங்களேன்.. "

"என்னடி..சொல்லு.."

"அதெல்லாம் இல்ல...இங்க வந்து உக்காந்து என்னையே கவனிங்க.. அப்பத்தான் சொல்லுவேன்.."

(எப்படியும் விடமாட்டா...) "ம்ம்ம்...சொல்லு.."

"இன்னைக்கு மதியம் என்னத்தெரியுமா நடந்துச்சி..?"

(எதாச்சும் மொக்கை விசயமா இருக்கும்..என்னா பில்டப் கொடுக்கறாப்பாரு,...எந்த ரியாக்ஷனும் இல்லாமல்) "என்ன நடந்துச்சி?"

"நான் தூங்கிட்டே இருந்தேனா..?"

.........

"அப்ப யாரோ கதவை தட்ற சத்தம் கேட்டுச்சி..".

.............

"நல்ல தூக்கம்..திரும்பவும் ..டக் டக் டக்..ன்னு சத்தம்... என்னால கண்ணைத்திறக்கவே முடியல...நல்ல தூக்கத்துல தூக்கம் கலைஞ்சதால..... ஹார்ட் பீட் அதிகமாயி....ஹார்ட் படார் படார்னு அடிக்குது... அது அப்படி அடிச்சா உங்களுக்குத்தான் தெரியுமே.. செம வலி... வலி தாங்காம கண்ணைத்திறந்து ..............................
...... யப்ப்ப்பாஆஆஆஆ..."
 

"என்னடி? "
 

"நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் உங்கக்கிட்ட எந்த ரியாக்ஷனும் இல்ல...இதெல்லாம் ஒத்துக்க முடியாது... "உம்.."கொட்டுங்க..."

(கடுப்பாக... உன் தலையில் தான்டி கொட்டனும்) "உம்ம்ம் சொல்லு.."

"ம்ம்ம்ம்..அது!! ...........ஹான்....கண்ணைத்தி
றந்து கடிகாரத்தைப்பார்த்தேனா... மணி 3.40.. இந்த நேரத்தில் யார்னு... மெதுவா எழுந்து..பாதி திறந்தக்கண்ணோட.. அதே அவசர அவசரமா அடிக்கற ஹார்ட் பீட்டோட போனேனா.."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்..."

"துப்பட்டாவை மறந்துட்டேன்..."

"உம்ம்ம்ம்ம்ம்"

"திரும்ப ரூம்க்கு வந்து துப்பட்டா எடுத்துப்போட்டுட்டு போயி.... திறந்தா..."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......."

"கதவுல செயின் மாட்டியிருந்திருக்கிறேன்.....
திறக்கவரல...செயின்ல மாட்டி கதவு நின்றுச்சி..."

"உம்ம்...."

"செயினை அவிழ்க்காம சந்து வழியா வெளியில் பார்த்தா...."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்......"

"அங்க யாருமே இல்ல..."

"அப்புறம் தள்ளி நிக்கறாங்களோ என்னவோன்னு செயினை கழட்டிட்டு... கதவை திறந்துப்பார்த்தா...."

"உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்"

"அப்பவும் யாருமே இல்ல..."

"சரின்னு வெளியில் போயி எட்டிப்பார்த்துட்டு வந்தேன்...அங்க......"

"அங்கவும் யாருமே இல்ல... ஏண்டி...  "கதவு தட்டற சத்தம் கேட்டிச்சி, திறந்து பார்த்தா யாருமே இல்ல" இந்த ஒரு லைன் விசயத்தை எவ்ளோ  பில்டப் கொடுத்து சொல்லியிருக்கப் பாத்தியா..?!

"அட..ஆமாம்.. அதை ஒரு லைன்ல கூட சொல்லலாமில்ல... ஆனா அப்படி சொன்னா... எனக்கும் உங்களுக்கும் வித்தியாசமில்லாமல் போயிடுமேப்பா........"

...கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்...

********************************************

அணில்குட்டி : எத்தனைமுறை தான் அந்தப்பாவப்பட்ட மனுஷனுக்காக பாவப்பட்டு உச்ச்'.. கொட்றது... ஹய்யோ பாவம்..பழனி ஆண்டவர்..!!

பீட்டர் தாத்ஸ் : Psychology keeps trying to vindicate human nature. History keeps undermining the effort.

Image : Thx google

இசை எனும் இன்பவெள்ளத்தில்...

அணில் குட்டி : ஆமாம்மா ஓடியாங்க...ஓடியாங்க..... ஓடியாந்து வெள்ளத்தில் தொபுக்கடீர்னு குதிங்க.......அம்மணி  சங்கு ஊதிட்டு தான் முடிப்பாங்க.......


1. வீணையில் .. 

படம் : நீ பாதி நான் பாதி
பாடல் : ஸஸஸஸநி
ராகம் : பிலஹரி

Thx My Guru Madam : Saranya  




ஸ்ஸ்ஸ்ஸ்நி  தஸ்நி  பநித  மதபமக
கப..த..ப(Silent)

பபதநிஸ்  ரி-க் ரி-க்  ஸ் - (2)
ஸ்ரிக்ம்க்  ரி-க்  ஸ்-ரி  த-ஸ் பதக
கப ..த...ப (Silent)

 (ஸ்ஸ்ஸ்ஸ்நி )

க்க்க்க் க்க்க்க்
க்க்க்க் க்க்க்ரி ஸ்ரி

க்க்க்க் க்க்க்க்
க்க்க்க் க்க்க்ரி

நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநி நிதப
நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநி ஸ்ரிஸ்

நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநி நிதப
நிநிநிநிநி நிநிநிநிநி நிநிநிநி ஸ்ரிக்

க்ரிஸ் ரிரிரி ரிஸ்நி ததத பமக ககக
சரிகதப ரிஸ்ரிக்ஸ்
க்ரிஸ்நிதபமகக

கப ..த...ப(Silent)

 (ஸ்ஸ்ஸ்ஸ்நி )

குறிப்பு : த2 , ரி2

_________ ######__________

2. சொல்லிட்டாளே இவ காதல....



