உனக்கு 20 எனக்கு 18


கவி  :  நீ வச்சியிருக்க மாதிரி ஹெட் ஃபோன் எனக்கும் வாங்கித்தரியா?

நவீன் : கழுதைக்கு எதுக்கு காரூ ? வாங்கி த்தர முடியாது !

கவி :  ஆங்ங்ங்ங்.......

************
கவி : (இரவு லைட் எல்லாம் நிறுத்திட்டு படுத்தப்பிறகு, ஒரு 10 நிமிஷம் கழித்து)  மொட்டு, இந்த ஜன்னல் பக்கமும்தான்  பின்னாடி வீடு கட்டியிருக்காங்க, இந்த ரூம் நல்லா வெளிச்சமாதான் இருக்கு, கிச்சன் பக்கம் கட்டற பில்டிங் ல அவங்க இதே மாதிரி லைட் கலர் பெயிண்ட் அடிச்சிட்டா கிச்சனும் வெளிச்சமா இருக்கும். வாட் யூ சே..?!! அம்மா சரியா யோசிக்கிறேனா?

நவீன் : தூங்கும் போது..... மூளையயும் தூங்கவச்சிட்டு தூங்கு...... அது தனியா வேல செய்துப்பாரு....

கவி : ஸ்ஸ்ஸ்.... 

***********
கவி :: அப்பா வரார்டா... அவர் சொன்ன வேலையெல்லாம் முடிச்சிட்டியா?

நவீன் : எப்ப வரார்..?

கவி : வெள்ளிக்கிழமை ராத்திரி இங்க இருப்பாரு...

நவீன் : அவர் வரத்துக்குள்ள முடிச்சிடுவேன்.

கவி : அடேய்..2 மாசமா இப்படியே சொல்ற..ஆனா வேல நடக்கல.. அவர் வந்து கேட்டா என்னடா செய்வேன்..?

நவீன் : ஹா ஹா ஹா...எப்படியும் என்னைக்கேக்க மாட்டார், உன்னைக்கேட்டு, உன்னதான் திட்டப்போறாரு...  நான் ஏன் கவலப்படனும்...

கவி :.. கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்....

************

கவி : (இரவு 9 மணி இருக்கும் ) இந்த நேரத்தில் எங்க கிளம்பர.. இப்ப அவரு ஏன்னு கேப்பாரு, தினம் இப்படிதான் போறானான்னு கேப்பாரு...

நவீன் :உன்னை பாத்துக்க, இன்னைக்கு 'கட்டப்பா இருக்கையில், இந்த பாகுபலி எதற்கு...?! '

கவி: ஸ்ப்பஆ..... ........... ! அவர் ரூமைவிட்டு வரத்துக்குள்ள கெளம்பித்தொல...

நவீன் : அந்த பயம் இருக்கட்டும் !! :)))))))

கவி; ..........
********

கவி; கேமரா சரியில்ல.. கொஞ்சம் சரி செய்து தாயேன்..

நவீன் ; எத்தன மாஸ்டர் வாங்கியிருக்க..

கவி; அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல 

நவீன் ; கேட்ட கேள்விக்கு பதில் சொல்லு...எத்தன மாஸ்டர்..
 

கவி :   .................

நவீன்;  MFT, MBA.....ஹ்ம்ம் ............இன்னொன்னு என்ன..

கவி;  Masters in Sociology

நவீன் ; ஆஹான்.. ஆனா நான் ஒரே ஒரு மாஸ்டர் தான்.. உன்னைவிட கம்மியாத்தான் படிச்சியிருக்கேன்..உன்னைவிட அறிவும் கம்மி.... நீயே சரிப்பண்ணிக்கோ...

கவி; போடாங்க...

**********
நவீன் ; குண்டாகிட்டே போறியே உனக்கு வெக்கமா இல்ல

கவி;  ம்ம் இருக்கு... ஆனா ஏதோ பிரச்சனை.. ஆப்ரேஷனுக்கு அப்புறம், உடம்பு நான் செய்யற எதுக்கும் ரெஸ்பான்ட் செய்ய மாட்டேங்குது... 

நவீன் ; இப்படி சொல்லிக்கிட்டே நல்லா குண்டாகிட்டேப்போ ..ஒரு நாள் வீல் சேர் தான்...

கவி ; ஞே !!! 

*******

நவீன் ; அம்மா.. கேமரா வ சரிப்பண்ணிட்டியா...

கவி ; ப்ப்ச்.. இல்ல..அதான் எப்படின்னு படிச்சிக்கிட்டு இருக்கேன்..

நவீன் ; ஹா ஹா ஹா ஹா...படிப்படி... நல்லாப் படி..

கவி;    7.5 ........ கிளம்புடா...

நவீன் : ஹா ஹா ஹா.. டென்ஷன் ஆவறப்போல..

கவி; ஸ்ஸ்ஸ்ஸ்.......

*********** 

கவி ; மதர்ஸ் டெ' க்கு அம்மாவ எங்க கூட்டிட்டு போகப்போற.......

நவீன் ;  திருவாரூர் ;)))))))))))

கவி ; அடேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..............  ;)))))))))) 

***************
பீட்டர் தாத்ஸ் ; The eternal love between man and woman really exists! It`s the love between mother and her son.

வட / தென்னிந்திய நதிகள் .....

பயணங்கள் ..குறுகியவையோ, நெடுந்தூரமோ அத்தனையும் அனுபவமே. செல்லும் இடம், உணவு, சுற்றியிருக்கும் மக்கள், மொழி, தோற்றம், பழக்க வழக்கங்கள், பேச்சு வழக்கு, உடைகள்,வாழ்க்கை முறை ...என அத்தனையும் தெரிந்துக்கொள்ள வேண்டியவையே..........

சென்ற வாரத்தில் திருச்சி நோக்கிய பயணத்தின் போது, தமிழ்நாடு மத்தியப் பல்கலைகழகத்தில், புவியியல் பிரிவில் தலைமை பேராசிரியராக பணிபுரியும்,  டாக்டர்.சுலோசனா' வும் உடன் வந்திருந்தார். அன்று பல்கலைக்கழகத்தில் நடந்த 'திருவாரூர்' குறித்த ஒரு வினாவிடை நிகழ்ச்சியில் பங்குக்கொண்டதையும், அதில் கேட்கப்பட்ட சுவாரசியமான கேள்விகள் (விரைவில் இணைக்கிறேன்)பற்றியும் பகிர்ந்தவாரே வந்தார்.

கேள்விகள், திருவாரூர் தியாகராஜர் கோயில் சார்ந்தவைகளாகவே இருந்தன. அநேகமான கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை.  எனக்கு பொது அறிவு இல்லையென்றே சொல்லலாம். ;) தெரியாத பல விசயங்களை தெரிந்துக்கொண்டேன்.

அவர் புவியியல் பேராசிரியர் என்பதால், கங்கை நதியைப் பற்றி கேட்டேன். மேற்கு வங்கம் முழுக்க, கங்கையின் கிளை நதியான ஹூங்லி நதி பாய்கிறது, இந்த நதியைப்பற்றி, பொறாமையில் பொங்கி பல பதிவுகள் எழுதியிருக்கிறேன். என் கண்ணுக்குள் நின்றுவிட்ட இந்நதியை ப்பற்றி பேச ஒருவர் கிடைத்தால் விடுவேனா?

முதலில் கேட்டது, 365 நாளும் வற்றாமல் ஓடி, கடலில் கலந்து, நீரெல்லாம் வீணாகிறதே, அதை அப்படியே வளைத்து தென்னிந்தியாவிற்கு கொண்டு வர எத்தனை ஆண்டுகள் ஆகும்.? 
...  அதற்கு அவர் சொன்ன பதிலை என்னால் நம்பவே முடியவில்லை. 'நமக்கிருக்கும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 4-5 ஆண்டுகளுக்குள் நதிகளை இணைக்கமுடியும்' என்றார். 'அட... 4-5 ஆண்டுகள் தானா?'

'ஆமாம் அவ்ளோ  தான் ஆகும். ஆனால் ஒவ்வொரு மாநிலத்தைக்கடக்கும் போதும் அவர்களின் அனுமதித்தவிர்த்து, அந்த மாநிலத்தின் சட்டத்திட்டங்கள் முதற்கொண்டு,நில ஆக்ரமிப்பு, அது சார்ந்த பிரச்சனைகள் என பல நிலைகளை த்தாண்ட வேண்டியுள்ளது. அதனால் காலதாமதம் ஆகத்தான் செய்யும். இதன் நடுவில் மத்திய மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், முதலிருந்து காய் நகர்ந்தும்படியாக ஆகிவிடும். அங்கங்கே கோப்புகளும், வேலையும் தேங்கிவிடும்,நின்று விடும் வாய்ப்புகளும் அதிகம்'', என தேவையான தொழில்நுட்ப வசதி இருந்தாலும், இந்தமாதிரியான  திட்டப்பணிகளை குறிப்பிட்ட காலத்தில் முடிக்க முடியாமல் போவதற்கான பல்வேறு காரணங்களை பேசிக்கொண்டு வந்தோம்.

இந்தியாவை ப்பொறுத்த வரையில், அரசியலும், ஊழலும் ஒன்றோடு ஒன்று கைக்கோர்த்து ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. தமிழகத்தின் இன்றைய நிலையைப்பற்றி சொல்லவே வேண்டியதேயில்லை, இதில் நதிநீர் இணைப்பெல்லாம் நமக்கு நிரந்தரக்கனவே.. !

அடுத்து, கங்கை ஆற்றின் நீர் வரத்துப்பற்றியும், மண்ணின் தன்மைப்பற்றியும் சொன்ன போது, அது சார்ந்த தகவல்களை தந்தார்.

இமயமலையிலிருந்து தொடர்ந்து உருகும் பனியால், கங்கை ஆண்டு முழுதும் வற்றாமல் ஓடுகிறது, அதே சமயம்,நீரின் வேகம் என்பது சமவெளியை அடைந்தவுடன் மிதமாகவே இருக்கிறது. சமவெளியில், நீரின் வேகம் குறைவாக இருப்பதால், நதிநீர் இணைப்பு செய்யும் போது, தென்னிந்தியா வரை நதியைக்கொண்டு வர அதற்குத்தகுந்தார் போல ஆழமான/சரிவான பாதையை ஏற்படுத்த வேண்டியிருக்கும், மேற்கு வங்கத்தில், ஆற்றின் வேகத்தைப்பார்த்து, திருப்பி விட்டால்........ ஆவேசமாக அடித்துக்கொண்டு  வந்துவிடும்  என்று நான் நினைத்தது தவறு எனப் புரிந்தது

மண்ணின் தன்மைப்பற்றியும் அது சார்ந்த தொழில்கள் பற்றி பேசும் போது,  இமயத்திலிருந்து தொடங்கும் போது மலையிலிருந்து கற்கலாக உருண்டு வர தொடங்கி, தூரம் செல்ல செல்ல கற்கல் உடைந்து சின்ன சின்ன கூழாங்கற்கலாக மாறுவதோடு, சமவெளியில் வரும் போது மெல்லிய மணலாக மாறி, கங்கை பாயும் நிலவெளிகளிலும் நிலத்தடி மண்ணின் தன்மையும் அதற்கு தகுந்தார் போல மாறிவிட்டது. அதே சமயம் , நம்மூர் ஆறுகள் மழையை சார்ந்து இருப்பதால்,  ஆற்று மணலின் தன்மை வேறுவிதமாக உள்ளதென  வட/ தென்னிந்திய ஆற்று மணல்களின் வித்தியாசங்களை விளக்கி சொன்னார்.

ஆண்டு முழுதும் நீர்வரத்து இருக்க வாய்ப்பில்லாமலும் , தொடர் காடுகளின் அழிப்பின் காரணமாக, மழை வரத்து இல்லாமல், நம் ஆறுகள் வரண்டு, முல் செடிகள் மண்டி வளரும் அவல நிலைக்கு தள்ளப் பட்டிருக்கின்றன.

இமயம் கண்டிப்பாக இந்தியாவின் பொக்கிஷமே... காவேரி'க்காக நாம் போராடிக்கொண்டிருக்கும் இந்நேரத்தில்,  வடக்கிழக்கு மாநிலங்களில் வற்றாமல் ஓடி, தண்ணீருக்காக கத்தி கெஞ்சி கூச்சலிட்டு போராட்டம் செய்யும் மோசமான நிலையில் மக்களை வைக்காமல், கண்ணுக்கு எட்டியதூரம் பரந்து விரிந்து சோர்வில்லாமல் பாயும் கங்கை நதியை நினைத்துப்பார்த்து வணங்காமல் __/\__ இருக்க முடியவில்லை.....

அணில் குட்டி அனிதா ; ஒரு இடத்துக்குப் போனமா வந்தமான்னு இல்லாம... தொறந்த வாய மூடாம, அடுத்தவங்க காதுல இரத்தம் வரளவுக்கு பேசி..... வீட்டுக்கு வந்து வூட்டுக்கார்.. அந்த மூடாத வாயப்பத்தி கேட்டு கழுவி கழுவி ஊத்தினத தொடச்சிவிட்டுட்டு....  பதிவு எழுதியிருக்காங்களே..... கிர்ர்ர்ர்...இவங்கள...

பீட்டர் தாத்ஸ் ;

மழையும் நானும்..

மழையை எதிர்நோக்கா தினம்
உடல் தகிக்கும் வெம்மை
வியர்வையில் உடை ஒட்டிக்கொண்ட எரிச்சல்

எங்கிருந்தோ அடர்ந்த ஒரிருள்
அன்னாந்துப்பார்த்தன கண்கள்
மெது மெதுவாய் நெருங்கியது
ஜோடி கண்கள் பல கடந்து
என் கண்களையும் சந்திக்கையில்
கொட்ட ஆரம்பித்தது.;

அது அசாதாரணம் ;ஆவேசம்
சன்னல் வழியே வேகச்சாரல் ;வீட்டினுள் ஓடை
காது கிழியும் இடியோசை
ஆவேசத்தை எதிர்க்கொள்ள ஏனோ ஆசை
இடிப்பாயுமென மெல்லிய நடுக்கம்
பாயுட்டுமே அதுவே முடிவென்றால்..

