என்னாது..... சினிமாக்கு போலாமா?

மொபைல் அழைத்தது.....மோகன் தான், ஆள்காட்டி விரலால் தேய்த்து எடுத்து காதில் வைத்தேன்.

"ஹல்லோ.. சொல்லுடா…" 

"கொரானா முடிஞ்சி, தியேட்டர்ஸ் திறக்க ஆரம்பிச்சிட்டாங்க. சினிமாக்கு போலாம் வரியா.. வீட்ல வேற, எங்கேயாவது வெளியில் போலாமானானு கேட்டுட்டே இருக்காங்க. ஃபேமிலியோட போலாம்… என்ன சொல்ற.."

"என்னாது ஃபேமலியோட சினிமாவா? எங்கூட்டம்மா கண்டிஷனுக்கு எல்லாம் எந்த தியேட்டரிலும் சீட் கிடைக்காது என்னாலையும் அந்தம்மாவ கூட்டிட்டு வரமுடியாது.… ஆள விடு சாமி.. நீ போயிட்டு வா…"

"டேய்..என்னடா இப்படி சொல்ற.. சிஸ்டர் அப்படி என்ன கன்டிஷன் போடறாங்க.. சொல்லு கேப்போம்.."

"ஞாயித்துக்கிழமை சினிமாக்கு போகனும்னா.. ஞாயித்துக்கிழமை காலையில் தான் சொல்லுவாங்க.. அதுல.. சீட் நம்பர் A-E வரைக்கும் தான் இருக்கனும்.."

"ஓ..அது ஏன்"

"அந்த தூரத்தில் இருந்து பாத்தாதான் கண்ணுக்கு நல்லதாம். அதுக்கு கீழ இருந்தா வேணாம்னு சொல்லிடுவாங்க. 10 நிமிசம் முன்னாடி போய் சீட்ல உக்காந்துக்கனும், லேட் ஆகக்கூடாது, லைட் ஆஃப் ஆகி விளம்பரம் ஓடிட்டு இருந்தாக்கூட நான் செத்தேன்…"

"சினிமா தான் ஆரம்பிக்கலையே அப்பவுமா கோவப்படுவாங்க.."

"அவங்க பிரச்சன சினிமா ஆரம்பிக்கறதை பத்தி இல்ல… லைட் ஆஃப் பண்ண பிறகு போனா,, உக்காந்து இருக்கவங்கள தொந்தரவு செய்து உள்ள போய் உக்காரனும், பின்னாடி இருக்கவங்களுக்கு மறைக்கும்.. அப்புறம் நடக்கும் போது சீட்ல உக்காந்து இருக்கவங்க மேல இடிக்காம நடந்து போகனும்..  உட்கார்ந்து இருப்பவங்க காலை மிதிச்சிட்டு நடக்கனும்.. இதெல்லாம் அவங்களுக்கு பிடிக்காது…"

"டேய்..சிஸ்டர் சொல்ற எல்லா விசயமும் கரெக்ட் டா.. இதுக்கா அவங்கள சினிமாவுக்கு கூட்டுட்டு போகமாட்டேன்னு சொல்ற? அராஜகம் டா. "

"அடப்போடா.. அதுக்காக நம்மள ஊருக்கு முந்தி கிளம்ப சொல்லுவாங்க.. கொஞ்சம் லேட் டா ஆனாலும் ..போற வழியெல்லாம் சீக்கிரம் சீக்கிரம் னு உசுற வாங்குவாங்க.. ஜாலியா போனோமா படம் பாத்தோமான்னு இருக்காதுடா.. "

"அவங்க சொல்ற பாயின்ட்ஸ் எல்லாம் கரெக்ட் தான். நீ தான் தேவையில்லாம ரியாக்ட் பண்ற. நான் டிக்கட் புக் பன்றேன், நீ அவங்கள கூட்டிட்டு வர வழிய மட்டும் பாரு.. " டோக் ஃபோனை கட் பண்ணிட்டான். 

'சுஜா..சுஜா..எங்க இருக்க.. மோகன் குடும்பத்தோட படத்துக்கு போறானாம். நம்மையும் கூப்பிட்டான் நான் ஒக்கே'ன்னு சொல்லிட்டேன்.

