திருவையாறு என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது, தியாகராஜ ஆராதனை விழாவும் அனைத்து இசை கலைஞர்களும் ஒரே இடத்தில் நடத்தும் இசை நிகழ்ச்சிதான்.

இதைத்தாண்டி, இங்கே வரலாற்று சிறப்புமிக்க பிரம்மாண்டமான ஐயாறப்பர் சிவன் கோயில் இருக்கிறது.  தஞ்சாவூர் மாவட்டம் திருவையாற்றில் காவிரி கரையில் அமைந்துள்ள இக்கோயில் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சிவத்தலமாகும். தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் இது 51வது சிவத்தலமாகும். இச்சிவாலயத்தின் மூலவர் ஐயாறப்பர், தாயார் தருமசம்வர்த்தினி. 

இக்கோயிலில் நுழைந்துவுடன் அதன் பிரம்மாண்டம் கவனத்தை ஈர்த்தது. திருவாயாறில் இப்படியொரு ஒரு கோயிலா என்ற ஆச்சரியம் நீங்காது கவனித்தபோது தான் அத்தனைப்பெரிய கோயிலை மிக மிக சுத்தமாக பராமரித்து வருவதையும் பார்க்க முடிந்தது. 

இக்கோயிலைப்பற்றி ஒன்றும் தெரியாமல் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் சென்றாதாலேயே இதன் பிரம்மாண்டம் பிரம்மிக்க வைத்தது. திருவாரூர் கோயிலைவிடவும் பெரியக்கோயில், மூன்று பிரகாரங்கள். இக்கோயில் தனுசு ராசி அன்பர்களுக்கு உகந்தக்கோயில் என்பதை சென்றுவந்தப்பிறகு தெரிந்துக்கொண்டேன்.  

இந்த கோயிலின் மற்றொரு சிறப்பு இதன் மூன்றாவது பிரகாரமான சப்தஒலி பிரகாரம். சுவாமி தரிசனம் முடித்து வெளியில் வந்தபோது, சப்தஒலி பிரகாரத்தின் பலகையை பார்த்தோம். ஆனால் இது மூன்றாவது பிரகாரம் என்பதால் இதில் யாருமே சுற்றவில்லை. இருப்பினும் பலகையைப்பார்த்த ஒரு ஆர்வத்தில் நானும் அவரும் மட்டும் பிரகாரத்தை சுற்ற ஆரம்பித்தோம்.

சில அடிதூரம் நடக்கும் போதே அந்த பிரகாரம் மற்ற கோயில்களின் பிரகாரம் போல இல்லாது இரண்டுப்பக்கமும் மிக உயர்ந்த மதில் சுவர்களை கொண்டதாக இருந்தது. யாருமில்லாததால் ரொம்பவே அமைதியாக ஏதோ ஒரு அகன்ற குகைக்குள் செல்லும் அனுபவமாக இருந்தது.  சப்தஒலி என்பது எங்கு எப்போது வந்து நம்மை பயமுறுத்தும் என்ற எதிர்ப்பார்ப்போடு அன்னாந்து மதில் சுவர்களின் உயரத்தைக்கண்டு அசந்துப்போய் நடந்துக்கொண்டே போகும் போது இடது பிரகாரம் முடியும் இடத்தில், இங்கு நின்று வடக்கு நோக்கி "ஐயாறா" என்று குரல் எழுப்பினால் 7 முறை எதிரொலிக்கும் என்ற பலகையை பார்த்தவுடன் எது வடக்கு என்ற குழப்பம் வந்து என் கணவர் வலதுப்பக்கம் திரும்பி "ஐயாறா" என்று கூப்பிட.. அட.. ஆமாம்.. அக்குரல் 5 முறை எதிரொளித்தது, மீதமிருந்த இரண்டு ஒலி மிக மெல்லியதாக இருந்திருக்கிலாம், ஒருவேளை மிகநுட்பமான ரெக்கார்ட்கள் கொண்டு பதிவிட்டால் 7 முறை வெவ்வேறு ஒலியின் நீளத்தில் நமக்கு கேட்கக்கிடைக்கும். எதிரொலி என்பதைத்தாண்டி வெவ்வேறூ ஒலிவடிவில் கேட்பது வியப்பே. இதன் முக்கிய க்காரணம் இக்கோயிலின் கட்டிட அமைப்பே. 

அவர் வடக்கு நோக்கி சப்தமிட, நான் அவரை நோக்கி அதாவது தெற்கு நோக்கி சப்தமிட அதே ஒலியை வடக்கிலிருந்து கேட்க முடிந்தது. இது ரொம்பவே ஆச்சரியம் தான், இதையே இதன்பிறகு பார்த்த கோயில்களில் முயற்ச்சி செய்து ஒரு சத்தமும் வராதது ஏமாற்றமே.அம்பாள் சன்னிதிக்கு ஒரு 1/2 கிமீ நடந்து செல்ல வேண்டியிருந்தது. அத்தனைப்பெரிய கோயில். 

இந்த கோயிலுக்கு செல்ல திட்டமிடும் போது திருவையாறை சுற்றி 5 (இக்கோயிலை சேர்த்து 6) சிவத்தலங்களுக்கு செல்ல திட்டமிட்டுக்கொள்ளலாம். எல்லாமே 2-15 கிமீ ல் இருக்கிறது. 

புஷ்பவனேஸ்வரர் கோயில் 

திருப்பூந்துருத்தி

 

நெய்யாடியப்பர் கோயில் 

தில்லைஸ்தானம் 

 

 

 


 

ஐயாறப்பர் கோயில்

திருவையாறு 

 

ஆபத்சகாயேஸ்வரர் கோயில் 

திருப்பழனம்

 

சோற்றுத்துறை நாதர் கோயில் 

திருச்சோற்றுத்துறை

 

திருவேதிகுடி

திருவேதிகுடி 

 

பிரமசிரக்கண்டீசுவரர் கோயில் 

திருக்கண்டியூர்

 

டெல்டா மாவட்டங்களில் எந்த ஒரு கோயிலுக்கு செல்ல திட்டமிட்டாலும், போகும் வழியில் உள்ள அத்தனைக்கோயில்களையும் கூகுளில் தேடி சென்றுப்பார்க்கலாம். கண்டிப்பாக 3-5 கிமீ ஒரு கோயில் இருக்கும். திரு' என்று ஆரம்பிக்கும் ஊர்களில் நிச்சயம் பெரிய வரலாற்று சிறப்புமிக்க கோயில்கள் இருக்க வாய்ப்பிருக்கிறது. இப்படி கூகுளில் தேடி தேடியே திருவாரூரை சுற்றியுள்ள பலக்கோயில்களை நாங்கள் தரிசித்துவருகிறோம்.