பத்தா' vs கவி'

தொலைக்காட்சி, தொலைப்பேசி, இணையம் இவை மூன்றுமே நம் நேரத்தை நாம் அறியாமல் விழுங்கக்கூடியவை.  பத்தா' காலத்தில் இவையில்லை, ரொம்பவே ப்ரொடக்டிவாக பல வேலைகளை அவங்களால் செய்ய முடிந்தது.

குறிப்பாக இணையத்தில் G+, FB, Twitter இவற்றில் மற்றவர்கள் என்ன செய்கிறார்கள், சொல்கிறார்கள் போன்ற விசயங்களில் நம் கவனம் செல்கிறதே ஒழிய.... நாம் என்ன செய்துக்கொண்டிருக்கிறோம் என்பதை மறக்க செய்துவிடுகிறது. ஒருவருக்கு ஒருவர், தான் அறியாமல் தெரியாமல் மற்றவர்களின் விசயத்தில் மூக்கை நுழைப்பதும் நடக்கிறது.

தலைப்புக்கு வருவோம் : என்னுடைய ஆயா, அப்பாவின் அம்மா பத்மாவதி. தாத்தா ஆயாவை செல்லமாக பத்தா'ன்னு தான் கூப்பிடுவாரு.  ஆயாவிற்கு எப்படி நேரம் கிடைத்தது என்பதை இப்போதும் நினைத்து மலைத்துப்போவேன். தோழிகள், உறவினர்கள் வருவார்கள், மணிக்கணக்காக அவர்களோடு பேச்சுவார்த்தை நடக்கும், ஆனாலும் வெட்டியாக பேசிக்கொண்டிருக்க மாட்டாங்க. கைவேலை ஏதேனும் செய்துக்கிட்டே பேசுவாங்க. ஆயாவைப்போல ரொம்ப ப்ரொடக்டிவாக ஒரு நொடியைக்கூட வீணாக்காமல், சூழ்நிலைக்கு தகுந்தார்ப்போன்று, க்ரியேட்டிவாகவும் யோசித்து வேலைசெய்ய யாராலும் முடியாது.

அப்படியென்ன வேலைகள் என்றால்..?!.ஏதோ ஒரு பாலச்சந்தர் சீரியலில் வீட்டில் இருக்கும் பெண் என்னவெல்லாம் செய்யறா'ன்னு மளிகை பட்டியல் போல மிக நீளமான ஒரு பட்டியலை அந்த கதாநாயகி எடுத்துக்காட்டுவாள். அப்படிதான் ஆயாவின் வேலைப் பட்டியலும் முற்றுப்புள்ளி இல்லாமல் நீளும். வருடத்திற்கு ஒரு முறை முறத்தை பேப்பர் கூழ் பூசி வைக்கும் பழக்கம் ஆயா சொல்லிக்கொடுத்தது. வருடத்திற்கு ஒருமுறை  3 மணி நேர என் உழைப்பு மட்டுமே. மிக எளிதாக தூக்கிப்போட்டுவிட்டு வருடம் ஒரு புதிய முறம் வாங்கிக்கொள்ள முடியும் எவ்வளவோ செலவு செய்யறோம்.. இதை செய்துக்கொள்ள முடியாதா என்ன?. ஆனால்  ஆயா எனக்காக பார்த்து பார்த்து வாங்கிக்கொடுத்தவைகளில் இந்த முறமும் ஒன்று. அவ்வளவு எளிதாக தூக்கிப்போட்டுவிட முடியாது.  முந்தைய இரவு பேப்பர் மற்றும் வெந்தயம் சேர்த்து ஊறவைத்து, காலையில் அரைத்து, முறத்தில் பூசி காயவைத்து எடுக்க வேண்டியது தான்.

இந்த ஆண்டு மிகவும் சிரமப்பட்டேன். நான் அறியாமல் எண்ணெய் பாக்கெட் ஒழுகி, ஒன்றன் மேல் ஒன்றாக வைத்திருந்த முறத்தில் ஊறி, அதை நான் கவனிக்காமல் விட்டு, இரண்டும் பிசு பிசுவென எண்ணெய் கறை படிந்து கறுப்பாக, ஒரே எண்ணெய் நாற்றம் வேறு. சோப்பு போட்டு கழுவி காயவைத்துப் பார்த்தேன் போகவில்லை. பிறகு தண்ணீரில் ஊறவைத்து பழைய பேப்பர் கூழ் முழுக்க பிய்த்து எடுத்து, வெயிலில் காயவைத்து, திரும்ப புதிய கூழ் பூசி புதிதாக ஆக்கினேன்.  சில கவனக்குறைவுகளால் ஏற்படும் தவறுகள், நமக்கு பல புதிய விசயங்களை கற்றுக்கொடுக்கத்தான் செய்கின்றன.
 **************

அடுத்து குளியலறை அறிவுகால் ஓட்டை. இதனால் பலப்பிரச்சனைகள், அதாது நாங்க வாடகைக்கு விடாமலேயே ஓசியில்  ஒய்யாரமாக தங்கி இனவிருத்தி செய்யும் கரப்பான் வகையாறக்கள். குளியலறை என்பதால் மண்புழுக்குளும் வந்து உள்ளே புகுந்துக்கும், இவற்றை சாப்பிட எரும்பு என பல வித ஜீவராசிகள் ஒன்று சேர்ந்து வாழும் இடமாகிவிட்டது. எனக்கு குளியலறைக்கு போனால், போன வேலையை விட்டு, கவனம் முழுக்க எங்கு என்ன இருக்கிறது அது எப்போது என் மேலேறும் என்றே இருக்கும், உண்மைய சொன்னால் "பயம்" & சகிப்புத்தன்மை இல்லை.  இதற்கு முடிவுக்கட்ட ஒருநாள் களத்தில் இறங்கினேன். சின்ன ஓட்டையாக இருக்குமென்று தப்புக்கணக்கு போட்டேன். சரியான பொருட்கள் கையில் இல்லை இருந்தாலும், பழைய சமையல் கத்திகள், தட்டை ஆயுதங்களாக மாற்றினேன், மேலுள்ள புகைப்படத்தில், படம் 1 -ல் பாருங்க.. பார்க்க மெல்லிய ஓட்டையாக இருந்தாலும், அந்த பெரியக்கத்தியின் கத்தி பாகம் முழுக்க உள்ளே செல்லுமளவு பெரிய ஓட்டை.  இப்படியாக அறிவுகாலின் இரண்டு பக்கமும், ஒரு அறைக்கு 4,  இரண்டு அறைக்கு மொத்தம் 8 ஓட்டைகள்.  வேறென்ன சும்மா பூசிட்டு போகலாம் என்று உட்கார்ந்த எனக்கு, அரை நாள் வேலையானது. ஆனாலும் விடாம இனிமே ஓசியில் யாருக்கும் வீடு வாடகைக்கு விடறதில்லைன்னு கலவையை உள்ளே தள்ளி தள்ளி முடிச்சோமில்ல.. ?!
*****************

