முந்தைய பதிவுகள் :
1. பாரிஸ் பயணத்துவக்கம்
2. நவீன் விடுதி அறை
3. டிஸ்னி பார்க் - பாரிஸ்

நவீனுக்கு பிடித்த காய்கறிகளை, பக்கத்திலிருந்த இலங்கை தமிழர் கடையில் முந்தின இரவே வாங்கி வைத்திருந்தேன். காலை சிற்றூண்டியோடு, சமையலும் முடித்து, முந்தின நாள் வெளியில் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டத்தில், கொஞ்சம் புளிக்காய்ச்சல் செய்து எங்களுக்கு சாப்பாடும் கட்டிக்கொண்டேன்.  புளிசாதம் தொட்டுக்கொள்ள உருளை வறுவல். !!

இன்று, நாங்கள் போக திட்டமிட்ட இடம் "Eiffel Tower"  

நவீன் இருக்குமிடத்திலிருந்து ரயிலில், இரண்டு இடங்கள் இறங்கி , ரயில் மாற வேண்டும். இதெல்லாம் தெரியாது தான், ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்கும் போதே, எங்களுக்கு ஒரு Metro & RER Map ஐ கொடுத்து, மொழி தெரியாததால், செய்கையாலேயே எங்கு இறங்கி ரயில் மாறனும்னு பொறுமையாக விளக்கம் சொல்லி டிக்கெட் கொடுத்தார் அந்த ஃப்ரான்ஸ் பெண்.

பொதுவாக லைன்' கள் 
A, B,C,D, E என இருக்கின்றன, அவைக்கு தனித்தனியான வண்ணங்கள். இப்ப A லிருந்து D க்கு போகவேண்டுமென்றால், எந்த ரயில் நிலையிலிருந்து D க்கு கனெக்ஷன் ரயில்கள் இருக்கின்றன என்பதை புரிந்துக்கொண்டால் போதும். திரும்ப வரும்போது அபப்டியே வந்துவிடலாம்.
இதில் இன்னொன்று, மாறவேண்டிய ரயில்
நிலையில் இறங்கினாலும், அந்த ரயில் நிலையத்தில் D போக ரயில் எங்கு நிற்கும் என்பதை தேடிக்கண்டுபிடித்து, அந்த ரயில் நிலையத்திற்கு போகவேண்டி இருக்கும். இப்படி மாறவேண்டிய ரயில் நிலையங்கள் எல்லாமே கீழ்,மேல் என பல தளங்களை கொண்டும், பல்வேறு திசைகளிலும் மிக பெரிய நிலையங்களாக இருந்தன.
இதில் திசைமாறி சென்றால்..வேற என்ன குழப்பம் தான்.
  
மேப்'ஐயும், ரயிலின் உள்ளே எங்கே இறங்கவேண்டும் என்பதையும் இருவரும் கவனமாக பார்த்துக்கொண்டு, ஒருவழியாக டவர் இருக்கும் நிலையத்தை
அடைந்தோம். அங்கிருந்து 1-5 கிமி மேல் நடக்க வேண்டியிருந்தது. ஆனால், ரயில் நிலைத்திலிருந்தே டவர் தெரிந்ததாலும், மக்கள் கூட்டம் அலைமோதியதால், அவர்களையும் பார்த்தவாறு போய் சேர்ந்தோம்.
ஐஃபில் டவர் -பிரம்மாண்டம். அதே சமயம் தாஜ்மகால் பார்க்கும் போது "ஒரு அதிசயத்தை பார்க்கின்ற" உணர்வு எனக்கு இதைப்பார்க்கும் போது வரவில்லை. இரும்பு, அதன் நிறம் போன்றவை காரணமாக இருக்கலாம். இரவில் வண்ணவிளக்குகளின் அலங்காரத்தில் ஐஃபில் டவர் மிக அற்புதமாக இருக்குமென்று ஊகிக்கிறேன், இரவில் போக சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.

டவரின் அடித்தளத்தில், நான்கு புறத்தில் ஒன்றை தவிர்த்து மிச்சம் மூன்று இடத்திலும் மக்கள் வரிசைகள் தென்பட்டன. எதில் கூட்டம் குறைவாக இருந்ததோ அதில் சென்று நின்றுக்கொண்டோம். டிக்கெட் " லிஃப்ட்"" என்று தான் கேட்டு வாங்கினார். ஆனால் எங்க, அவங்க பாஷை நமக்கு புரியல..டிக்கெட்டில் எழுதி இருப்பதும் நமக்கு புரியல.. உள்ளே போனால் படிக்கட்டுகள்..

