நவீன் அறையிலிருந்து "Noicy Champs " ன் ரயில் நிலையம் 5 நிமிடம் தான். நவீன் சொல்லியபடி டிக்கெட் வாங்கினோம், இங்கு டெல்லி மற்றும் கொல்கத்தாவில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ததால், பாரிஸ்ஸின் மெட்ரோ ரயில் ஒன்றும் பெரிய விசயமாக தெரியவில்லை. பாரிஸ் ரயில்களை விடவும் டெல்லி , கொல்கத்தா ரயில்கள் சுத்தமாக இருக்கின்றன என்பது கூடுதல் தகவல்.

நவீன் இருந்த இடத்திலிருந்து பாரிஸின் டிஸ்னி பார்க் , ரயிலில் 16-19 நிமிடங்களில் சென்று விடலாம்.  டிஸ்னி இருக்குமிடம் "Marne-la-Vallee Chessy" அதுவே கடைசி நிறுத்தம்,  நடுவில் இருந்தாலுமே, ரயிலின் உள் உள்ள மானிட்டரிலோ, கதவின் மேல்புறத்திலோ தெரிகின்றன. அதை கவனித்து வந்தாலே சரியான இடத்தில் இறங்கிவிடலாம். 

ரயிலிலிருந்து இறங்கியவுடனே நேர் எதிரில் டிஸ்னி பார்க் தெரிந்தது, அருகில், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால்களும் இருந்தன. நவீனும் அவன் நண்பர்களும் இங்கு தான் சினிமா பார்க்க வருவார்களாம்.

சுற்றிப்பார்க்க நிறையவே இருந்தன. நேரம் போதவில்லை, பற்றாக்குறைக்கு கால் வலியும் கூடவே. .அத்தோடு,  இந்த Jet-Lag அப்படீன்னு ஒன்னு சொல்றாங்களே.. அதெல்லாம் எங்கப்போச்சின்னே தெரியல.. உடம்பை மிஷின் தனமாக ஓய்வின்றி வேலை செய்யவைக்கும் நிர்பந்தம் இருந்தது. தவிர,  ஏகப்பட்ட பணம் கொடுத்து டிக்கெட் வாங்கியாச்சி, உள்ள வந்தாச்சின்னு,  எங்கும் உட்காராமல் சுற்றிப்பார்த்துக்கொண்டே இருந்தோம். சின்னக்குழந்தை போல என் கணவர் எல்லாவற்றையும் ரசித்து, மகிழ்ந்தார்.

என்னால் தான் எதையுமே சந்தோஷத்தோடு பார்த்து ரசிக்கமுடியவில்லை. நவீன் நிலையை பார்த்தப்பிறகு, மன அழுத்தமும் இரத்த அழுத்தமும் அதிகமாகி, என் முகம், என் மனம் போலவே ஒருவித இறுக்கத்தில் இருந்தது. பாரிஸிலிருந்து திரும்பும் வரை என் முகம் அப்படியே தான் இருந்தது, அதற்காக அவ்வப்போது கணவரிடம் திட்டும் வாங்கிட்டே தான் இருந்தேன்...

டிஸ்னியில் ஒரு விசயம் புரிந்தது, அதாது, எனக்கேற்ற சாப்பாடு பாரிஸ்ஸில் எங்கும் கிடைக்காது. ரொட்டிக்கு நடிவில் பன்றி, மாடு, கோழின்னு வைத்து வெவ்வேறு பெயர்களில், flavour களில் விற்கப்படுகின்றன. தவிர நம்மூர் கோதுமை தோசை க்ரீப்' என்ற பெயரில், பல  flavour களில் விற்கப்படுகின்றன. முதல் நாள் என்பதால் எதுமே சாப்பிடப்பிடிக்காமல், ஜூஸ், காஃபி என குடித்து வயிற்றை நிரப்பிக்கொண்டு வந்து சேர்ந்தேன். அவர் ஏதோ சாப்பிட்டார். பாரிஸ் உணவு குறித்து தனிப்பதிவு எழுதவேண்டும்.