Thx : Male voice source : http://www.youtube.com/watch?v=HVwvpjY8-Jg


பீட்டர் தாத்ஸ் : For me, listening n singing often has a way of healing a situation. It gets the hurt out in the open into the light, out of the darkness.
.

ஏதோ சொல்கிறேன்..

=> தீடீர்னு நேற்று இரவு.."அய்யய்யோ... ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையும், பெங்களூரும் மோதினால்...?!! இந்த Gayle பந்தை அடிக்கிற அடிக்கு,எங்க தல தோனி என்னா செய்வாரு..?!!  அப்படியே கன்னத்தில் கைவச்சிக்கிட்டு கவலையோடு உக்காந்து புலம்பிட்டே இருந்தேன். உடனே பழம்நீ சொன்னாரு " இதுக்கு ஏன் இவ்ளோ கவலப்படற Gayle
மூஞ்சியில அழுகிப்போன முட்டையும் , தக்காளியையும் எடுத்து அடிச்சா, அந்த நாத்ததில், பந்தை சரியா அடிக்காம விட்டுடுவாரு.. நமக்குத்தெரியாத குறுக்கு வழியா?" ன்னு என்னை சமாதானம் செய்தாரு.. ஆனா எனக்கென்னவோ, அடுத்தப்போட்டிக்கு, முதல்ல Gayle வ எவ்ளோ காசானாலும் பரவாயில்லைன்னு சென்னைக்கு வாங்கி போட்டுடனும்... அப்பதான் இந்த டென்ஷன் குறையும்.

=> ரஜினி ஆல் டைம் ஃபெவரைட்.யாரும் அவர் இடத்தை பிடிக்கவே முடியாது. அவரைத்தவிர சில நடிகர்களை பிடிக்கும்.. ஷ்யாம், சிநேகாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னவரை இருந்த பிரசன்னா.
இவங்க இரண்டு பேர் கிட்டயுமே எப்பவுமே ஆர்ப்பாட்டம் எதும் இருக்காது. அந்த வரிசையில் தற்போது சித்தார்த் சேர்ந்து இருக்காரு. உதயம் NH4 பார்த்ததிலிருந்து சித்தார்த்தை ஏனோ ரொம்ப பிடிச்சிப்போச்சி. யாரோ இவன் பாட்டும்..

=> நேற்று ஒரு வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு சென்றிருந்தேன். என் பக்கத்து கவுண்டரில் வந்திருந்த பெண் கஸ்டமர் ஒருவர், வங்கியில் வேலைப்பார்க்கும் பெண்ணிடம் " இப்படிதான் இங்க பேசனும்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா ?" என்றார்  அவர் "Nothing as such" என பதில் சொன்னார், கஸ்டமர் மிகக்கடுப்பாக "அப்ப ஏன் இங்லீஷிலேயே பேசறீங்க? தமிழ்ல பேசலாமே?",  அதற்கு அவர் "I dont know tamil, am from kerala, new to Tamil, I can understand but unable to reply in tamil" என சொல்லிக்கொண்டே அவரின் பெயர் பலகையை திருப்பி இந்தப்பெண்ணிடம் காண்பித்தார். "ஓ..அதான் தமிழ் பேசலையா..பெயரை கவனிக்கல." என வழிந்தார்.

=>  அண்ணன் மகனுக்கு 14 வயசு. பெரிய வண்டி எடுத்துக்கிட்டு ஊர் சுத்துமளவு பெரியவனா ஆகிட்டான். சென்ற வாரம் வெளியில் சென்று வந்துக்கொண்டிருக்கும்போது, பட்டம் விட்ட மாஞ்சாப்போட்ட நூல் கழுத்தில் மாட்டி, குழந்தைக்கு கழுத்தைச்சுற்றி அறுத்துப்பெரிய காயம் வண்டியோடு சாய்ந்து விழுந்ததால் தப்பித்திருக்கிறான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல், குழந்தை உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லாமல் அதிக இரத்தப்போக்கோடு பிழைத்துக்கொண்டான். கழுத்தைசுற்றி ஏற்பட்ட வடுப்போகாது என்றே நினைக்கிறோம். பட்டம் விடற புண்ணியவான்கள் அடுத்தவர்களின் உயிரைப்பற்றியும் கொஞ்சம் யோசித்தால் நல்லது. அண்ணனுடன் சேர்ந்து இந்தமாதிரி மாஞ்சா நூல் தயாரித்து பட்டம் விட்டிருக்கோம்... இந்த மாதிரி நிகழ்வுகள் அன்றையக் காலக்கட்டத்தில் எங்குமே நடந்ததில்லை.

=> 60 ஆம் கல்யாணம் ஒன்றிருக்கு திருக்கடையூர் சென்றிருந்தோம். வியாபாரம் மிகப்பலமாக நடக்கும் இடமாக இருக்கிறது. ஒரு நாடகம் நடப்பது போல வேக வேகமாக பயன்படுத்திய பொருட்களைக்கொண்டே திருமணத்திற்கான செட் அப் செய்கிறார்கள். அதாவது , கலச தேங்காய்களும், அதனுள் ஊற்றப்படும் தண்ணீர் முதற்கொண்டு எல்லாமே உபயோகத்திவை. காலையில் ஒரு செட் அப் செய்தால், அன்று மதியம் நடக்கும் திருமணங்கள் எல்லாவற்றிற்கும் அதே தான். திரும்ப மதியம் வேக வேகமாக இடங்களை சுத்தம் செய்து, அதையே ரீசைக்கில் செய்து செட் அமைக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு திருமணத்திற்கு 6500/- ரூ முதல் 1 லட்சம் ரூ வரை அதை நடத்தும் ஐயர்கள் வசூல் செய்கிறார்கள். கோயிலுக்கு ரசீதோடு செலுத்தும் பணம் என்னவோ ரூ 1500/- தான். இதில் அதிக வியாபாரங்களை நடத்திக்கொடுப்பவர்கள்..வேற யாரு?? நம்ம NRI க்கள் தான். சென்னையில் கூட சாதாரணமாக மதியம் சாப்பாடு ரூ70/- க்கு கிடைக்கும் திருக்கடையூரில் மிக சுமாரான ஒரு சாப்பாடு ரூ 90/-. அவர்கள் எனக்கு வைத்த (ஒரு) வடையை பிழிந்து கால் டம்ளர் எண்ணெய் எடுத்து பரிமாறுபவரை கூப்பிட்டு காண்பித்தேன்.. "அடடே, இவ்ளோ எண்ணெய்யா இருந்துச்சி" சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு இடத்தை காலிசெய்தார்.