"என்ன படம்? ரிவியூ படிக்காம நான் படத்துக்கு வரமாட்டேன்னு உங்களுக்கு தெரியாதா..?  ஆமா.. ஏந்த தியேட்டர்? சவுண்டு சிஸ்டம் எல்லாம் சரியா இருக்குமா?.  ஏசி’ய பாதியில் நிறுத்தாம இருப்பாங்களா..? கண்ட தியேட்டரில் நான் சினிமா பாக்க மாட்டேன்.'

அடக்கடவுளே!…இந்த ரிவியூ, ஏசி, சவுண்டு பத்தியெல்லாம் அவன்’ட்ட சொல்லலியே… அய்யோ... முதல்ல ஃபோனை போடுறா என் சிப்சு…..இல்லனா உனக்கு ஊதிடுவாங்கடா சங்கு......

பீட்டர் தாத்ஸ்; Conditions differ in life. Some extent it makes sense, some extent it annoys.



 

கொல்கத்தா நாட்கள்

ஒரு டாக்ஸியில் பயணம் செய்துக்கிட்டே, ஹவுரா மேம்பாலத்தை Top, Side னு ஏதோ ஒரு angle லில் காட்டனும், இல்லைன்னா drone ஐ பறக்கவிட்டு ஹவுரா மேம்பாலத்தை இந்தப்பத்திலிருந்து அந்தப்பக்கமா ஒரு தரம் காட்டிட்டா ..நாம் கொல்கத்தாவில் இருக்கோம்னு அர்த்தம்.

ஆனால் கொல்கத்தா நகரம் இது மட்டுமல்ல, பழமை மிகுந்த, பெருமை வாய்ந்த ,இந்தியாவின் மிகப்பெரிய நகரங்களில் முதன்மையான, அதிக வரலாற்று சிறப்பு பெற்ற ஒரு நகரம்.

முதல் முதலாக ஹவுரா ரயில் நிலையத்திற்கு போனது, டார்ஜிலிங் சுற்றுப்பயணத்தின் போது தான்.  சென்னை-ஹவுரா , ஹவுரா-நியூஜல்பாய்குரி, அங்கிருந்து டார்ஜலிங் செல்ல ரயில் பிடிக்கனும். ஹவுரா ரயில் நிலையத்தில் மாடியில் பயணிகள் தங்குமிடத்தில் தங்கி குளித்து,  சீக்கியர் ஒருவர், குளியலறை கண்ணாடியில் ஒரு முழு காட்டன் புடவையை தலையில் முண்டாசாக லாகவமாக கட்டிக் கொண்டிருந்ததை வியந்து பார்த்தது.. நீங்காது நினைவு. 

 ஆனால் இப்போ கொல்கத்தா பயணம் என்பது, அங்கேயே வேலை, சில வருடங்கள் அங்கேயே தங்கியிருக்க போறோம். கொஞ்சம் பயம், பதட்டமென இருந்ததென்னவோ உண்மை. சென்னையிலிருந்து ரொம்ப தொலைவு, அம்மாவின் எண்ணம் சுமையாக இருந்த போதிலும், கொல்கத்தா செல்வதறிந்து அம்மாவின் உயிர் முன்னமே பிரிந்து,அவரின் இறுதி சடங்குகளை சரிவர செய்து முடித்துவிட்ட திருப்தியோடு கிளம்பினேன்.

ஹவுராவில் ரயிலை விட்டு இறங்கினோம், அலுவகத்திலிருந்து சுப்ரியா என்ற நபர் (ஆண்) வந்திருந்தார், கார் ரயில் நிலையத்தின் உள்ளேயே அனுமதிக்கப்படுகிறது, சுமைகளை தூக்கிக்கொண்டு ரயில் நிலைய முகப்புவரை நடக்கவேண்டி இல்லாமல், காரில் ஏறிக்கொண்டோம். ஹவுரா ரயில் நிலையம் முன்னைப்போல இல்லாமல் கொஞ்சம் சுத்தமாக இருந்தது.

