ஆரூரா தியாகேசா

திருவாரூர் = திரு+ஆரூர். இது சப்தவிடங்க தலங்களின்
தலைமையிடமாகும். சப்தவிடங்கத்தலங்கள் என்பது சிவபெருமானின் பல்வேறு நடனங்களை அடிப்படையாகக்கொண்டு அமைந்த வழிப்பாட்டு தலங்கள். திருவாரூரில் கோவில் கொண்டுள்ள தியாகராஜர் மேலும் 6 ஊர்களில் கோவில் கொண்டுள்ளார் ( சப்தவிடங்க தலங்கள் - இக்கோயில்களைப்பற்றி தனியாக எழுதுகிறேன்) எனவே முதலில் ஆரூர் (தேவார பாடல்களில் ஆரூர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது) என்றும் பின்னர் கோவில் ஊர் என்பதால் திரு சேர்க்கப்பட்டு திருஆரூர் என்றாகி திருவாரூர் என மருவியது.

 திருவாரூர் வந்ததிலிருந்து அன்றாட வாழ்க்கை முறையில் நிறையவே மாற்றங்கள். பெரும்பாலும் நகரத்திலேயே அமைந்துவிட்ட வாழ்க்கையில், பழக்க வழக்கங்களும் அப்படியே தொடர்ந்தும் விட்டது.. இங்கு கிராமத்தோடு ஒட்டிய வாழ்க்கை பல விசயங்களைக் கற்றுத்தருகின்றது. பல நேரங்களில் பிடிக்காமல், என்னடா  வாழ்க்கை இது ன்னு எரிச்சலும் ஏற்படுகிறது, ஆனால் இதுதான் சந்தர்ப்பம், சுற்றிலும் கோயில் நிறைந்த ஊர்கள், எல்லாவற்றையும் பார்த்துவிட வேண்டும் என்ற அவாவில், காலம் ஓடுகிறது..

திருவாரூர் கோயில் பற்றி எழுதி மாளாது, அதனால், அதற்கான சுட்டிகளை முடிந்தமட்டும் சேகரித்து பகிர்ந்திருக்கிறேன், தவிர தகவல்கள் சரிதானா என்பதும் தெரியாதது, தெரிந்துக்கொள்ள நேரம் இல்லாதது கூடுதல் காரணங்கள்.  கர்நாடக சங்கீத மும்மூர்த்திகளான தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோர் திருவாரூரில் பிறந்தவர்கள் என்பது முக்கிய குறிப்பு.

எப்படியானலும், திருவாரூர் தேரைப்பற்றி எழுதியே ஆகவேண்டும். ஆசியாவிலேயே மிக பெரியத்தேர் என்று சொல்லப்படுகிறது, ஆனால் இதற்கு அடுத்து வேறெங்கும் தேர் இருக்கிறதா என்றால் இல்லை, தென்னிந்தியாவில் மட்டுமே தேரோட்டம் நடைபெறுகிறது.  இந்த ஆழித்தேர், திருச்சி பாரத மிகு மின் நிறுவனம் (BHEL) நிறுவனப் பொறியாளர்களைக் கொண்டு கையாளப்படுகிறது.  இந்தத் தேரில் சுரங்க வழி ஒன்றும் உள்ளது சிறப்பாகும். கலைஞர் , சென்னை வள்ளுவர் கோட்டத்தில் திருவாரூர் தேரின் மாதிரியை கொண்டு வடிவமைக்க ஏற்பாடு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஆழித்தேர் திருவிழாவில், தேரை வடம் பிடித்து இழுத்த போது, அது ஆடி ஆடி அசைந்து வந்த அழகை, அந்நேரத்தில் எப்படி உணர்ந்தேன் என்பதை பதிந்தே ஆகவேண்டும்.

தேர் வேலைகள் கிட்டத்தட்ட 2 மாதம் முன்பாகவே ஆரம்பித்தது, தேர் நிறுத்தப்பட்டிருக்கும் சாலையில் செல்லும் போது, வேலைபாடுகளைப் பார்த்தவாரே சென்று வருவோம். கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பித்த வேலை முடியும் போது தேரின் உயரம் 96 அடியாகவும், 360 டன் எடை உடையதாகவும் மாறியிருந்தது. இதற்கான செலவு ஆண்டுதோரும் ரூ 2 கோடியை தாண்டியே செல்லும், இந்த ஆண்டும் அப்படியே. தேரைப்பற்றிய மிக விளக்கமான பதிவு   இதைப் படிக்கவும், இத்தனை விசயம் அடங்கியிருக்கான்னு ஆச்சரியப்படுவீர்கள்.