=> சுவாசம், சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, மருத்துவர்கள் நீச்சல் பயிற்சியை பரிந்துரைப்பார்கள். என்னுடன் நீச்சலுக்கு வந்த பெற்றோர் சிலரும், வயதானோர் சிலரும் இதைச்சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போது பரதநாட்டியம் பள்ளியிலும், பெற்றோர் சிலர் தங்களின் குழந்தைகள் நடனம் பயில ஆரம்பித்தப்பிறகு வீசிங் குறைந்துள்ளது, வருவதேயில்லை எனவும் சொல்ல கேட்கிறேன். குழந்தைகளுக்கு இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு எப்போதும் மருந்துக்கொடுப்பதை விட நடனம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் சேர்த்துவிடுவது நல்ல பயனளிக்கும்.

படங்கள் : நன்றி கூகுள்

அணில் குட்டி : ஹோட்டலில் 4 பேர் சாப்பிடும் போது,அழகா ரவுண்டா இருந்த வடையை பிழிந்து எண்ணெய் எடுக்க்கிறேன்னு நசுக்கி, அதே வடைய எதும் சொல்லாம சாப்பிட்டவங்க எல்லாரும் அம்மணிய "ஞே" ன்னு வேடிக்கைப்பார்க்க பார்க்க, அந்த நசுக்கி நாசம் பண்ண வடைய வூட்டுக்காருக்கு வேற வச்சி அதை தான் சாப்பிடனும்னு ஆர்டர் வேற... இந்த அம்மாவோட அவரும் எப்படித்தான் காலம் ஓட்டறாரோ தெரியல... #இம்சை!

பீட்டர் தாத்ஸ் : Just as your car runs more smoothly and requires less energy to go faster and farther when the wheels are in perfect alignment, you perform better when your thoughts, feelings, emotions, goals, and values are in balance.

எங்க வீட்டு சமையல் : வற்றல்

வெயில் காலம் வந்தாலே வற்றல், வடவம் போட்டு வைத்துக்கொள்வது வழக்கம். வடவம் கூட ஒவ்வொரு வருடமும் போட வேண்டிவராது. ஆனால் வற்றல் போட்டுவிடுவேன். நவீனுக்கு ரொம்பவும் பிடிக்கும், எனக்கு உதவியும் செய்வான். வற்றல் போடுவதற்கு முன்னர் ரொம்ப வெயில் வந்துவிட்டால்,  வற்றல் பிழியும் வரை குடைப்பிடித்துக் கொண்டு நிற்பான். Missing you my baby.. :(

1. கஞ்சி வற்றல்
தேவையானவை :

ஜவ்வரசி : 1/4 கி
பச்சரிசி மாவு : 1/2 கி
பச்சைமிளகாய் : 7-8
சீரகம் : 2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

வற்றல் ஊற்ற பாலித்தின் கவர்கள் அல்லது பாலியஸ்டர் துப்பட்டா/புடவை.

செய்முறை : ஜவ்வரிசியை இரவு ஊறவைத்து, காலையில் மிக்ஸியில் அரைத்து, அடி கனமான பெரியப்பாத்திரித்தில் கொட்டிக்கனும். அதிலிலேயே பச்சரிசி மாவயும் கொட்டி 12-15 டம்ளர் தண்ணீர் விட்டு, கட்டி முட்டி இல்லாமல் நீர்க்கக் கரைத்து உப்பு, அரைத்த பச்சைமிளகாய் விழுது சேர்த்து அடுப்பில் வைத்து, கைவிடாமல் கிளரிக்கொண்டே இருக்க வேண்டும். தண்ணீர் தேவைப்பட்டால் இன்னமும் ஊற்றிக்கொள்ளலாம். மாவு வெந்து கஞ்சி பதத்திற்கு வரும், லேசாக பொங்கும் சமயம் சீரகத்தைக் கொட்டி நன்கு கிளறி இறக்கிவிடவும்.  வெயிலில் துணிப்போட்டு சின்ன கரண்டிக்கொண்டு சிறு சிறு வற்றலாக ஊற்றி, 2 -3 நாட்கள் தொடர்ந்து காயவைத்து எடுக்கவும்.

துணியைவிட்டு வற்றல் வரவில்லையென்றால், பின்புறம் திருப்பி தண்ணீர் தெளித்தால்,  உதிர்ந்துவிடும். தண்ணீர் தெளித்து எடுத்தால் வெயிலில் காயவைத்து எடுத்துவைக்க வேண்டும்.

2. முறுக்கு வற்றல் :

தேவையானவை :

பச்சரிசி மாவு (அ) பச்சரிசி : 1 கி 
பச்சைமிளகாய் : 12
சீரகம் : 4 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசி மாவாக இருந்தால், தோசை மாவு பதத்திற்கு  உப்பு சேர்த்து  கரைத்து, அதில் பச்சைமிளகாய் அரைத்துவிட்டு சீரகம் கொட்டி, சிறு தீயில் வைத்து கிளரிக்கொண்டே இருந்தால், மாவு வெந்து கெட்டியாகும். நன்றாக கெட்டியானவுடன் அடிபிடிக்காமல் இறக்கிவிடவும்.

பச்சரிசியாக இருந்தால், முதலில் பாத்திரத்தில் தண்ணீர் உற்றி கொதிவந்தவுடன், அரிசியைக்கொட்டி நன்கு குழைய வேகவைக்கவேண்டும். பாதி வேகும்போது பச்சைமிளகாய் விழுது, சீரகம் சேர்த்து கிளரிவிட்டு, சாதம் நன்கு குழைந்து கெட்டியானதும் இறக்கிவிட்டு

வெயிலில் துணியை பரப்பி, தேன்குழல் அச்சில் பெரிய ஸ்பூன் கொண்டு மாவை/வற்றல் சாதத்தை எடுத்து நிரப்பி, பிழிந்துவிடவும்.

