தெருநாய்களை தெருவில் மட்டுமே பார்த்திருக்கிறேன், ஆனால் இந்த வீட்டுக்கு குடிவந்தப்பிறகு தெரு நாய்கள் வீட்டிற்குள்ளும் இருக்கும் என்று தெரியவந்தது அவற்றின் தொல்லையும் தாங்கமுடியவில்லை.

பொதுவாகவே நம்ம யாருக்குமே தெரு நாய்களை வீட்டுக்குள் அனுமதிக்கும் பழக்கமில்லை. சாப்பாடு வைத்தாலும் கூட, காம்பவுண்டு சுவரை தாண்டி உள்ளே வராமல் பார்த்துக்கொள்வோம். கடித்துவிடும் என்ற பயமே முதல் காரணமாக இருக்கும். இங்கு காம்பவுண்டு சுவர் கதவு என்னவோ மூடிதான் இருக்கும், ஆனால் இதுங்க, சுவரேறி குதித்து, உள்ளே கூட்டமாக வந்து உட்கார்ந்துக்கிட்டு, குரைச்சிக்கிட்டு, ஊளையிட்டுக்கிட்டு எப்பவும் ஒரே சத்தம். இரவு நேரங்களில் ரொம்பவே மோசம்..ஏன் குரைக்குதுங்க..எதுக்கு குரைக்குதுங்கன்னே தெரியாது... தூக்கம் களைந்து போகுமளவிற்கு சத்தமிருக்கும்..

மொத்தமாக ஒரு 4-5 நாய்கள் இந்த வீட்டை குத்தகைக்கு எடுத்திருந்தன.
நாங்கள் இருப்பதென்னவோ இரண்டாம் தளம், இவை படிக்கட்டில் சொகுசாக காலை நீட்டிப்படுத்து தூங்கிட்டு இருக்கும். எங்களின் நடை சத்தம் கேட்டதும், திரும்பி பாத்துட்டு, கொஞ்சம் கூட மதிக்காம திரும்பவும் அதேமாதிரி படுத்துக்கும். இதுவே வீட்டு ஓனர் வீட்டிலிருந்து யாராவது இறங்கினால், உடனே எழுந்து வழிவிடும்.

எங்கள பாத்தாவே இளச்சிவாய்ன்னு அதுங்களுக்கு தெரிஞ்சிப்போச்சி போல.  இதுங்கல மிதிக்காம இறங்கிப்போக சில தாண்டவங்களை நாங்க பழக வேண்டி வந்தது. இரண்டு மூன்று மாதங்களிலேயே, அதுங்களை மிதிக்காமல் தாண்டி, குதித்து கீழ் படிக்கு செல்ல ‘ஹைஐ லாங் ஜம்ப்” ஐ  நல்லாவே பழகிட்டோம்.  
வெளியூர் சென்று, திரும்ப நடு இரவாகிவிடும் என்ற ஒருநாளில்,  வீட்டு ஓனரிடம் வெளி கேட்’ சாவி கேட்க சென்றோம். அவங்களோ..

“வெளிக்கதவை நாங்க பூட்டறதே இல்லையே.. ஆனா.. இருட்டில் ஜாக்கறதையாக வாங்க.. இந்த தெருநாய்கள் அங்க இங்கன்னு படுத்துக்கிட்டு இருக்கும்.. அதுங்கள மிதிக்காம வந்தாவே நாம பிழைச்சோம். அதுங்களைத்தவிர இங்க வேற எந்த பயமும் இல்லை” ன்னாங்க..

“ஏன் துரத்தி விடலாமே” என்றோம்.

“ ம்ஹூம், எவ்ளோ முயற்சி செய்துட்டோம்.. எதுக்கும் கட்டுப்படல,  நீங்களே பார்த்திருப்பீங்களே....எல்லாப்பக்கத்திலும், சுவர் ஏறி குதிச்சி வருது.. என்னதான் செய்வோம்.. இப்ப அதுங்க ராஜ்யம் தான்..” என்று சோகத்தோடு சொல்லி முடித்தனர்.


பகலும் இரவும், நாய்களின் சத்தத்தோடு ஓரளவு பழகிவிட்டது. அப்பறம் கவனிக்கும் போது தான் தெரிந்தது, அக்கம் பக்கம் எதிர்வீடு என யார் வீட்டுக்கும் இந்த நாய்கள் போவதே இல்லை. அட..?! இது எப்படி சாத்தியம், அங்கவும் சுவர் ஏறி குதித்து செல்லலாமே ஏன் போக மாட்டேங்குதுங்க..? ன்னு எனக்கு மண்டை காய ஆரம்பிச்சிது.

பயாஸ்கோப் கண்களோடு காரணத்தை அறிய அவற்றை கவனிக்க ஆரம்பித்தேன்.  ஒரே ஒரு நாய் உள்ளே சென்றாலும் கூட, அதை அடித்து விரட்டாமல் அடுத்த வேலைக்கு யாரும் போவதில்லை. ஆனால் எங்க வீட்டில் நேர் மாறாக நடந்துக்கொண்டிருந்தது.

கீழ் வீட்டில் , கல்லூரிக்கு செல்லும் பெண் ஒருத்தி இருக்கிறாள். சாக்கடையிலும், தெருவில் கண்டதை சாப்பிட்டு, தோலில் சிரங்கு வியாதியோடு திரியும் இந்த நாய்களை, கையால் தொட்டு தடவி, அதுங்களை செல்லம் செல்லமாக கொஞ்சி, பிஸ்கெட், சாப்பாடு எனப்போட்டு... .....

எப்படி அதுங்க இங்க வராம இருக்கும் ?!!

அவளுக்கு அந்த நாய்கள் மேல் உள்ள பிரியம் ஆச்சரியமாக இருந்தது. இன்றுப் பார்க்கிறேன். ஒரு நாய்க்கு, ப்ளாஸ்ட்டிக் குடுவையில் தண்ணீர் கொண்டு வைத்து... வா வந்து குடின்னு கெஞ்சிக்கிட்டு இருக்கா... “
அது குடிக்காமல் இங்கவும் அங்கவும் போகுது... ஓடிப்போய் நெற்றியில் ஒரு முத்தமிட்டு, அது போகிற இடத்துக்கெல்லாம் தண்ணியை பின்னாடியே எடுத்துட்டு போறா...

நடுநடுவில் அவளின் முத்தங்களை நெற்றியில் வாங்கிக்கொண்டு.. முறுக்கிக்கொண்டு இவளுக்கு போக்குக்காட்டி, அங்குமிங்குமாக ஓடி விளையாடிக் கொண்டிருக்கிறது அந்த தெருநாய்..!! 

Images courtesy Google : Thanks