அண்ணாந்து வானம் பார்த்தேன்.
கண்களில் நேரே விழுந்து வழிந்தது
ஒரு கண் விரித்து ஒரு கண் சிமிட்டி
கண்ணடித்து ரசித்து புன்னகித்தேன்
உணர்ச்சிவசப்பட்ட மழையோ
உதடுகள் நனைத்து அணைத்தது
நாவால் சுழட்டி ருசிப்பார்த்தேன்
பின்னல் அவிழ்த்து தலை உதரினேன்
வேகத்தில் துளிகள் கோடாகி தொடர்ந்ததில் 
விரைந்து நனைந்தேன்
இடியின் ஓசையில் பூமி நடங்கியது
சிந்தையில் பழமும் மொட்டும் வந்து மறைந்தினர்
சுவரோரம் சாய்ந்து மொத்தமாய் விழுந்த
தண்ணீரில் முகம் தூக்கி சிலிர்த்தேன்
மணித்துளிகள் கரைந்தன

அங்கே
மழையும் நானும் மட்டும்.. !! 



Related post  : http://kavithavinpaarvaiyil.blogspot.in/2010/07/blog-post_19.html


Photo Courtesy : Thx Google 

என்னாலேயே முடியல..

என் கணவர், என்னுடைய கனவுகளை எழுதிவைக்க சொன்னக்காரணமே, என் கனவுகள் கதைகளாக இருப்பது மட்டுமல்ல, அதை அவரிடம் சொல்லும் விதமே!.

ஒரு தயாரிப்பாளரிடம், அறிமுக இயக்குனர் கதை சொல்வதைப்போல இருக்குமென நினைக்கிறேன். அவர் எதிரில், அந்தக்கனவு நிஜத்தில் நடந்தால் எப்படியிருக்குமோ அப்படி சொல்லுவேன். பின்னணி இசை மட்டுமே இருக்காது.

ஓவராக கற்பனை செய்துக்கொள்வதில் என்னை வெல்ல என்னாலேயே முடியாதுதான். இருந்தாலும், நேற்று வந்த கனவை நினைத்து சிரிப்பதா அழுவதா.. இல்லை ஏன் இப்படியெல்லாம் எனக்கு கனவு வந்து தொலைக்குதுன்னு நினைச்சி ஆச்சரியப்படுவதான்னு தெரியல...

தினப்படி எத்தனையோ நிகழ்வுகள் நடக்குது..

ஓவியா சென்றதிலிருந்து பிக்பாஸ் பாதிப்பு இல்லை.... 

அதிமுக வால் பிரேக்கிங் நியூஸ் அடிக்கடி வந்து அந்த சத்தமும் பழகிப்போச்சி

ரஜினி அரசியல் - பெருசா யோசிக்கல..

கமல் டிவிட்டர் - யோசிச்சாலும் ஒன்னும் புரியப்போறதில்ல..

என் சொந்தப்பிரச்சனைகள்.. அது ஏகத்துக்கும் இருக்கு...

என் கணவரின் அலுவலகப்பிரச்சனை, அதை அவர் எப்படிக்கடக்கப்போகிறார் என்ற கவலை...

வெளி மாநிலத்தில் இருப்பதால், இங்கு சந்திக்கும் மனிதர்கள்..னு

என்னென்னமோ தினப்படி நடக்குது.. இதுல..நேற்று எனக்கு வந்த கனவு இருக்கே.... படிங்க..நீங்களும் கடுப்பாக சான்ஸ் இருக்கு...

காலையில் எழுந்துவரும் போது கனவு நினைவில் இல்லைதான். ஆனால் பல் விளக்கும் போது நினைவுக்கு வர, மறந்துவிடுவேனோன்னு , பிரஷ்ஷை வாயிலிருந்து எடுத்துவிட்டு அவரை அழைத்து கனவை சொன்னேன்.

"இன்னைக்கு எனக்கு ரொம்ப ஸ்ட்ரேன்ஜ்ஜா ஒரு கனவு வந்துச்சிப்பா..."

புதுசா என்ன..ங்கற மாதிரி லுக்கு விட்டுட்டு என் முகத்தையே கவனிச்சார்..

"காடை இருக்கில்ல..."

"ஆங்...??????"

"காடை ப்பா காடை... பறவை..கோழிமாதிரி..நாமக்கூட மூனார்ல காடை முட்டை ஆம்லெட் சாப்பிட்டோமே..?! அந்த காடை..."

"ம்ம்ம்..சொல்லு.. " னு சொன்னக்குரல் கடுப்பாக இருந்தது.


"அந்த காடையை பிடிச்சி, பால் கறந்து.. அதை ஒரு ஃபில்டரில் வடிகட்டி உங்களுக்கு தரேன்" ப்பா..

ஞே.... அவர்ட்ட ரியேக்ஷனே இல்ல..என்ன சொல்றதுன்னு தெரியாம.. என்னையே ப்பாக்கறாரு..  [கனவை சொல்ல முன்னமே கடுப்பா?  யார்கிட்ட??? ]

ரியாக்ஷன் செய்யமுடியாம திகைச்சிப்போய் நிக்கறவரை பாத்து சிரிப்பு வந்தாலும், வெளியேக்காட்டிக்காம... 

"எப்படிப்பா காடை க்கிட்ட பால் கறக்க முடியும்? எனக்கு ஏம்ப்பா இப்படியெல்லாம் கனவு வருது..?"

"உனக்கு இப்படியெல்லாம் கனவு வராட்டிதான் பிரச்சனை..காடை என்ன காடை.. எரும்பை ப்பிடிச்சிக்கூட நீ பால் கறப்ப.. போடி போ.. போய் பல்ல வெளக்கு...."

"ஆவ்வ்வ்.... அப்ப நெக்ஸ்ட் பால் எரும்புக்கிட்டவா..? " ன்னு நினைச்சிக்கிட்டு அவர் மேற்கொண்டு திட்டும்முன்ன எஸ் ஆகிட்டேன். :

கனவை சொல்லியாச்சி...இதோ எழுதியும் வச்சாச்சி. ஆனா என்னாலேயே இந்த கனவை இப்பவரை ஜீரணிக்க முடியல.. ஏன் எனக்கு மட்டும் இப்படியெல்லாம் கனவு வருதுன்னு தெரியமாட்டேங்குது..

நேத்திக்கோ..அதுக்கு முன்னமோ... காடையோ..கோழியோ மற்ற பறவைகளைப்பற்றியோ பேசல.. பார்க்கல.. காடை ஆம்லெட் சாப்பிட்டுக்கூட ஒரு 4-5 வருசமிருக்கும்..

என்னமோ போங்க.. என்னாலேயே முடியல..

அணில் குட்டி : பாருங்க..கொஞ்ச கொஞ்சமா சந்தரமுகியா மாறிக்கிட்டு இருக்க கவிதா வை பாருங்க.!!!.

பீட்டர் தாத்ஸ் : I'm interested in the dream and subconscious mind, the peculiar dream-like quality of our lives, sometime nightmare quality of our lives. - Anthony Hopkins

வெங்காயம் நறுக்கிய "கத்தி"

எலிப்டிக்கலை ((elliptical) மிதித்தபடி, அவளுக்கு மட்டும் கேட்கும் குரலில்  ..."என்னாச்சு....?"

சலிப்பும் எரிச்சலுமாய்.. "கோச்சிக்கிட்டு அவங்க அம்மா வீட்டுக்கு போய்ட்டா..."
"...................................." 

எப்படி ரியாக்ட் செய்யறதுன்னு தெரியல....  சின்ன சின்ன விசயத்தை பெருசாக்கி.. ...... ச்சே...!! உப்பு பொறாத விசயமெல்லாம் மனுசனுக்கு எவ்வளவு மன உளைச்சலை தருது???.... அதும் பெண்ணுக்குள் தான் எத்தனை "multiple personality?". அம்மா' வாக அதீத அன்பை பொழியும் அவளே,  மருமகளாக/மாமியாராக/நாத்தனாராக .."வில்லி" என பெயரெடுப்பதும்..? அவளைப்படைத்த ஆண்டவனுக்கே அவளை புரிந்துக்கொள்ள முடியுமான்னு தெரியல.

எலிப்ட்டிகல்ஸ் ஐ விட்டு இறங்கி தரையில் செய்ய வேண்டிய
உடற்பயிற்சிகளை செய்ய ஆரம்பித்தேன். அவளும் நேரம் முடிந்து பக்கத்தில் வந்து நின்றாள்.

"எத்தனை நாள் தான் போட்டும் போட்டும்னு சும்மா இருக்கறது? நானும் பலமுறை இப்படி செய்யாதீங்கன்னு அமைதியா பொறுமையா சொல்லிப்பாத்துட்டேன்... திரும்ப திரும்ப அதையே செய்யறா....சுத்தமா ப்பிடிக்கல எனக்கு...."

"நீ அம்மாவை விட்டு சொல்ல சொல்லியிருக்கலாம்...."

"ம்க்கும்.....அடிக்கடி சொல்ற என்னையே மதிக்கல... இதுல அம்மாவையா மதிப்பா அவ? திமிர் பிடிச்சவ.... இவள எல்லாம் ஆரம்பத்திலேயே அடக்கி வைக்கனும்.. இல்லைனா... தலமேல ஏறி உக்காந்து மொளகா அரைச்சிடுவா.."

கல்யாணம் முடிஞ்சி 4 மாசம் கூட ஆகல. வீட்டுக்கு வந்த அண்ணி'யை இவளால சகிச்சிக்க முடியல... இவ கல்யாணம் செய்துக்கிட்டு போய் எப்படி இருக்கப்போறாளோ? ..............இதெல்லாம் மைன்ட் வாய்ஸ் தான்.. அவளிடம்..

"உனக்கு டாலரன்ஸ் ரொம்ப கம்மி அலர்."

"எத்தனை தரம் சொல்லிக்கொடுத்தாலும், தினம் செய்யற தப்பையே திரும்ப திரும்ப செய்தால் உனக்கும் டாலரன்ஸ் இருக்காது.."

"என்னோடா அம்மா, நான் ஆபிஸ் விட்டு வரத்துக்கு முன்ன எனக்கு ஈசியா இருக்கும்னு சப்பாத்திக்கு மாவு பிசைஞ்சி வைப்பாங்க. தினம் மாவு கீழக்கொட்டி இருக்கும், ஆபிஸ் விட்டு வர டென்ஷன்ல
அதப்பாத்தா..கத்துவேன்.... ஆனா அவங்களால முடிஞ்சது அவ்ளோதான்..  'போடி உனக்கு மாவு பெசஞ்சி தரதே பெரிய விசயம்னு" சொல்லிட்டு போயிட்டே இருப்பாங்க.. நான் கத்தறத காதுலக்கூட வாங்க மாட்டாங்க.."

..எனக்கு அம்மா.. அதனால இதைப்பெரிய விசயமா பேசறதில்ல... அதுவே மாமியாரா இருந்தா யோசிச்சிப்பாரு... என்னால கத்தவும் முடியாது.. கத்தினா..அவங்களும் தொடச்சிவிட்டுட்டு போகமாட்டாங்க.....அதான் வித்தியாசம்.. நாம தான் இடத்துக்கு ஆளுக்கு தகுந்தாப்ல போயிட்டே இருக்கனும்... சின்ன சின்ன விசயத்தை பெருசு படுத்தாம விட்டுட்டாவே..பாதி பிரச்சனையை வராது..

"வாஸ்தவம் தான்.. ஆனா சின்னதா இருந்தாலும் ஒவ்வொரு விசயமும் ஒவ்வொரு ரிசல்ட் தரும். ஒரு நாளைப்போல வெங்காயத்தை நறுக்கிட்டு கத்தியை கழுவாம வச்சிப்பாரு, எவ்ளோ நாத்தம் அடிக்கும் தெரியுமா? சமையல் ரூமே நாத்தம் அடிக்கும். கத்தியில் ஒருமாதிரி அழுக்குப்படிய
ஆரம்பிச்சுடும். அந்த கத்தியை வச்சி வேற என்ன நறுக்கினாலும் இந்த வெங்காய நாத்தம் அதிலேயும் வந்துடும்.  இதை அவக்கிட்ட பலமுறை சொல்லிட்டேன். ஆனா அவ எங்க கேட்டா.. ? அதான் நேத்து புடுச்சி வாங்கு வாங்குன்னு வாங்கிட்டேன்.. ! "

".... போக போக சரியாகிடும்ப்பா.. அவங்களுக்கு நீங்க செய்யறாப்ல செய்து பழக்கமிருக்காது. ..கொஞ்சம் டைம் குடு.."

"ம்க்கும் கொடுத்துட்டாலும்,...!!!. என் அண்ணனுக்கு தூபம் போட்டு , அம்மாவையும் என்னையும் தினம் எதாது காரணம் சொல்லி நோண்ட மட்டும் நல்லா தெரியுது.. இது தெரியலையா??..."

"...விடு.. திரும்ப வந்தா எப்படியோ இருக்கட்டும்னு இருக்க பாரு...சண்டை ப்போடாத.. உன்னைத்தான் குத்தம் சொல்லுவாங்க.."

"வந்தாப்பாக்கலாம்.. நீ வேணாப்பாரு, தனிக்குடித்தனம் அடிப்போட்டுட்டு அவங்க அம்மா அப்பா தான் வருவாங்க.. அவ எங்க வரப்போறா?

"..........................."

செய்திருக்குமா விஜய் டீவி? # Bigg Boss Tamil

ஓவியாவிடம் ஆரவ் பழகியவிதம் தவறே. வேணாம்னு நினைக்கறவன் தள்ளியிருக்கனும். இங்க இருக்கவரை டைம் பாஸ் னு தொட்டு பேசறதும், கேமரா இருக்கு தள்ளியிருன்னு ரகசியமாக அடிக்கடி சொல்வதும், ஸ்மோக் ரூம்மில் வேற மாதிரி பேசறதும் னு அவன் செய்தது எல்லாமே பொறுக்கித்தனம். ஏன்னா காயத்திரியிடம் முதல் முதலில் சொல்லும் போதே ஓவியா அவனை நிஜம்மாவே காதலிக்கறான்னு தெரிஞ்சி தான் சொன்னான்..

நாமிநேஷன் ஆகாம இருக்கனும்னா காயத்திரி & கோ விற்கு சொம்பு தூக்கனும் அதே சமயம் ஓவியாவிடம் நெருக்கமா இருக்கறது அவங்களுக்கு த்தெரியவும் கூடாதுன்னு திட்டமிட்டு அதை செயல்படுத்த ஓவியாவை மனதளவில் தயார்ப்படுத்த நினைத்தான். ஆனால் நம்ம ஓவியா தான் உண்மையாச்சே எப்படி சரின்னு சொல்லுவாங்க. சொன்னாலும்.. ஏன் அப்படி நடிக்கனும்னு அடுத்த நொடியே மாறிடுவாங்க.