3. பக்கோடா வற்றல்

தேவையானவை :

பச்சரசி : 1 கி
பச்சைமிளகாய் : 8-9
பெரிய வெங்காயம் : 4
இஞ்சி : 2 விரல் அளவு
சோம்பு :  2 ஸ்பூன்
லவங்கம் : 2
கருவேப்பிலை : ஒரு பிடி
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை : பச்சரிசியை குழைய வேகவைத்து,  அத்துடன் பொடியாக நறுக்கி ஒன்றும் பாதியாக மிக்ஸியில் அடித்து எடுத்த வெங்காயம், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், நைசாக அரைத்த இஞ்சி, சோம்பு, லவங்கம் விழுது, இரண்டாக கிள்ளிய கருவேப்பிலை, உப்பு சேர்த்து நன்கு கிளரி,  வெயிலில் துணி விரித்து, கைகளில் மாவை அள்ளி, சின்ன சின்னதாய் கிள்ளி வைக்க வேண்டும். மாவு சூடாக இருந்தால் ஒரு தட்டில் எடுத்துவைத்து கொள்ளலாம், காற்றில் சூடு குறைந்துவிடும்.  2-3 மூன்று நாட்கள் வெயிலில் காயவைத்து எடுத்து வைக்கவும். 

பீட்டர் தாத்ஸ் : One should eat to live, not live to eat.

கீச்..கீச்..கீச்....

பள்ளிக்கூடத்தில் எழுதிய தமிழ். தமிழில் "Assignment/Project " என்றாலே பாரதியார் பாடல்கள் அல்லது காந்தி தாத்தா பற்றிய ஏதாவது ஒன்றைதான் செய்திருக்கிறேன். முண்டாசோடு பாரதியாரை வரைந்து அவருடைய கவிதையை பெரிய சார்ட் பேப்பரில் எழுதிச்சென்றது நினைவிருக்கிறது.

பள்ளிக்கு பிறகு தமிழில் எழுதும் பழக்கமே இல்லாமல் போனது, 2003-04 சென்னை வானொலி நிலையத்தில் தற்காலிக அறிவாப்பாளராக இருந்தபோது, என் நிகழ்ச்சிகளுக்கு நானே எழுதிக்கொண்டு போகவேண்டிய கட்டாயம். 15-20 நிமிடம் வரக்கூடிய கவிதைகள் கூட எழுதவேண்டிய நிர்பந்தம். கட்டாயம் வரும் போது, எழுத்தும் தானாக வந்ததென்னவோ உண்மை. A4 தாளில் 6-7 பக்கத்திற்கு கவிதை எழுதிச்சென்றிருக்கிறேன். அதுவுமே பத்தாமல், நேரத்தை சரிக்கட்ட ஒரு பத்தியை இரண்டு முறை படிக்கவேண்டி வந்தது.
 
நிற்க, தமிழ் எழுதுவது இத்தோடு நின்றது. இணையத்தில் எழுதுவது இல்லை டைப்புவது மட்டுமே. ஆக எழுத்துப்பழக்கம் அறவே நின்று போனது. நவீனுக்கு பள்ளியில் செய்துக்கொடுத்த, வரைந்துக்கொடுத்த "Assignment/Project " எல்லாமே ஆங்கிலம். அவர் பொறியியல் படிக்கும் போதுக்கூட "Practical " நோட்டுப்புத்தகத்தில் வரைந்து கொடுப்பது என் வேலையாகவே இருந்தது. ஆனால் என்ன, பள்ளிக்காலத்தில் கடமை, கல்லூரி காலத்தில் ஒரு படத்திற்கு இவ்வளவு என பேரம் பேசி காசு வாங்கிடுவேன். (ஹி ஹி.ஹி.....). கொடுக்கற காசை எப்படியாச்சும் நாமளே ஆட்டயப்போடனும்னு செய்யற சதி தான் வேற ஒன்னுமில்ல. :)

பல ஆண்டுகளுக்கு பிறகு தமிழில் ஒரு "Project". பாட்டு டீச்சர் இதை சொல்லும் போதே, கிரியேட்டிவாக செய்யனும்னு சொல்லிட்டாங்க. சொன்னவுடனேயே "வாத்தும்,மீனுமே" என் நினைவுக்கு வந்தது. அங்கேயே நோட்டில் குறித்துக்கொண்டு வந்தேன். பிறகு இரண்டு நாட்களுக்கு ரொம்பவே ப்ளாக்' காக இருந்தேன்.  இதுல என் போட்டியாளர்கள் எல்லாம் 3.5 வயது குழந்தையிலிருந்து 10 வயது வரையிலான குழந்தைகள். போட்டியிலிருந்து விலகிடலாமான்னு யோசிச்சேன்."ச்சே.. கூடாது. இதுங்கள எப்படியும் ஜெயிக்கனும்னு" முடிவுக்கு வந்து, இரண்டு நாட்கள் கழித்து, கூகுள் ஆண்டவர் ஏதிரில் வந்தமர்ந்து வாத்தை அன்னமாக மாற்றி "அன்னம், மீன்" படங்களை தேடி எடுத்தேன். அதை தேடப்போக பட் பட்டென்று மற்றவை செய்யவும் ஐடியா வந்துக்கொண்டே இருந்தது.

ரொம்ப யோசிக்க வைத்தது "தாளங்கள்". தாளங்களுக்கு நான் முதலில் தேர்வு செய்தது "பியோனா". பியோனாவின் கருப்புக்கட்டைகளை "லகு" த்ருதம்" மாக மாற்ற உத்தேசித்திருந்தேன்.ஆனால் அதை செயற்படுத்தும் போது தான் சிக்கல் தெரிந்தது. ஆன் தி ஸ்பாட் "குழல்" கண் முன் வர, குழலுக்கு தாவினேன். அடுத்து ஆரோஹணம், அவரோஹணம்" . புத்தகத்தில் படிக்கட்டுகள் கொடுக்கப்பட்டிருந்தன. எப்படி மாற்றலாம்னு யோசிக்கும் போது ஸ்ட்ரைக் ஆனது "சறுக்கு மரம்". ஆனால் ஏணி சரியாகவும் சறுக்கு ஓவராக சறுக்குமே தப்பாகிடுமோன்னு நினைச்சி, அப்புறம் சறுக்கிலும் தேவையான இடத்தில் கால்களை பக்க சுவர்களில் ஊன்றி நம்மை சறுக்காமல் நிறுத்திக்கொள்ள முடியும்னு நினைத்து அதையே எடுத்துக்கொண்டேன்.