தேர் திருவிழாவை, ஆண்டுதோரும் நிகழும் ஒரு நிகழ்வாக என்னால் பார்க்கமுடியவில்லை. நுட்பமான பல விசயங்கள் இதில் அடங்கியுள்ளதை வரிசைப்படுத்துகிறேன்.

1. மிகப்பெரியத் தொகை இதற்காக செலவிடப்படுகிறது. 
  • பொதுமக்கள் நன்கொடை
  • மதவேறுபாடின்றி நிதி வசூல்
  • பெரிய/சிறிய நிறுவனங்களின் உதவி / நன்கொடை
2. மிகப்பெரியளவில் வியாபாரம் நடக்கிறது.
  • பூ / பழவகைகள் /பூசைக்கு தேவையானப் பொருட்கள்
  • அலங்காரப்பொருட்கள்
  • மரவேலைபாடுகள் 
  • மூங்கில், சவுக்கு
  • அலங்கரிக்கும் துணிகள்
  • கயறு
  • இரும்பு பொருட்கள், மரக்கட்டைகள்
  • அலங்காரப்பொருட்கள்
  • பெயின்ட், வார்னிஷ், பெட்ரோல், டீசல்
  • அலங்கார விளக்குகள்
  •  DG set
  •  புல்டோசர்கள் / ட்ரேக்டர்கள்
  •  அஜபா நடனத்திற்கான இசை க்குழு
  •  உணவு, தண்ணீர், கழிப்பறை வசதிகள்
  •  மருத்துவக்குழு, ஆம்புலன்ஸ்
  •  தீயணைப்பு வண்டி
  •  பாதுகாப்பிற்காக, எண்ணில் அடங்கா காவலர்கள் 
  • திருவிழாக்காலங்களில் முதலீடு செய்து சம்பாதிக்கும், சிறிய/பெரிய தெருக்கடைகள், சைக்கில், 3 சக்கர வண்டிக்கடைகள் என பேரூந்து நிறுத்ததிலிருந்து, கோயில் வரையிலும், கோயிலின் உட்புற, வெளிப்புர பிரகாரங்கள், சாலைகள் என வீட்டு உபயோகப்பொருட்கள், குழந்தைகள் விளையாட்டு பொருட்கள், பெண்களை கவரும் அழகுப்பொருட்கள், உணவங்கங்கள், சிற்றூண்டி கடைகள்  என எல்லாவித கடைகளிலும் வியாபாரம் நடக்கிறது.
3. தேர் சம்பந்தப்பட்ட வேலைகள் செய்ய, தேர்ந்த கலைஞர்கள், நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள்,வேலையாட்கள், அதற்கான கூலி/சம்பளம்
4. இதை வழிநடத்தி/எடுத்துசெய்ய, நன்கு தேர்ந்த நிர்வாகக்குழு, குழுவினை ஒருங்கிணைத்து நடத்தத்தேவையான தலைமை, உறுப்பினர்கள்,  பணம், இடவசதி
5. வேலைசெய்பவர்களுக்கான உணவு (கிட்டத்தட்ட 3 மாதம்)
6. தேர் செல்ல, கோயிலின் நான்கு புறமும் மிக அகன்ற பாதை போடப்பட்டு,ஆக்கரமிப்பு ஏதிமின்றி ஆண்டாண்டுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த சாலைகளில் உயரமான மரங்கள் ஏதுமின்றி, வளர்ந்தவிட்டசில மரங்களை தேர் திருவிழாவிற்கு முதல் நாள் வெட்டி, தேர் செல்ல தடையாக ஏதும் இல்லாதவாறு, தயார் நிலையில் வைக்கப்படுகிறது.

