லே-லடாக் பிரயாணமும் - பிராணவாயுவும்.....

இந்த லே பயணம் என் வாழ்க்கையில் இதுவரை சந்திக்காத மிகவும் கடினமான அனுபவத்தை எனக்குக் கொடுத்துள்ளது.

அந்த அனுபவத்தைப் பகிர்வதற்கு முன், என் உடல்நிலை குறித்து ஒரு சிறிய குறிப்பு. 2025 ஜூலை மாதம் முதல் சில உடல்நலப் பிரச்சனைகளால் அவதிப்பட்டு வருகிறேன். அதனால்,  லே பயணம் இந்த ஜூலை மாதத்தித்தில் செல்லலாம் என முடிவானது.

விமானத்திலிருந்து இறங்கிய சில நிமிடங்களிலேயே என் உடலில் ஏதோ மாற்றம் ஏற்பட்டது. நான் விமான நிலையத்திற்குள் நுழைய முற்பட்டேன், ஆனால், என் உடம்பு எங்கேயோ சென்றது. மூளையை செயற்படுத்தி விமான நிலையத்தினுள் நுழைந்தேன். நிற்க முடியாத அளவுக்கு தலைச்சுற்றல் ஏற்பட்டதால் உடனே அமர ஒரு இடத்தைத் தேடினேன். என் கணவர் பெட்டிகளை எடுக்க சென்றார்.  அதைப் பற்றிய கவனமில்லாமல், ஒரு இருக்கை கண்டுபிடித்து அமர்ந்தேன். கண்களில் தன்னிச்சையாகக் கண்ணீர் வந்தது. தலை தொங்கிவிட்டது. இரண்டு கைகளும் என் கட்டுப்பாட்டில் இல்லாமல் கீழே விழந்தன. 

என் கணவர் விரைந்து வந்து முதலில் என் கண்ணீரைத் துடைத்தார். உயரமான இடத்தின் (High Altitude) தாக்கம் எனக்குத் தொடங்கியிருப்பதை அவர் புரிந்து கொண்டார். Diamox மாத்திரை கொடுத்து, மீண்டும் பெட்டிகளை எடுக்கச் சென்றார்.

தட்டு தடுமாறி வெளியே வந்த பிறகு, ஹோட்டல் வண்டிக்காக காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் வெளியே அமர இடமே இல்லை. என்னால் நிற்க முடியாததால் தரையில் அமர்ந்தேன். மீண்டும் கண்களில் கண்ணீர். என் நிலையைப் பார்த்த டாக்ஸி ஓட்டுநர்கள் அனைவரும் என்னைச் சுற்றி வந்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் குடிக்கச் சொல்லி, ஆறுதல் படுத்த முயன்றனர்.ஆனால் தண்ணீர் குடித்த பிறகும் எந்த மாற்றமும் இல்லை. மாறாக உடல்நிலை இன்னும் மோசமானது.

ஹோட்டலுக்கு வந்ததும்  நவீனை அழைத்தேன். என்னால் அடக்க முடியாமல் கதறி அழுதேன். உடலில் இருந்த சக்தி முழுவதும் இழந்தது போல மிகவும் பலவீனமாக உணர்ந்தேன். நான் ஏன் அழுகிறேன் என்று அவனுக்குப் புரியவில்லை. என் கணவர் போனை வாங்கி என் நிலையை விளக்கினார். அவர் நவீனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போதே தூங்கிவிட்டேன்.

அவர்கள் ஏற்கனவே பேசியபடி, என் கணவர் 6 லி கொள்ளளவு கொண்ட போர்ட்டபிள் ஆக்ஸிஜன் கேனை வாங்கி வந்தார். நான் தூங்கிக்கொண்டிருந்ததால் என்னை எழுப்பாமல், ஆக்ஸிஜன் கேனை என் அருகில் வைத்து புகைப்படம் எடுத்து நவீனுக்கு அனுப்பினார். அதாவது, "அவள் தூங்கிக்கொண்டிருக்கிறாள், தொந்தரவு செய்யவில்லை. ஆனால் ஆக்ஸிஜன் வாங்கிவிட்டேன்" என்பதை அவனுக்குத் தெரியப்படுத்தியிருக்கிறார். :)

மாலை எழுந்த பிறகு ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். மிகவும் மெதுவாக உணவகத்திற்குச் சென்று தேநீர் குடித்தேன். பிறகு சிறிது தூரம் நடந்து என் உடல்நிலை சற்று சீராக இருக்கிறதா என்று பார்த்தேன். கொஞ்சம் பரவாயில்லை போலவும், இன்னும் சரியில்லை போலவும் இருந்தது.

இரவு உணவுக்குப் பிறகு அறைக்குத் திரும்பி சிறிது நேரம் அமர்ந்திருந்தேன். மெதுவாக தலைவலி ஆரம்பித்தது. அரை மணி நேரத்திற்கு ஒருமுறை ஆக்ஸிஜன் எடுத்துக்கொண்டேன். ஆனால் அதனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை. தலைவலி அதிகரித்து, பத்து பேர் சுத்தியலால் தலையை அடிப்பது போல் தாங்க முடியாத வலியாக மாறியது.

என் கணவர் தூங்கிக் கொண்டிருந்தார், அவரை எழுப்ப விரும்பவில்லை. அதற்குள் காய்ச்சலும் ஆரம்பித்தது. காய்ச்சல் மெதுவாக அதிகரிக்க, வேறு வழியில்லாமல் அவரை எழுப்பினேன். அவர் பேராசிட்டமால் மாத்திரை கொடுத்துவிட்டு மீண்டும் தூங்கச் சென்றார். ஆனால் தலைவலி மட்டும் குறையவே இல்லை.