கடைசியாக குளியலறை டைல்ஸ் ஓட்டைகள்:-  2000த்தில் இந்த வீட்டிற்கு வந்தோம். 14 ஆவது வருஷம் நடக்குது. குளியலறை டைல்ஸ்களுக்கு இடையே இடைவெளி...அதில் அழுக்கு சேர்ந்து பழுப்பு நிறமாகவும், ரொம்ப குட்டி குட்டி மண்புழுக்குள் புகுந்து உள்ளிருக்கும் தரையை மேலும் பாழாக்கி கடுப்பேத்தின. டைல்ஸ் ஒட்டும் வேலை எனக்கு அறவே தெரியாது, யாரும் செய்தும் பார்த்ததில்லை,  என்றாலும் குத்து மதிப்பாக இப்படித்தான் இருக்குமென ஊகித்து, குளியலறைய நன்கு கழுவி காயவைத்து, ஒய்ட் சிமெண்ட் வாங்கிவந்து கெட்டியாக்கி, டைல்ஸ் ஓட்டைகள் ஒவ்வொன்றையும் பூசி அடைத்தேன். ஆஹா... இப்ப எங்க குளியலறை பளீச்'ன்னு ஆகிப்போச்சி... ..

பத்தா'வை போல எனக்கு கூட்டுக்குடும்பம், ஏகப்பட்ட குழந்தைக்குட்டிகள், விருந்தினர் வருகை, சொந்தங்கள் அதை சார்ந்த வெளி வேலைகள், கோயில் குளம், பிராத்தனைகள், வழிபாடுகள்,  பெரிய வீடு,வாடகை விட்ட வீடுகளின் பராமரிப்பு,  தோட்டம், மரங்கள், செடி, கொடிகள் இப்படி ஏதுமில்லை என்றாலும்.. .......பத்தா வழியில்......

அணில் குட்டி : இந்த பதிவின் மூலம் நீங்க சொல்ல வரும் கருத்து என்னவோ.. ?!  ஆமா தெரியாமத்தான் கேக்கறேன்... ஏன் இந்த தம்பட்டம். ?!!

பீட்டர் தாத்ஸ் :  House work is what a woman does that nobody notices unless she hasn't done it.  Evan Esar

அவர் எப்படியிருக்காரு?

"நீ போனியா? அவரு எப்படியிருக்காரு... ?!! "

பதிலை எதிர்ப்பார்த்து.... ஆவலும் ஆசையும் ஒரு சேர..  பாட்டியின் கண்கள் பளப்பளவென மின்னியது...

"போனேனே... நல்லாயிருக்காரு பாட்டி..."

"என்னா சொன்னாரு...?! " அதே எதிர்ப்பார்ப்பு மின்னியது....

"உன்னை விசாரிச்சாரு... ஒடம்பு சரியானதும் வந்துடுறேன்னு சொல்ல சொன்னாரு..."

"ம்ம்ம்... விசாரிச்சாரா..... நான் இல்லாம எப்படிதான் இருக்காரோ... ?! நான் இல்லாம இருக்கவே மாட்டாரே........ "  அதே கண்களில் இப்போது நீர்க்கோர்த்து கவலை..ஏக்கம்....தவிப்பு....

"அவர் ஒடம்பு  சரியாகி வர வரைக்கும் தனியா இருந்து பழகிக்கோ பாட்டி.... "

கண்களை விரித்துக்கோபத்தோடு... "என்ன பேசற நீ? ..அவரில்லாமல் நான் எப்ப இருந்திருக்கிறேன்... ...அவர் இங்க இருக்கும்போதே... நீங்கெல்லாம் வாரி சுருட்டி வாயில இல்லப்போட்டுக்குவீங்க....?! "

"சரி சரி..கோச்சிக்காதப்பாட்டி,  உனக்கே தெரியுமில்ல....அவருக்கு ஒடம்பு சரியில்லையே...என்ன செய்யறது... ?! வந்துடுவாரு... ...வந்துடுவாரு..."

".ம்ம்ம்.... . வந்துடுவாரு..."  பார்வை குத்திட்டு நிற்க... ஏதோ சிந்தனையில் ஆழ்ந்துக்கொண்டே ஒரு பக்கமாக சாய்ந்து உடலுக்கு கையை ஊன்றி முட்டுக்கொடுத்து ஒருக்களித்து படுக்கிறார்.... .

*********************

முதியோர் இல்லத்திற்கு சென்றிருந்த என்னிடம், உதவியாளர் பாட்டிக்குத்தெரியாமல் -

 "பாவம்.... தாத்தா இறந்து நாலு நாள்..ஆச்சி.. இன்னும் இதுக்கு தெரியாது.... எவ்ளோ நம்பிக்கையா இருக்குப்பாருங்க..."

"அடடே....இறந்துட்டாரா..?!  ஏன் சொல்லல.... ஏன் சொல்லாம இருக்கீங்க... ..இவ்ளோ எதிர்பார்ப்போட இருக்காங்களே..... பாவமில்லையா.....?! "

"சொன்னா தாங்காதுங்க... தாங்காதுன்னு தெரிஞ்சி எப்படி சொல்றது? இரண்டுப்பேரும் ஒருத்தரை விட்டு ஒருத்தர் இருக்கமாட்டாங்க..."

"ம்ம்ம்ம்"

*********************

நான்கு நாட்களுக்கு முன் உடல் நிலை மிகவும் மோசமாகி, மருத்துமனைக்கு அழைத்துச்செல்லப்பட்ட அந்தப்பாட்டியின் கணவர் அன்றே மருத்துவனையில் இறந்துவிட்டார்.

இவர்களுக்கென்று யாருமில்லை, குழந்தைகள் 4-5 பிறந்து இறந்துவிட்டன, தாத்தா ஆசிரியர் பணியிலிருந்து ஓய்வுப்பெற்று, மாதம் 30 ஆயிரத்துக்கும் மேல் ஓய்வூதியம் பெற்றுவந்திருக்கிறார்.

அவர் இறந்ததறிந்த அந்தப்பாட்டியின் அக்காப்பிள்ளைகள், பாட்டிக்கு விசயத்தை சொல்லாமல், தாத்தாவின் ஈமச்சடங்குகளை நடத்திவிட்டு சென்றுவிட்டனர்.  இருந்த ஒரே உறவும் இறந்ததுத்தெரியாமல்,  வழிமேல் விழிவைத்து அவர் வந்துவிடுவார் எனக் காத்திருக்கும் பாட்டியைப்பார்க்க நெஞ்சு நெகிழ்ந்தது.