சுப்ரியா போகிற வழியில் எதைஎதையோ க்காட்டிக்கொண்டே போனார். பெங்காலி'கள்  மெதுவாக ஆரம்பித்து அதிகமாக பேசக்கூடியவர்கள்.  அதிக சத்தம், அதிக அசுத்தம், அதிக கூட்ட நெரிசல் என எல்லோருக்கும் தெரிந்த கொல்கத்தாவின் வாழ்க்கையில், அதி மேதாவிகளாக ஒவ்வொரு பெங்காலியும் தன்னை நினைத்துக்கொண்டு நடந்துக்கொள்வது பேசுவது போன்றவை எனக்கு சற்றே ஆற்றாமையை கொடுத்தது.ஆனால் அவர்களுக்கு நம்மேல் அதிக மரியாதை இருப்பது என்னவோ உண்மை. தவிர, நாமெல்லோரும் சைவர்கள் (Vegetarians) என நம்பிக்கொண்டு இருக்கிறார்கள்.

எங்களின் வாழ்க்கையில் சில பல முக்கிய நிகழ்வுகள் அங்கே நடந்தன. முதல் கார் அங்கே வாங்கினோம். மேற்கு வங்க பதிவில் கார் இருந்ததால், அநேகமாக சுற்றியுள்ள பல ஊர்களை எளிதாக பார்த்துவந்தோம். அதிகமாக கிராமங்கள், வீட்டுக்கு ஒரு குளம், தென்னை, வாழை, பலா, மாங்காய், தேக்கு என மரங்கள், இமயத்திலிருந்து பெருக்கெடுத்து ஓடிவரும் ஆறுகளும், கிளை நதிகளும், வாய்க்கால்களுமாக வருடத்தின் 365 நாட்களும் தண்ணீருக்கு பஞ்சமில்லை. எல்லையே தெரியாத

ஹூக்ஹ்லி நதியின் அத்தனை தண்ணீரும் கடலில் கலக்கும் கொடுமை.  தண்ணீரீன் அளவு, வரத்து போன்ற காரணங்களால் நதிகளின் நடுவே மேற்கு வங்கத்தில் அணைகள் கட்ட வாய்ப்பே இல்லாத நிலை, ஒருவேளை கட்டினால் மாநிலமே நீரில் மூழ்கும் அபாயம் ஏற்படலாம். அதனால் நதி தன்னோடு சேர்த்து மொத்த நீரையும் கடலில் கொண்டு சேர்த்துவிடுகிறது.

எப்படியாவது கடலோர மாநிலங்கள் வழியாகவே கங்கையை வளைத்து கொண்டு வந்தால், ஒரிசா, ஆந்திரா, தமிழ்நாடுன்னு ஓஹோ ன்னு செழிக்கும். ஆனால் நடக்கும் மத்திய ஆட்சியில் மக்களை நடுத்தெருவில் நிறுத்தாமல் விடமாட்டார்கள் என்பதால், இதைப்பற்றி யோசிப்பதே அபத்தம். இந்தியா எத்தியோப்பியாவை போல மாறும் காலம் கண்முன்னே தெரிகிறது. 

எங்கேயோ ஆரம்பித்து எங்கேயோ போகிறேன்.. தொடர்ந்து அடுத்த பதிவில் கொல்கத்தா நாட்கள் தொடரும் ...

ஐயாறப்பர் கோயில் -திருவையாறு

திருவையாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, தியாகராஜ ஆராதனை விழாவும் அனைத்து இசை கலைஞர்களும் ஒரே இடத்தில் நடத்தும் இசை நிகழ்ச்சிதான்.

இதைத்தாண்டி, இங்கே வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான ஐயாறப்பர் சிவன் கோயில் இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தருமசம்வர்த்தினி. 

இக்கோயிலில் நுழைந்துவுடன் அதன் பிரம்மாண்டம் கவனத்தை ஈர்த்தது. திருவாயாறில் இப்படியொரு ஒரு கோயிலா என்ற ஆச்சரியம் நீங்காது கவனித்தபோது தான் அத்தனைப்பெரிய கோயிலை மிக மிக சுத்தமாக பராமரித்து வருவதையும் பார்க்க முடிந்தது. 

இக்கோயிலைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றாதாலேயே இதன் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைத்தது. திருவாரூர் கோயிலைவிடவும் பெரியக்கோயில், மூன்று பிரகாரங்கள். இக்கோயில் தனுசு ராசி அன்பர்களுக்கு உகந்தக்கோயில் என்பதை சென்றுவந்தப்பிறகு தெரிந்துக்கொண்டேன்.  