இங்க தான் ஆரவ்'க்கு பிரச்சனை ஆரம்பிச்சுது. தள்ளிவிடறது, பேசாமல் போறது, அடுத்தவங்கக்கிட்ட "ஓவியா என் மேல வந்து விழறா"ன்னு சொல்லி, தனக்கு ஓவியாவை பிடிக்காதுன்னு வெளியில் இருக்க அவன் காதலிக்கும், உள்ள இருக்க மத்தவங்களுக்கும் "தான் நல்லவன்" னு புரிய வைப்பதில் ஆரம்பிச்சி டென்ஷனாவே இருந்தான்.

ஓவியா  "காதல் இல்லை" ன்னு ஆரவ் சொன்னதால், அந்தக் கோவத்தை  மற்றவர்களிடத்தில் காட்டினாங்க. அதற்குப்பிறகும் ஓவியா குழப்பமடையக்காரணம், ஆரவ் திரும்ப வந்து பேசறது தான். தவிர, இரவே, "நாளை நான் இருக்கமாட்டேன்னு " னு சொல்லி ஓவியாவை அதிகளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதும் அவனே. அதை நினைத்தே இரவு தூங்காமல் "மிஸ் பன்றேன்" னு சொல்லிட்டே இருந்தாங்க.

காலையில் காயத்திரி "ஆரவ் இருக்கான்"னு சொன்னதும், ஓவியா ஓரளவு நார்மல் ஆனாங்க. ஆனால், ஆரவ் திரும்பவும் மற்றவர்களால் நாமிநேட் செய்யப்பட்டதும், எப்பவும் போல இவ்ளோ நாடகம், திட்டம் போட்டும் நம்மை நாமிநேட் செய்துட்டாங்களேன்னு, ஓவியா இன்னமும் மன உளைச்சலில் இருக்காங்கன்னு புரியாமல், சுயநலமாக "இப்ப சந்தோஷமா"" ன்னு கேட்டு , ஓவியாவை இன்னமும் மன அழத்தத்திற்கு ஆளாக்கிவிட்டான். அவனிடம் பேச, ஓவியா படுக்கை அறைக்கு சென்ற போதும், "யாரோ இன்னைக்கு ரொம்ப சந்தோஷமா இருக்காங்க" ன்னு திரும்பவும் அப்படியே பேசி ஒவியாவை காயப்படுத்தவும் செய்தான்.

ஓவியா , உண்மையாக நேசிப்பதால், நம்மால் தான் இப்படியெல்லாம் ஆச்சோ? ...ஏன் திரும்பவும் நம்மக்கிட்ட சாதாரணமா பேசறான்..?  அவனுக்கு காதல் இருக்குமோங்கற சந்தேகம் அதிகமாகி அதனால் ஏற்பட்ட மன அழுத்தத்தால் மட்டுமே நீச்சல் குளத்தில் இறங்கி என்னவோ முயற்சி செய்தாங்க. அந்த ஆழத்தில் நீச்சல் தெரியாவிட்டாலும் சாகமுடியாது என்பதும் உள்ளே ப்போன கொஞ்ச நேரத்தில் ஒவியாவிற்கு தெரிந்திருக்கும்.

ஓவியா இப்படியிருக்க 90% ஆரவ் வும், 10% மட்டுமே மற்றவர்களும் காரணம்.ஓவியாவிற்கு, ஆரவ் ஓவியாவைப்பற்றி மற்றவர்களிடம் தவறாக பேசிய குறும்படத்தைக்காட்டியும்,வெளியில் மக்களின் ஆமோக ஆதரவையும், அன்பையும் காட்டியும் மனக்குழப்பத்தை எளிதாக ப்போக்கிட முடியும்.

செய்திருக்குமா விஜய் டீவி?

நிகழ்ச்சிக்காக அந்த பெண்ணின் மனதோடு விளையாடி, பைத்தியக்காரி பட்டத்தை விஜய் டீவி கொடுக்காது என்று நம்பலாமா? பரணியை அப்படி சொல்லிதான் அங்க இருக்கவங்க அனுப்பினாங்க.


பின்குறிப்பு : ஓவியா போயிடுவாங்கன்னு தெரிஞ்சவுடனே, ஆரவ் க்கு ஒரு நிம்மதியும், தான் அங்கு தொடர்ந்து இருக்கமுடியும் என்ற நம்பிக்கையும் வந்திருப்பது அப்பட்டமாக தெரிகிறது. இவன் அக்கறையோடு இல்ல சும்மாக்கூட பேசாமல் இருப்பது ஓவியாவிற்கு நல்லது. எப்படி பொய்க்காரி சூலி இப்ப அமைதியா தள்ளி இருக்காளோ அப்படி..

BiggBossTamil - ஒரு பார்வை

Animal Planet , Discovery & National Geographic channel களில் விலங்குகள், பறவைகள், ஊர்வன, கடல்வாழ் உயிரினங்களை 24 மணி நேரமும் கேமரா வைத்து நாம் கண்காணிப்பது போல, அவை மனிதர்களை கண்காணித்தால்?? அது தான் பிங்பாஸ் !!  முன்னதில், கலவி முதல் , குழந்தைப்பேறு & இத்தியாதிகளையும் பாரபட்சமின்றி, ஒளிவு மறைவின்றி படம்பிடிக்கிறார்கள். பின்னதில், மனிதனுக்கு வளர்ந்துவிட்ட அறிவு & நாகரீகம் காரணமாக  பதிவாக்கப்படவில்லை.

முதல் இரண்டு நாளில் எனக்குத்தோன்றிய எண்ணங்களை முதலில் பகிர்கிறேன். உலகநாயகனின் தகுதிக்கு (அறிவுசார்ந்து) ஏற்ற நிகழ்ச்சியில்லை, "சொல்வதெல்லாம் உண்மை" நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் "லக்ஷிமி ராமக்கிருஷ்ணன்" போன்ற தொகுப்பாளர் போதுமானது ,

அறிமுக நிகழ்ச்சியில், சினிமாவைப்போல நினைத்து பேச ஆரம்பித்தாரா எனத்தெரியவில்லை,  காதில் ரகசியமாக சொல்வதை உள்வாங்கி, அதை பார்வையாளர்கள் அறியாதவாறு தொகுத்து வழங்கமுடியாதது அப்பட்டமாக தெரிந்தது. எதையும் அதிக கவனத்தோடு செய்பவர்களுக்கு இதெல்லாம் பிரச்சனையே !!  ஆரம்ப நிகழ்ச்சி, கமலில் தொகுப்பில்- கொஞ்சம் சொதப்பலே.

அடுத்தவாரத்தில் உசாராகிவிட்டார். கலைஞானியாச்சே! கற்றும் கேட்டும், பயின்றும் அறிந்திருப்பார்,, சாதூர்யமான பேச்சைக்கொண்டு அனைவரையும் கவர்ந்தார். இருப்பினும், இந்த நிகழ்ச்சி கலைஞானிக்கு தேவைதானா என்ற கருத்தில் மாற்று இல்லை.
நிகழ்ச்சிக்கு போவோம்: மற்ற நிகழ்ச்சிகளை விட வித்தியாசமாக இருந்தாலும், வணிக ரீதியாக பணம் பார்க்க தேவையான அனைத்தும் உள்ளன.  அறிமுக நாளன்று, நடிகர் பரணி யை பார்த்தவுடனேயே விஜய் டீவி என்ன எதிர்ப்பார்க்கிறது எனப்புரிந்து போனது. பரணி அடிப்படையிலேயே சட்டென உணர்ச்சி வசப்படக்கூடியவர், கோபப்பட க்கூடியவர் அவரை சேர்த்தால், தினப்படி ஏதாது பிரச்சனைவரும்.

அதே சமயம், எல்லோரிடத்திலும் அன்போடும், அமைதியாகவும் பிரச்சனை ஏதுமில்லாமல் இருந்தாலும் அவரை நல்லவர் என, பிங்பாஸ் வீட்டில் தொடர்ந்து விஜய் டீவி அனுமதிக்கப் போவதில்லை. ஸ்ரீ & அனுயா சிறந்த உதாரணம்.. சண்டையிட்டு பிரச்சனை செய்துக்கொண்டே இருப்பவர் தான் இந்த நிகழ்ச்சிக்கு வேண்டும், அவங்க தான் மக்களை கவர்ந்திழுப்பார்கள். ஒவ்வொரு வாரம் வரும் "முன்னோட்ட' ங்களும் அதைத்தான் சொல்கின்றன. 

பரணி தன் இயல்பை மாற்றிக்கொண்டு அநியாயத்திற்கு அமைதியாகியிருக்கிறார். இது தனிப்பட்ட முறையில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும், பலத்தையும் கொடுக்கும் பிங்பாஸ் வெற்றிக்கு உதவாது. இதே கோட்டில் தான் வையாபுரி, ஆரவ், கனேஷ்,ரைசா வருகின்றனர். இவர்களாலும் யாருக்கும் பிரச்சனையில்லை, எந்தவித சூழலிலும் தன்னை வளைத்து நெளித்து சுருக்கி  சுமுகமாய் இருப்பவர்கள், சுவாரசியம் இல்லாதவர்கள் அதனால் வெளியேறுவார்கள் !

முதலில் வெளிவந்த, அனுயாவின் முதிர்ச்சி ஆச்சரியப்பட வைத்தது. தான் உண்டு தன் வேலையுண்டு என்றிருந்தாலும், எல்லோரைப்பற்றியும் ஓரளவு
சரியாகவே கணித்திருக்கிறார். அதற்கான வாய்ப்பை விஜய்டிவி வழங்கியது நல்ல விசயமே.

அறிமுக தினத்தன்று, ஜூலி, ஒரு தமிழ் பெண், ஜல்லிக்கட்டு போராளி எனத் தன்னைப்பற்றிய தகவலை (மட்டும்) சொல்லி, Fake identity யோடு உள்நுழைந்தார்.  தான் ஒரு ஆல்பம் பாட்டில் நடித்திருப்பதையும், தொகுப்பாளாராக ஒன்றிரண்டு நிகழ்ச்சியில் பங்கெடுத்ததையும்  மறைத்திருக்கிறார். இது தான் முதல்மேடை என்றும் பொய் சொல்லியிருக்கிறார். இவர் செவிலியராக வேலைசெய்தவர் என்பதையும் நம்பமுடியவில்லை. ரொம்பவே நாடகத்தன்மை, எங்கு,எந்த சூழலில் இருந்தாலும், எந்த கேமரா தன்னை 'கவர்' செய்கிறது என்பதை கவனித்து திறம்பட நடிக்கிறார்.  எரிச்சல் தரும் இவரை நிச்சயம் விஜய் டிவி அத்தனை எளிதில் அனுப்பிவிடாது. !

ஆர்த்தி வெற்றிப்பெற வேண்டுமென குறுக்குவழியில் மெனக்கெடுக்கிறார். காயத்திரி, சக்தி இருவரும் ஒரே மாதிரியான குணமுடையவர்கள். சக்தி யின் "பிங்பாஸ்" ஸ்க்ரிப்ட் செம!! குறைந்த நேரத்தில், மிகச்சிறப்பாக நடித்துக்காட்டப்பட்ட குறும்படம் ! சூப்பர் !!  இவர் இயக்குனரானால் நல்ல படங்கள் நமக்கு பார்க்கக்கிடைக்கும்.

இந்த வீட்டில் என்னை மிகவும் கவர்ந்தவர் ஓவியா. அவரே பிங்பாஸ் நிகழ்ச்சியில் வெல்வார், வெல்லவேண்டும் என நினைக்கிறேன்  ஹை லைட்ஸ் : கேமராவோடு பேசுவது, குலைக்கும் நாயைப்பற்றி பேசியது !! இவையெல்லாம் சட்டென வந்துவிடாது.  வெளிப்படையாக தெரியாவிட்டாலும் She is very determined. நிச்சயம் இவர் வெற்றிப்பெற வாய்ப்புள்ளது.

இவரைத்தவிர வெல்ல வாய்ப்பிருப்பவர்கள் நமிதா & கஞ்சாகருப்பு !! பார்ப்போம் !

கடைசியாக, என்னைச்சுற்றி இப்படி கேமரா வைக்கப்பட்டால்? -  ஆடை மேல் என் முழுகவனமும் இருக்கும். அனுயா, சொன்னது போல "என்னை கேமரா கவனிக்கிறது " என்ற பிரஞ்ஞை எப்போதும் இருக்கும்.  அதற்காக "ஆடை விசயத்தை" தவிர வேறெதிலும் கவனமாகவோ, பொய்யாகவோ இருக்கமாட்டேன். இருக்கவராது . ஓவர் ஆக்டிங் செய்யவும் வாய்ப்பிருக்கிறது. :))).தொடர்ந்து செய்யமுடியாது என்பதால், ஒன்றிரண்டு நாள் ஓவர் ஆக்டிங் செய்து ஓய்ந்து இயல்பாவேன் முதல் தலைவர் சிநேகன் போல ! குடும்பத்தைவிட்டும் இருப்பேனா என்பதும் சந்தேகமே !! Though its been involved a huge money etc.. குடும்பத்தைத் தாண்டி தான் எல்லாமும்.. !!

பொதுவாக, எனக்கு மனிதர்களின் பல முகங்களை, அவர்களுடன் பேசியபடியோ, பேசவிட்டு அமைதியாகவோ கவனிக்கப்பிடிக்கும். பிங்பாஸ் இப்போதைக்கு நல்ல பொழுதுப்போக்கு, தொடர்ந்து 100 நாளும் பார்ப்பேனா என்பதும் தெரியாது!!