பாட்டியின் எதிர்ப்பார்ப்பில் "விரிந்து பளப்பளத்த"  அந்தக் கண்கள் இன்னும் என் கண்களை விட்டு விலகவில்லை...

வாழ்க்கை எத்தனை கொடுமையானது என்பதா...இல்லை அடுத்த மணித்துளியில் நடக்கவிருக்கும்  .....சுவாரசியங்களும், சூழ்ச்சிகளும், மாயங்களும், அதிசயங்களும் ஆச்சரியங்களும் அறியாத "மாயை" என்பதா... ?!

அணில் குட்டி : ஆக்சுவலி.... இதைப்பார்த்ததிலிருந்து அம்மணிக்கு அவங்க எதிர்காலத்தை நினைச்சி அள்ளுவிடுது.. !! அதை வெளியில சொல்லிக்காம பாட்டியோட லைஃப் லைவ் ஸ்டோரி எழுதறாங்க....... ......  .......

பீட்டர் தாத்ஸ் : Life is what happens while you are busy making other plans - john_lennon 

Image : Thx Google

எங்கவீட்டு சமையல் : முளைக்கட்டிய தானியங்கள் தோசை


தேவையானவை :

தோசை மாவு : 4 கப்
முளைக்கட்டிய தானியங்கள் : ஒரு கப் (எல்லா தானியங்களும் கலந்தது கிடைக்கிறது)
தக்காளி : 3
வெந்தயக்கீரை : 1 கப்
உப்பு

செய்முறை :
வெந்தயக்கீரை ஆய்ந்து, சுத்தம் செய்து பொடியாக நறுக்கி சிறிது வதக்கிக்கொள்ளவும், முளைக்கட்டிய தானியங்களை ரவை பதத்திற்கு அரைத்துக்கொள்ளவும், தக்காளியை நறுக்கி அதையும் நன்கு அரைத்துக்கொள்ளவும், இவை அனைத்தையும் உப்பு சேர்த்து தோசை மாவோடு கரைத்து, தோசைகள் சுடலாம்.  இந்த தோசையை ஆப்பத்திற்கு மேல் பக்கம் மூடி வேக வைப்பது போல, வேகவைத்து, திருப்பி போடனும். ஓரங்களில் லேசாக எண்ணெய் ஊற்றி சுடவேண்டும்.

மிகவும் எளிமையான, மிருதுவான, ருசியான தோசை தயார்.  இதற்கு தொட்டுக்கொள்ள கார சட்னி நன்றாக இருக்கும். கொஞ்சம் காரமாக தக்காளி சட்னியும், கத்திரிக்காய் கொத்ஸ்த்தும் செய்திருக்கிறேன்.

இதையே தக்காளி மட்டும் தவிர்த்துவிட்டு அடை மாவிலும் கலக்கி சுடலாம். தக்காளி சேர்க்காமல் செய்வதால், வெந்தயக்கீரையின் அளவை 1/2 கப் ; பாக குறைத்துக்கொள்ளவும். அடை மாவில் எப்போதுமே,  எதாது ஒரு தானியத்தை ஊறவைத்து அரைத்துக்கொள்வேன்.  சோயா ச்சங்க்ஸ்' 4-5 சேர்ப்பேன். கீரையென்றால் வெந்தையக்கீரை மட்டுமே.  வெந்தயக்கீரை தனி ருசியை தரும். 

கத்திரிக்காய் கொஸ்து செய்முறை : வாணலில் எண்ணெய் ஊற்றி, வடவம், கருவேப்பிலை தாளித்து, பூண்டு, சின்ன வெங்காயம் தட்டி சேர்த்து சிவந்தவுடன், பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கி, கடைசியாக பொடியாக நறுக்கிய கத்திரிக்காய் சேர்த்து வதக்கி, மஞ்சத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடிவிடவும். கத்திரிக்காய் நன்று வெந்தவுடன், அடுப்பிலிருந்து இறக்கி கரண்டியால் நன்கு மசித்து பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை சேர்த்து பரிமாறவும்.


Thanks : Google Images

அணில்குட்டி :  எங்கவீட்டு சமையல்னு தலைப்பு போட்டுட்டு, இவங்க புதுசா செய்யற உணவெல்லாம் எழுதறாங்க.. இவங்களுக்கு சமையல் சொல்லிக்கொடுத்த இவங்க ஆயா மட்டும் இதையெல்லாம் படிச்சா? "ஆமா இதெல்லாம் யார் வீட்டு சமையல்னு" கேப்பாங்க.. 

பீட்டர் தாத்ஸ் : “One cannot think well, love well, sleep well, if one has not dined well.” ― Virginia Woolf

நெய்தல்

சென்னையிலிருந்து 60 கிமி தொலைவில்,  பழவேற்காடு எரியை ஸ்ரீஹரிக்கோட்டா தீவு வங்களாவிரிகுடாவிலிருந்து பிரிக்கிறது.  இங்கு பழவேற்காடு ஏரி மற்றும் பறவைகள் சரணாலயம் உள்ளது.   கடலும் கடல் சார்ந்த நிலமும் எப்படியிருக்கும் என்பது தெளிவாகத்தெரிந்தது. பொதுவாக இப்படியான சுற்றுளா தளங்களில்,  சுற்றுளா பயணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து, சுற்றிப்பார்க்கும் இடங்களும், கடலிலிருந்து கிடைக்கும் பொருட்களைக்கொண்டு செய்யப்பட்ட கைவினைப்பொருட்கள் விற்பனைப்போன்றவை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கே அந்த ஊர் மக்களின் அன்றாட வாழ்க்கையைத் தவிர வேறொன்றுமில்லை. வரலாற்று சிறப்பு வாய்ந்த கல்லறைகள்'  மூடிக்கிடந்தன.  தமிழ்நாடு அரசின் படகு குழாம் செயலற்று மூடப்பட்டிருந்தது.  தனியாக நாமே படகு ஏற்பாடு செய்து சுற்றிப்பார்த்து வரலாம். அவர்கள் என்ன வாடகை சொல்கிறார்களோ அதுதான்...பேரம் பேசி குறைக்க முடிந்தால் அது நம் சாமர்த்தியம்.