எழுத கஷ்டப்பட்ட தமிழ்/ வடமொழி எழுத்துகள். (தயவு செய்து யாரும் துப்பாமல் படிக்கவும்) பலவருடங்களாக தமிழ் எழுதாமல் இருந்ததில் கிடைத்த பலன் இதுன்னு சொல்லனும். "ற" இதை றா என்று அந்தகாலத்தில் வளைத்து எழுதுவாங்க இல்லையா அது எழுதவே வரல. :). பிறகு கால் சேர்த்து "றா" என்றே எழுதினேன். ஏன் வரலன்னு கேட்கக்கூடாது. எழுதிப்பாருங்க தெரியும். அடுத்து இ,ஜ,க்ஷ், ஹ, ஸ போன்ற எழுத்துக்களும் சிலமுறை தனியாக எழுதிப்பார்த்து பழகியப் பின்பே சார்ட்டில் எழுதினேன். எகொகஇ!!  இதனால் சொல்லவருவது என்னவென்றால், கீபோர்ட்டில் தமிழில் டைப்பினால் மட்டுமே போதாது, அவ்வப்போது தமிழை நோட்டுப்புத்தகத்திலும் எழுதிப்பழகனும்.

ஹான்.. சொல்லமறந்துட்டேனே... என்னுடைய "Project" ஐ தான் Display க்கு தேர்ந்தெடுத்திருக்காங்க. :). குட்டீஸ் எல்லாத்தையும் பின்னுக்கு தள்ளியாச்சி.. ஸ்ஸ்ப்ப்பா.... எத்தனைமுறை நான் பாடுவதைப்பார்த்து நக்கல் சிரிப்பு சிரிச்சி இருக்குங்க இதுங்க.. எல்லாத்துக்கும் சேர்த்து வச்சி பழிக்கு பழி, ரத்தத்திற்கு ரத்தம்.. !

அணில் குட்டி : நானும் எத்தனைதரம் தான் இந்தம்மாவை கழுவி கழுவி ஊத்தறது??!. சின்ன ....சின்னக்கூட இல்ல.... இப்பதான் நடக்க ஆரம்பிச்ச நண்டு சிண்டுக்கூடவெல்லாம் போட்டிப்போட்டு அதையும் ஜெயிச்சிட்டேன்னு தம்பட்டம் அடிச்சிக்கறாங்களே.... துப்பக்கூட எச்சியில்ல வாயில அவ்ளோ துப்பியாச்சி...ச்சே..!

அதிருக்கட்டும்..இவ்ளோ நேரம் எருமையா படிச்சீங்களே.... ஹி ஹி..டங் ஸ்லிப்டு, பொறுமையா படிச்சீங்களே தலைப்புக்கும் பதிவுக்கும் என்னா சம்பந்தம்னு யோசிச்சீங்களா...?!  பாட்டு வகுப்பில், இவிங்க சொன்ன அந்த 3.5 -10 வயசு குழந்தைகள்  சும்மா கணீர்னு பாடும்.. நம்ம அம்மணி குரல் தான் தெரியுமே ..என்னாட்டுமே.. கீச் கீச். டீச்சர் தனியா அம்மணிய பாட சொல்லும் போது, அம்மணி வாய் அசையும் ஆனா வார்த்தைக்கு பதிலா "கீச் கீச் கீச் னு சத்தம் மட்டும் வரும். எல்லா குட்டீஸும் வாயில் கைய வச்சி மூடிக்கிட்டு, ரகசியமா சிரிக்குங்க... ..அம்மணி முகத்தை அப்ப பாக்கனுமே...  :))))))))))))

பீட்டர் தாத்ஸ் : Education is what remains after one has forgotten what one has learned in school.
.

எங்க வீட்டு சமையல் : கீரை

எங்க ஆயா, "ஆடு, மாடு மாதிரி இந்த பொண்ணு கீரையை சாப்பிடுது, இதுக்கு விருந்துன்னா கீரை செய்துவச்சா போதும் போலருக்கே.." ன்னு சொல்லுவாங்க.  அந்தளவுக்கு கீரையை சாப்பிடுவேன். :) எங்க வீட்டு சமையலில் ஸ்பெஷல் உணவு  "கீரை" தான். ஆயாவிடம் வளர்ந்ததாலோ என்னவோ, கீரையின் அனைத்து வகைகளும் அவங்க செய்துக்கொடுத்து சாப்பிட்டு இருக்கேன். அதில் சிலவற்றை எழுதியிருக்கேன்.

1. கீரை பருப்பு கடைசல் : 

தேவையானப்பொருட்கள் :

1. துவரம் பருப்பு :  100 கி
2. அரைக்கீரை, மணத்தக்காளி கீரை, முருங்கைக்கீரை, பொன்னாங்கண்ணி, வெந்தயக்கீரை  - இதில் ஏதாவது ஒன்று ஒரு கட்டு.
3. வெங்காயம் -1
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - சிறிது வடவம் & பெருங்காயம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : கீரையை ஆய்ந்து நன்றாக கழுவி, பின்பு பொடியாக நறுக்கிக்கொள்ளவும். நறுக்கியப்பின் கழுவக்கூடாது. துவரம்பருப்பை மஞ்சள் பொடி, பூண்டு சேர்த்து வேகவைத்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி, நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்தவுடன், அதில் நறுக்கிய கீரையைப்போட்டு, கீரை வெந்தவுடன் (பச்சைநிறம் மாறிவிடாமல்) உப்புப்போட்டு கலக்கி இறக்கி, கீரைக்கடையும் சட்டியில் கொட்டி, நன்கு கடைந்து கடைசியாக வடவம் + பெருங்காயம் தாளித்துக்கொட்டி அதையும் லேசாக கடைந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும். 