எங்க வீட்டு சமையல் : சிக்கன் நூடுல்ஸ் / Chow Mein Chicken

தேவையான பொருட்கள் - இருவருக்கு தேவையான அளவு
 
நூடுலஸ் : 3/4 பாக்கெட் (படத்தில் இருப்பது போல, ப்ளைன் நூடுல்ஸ்)
எலும்பு நீக்கிய சிக்கன் : 300 கி

நெய் - 3 ஸ்பூன்
மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை
மிளகாய் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகு : 10
எண்ணெய் : தேவைக்கேற்ப
உப்பு : தேவைக்கேற்ப
கோஸ் : சின்ன கப் அளவு
கேரட் : 1
குடமிளகாய் - 1/2
வெங்காயம் - 2
பூண்டு - 8-10 பல்
இஞ்சி - ஒரு துண்டு

செய்முறை :
பெரிய பாத்திரத்தில் 3/4 பாகம் தண்ணிர் ஊற்றி, நன்கு கொதிவரும் போது நொறுக்காமல் நூடுல்ஸ் ஐ கொட்டி, 3-4 நிமிடம் கொதிக்க வைத்து, வெந்தவுடன், வடிகட்டி, உதிர்த்து உலர்த்தி வைக்கவும்.

காய்கறி எல்லாவற்றையும் மெல்லிய குச்சிகளாக, வத்திகுச்சி நீளத்திற்கு வெட்டி வைத்துக்கொள்ளவும், வெங்காயமும் நீட்டுவாட்டத்தில் வெட்டிக்கொள்ளவும்
சிக்கனை சுத்தம் செய்து சிறு துண்டுகளாக்கி, நெய் காயவைத்து, மஞ்சள் பொடி , 3 சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு வதக்கி, லேசாக தண்ணீர் தெளித்து குக்கரில் ஒரு விசிலில் வேகவைத்து எடுத்து தண்ணீரை வடிகட்டி வைத்துக்கொள்ளவும்.

வாணல் வைத்து எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய பூண்டு & இஞ்சியைப்போட்டு நன்கு வாசனை வருமளவு வதக்கவும், லேசாக சிவக்கும் போது, வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறி எல்லாவற்றையும் கொட்டி வதக்கவும். ஓரளவு வதங்கும் போது மிளகாய் தூள், மிளகை பொடித்து சேர்த்து நன்கு வதங்கியவுடன் சிக்கன், நூடுலஸ் ஐ கொட்டி , உப்பு சேர்த்து  3-4 நிமிடம் நன்கு கலந்து இறக்கவும். முட்டை சேர்க்க விரும்புவோர் நூடுல்ஸை கொட்டும் முன், முட்டையை உடைத்து ஊற்றி பொடிமாஸ் போல கிளரி, பின்பு நூடுல்ஸ் ஐ சேர்த்து இறக்கலாம்

நூடுல்ஸ் ஐ சேர்க்கும் போதே உதிர்த்து சேர்க்க வேண்டும். தனித்தனியாக இல்லாமல் இருந்தால், அடுப்பிலிருந்து இறக்கி , கரண்டி காம்பால் நன்றாக உதிர்த்தப்பிறகு திரும்பவும் அடுப்பில் வைத்து கிளரலாம். நூடுல்ஸ் வெகுநேரம் அடுப்பில் இருக்க வேண்டியதில்லை. காய்கறி நன்கு கலந்தவுடன் இறக்கிவிடலாம்.


குறிப்பு : நூடுல்ஸ் ஆரோக்கியமான உணவல்ல. எப்போதாவது ஒருநாள் ஆசைக்கு சாப்பிடலாமே ஒழிய, எளிதாக செய்யக்கூடிய உணவென அடிக்கடி செய்வது உடல் நலத்திற்கு நல்லதல்ல.

லட்சத்தீவு - பயணக்குறிப்புகள்-2


லட்சத்தீவுகள் எல்லாமே சின்ன சின்னத்தீவுகள். கடலுக்கு அடியிலிருக்கும் கோரல் பாறைகள் பல ஆண்டுகளாக ஒன்றோடு ஒன்று மோதி,  மணலாகி, அந்த மணல், கடல் அலைகளால் அடித்துத்தள்ளப்பட்டு, சிறு சிறு மேடுகளாக சேர்ந்து, நாளடைவில் அப்படியே தீவுகள் ஆனது என்பதே இந்த தீவுகளின் கதை என அத்தீவிலிருப்போர் சொன்னார்கள். அது தான் உண்மையும் என்பது, தீவுகளின் வெள்ளை வெளீர் மெல்லிய மணல் பரப்பைப் பார்த்தாலே தெரிகிறது. தீவுகளிலிருந்து கண்ணுக்கெட்டிய தூரத்தில் மெல்லிய மணல் வரிகள் தென்படுகின்றன, வருகின்ற காலங்களில் அவையும் சிறு தீவுகளாக மாற நேரிடலாம்.

அந்தமானை ப்போல அல்லாது, இங்குள்ள ஒரு தீவை சுற்றிப்பார்த்ததுமே,அங்கு தண்ணீரைத்தவிர வேறொன்றுமில்லை என நமக்கு புரிந்துவிடிகிறது. தீவில் இருக்கும்போது மட்டும் மொபைல் இணைப்புக்கிடைக்கும். அதும் BSNL மட்டும், லட்சத்தீவின் தலைநகர் தீவான "கவரட்டி'யில் மட்டும் Airtel இணைப்புக் கிடைக்கிறது. 
எல்லா தீவுகளிலும், முக்கியப் பயிராக தென்னை வளர்க்கப்படுகிறது. தென்னை மட்டுமே பிரதானம், தீவில் வசிப்போரின் தொழில்/வருமானம் இவற்றை சார்ந்தேயுள்ளது.  தேங்காய், தேங்காய் எண்ணெய், தேங்காயிலிருந்து செய்யப்படும் இனிப்புகள் தயாரித்தல் குடிசை தொழில்களாக செய்யப்படுகின்றன. தென்னைக்கு அடுத்து முக்கிய த்தொழில் மீன் பிடித்தல்.  ஏற்றுமதி செய்கிறார்கள்.

தீவுகளுக்கான மின்சாரம் 75%  ஜெனரேட்டர்களை பயன்படுத்தியும், மிச்சம் சோலார் ப்ராஜக்ட்கள் மூலம் உற்பத்தி செய்து சேமித்துக்கொள்கின்றனர். உபயோகப்படுத்தும் அன்றாட தண்ணீர்,  மேலாக 10-12 அடியிலேயே கிடைக்கிறது என தீவிலிருந்தவர்கள் தகவல் கொடுத்தனர். சுற்றளா பயணிகள் கடையில் விற்கும் மினரல் வாட்டர் பாட்டில்களையே பயன்படுத்தினோம். அங்கிருக்கும் தண்ணீரின் சுவை கிணற்று நீரைப்போல இருந்தது.

தீவில் 100% இஸ்லாமியர்களே வசிக்கின்றனர். தீவுகளின் அரசு & தனியார் நிறுவனங்களில் இவர்களே இருப்பதாக சொல்லப்பட்டது. வேறு ஆட்களை அவர்கள் அனுமதிப்பதும் இல்லை, வேறு ஆட்கள் அங்கே வாழ்க்கை நடத்தும் சூழலும் இருப்பதாக தெரியவில்லை. கப்பலில் கூட, வேலைசெய்பவர்கள் அனைவருமே இஸ்லாமியர்களாகவே இருந்தனர்.

நாங்கள், லட்சத்தீவுகளில்  "கவரட்டி, கல்பேனி, கட்மத்" தீவுகளை
சுற்றிப்பார்க்க அழைத்து செல்லப்பட்டோம்.  இவற்றில் "கவரட்டி" தலைநகர் தீவாக இருப்பதால், அங்கு சரக்கு & பயணிகள் கப்பல் துறைமுகம் என இரண்டும் ஓய்வின்றி இயக்கத்தில்  இருந்ததால், கடல் நீர் நாளடைவில் அசுத்தமாகி, தண்ணீரில் இறங்க தயக்கமாகவே இருந்தது.
அடுத்து, 'கட்மத்' தீவில், "கடல் வெள்ளரி" என்ற ஒருவகை மீன் இனம் அதிக அளவில் கிடந்தது. மருத்துவகுணம் அதிகமிருப்பதால், இதை கொல்ல/பிடிக்க அரசு தடைவிதித்துள்ளது. எனக்கு இது ஒருவித அருவருப்பை கொடுத்ததால், தண்ணீரில் கால்வைக்க சங்கடப்பட்டேன். ஆனால் என்னைத்தவிர
எல்லோரும், என் கணவரையும் சேர்த்து, சகஜமாக இறங்கி விளையாடினர். அதற்கு உயிர் இருந்தாலும், கல் போல ஒரே இடத்தில் அசையாமல் கிடந்தது, ஆபத்தில்லை,நம்மை எதும் செய்யாது என்று சொன்னாலும்,  அதற்கு உயிர் இருக்கிறது என்பது மூளைக்குள் ஏறிவிட்டதால், எங்கே அதை மிதித்து விடுவோமோ, அதற்கு வலிக்குமோ, வலிச்சால் கடிச்சிடுமோன்னு என்னால் தண்ணீரில் இறங்க முடியவில்லை. இறங்கினாலும் அதன் மேல் கால் படாமல் நடக்க ரொம்பவே சிரமப்பட்டு, இந்த விளையாட்டே வேணாம்னு மேலேறி நின்றுக்கொண்டேன்.

ஆக, கடைசியாக  "கல்பேனி" யே எனக்குப் பிடித்த தீவானது. மிக சுத்தமான தண்ணீர், வெகு நேரம் தண்ணீரில் இருந்தோம், வெகு தூரமும் தனியாக சென்றுவந்தோம். குளிக்குமிடம், சாப்பிடுமிடம், ஓய்வெடுக்குமிடமென எல்லாமே மிகவும் வசதியாக, சுத்தமாக இருந்தது.  கல்பேனி தீவு , போக வர மொத்தமாக 11 கிமி தொலைவு, ஒரே ஒரு நீண்ட சாலை. இந்த கடைசியிலிருந்து அந்த கடைசிக்கு சென்று வரலாம். எல்லாத்தீவுகளைப்போல இங்கும் முழுக்க முழுக்க தென்னை மரங்களே ! .

தண்ணீரைத்தவிர, படகு சார்ந்த விளையாட்டுகள், விதவிதமான கோரல் பாறைகள், இதில் மனித மூளையைப்போன்ற கோரல் கவனத்தை ஈர்த்தது. விதவிதமான அளவுகளில் கண்ணைப்பறிக்கும் வண்ண வண்ண மீன்கள், ஆழ்கடல் டைவிங் என சிலது இலவசமாகவும், சிலவற்றிற்கு பணம் செலுத்தியும் பார்க்க முடிந்தது.

உணவு : கப்பல் & தீவுகளில் சைவம், அசைவம் என இரண்டுமே கொடுக்கப்பட்டன. தேவையானவற்றை , தேவையானளவு நாமே எடுத்து சாப்பிட்டுக்கொள்ளலாம்.  தண்ணீரில் அதிக நேரம்  விளையாடி, களைப்போடு,நல்ல பசியும் எடுப்பதால் ,ருசிப்பார்க்காமல் உணவை ஒரு பிடிப்பிடிக்க முடிந்தது.

எல்லாத்தீவுகளிலும், அவர்களின் பாரம்பரிய கிராமிய நடனங்களை ஆட அதற்கான நடனக்குழுக்களை ஏற்பாடு செய்திருந்தனர். பாடலை மலையாளம்& ஹிந்தி மொழிகளில் பாடினர். சிலவற்றை யூடியூப்பில் பதிவேற்றியுள்ளேன். பார்த்து ரசிக்கலாம்.
கப்பல் தவிர, விமானம் மூலமும் தீவுகளுக்கு செல்லலாம். விடுமுறை நாட்களில், இந்த தீவுகளின் ரிசார்ட்டில் சென்று தங்கிவிட்டு வரலாம் என திட்டமிடுவது புத்திசாலித்தனமல்ல, பணவிரயமே ! அங்கு பார்ப்பதற்கோ, நேரம் செலவிடவோ ஒன்றுமில்லை!!  குறிப்பாக வெயில் அதிகமிருக்கும் மாதங்களில் சென்றால், அனல் தாங்கமுடியாது, அறையினுள்ளேயே சுருண்டுக்கிடக்க வேண்டியது தான்.  ஒன்றிரண்டு நாள் பயணமாக சென்று வரலாம்.

லட்சத்தீவு செல்ல விரும்புவோர் : கப்பலில் சுற்றுளா பயணியாக செல்வதை விட,  கொச்சி/மங்களூர்/கோழிகோட்டிலிருந்து கிளம்பும் கப்பலில்,தனிப்பட்ட முறையில் "கல்பேனி" தீவிற்கு ஏசி / சாதா அறை /ஸ்லீப்பர் கோச் என உங்கள் வசதிக்கேற்றவாறு முன் பதிவு செய்து, அங்கு நேரடியாக சென்று, ரிசார்ட்டில் அறை எடுத்து, விருப்பப்படி
பொழுதுப்போக்கிவிட்டு திரும்பவும் இதே வழியாக முன்பதிவு செய்து வரலாம். விமானத்தில் செல்வதானாலும் "அகாட்டி" தீவிலிருந்து ஏதாது ஒரு தீவுக்கு கப்பலில் சென்று திரும்ப வரலாம்.  எல்லா தீவுகளிலும் ஒரே ஒரு ரிசார்ட்தான் இருந்தது. எல்லாத்தீவுகளுமே 10-20 நிமிடங்களுக்குள் முழுமையாக ஒரு சுற்று சுற்றிவிட்டு வந்துவிடலாம் என்பதால், ரிசார்ட்டை தேடி அலைய வேண்டி இருக்காது. பொதுவாக லட்சத்தீவிற்கு பயணசெலவு மிக அதிகமாவதால், மேல் சொன்னபடி பயணிக்கலாம். 

*Thx Google : Lakshadweep maps, Sea cucumber fotos.

லட்சத்தீவு - பயணக்குறிப்புகள்

லட்சத்தீவுகள் அரபிக்கடலில் அமைந்துள்ளதால், கேரளாவிலிருந்து தான் கடல்வழி பயணங்கள் ஆரம்பிக்கின்றன. கொச்சியிலிருந்து தொடங்கும் பயண வழியை நாங்கள் தேர்வு செய்திருந்தோம்.  கொச்சியை தவிர, மங்களூர் மற்றும் கோழிக்கோட்டிலிருந்தும் கடல்வழி பயணங்கள் தொடங்குகின்றன. விமானப்பயணம் போலவே, கப்பலில் செல்லவும் ஏகப்பட்ட பரிசோதனை முறைகள். எல்லாவற்றையும் கடந்து ஒரு வழியாக மதியம் 3 மணி வாக்கில் கப்பலில் ஏறி, எங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறையை அடைந்தோம்.