தியாகராஜர், ஆழித்தேருக்கு 3 நாட்கள் முன்பாகவே வந்துவிட்டார், அவரை தேருக்குள் சென்று வழிபட, இரவு பகலாக மக்கள் கூட்டம் கூட்டமாக வரிசையில் நின்றிருந்தனர். ஆழித்தேர் திருவிழா அன்று, தேரை வடம் பிடித்து இழக்கவேண்டி விடியற்காலையில் 5.30 மணிக்கெல்லாம் கிளம்பி சென்றோம். பேரூந்து நிலைத்திலிருந்தே வாகனங்கள் அனுமதியில்லை. அதனால் அங்கிருந்தே நடந்து வந்தோம். தேரை நெருங்க நெருங்க, பெண்கள்  வரிசையாக அழகழகான கோலங்களைப் போட்டுக்கொண்டு இருந்தனர்.

மக்கள் வடம் பிடிக்க வரிசையில் காத்திருந்தனர். இரண்டு கைகளால் தூக்கிப்பிடித்தாலும், முழுமையாக வடக்கயிரைப்பிடிக்க முடியாது. அத்தனை பெரியது. ஒருப்பக்கத்துக்கு இரண்டு என, மொத்தம் நான்கு கயிறுகள்.
ஆயிரக்கணக்கான மக்களை ஒருமுகப்படுத்தி, தேரை இழுக்க செய்வதென்பது, மிகப்பெரிய சவால். அந்த சவாலை தொடர்ந்து வருடா வருடம், திருவாரூர் கோயில் நிர்வாகம் இதை செய்து வருவது பாராட்டுக்குறியது.

கோலத்தைத்தாண்டி தேரை நெருங்க, அஜபா நடனக்குழுவின் இசை இசைத்துக்கொண்டிருந்தது. வேறெந்த சிவத்தலங்களிலும் பார்க்காத புதுவித இசைக்கருவியொன்றை இங்குப்பார்த்தேன். உலோகத்தால் செய்யப்பட்ட மிக நீளமான பீப்பி. இதை இசைக்க முறையான சுவாசப்பயிற்சி தேவையென நினைக்கிறேன். அடிவயிற்றிலிருந்து இழுத்து விடும் மூச்சில், நெஞ்சுக்கூட்டு எலும்புகள் மேலே இழுத்துப் பிடிக்க, அழுத்தம் கொடுத்து ஊதுகிறார்கள். அற்புதமான ஆளை மயக்கும் இசை, நம்மை மறந்து ஆடமுடியும்.. ஆவேசமாக அல்ல, நிறுத்தி நிதானமாக ரசித்து ஆடக்கூடிய இசை. அஜபா நடனமும் மூச்சுக்காற்றை அடிப்படையாகக்கொண்ட நடனம் என்பதை இங்கு குறிப்பிடவேண்டும்..

ஆழித்தேர் இழுக்கும் நேரம் நெருங்கியது. வடக்கயிற்றை மக்கள் தூக்கிப்பிடிக்க. ஒவ்வொரு கயிற்றின் உள் /வெளிப்பக்கம் மக்கள் தயார் நிலையில் நிற்க, மக்களை ஒருமுகப்படுத்த ஒருவர் பச்சைக்கொடி காட்டினால் இழுக்க வேண்டும் , சிகப்புக்கொடி காட்டினால் நிறுத்த வேண்டுமென ஒலிபெருக்கியில் அறிவித்தவாரே வந்தார். அவர் "பச்சைக்கொடி, வடம் பிடிக்கலாமென்றால்" போதும்... மக்கள் 'ஆரூரா..ஆ.. தியாகேசா..ஆ ' வென ஆராவாரம் செய்தவாரே வேக வேகமாக இழுத்தனர்.. நாங்களும் தேர் நகர்வதைப் பார்த்தவாரே இழுத்தோம்.

பிரம்மாண்டானத் தேர் கிட்டத்தட்ட 8-10 ஆயிரம் பேர் இழுக்க, லேசாக நகர ஆரம்பித்தது, உற்சாகம் தாங்க முடியவில்லை. மெது மெதுவாய் ஆடி ஆடி அசைந்து அசைந்து வர... 'பேரானந்தமாக' இருந்தது.  வேற்று சிந்தனையற்று, மெய்மறந்து இருப்பது, ஒருவித கண்கட்டு வித்தை எனலாம். என்னைப்போலவே அங்கிருந்த ஒவ்வொருவரும் அந்த ஆனந்தத்தை அனுபவித்திருப்பர். இங்கு தேர் அசைந்து வருவதைவிட... இத்தனை ஆயிரம் மக்களையும் வேற்று சிந்தனைத்துளியுமில்லாமல், ஆரூராரையும், தேரையும் மட்டுமே கவனத்தில் க்கொள்ள வைப்பதென்பது லேசுப்பட்ட காரியமல்ல.. மனிதன் மனம் சார்ந்த ஒரு விசயத்தை, மிக எளிதாக செய்யவைக்கிறது இந்த தியாகராசரின் ஆழித்தேர்.

இதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சாமார்த்தியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள் 'திருடர்கள்' என்ற பெயரில்.......

ஆரூராரை தரிசனம் செய்துவிட்டு, வடம் பிடித்த மக்கள் வீடுதிரும்பி விடுவதாலும், வெயில் காராணமாக மதிய நேரத்தில் மக்கள் வரத்து குறைவதாலும், தேரை இழுக்க மக்களை மட்டுமே நம்பியிருக்க முடியாது என்பதால், புல்டோசர்கள் பயன்படுத்தப்படுகின்றன. பழங்காலத்தில் யானைகள் பயன்படுத்தப்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. முடிந்தளவு தேரை எப்படி இயக்குகிறார்கள் என்பதை படம்பிடித்து காணொளியை பதிவிட்டுள்ளேன்.

ஆழித்தேர் சாலைகளில் திரும்பும் போது, பார்க்க ஓராயிரம் கண்கள் போதாது. அதே சமயம் அதற்கான வேலை மிக சிரமமானதாகவும் உள்ளது. பெரிய பெரிய தகர தட்டுகளின் மீது மசையைக்கொட்டி, வழுக்கவிட்டு திருப்புகிறார்கள். ஒரு நாள் ஆழித்தேரோட்டத்திற்கான முன்னேற்பாடுகளும், வேலையும் அத்தனை எளிதானதல்ல.

காணக்கிடைக்காத காட்சிகள், ஏதோ கொஞ்சம் புண்ணியம் செய்திருப்போம் போல, திருவாரூர் தேரை வடம் பிடித்து ஆரூராரை தரிசிக்கும் பாக்கியம் கிடைத்தது.

Thq Google : Thiruvarur & Temple details  & Photo Courtesy 

திருச்சிராப்பள்ளி - பயணக்குறிப்புகள்

சிராப்பள்ளி -என்ற பெயரோடு, திரு சேர்க்கப்பட்டு திருச்சிராப்பள்ளி ஆகியிருக்கிறது.

அம்மா அப்பாவோடு ஒரு வருடம் பொன்மலையில் தங்கியிருந்தோம். 3 ஆம் வகுப்பு படிச்சேன், முதலில் தனியார் பள்ளியிலும், பின்பு ரயில்வே பள்ளியிலும் படித்தோம். அப்போது ஒருமுறை அப்பா, என்னையும் சின்ன அண்ணனையும் கல்லணை & முக்கொம்பு விற்கும் அழைத்து சென்றது நினைவில் இருக்கிறது. குறிப்பாக, கல்லணை.

கல்லணை : புளிசாதம் கட்டி எடுத்துக்கொண்டு, பேரூந்தில் கல்லணை சென்று, அப்பாவின் கையைப்பிடித்துக்கொண்டு, அணையின் இந்தப்பக்கத்திலிருந்து நடந்து அந்தப்பக்கம் வரை சென்றதும், அப்பா அணையைப்பற்றி சொன்ன சில தகவல்களும் பசுமரத்தாணியாக மனதில் பதிந்தது மட்டுமல்லாது, இத்தனை ஆண்டுகள் கழித்து சென்றும், அணை மற்றும் அதை ஒட்டிய பூங்கா நினைவில் இருந்தது...முக்கொம்பு சுத்தமாக நினைவில்லை. :)