அதிகாலை 5.30 மணிக்கு மீண்டும் அவரை எழுப்பி, "என்னை உடனே மருத்துவரிடம் அழைத்துச் செல்லுங்கள்" என்றேன். அவர் எங்கள் சுற்றுலா வழிகாட்டியைத் தொடர்புகொண்டு மருத்துவர் குறித்து விசாரித்தார். லே'வில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை மட்டுமே இருப்பது தெரியவந்தது. புறப்படுவதற்கு முன் தலைவலிக்காக நீராவி பிடித்தேன். அதனால் சற்று நிவாரணம் கிடைத்தது போல உணர்ந்தேன்.

மருத்துவமனைக்குச் செல்ல டாக்ஸிக்கு ₹300 செலவானது. மருத்துவமனையில் நுழைவுக் கட்டணம் ₹10.

மருத்துவர் முதலில் என் ரத்த அழுத்தத்தையும் ஆக்ஸிஜன் அளவையும் பரிசோதித்தார். ரத்த அழுத்தம் 137/65. ஆக்ஸிஜன் அளவு வெறும் 72% மட்டுமே இருந்தது. நான் கடுமையான தலைவலி பற்றி சொல்லிக் கொண்டிருந்தாலும், அவர் என்னை திரும்பிக்கூட பார்க்காமல் நேரடியாக "admit" என்று எழுதிவிட்டார்.

பின்னர் ₹30 கட்டணம் செலுத்தினோம். எங்களுடன் வந்த டாக்ஸி ஓட்டுனரே என்னை வார்டுக்குள் அழைத்துச் சென்று, ஒரு படுக்கையில் படுக்க வைத்தார்.

வேகமாக ஒரு செவிலியர் வந்து ஆக்ஸிஜன் பொருத்தினார். இடது கை நரம்பில் ஒரு ஊசியும், இடுப்பில் மற்றொரு ஊசியும் போட்டார். ஆக்ஸிஜன் கொடுக்கத் தொடங்கிய சிறிது நேரத்திலேயே எனக்கு நன்றாக இருந்தது. தூங்கவும் ஆரம்பித்தேன்.

இவை அனைத்தும் காலை 7.30 மணிக்குள் நடந்துவிட்டன.

சுமார் இரண்டரை மணி நேரத்திற்குப் பிறகு மருத்துவர் மீண்டும் வந்து, ஆக்ஸிஜன் இல்லாமல் நடக்கச் சொன்னார். என்னால் நடக்க முடிந்தது. என் கணவர்,  "என்னால் இந்த லே சுற்றுலாவைத் தொடர முடியுமா?" என மருத்துவரிடம் கேட்டார்.

மருத்துவர், "போர்ட்டபிள் ஆக்ஸிஜன் போதாது. 2000 லி ஆக்ஸிஜன் சிலிண்டருடன் பயணித்தால் தொடரலாம்" என்றார். அதற்கு மேல் வேறு எந்த மருந்து, மாத்திரை, ஊசி, ஆலோசனையும் வழங்கவில்லை.

வேறு வழியில்லாமல் லே-லாடக் சுற்றுலா ஆக்ஸிஜன் சிலிண்டருடன் தொடர்ந்தது. கார்டுங்லா 18 ஆயிரம் அடி உயரம், பேங்காங் ஏரி 14 ஆயிரம் அடி உயரம், சாங்லா 17.6 ஆயிரம் அடி உயரம் - இந்த 3  இடங்களிலும் தலை வலி  உயிர் போனது, ஆக்சிஜனும் குறைந்து, மிகவும் கஷ்டப்பட்டேன். சிலிண்டர் கொண்டு போனாலும் இந்த வலி, மூச்சு திணறலில் மிகவும் கஷ்டப்பட்டேன். பேங்காங் ஏரியில் மயக்க நிலையிலேயே இருந்தேன், நடு இரவில் தலை சுற்றல் காரணமாக  நிலநடுக்கம் வந்துவிட்டதென சொல்லி அவரை பயமுறுத்தி, அன்றிரவு ஆக்சிஜன் வைத்தவாரே தூங்கினேன். 

திரும்பி லே விற்கு வரும் வரை, அவ்வப்போது ஆக்சிஜன் வைத்துக்கொண்டே வந்து சேர்ந்தோம். பல இடங்களில் வண்டியை விட்டு நான் இறங்கவேயில்லை. 

சென்னை திரும்ப விமானநிலையம் வந்தபோது, ஆக்சிஜன் குறைந்து, ஸ்ப்ரே ஆக்சிஜனை கொண்டு சமாளித்து விமானம் ஏறி மும்பை வந்தவுடன் பாதி உயிர் வந்தது. சென்னை வந்ததும் -

'சென்னை டா, ஆக்சிஜன் பூமி டா, நாங்க யாரையும் கொல்ல மாட்டோம் டா..' னு உறவினர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி என் மகிழ்ச்சியை பகிர்ந்தேன். 

அணில் குட்டி : எங்க எப்படி தகனம் செய்யனும்னு வூட்டுக்கார் கிட்டவும், புள்ள கிட்டயும் சொன்னதை எல்லாம் விட்டுட்டாங்க....  பொழச்சி வந்து இருக்காங்க... அடுத்த பதிவில் வச்சி செய்வோம்.. இப்ப விட்ருவோம்.. 

மலைகள் அழகு...

வனமும்,
வானைத் தொடும் மரங்களும்,
முட்புதர்களும்,
தேயிலை, குளம்பித் தோட்டங்களும்,
காட்டாறுகளும், அருவிகளும்,
சலசலக்கும் ஓடைகளும்,
இவற்றை ஒட்டி வாழும் உயிரினங்களும்...

இவை மட்டுமே மலைகளின் அழகல்ல.

