திருவாரூரிலிருந்து குடவாசல் தாலுகாவில் ஒரு சின்ன கிராமம் எண்கண், இங்கே மிக பிரபலமான எண்கண் முருகன் கோயில் அமைந்துள்ளது. இது சதிருவாரூர் பெரியநாயகி உடனுறையும் பிரம்மபுரீஸ்வரர் எழுந்தருளியுள்ள சிவன் கோயில், இதில் முருகனுக்கு தனிசிறப்புண்டு, தவிர முருகன் கோயில் என்றே சொல்லப்பட்டு வருகிறது.இங்கு முருகன் சுப்ரமணியசுவாமியாக அருள் பாலிக்கிறார்.

மிக சிறப்பாக கட்டப்பட்டிருக்கும் இக்கோயிலின் கோபுரங்களில் உள்ள சிற்பங்கள் என் கவனத்தை கவர்ந்தன.  பெருமாளின் சில அவதாரங்களை பார்க்கமுடிந்தது. கிருஷ்ணரின் லீலைகளிலை வடித்து, நிர்வாண பெண் சிற்பங்கள்  அவரைசுற்றி வடிக்கப்பட்டிருந்தன. காளியின் சில அவதாரங்களை காணமுடிந்தது. 

கோபுரங்களை புகைப்படம் பிடித்துக்கொண்டிருந்த போதே, கையும் களவுமாக பிடிபட்டேன். அர்ச்சகர் ஒருவர், 'அம்மா புகைப்படம் எடுக்காதீங்க, கோயிலை சுற்றி கேமரா இருக்கு, உங்களுக்கு ஒன்னும் பிரச்சனையில்லை, எங்கள் வேலைக்கு தான் பிரச்சனை' என்றார். சரி நம்மால் அவருக்கு ஏன் பிரச்சனையென பாதியில் நிறுத்திக்கொண்டேன். 

கோயிலின் வரலாறு -கூகுள் புண்ணியத்தில் தெரிந்துக்கொண்டேன். நீங்களும் அப்படியே தெரிந்துக்கொள்ளுங்கள், தகவலை இங்கே பகிர்வது சரியான்னு தெரியல.

இன்றிலிருந்து நவராத்திரி திருவிழா ஆரம்பிப்பதால், மாமி ஒருவர் அற்புதமாக உற்சவர் சிலைகள் வைக்கப்படும் பல்லக்குக்கு எதிரில், பச்சரிசி மாவில் இழைக்கோலம் வரைந்துக்கொண்டிருந்தார், அவரின் அனுமதியோடு புகைப்படம் எடுத்து அவரிடமும் காட்டினேன். சந்தோஷப்பட்டதோடு, கொஞ்சம் காய்ந்தால் இன்னும் பளீர்னு தெரியும்...னு லேசாக ஆதங்கப்பட்டுக்கொண்டார்.

அழகான சிற்பங்களைக்கொண்ட கோயில் பரமாரிப்பு போதவில்லை. மூலவரை வெகு தொலைவிலிருந்து பார்க்க நேரிட்டது, அருகே செல்ல நினைத்தாலும் முடியவில்லை, கும்மிருட்டு, பக்தர்கள் சென்றுவர அனுமதி இல்லை போலவே. கோயில் தேரின் பாகங்கள் தனித்தனியாக பிரித்துப்போடப்பட்டும் குவிந்து, பாழடைந்து கிடந்தது.  கோயிலுக்கு செல்லும் வழியிலும் சுற்றிலும் மதுபாட்டில்கள் கிடந்தன. அன்னதானம் செய்யும் மண்டபத்தின் கதவு சன்னல்கள் சிதலமடைந்து இருந்தது, ஏன் கோபுர சிற்பங்களும் பல உடைந்திருந்தன, உடைந்துக்கொண்டும் இருக்கின்றன. ஊர் மக்கள் ஒன்று கூடி அரசிடம் முறையிட்டு இதையெல்லாம் சரிசெய்யலாம்.  

கோயிலையும் சுற்றியிருக்கும் இடங்களையும் சரியாக பராமரிக்க தமிழக அறநிலையத்துறை தகுந்த நடவடிக்கை எடுத்தால் இப்படியான கோயில்களையும் அதன் அற்புதமான சிற்பங்கங்களும் மக்களுக்கு காணக்கிடைக்கும்.

கும்பகோணம்-திருவாரூர், தஞ்சாவூர்-திருவாரூர் வழியில் பயணம் செய்ய நேர்ந்தால், எண்கண் முருகனை தரிசித்துவிட்டு வாருங்கள்.

தரிசன நேரம்: காலை 6.30AM – 11.00 AM மாலை 4.00PM – 8.30 P.M