அப்பாவின் காலத்தில் இணையமில்லை,அவரின் கட்டிடம் சார்ந்த தொழில்நுட்ப ஆர்வமும், அதைத்தெரிந்துக்கொள்ள எடுத்த முயற்சியும், சிராப்பள்ளியைச் சுற்றி பிராம்மாண்ட கோயில்கள் பல இருக்க, அவரின் பணிகளுக்கு இடையே எங்களை கல்லணை & முக்கொம்பு விற்கு மட்டும் அழைத்து சென்றது, அவரின் ஆர்வத்தையும், அவர் குழந்தைகளுக்கு எது முக்கியம் என்பதில் அவரின் தேர்வும் தெரிகிறது.
.
கல்லணையைப்பற்றி ஏராளமான தகவல்கள் இணையம் முழுக்கக்கிடைக்கிறது. அவற்றில் பகிரப்பட்டுள்ள தகவல் எல்லாவற்றிலுமே, அணை இன்றளவும் சிதையாமல் இருக்க, கற்கலுக்கு இடையே வைக்கப்பட்ட மண்ணால் செய்யப்பட்ட பசை, ஆனால் அந்த பசை எப்படி எதனால் செய்யப்பட்டதென  கண்டுப்பிடிக்கப்படவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்பாவும் இதைப்பற்றி சொல்லியிருந்தார், சுண்ணாம்பு கலவையோடு, முட்டை உடைத்து ஊற்றித்தயார் செய்ததாக சொன்னார். இதைத்தவிர அணையைப் பற்றி அவர் சொன்னது எதும் நினைவில்லை..

தாஜ்மகலை விடவும், உலக அதிசயத்தில் ஒன்றான இந்த அணையின் முக்கியத்துவத்தை உணர்ந்து, தமிழக சுற்றுலாத்துறை, இந்த இடத்தை சிறந்தமுறையில் பராமரிக்க ஆவன செய்யவேண்டும், உணவகங்கள், கழிவறை, நிழல் குடைகள், குடிநீர் வசதிப்போன்றவை செய்துத்தரவேண்டும். பராமரிப்பின்றி மிகவும் அசுத்தமாகவும் இருக்கிறது.

உச்சிப்பிள்ளையார் கோயில் ; கல்லணையில் மணலை வாரிக்கொண்டு பேய் க்காற்று வீசியது, பிள்ளையார் கோயிலில் மலையின் மேல் நிற்கவே முடியவில்லை, ஆளை கீழேத்தள்ளிவிடுமளவு காற்று. நடுவே தாயுமானவர் கோயிலின் உயர்ந்த தூண்கள், சிற்ப வேலைபாடுகள் மிகவும் கவர்ந்தது. தாயுமானவருக்கு வேண்டிக்கொண்டு வாழைத்தார்கள் வைத்து பூசை செய்து, பின்பு அதை பக்தர்களுக்கு விநோயகம் செய்கின்றனர். கடுப்பான ஒரே விசயம், உச்சி மலையின் ஓரங்களில் நின்று 'செல்ஃபி' எடுத்தவர்கள்>..

திருவரங்கம் ;  திருச்சியில் இருந்தபோது, அப்பா அழைத்து செல்லாவிடினும், உறவினர்களின் வருகையின் போது ஶ்ரீரங்கமும், உச்சிப்பிள்ளையார் கோயிலும் சென்றிருக்கிறோம், ஆனால் நினைவில்லை. வரிசையில் காத்திருந்து சென்றும் நொடி'ப்பொழுது ரங்கநாதரை ப்பார்க்க அனுமதிக்கறாங்க. ஆனானப்பட்ட வெங்கடாசலபதியைக்கூட தொலைவிலிருந்தே தரிசனம் செய்துக்கொண்டுப் போகமுடியுது.. ஆனால் இங்க 'ரொம்ப பண்றாங்க..' ஏன் இத்தனை கெடுபிடி, இத்தனை ஜருகண்டீ ' ன்னு பிரியல...

அழகான அம்சமான தெய்வக்கடாச்சம் மிக்க கோமாதா, அதன் பின்னே தேவதையைப்போல வெள்ளை வெளேரென ஒரு குதிரை, அதன் பின்னே ஆடி அசைந்து வரும் யானையின் மேல் குடத்தில் தண்ணீரோடு ஒரு ஐயங்கார்.. னு இவங்க மூவரும் முதலில் சென்று வந்தப்பின்னரே பக்தர்கள் அனுப்பப்பட்டனர். இவங்க மூவரும் என்ன பூசைசெய்ய அழைத்துச்செல்லப்பட்டனர்னு தெரியல...