இதோ...

வெறும் கல்லும் மண்ணும்,
பாறைகளுமே
சூழ்ந்திருக்கும்
இந்த மலைகளும்
பேரழகே!
#Ladakh #ladakhtrip #mountains #rocks
















 
Mobile Clicks : Nothing05 3.1
All took from moving vehicle  

நெதர்லாந்து புகைப்படங்கள்

 










பயணக்குறிப்புகள் - ஸ்ரீநகர்/குல்மார்க்/சோனாமார்க்

ஸ்ரீநகர் ஜம்மு காஷ்மீரின் கோடை காலத்தலைநகர். இது காஷ்மீர் பள்ளத்தாக்கில் ஜீலம் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. தென்னிந்திய நதிகளுடன் ஒப்பிடும் போது, அதிக நீர்வரத்தோடு, அகலம் குறைவாகவே எனக்குப்பட்டது, நாங்கள் பார்த்த இடம் அப்படி இருந்ததோ என்னவோ.

சென்னையிலிருந்து தில்லிக்கு, தில்லியிலிருந்து  ஸ்ரீநகருக்கு விமானம் மூலம் சென்றோம். 24*7 ராணுவம் மற்றும் CRPF கண்காணிப்பில் ஸ்ரீநகர் இரண்டு கட்ட பாதுக்காப்பின் கீழ் இருப்பதாக விமான நிலையத்தில் அறிவிக்கப்பட்டது. அதை அங்கிருந்த திரும்பும் வரையில் கவனித்தோம்.  கடைத்தெரு, சுற்றுலாப் பயணிகள் குவியும்  இடங்கள், அரசு அலுவலகங்கள் என எங்கும் பாதுகாப்பு தெரிந்தது.

ஸ்ரீநகர் செல்ல ஏப்ரல் முதல் அக்டோபர் வரையிலான மாதங்கள் சிறந்த நேரம். . 

ஸ்ரீநகரில் பார்க்க வேண்டிய இடங்கள் -

மிக முக்கியமாக பார்க்கவேண்டிய இடங்களில் "தால் ஏரி" முதலிடத்தை பிடிக்கிறது. ஏரியில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அங்கு படகு வீடுகளில்


வசிக்கும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கரைக்கு வந்து செல்ல சிகாரா எனப்படும் படகுகளை பயன்படுத்துகிறார்கள். நமக்கு இந்த படகுகள் ரூ.600/- லிருந்து கிடைக்கும். திறமையிருந்தால் இன்னும் குறைத்துக்கூட பேசலாம். டீ, காபி, காஷ்மீர் காவா எனும் டீ போன்றவை படகில் வந்து விற்பனை செய்கிறார்கள். எதுவாகினும் பேரம் பேசி விலை குறைத்து  வாங்குவது நல்லது. உதாரணத்திற்கு 100 ரூ மதிக்கத்தக்க பொருளை ரூ.500/- என்கிறார்கள்.

முகலாய தோட்டங்கள் -முகலாயர்களின் காலத்தில் கட்டப்பட்டவை. உள்ளே கட்டிடங்களின் வடிவமைப்புகள் இதனை உணர்த்துகின்றன. முக்கியமாக ஷாலிமார் கார்டன்ஸ், நிஷாத் பாக் தோட்டங்களுக்கு சென்றோம். 

தங்கியிருந்த விடுதியிலிருந்து 100 ரூ கொடுத்து தால் ஏரிக்கும், அங்கிருந்து ஷாலிமார் பார்க்கிற்கு 250 ரூ, திரும்ப அங்கிருந்து நிஹாத் பார்க்கிற்கு 100 ரூ யும் ஆட்டோவிற்கு கொடுத்தோம். 500 ரூ வரை கேட்டார்கள், பேரம் பேசி பிரயாணம் செய்தோம்.
 
Jamia Masjid - ஒரே நேரத்தில் 33,333 பேர் தொழுகை செய்யக்கூடியளவு பெரிய மஸ்ஜீத். உள்ளே அனுமதி உண்டு.சுற்றி கடைத்தெரு இருக்கிறது, தேவைப்படுபவை வாங்கலாம்.

காஷ்மீரில் இருந்து சால்வைகள் மற்றும் கம்பளிகளை வாங்கலாம். தவிர காஷ்மீர் டிசைன் சல்வார் வகைகள்  வாங்கலாம். காட்டன் என்று சொல்கிறார்கள், ஆனால் காட்டன் இல்லை. துணியும் அப்படி ஒன்றும் நன்றாகயில்லை.மரத்தால் ஆன கைவினை பொருட்கள் அதிகம், படகு ஒன்று நினைவுக்காக வாங்கிவந்தேன். 

நூடுல்ஸ் லிருந்து, தோசை, சப்பாத்தி,பூரி வகையறாக்கல், அசைவ உணவுகள், பிரியாணி என எல்லாம் கிடைக்கிறது. சாப்பாட்டுக்கு குறைவில்லை. 