நாங்கள் சென்ற பயணக்கப்பல் , ஒரே சமயத்தில், 700 பேர் பயணம்
செய்யக்கூடிய வசதிகளோடு, மொத்தம் 5 தளங்களை கொண்டிருந்தது. 6 ஆவது மொட்டைமாடி. :) 
முதல் 2 தளங்கள் தினப்படி பயணம் செய்பவர்களும், குறைந்த கட்டணத்தில், குறைந்த தொலைவு பயணம் செய்பவர்கள் பயன்படுத்தும் வகையில், ரயிலின் " ஸ்லீப்பர் கோச் " போல இருக்கைகளும், கழிவறை பொதுவிலும்  இருந்தது. முதல், இரண்டு தளங்களுக்கு வெளிக் காற்றோட்ட/குளிர்சாதன வசதியில்லை. மின்விசிறி மட்டுமே.

3 ஆவது தளம், தீவுகளுக்கு பயணம் செய்யும் தினப்படி பயணிகளுக்கான முதல் வகுப்பு "ஏசி கோச்". ஒரு அறையில் 4 பயணிகள் தங்கும் வசதி. இந்தத் தளத்திலிருந்து, வெளிப்பக்கம் வராண்டா போன்ற அமைப்பு உள்ளதால், பயணிகள் வெளியில் வந்து அமரலாம், நடக்கலாம், வேடிக்கைப்பார்க்கலாம். இந்த வராண்டாக்களில், இரவில் கப்பல் நிறுத்தப்பட்டு, கப்பல் கேப்டன் & டீம் உணவருந்தும் நேரத்தில்,  கப்பலில் பணிபுரிவோர் வேக வேகமாக மீன் பிடித்தலில் ஈடுபடுகின்றனர்.  கைத்தேர்ந்த மீன் பிடிக்காரர்கள். 3 ஆவது தளத்திலிருந்து தூண்டிலை வீசவேண்டும். அந்த தூண்டில் வெகுதூரம் சென்று விழுகிறது.மீன் சிக்கவில்லை என்றால், அதிவேகமாக, லாகவமாக தூண்டில் கயிற்றை (மெல்லிய இளகுவான கம்பிகள்) சிக்கல் இல்லாமல் சுற்றி, மீண்டும் வேகமாக வீசுகிறார்கள். அசுர வேகம், விவேகம் இரண்டும் சேர்ந்து, அவர்கள் பிடித்த ஒவ்வொரு மீனும் ஒன்றரை அடி நீளமும், அதற்கேற்ற கனமும் இருந்தன. அவற்றை கப்பலில் செய்யும் சமையலுக்கே விலைக்கு கொடுத்துவிடுவார்கள் என ஊகித்தோம்.  சமையல் அறை மற்றும் முதல் 3 தளங்களுக்கான சாப்பாட்டு அறையும் 3 ஆவது தளத்தில் இருந்தது.

சுற்றுளா பயணிகளுக்காக தனியாக 5 ஆவது தளத்தில் மற்றொரு சாப்பாட்டு அறை இருந்தது.  முதல் 3 தளத்தில் இருப்பவர்கள் 4-5 தளத்திற்கு உள்ளே வர அனுமதியில்லையென்றாலும், 6 ஆவது மொட்டைமாடி தளத்திற்கு சென்றுவர முடியும். அதனால், பலர் மொட்டைமாடியில் வந்து உட்கார்ந்தும், வேடிக்கைப்பார்த்தும், உறங்கியும் நேரத்தை கழித்தனர்.  5 ஆவது தளத்தில், சுற்றுளா பயணிகளுக்காக மட்டும் அமைக்கப்பட்டிருந்த நீச்சல் குளத்தில் இவர்களும் இறங்குவதால், கட்டுப்படுத்த முடியாமல் அசுத்தமாவதாலும், நீச்சல் குளம் யாருக்குமில்லாமல் இயங்காமலேயே இருந்தது.

4 மற்றும் 5 ஆவது தளம் இரண்டும், பிரத்தேயமாக சுற்றுளா
பயணிகளுக்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருந்தன. ஒரு அறையில் இருவர் மட்டுமே தங்கும் வசதி, கழிவறையும், குளியல் & ஹீட்டர் வசதியுடன், நட்சத்திர விடுதி ஏசி அறைகள் போல இருந்தது.

அறைக்கு வந்த அரை மணி நேரத்தில், Recreation Room க்கு அழைத்து, அடுத்த நாளிலிருந்து எங்களின் பயணம் குறித்தும், உணவு வழங்கப்படும் நேரம், கடலில் பயணம் செய்யும் போது எங்களின் பாதுகாப்பு குறித்த விசயங்களையும் கப்பலின் சுற்றுலா இலாக்காவை சேர்ந்த மேலாளர் விபரம் அளித்தார்.

கப்பல் பயணம், பொதுவாக எல்லோரும் சொல்வது போல, தலைசுற்றல் வாந்தி போன்ற உபாதைகளை வர செய்கிறது, அதற்கு தகுந்தார் போன்று தேவையான மருந்து/மாத்திரைகளை கைவசம் வைத்துக்கொள்வது நல்லது.  என் கணவருக்கு கப்பலின் ஆட்டம் எந்தப்பிரச்சனையும்/வித்தியாசத்தையும் தரவில்லை. ஆனால் எனக்கு, கப்பலில் ஏறிய மாலை பொழுதே வாந்தியும் தலை சுற்றலும் வந்து, சோர்வடைந்தேன். இதுவரை பேரூந்து, ரயில் & விமானப்பயணங்களில் ஒரு முறைக்கூட எனக்கு தலைசுற்றலோ/ வாந்தியோ வந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் முதல் நாள்  எனக்கு பிரச்சனை இருந்தாலும், மற்ற நாட்களில் இல்லை.

கடல் அலையின் காரணமாக, கப்பல் ஓடும் போதும், நிற்கும் போதும், தாலாட்டுவதைப் போல, மேலும் கீழும், இப்படியும் அப்படியுமாக எந்நேரமும் ஆடிக்கொண்டே தான் இருந்தது. இதனாலாயே, கப்பலின் உள்கட்டமைப்பு அதற்கு தகுந்தார் போல அமைக்கப்பட்டுள்ளது. கப்பலில் நடந்து செல்லும் வழி நெடுகிலும், பிடித்துக்கொண்டு நடக்க கைப்பிடி வைக்கப்பட்டுள்ளது. அறையில் உள்ள கட்டில், நாற்காலி, மேஜை, அலமாரி என எல்லாவற்றையும் , கப்பலின் அசைவினால், நகர்ந்துவிடாமலும், விழுந்துவிடாமலும் இருக்க புத்திசாலித்தனமாக சின்னச்சின்ன நகாசு வேலைகள்  செய்யப்பட்டிருந்தன. பயணிகள் அமர்ந்து சாப்பிடும், சாப்பாட்டு அறையில் உள்ள மேஜை அனைத்திலும், பொருட்கள் நழுவி விழாமல் இருக்க விளிம்பில் மெல்லிய மரப்பலகையை இணைத்து தடுப்பான் அமைக்கப்பட்டிருந்தது.


சிறிய தேவைகளுக்குக்கான கடைகள்,அடிப்படை/தேவையான வசதிகள் கொண்ட மருத்துவமனை,உணவுக்கான தனி அறைகள், நீச்சல் குளம், மேல் மொட்டைமாடி தளத்தில் "ஹெலிக்காப்டர் இறங்கும் தளம்" என அநேகமாக எல்லா வசதிகளும் உள்ளேயே இருந்தன..மருத்துவர், காவலர் களுக்கான தனி அறைகள் ஒதுக்கப்பட்டு,அவர்கள் பணி நேரம் குறிப்பிடப்பட்டிருந்தது.

இரவு நேரங்களில் கப்பல் பயணமும், பகல் நேரங்களில் சிறு படகுகளின் மூலம் சுற்றலா பயணிகளை ஒவ்வொரு தீவிலும் இறக்கிவிட்டுவிட்டு, மாலை  திரும்பவும் அதே படகுகளில் மூலம் கப்பலுக்கு அழைத்து வந்துவிடுகின்றனர். இப்படியாக மூன்று நாட்கள்  3 தீவுகளும், 3 இரவுகள் கடலில் பயணமுமாக சுற்றலா நிறைவடைந்தது.

கப்பல் - என்றாலே இரண்டு விசயங்கள் நமக்கு நினைவில் வந்துப்போகும். ஒன்று கப்பலோட்டிய தமிழர். முதல் நாள் மாலை மேல் தளத்திற்கு சென்ற போதே இவரின் நினைவு தான் வந்தது.ஒரு கப்பலை வாங்கி, அதை பயன்படுத்துவது என்பது லேசுப்பட்ட விசயமல்ல. யானையைக்கட்டி தீணி ப்போடுவதை விடவும் பலமடங்கு சிரமம் மிகுந்தது.  கனமான இரும்பைக்கொண்டு கப்பல் கட்டப்பட்டிருந்தாலும், எந்நேரமும் உப்புத்தண்ணீரிலேயே இருப்பதால், அதற்குண்டான வினையைப்பெறுகிறது, பெயிண்ட் செய்யப்படாத எல்லா இரும்பு பொருட்களிலும் உப்புக்காற்று தன் வேலையை காட்டியுள்ளது. எடுத்துக்காட்டாக, எல்லாக்கதவு பிடிகளும் ஸ்டைன்லஸ் ஸ்டீல், இவற்றில் உப்புக்காற்று பட்டு,  சொற சொறப்பாக அதன் பொலிவை இழந்துள்ளது. இவற்றை பராமரிப்பதென்பது இயலாதக்காரியம்.

700 பயணிகளின் அன்றாட கழிவுகள் & குப்பையை எங்கே கொட்டுகின்றனர், கடலில் கொட்டினால் கடல்வாழ் உயிரனத்திற்கு  நிச்சயம் பிரச்சனை என்று யோசித்துக்கொண்டிருக்கும் போதே, வேலையாட்கள் குப்பையை கடலில் கொட்டிச்சென்றது அதிர்ச்சியை தந்தது. அது கடலில் கொட்டக்கூடிய குப்பையா என்று தெரியவில்லை  இருப்பினும், ஒவ்வொரு பகலிலும் தீவுகளுக்கு செல்ல கப்பல் நிறுத்தப்படும் போது, குப்பைகளையும் அகற்ற கப்பல் நிர்வாகம் ஏற்பாடு செய்யலாமென தோன்றியது. அரசுத்தரப்பிலிருந்து இதற்கான முறையான சட்டத்திட்டங்கள் அமல்படுத்தப்பட்டிருக்கலாம், ஆனால் நாம் வளர்ந்தவிதம், அவற்றை மதித்து செயல்படுத்துகிறோமா என்பது கேள்வியே... ! இவற்றை விட முக்கியமானது, கப்பலுக்கு தேவையான மின்சாரம்  & தண்ணீர். Engineering.....கொடுக்கப்பட்ட லிங்க்'ஐ க்ளிக்கி தெரிந்துக்கொள்ளலாம்.

அடுத்து, டைடானிக் கப்பல் :). மேல் தளம் செல்லும் போதெல்லாம்,கப்பல் கவிழ்ந்தோ, உடைந்தோ போனால் நம் கதியென்ன என்று நினைக்கும் போதே, அங்கிருந்து தப்பித்து (பறந்து) நிலப்பகுதிக்கு வந்துவிட வேணுமென எண்ணம் எழுந்தது. அதே சமயம் சில்லென்ற கடல் காற்றும், கப்பல் ஓடும் ஓ'வென்ற சத்தமும், நிலப்பரப்பின் பரப்பரப்பு இல்லாமல் கண்ணுக்கு எட்டிய  தொலைவு வரை தெரியும் அடர்ந்த தண்ணீரும், அதன் ஆத்மார்த்த ஆழ்ந்த அமைதியும்,  கப்பலின் ஓட்டத்தின் வேகத்திற்கு போட்டியாக, கடல் நீர் கப்பலில் மோதி நுரையுடன் பிரிந்துபோகும் அழகும், உயரத்தில் பறக்கும் கடல் பட்சிகளும், ஆங்காங்கே நானும் இருக்கிறேன் உனக்கு த்துணையாக என துள்ளிக்குதிக்கும் மீன்களும், கைக்கெட்டும் தூரத்தில் தெரியும் சூரிய அஸ்தமனமும், கேப்டன் அறையில் இயல்பாக வேலை செய்யும் கேப்டன் & டீமும் என்னை பயத்திலிருந்து வெளிக்கொண்டுவந்தன....

அடுத்த பதிவில் தீவுகள் குறித்த விபரங்கள் தொடரும்....

உனக்கு 20 எனக்கு 18

நண்பியிடமிருந்து 9.20 க்கு ஃபோன்.......

ஹல்லோ..

இப்பதான் தூங்கி ஏன்சியா? ஏன் குரல் ஒருமாதிரியா இருக்கு? உடம்பு சரியில்லையா?

இல்லல்ல....

சரியா கேக்கல..ஆமா ..நீ ஏன் இவ்ளோ மெதுவா பேசற?

ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்.....மெதுவா பேசு... என் கொழந்த தூங்கறான்...

ஹா ஹா ஹா... உன் கொழந்த தூங்கினா நீ மெதுவா பேசு.. நான் ஏன் மெதுவா பேசனும்..?!!

உலகமே மெதுவா தான் பேசனும்.. ... !!!!

அடிப்பாவி..... :))))))

# விடுமுறை நாளில் நவீனின் தூக்கம் !!

****************************************
 
Interstellar ஆ பாக்கற?

ம்ம்...

இதுவரைக்கும் உனக்கு என்ன புரிஞ்சிது (சிரிப்பை அடக்கிக்கிட்டே)

...................

என்ன லுக்கு.... ?? ஹா ஹா ஹா.. (அவனால இப்ப சிரிப்ப அடக்கவேமுடியல.. ) இதுவரைக்கும் ..உனக்கு..... என்ன ..... புரிஞ்சிது...?!

...................
 
ஹா ஹா ஹா... :))))   ஏதோ ஆக்ஷன் படம் பாத்தோமா, ஹாரார் படம் பாத்தோமான்னு இல்லாம ..உனக்கெதுக்கு இந்த வேல? :))))) ஹா ஹா ஹா

இங்லீஷ் ல சப் டைட்டில் போடறாங்கடா.. (சீரியஸ்லி வாட்சிங் மூவி)

போட்டா..? உனக்கு புரிஞ்சிடுமா? :))))))))))))

அடிங் ஓடிப்போடா... ! :)))

****************************
 
கடைக்கு போயும் மறந்துட்டேன், வரும் போது ஒருகிலோ வெங்காயம் வாங்கிட்டு வா...