கடற்கரைக்கு செல்ல மீனவக்குப்பத்தை கடந்து சென்றதால் அம்மக்களையும் பார்க்க முடிந்தது.  செல்லும் வழியெங்கிலும், விதவிதமான, அழகழகான சோழிகள் சிதறிக்கிடந்தன, குப்பையோடு குப்பையாக குவிக்கப்பட்டிருந்தன. கால் வைக்குமிடமெல்லாம் கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது. அதாவது, மனிதர்கள் புழங்கும் இடங்களிலும் நடைப்பாதைகளிலும் கூட ஆங்காங்கே கருவாடு காயவைக்கப்பட்டிருந்தது.
கொக்கு, நாரை, ஃபெலமிங்கோ பறவைகள் மீன் கொத்திச்செல்ல அங்குமிங்கும் பறந்தபடி இருந்தன. கூகுள் ஆண்டவர் சொன்னபடி, பறவைகள் சரணாலயம் என்ற ஒன்றே கண்ணில் படவில்லை, பிப்ரவரி கழிந்தே சீசன் என படகுக்காரர் சொல்லி, ஏதோ தூரத்தில் ஒரு இடத்தை கைக்காட்டினார்.   வெளிநாட்டுப்பறவைகள் ஆயிரக்கணக்கில் வந்து தங்கி, மீன்களை கொத்தித்தின்று இளைப்பாறுமாம். இது ஸ்ரீஹரிக்கோட்டா தீவை ஒட்டிய தீவுப்பகுதிகளில் தான் அதிகம் இருக்குமாம், இவற்றைப் பார்க்க படகில் மட்டுமே செல்லமுடியும்.
பழவேற்காடு ஏரி என்று சொன்னாலும், அங்கிருக்கும் மக்கள் இது ஏரி இல்லை, ஆறு என்றனர். ஆறு கடலில் சென்று கலக்கும் இடம் என்பதால், ஆற்று நீரும் உப்பாகவே இருக்குமென்றனர். மீன், இறால், நண்டு இவையே இவர்களின் வாழ்வியல் ஆதாரம். பெண்கள் ஆற்றில் இறங்கி இறாலை கையாளேயே துழவிப்பிடிக்கின்றனர். இந்த நாட்டு இறால், கரும் பச்சையும்  அடர் சாம்பல் நிறமும் கலந்ததாக இருக்கிறது. மற்றொரு வகை, சாம்பல் நிறத்தில் இருந்தது.  ஆக, இங்கு கிடைக்கும் மீன் இறால் நண்டு எதுவுமே கடலிலிருந்து கிடைப்பதல்ல என்பதை அவற்றைப்பார்த்தாலே தெரிகிறது. மீன் வகைகள் எதையும் இதுவரை பார்த்ததேயில்லை. அநேகமாக எல்லா மீன்களிலும் கருமை நிறம் அதிகம் கலந்தவையாக இருந்தன. 
கண்ணுக்கெட்டும் தூரத்தில், படகைக்கொண்டு சென்று பெரிய வலையைப்போட்டு மீன் பிடித்து வருகின்றனர். அதிக ஆழமும் இல்லை, படகிலிருந்து இறங்கி, தண்ணீரில் நின்று வலைவீசி மீனைப்பிடிக்கின்றனர். படகில் பயணம் செய்யும் போது, அந்த ஆற்றில் மீன்கள் ஏராளமாக இருக்கின்றன என்பது தெரிந்தது. "Life of Pi" படத்தில் வருவதைப்போல மீன்கள் தொடர்ந்து தண்ணீரிலிருந்து எழும்பி பறந்து குதித்தன. இது கண் சிமிட்டும் நேரத்தில் படப்படவென நிகழ்கிறது.. பொடி மீன்களும், பெரிய மீன்களும் படுவேகமாக துள்ளிப்பறந்தன. மீனவர்கள், சூரியன் மறையும் நேரம், படகில் தேவையான பொருட்களை வைத்து கட்டிக்கொண்டு மீன் பிடிக்க புறப்பட்டனர். நாங்கள் படகில் சென்ற போது, சில மீனவர்கள் குழு மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். 
பழவேற்காடு போகும் வழியில் பொன்னேரி- பழவேற்காடு சாலையில் திருப்பாலீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. மிக பழமை வாய்ந்த இக்கோயில் திருக்கடையூர் கோயிலின் சிறப்பைப்பெற்றுள்ளதால், அங்கு செல்லமுடியாதவர்கள் இங்கு தங்களில் 60,70,80 திருமணங்களை செய்துக்கொள்ளலாம். அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் கோயில் இருந்தாலும், வேளால முதலியார்கள் சங்கம் தான் முதன்மையாக நின்று இக்கோயிலை தங்களின் நேரடி கண்காணிப்பில் நடத்திவருகின்றன. சங்க அலுவலங்களை கோயில் பிரகாரத்தில் பார்க்கமுடிந்தது. மிகப்பெரிய பிரகாரம் கொண்ட இக்கோயிலின் நேர் எதிரில் தாமரைப்பூக்கள் பூத்துக்குலுங்கும் பெரியக்குளம் ஒன்றும் இருக்கிறது.  மிக அமைதியான சூழலில் அமைந்துள்ள இக்கோயில் என்னை மிகவும் கவர்ந்தது.  

அணில் குட்டி : "ஊர்சுத்தி உண்ணாமலை "

பீட்டர் தாத்ஸ் : “The ocean stirs the heart, inspires the imagination and brings eternal joy to the soul.” – Wyland

மிதிவண்டி :)

எனக்கு வயது 6, திருச்சி பொன்மலையில் இருந்தோம்.

அம்மா ஊரில் இல்லாத நாட்களில், நானும் சின்ன அண்ணாவும் சாப்பிட, ஒரு ஹோட்டலில் அப்பா ஏற்பாடு செய்திருந்தார். அப்பா உடன்வர வேண்டிய அவசியமில்லை, அண்ணன் கையை பிடிச்சிட்டு போவேன், காஃபியில் ஆரம்பித்து, என்ன பிடிக்கிறதோ சாப்பிட்டு விட்டு, அப்பா பெயரில் கணக்கு எழுதி வச்சிட்டு வந்துடுவோம். விலை சலுகைகள் ஏதுமில்லை என்றாலும், குழந்தைகள் என்ன கேட்டாலும் தரனும், நன்றாக கவனிக்க வேண்டுமென்பது அப்பாவின் வேண்டுகோள்.

பிரதி உபகாரமாக ஹோட்டலுக்கு குடி தண்ணீர் சப்ளை எங்கள் வீட்டிலிருந்து செல்லும். நாங்கள் அப்போது இருந்தது ஃபோர்மேன் குவாட்டர்ஸ் பங்களா. அதன் பின் பக்கம் இரண்டு அவுட் ஹவஸ் வீடுகளில் வேலையாட்கள் தங்கியிருப்பாங்க, அவங்க பயன்படுத்த வெளியில் ஒரு குடிதண்ணீர் குழாய் இருக்கும், அதிலிருந்து, ஹோட்டலிருந்து ஒரு அண்ணன் வந்து இரண்டு குடங்களில் தண்ணீர் நிரப்பி சைக்கிளில் கட்டி எடுத்துட்டு போவார். அந்த அண்ணனுக்கு ஒரு கண் இருக்காது, இமை மூடி தைத்தே இருக்கும், என்ன காரணமென்று எனக்கு நினைவில்லை, அந்த அண்ணனின் முகம் இன்னமும் நினைவில் இருக்கு..