குல்மார்க் ;

இது ஸ்ரீநகரிலிருந்து 52 கிலோமீட்டர் தொலைவில் 2,690 மீட்டர் உயரத்தில் இருக்கிறது. ஒரு நாள் பயணமாக டாக்ஸி அமர்த்திக்கொண்டு கிளம்பினோம். போகிறவழி நெடும்பயணமாக மலைகளின் கிராமங்களின் ஊடே சென்றது.  குல்மார்க் கில் பனிமலைக்கு செல்ல முன்கூட்டியே இங்கிருந்தே


ஆன்லைன்லில் பதியவேண்டும், எங்களுக்கு தெரியவில்லை. அங்குபோய் முயற்சி செய்தும் கிடைக்கவில்லை. குதிரை மூலம் மேலே சென்று வரலாம் என்றனர். அதிக பணம். கீழே மட்டும் சுற்றிவர ஒரு குதிரைக்கு 3000 ரூ என பேசினர். ரொம்பவும் பேசி ஒருவருக்கு 1000 ரூ என பேசி மலையேறாமல் கீழே இருந்த இடங்களை மட்டும் சுற்றினோம். ஒரு கட்டத்திற்கு மேல் என் எல்-5 எலும்பு வலி பிரச்சனையால் குதிரைமேல் உட்கார்முடியால இறங்கி 1 கிமி தொலைவு நடந்தே வந்தேன். இடுப்பு வலி இருப்பவர்களுக்கு வெகுதொலைவு, மலை ஏற்ற இறக்க குதிரை சவாரி சரிவராது.குதிரை சவாரிக்கு தனியாக ஒரு ஷூ வாடகைக்கு வாங்கவேண்டும். அதுவும் பேரம் தான். சாமர்த்தியமிருந்தால் அதிக நஷ்ட ப்படாமல் இருக்கலாம்.

மகாராஜா மாளிகை, சிறு குன்று என ஒரு சில இடங்களே காண்பிக்கப்பட்டது. குதிரை மேய்ப்பவர் அலேக்காக லாகவமாக என்னைத்தூக்கி ஒவ்வொரு முறையும் ஏற்றியது ஆச்சரியபடும்படி இருந்தது. ஆனால் இடுப்பு வலிதான்..இப்ப நினைத்தாலும் குதிரை சவாரி பயமாகவேயுள்ளது. மகாராஜா அரண்மனை இப்பவும் ஏதாது விழாக்களுக்களின் விருந்துக்கு பயன்படுத்த படுகிறது என தெரிந்தது. முகலாய அரசர்களின் கோடை வாசஸ்தலமாக இவ்விடம் அமைக்கப்பட்டுள்ளதாக அரண்மனை குறிப்புகள் சொல்கின்றன.

குதிரையில் 2-3 மணி நேரத்தில் சுற்றி வந்துவிடலாம். குதிரையிலிருந்து இறங்கியபிறகு ராணி கோயில் ஒரு குன்றின் மேல் இருக்கிறது. அதை நாமே சென்று பார்த்துவிட்டு வரலாம். 

குல்மார்க்கில் வேறொன்றுமில்லை. திரும்ப இரவுக்குள் ஶ்ரீநகர் திரும்ப வந்துவிட்டோம். 

சோனாமார்க்;

ஸ்ரீநகரின் வடகிழக்கே 80 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.
சிந்துநதி வழி நெடுக பார்க்கமுடிந்தது. குழாங்கற்கலில் வெள்ள வெளேரென தண்ணீர் உருண்டு 
ஒரு சலசலப்பு சத்தத்தோடு ஓடுகிறது. கண்ணுக்கும் மனதுக்கும் குளிர்ச்சி.இங்கேயும்
குதிரை சவாரி. ஒரு வேன் பிடித்து சில சுற்றுளா இடங்களுக்கு சென்றோம். இங்கேயும் 
பேரம் பேசவில்லையெனில் நஷ்டம் தான். ஒருவருக்கு 100 ரூ அதிகமே. ஆனால் 5000 ரூ 
வரை கேட்கிறார்கள்.இருவருக்கும் சேர்த்து 800 ரூ கொடுத்தோம்.

இங்கேயும் எல்லா உணவு வகைகளும் கிடைக்கும். சின்னதாக ஒரு குளம், ஒரு ஆறு,  போய் 
வருகின்ற பாதையில் உள்ள மலைகள் என ஒன்றும் சுற்றிப்பார்க்க அதிகமில்லை. இரவுக்குள் ஶ்ரீநகர் வந்துவிட்டோம்.

பேரம் பேச தெரிந்தால், பாக்கெட் காலி ஆகாமல் வீடு திரும்பலாம் என்பதே இப்பயணத்தில் கற்றுக்கொண்டது.

 Picture courtesy : Thankyou Google. 

பொன்னியின் செல்வன் -2 PS-2 -Review

படம் சாதாரணமாக இருக்கு. ஏன் ஆஹா ஒஹோ ன்னு எழுதறாங்கன்னு தெரியல. அதிலும் சிலர் பாகுபலி யை மிஞ்சிவிட்டதாக எழுதுவது சத்தியமா ஏன்னு புரியல. பாகுபலி பிரம்மாண்டம். இதில் அப்படி ஒன்றும் பிரம்மாண்டமில்லை.

நடிகர் கார்த்தியை தவிர எல்லா நடிகர்களின் முகத்திலும் மணிரத்னத்தின் முகத்தை ஒட்டிவிட்டு படத்தைப் பார்த்தால் தெரியும், ஒரே மாதிரியான வசன உச்சரிப்புகள், எந்த உணர்ச்சியானாலும் அதே முகபாவனை.. பாவனைன்னு க்கூட சொல்லமுடியாது.

ஐஸ்வர்யாராய் விக்ரம் வரும் கடைசி காட்சிகளை அதிகமாக பாராட்டுகிறார்கள். அந்தம்மா என்னவோ எங்கேயோ பார்த்தபடி/முழித்தபடி/வெறித்தபடி முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாமல் வசனம் பேசுகிறார். விக்ரம் பதிலுக்கு அதே மாதிரியான முழித்த பார்வையோடு அல்லது அதற்கான முயற்சியோடு கொஞ்சம் நெற்றியை சுருக்கி பேசுகிறார். என்னத்த சூப்பரான நடிப்பு இதில் இருக்குன்னு தெரியல.. Over hyped scene by public.