2.  சிறுக்கீரைக்கு மட்டும் பைத்தம் பருப்பு சேர்த்து , மேற்சொன்ன அதே முறையில் செய்ய வேண்டும்.

3. கீரைப்பொரியல் : முளைக்கீரை தவிர மற்ற கீரைவகைகளை பொரியல் செய்யலாம்.

தேவையானப் பொருட்கள் :
1. கீரை : ஒரு கட்டு
2. கடுகு : 1/4 ஸ்பூன்
3. உளத்தம்பருப்பு : 1/2 ஸ்பூன்
4. காய்ந்தமிளகாய் : 2
5. துவரம் பருப்பு / பைத்தம்பருப்பு : ஒரு பிடி
6. தேங்காய் துருவல் : சிறிது
7. எண்ணெய் : தாளிக்க
8. உப்பு : தேவைக்கேற்ப
 
செய்முறை : கீரையை ஆய்ந்து, கழுவி, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். பருப்பை ஒன்றும் பாதியுமாக வேகவைத்துக்கொள்ளவும். வாணல் வைத்து எண்ணெய் விட்டு, கடுகு போட்டு பொரிந்ததும், உளத்தப்பருப்பு, கிள்ளிய காய்ந்தமிளகாய் போட்டு வதக்கி அதில் நறுக்கிய கீரையை சேர்த்து வதக்கி சிறுத்தீயில் வைத்து  மூடவும். 2-3 நிமிடத்தில் கீரை வதங்கிவிடும். பருப்பும், உப்பும் சேர்த்து நீர் நன்கு வடியுமளவு வதங்கியவுடன், கடைசியாக தேங்காய் துருவலைக்கொட்டி இறக்கவும். அரைக்கீரை, பொன்னாங்கண்ணி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை பொரியல் ரொம்பவே ருசியாக இருக்கும். பருப்பு சேர்க்காமல் வெறும் தேங்காய்துருவல் சேர்த்தும் செய்யலாம். விரும்புவர்கள் வெங்காயம்,பூண்டும் சேர்க்கலாம். தாளிக்கும் போதே இவற்றையும் போட்டு வதக்கி லேசாக தண்ணீர்விட்டு வெங்காயம் வெந்தவுடன் கீரையை சேர்த்து செய்யவேண்டும்.

 4. கீரைக்கூட்டு :  முளைக்கீரை & கீரைத்தண்டில் மாத்திரமே கூட்டு செய்யமுடியும். மற்றக்கீரைகளுக்கு கூட்டு பொருந்தாது. 
 
தேவையானப்பொருட்கள் :

1. கீரைத்தண்டு, முளைக்கீரை இதில் ஏதாவது ஒன்று
2. கடலைப்பருப்பு : 100கி
3. வெங்காயம் : 1 
4. பூண்டு - 4 பல்
5. தக்காளி -1  
6. பச்சைமிளகாய் - 2
7. மஞ்சள் பொடி : 2 சிட்டிகை
8. தாளிக்க - கடுகு, சீரகம்
9. எண்ணெய், உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை : பருப்பை பூண்டு, மஞ்சள்பொடி போட்டு வேகவைத்து, அத்துடன் வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாய், பொடியாக நறுக்கியக்கீரையை சேர்த்து நன்கு வெந்தவுடன் , கடுகு, சீரகம் தாளித்துக்கொட்டி கடைந்து பரிமாறலாம்.

5. முளைக்கீரை பூண்டு கடைசல் :

தேவையானப்பொருட்கள் :

1. முளைக்கீரை
2. பூண்டு : 10 பல்
3. பச்சைமிளகாய் : 2
4. வடவம் : சிறிது
5. பெருங்காயம் : சிறிது
6. சீரகம் : 1 ஸ்பூன்
7. எண்ணெய், உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : ஒரு பாத்திரத்தில் பூண்டு நனையும் அளவு தண்ணீர் விட்டு, அதில் சீரகத்தை சேர்த்து வேகவைக்கவும். கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, பச்சைமிளகாயை நீள் வாட்டில் நறுக்கி, பூண்டு வெந்தவுடன் அதில் கொட்டி வேகவைக்கவும். கீரை வெந்தவுடன் கடைசியில் உப்பு சேர்த்து கலக்கி 1 நிமிடம் வைத்து, வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, சட்டியில் கொட்டி நன்கு மசித்துக் கடைந்து பரிமாறவும்.

6. கீரை புளி கடைசல் : அரைக்கீரையில் மட்டும் இதை செய்யலாம்.

தேவையானப்பொருட்கள் :

1. அரைக்கீரை
2. புளி : 1/2 எலுமிச்சை அளவு
3. பச்சைமிளகாய் : 2
4. வெங்காயம் : 1
5. வடவம் & பெருங்காயம் சிறிது
6. எண்ணெய் & உப்பு : தேவைக்கேற்ப

செய்முறை : அரைக்கீரையை கழுவி, பொடியாக நறுக்கி, அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், நீட்டு வாட்டில் நறுக்கிய பச்சைமிளகாய் சேர்த்து சிறுத்தீயில் வேகவைக்கவும். நன்கு வெந்தவுடன் புளியை க்கரைத்துவிட்டு (கெட்டியாக கரைக்கவேண்டும்)  வடவம் பெருங்காயம் தாளித்துக்கொட்டி, உப்பு சேர்த்து ஒரு கொதிவந்தவுடன், சட்டியில் கொட்டி நன்கு கடையவும்.

7. கீரை சாம்பார் : முன்னரே எழுதியிருக்கேன் இங்கு செல்லவும்.   அரைக்கீரை, அகத்திக்கீரை, முருங்கைக்கீரை சாம்பார் ருசியாக இருக்கும். மற்றக்கீரைகள் சாம்பாருக்கு பொருத்தமாக இருக்காது.

8. இவற்றைத்தவிர மருத்துவ குணம் வாய்ந்த முடக்கத்தான், தூதுளை, வல்லாரை, பிரண்டை கீரை வகைகளின் செய்முறையைத் தனியாக எழுதுகிறேன். 

அணில்குட்டி : எங்க... புளிக்கடைசல் ஃபோட்டோ மிஸ்ஸிங்....?! 

பீட்டர்தாத்ஸ் : Cooking is like love. It should be entered into with abandon or not at all.