கோயில் யானை வெளிப்புர சாலையில் என்னை வழிமறித்து நகரவிடாமல் காசுக் கேட்க (அதை காதோரம் குத்தி குத்தி கேட்கவைத்தான் பாகன்), அதையும்,  அந்த பாகனையும் பார்த்தபோது, எங்க அது கடுப்பாகி, சமயபுரம் யானைமாதிரி தூக்கி அடிச்சிடப்போதுன்னு பயந்து, அது தும்பிக்கையை என்னிடம் தூக்கி காட்டுவதற்குள் அநியாயத்துக்கு குனிந்து காசைக்கொடுக்க, காசை வாங்கிட்டு நான் நிமிருவதற்குள், அது என் முதுகைத்தொட்டு ஆசிர்வாதம் செய்ய. லைட்டா பகீர்னு இருந்துச்சி, அது அலேக்கா சுத்தி தூக்கிப்போட வசதியாயில்ல நின்னுருக்கேன்???. தூரக்கிருந்து, இந்தக்காட்சியை என் வூட்டுக்கார் நமட்டு சிரிப்புடன் கவனித்தார். பொண்டாட்டி பயப்படறதப்பாத்த எந்த வூட்டுக்காருக்குத்தான் சந்தோஷமா இருக்காது சொல்லுங்க.. ??

சமயபுரம் ; ரொம்பவே கூட்டம், கூட்டத்தில் ஒருவருக்கு ஒருவர் அசிங்க அசிங்காம திட்டிக்கொண்டு சண்டை, அதில் பெண்களும் அடக்கம். இவர்களின் பொன் மொழிகளில் முதலில் நனைந்துவிட்டு தான், அம்மனை தரிசனம் செய்ய முடிந்தது.  ஏன் இந்த அம்மனுக்கு இத்தனைக்கூட்டம்னு தெரியல... 250 ரூ டிக்கெட் வாங்கி போயும், கூட்டத்தில் சிக்கி சின்னா பின்னமானோம் என்பதே யதார்த்தம்.

திருவானைக்காவல் :  அடேங்கப்பா.. திருவாரூர் கோயிலை விட பிரம்மாண்டமாக இருந்தது.  இத்தலத்தின் வரலாறு, ஹாலிவுட் கதைப்போல இருக்கு, நம்பும்படியாகவும் இருக்கு என்பதை தான் நம்பமுடியல.  நம்மூரில் இப்படியான பல வரலாற்று/இதிகாசக் கதைகள்  இருந்தாலும், இந்தக்கதையை அடிச்சிக்கவே முடியாது. கோயிலைக்கட்டிய மன்னர் கோச்செங்கட் சோழன். இவரைப்பற்றியக் கதையும் மிக சுவாரசியமானது. மன்னரின் தாயார், பிரசவ நேரத்தில், வலி எடுத்தப்பின்னும், சேவகியிடம் , குழந்தைப்பிறக்காமல் இருக்க, தன்னை தலைகீழாக க்கட்டி தொங்கசெய்து, ஜோதிடர் குறிப்பிட்ட அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். பிரசவ வலி எடுத்தும், குழந்தை வெகுநேரம்,கருப்பையிலேயே இருந்ததால், குழந்தையின் கண் சிவந்துவிட்டிருக்கிறது. அதனாலேயே குழந்தைக்கு 'கோச்செங்கட்' என்ற பெயர் வந்ததாம். ஹூம்...

பிரம்மபுரீஷ்வரர் - திருப்பட்டூர் -  வரலாற்றைப் படிச்சிட்டு அப்புறம் இங்க வாங்க. தலையெழுத்தை அப்படியே மாற்றுவாராம் இங்கிருக்கும் பிரம்மர். வருகின்ற அனைவரும் ஜாதகத்தைக்கொடுத்து, சாமியின் பாதங்களில் வைத்து வாங்குகிறார்கள். ஐயர்கள் இதில் அதிகமாக வருமானம் பார்க்கிறார்கள். நாங்க அதை செய்யல, கவனிச்சோம் அவ்வளவே !!