சரி.. இதோ வந்துடும் லிஃப்ட்'னு.. முதல் தளம் 57 மீ உயரம், மொத்தம் 328 படிக்கட்டுகள் ஏறியாச்சி. ஒன்னும் முடியல எனக்கு.. யப்பா போதும்டா சாமின்னு மேலேயிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்றுவிட்டேன்.

கொஞ்ச நேரம் ரெஸ்ட் கொடுத்த என் வீட்டுக்காரர், "வா.. மேல போகலாம்னு கூப்பிட்டாரு.. "

"என்னாது மேலேயா? முடியவே முடியாது.. எனக்கு கால் வலிக்குதுன்னு " சொல்லிட்டேன்..

முதல் தளத்தில் ரெஸ்ட்டாரன்ட் முதற்கொண்டு எல்லா வசதிகளும் இருந்தன. எல்லாப்பக்கங்களும் சுற்றி பார்த்தோம். திரும்பவும், "வா..இவ்ளோ தூரம் வந்துட்டோம், இரண்டாவது தளம் வரைக்கும் போயிடலாம்.. அப்புறம் லிஃப்ட் தான்.. மெதுவா ஏறலாம் வா" ன்னு விடல என்னை..அவர் என்னை விட்டுட்டு தனியாக போகமாட்டார்.. சரி மெதுவாக போகலாம்னு இரண்டாவது தளம்  ஏற ஆரம்பித்தோம். 115 மீ, 340 படிக்கட்டுகள்.. ஒருவழியாக ஏறிட்டோம்.

எப்பவுமே முடியலன்னு சொல்வேனே ஒழிய ,  ஆரம்பிச்சிட்டா நடுவில்
நிற்கும் பழக்கம் எனக்கில்ல. மூச்சு வாங்கினாலும், முட்டி வலித்தாலும் ..ம்ஹும்..நிற்கவோ உட்காரவோ மாட்டேன். இங்கவே திருப்பதி மலைஏறும் போது அப்படிதான். அங்கவும் அப்படியே நிற்காமல் ஏறி முடிச்சாச்சி.

இரண்டாவது தளத்தில் குழப்பம் ஆரம்பித்தது. அதாது எங்களின் டிக்கெட்டிற்கு மேல் தளத்திற்கு போக முடியுமா என்பது தான். காரணம் , மக்கள் வரிசைகளில் மேல் தளம் போக டிக்கெட் வாங்க நின்றிருந்தனர்.  டிக்கெட் வாங்கி போகனும்னா "வரவே மாட்டேன்" நானுன்னு பிடிவாதமாக சொல்லிட்டேன். ஆனா, இவரோ.. லிஃப்ட் 'னு கேட்டேன், மேல் தளம் வரைன்னு கேட்டு தான் வாங்கினேன்.. னு விசாரிக்க சென்றார். ஏறி வந்ததில் உடல் சோர்ந்து போனது ஒரு பக்கம், பசி ஒரு பக்கம்.

எடறா அந்த புளி சாத மூட்டைன்னு... ஐஃபில் டவர் இரண்டாவது தளத்தில் புளி சாதத்தை பிரிச்சாச்சி..
இந்தியர்களால் மட்டுமே இப்படியான வேலையை செய்யமுடியும் என்று நிச்சயம் சொல்லமுடியும். அங்கு வந்த வேறு எந்த அயல் நாட்டவரும் சாப்பாடு மூட்டை கட்டிட்டு வரல. அதுவும் சாதம் எடுத்துட்டு வர சான்ஸே இல்லை ..
இருவரும் புளிசாதம் சாப்பிட்டு கொஞ்சம் ஓய்வுவெடுத்துவிட்டு, அதே டிக்கெட்டில் , மேல் தளம் போகலாம் என்று தெரிந்தவுடன், அதற்கான வரிசையில் சென்று நின்றோம். 

இந்த முறை ஏமாற்றமில்லாமல் லிஃப்ட் தான். மேல் தளத்திற்கு மொத்தம் 4 லிஃப்ட்கள் இயக்கப்படுகின்றன. அதில் ஒன்று அடித்தளத்திலிருந்து நேரடியாக மேல் தளம் வருகிறது என்று புரிந்தது. அதற்கான கட்டனம் அதிகம். மிச்சம் இருக்கும் 3 லிஃப்ட்களும் இரண்டாவது தளத்திலிருந்து இயக்கப்படுகின்றன.
பொதுவாக, பாரிஸிலிருந்து திரும்பும் வரை, எந்த செக்யூரிட்டி செக்கிங்கிலும் நானோ அவரோ தீவரமாக கண்காணிக்க படல.. ஐஃப்பில் டவர் உட்பட, பல இடங்களில் எங்களின் பையை கூட அவங்க பரிசோதனை செய்யல. அதே சமயம்..  எங்களுடன் வந்த அதே நாட்டவர், மற்ற நாட்டுக்காரர்களை அக்கு வேறு ஆணி வேறாக பரிசோதித்தே அனுப்பினர். 
இருவரின் முகமும் அம்புட்டு அழகாவும், பால் வடியும் குழந்தை தனத்தோடும், மிக மிக நல்லவங்களாகவும் காட்டியிருக்குன்னு இதை படிக்கறவங்க புரிஞ்சிக்கனும் !