சிரி சிரி சிரி...சிரி....

சிரிப்பைப்பற்றி எழுதனும்னு எனக்கு ஆர்வம் வந்ததற்கு காரணம் நண்பர் ஜே.கே. (ஜெயகுமார்). இவரை சந்தோஷ் திருமணத்தில் சந்தித்தேன். மற்ற நண்பர்கள் அனைவரும், விடுதியில் தங்கிவிட, இவர் சந்தோஷ்க்கு ஆஸ்தான ஓசி ஃபோட்டோகிராஃபராக சர்வீஸ் செய்ததால், இரவு வெகுநேரம் மண்டபத்திலேயே இருந்தார், காலையிலும் சந்தோஷ் தூங்கி எழுந்ததிலிருந்து ஃபோட்டோ எடுக்கவேண்டிய கடமை கட்டிப்போட்டதால், 5 மணிக்கு முன்னதாகவே வந்து அவர் பின்னாடியே சுற்றிக்கொண்டிருந்தார். எப்படியாவது சந்தோஷை "அழகாக" ஒரே ஒரு ஃபோட்டோவாது எடுக்க வேண்டுமென்பதே ஜே.கே'வின் அன்றைய லட்சியமாக இருந்ததுன்னா பாருங்களேன் !! ஸ்ஸ்யப்பாஆஆஆ....

அங்க பிரச்சனை என்னன்னா..நம்ம ஜே.கே' இருக்காறே அவருக்கு சிரிக்கவே வரலைங்க. சீரியாஸாக பேசினாலும் முகத்தை உர்ர்ன்னு வச்சி இருக்காரு, யாராவது சிரிக்க சிரிக்கப் பேசினாலும் முகத்தை உர்ர்ன்னே வச்சியிருக்காரு. அப்பப்ப... "நண்பா..இதுக்கு நீங்க சிரிக்கனும்னு" சொல்லித்தரவேண்டிய துர்பாக்கிய நிலைமைக்கு தள்ளப்பட்டேன். அப்பதான் எனக்கு தோணிச்சி, இவரை இப்படி "சிரி சிரி" ன்னு சொல்லவேண்டியதாக இருக்கே. இவருக்குக்காக சிரிப்பைப்பற்றிய நல்ல விசயங்களை தொகுத்து எழுதினால் என்னன்னு. எப்ப?? சந்தோஷ் திருமணம் நடந்த நவம்பர் மாதம், ஆனால் அதை இப்பதான் எழுதறேன். சரி விசயத்திற்கு வருவோம்...

மனிதனுக்கும் விலங்குகளுக்கும் உள்ள அடிப்படை வித்தியாசம் சிரிப்பு. சிரிக்கத்தெரியாத மனிதர்கள் என்றில்லை, எந்தவித உணர்ச்சிகளையும் அதாவது நவரசங்களையும் சட்டென்று வெளிப்படுத்தாத மனிதர்களும் நம்மிடையே இருக்கத்தான் செய்கிறார்கள். ஒருமுறை நீயா-நானா நிகழ்ச்சியில் ஒரு பெண்மணியின் முகத்தை "டைட் க்ளோஸ் அப்" பில் காண்பித்து, "நிகழ்ச்சி ஆரம்பித்திலிருந்து முடியும் வரை, அதாவது 3 மணிநேரத்திற்கும் மேலாக, அவர் முகத்தில் எந்த வித உணர்ச்சியையும் காட்டாமல் ஒரே மாதிரியாக அமர்ந்திருந்தார்" என்று குறிப்பிட்டனர். இப்படி ஒரு பெண்ணோடு வாழ்க்கை நடத்துவது எத்தனை சிரமம் என்று அவரின் கணவர் அன்று விவாதத்தில் கலந்துக்கொண்டு விளக்கம் அளித்தார். எகொசஇ !!!
 
கொஞ்சம் யோசிங்க, எப்போதும் ஒரே மாதிரியான இறுகின முகத்தோடு இருக்கும் ஒருவரைப்பார்த்தால், எப்படி நம் அன்றாட வேலைகள் சாதாரணமாக நடக்கும்.?! சீக்கிரமே, நம் முகமும் அவர்களைப்போலவே இறுக்கமாக மாறிவிடும். சிரிச்சிட்டா மட்டும் என்ன ஆகிடப்போகுதுன்னு கேட்கறீங்களா? சிரிப்பில் என்னவெல்லாம் இருக்கிறது எனப் பார்க்கலாமே:-

=> சிரிக்கும் போது, உடலில் 300 தசைகள் தளர்ச்சி அடைகின்றன.

 => நாம், ஒரு நாளைக்கு பதினைந்து நிமிடம் சிரித்தோமானால் கிட்டதட்ட 40 கலொரிகள் எரிக்கபடுகின்றதாம், அப்படியானால் ஒரு வருடத்தில் எந்த வித உடற் பயிற்சியும் செய்யாமல் 1.82 கி.கி உடல் எடையை குறைக்கலாமாம். ஆக, எந்த செலவும், உடல் உழைப்பும் இல்லாமல் நம்மால் உடல் எடையை குறைக்கமுடியுமானால்? பைத்தியம்னு சொன்னால் கூட சிரிக்கலாமே..

 => ஒரு நல்ல, ஆத்மார்த்தமான சிரிப்பு, நம் உடலின் தசைகளை, 45 நிமிடங்களுக்கும் அதற்கு மேலாகவும் தளர்த்தி, உடல் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தை விடுவிக்க செய்கிறது.

=> நோயெதிர்ப்பு சக்தியைக் கூட்டுகிறது. மன அழுத்தத்தை தூண்டும் ஹார்மோன்கள் குறைந்து, நோய் எதிர்ப்பு செல்கள் அதிகரிக்கிறது மற்றும் தொற்றுகளை எதிர்க்கவல்ல ஆன்டிபாடிகளை அதிகரிக்க உதவுகிறது, இதனால் நம் உடலில், நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தமுடிகிறது.