சுந்தரசோழர் எங்கேயுமே சுந்தரசோழராக தெரியாமல் ' ஹாய் செல்லம்' னே சொல்றமாதிரி இருந்தது எனக்கு. தலையை எப்பவும் போல ஒரு பக்கமாக திருப்பிக்கொண்டிருந்தது ஒரு காரணமாக இருக்கலாம். 

வானதி , பூங்குழலி & மணிமேகலை கதாப்பாத்திரங்கள் புத்தங்கத்தில் வேற லெவலில் இருக்கும். படத்தில் அவர்களும் மணிரத்னத்தின் முகத்தை மாட்டிக்கொண்டு வருகிறார்கள், btw மணிமேகலை படத்தில் இல்லவே இல்லை. 

சின்ன வயது நந்தினி, கரிகாலன் நடிப்பும் அதே. முகத்தில் எந்த சலனமும் இல்லாமல் வசனத்தை பேசுவது, நடப்பது, ஓடுவது.. தளபதி'யில் ஆரம்பித்து துக்கம்/கோவம் னு வந்தால்.. ஆஆ..... ஓ ன்னு ஆகாயத்தைப் பார்த்து தொண்டக்கிழிய கத்துவது தான் மணிரத்னத்தின் ஸ்டைல். இதை விக்ரம் பிரபு 2-3 இடங்களில் செய்யும் போது கடுப்பாகிறது. ஏன் கத்தறாரு.. அழத்தானே செய்யனும்னு தோணிச்சி. 

குந்தவை வந்தியத்தேவன் காதல் காட்சியும் Over hyped scene by public.ரொம்ப சாதாரணமா இருக்கு. படகை ஓட்டிவந்த படகோட்டிகள் நட்ட நடு ஏரியில் எங்கே காணாப்போனார்கள் என்று தெரியவில்லை. குந்தவையின் குரலை வந்தியத்தேவனால் கண்டுபிடிக்க முடியலங்கறதே இந்த காட்சியின் உட்சக்கட்ட தவறு/தோல்வி. திரிஷாவின் வயது முகத்திலும் உடலிலும்.தெரிகிறது,

விக்ரம்பிரபு விக்ரமை சந்தித்து பொன்னியின் செல்வர் கடலில் மூழ்கி இறந்துபோனார் என்று சொல்லும் காட்சியில் விக்ரம் தலைமுடி காதை தாண்டியுள்ளது. அதற்கு அடுத்து விக்ரம் வரும் காட்சிகளில் எல்லாம் தலைமுடி தோளைத்தாண்டி வளர்ந்து தொங்குகிறது. 

சோழ சாம்ராஞ்சியத்தில் நாட்டின் உள் கட்டமைப்பு, கோட்டை, அதன் பாதுகாப்பு, கட்டிட அமைப்பு, பாதாள வழிகள் எல்லாம் எத்தனை பாதுகாப்போடு அமைக்கப்பட்டவை என்பதும்,  சோழர்களின் நிர்வாகத்திறமை வாய்பிளக்க வைத்த வரலாற்று சான்றுகளாக இன்னும் இருக்கின்றன.. இதில் பாதாள வழியில் உள்ள ஒரு சின்ன ஓட்டை வழியாக சுந்தர சோழரின் அறை தெரிய, அங்கிருந்து அவரை தாக்கி கொல்ல பாண்டியர்கள் முயற்சி செய்கிறார்கள். நம்ப முடியல. அதே சமயம், சுந்தர சோழர் அறையிலிருந்து அந்த துவாரம் தெரியவில்லை. எப்படி இது சாத்தியம். ஒரு அரசரின் அறைக்கு இவ்வளவு தான் பாதுகாப்பா? இதைக்கூடவா இத்தனைப்பெரிய படத்திற்கு home work செய்யல?. 

ஊமைஅரசி - இந்தம்மா தான் பொன்னியின் செல்வனின் hidden queen. இவரை பின்பக்கத்திலிருந்து சில காட்சிகளில் காட்டிவிட்டு, முகத்தை காட்டும் போது கொன்றுவிடுகிறார்கள்.

ஜெயம்ரவி தான் கதாநாயகன், ஆனால் பொம்மை போல எப்பவும் ஒரு புன்முறுவலோடு, மணிரத்னத்தின் நாயகனாக வளம் வருகிறார்.

ஜெயசித்ரா - பாவமா இருக்காங்க. அதே மணிரத்னத்தின் முகமூடி. பிரபு ஒரு காட்சியில் நன்றாக நடித்துள்ளார், முகமூடியில்லை. சரத்குமார், பார்த்திபன் எல்லாம் சுமார். ஒரு வேளை நன்றாக நடிக்கக்கூடியவர்களாக இருந்தாலும், மணிரத்னம் அவர்களுக்கு ஒன்றும் பெரிய வேலை கொடுக்க வாய்பில்லை.

நாகை புத்தபீடம்  பிரம்மாண்டம், இதனை கடல் அடித்துசெல்லும் காட்சி ஒன்று புத்தகத்தில் இருக்கும், அது படத்திலில்லை. ஏமாற்றம்.  

கடைசியில் போர் தேவையில்லாத ஆணி. 

இசைப்புயலின் இசை படத்திற்கு +. BGM ரொம்பவே நல்லாயிருக்கு.

மூலக்கதை" பொன்னியின் செல்வன்" னு டைட்டிலில் வருகிறது. அதனால்.. அதிலிருந்து இது எடுக்கப்பட்டதுன்னு நினைச்சிக்கிலாம். யாரும் எடுக்கவே முடியாதுன்னு விட்டுவிட்டுதை, மணிரத்னம் எடுத்து இயக்கி வெளியிட்டிருப்பதற்கு பாராட்டுகள். A Manirathnam movie. Historical movie in his view & stand. 