பங்களா என்று சொன்னேன் அல்லவா? தெருவில் இருந்து எங்கள் வீட்டை அடையவே 500 மீட்டருக்கு மேல் நடக்கவேண்டியிருக்கும், வீட்டை கடந்து தோட்டத்து வழியாக பின்னால் சென்று தண்ணீர் பிடித்துவர எப்படியும் 15-20 நிமிடங்கள் பிடிக்கும். ஒற்றைக்கண் அண்ணன், தெருவில் சைக்கிளை விட்டுட்டு, குடத்தோடு குழாயடிக்குச் சென்று வருவதற்குள் சின்ன அண்ணன் (7 1/2 வயசு), அந்த சைக்கிளை எடுத்து குரங்குப்பெடல் அடித்து ஓட்ட முயற்சி செய்வார். ஒரு வாரம், 10 நாட்களுக்குள் சைக்கிள் நன்றாகவே ஓட்டக்கற்றுக்கொண்டார்.

நான் இதை வேடிக்கைப்பார்க்கவும், ஒற்றைக்கண் அண்ணன் தண்ணீர் குடத்தோடு வந்தால், "கார்த்தீஈஈஈஈ...... அண்ணா வந்துட்டாங்க...வா"ன்னு குரல் கொடுக்கவும் மெயின் கேட்டில் நிற்பேன்.

சின்ன அண்ணன் ஓசியில் சைக்கிள் ஒட்டக்கற்றுக்கொண்டு, எனக்கு லேடிஸ் சைக்கிள் வாடகைக்கு எடுத்து, (ஒரு மணி நேரம் 50பைசா) கிரவுண்டுக்கு அழைத்துச் சென்று கற்றுக்கொடுத்தது.  அண்ணனின் விடா முயற்சியில் 1-2 நாட்களில் கற்றுக்கொண்டேன்..

இருவருக்கும் நன்றாக சைக்கிள் ஓட்டத்தெரிந்தாலும், அண்ணன் சம்பாதிக்க ஆரம்பித்தப்பிறகு அவருக்கென ஒரு சைக்கிள் வாங்கினார். எனக்கு,  நவீனுக்கு 2 வயதாகும் போது தான் சைக்கிள் சொந்தமாக கிடைத்தது. அதுவரையில் நமக்கென்று சொந்தமாக ஒரு சைக்கிள் இல்லை என்ற ஏக்கம் இருக்கதான் செய்தது. என் வயதை ஒற்ற, என் அத்தை மகளுக்கு சைக்கிள் பள்ளிப்பருவத்திலேயே வாங்கிக்கொடுத்தார்கள். அதைப்பார்த்து வீட்டில் எவ்வளவு கேட்டும் சைக்கிள் வாங்கித்தரல...எப்பவும் நடராஜா சர்வீஸ் தான்.. 

இப்படியாகவே என் சின்ன வயசு சொந்த சைக்கிள் கனவு, ஏக்கத்தோடு கரைந்தது. இன்று அனைவரும் வித விதமான கார் கனவுகளோடு வேகமாக முன்னேறிக்கொண்டிருக்க எனக்கென்னவோ சைக்கிள் வாங்கதான் ஆவல். பல வருடங்கள் கழித்து, 1992-94க்கு பிறகு, திரும்பவும் சைக்கிள் வாங்கி ஓட்டி வருகிறேன்.

புது சைக்கிள் தான் வாங்கனும்னு வீட்டில் ஒரே கெடுபிடி. மாதக்கணக்கில் அடம்புடிச்சி...உபயோகப்படுத்திய சைக்கிள் தான் வேண்டுமென ஒருவழியாக வாங்கிட்டேன்.. :)

என்ன... இன்னும் ஓட்டுவதற்கு பேலன்ஸ் சரியா வரல..நம்ம சாலைகள் வேற சூப்பரா இருக்கறதால.. கொஞ்சம் திணறதான் செய்கிறேன். அதேப்போல இரவு நேரங்களில் விளக்கு இல்லாத தெருவில் ஓட்ட மேடுபள்ளம் சுத்தமா கண்ணுத்தெரியல.. :)  மொத்தத்தில் எனக்கு முன்னால், பின்னால் வரும் வண்டிக்காரர்கள் நான் ஓட்டுவதைப்பார்த்து பயப்படுவது அப்பட்டமாக தெரிகிறது. 

கொஞ்ச நாள் ஆனா சரியாகிடும்னு நம்பறேன்.  இல்லையா எங்கையாச்சும் விழுந்து வாரி சில்லறை பொறுக்கி சைக்கிள் ஓட்டறதை நிறுத்தவும் சொல்லிடுவாங்களோன்னு லேசாக உள்ளுக்குள் பயம் இருக்கதான் செய்து... பார்க்கலாம்...

என்னோட Black Bird ஐ விட, சைக்கிள் ரொம்பவே பிடிச்சியிருக்கு..
பெட்ரோல் செலவு மிச்சம், உடற்பயிற்சியும் ஆச்சி...

அணில் குட்டி  : அந்த சைக்கிள் என்ன பாவம் பண்ணுச்சோ... .படாதபாடுப்படுது .... :((((

பீட்டர் தாத்ஸ் : Life is a Cycle.. :)

மிதிவண்டி வரலாறு : நன்றி விக்கி 

பதினேழாம் நூற்றாண்டில் பிரான்ஸில் செல்வச் செழிப்பான குடும்பத்தில் பிறந்தவர் கோம்டி மீடி டீ ஷிவ்ராக் (Comte Mede De Sivrac) என்பவர் பொழுது போக்காக வீட்டிற்கு தேவையான அலங்காரப் பொருட்களை தயாரிப்பதில் ஈடுபட்டார். ஒருநாள் மரதுண்டுகளை செதுக்கிக் கொண்டிருக்கும்போது தற்செயலாக அவரது சிந்தனையில் தோன்றிய வடிவம் தான் மிதிவண்டி. 1791-ஆம் ஆண்டு முழுக்க முழுக்க மரத்துண்டுகளால் செய்யப்பட்ட சைக்கிள் ஒன்றை வடிவமைத்தார். இந்த சைக்கிளை ஓட்டுபவர் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு காலால் தரையை உந்தித்தள்ளி சைக்கிளை முன்னோக்கி உருளச்செய்ய வேண்டும். ‘The Celerifere’ என்று அழைக்கப்பட்ட இந்தவகைமிதிவண்டியில் திசைமாற்றி, மிதிஇயக்கி, தடை, என எதுவும் கிடையாது. பிரான்ஸ் நாட்டிலுள்ள Palais Royal என்ற இடத்தில் 1794-ஆம் ஆண்டு அறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் தனது கண்டுபிடிப்பு பற்றி ஷிவ்ராக் விளக்கிக்காட்டினார். [2]இந்த நிகழ்வு மிதிவண்டி உருவாவதற்கு காரணமாக இருந்தது. தொடர்ந்து படிக்க 

எங்க வீட்டு சமையல் - ஸ்டஃப்ட் சப்பாத்தி

தினம் இரவில் சப்பாத்தி தான் உணவு என்றாகிவிட்டது. இதற்கு தொட்டுக்கொள்ளும் உணவை எப்படி மாற்றி மாற்றி செய்தாலும், ஒரு சில சமயங்களில் சப்பாத்தியை சாப்பிட சளிப்பு ஏற்படுகிறது. அதனால் நடுநடுவில் ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்வேன்.