வீட்டுக்குள் நுழையும் போதே, பக்கத்துக்கடையில் வெங்காயம் நல்லாயில்ல....

ஏண்டா வர வழியெல்லாம் விட்டுட்டு , பக்கத்துக்கடைக்கு வந்த? அங்க விலை அதிகம், நல்லாவும் இருக்காது, இங்கன்னா நானே வாங்கியிருக்க மாட்டேனா? சரி போய் வேற எங்கையாச்சும் வாங்கிட்டு வா, வெங்காயம் இல்லாமல் எதும் செய்யமுடியாது.

பரவாயில்ல செய்யாத ...
*******

ரீஃப்ரெஷ் செய்துட்டு வந்து...

 வெங்காயம் வாங்கித்தரலன்னு, வேணும்னே எதாச்சும் உப்புமா மட்டும்  நாளைக்கு செய்தேன்னு வை, காசு கையில் இருக்கு, உடனே உன் புருஷன் மாதிரியே "ஒன்வே" டிக்கெட் புக் பண்ணி உன்னை கொல்கத்தா பேக் பண்ணிடுவேன் ஜாக்கறதை.!!!.

அடப்பாவி... :))))))))))))) (ஒன்வே' வாஆஆஆம்..)
****************************
 
(கம்பியூட்டரில் தலையை விட்டுட்டு இருக்கிறான்)
 
டேய்....இங்கப்பாரு.. அம்மா சொல்றதை கொஞ்சம் கேக்கறியா?

அன்னாந்து கேவலமா ஒரு லுக் விட்டு..    'ம்ம்ம் ம்ம்ம்'

ராத்திரி ரொம்ப நேரம் முழிச்சி இருக்கறது கண்ணுக்கு நல்லதில்ல,

நெக்ஸ்ட்

8 மணி நேரம் கண்டிப்பா தூங்கினா தான் மூளை தெளிவா வேல செய்யும்..

நெக்ஸ்ட்

தூக்கம் இல்லாம போனா உடம்பு ரொம்ப ஹீட் ஆகி,, தலைமுடி கொட்டும், ஹீட் ல வர எல்லா டீஸீஸும் ஒன்னொன்னா வரும்..

நெக்ஸ்ட்..

எரும.. என்ன நெக்ஸ்ட் நெக்ஸ்ட் ங்கற சொல்றது புரிஞ்சிச்சா இல்லையா?

நீ சொன்னதை கேட்டாச்சி , உன் டைம் முடிஞ்சிப்போச்சி கெளம்பு...

கிர்ர்ர்ர்ர்..
 
******************************

நீ பெரியவனா வளந்துட்டதால,  நான் உனக்கு சின்னவளா ஆகிடமாட்டேன். நான் உன்னோட அம்மாங்கறத மறந்துடாத.....

 :)))))) ஹே ஹே.... அப்புறம்... ?!!

(ஸ்ஸ்ஸ்.. எப்படி டயலாக் டெலிவரி செய்தாலும் அசர மாட்றானே..?! )
*****************************

அப்பா மாதிரியே உனக்கும் அபீஷியல் பர்த்டே வேறயா?

ஆமா...

ஏன் இரண்ரெண்டு??

இப்ப மாதிரியெல்லாம் இல்ல, அட்மிஷன் அப்ப பிறந்த தேதி வருஷம் கேப்பாங்க, அவங்க ஒரு தேதி வருஷம் வச்சியிருப்பாங்க, அதுக்கு அதிகமா இல்ல குறைச்சலா இருந்தா, அவங்களே ஒரு மாதம்/வருசத்தை தகுந்தமாதிரி மாத்தி போட்டுக்குவாங்க.. அப்பாக்கு வருசம் தவிர தேதி மாசம் இரண்டும் மாறியிருக்கு....எனக்கு மாசம் மட்டும்.

ஓ....

அதுமட்டுமல்ல, கைய வளச்சி காதை தொட சொல்லுவாங்க. தொட்டுட்டா வளந்துட்டோம், ஸ்கூல் ல சேர்த்துக்கலாம்னு  முடிவுசெய்துக்குவாங்க

இது வேறையா? உடம்பு வளந்தா போதுமா? அறிவு வளர வேணாம்..?? உன்னையெல்லாம் அப்படியில்ல செக் பண்ணி ஸ்கூலுக்கு அனுப்பியிருக்கனும்?

உஸ்ஸ்ஸ்ஸ் ..........(எங்க ஆரம்பிச்சாலும் என்கிட்டவேயில்ல வந்து முடிக்கிறான்?)
 
********************
 
பீட்டர் தாத்ஸ் : A Boy's best friend is his Mother - Joseph Stefano

ஜெ'வின் நினைவாக....

அம்மையார் ஜெயலலிதாவின் நினைவாக அவரது பாடல்களை பதிவு
செய்யனும்னு நினைத்திருந்தேன்,உடனேயே அதை செய்யமுடியல. செய்ய ஆரம்பித்தவுடன் கண்ணதாசனும், வாலியும் மாற்றி மாற்றி என்னை ஆக்கரமித்துக்கொண்டனர்.

என்னமாதிரியான பாடல்வரிகள்?? ஸ்ப்ப்பா..எப்படி இப்படியெல்லாம் எழுத முடிந்தது.... வியந்து வியந்து பலமுறை திரும்ப திரும்ப கேட்டு லயித்துப்போய்விட்டேன்.

குறிப்பிட்டு சொல்லனும்னா,  " சந்ரோதயம் ஒரு பெண் ஆனதோ..." இதை தொடர்ந்து 10-15 நாள் பாடிக்கிட்டே இருந்தேன். இது ஒன்றுமட்டுமா? ... "குங்குமப்பொட்டின் மங்களம்.."

"நல்லது கண்ணா...கனவு கனிந்தது நன்றி உனக்கு"

"எங்கே அவள் என்றே மனம்.".. அடடா.....இதுமட்டுமா......

"ஒரே முறை தான் உன்னோடு பேசிப்பார்த்தேன்......" ...

சரிதான்.......... இது இப்பத்திக்கு நிக்காது.. பாட்டைக்கேட்டுப்பாருங்க..

https://soundcloud.com/gkavith/jj7

இதில் 1-7 ஆக பிரித்து பாடியிருக்கேன். முடிந்தளவு எனக்கு பிடித்தப்பாடல்களை பாடியுள்ளேன். இங்க ஒன்னே ஒன்னு (7) தான் பதிவிட்டிருக்கேன்..  உங்களுக்கு பிடித்தால் மிச்சமிருக்கும் பாடல்களை இங்கப்போய் --> www.soundcloud/gkavith கேளுங்க.  நான் பாடியதற்காக இல்லாட்டியும், பாடல் வரிகளுக்காகவாச்சும் கேட்டுப்பாருங்க...



# ஜெயலலிதா நடித்த திரைப்படங்களிலிருந்து பாடல்கள்

எங்க வீட்டு சமையல் : டிம்மர் டெவில்

டிம்மர் டெவில் (Dimer Devil) மேற்கு வங்கத்தின் மிக பிரசித்திப்பெற்ற முட்டையில் செய்யப்படும் சிற்றூண்டி.

இங்க பொதுவாக எதையும் கடையில் வாங்கி சாப்பிடுவதை தவிர்த்து, செய்முறை தெரிந்துக்கொண்டு, வீட்டில் செய்து சாப்பிட்டால் நல்லது. காரணம் ஒன்று சுத்தமின்மை, இரண்டாவது பலமுறை பயன்படுத்தப்பட்ட எண்ணெய். ஒருமுறை பொரித்து வைத்ததை நாம் கேட்டவுடன் இன்னொரு முறை எண்ணெய்யில் போட்டு சூடாக்கி தருவது இவர்களின் வழக்கம், அதனால், அதிகளவில் அது எண்ணெய் இழுத்துக்கொண்டு வரும். நம்மூர் மாதிரி பச்சக் கச்சக்னு பேப்பரில் அமுக்கி எண்ணெய் எடுத்து சாப்பிடமுடியாது. ஏனென்றால், அநேகமாக எல்லாமே உருண்டை வடிவில் இருக்கும், அல்லது சிக்கன், முட்டை, மீனில் செய்யப்பட்டவை, அமுக்கினால் சாப்பிடமுடியாதளவு விண்டு தனித்தனியாகவிடும்..

தேவையான பொருட்கள் :

சீரகம் : 1/2 ஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது : 1 ஸ்பூன்
மிளகாய் தூள் 1 ஸ்பூன்
தனியா தூள் 1 ஸ்பூன்
சீரகப்பொடி : 1 ஸ்பூன்
மஞ்சள் பொடி : 1/2 ஸ்பூன்
கரம் மசாலா : 1 ஸ்பூன்
பச்சை மிளகாய் : 1
வெங்காயம்: 2
உருளைக்கிழங்கு: 3
முட்டை : 4
பிரட் தூள் : ஒரு கைப்பிடி
உப்பு : தேவைக்கேற்ப
எண்ணெய் : தேவைக்கேற்ப
கொத்தமல்லி- பொடியாக நறுக்கியது ஒரு கைப்பிடிளவு

செய்முறை :
  1. வாணலில் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்தவுடன் சீரகம் சேர்ந்து
    பொரிந்தவுடன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கி, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கவும்
  2. மிளகாய், தனியா, சீரகம், கரம் மசாலா, மஞ்சள் பொடிகளை சேர்த்து நன்கு கலக்கி வதக்கவும்
  3. வேகவைத்து மசித்த உருளைக்கிழங்கை கொட்டி, உப்பு, கொத்தமல்லி சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, இறக்கி வைத்துவிடவும்
  4. 3 வேகவைத்த முட்டைகளை பாதியாக வெட்டிக்கொண்டு அதனை மேற்சொன்ன உருளை மசாலைக்கொண்டு ஒரு லேயர் நிரப்பி உருண்டையாக பிடித்து வைத்துக்கொள்ளவும்.
  5. ஒரு தட்டில் மீதமுள்ள ஒரு முட்டையை உடைத்து ஊற்றி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளவும்

  6. பிடித்துவைத்த உருண்டைகளை அதில் பிரட்டி, மற்றொரு தட்டில் பரப்பிவைத்துள்ள பிரட் துகள்களில் பிரட்டி, எண்ணெய் காயவைத்து அதில் போட்டு பொன்னிறாமாக பொரித்து எடுக்கவும்
  7. தக்காளி சாஸ்ஸாடு சூடாக பரிமாறவும்.
மேற்குவங்கத்தின் எல்லா உணவுகளிலும் தாளிக்க சீரகமும், மசாலாவோடு சீரகப்பொடியும் சேர்க்கிறார்கள். தாளிக்க கடுகு எண்ணெய்யும், மீன் தயாரிக்கும் முறைகளில் கடுகை அரைத்து விழுதாகவும் சேர்க்கிறார்கள். இவை செரிமானத்திற்கும், உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்றாலும் நமக்கு கடுகு எண்ணெய் பழக்கமில்லாததால், தாளிக்க நல்லெண்ணெய்யும் பொரிக்க அவரவருக்கு பிடித்த எண்ணெய்யும் பயன்படுத்திக்கலாம்.

இதில் கைவசம் சீரகப்பொடியும்,கரம் மசாலாவும் இல்லாதததால் அவற்றை சேர்க்காமல் செய்தேன். சுவையில் ஏதும் வித்தியாசம் தெரியவில்லை.  

கலர் & உடலுக்கு கெடுதியான பொருட்களை கலப்படம் செய்கிறார்கள் என்பதால் மஞ்சள் பொடி தவிர்த்து, சமையல் சார்ந்த எந்த ரெடிமேட் பொடி வகைகளும் கடையில் வாங்குவதில்லை. எல்லாமே தேவைக்கேற்ப மிஷினில் கொடுத்து/மிக்ஸியில் அரைத்து வைத்துக்கொள்வேன்.

அணில் குட்டி : சாப்பாடே பிரதானம்னு வாழ்ற பெங்காலிகள் இடத்திற்கு வந்து அம்மணியும் நல்லாவே விதவிதமா கட்றாங்க... :)

பீட்டர் தாத்ஸ்: Nothing brings people together like good food

சிவலிங்கம்

இந்த மாதிரியொரு கனவு இதுவரை வந்ததேயில்ல. ஜெகஜோதி' ன்னு சொல்லுவாங்களே அதன் அர்த்தத்தை இந்த கனவில் கண்டேன்.

என் கணவரின் (சென்னை) அலுவலகத்தில் வேலைப்பார்க்கும் இரண்டு பெண்களோடு எனக்கு பேச வேண்டியிருந்தது.(நிஜத்திலும் பேச வேண்டியிருக்கு, ஆனால் சந்தித்து பேச வாய்ப்பு கிடைக்கல) அவர்கள் அலுவலகத்தில் உள்ள மற்றவர்கள் அறியாதவாறு வேறு எங்காவது ரகசியமாக சந்தித்து பேசலாம் என முடிவு செய்து என்னிடம் முன்கூட்டி தெரிவித்திருக்கின்றனர்.

மூவரும் ஒன்றாக கிளம்பினாலும் யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என ஒருவர் முன்னே செல்ல, நான் இரண்டாவது, எனக்கு பின்னே ஒருவர் என நடக்க ஆரம்பிக்கிறோம்.

நாங்கள் நடந்துக்கொண்டிருக்கும் சாலை முக்கிய பிரதான சாலையாக தெரிகிறது. அந்த சாலையில், அவர்கள் சந்திக்க ஏற்பாடு செய்த இடம் வெகு தொலைவில் இருக்கிறது. என்னால் நடக்கமுடியுமென நடக்கிறேன். எனக்கு பின்னால் வரவங்க கொஞ்சம் உடல் பருமனானவங்க, அவங்களால் முடியல.. ஆனா நிக்காமல் ரொம்ப மெதுவா நடந்து வராங்க.

எனக்கும் அவர்களுக்குமான இடைவெளி அதிகமாயிட்டே இருக்கு. எனக்கு முன்னால் சென்றவர், ஓரளவு வேகமாக சென்று இடத்தை நெருங்கிட்டாங்க. நடுவில் பெரிய மேம்பாலம், மேல ஏறி இறங்கனும், நான் இறங்கிட்டேன், இதற்கு பிறகு எங்களை கண்காணிப்பவர்கள் யாருமிருக்க வாய்பில்லை என்பதால், எனக்கு பின்னால் வருபவர் வரும்வரை காத்திருந்து அவர்களோடு சேர்ந்து நடக்க உத்தேசித்து, சாலை ஓரமாக நிற்கிறேன்.