எல்லாவற்றையும் விட இன்ட்டலெக்சுவல் சுஹாசினியை படத்திலும் எழுத்திலும் பேச்சிலும் எங்கும் கொண்டுவராமல் இருந்ததற்கு இரட்டிப்பு மகிழ்ச்சி & பாராட்டுகள். 

எந்த எதிர்ப்பார்ப்பும் இன்றி படத்தை கண்டிப்பாக குடும்பத்தோடு ஒரு முறை பார்க்கலாம். 

 #ponniyinselvan2 #ponniyinselvan2review #ponniyinselva2_review 

 Pictures courtesy : Thankyou google.

கள்ளி (Cactus) செடிகள் கதை

வீட்டு பால்கனி தோட்டத்தில், நான் அதிகம் விரும்பி வளர்க்கும் தாவரம் காக்டஸ். இதில் கற்றாழையில் ஆரம்பித்து பலவிதமான கள்ளி செடிகளை வளர்த்து வருகிறேன். பொதுவாக காக்டஸ் க்கு பாட்டில் மூடியில் தண்ணீர் ஊற்றினால் போதும். என்னிடம் குட்டி குட்டி காக்டஸ் நிறைய உள்ளது. அதில் குட்டியா உருண்டையா இருக்க காக்டஸ் லேசா கைப்பட்டா போதும் கையோடு வந்துடும். 

சென்னையிலிருந்து திருவாரூர் சென்றபோது, எல்லாவற்றையும் கொண்டு வந்துட்டேன். பின் பக்கம் வராண்டா போன்ற இடத்தில், மழை கொட்டாத இடத்தில் பாதுகாப்பாக வைத்திருந்தேன். 

 போன வாரத்தில், பக்கத்தில் எங்கேயோ நாய் குட்டிபோட, அதை தேடிக்கொண்டு தோட்டத்தின் பின் பக்கத்தில் வந்து தேடிய 3-4 பசங்க கண்ணில் இந்த காக்டஸ் பட்டுவிட்டது. 

ஆசையை அடக்கமுடியாமல், நேர்மையாக முன் பக்கம் கேட்டில் வந்து நின்று, ' ஆண்ட்டி, அந்த காக்டஸ் எங்களுக்கு கொடுக்கறீங்களா?' ன்னு கேட்டானுன்க.. உங்களுக்கு ஏன்டா நான் தரனும்னு மைன்ட் வாய்ஸ்ல நினைச்சிக்கிட்டு, 'ஸாரிப்பா, அது சென்னையிலிருந்து கொண்டு வந்து வச்சியிருக்கேன், கொடுக்கற ஐடியா இல்ல" ன்னு சொல்லிட்டேன். முகமெல்லாம் வாடிப்போய்.. 'ஓக்கே'ன்னு போயிட்டானுங்க. 

ஒரு ஓசி நாய் குட்டிங்களயே ஒரு வாராம வீடு வீடா தேடறானுங்க.. இதை விட்டு வைப்பானுங்கன்னு எனக்கு தோணல. உடனே வூட்டுக்காருக்கிட்ட '.ப்பா கண்டிப்பா நாளைக்கு வந்து இத திருடுடிட்டு போயிடுவானுங்க.. நாம வேற இடத்தில் மாத்தி வச்சிடுவோம்னு' சொல்ல.. 

எப்பவும் போல,' சின்ன பசங்க எவ்ளோ டீசன்ட்டா வந்து கேட்டுட்டு போறானுங்க.. அவனுங்கள போய் சந்தேகப்படறியே' ன்னு திட்டு விழுந்தது. எனக்கு என்னவோ, அவனுங்கள நம்ப முடியல.... நானே மாடியில் உள்ள போர்ட்டிகோவிற்கு மாத்திட்டேன். அதில் அந்த குட்டி ரவுண்டு, தொட்டா கையோட வரும்னு சொன்னேனே, அதில் இரண்டு பிச்சுக்கிட்டு வந்தத, குட்டி கப்பில் நட்டு வச்சிருந்தேன். அது வளராமல் காய்ந்து போய் இருந்தது, நானும் மனம் தளராமல் தண்ணீர் விட்டுக்கிட்டு இருந்தேன். அதையும், கற்றாழையும் மட்டும் அங்கேயே வைத்துவிட்டேன். 

அடுத்தநாள் மாலை, சமையலறையில் வேலையாக இருக்க, இவனுங்க சத்தம் கேட்டது. தோட்டத்தின் பின்பக்கம் செல்வதும் தெரிந்தது. குடுகுடுன்னு ஓடி பின்னாடி ரூம் ஜன்னல் வழியாக கவனித்தேன். 'எங்கடா காணோம்'னு கிட்ட வந்தவனுங்க, அந்த காய்ந்த காக்டஸ் சில் ஒன்னை நைசா கிள்ளி எடுத்து, எடுத்ததே தெரியாத மாதிரி உள்ளங்கைய வச்சிக்கிட்டு போயிட்டானுங்க. 


வூட்டுக்கார் ஆபிஸ் விட்டு வந்ததும் சொன்னேன். ஆயிரம் வேலையில் என்னோட புலம்பலெல்லாம் அவர் காதில் எப்ப விழுந்திருக்கு... இல்ல எப்ப நாம சொல்றதை மதிச்சி கேட்டு இருக்காங்க..' ஓ..'னு ஒரு பதில் சொல்லிட்டு அவர் வேலைய பாக்க போயிட்டாரு.. காய்ந்ததை எடுத்தாலும் எனக்கு மனசு கேட்கல.. அதையும் தூக்கிட்டு வந்து உள்ள வச்சிட்டேன். திருட்டு பயபுள்ளைங்க... கம்ளைன்ட் செய்லாம்னு நினைச்சி.. பின்ன நாம மாங்கா அடிச்சது.. ன்னு நம்மோட சின்ன வயசு கேவலங்கள் எல்லாம் ஞாபகத்துக்கு வர.. சரி தொலையட்டும்னு விட்டுட்டேன்.  