 => உடலில் இயற்கையாகவே நல்ல இரசாயனங்களை வெளியிடும் எண்டோர்பின்'ஐ சிரிப்பு தூண்டுகிறது. இந்த எண்டோர்பின்கள் ஒட்டுமொத்தமாக நம் உணர்வுகளை நேர்மறையாக, நல்லமுறையில் தூண்டவும், உடல் உபாதைகளால் ஏற்படும் வலியை தற்காலிகமாக குறைக்கவும் உதவுகிறது.

=> முக்கியமாக, சிரிப்பு , நம் இதயத்தை பாதுகாக்கிறது. மாரடைப்பு மற்றும் பிற இதய பிரச்சினைகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்க உதவுவதோடு, இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், இரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி, இரத்த ஓட்டத்தை அதிகரிக்கவும் செய்கிறது.

சிரிப்புக்கும் நம் மனதிற்கும் நிறைய தொடர்பு இருக்கிறது. அதையும் பார்க்கலாம்:-

=> சிரிப்பு, நமக்கு கவலையேற்படுத்தக்கூடிய உணர்ச்சிகளை எளிதாக கரைத்துவிடுகிறது. பொதுவாக நாம் சிரிக்கும் போது, நம் கவலைகளையும், வருத்தங்களையும் அந்த நேரத்திற்கு கண்டிப்பாக மறந்துவிடுவோம்.

 => நம் மனதை அமைதியாகவும், புத்துணர்ச்சியோடு வைத்துக்கொள்ளவும், மன அழுத்ததிலிருந்து விடுபட்டு, மனதுக்கு தேவையான நேர்மறையான சக்தியைப் பெறமுடிகிறது. இதனால், நம் அன்றாட வேலையில் அதிக கவனம் செலுத்தவும், சாதிக்கவும் முடிகிறது

 => நகைச்சுவை, நம்மை மிகவும் யதார்த்தமான, மன அச்சுறுத்துல் இல்லாத நிலையில் பார்க்க/பழக/சிந்திக்க வைக்கிறது.

 => சிரிப்பைத்தவிர, வேறெதுவும், நம் மனதையும் உடலையும் சமநிலையில் வைத்துக்கொள்ள வேகமாக உதவுவதில்லை.

=> நகைச்சுவை, நம் மனச்சுமைகளை குறைத்து, நம்பிக்கையை தூண்டுகிறது, மற்றவர்களுடன் நம்மை இணைக்கும் கருவியாகவும், கவனமாகவும், எச்சரிக்கையாகவும் இருக்க உதவுகிறது.

இப்படி சிரிப்பின் சிறப்புகளை சொல்லிக்கிட்டே போகலாம். இப்போதெல்லாம், சத்தம் போட்டு சிரிக்க நேரமில்லாத நாட்களில் நகர்ந்துக் கொண்டிருக்கிறோம். இதில் குறிப்பாக பெண்கள் சத்தம் போட்டு சிரிப்பதென்பது நம் சமூகத்தில், சபையில் செய்யக்கூடாத செயல். அதனால் பொது இடங்களில் சிரிப்பு வந்தாலும் அதை வாய்மூடி சிரித்தோ, சிரிப்பை அடக்கியோ தான் நாம் பழக்கப்பட்டிருக்கிறோம். மனைவி பொது இடங்களில் அதிகமாக சிரிக்கிறாள் என விவாகரத்து வாங்கிய ஆண்கள் இங்குண்டு. ஆண்கள் சிலரும் கூட பொது இடங்களில் சத்தம் போட்டு சிரிக்க தயங்குவர். நாம் வளர்க்கப்பட்ட விதம் அப்படி.

"Laughing Bird " என்ற செல்லப்பெயர் எனக்குண்டு. இதைத்தவிர ஓவராக அடக்கமுடியாமலும், சம்பந்தமில்லாமலும் சிரித்து, "லூசு, கழண்டக்கேசு' ன்னு பேரெல்லாம் அடிக்கடி வாங்குவதுமுண்டு. நமக்கு பேர் வாங்கறதா முக்கியம்? சிரிப்பது தானே முக்கியம்.. சிரிப்பதை வெட்கப்படும் ஒரு செயலாக நான் இதுவரை நினைத்ததில்லை. காரணம் ஒன்னும் பெரிசா இல்லை, என்னால சிரிப்பை அடக்கமுடிவதில்லை. அறிந்தவர் அறியாதவர் என யாரைப்பார்த்தாலும் புன்னகைக்கும் பழக்கமும் இருக்கிறது. சோகத்தில்/கவலையில்/பிரச்சனைகளில் இருப்பவரும், நாம் சிரிப்பதைப் பார்த்து பதிலுக்கு சிரிப்பர். சிரிக்கும் போது அடுத்தவர் முகத்தில் ஏற்படும் புத்துணர்ச்சியைப் பார்ப்பதில் எனக்கொரு சந்தோஷம் திருப்தி ஏற்படும், மேற்கொண்டு அவரிடத்தில் எளிமையாக நட்பு பாராட்டிக்கொள்ளவும் முடியும்.

சென்றவாரம் சென்னையில் நடனம் சம்பந்தப்பட்ட ஒரு Workshop' க்கு சென்றேன். அங்கு நவரசங்களையும் சொல்லிக்கொடுத்து, அவற்றிலிருந்து மன அழுத்தத்தை வெளிக்கொண்டு வருவதையும் சொல்லிக்கொடுத்தனர். அதில் ஒன்று சிரிப்பு. Laughter therophy பற்றிய ஒரு வீடியோ : pls watch this -> http://www.youtube.com/watch?v=w5KjERog9uM  

சிரிப்பின் சிறப்பு & வகைகளைப்பற்றி அந்தக்காலத்திலேயே "என்.எஸ்.கே" பாடியிருக்காரு... 
 

மதுரம் அம்மா சிரிக்கறதை பார்த்தப்பிறகும் நீங்க யாராச்சும் சிரிக்காம இருந்தீங்கன்னா... கண்டிப்பா உங்களுக்கு.......... ....... :)

அணில் குட்டி : //"லூசு, கழண்டக்கேசு'//....அட ?!!  புதுசா சொல்லிக்கறாங்களாம்...ஹய்யோ ஹய்யோ....!

 பீட்டர் தாத்ஸ் : To truly laugh, you must be able to take your pain, and play with it!

Thx to : Google & Youtube