வயலூர் ;   ஒரு மணிக்கு நடை சாத்தப்பட்டுவிடும் என்பதால், ஓடோடிவந்தோம், 12.53 க்கு கோயிலை எட்டியபோது, வெளிவாசல் சாத்தப்பட்டு விட்டது, இருப்பினும், இன்னொரு வாசல் வழியாக உள்ளே ஓடினோம், 5 நிமிடமே இருந்ததால், சன்னதியின் முன் கதவும் சாத்தப்பட்டிருந்தது. ஓடிவந்தும் பார்க்கமுடியவில்லையே என்று நினைத்த நேரத்தில், திடீரென இடதுப்பக்கமாக வந்த ஒருவர், இந்தப்பக்கம் ஒரு வழியிருக்கு, வந்துப்பாருங்க்கன்னு அழைத்தார். ஓட்டமாய் ஓடினோம். முருகர் காத்திருந்தார், நல்ல தரிசனம் கிடைத்தது. திருவரங்கத்தில் காத்திருந்தும் சரியாகப்பார்க்க முடியாமல் வந்தோம், இங்கு ஓட்டமாய் ஓடி, கடைசி சில நிமிடங்களில் முருகனை வள்ளி தெய்வானையோடு தரிசனம் செய்தோம்.

முக்கொம்பு ; நடை சாத்திடுவாங்கன்னு, வேக வேகமாக ஓடியதில் , முக்கொம்பு வரும் போது, அதீத சோர்வுடன் இருந்தோம். காரிலேயே அணையை ஒரு சுற்று , சுற்றிவிட்டு ஊர் வந்து சேர்ந்தோம்
*******
கர்நாடக எல்லையில் ஆடு தாண்டும் காவிரி, தமிழ்நாட்டில் குறிப்பாக கரூர் & திருச்சி மாவட்டங்களில் அகண்ட காவிரியாக மாறி ஓடுவதும், அதைச்சுற்றியுள்ள கோயில்களின் அமைப்பும், எனக்கு சில தெளிவுகளை ஏற்படுத்தியது.

சிராப்பள்ளியைச் சுற்றி அகண்ட காவிரி ஆர்ப்பரித்து அடங்காமல் ஓடிய காலத்தில். அடை மழைக்காலங்களில், ஆற்றின் குறுக்கே அணைகள் இல்லை, கட்டுப்படுத்தமுடியாத வெள்ளம் புரண்டு, ஊரினையும் மக்களையும் அடித்துச்செல்ல, ஆட்சியில் இருந்த சோழ மன்னர்கள், தன் நாட்டு மக்களையும், நாட்டையும் காக்க இக்கோயில்களைக் கட்டி அதில், மக்களை பாதுக்காத்தும், அணைகளைக்கட்டி நீர்ப்போக்கை கட்டுப்படுத்தியும்/ திசைத்திருப்பியும் காப்பாற்றியுள்ளனர்.

திருவரங்கம், திருவானைக்காவல் இரண்டும் காவிரி, கொள்ளிடம் ஆறுகளுக்கு இடையே தீவாக உள்ளது. இக்கோயில்கள் ஒரே காலக்கட்டத்தில் ஒரே மாதிரியான கட்டட அமைப்பில் கட்டப்பட்டுள்ளது, 5 பிராகரங்கள், அவற்றில் வெளிப்பக்க பிரகாரங்களில், வீடுகள், கடைகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. வாகனங்களும் சென்று வரமுடியும். அகலம் குறைந்த மிக உயரமான வாசல்கள், அவசரமாக சட்டென மூடிவிடக்கூடிய அமைப்பில் கட்டப்பட்டிருக்கிறது, தவிர  வேறெங்கும் காணாத மிக மிக உயரமான மதில்கள்.
 
இந்தக்கோயில்களின் அமைப்பே, அகண்ட காவிரியின் நீர்வரத்தை நம் கண் முன் கொண்டுவருகிறது. குறிப்பாக கல்லணையில் பிரியும் ஆறுகள், டெல்டா பகுதிகளுக்கு திருப்பி விடவும், அடித்துவரப்படும் வண்டல் மண்ணின் தாக்கத்தால் அணை சேதமடையாமல் இருக்கும்படியாக அணைக் கட்டப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

நம் கோயில் வரலாறுகளும், அதன் பிரமாண்டங்களும், பயன்களும் வியந்து மாளாது.....

அடுத்து.... வர இருப்பது.. திருவாரூர் தேர்... :)