நிற்கும் நேரத்தில் அக்கம் பக்கம் சுற்றி நோட்டம் விட, ஒரு கோயில் தெரிகிறது, எனக்கு பின்னால் வரும் அந்தப்பெண்ணை கவனித்து, நிற்கும் நேரத்திற்கு அந்தக்கோயிலுக்கு சென்று வந்துவிடலாமென,  செல்கிறேன்.

ஆஹா..என்னே ஒரு காட்சி.!!!!!  சிவலிங்கம் !!!! ஜெகஜோதியாக
காட்சியளிக்கிறார். அட்டகாசமான அலங்காரம், லிங்கத்தின் தலையில் தங்கத்தால் செய்யப்பட்ட பாம்பு வடிவில் கிரீடம் போல ஏதோ ஒன்று அலங்கரிக்கப்பட்டு வசீகரிக்கிறது !கர்பகிரகமே விளக்குகளால் ஒளிர்ந்து ஜெகஜோதியாக என் கண்களுக்கு விருந்தளிக்கிறது. மெய் மறந்து ரசிக்கிறேன்.

வித்தியாசமான லிங்கமாக இருந்ததால், சாமியின் பெயரை அறிய, கோயில் வாசலின் மேல் பார்க்கிறேன்.... "நசாவா லிங்கம்" என்று படிக்கிறேன்.

திரும்ப படிக்க எத்தனிக்கும் போது விழிப்பு..

பெயர் மறக்காமல் இருக்க, தலைமாட்டிலிருந்த மொபைலை எடுத்து,, அவருக்கு வாட்சப்பில், பெயரை டைப்பி அனுப்பிவிட்டு, கனவை ரீகால் செய்ய ஆரம்பித்தேன்...

*****
படம் (நன்றி கூகுல்) : ஏகாம்பரநாதர், காஞ்சிபுரம். 
கிட்டத்தட்ட என் கனவு லிங்கம் இப்படிதானிருருந்தார்.. ஆனால் இவரைவிட உயரம்..காலஹஸ்தி லிங்கத்தை ஒற்று இருந்தாலும், அவருமில்லை.

கூகுலில் தேடிப்பார்த்தேன் கிடைக்கவில்லை. எங்கிருக்கிறாரோ இந்த சிவபெருமான்?. என் கனவில் வந்து, காட்சிக்கொடுத்ததற்கு தவம் தான் செய்திருக்கிறேன்....

கனவுகளில்..நம்பமுடியாத பிரம்மிக்க வைத்த கனவு இதுவே... !! 

அடையார் புற்றுநோய் மருத்துவமனை - சில குறிப்புகள்

அடையார் கேன்சர் மருத்துவமனை கேன்சரை குணப்படுத்தமட்டுமே நடத்தப்படுகிறது. வேறு வியாதிக்காரர்களுக்கு இங்கு வேலையில்லை.
நோயாளிகள் முதல் நிலை தகவல்/சந்தேகம்/உதவிக்கு மருத்துவமனையில் பகவான் ஆதிநாத் ஜெயின் காம்ப்ளெக்ஸ் அலுவலகத்தில் இருக்கும் PRO வை அணுகி விபரங்கள் பெற்றுக்கொள்ளலாம்.

ஒரு நாளைப்போல நூற்றுக்கணக்கான நோயாளிகள் வருவதால், இங்கு காத்திருப்பு என்பது ரொம்ப சாதாரணம். காலையில் 7 மணிக்கு போனால் இரவு 7 மணி வரையில் கூட காத்திருக்க வேண்டி வரும். அனைவருமே வரிசைப்படிதான் அழைக்கப்படுவர்.  Recommendation, References என்று எதும் இங்கு செல்லுபடி ஆகாது, சில தினங்கள் சென்றாலே அங்கிருக்கும் நோயாளிகளைப்பார்த்து, நாமும் இதையெல்லாம் நாடாமல் காத்திருக்க ஆரம்பிப்போம்.

இங்கு 10 ல் 8 பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பது ஆச்சரியமான உண்மை. Operation என்று முடிவானப்பிறகு, அந்த நோயாளிகளுக்கென ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஒரு கூட்டம் நடத்தி, அதில் பணம் கட்ட இயலாதவர்களின் நிலையை அறிந்து,அவர்களுக்கு இலவசமாக அறுவைசிகிச்சை நடத்தப்படுகிறது. இதனை அறுவை சிகிச்சை செய்யப்போகும் நோயாளிகள் அனைவருக்கும் தெரியப்படுத்தி விடுகின்றனர். நமக்கு தேவைப்பட்டால், கூட்டத்தில் கலந்துக்கொள்ளலாம் இல்லையேல் பணம் கட்டுகிறோம் என்று சொல்லிவிடலாம். இலவச சிகிச்சைக்கு Income Certificate கொடுத்தால் போதுமானது.

அறுவை சிகிச்சைக்கு முன்பான செலவுகளும், வருமானம் குறித்த சரியான தகவல்கள் கொடுப்பதன் பேரில் ஆரம்பத்திலிருந்தே சிலருக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்படுகிறது. பொதுவாக அறுவை சிகிச்சைக்கு,  முந்தைய  பரிசோதனைகளுக்கு 20-25 ஆயிரம் ரூபாய் தேவைப்படலாம்.

ஒருவேளை வெளியில் வேறு மருத்துமனையில் புற்றுநோய் இருப்பது கண்டுப்பிடிக்கப்பட்டிருந்தாலும், இங்கு வந்தால், முதலிலிருந்து எல்லா பரிசோதனைகளையும் கண்டிப்பாக செய்தே ஆகவேண்டும். வெளியில் செய்யப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் இங்கு சிகிச்சை அளிக்கப்படுவதில்லை.

சென்னையில் அல்லாது தமிழகத்தின் பல பிரபல மருத்துமனைகளில், கைவிடப்பட்டு, இங்கு வருபவர்கள் ஏராளம்.

அறிகுறிகள் : உடலில் எந்த இடத்திலாவது சிகிச்சை அளித்தும் சரியாகாத கட்டி வகையறாக்கள், ரத்தகசிவோடு இருக்கும் கட்டிகள், ரத்தம் கலந்த சிறுநீர், பேதி போன்றவையை புறந்தள்ளாமல், நேரடியாக இங்கு வந்து பரிசோதனை செய்துக்கொள்ளுதல் சிறந்தது. வேறு மருத்துமனைகளுக்கு சென்று, பின்பு இங்கு வருவதால், காலதாமதம் மட்டுமல்லாமல், பண விரயம் அதிகமாகி,  நோயாளிகளுக்கும் அவர்களை சார்ந்தவர்களுக்கும் அதிக மன உளைச்சலை தந்துவிடும்.
*******
இங்கு பார்க்கும் அத்தனை நோயாளிகளுக்கும் ஏதோ ஒரு கேன்சர்.  :-

8 மாத குழந்தைக்கும், அவங்க அம்மாக்கும் கேன்சர், என்ன ஏதுன்னு விசாரிக்க மனசு வரல.. :(

வயிறு சம்பந்தப்பட்ட (குடல்) கேன்சர் அதிகம் -  அறிகுறி : வலியில்லாத தொடர்ந்து ரத்தப்போக்கோடு வெளிக்கி/பேதி ஆகுதல்.

இந்த நோயாளிகளின் உறவினர்கள் சொன்னதிலிருந்து காரணங்களை ஊகித்தது :- உணவே  முதல் காரணம் - அதிக அசைவம் தொடர்ந்து சாப்பிட்டவர்கள், அதிக காரம், பழம் & காய்கறியே தொடாமல் இருந்தவர்கள்.  பலவருடங்களாக ஒரே மாதிரியான உணவுப்பழக்கத்தை கொண்டவர்கள்

குடி , சிகிரெட் , வெற்றிலைப்பாக்கு புகையிலை பழக்கம். இதனால் கேன்சர் வந்தவர்கள் எத்தனை வசதிக்குறைந்தவர்களாக இருந்தாலும் , இலவச சிகிச்சை அளிப்பதில்லை. முழுப்பணமும் கட்டினால் தான் சிகிச்சை.

அடுத்து, வாய் சார்ந்த புற்றுநோய். இதும் அதிகளவில் இருக்கிறது. வாய் சார்ந்த புற்றுநோய்க்கு, காதருகில் உள்ள க்ளேன்ட்ஸ் ஸை, அதில் கேன்சர் செல்கள் இல்லாவிட்டாலும் பரவும் என்று அவர்களாகவே எடுத்துவிடுகிறார்கள்.

சிறுநீரக கேன்சர் - சிறுநீரோடு இரத்தம் கலந்து வருதல் அறிகுறி.

மார்பு & கருப்பை புற்றுநோய். இ்வை பொதுவாக நாம் அறிந்தவை.

இவைத்தவிர நெற்றி, கண், இமை, தலை , தோல் 'ன்னு சொல்றவங்களும் உண்டு.
******

குழந்தைகளுக்கென்றே தனிப்பிரிவு / தனிக்கட்டிடம் இருக்கிறது.

அதிகமானோர் ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். உணவு பழக்கம் காரணமாக இருக்கலாம். கேன்சர் இன்ஸ்ட்டியூட் உருவாக்கியவர்களில் யாராவது ஆந்திராவை சேர்ந்தவர்களாக இருக்கலாம். 

இலவச சிகிச்சை செய்துக்கொள்பவர்களுக்கு, ஒரு நோயாளிக்கு ஒரு உதவியாளர் தங்க இலவசமாக உணவோடு மருத்துவனமையில் வசதி செய்யப்பட்டுள்ளது.  தவிர பணம் கட்டுபவருக்கு தனியாக தங்க வசதியான அறைகளும் உள்ளன.

இலவசம் /பணம் வித்தியாசமின்றி அனைவருக்கும் எந்த பாரபட்சமுமின்றி ஒரேமாதிரியான சிகிச்சை அளிக்கப்படுகிறது என்பதை கண்கூடாக பார்க்கமுடிந்தது.

பணம் கட்டுபவர்களில் A,B,C என்ற மூன்று பிரிவுகள் வைத்திருக்கிறார்கள். அடிப்படை வித்தியாசம் என்னவென்று தெரியவில்லை.

Insurance & மற்ற Claim வசதிகள் நேரடியாக இவர்கள் செய்வதில்லை. ரசீதுகளை வைத்து நாமாக தான் claim செய்துக்கொள்ள வேண்டும்.

ஆயா வேலைப்பார்ப்போர் அனைவருமே வயதானோர். இவர்கள் சோர்வில்லாமல் வேலை செய்தது, என் கவனத்தை ஈர்த்தது. பணம் கேட்டு வாங்குகின்றனர்.. (கொடுப்பதில் தப்பேயில்லை.) எல்லோரிடமும் கேட்பார்கள் என தோணவில்லை, தேர்வு செய்தே கேட்கின்றனர்.

நோயால் அவதிப்பட்டு, குணமாகிய பலர் இங்கேயே வேலைப்பார்க்கிறார்கள். அவர்களுக்கான வேலைவாய்ப்பு இங்கு பரிந்துரைக்கப்படுகிறது. வியாதியின் தன்மையை அறிந்ததாலோ என்னவோ,  கொஞ்சம் கூட சலிப்பு இல்லாமல், முகம் சுளிக்காமல், சோர்ந்து உட்காராமல் உழைக்கிறார்கள்.

தவிர , தன்னார்வளர்கள் பலரை பார்க்க முடிந்தது. சாப்பாடு நேரத்தில், நோயாளிகளை காக்க வைக்காமல் இருக்க, இவர்கள் அந்த நேரத்தில் வேலை செய்கிறார்கள்.

குறைகள் : மருத்துமனை வசதிகள் தனியார் மருத்துவமனைகளை போல இருக்காது. சுத்தமாக வைத்திருந்தாலும், நாம் எதிர்ப்பார்க்கும் hygienic  இருக்க வாய்ப்பில்லை. கேன்டீன் உணவுகள் சுமாராகவே இருக்கும், அங்கும் அதிக சுத்தத்தை எதிர்ப்பார்க்க முடியாது. தனியார் மருத்துமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு இந்த மருத்துமனையின் வசதிகள் நிச்சயம் திருப்தி அளிக்காது. !

மருத்துவமனை இணையத்தளத்திலிருந்து->புற்றுநோய் வராமல் தவிர்க்க:

Abstinence from tobacco
Balanced diet
Personal hygiene
Vaccines
# Adyar Cancer Institute

எனக்கு 20 உனக்கு 18

எனக்கு எல்லாந்தெரியும்... வாயமூடும்மா....

ஆமா நவீன் உனக்கு எல்லாந்தெரியும்!!! தெரியாததுன்னு ஒன்னுமேயில்ல..  ஒன்னு செய்யி, நல்லா யோசிச்சி எதாது ஒன்னு உனக்கு  ''தெரியல' னு சொல்லுப்பாக்கலாம்...

(அடுத்த செகண்ட் ) 20 வருசமா சமைக்கற, இருந்தாலும் ஒழுங்கா சமைக்கமாட்ற, அதான் ஏன்னு எனக்கு "தெரியல"

:))))))))))))) ஏன்டா ஏன்ன்ன்?

*****************

அம்மாக்கு அடிக்கடி தலவலி வருதுடா... நேத்திக்கு பூரா தலவலி.. அங்கக்கூட இப்படி வரும்.. இங்க தொடர்ந்து வருது... இன்னைக்கு காலையிலேயே ஆரம்பிச்சிடுச்சி...(தலைவலியில் முகமெல்லாம் வாடி, ஒரே அழுவாச்சி டயலாக் டெலிவரி செய்யறேன்)

இல்லாத மூளைய ஓவரா ஓடவிட்டா இப்படிதான் தலவலி வரும்...

.. :))))))))))))))))))


  *************
காலையிலேயே வூட்டுக்கார்க்கிட்ட இருந்து ஃபோன்.. (அவரா அழைக்கல....மிஸ் கால் கொடுத்து கூப்பிட்டவச்சேன்.)

........ஹல்லோ.. நவீன் கிட்ட கொடுக்கட்டா?

குடு குடு..

இந்தப்பா... அப்பா லைன்ல....

............................

தாங்கஸ்....

..............................
....

எனக்கென்ன வேணும்??!! அதான் அம்மாவை அனுப்பி வச்சிட்டீங்களே.......

..............................
.........

ம்ம்ம்

.......................

ம்ம்ம்ம்

இந்தா... (என்னிடம் ஃபோன் வந்தாச்சி..)

பாத்தியாடி... உன் புள்ளைய..?? அவன் பொறந்தநாளைக்கு உன்னையே கிஃப்ட்டா நினைக்கிறான்...!! (வயித்தெறிச்சல்)

:)))..சரி சரி.. வைக்கிறேன் எனக்கு வேல இருக்கு.. !!

# ஐப்பசி 1 # நவீன் பிறந்தநாள் # ப்ரவுடு மம்மி !!

**************
ஏதோ சீரியல் பாக்கும் போது,  அந்தம்மாக்கு மருமகள் சாப்பாடு கொடுப்பாங்க..

அந்தம்மா - "அரை உசுரு தான் இங்க இருக்கு.அதுக்கு எதுக்கு சாப்பாடு...??" (ஏன்னா வூட்டுக்கார் வீட்டை விட்டு ஓடிட்டார், இவங்க சோகத்தில் இருக்காங்க)

நான் உடனே என் வூட்டுக்காரைப்பாத்து..

"ஏன்ப்பா..நான் சென்னை போயிட்டா,  உங்க அரை உசுரும் போயிடுமே என்னப்பா செய்வீங்க? " ன்னு முகத்தை சீரியல் ஃபீலிங் எஃபெக்டோட வச்சிக்கிட்டு ரொம்ப சோகமா கேட்டேன்..

டகால் னு என் பக்கம் திரும்பி..

"மிச்சமிருக்க அரை உசுரோட நல்லா சாப்பிட்டு நல்லா தூங்கி நல்லா சுத்திக்கிட்டு நிம்மதியா இருப்பேன்.."

கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்
ர் *************

 ஒரு வேலையாக மாம்ஸ் ஆபிஸ் போயிருந்தேன். அவர் ரூமில் அவரை ஃபோட்டோ எடுத்து புள்ளைக்கு வாட்சப்பில் அனுப்பினேன்.

"ஏன் அவரு நெக் பேல்ட் போடல?

"அவரு ரொம்ப நாளா போட்டுக்கறது இல்லையே"

"டாக்டர் சொன்னாரா?"

"இல்ல, அவரே தான் போட்டுக்கறது  இல்ல"

"ஏன் நீ அவரை உன்ன மாதிரி மாத்தின"

"ம்க்கும் .... போட்டுக்கோங்கன்னு சொன்னா சிடு சிடுன்னு திட்றாரு... "

"டாக்டர் சொல்ற வர கழட்டக்கூடாது, வலி இல்லன்னா சரி ஆகிடுத்துன்னு அர்த்தம் இல்ல"

"அடேய்..இதெல்லாம் நீ அவர் கிட்ட நேரா சொல்லு..ஏன் என் உயிர வாங்கற? "

"அவரு என்னை திருத்த உன்னை அனுப்பறாரு இல்ல..for the same reason am sending you to him , no direct dealing...."

"அடப்பாவி..?!!! "

**************

தங்கும் விடுதியின் முகப்பு அறை, வூட்டுக்கார் அறை வாடகையை கொடுத்துட்டு இருந்தார்.

முகப்பு அறையில் ஒரு பக்கம் சுவர் ஓரமாக, ஒரு மிஷின் இருந்தது. கிட்டக்க போய்  பார்த்தேன். மிஷினின் மேல் பக்கம் Brown, Cream, Black என்று சரியான இடைவெளியில் எழுதியிருந்ந்தது. கீழே ஒரு உருளை, உருளையிலிருந்து காஃபி மிஷினில் இருப்பது போல சின்ன குழாய் போல் தெரிந்தது. சரி காஃபி மிஷின் போல, ரிப்பேர்னு இங்க வச்சியிருக்காங்க..ன்னு நானே நினைச்சிக்கிட்டு, அங்கு நின்றிருந்த, விடுதியில் வேலை செய்யும் ஒருவரிடம்..

ஹே க்யா? காஃபி மிஷின் ஹே?!!

"நஹி மேடம், ஓ ஷூ பாலிஷிங் மிஷின்.."

அவ்வ்... ஷூ பாலிஷ் மிஷினா...? இதையா காஃபி மிஷின் னு நினைச்சேன்.. ஆஹா எம்புட்டு அறிவுன்னு, அதை திரும்ப  நோட்டம் விட்டேன்,, ஷூ பாலிஷ் செய்ய பிரஷ் போன்ற அமைப்பும் இருந்தன.

நாம தான் ஓட்டவாயாச்சே.. வெக்கம் மானம் எல்லாம் பாக்காம வூட்டுக்கார்கிட்ட வந்து விசயத்தை சொன்னேன்.

அடிப்பாவி.. அது ஷூ பாலிஷ் மிஷின்னு தெரியாதா? ன்னு குபுக் குன்னு சிரிப்பு..

அவர் சிரிக்கும் போதே, பின்னாடி லைட்டா திரும்பி பாத்தேன். எனக்கு பதில் சொல்லும் போது சிரிக்காத அந்த வேலையாள் இப்போது சிரிப்பை மறைக்க முடியாமல் சிரிச்சிட்டு இருந்தாரூ..

....வூட்டுக்காரிடம் , பாருங்க உங்களால தான் அவரும் சிரிக்கறாரு...

"யாரா இருந்தாலும் சிரிப்பாங்க. உனக்கு ஓன்னு தெரியலைன்னா நேரா ..அது என்னன்னு கேட்டிருக்கலாம் இல்ல.... ஏன் காஃபி மிஷினா ன்னு கேட்டு அசிங்கப்பட்ட?"

ஆமா கேட்டிருக்கலாம். ஷூ வ மிஷின் ல பாலிஷ் பண்ணுவாங்கன்னு சத்தியமா எனக்குத்தெரியாது, இப்ப தான் முதல் முறையா பாக்கறேன். அதும் க்ரீம் னு எழுதியிருந்ததால் தான் காஃபின்னு நினைச்சிட்டேன்.. :((

# வெறி big பல்பு :((

***********
"இவருக்கு (விக்ரம்) ரொம்ப வயசாகிடுச்சிப்பா, இன்னும் என்ன ஹீரோ? இனிமே அப்பாவா தாத்தாவா நடிக்கலாம், பாக்க சகிக்கல.."

ஒரு மாதிரியா என்னை திரும்பி பாத்தாரூ.... (அப்பவே உசாரா ஆகியிருக்கனும்)

"அட... ஏன்ப்பா அப்படி பாக்கறீங்க.. (சன் டிவியில் சைமா நிகழ்ச்சி பாத்துட்டே இருக்கோம்) நீங்களேப்பாருங்க.. தாடையெல்லாம் கீழ இறங்கிப்போச்சி.. ரொம்ப வயசு தெரியுது... (இன்னொ்ரு சேனலில் அர்ஜுன் படம்) அந்த அர்ஜூன் கூட.. ரொம்ப வயசு தெரியுது. பொண்ணுங்களுக்கு கல்யாணம் செய்துக்கொடுத்து பேரக்கொழந்த எடுத்தது எல்லாம்  ஏன் இன்னும் ஹீரோவா நடிச்சி தொலைக்கறாங்க.....

நிதானமா திரும்பிப்பாத்து.. "ஏண்டி உனக்கு மனசாட்சியே இல்லையா? உங்க தலைவருக்கு என்ன 16 வயசா?  அவரு நடிச்சா மட்டும் விசில் அடிச்சி பாக்கற? அவருக்கு வயசே தெரியலையா..? இதெல்லாம் முதல்ல அவருக்கு சொல்லு.."

ஆஆஆவ்வ்வ்வ்... (இதுக்கு தான் முதல்லேயே லுக்கு விட்டாரோ..??...) அவரு வேற இவங்கெல்லாம் வேற... எங்க தலைவர் ஸ்டைல் அழகு எல்லாம் இவங்களுக்கு வருமா?....இந்த வயசில் அவரு.....

வாயில் கையை வச்சி மூடி காமிச்சார்...

நானும் கப் சிப்........

**************
பீட்டர் தாத்ஸ் ;  You dont choose your family. They are God's Gift to you, as you are to them. -Desmond Tutu
u don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html
You don't choose your family. They are God's gift to you, as you are to them. Desmond Tutu
Read more at: http://www.brainyquote.com/quotes/topics/topic_family.html

எங்க வீட்டு சமையல் - தீபாவளி இனிப்பு "Chum Chum"

Chum Chum : இது ஒரு பெங்காலி ஸ்வீட். இங்க அநேகமாக எல்லா ஸ்வீட்டுமே ரசகுல்லாவின் அடிப்படையில் செய்யப்படுபவை. பனீரிலிருந்து செய்யப்படும் இனிப்புகளே அதிகம். செய்முறையில் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கும். ரசகுல்லாவை விட Chum Chum ருசியாக இருக்கும். செய்வதும் மிக எளிது.

தேவையான பொருட்கள் :

பால் - ஒரு லிட்டர்,
எலுமிச்சை 2,
சர்க்கரை 1/2 கிலோ,
ஏலக்காய் பொடி - ஒரு ஸ்பூன்
ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்க் - 3 ஸ்பூன்
உலர்ந்த தேங்காய் துருவல் - 5 ஸ்பூன்
பிஸ்தா பருப்பு &  பொடி - 3 ஸ்பூன்
எலுமிச்சை நிற கலர் பொடி- 1/4 ஸ்பூன்

பனீர் தயாரிக்கும் முறை : பாலை காய்த்து, அடுப்பிலிருந்து இறக்கி 1 நிமிடம் ஆறவைத்து, அதில் வடிக்கட்டிய எலுமிச்சை சாற்றை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து மெதுவாக கலக்கவும். பால் திரிந்து வந்தவுடன், அதில் பச்சைத்தண்ணீரை ஊற்றி சூட்டைக்குறைக்கவும். இதனால் பனீர் மேற்கொண்டு வேகாமல் இருக்கும். அதிகம் வெந்துவிட்டால், கடினமாக ஆகிவிடும்.
ஒரு வெள்ளைத்துணியை எடுத்து, அதில் இதைக்கொட்டி வடிக்கட்டி, நன்கு பிழிந்து 30நிமிடம் அப்படியே வைத்துவிடவும்.

Chum Chum செய்முறை : 30 நிமிடம் கழித்து,  பனீரை  அகன்ற தட்டில் கொட்டி, பின் உள்ளங்கையால் நன்கு தேய்த்து கட்டிமுட்டி இல்லாமல் 4-5 நிமிடம் தேய்த்து பிசையவும்.. பின்பு உருண்டையாக உருட்டி வைத்து, அதிலிருந்து சின்ன எலுமிச்சை அளவு எடுத்து இலை வடிவிலும்,டைமன்ட் வடிவிலும், சிலிண்டர் வடிவிலும் செய்து வைத்துக்கொள்ளவும்.

அடுப்பில் அடி கனமான அகலமான பாத்திரம் வைத்து, சர்க்கரையைக்கொட்டி, அதில் 1 1/4 லிட்டர் தண்ணீர் விட்டு அத்துடன் எலக்காய் பொடி, கலர் பொடி இரண்டையும் சேர்த்து கலக்கி, சர்க்கரை கரைந்து கொதித்தவுடன் , தயாராக உள்ள Chum Chum ஐ அதில் போட்டு 15-20 நிமிடம் வேகவைக்கவும். பாகில் போடும் முன் இருந்த அளவைப்போல இரண்டு மடங்காக உப்பி வரும், அப்போது ஜல்லிக்கரண்டிக்கொண்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து, ஆறவிடவும்.  இதை மூன்று விதமாக அலங்கரித்து பரிமாறலாம்.

1. உலர்ந்த தேங்காயை இரண்டு ஸ்பூன் அளவு எடுத்து தட்டில் கொட்டி, அதில் இலை வடிவ Chum Chum ஐ பிரட்டி, அதன் மேல் கொஞ்சம் பிஸ்தா பொடியைத்தூவி வைக்கவும்.

2.டைமன் வடிவ Chum Chum மில் ஸ்வீட் கண்டன்ஸ்ட் மில்கை நீட்டு வாட்டத்தில் மேல் பக்கத்தில் விட்டு, அதன்மேல் பிஸ்தா வை  சிறு துண்டுகளாக்கி தூவி மென்மையாக அது பதியும் படி அழுத்திவிடவும்

3. ஸ்வீட் கண்டன்ஸ்டு மில்க் 2 ஸ்பூன், தேங்காய் துருவல் 2 ஸ்பூன், எலக்க்காய் தூள் 1 சிட்டிகை, பிஸ்தா பொடி 1 ஸ்பூன் சேர்த்து நன்கு கலக்கி, சிலிண்டர் வடிவ Chum Chum மில் நடுவில் கத்தியால் கீறி, இந்த கலவையை  அதுனுள் வைக்கவும்.

இதனை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்து எடுத்து, பின்னர் அலங்கரித்து உடனே சாப்பிடலாம், அல்லது அலங்கரித்து முடித்து ஃப்ரிஜ்ஜில் வைத்தும் சாப்பிடலாம்.

குறிப்பு :

-> பாகு ரொம்ப கெட்டியாகக்கூடாது. கெட்டியானால் Chum Chum உப்பி வந்தாலும் அமுங்கிடும்.
-> பனீர் வடிகட்டி 30 நிமிடம் துணியிலேயே கட்டி வைத்துவிட்டு , பின்பு எடுத்து செய்தால், மிருதுவாக வரும்.
-> கலரை பனீர் பிசையும் போது கடைசியாக கலந்தும் பிசைந்து வைத்துக்கொள்ளலாம்.
-> கடையில் கிடைக்கும் பனீர் வைத்தும் செய்யலாம். பிசையும் போது அதிக நேரம் பிசைய வேண்டும், தேவைப்பட்டால் 2 ஸ்பூன் ரவை, அல்லது 2 ஸ்பூன் arrowroot மாவு சேர்த்து பிசைந்து செய்யலாம். மிருதுவாக வரும்.
-> ஷேப் செய்யும் போது விரிசல் இருக்கக்கூடாது. விரிசல் இருந்தால் வேகும் போது பனீர் வெடித்து பிரிந்துவிடும்.

Images : Thx Google.