குறிப்பு.: இந்த பதிவில் முள்ளங்கியை வைத்து ஸ்டஃப்ட் செய்ததை எழுதியிருக்கேன்.   முள்ளங்கி தவிர, கோஸ், கேரட், வெந்தையக்கீரை, அரைக்கீரை, பட்டாணி, உருளைக்கிழங்கு, காலிஃபெளவர், சுரக்காய், பீர்க்கங்காய் என எதில் வேண்டுமேனாலும் உங்களின் விருப்பப்படி செய்யலாம். ஆனால் ஒவ்வொன்றின் செய்முறையும் தேவையான பொருட்களும் அந்தந்த காய்கறி, கீரைக்கு தகுந்த மாதிரி மாறும்.   

ஸ்டப்ஃட் சப்பாத்தி செய்ய தேவையான பொருட்கள் :

சப்பாத்தி செய்ய : 

கோதுமை மாவு - 2 கப்
எண்ணெய் - 1-2 ஸ்பூன்
உப்பு தேவைக்கேற்ப

மசாலா செய்ய :

வெள்ளை (அ) சிகப்பு முள்ளங்கி : 3 
வெங்காயம் : 1 
பூண்டு : 4-5 பல்
இஞ்சி - சின்னத்துண்டு
பச்சைமிளகாய் - 1 
மஞ்சள் தூள் : ஒரு சிட்டிகை
மிளகாய்த்தூள் :- 1 1/2 ஸ்பூன் (தனியா, மிளகாய் கலந்தத்தூள்)
எண்ணெய் : 2 ஸ்பூன்
கொத்தமல்லி தழை : சிறிது
உப்பு தேவைக்கேற்ப

செய்முறை :  கோதுமை மாவை தேவையான அளவு தண்ணீர் விட்டு பிசைந்து வைத்துவிடவும்.

முள்ளங்கியை கேரட் சீவலில் சீவி வைத்துக்கொள்ளவும், அதன் கூடவே இஞ்சி, பூண்டையும் பொடியாக சீவி கலந்து வைத்துக்கொள்ளவும்.
மைக்ரோவேவ் அவன் (Oven) கண்ணாடி கிண்ணத்தில் எண்ணெய் விட்டு 30 செகண்ட் சூடு செய்யவும். சூடானவுடன் வெளியில் எடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை கலந்து 1-2 நிமிடம் சூட்டில் வைக்கவும். வெங்காயம் வதங்கியிருக்கும், இத்துடன் முள்ளங்கி, இஞ்சி, பூண்டு, மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், உப்பு சேர்த்து நன்கு கலக்கி 8 நிமிடங்கள் சூட்டில் வைக்கவும். நடுவில் ஒருமுறை நிறுத்தி கலக்கிவிடவும்.


கடைசியாக, கிண்ணத்தை வெளியில் எடுத்தப்பிறகு, பொடியாக நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலையை சேர்த்து கலக்கி விடவும்.

சப்பாத்தி மாவை கொஞ்சம் பெரிய உருண்டையாக எடுத்து, படம் 1 ல் உள்ளது போல உருட்டி, அதன் மேல் முள்ளங்கி மசாலாவை வைத்து, படம் 2 ல் உள்ளது போல மடக்கி, படம் 3 ல் உள்ளது போல மிருதுவாக மெதுவாக
உருட்டவும். சப்பாத்தி உருட்டும் குழவி மெல்லியதாக இருந்தால், இந்த ஸ்டஃப்ட் சப்பாத்தியை உருட்டுவது எளிது, மசாலா வெளியில் வராமல் உருட்ட முடியும். 
தோசைக்கல்லை சூடாக்கி,  சப்பாத்தியை இட்டு, எண்ணெய் அல்லது நெய் விட்டு இரண்டு பக்கமும் திருப்பிப்போட்டு, நன்கு வெந்ததும் எடுக்கவும்.  இதற்கு தொட்டுக்கொள்ள எதும் தேவையிருக்காது. ஒரு வேளை தேவைப்பட்டால் ஊறுகாய் வகைகள் நன்றாக இருக்கும்.

 அணில் குட்டி : பாவம் அம்மணி ஊட்டுக்காரு, அம்மணி என்னைக்கு ஸ்டஃப்ட் சப்பாத்தி செய்யறாங்க.. என்னைக்கு வெறும் சப்பாத்தி செய்யறாங்கன்னு தெரியாம..  ஸ்டஃப்ட் சப்பாத்தியை தட்டில் வச்சிக்கிட்டு "தொட்டுக்க எங்க" ன்னு கேட்டு நல்லா வாங்கிக்கட்டிக்குவாரு... :)

பீட்டர் தாத்ஸ் :  “There is no spectacle on earth more appealing than that of a beautiful woman in the act of cooking dinner for someone she loves.”  ― Thomas Wolfe

பென்சில் சீவலின் மிச்சத்தில் வரைந்த படங்கள்...









மேலுள்ளவைகளை வரைவதற்கு முன் அவற்றின் படங்கள் : 

பென்சில் சீவி எடுத்த மிச்சத்தை வைத்து எதையோ செய்ய போனேன்...அதை செய்து முடிக்கும் போது...இதிலிருந்து ஏதாவது உருவம் செய்யலாம் போலவே'ன்னு யோசனை வர கூகுளில் தேடினேன்..நிறைய ஐடியா கிடைச்சது.. அதையும் பயன்படுத்திக்கிட்டேன்..நானும் கூட சிலதை வரைந்துப்பார்த்தேன்...  பிறகு புகைப்படங்கள் எடுத்து அவற்றை MSpaint டில் கற்பனைக்கேற்ற படங்களாக வரைந்தேன். டிசைன்ஸ் நல்லாவே வந்தது.... (நாமே சொல்லாட்டி எப்படி?)