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் மூன்றாவது பிரகாரமான சப்தஒலி பிரகாரம். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, சப்தஒலி பிரகாரத்தின் பலகையை பார்த்தோம். ஆனால் இது மூன்றாவது பிரகாரம் என்பதால் இதில் யாருமே சுற்றவில்லை. இருப்பினும் பலகையைப்பார்த்த ஒரு ஆர்வத்தில் நானும் அவரும் மட்டும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தோம்.

சில அடிதூரம் நடக்கும் போதே அந்த பிரகாரம் மற்ற கோயில்களின் பிரகாரம் போல இல்லாது இரண்டுப்பக்கமும் மிக உயர்ந்த மதில் சுவர்களை கொண்டதாக இருந்தது. யாருமில்லாததால் ரொம்பவே அமைதியாக ஏதோ ஒரு அகன்ற குகைக்குள் செல்லும் அனுபவமாக இருந்தது.  சப்தஒலி என்பது எங்கு எப்போது வந்து நம்மை பயமுறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்போடு அன்னாந்து மதில் சுவர்களின் உயரத்தைக்கண்டு அசந்துப்போய் நடந்துக்கொண்டே போகும் போது இடது பிரகாரம் முடியும் இடத்தில், இங்கு நின்று வடக்கு நோக்கி "ஐயாறா" என்று குரல் எழுப்பினால் 7 முறை எதிரொலிக்கும் என்ற பலகையை பார்த்தவுடன் எது வடக்கு என்ற குழப்பம் வந்து என் கணவர் வலதுப்பக்கம் திரும்பி "ஐயாறா" என்று கூப்பிட.. அட.. ஆமாம்.. அக்குரல் 5 முறை எதிரொளித்தது, மீதமிருந்த இரண்டு ஒலி மிக மெல்லியதாக இருந்திருக்கிலாம், ஒருவேளை மிகநுட்பமான ரெக்கார்ட்கள் கொண்டு பதிவிட்டால் 7 முறை வெவ்வேறு ஒலியின் நீளத்தில் நமக்கு கேட்கக்கிடைக்கும். எதிரொலி என்பதைத்தாண்டி வெவ்வேறூ ஒலிவடிவில் கேட்பது வியப்பே. இதன் முக்கிய க்காரணம் இக்கோயிலின் கட்டிட அமைப்பே. 

அவர் வடக்கு நோக்கி சப்தமிட, நான் அவரை நோக்கி அதாவது தெற்கு நோக்கி சப்தமிட அதே ஒலியை வடக்கிலிருந்து கேட்க முடிந்தது. இது ரொம்பவே ஆச்சரியம் தான், இதையே இதன்பிறகு பார்த்த கோயில்களில் முயற்ச்சி செய்து ஒரு சத்தமும் வராதது ஏமாற்றமே.அம்பாள் சன்னிதிக்கு ஒரு 1/2 கிமீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அத்தனைப்பெரிய கோயில். 

இந்த கோயிலுக்கு செல்ல திட்டமிடும் போது திருவையாறை சுற்றி 5 (இக்கோயிலை சேர்த்து 6) சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம். எல்லாமே 2-15 கிமீ ல் இருக்கிறது. 

புஷ்பவனேஸ்வரர் கோயில் 

திருப்பூந்துருத்தி

 

நெய்யாடியப்பர் கோயில் 

தில்லைஸ்தானம் 

 

 

 


 

ஐயாறப்பர் கோயில்

திருவையாறு 

 

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 

திருப்பழனம்

 

சோற்றுத்துறை நாதர் கோயில் 

திருச்சோற்றுத்துறை

 

திருவேதிகுடி

திருவேதிகுடி 

 

பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் 

திருக்கண்டியூர்

 

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டாலும், போகும் வழியில் உள்ள அத்தனைக்கோயில்களையும் கூகுளில் தேடி சென்றுப்பார்க்கலாம். கண்டிப்பாக 3-5 கிமீ ஒரு கோயில் இருக்கும். திரு' என்று ஆரம்பிக்கும் ஊர்களில் நிச்சயம் பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி கூகுளில் தேடி தேடியே திருவாரூரை சுற்றியுள்ள பலக்கோயில்களை நாங்கள் தரிசித்துவருகிறோம்.