ஒருவழியாக சுற்றிப்பார்த்து , அறை வந்து சேர்ந்தோம். செய்துவைத்த சாப்பாட்டை சாப்பிட்டுவிட்டு எங்களுக்காக காத்திருந்தான். சென்றுவந்த கதையை சொல்லி முடித்து, ரயில் நம்மூரை விட சுமாராக தான் இருக்குன்னு சொல்லி பாரீஸை முடிந்தளவு அவனிடம் கழுவி ஊத்திவிட்டு, நாங்களும் சாப்பிட்டு டகால்னு படுக்கையை விரித்து படுத்துட்டேன்.

அதிகாலை, 3 மணி மேல் இருக்கும், தூக்கத்தில் விழித்தபோது நவீன் இன்னமும் கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான். "ஏண்டி குட்டி..தூங்காம இன்னும் என்ன செய்யற?

 " ப்ராஜக்ட் சப்மிஷன், நாளைக்கு ப்ரசென்டேஷன் இருக்கு ப்ரிப்பேர் செய்துட்டு இருக்கேன்,"

"ஓ ..சரி சரி... முடிச்சிட்டு படு.."

திரும்பி படுத்து தூங்கிப்போனேன்.

***********
6 மணிக்கு எழுந்துவிட்டேன். இருவருக்கும் க்ரீன் டீ போட்டு வைத்துவிட்டு, எனக்கு சாதா டீ கலந்துக்கொண்டு, நவீனுக்கு பூரி செய்ய ஆயத்தமானேன். அவன் நல்லாத்தூங்கிட்டு இருந்தான். இவரும் எழுந்துவிட்டார். நவீனை எழுப்பலாமா வேண்டாமான்னு யோசிச்சிட்டு அவரை கேட்டேன்.

எங்கள் பேச்சை கேட்டு, "அமைதியான வாழ்க்கை வாழ்ந்துட்டு இருந்தேன்.. .... நீங்க வந்ததிலிருந்து இந்த ரூம்ல ஒரே சத்தம்... இதுல தனியா வேற என்னை நீங்க எழுப்பி விடனுமா? எழுந்து தொலைக்கறேன்.. சீக்கிரம் போகனும்.. ப்ராஜக்ட் சப்மிஷன்" ன்னு சிடு சிடுன்னு எழுந்தான்.  துவைத்த உள்ளாடைகளை அவர் அவனுக்கு எடுத்துக்கொடுத்தார். அதை கையில் வாங்கிக்கொண்டு என்னிடம் சண்டைக்கு வந்தான்.

"திருந்தவே மாட்டியாமா நீ?! எதையாது செய்யாதன்னு சொல்லிட்டு போனா செய்யக்கூடாது.. இது என்ன உன் ஊருன்னு நினைச்சியா? துணி துவைக்க தனியா வாஷிங் மிஷின் இருக்கு, அங்க தான் போய் துவைக்கனும்..ஏன் சொன்னப்பிறகும் துவைச்சிப்போட்டு இருக்க?"

"வாஷிங்மிஷின்ல துவைக்க நிறைய துணி இருக்கு..கொஞ்சம் தான் துவைச்சி இருக்கேன். சத்தம் போடாம போய் பல் வெளக்கிட்டு வா...டீ குடிச்சிட்டு, சாப்பிட்டுட்டு கிளம்புடா.. நாத்தம் புடிச்ச பயலே....."

"அப்பா...செய்ய வேணாம்னு சொல்ல சொல்ல  உங்க பொண்டாட்டி சும்மா இருக்க மாட்டறாங்க.., இம்சை தாங்கமுடியாட்டி,  ரூமை விட்டு அவங்கள வெளியில் தொறத்திடுவேன் சொல்லிட்டேன்.. "

"அவ அப்படித்தான்னு உனக்கு தெரியாதாடா...விடறா..போய் கிளம்பு..போ...."



தொடரும்...

படங்கள் : நன்றி கூகுள்