எங்களின் ஆட்டோவைப் பார்த்ததும், மாமா வேகமாக இறங்கி தெரு கிரில் கேட்டை நோக்கி ஓடிவந்தார்....

"வாங்கக்கா.. நானே வந்து அழைச்சிட்டு வரேன்னு சொன்னா கேட்டீங்களா?"

"வழி தெரியாட்டி பரவாயில்ல.. நீ எதுக்கு வரனும்?! "

மாமி பின்னாலேயே வந்து வரவேற்றார்..

"மாமா எல்லாம் ஃபோன்ல சொன்னாருக்கா.. ..என்ன அனு எப்படி பிரிப்பேர் செய்திருக்க? " என்னை தோளோடு சேர்த்து அணைத்தபடி கேட்டார்.

"நல்லா பிரிப்பேர் செய்திருக்கேன் மாமா.."

மாமி... தண்ணீர் கொடுத்துவிட்டு குசலம் விசாரிக்க ஆரம்பிச்சாங்க..
மாமா ஆபிஸ் கிளம்பனும்னு சொல்லிட்டு, குளிக்க உள்ளே செல்ல, அம்மாவும் மாமியும் பேச ஆரம்பிச்சிட்டாங்க.. நான் சோபாவில் உட்கார்ந்து மாமாவின் குட்டி மகளுடன் விளையாட ஆரம்பிச்சேன்...

அம்மா... மாமியிடம்.. "என்னமா இது.. ஏன் மேல இருக்க வெண்டிலேட்டருக்கு எல்லாம் ஸ்கீரின் போட்டு வச்சியிருக்கீங்க? "

"ம்ம்க்கும்..அதை உங்க தம்பிய கேளுங்க..எதிர் வீட்டு ஆளு இங்கவே எந்த நேரமும் பாக்கறாராம்... அதும் என்னை தான் பாக்கறாராம்..அதுக்காக இந்த ஏற்பாடு.. " கடுப்பாக பதில் வந்தது..

"ஓஹோ..அது சரி.. ஜன்னலுக்கு ஒக்கே..அது ஏன் மேல வென்ட்டிலேட்டருக்கு எல்லாம் போட்டிருக்கான்.. ?!"

"ஹான் இங்கெல்லாம் ஸ்கிரீன் போட்டுட்டோம்னு, எதிர் வீட்டு ஆளு மேல மாடியில் நின்னு பாக்க ஆரம்பிச்சிட்டாராம். அதனால மேலயும் போட சொல்லி ஒரே வம்பு... "

"என்னமோ போ.. ஹால்ல சுத்தமா வெளிச்சமே இல்ல.."


"உங்க தம்பிக்கிட்ட சொல்லுங்க.. நீங்க சொன்னாவாச்சும் கேக்கறாரான்னு பாக்கலாம்..."

**************

அம்மா, மாமாவிடம் இந்த ஸ்கிரீன் விசயமா பேசல.. என் பரிட்சை விசயமா பேசிட்டு.. மதியம் கிளம்புவதாக சொல்லி, மதியம் சாப்பாடு முடித்த கையோடு கிளம்பிட்டாங்க..

மாமா அலுவலகம் செல்லும் போதே குட்டிப்பொண்ணையும் ஸ்கூலில் விட கூட்டிட்டு போயிட்டாரு...

எனக்கு நாளை தான் பரிட்சை, மாமா தான் கூட்டிட்டு போகனும். என் புத்தங்கங்களை எடுத்து வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பிச்சேன்..

மாமா சென்ற கொஞ்ச நேரத்துக்கெல்லாம், மாமி, அவசர அவசரமாக ஜன்னல் ஸ்கிரீனை ஒதுக்கி வைத்து, ஜன்னல் கதவை சிறிய இடைவெளி இருக்கும் படி மூடிவைத்து,  (அதாது வெளியிலிருந்து பார்த்தால், உள்ளிருந்து யாரும் கவனிக்கிறார்கள் என்று தெரியாது), ஆர்வமாக எதையோ பார்த்துக்கிட்டு இருந்தாங்க.. அவங்க முகத்தில் அப்படியொரு பரவசம்.... .....

என்ன பார்க்கறாங்கன்னு தெரியல.... எதையோ பார்க்கட்டும் நமக்கென்னன்னு நான் படிச்சிக்கிட்டே இருந்தேன்.. தீடீர்னு என் நினைவு வந்தவங்களாக என்னை திரும்பி பாத்தாங்க..

லேசாக புன்வறுவல் செய்தேன்..

என்ன நினைச்சாங்கன்னு தெரியல.. "அனு அனு... இங்க வாயேன்.. இந்த சந்து வழியா எதிர்பக்கம் அந்த மூணாவது வீட்டைப்பாறேன்.. அங்க ஒருத்தர் பிங்க் கலர் சட்டைப்போட்டுட்டு பேசிக்கிட்டு இருக்கார் இல்ல..அவரு ஒரு டாக்டர்..  இன்னும் கொஞ்ச நேரத்தில் இறங்கி நம்ம வீட்டு வழியா நடந்து போவாரு.. .. அவர் பேசும் போது லேசா சிரிச்சாக்கூட அவர் முகம் சிவந்துடும் பாரேன்..அவ்ளோ கலரு அவர்... "

அவங்க ரகசியமாக பார்ப்பதை பார்த்து, தப்பா நினைச்சிக்க போறேன்னு,  என்னையும் அழைத்து காட்டறாங்கன்னு புரிந்தது. மாமி கூப்பிட்டும் போகாமல் இருந்தால் மரியாதை இல்லையேன்னு, சென்று பார்த்தேன்.

ஆமா, அவங்க சொன்ன மாதிரியே அங்க ஒருத்தர் நின்னு பேசிக்கிட்டு இருந்தார்...

"மாமி படிக்க நிறைய இருக்கு" ன்னு சொல்லிட்டு வந்து புத்தகத்தை கையில் எடுத்துக்கொண்டு உட்கார்ந்தேன்..

மாமா போட்டிருந்த  திரைசீலை காற்றில் அசைந்து வந்து என்னைத்தொட்டு சென்றது.... ............

 
Images courtesy Google : Thx.