பீட்டர் தாத்ஸ்:“I think that the best thing we can do for our children is to allow them to do things for themselves, allow them to be strong, allow them to experience life on their own terms, allow them to take the subway... let them be better people, let them believe more in themselves.” ― C. JoyBell C. 

Picture courtesy - Thank-you Google.

மயக்கம்..

மயக்கம்' என்னுடனேயே பலவருடங்களாக தொடர்ந்து பயணம் செய்து வருகிறது. எல்லாவிதமான மயக்கமும் அத்துபடி. முதல் மயக்கமே எனக்கு பசி மயக்கமாக இருந்ததால் இன்றளவும் அதை மறக்க முடியவில்லை. சென்னை பல்கலைகழகம் அருகில் நடை பாதையில் நடந்து கொண்டு இருக்கும் போது விழுந்தேன்.தொடர்ந்து சாப்பிடாமல் இருந்தால் மயக்கம் வரும் என்பதை அறிந்துக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்ததுன்னு நினைச்சிக்கலாம். :)

பிறகு இதே போன்று ஒரு முறை திநகர் ரங்கநாதன் தெருவில் மயக்கம் வர, விழுந்து மானம் போகாமலிருக்க, ஓடிச்சென்று ஒரு கடை வாசலில் உட்கார்ந்துக்கொண்டேன். எப்போது தெளிந்ததோ, நானாகவே எழுந்து வந்துவிட்டேன். மயக்கம்'  இரண்டாவது முறையே பழகிவிட்டது..

அடுத்து, உடல் சார்ந்த மயக்கங்கள். மாதாந்திர தேதிகளில் முதல் இரண்டு நாளில் ஏதோ ஒரு நாளில் கண்டிப்பாக மயக்கம் அடித்து விழுவேன். இரத்த சோகையே இதற்குப்பெரிய காரணம். இது தெரிந்ததால், பலவாறு என்னை பாதுக்காப்பாக வைத்துக்கொள்வேன் என்றாலும், சில நேரம் விழுந்து விடுவது உண்டு. அதிகமான மன உளைச்சலோடு அலுவலகம் சென்று, எனையறியாமல் மயக்கம் அடித்து விழுந்து, கூட்டம் கூடி,அது அலுவலக முதல்வர் வரை சென்று பெரிய விஷயமானது. அலுவலகத்தில் விழுந்த இடம் அப்படி !


இது தவிர்த்து, மருத்துவமனை மயக்க மருந்து கொடுக்கும் போது வரும் மயக்கம். கை நரம்பில் ஊசிப்போடும் போது, 1, 2 சொல்ல சொல்லுவார்கள். 4-5 வரை எண்ணியிருந்தால் அதுவே அதிகம் என்று நினைக்கிறேன். அவ்வளவு தான் தெரியும், சுற்றி இருப்பது எதும் தெரியாது,  ஏதோ சத்தங்கள் மட்டும் மிக லேசாக கேட்கும், மிக அடர்த்தியான அடர் ஆரஞ்சு நிறம் நிரம்பிய ஒரு பெரிய குழாய் அல்லது அது போன்ற ஏதோ ஒன்றில் அதி வேகமாக நுழைந்து 300-400கிமீ வேகத்தில் சென்றுக்கொண்டே இருப்பது போல இருக்கும்.. எவ்வளவு நேரம் என்று தெரியாது, ஆரஞ்சு நிறம் தெரியும் வரை பார்த்துக்கொண்டிருப்பேன், வேகமாக செல்வதை உணர்வேன்..பிறகு அதும் காணாமல் போய் ஆழ்ந்த நித்திரைக்கு செல்வேன் என்று நினைக்கிறேன். ..அப்படி ஒரு நாளில்.......

******

ஆப்ரேஷன் தியேட்டரிலிருந்து அறைக்கு வந்துவிட்டதாக நினைவு. படிக்கையில் கிடத்துகிறார்கள். போர்வையால் என் உடல் தெரியாமல் போர்த்தி விடுகிறார்கள். யாரெனத்தெரியவில்லை. நேரம் செல்கிறது... (செல்வதாக நினைத்துக்கொள்கிறேன்).
 
"கவிதா காலை தூக்கி வைங்க..." செய்தேனா என்று தெரியவில்லை. அவர்களாக என் காலை தூக்குகிறார்கள், என் கால்கள் தான் ஆனால் எனக்கு ஏதும் தெரியவில்லை. கால்களை நீட்டிவிடுகிறார்கள்... என்ன செய்தார்கள் என தெரியவில்லை. கண்ணை திறக்கமுடியவில்லை. வயிற்றை தடவ முயற்சித்து கையை தூக்குகிறேன்.. கை என் சொல் பேச்சிக்கேளாமல் 'தொப்'பென்று கீழே விழுகிறது.

"ச்சும்மா இரும்மா.. கைய எல்லாம் தூக்காத என்ன வேணும் உனக்கு....

" ............. ட்ரஸ்.........."

"போட்டுத்தான் இருக்கு........ பேசாம தூங்கு...." போர்வை சரிசெய்கிறார்....

 கண் விழிக்க முயற்சித்துத் தோற்கிறேன். நினைவுகளிலும் தெளிவில்லை.

"தண்ணி....." நடப்பவற்றை உணர்ந்துக்கொள்கிறேன். பாட்டிலில் நேராக என் வாயில் ஊற்ற முயன்று... எடுத்துவிடுகிறார். . சற்று இடைவெளி.......... இப்போது பாட்டில் மூடி என் உதட்டை தொடுகிறது. வாயைத்திறக்க முயற்சி செய்கிறேன். வாயில் பழச்சாறு ஊற்றப்படுகிறது. இரண்டு முறை வாயை திறந்திருப்பேன்..