லிஃப்ட்டில் மேல் தளம் சென்றாகிவிட்டது.  உலக அதிசயம் ஒன்றின் உச்சியில் நிற்கிறோம் என்ற எண்ணம் அங்கிருந்து வரும் வரை இருந்தது, மேலிருந்து கீழே இருப்பவற்றை பார்க்கும் போது பிரம்மிப்பாக இருந்தது. மேல் நிமிர்ந்து ஐஃபில் டவரின் அந்த உச்சியை பார்த்தேன்.... மட்டற்ற மகிழ்ச்சி, இனம்புரியாத ஏதோ ஒரு உணர்வு அங்கு நிற்கும் வரை இருந்துக்கொண்டே இருந்தது..

மேல் தளத்திலும் லிக்கர் ஷாப் இருந்தது.. காதலர்களும், தம்பதிகளும் மெல்லிய கோப்பைகளில் தங்களுக்கு பிடித்த மது வகைகளை ஆர்வமாக வாங்கி அருந்தி, ஐஃப்பில் டவரின் மேல் தளத்திற்கு வந்ததை கொண்டாடினர். நமக்கு அந்த பழக்கம் இல்லாததால் அவர்களை எல்லாம் வேடிக்கைப்பார்த்தவாறு சுற்றிவந்தோம்.

திரும்ப, இறங்கும் போது..சோய்ய்ய்ய்ன்னு..நேராக கீழ் தளத்திற்கே கொண்டுவந்து விட்டதும் எதிர்ப்பார்க்காதது. அப்போது தான் யோசித்தேன்.. ஏறி வரும் போது எங்குமே எதிராக யாரும் இறங்கிவரவில்லை. மேல் தளத்திற்கு செல்லும் அனைவரும் நேரடியாக கீழ் தளத்திற்கு தான் வரமுடியும், அப்படியான வசதியை தான் செய்திருக்கிறார். திரும்பவும் படிகளில் இறங்கி வரவேண்டியதில்லை.

கீழே, பல்வேறு நாட்டுக்காரர்களையும் அவர்கள் மொழி, உடைகள், குழந்தைகள் , பெண்கள் என வேடிக்கைப்பார்த்தவாரே.. ஒரு கோன் ஐஸ்க்ரீம் 3 ஈரோன்னு கொடுத்து வாங்கி சாப்பிட்டுக்கொண்டே டவரின் கீழே ஒரு இடத்தில் இருந்த கூட்டத்திற்கு சென்று எட்டிப்பார்த்தோம். 4 இளைஞர்கள் விதவிதமான நடனம் ஆடி, பார்வையாளர்களை அசத்திக்கொண்டிருந்தனர். அதை சிறிது நேரம் வேடிக்கைப்பார்த்தோம்.

கறுப்பின இளைஞர்கள் ஐஃப்பில் டவர் மாடல் பொம்மைகளை கற்றையாக கைகளில் மாட்டிக்கொண்ட்டு விற்றுக்கொண்டிருந்தனர். திடீரென சத்தம் எழுப்பி தெறித்து தப்பித்து இங்கும் அங்குமாக ஓடினர்.. ஏன் இப்படின்னு பார்த்தால்,  அனுமதியில்லாமல் அவர்கள் அதை விற்பதால் போலிஸ் துரத்தி பிடிக்க..அவர்களிடமி்ருந்தே தப்பித்தனர்.

ஐஃபில் டவர் பார்த்தாச்சி... :) திரும்பி வரும் வழியெல்லாம் இந்த கறுப்பின இளைஞர்கள் நம்மூர் ரோடுகடையில் நின்று விற்போர் போன்று ஐஃபில் டவர் மாடல்களை விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களிடம் வாங்குவோர் மிகவும் குறைவாகவே இருந்தனர்.. விரல் விட்டு எண்ணும் அளவில்..  அரசு கடைகளில் வாங்குவோரே அதிகமாக இருந்தனர்.

தொடரும் ..

படங்கள் : கூகுளுக்கு நன்றி