உங்களுக்கும் பென்சில் சீவலிலிருந்து புதுசா டிசைன் வரைய ஐடியா கிடைத்தால் சொல்லுங்க .. வரைந்துப்பார்ப்போம்!.  உங்க வீட்டு குட்டீஸ்'க்கு காட்டுங்க, அவர்களிடம் நிறையவே ஐடியா கிடைக்கும்.. அவற்றை இங்கே பகிரவும்...

அணில் குட்டி : ம்க்கும்...இதை செய்யறேன் அதை செய்யறேன்னு, பென்சிலை சீவி சீவிப்போட்டு, அது பாட்டுக்கும் ஃபேன் காத்தில் பறந்து அங்க இங்கன்னு வீடுப்பூராவும் ஒரே குப்பை....அம்மணி அதையெல்லாம் கண்டுக்காம தீவிரமா படம் வரைய..பாவம் அவங்க வூட்டுக்காரு.. பொறுக்கமுடியாம ஒவ்வொன்னா எடுத்து குப்பைத்தொட்டியில் போட்டுக்கிட்டு இருந்தார்.... இதையெல்லாம் இந்தம்மா வெளியில் சொல்ல மாட்டாங்களே... ??!!

பீட்டர் தாத்ஸ் : “Art doesn’t have to be pretty. It has to be meaningful.” ~Duane Hanson

Thx : Google.

ராஜநாகம்

25 வருடங்களாக  ராஜநாகத்தை’ (King Cobra) ஆராய்ச்சி செய்யும் வெளிநாட்டவர் ஒருவர், இந்தியாவின் மேற்குப்பகுதியில், கர்நாடக காடுகளில் தன் ஆராய்ச்சியை தொடர வருகிறார். இந்திய மாணவர்களும் இந்த ஆராய்ச்சியில் உடன் பணி செய்கிறார்கள்.

இந்த ஆராய்ச்சியின் முதற்கட்ட வேலையாக, ஆண், பெண் என இரண்டு ராஜ நாகங்களை, காடுகளில் மிகுந்த சிரமங்கங்களுக்கிடையில் தேடி பிடிக்கின்றனர். பிடிக்கப்பட்ட நாகங்கள் இரண்டிற்கும் மயக்கம் செலுத்தப்பட்டு, அவற்றின் உடலில் பாம்புகள் இருக்குமிடத்தை காட்டக்கூடிய இண்டிக்கேட்டர் பொறுத்தப்படுகிறது. 

மயக்கம் தெளிந்து, உடல்நிலை சீரான இரண்டு ராஜநாகங்களும்,  பிடிக்கப்பட்ட இடத்தை விடுத்து, வெகுதூரத்திற்கு கொண்டுசெல்லப்பட்டு, காட்டில் வெவ்வேறு இடங்களில் விடப்படுகின்றன. இரண்டையும்
ஆராய்ச்சியாளர்கள், இண்டிகேட்டரின் உதவியோடு பின் தொடர்கின்றனர். இரண்டு ராஜநாகங்களும் தன் இறையைத்தேடுவதோடு, தன் துணையையும் தேடுகின்றன.  ஒரு கட்டத்தில் காதலன் காதலி இரண்டும் சந்திக்கின்றன. இரண்டும் கூடி சந்தோஷமாக இருக்கின்றன. பெண் ராஜநாகம் கருவுகிறது. 
இந்நிலையில், வேறொரு இடத்திலிருந்து வரும், ஒரு ஆண் ராஜநாகம்(2) இவ்விடத்தில் குடியேற முனைக்கிறது. அப்படி புது இடத்தில் குடியேற நினைக்கும் ராஜநாகம்(2), அங்கு ஏற்கெனவே இருக்கும் ஆண் ராஜநாகத்தோடு(1) சண்டையிட்டு, அதனை வெற்றிப்பெற்றால் தான் குடியேற முடியும். அதனால், இந்த புதிய ஆண் ராஜநாகமும்(2), அங்கு முன்னமே இருக்கும் ஆண் ராஜநாகமும்(1) –(இண்டிகேட்டர் பொறுத்தப்பட்ட) சண்டையிட தொடங்குகின்றன. 2-3 மணி நேரம் நடைபெறும் இந்த பெரிய ஆக்ரோஷமான யுத்தத்தின் முடிவில், புதிய ராஜநாகம்(2) வெற்றிப்பெற்று அந்த இடத்தில் வெற்றிக்களிப்போடு குடியேறுகிறது.

இந்த புதிய ராஜநாகம்(2), அங்கிருக்கும் பெண் ராஜ நாகத்தை சந்திக்கிறது. அதன் மேல் மையல் கொண்டு தன் இச்சையை வெளிப்படுத்துகிறது. ஆனால்,  அதற்கு அடிபணிய மறுக்கும் பெண் ராஜநாகம், அதனை விட்டு விலகிசெல்கிறது. ஆனால் விடாமல் துரத்தும் புதிய ஆண் ராஜநாகம், கெஞ்சியும் கொஞ்சியும் மிகவும் நாகரீகமான முறையில் தன் ஆசைக்கு
இணங்க வைக்க எல்லாவிதமான முயற்சியும் செய்கிறது.

பெண் ராஜநாகமோ, தன் காதலனின் கருமுட்டைகளை சுமந்துக் கொண்டிருப்பதால் புதிய ஆண் ராஜநாகத்தை அறவே வெறுத்து ஒதுக்குகிறது. ஒரு கட்டத்திற்கு மேல், பொறுமை இழக்கும் ஆண் ராஜநாகம், கோபம் கொண்டு வெறித்தனமாக அந்த பெண் ராஜநாகத்தை மிகச்சரியாக அதன் கழுத்தில் கடித்து, கொஞ்சம் கொஞ்சமாக துடிதுடிக்க சாகடிக்கிறது. சிறிது நேரப்போராட்டத்திற்கு பிறகு பெண் ராஜநாகம் இறந்தேப்போகிறது. ஆராய்ச்சியாளர்கள் இந்த பெண் ராஜநாகத்தின் வயிற்றை அறுத்துப்பார்க்கையில் அதனுள் 17 முட்டைகள் இருந்தன. இந்த இறந்த நாகத்தை நெருப்பு மூட்டி  எரித்துவிடுகின்றனர்.

பின்னர், அதே காட்டில் புதிய ராஜநாகத்தின் மூலமாக கருவுற்ற வேறொரு பெண் ராஜநாகம் 21 முட்டைகளை இட்டு, அதை அடைக்காக்க காய்ந்த மூங்கில் தழைகளையும், இலைகளையும் ஒரு அடி உயரத்திற்கு குவித்து, முட்டைகளுக்கு தேவையான சீதோஷனநிலையை உருவாக்கி அவற்றிற்கு பாதுக்காப்பாக அங்கேயே இருக்கிறது.