"போ.....து...... ..........எ..... குழந்த....."

"வந்துடுவான்...சொல்லி இருக்கேன்...." வாயின் ஓரத்தில் வழிந்த பழச்சாறு துடைக்கப்பட்டது. அதற்கு மேல் நினைவில்லை... ... திரும்ப எவ்வளவு நேரத்தில் எனக்கு நினைவு திரும்பியது என்று தெரியவில்லை. உடனேவாகக்கூட இருக்கலாம்.. நினைவு வரும்போதும், வெளி சத்தம் கேட்கிறது, என்னால் கண்களை திறக்க முடியவில்லை.....

 "என் குழந்த ........"

".. ..வந்துட்டே இருக்கான்... ." ...

மிதப்பது போன்ற உணர்வு..... வாய் மட்டும் பேசுவதை நிறுத்தவில்லை, கண் விழிக்காமாலேயே.............. "சாப்...டீங்க.......ளா..?

"இன்னும் இல்ல.."

"அவன் வந்தா........................................... வாங்கித்தர............................................ சொல்லுங்.......................................................... .என்ன தனியா விடாதீங்க............................ .."

 ".. போகலம்மா... தூங்கு...முடியாம பேசாத.." ..

.இன்னமும் கண்ணை திறக்க முடியவில்லை, மறுபடியும்... ஆழ்ந்த உறக்கம்... நேரம் செல்கிறது....நினைவு வரும் போது, நேரம் சென்றதாக நினைக்கிறேன்... என் குழந்தையின் குரல் கேட்கிறது... கண் திறந்து பார்க்க முடியவில்லை....ஆனால் பார்க்க வேண்டுமென நினைக்கிறேன்..

 "ம்ம்மா....." ..................................அம்ம்மாஆ............" ...............................

 "ஏன்ப்பா கண்ணைத்தொறக்க மாட்டறாங்க... ? ............ கூப்டாங்கன்னு சொன்னீங்க... ?" "

அவளுக்கு மயக்கம் இன்னும் தெளியலடா..... நடுநடுவுல முழிக்கிறா.. உன்னைத்தான் கேக்கறா........"

அம்ம்மாஆ............"

அம்ம்ம்மாஆ............................."

"ஏய்..............." .................................... "

ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்.....நோயாளி... ...................... "

முயன்றும் கண்களை திறக்க முடியவில்லை......................"..ம்ம்......... சாப்டியா...?" நான் பதில் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை.

 "அப்பா நான் கிளம்பறேன்.. கண்ணைக்கூட தொறக்க முடியாம கிடக்கறாங்க..ஏன்ப்பா ..???


 "மயக்க ஊசிப்போட்டு இருக்காங்கடா.. மயக்கம் இன்னும் தெளியல... "

"வலி சரியாப்போச்சாப்பா.. .. இனிமே அழமாட்டாங்க இல்லப்பா..."


."ஆமா. ... வலி இனிமே இருக்காதுன்னு தான் நினைக்கிறேன்.. . .கண்ணு முழிச்சி அவளே சொன்னாத்தான் உண்டு.... .."

********

 விழிக்கிறேன்.. இன்னமும் மயக்கம் முழுமையாக தெளியவில்லை. தள்ளாட்டம் இருந்தது.

"சாப்பிட்டீங்களா?"

"மணி 4.30 ஆச்சிடி.. சாப்பிடாம இருப்பேனா? உன்னை மாதிரி நினைச்சியா என்னை? டாக்டரை கூப்பிடவா.. நடப்பியா... போலாமா? நீ எழுந்துட்டா போலாம்னு சொன்னாங்க...

"பாத்ரூம் போகனும்ப்பா... . ."

"வா.... "

"நீங்க வேணாம் சிஸ்டர் கூப்பிடுங்களேன்.. "

"வா வா நானே வரேன்.. " கைத்தாங்களாக நடக்கிறேன்.. பாத்ரூம் சென்று...

"நானே போறேன்.. நீங்க வேணாம்.. "

"தள்ளாடற விழுந்துடுவ.. நான் வரேன்.."

"ம்ம்ம்..இல்ல வேணாம்ப்பா..... விழமாட்டேன்.. பிடிச்சிக்கிறேன்"

"கதவை மூடாத.." "சரி.. " திரும்ப வெளியில் வரும் வரை கதவோரம் நிற்கிறார்.

"போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! வலிக்குதுப்பா... .நவீனை பாக்கனும் ! "

"ஏண்டி உனக்கே ஓவரா இல்ல. .காலையில தானே வந்தே. .அதுக்குள்ள என்ன ஆயிரம் வாட்டி அவனை பாக்கனும் சொல்ற... "

 "போலாம்ப்பா.. இங்க வேணாம்.. ! "

 "சரி சரி.. போலாம். .இரு டாக்டரை பார்த்துட்டு வரேன்.. "

தனியே பேசியபடி செல்கிறார். "மயக்கமா இருந்தாலும் விடாம பேசறா.. முழிச்சாலும் பேசிக்கிட்டே இருக்கா..... எப்பத்தான் வாய மூடுவாளோ தெரியல.... :( "

 (அவ்ளோவா பேசிட்டேன்.. ????! )
 
Picture Courtesy : Thx Google.

அணில் குட்டி அனிதா :
எல்லாஞ்சரி.. இது எப்ப நடந்தது.. இப்ப பதிவிடறீங்க? 
 
பீட்டர் தாத்ஸ் : When I faint, I feel guilty & Shy.   But my husband besides always to give his hand.