இப்படியாக முடிவுபெறும் இந்த ராஜநாகத்தின் ஆராய்ச்சி கதையை "நேட் ஜியோ" வில் பார்த்த போது, காதலன் பாம்பு காதலியை தேடும் போதும், அவற்றின் தவிப்புகளும், தேடிக் கிடைத்தப்பின் அவற்றின் காதல் லீலைகளும், இரு ஆண் ராஜநாகங்களுக்கு இடையே நடக்கும் சில மணி நேர நிஜமான யுத்தமும், பின்பு பெண் ராஜநாகத்தை கொல்லும் போது ஆண் ராஜநாகத்தின் வெறித்தனத்தையும் பார்க்கையில் ஒரு வித பதட்டமும் ஆச்சரியமும் ஏற்படாமல் இல்லை.

சிறந்த திரைக்கதையில் அமைந்த ஒரு தமிழ் புராணக்கதை பார்த்தது போன்றே இருந்தது.  இது இப்பவும் நடக்கும் உண்மை சம்பவம் என்பதை அறிவுஏற்றுக்கொள்ள நேரம் பிடித்தது. 

ஆண்’ என்பவன், இந்த உலகத்தில் எந்த ஜீவராசி வடிவில் பிறந்திருந்தாலும் அதீத வீரத்தோடும், பெண்ணை அடக்கி ஆள்பவனாகவும், அடிமைப்படுத்துபவனாகவும், அதே சமயம் அவனே பெண்ணிற்கு சிறந்த பாதுகாப்பாளனாகவும் இருக்கிறான். இதை இயற்கையின் படைப்பில் ஒன்றாகவே பார்க்கவேண்டுமே ஒழிய.... பெண்ணீய பிதற்றல்களோடு பார்த்து..... .....அடடே  சப்ஜெக்ட் மாறுதே....?!!... ராஜநாகத்திற்கு வருவோம். 

ராஜநாகங்களைப் பற்றிய சில தகவல்கள் : 

ராஜநாகங்கள், 300 அடி தொலைவுக்குள் தன் இறையை பார்க்கும் வலிமைப்பெற்றது.  இவற்றிற்கு மிகவும் பிடித்த உணவு மற்ற பாம்பினங்களே. 

இவை, நேரடியாக நரம்பு மண்டலத்தை தாக்கி, மயக்கத்தை உண்டாக்கி, தூக்க நிலைக்கு செல்லவைத்து பிறகு இறக்கவைக்கும் விஷத்தன்மை கொண்டவை. 

ராஜநாகங்கள், மிக அறிதாகவே மனிதர்களை தாக்குக்கிறது. அதேசமயம்,  யானையை ஒரே கடியில் சாய்க்குமளவுக்கு தன்னுள் கடுமையான விஷத்தைப்பெற்றவை. அவ்விஷமானது ஒரே நேரத்தில் 20 மனிதர்களை சாகடிக்க வல்லவை. 

தன் உடலின் நீளத்தில், மூன்றில் ஒரு பங்கு உடலை தூக்கி நிற்ககூடியது. 

மேற்கிந்தியாவில் அதிகமாக ராஜநாகங்கள் காணப்படுகின்றன. 

காய்ந்த இலைகள், காய்ந்த மூங்கில் தழைகளைக்கொண்டு தன் முட்டைகளை மூடி அதற்கு தேவையான சீதோஷன நிலையை உருவாக்குகின்றது.  இதனை ஒரு மலைப்போல ஒரு அடி உயரத்திற்கு முட்டைகளின் மேல் கூட்டிவைத்து தன் முட்டைகளை காக்கிறது. 

அதிகபட்சமாக 24 முட்டைவரை இடக்கூடியவை, ஆனால் எத்தனை முட்டைகள் இட்டாலும், அவற்றில் பிழைத்து வருவது என்னவோ 1-2 ராஜநாகங்கள் மட்டுமே.

நன்றி : நேட் ஜியோ & கூகுள்.

அணில் குட்டி : ம்ம்ம்...இனி இப்படியெல்லாம் வேற பதிவு வருமோ ?! டிவி கேபிள் ஒயரை முதல்ல புடுங்கிவுடனும்... 

பீட்டர் தாத்ஸ் : Owing to ignorance of the rope the rope appears to be a snake; owing to ignorance of the Self the transient state arises of the individualized, limited, phenomenal aspect of the Self.- Guru Nanak

கணினி ஓவியங்கள்

 ஆற்றோரம் குடிசை, அத்தோடு இணைந்த வாழ்க்கை என என் கனவுகளில் வரும் இந்த காட்சியை சின்ன வயதிலிருந்தே அடிக்கடி வரைந்து வைத்து அழகுப்பார்ப்பேன். இப்போது பெயின்ட் பிரெஷ்ஷில் தொடருகிறது....

   கூகுள் கிலிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி - நாய்க்குட்டி

 பறவை - இதும் கூகுள் க்லிப் ஆர்ட் பார்த்து வரைந்த காப்பி

வினாயகர் சதுர்த்தசி அன்று,  #Ganesh #OneLine #1Min #MsPaint  இப்படியொரு Tag 'ல், G+ ல் , இளா (விவாஜி) ஒரு ஓவியத்தை பதிவிட்டுருந்தார். அட... நாம ஏன் வரைந்துப்பார்க்க கூடாதுன்னு வரைந்தேன்.. என்னுடையது  #Gajananam #OneLine #27 Seconds #MsPaint  - நன்றி விவாஜி

 சில வெள்ளிக்கிழமைகளில் எங்கள் வீட்டு வாசலில் நான் இடும் கோலம்...


கலர்ஃபுல் கிளி..  இதும் கூகுள் இமேஜ் பார்த்து வரைந்ததே.. :)


மற்றுமோர் இயற்கை காட்சி... என் வானிலே...

* MSPaint ல் வரைந்தவை.

அணில் குட்டி : ஆங்...அம்மணி..?!... கூகுள் பார்த்து காப்பி அடிக்க இவ்ளோதானா கிடைச்சது ???

பீட்டர் தாத்ஸ் : Drawing is rather like playing chess: your mind races ahead of the moves that you eventually make - David Hockney  

எங்க வீட்டு சமையல் : ஆப்பம்

எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.
 
தேவையான பொருட்கள் : 
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு.  படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது. 

செய்முறை :  பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து,  வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில்,  4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும்  நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !! 

தேங்காய் பால் செய்முறை :  தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை  ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும்.  பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.  பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் பாலின் பயன்கள்
 * வயிற்றுப்புண்ணிற்கு நல்லது.  முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
 
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க 

அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு,  அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........

பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel