நவீன் வெளிநாடு சென்றதும், தனிமையில், வெறுமையில் மனம் சோர்ந்த நிலையில் இருந்த போது ஆத்மலயாவின் விளம்பரத்தை பார்த்தேன்.  கடந்த 1 1/2 வருடமாக ஆத்மலயாவில் நடனம் கற்று வருகிறேன்.  மனதிற்கும், உடலுக்கும் நல்லதொரு பயிற்சி,  மனசோர்விலிருந்து முழுமையாக என்னால் வர முடிந்ததற்கு இந்த நடன வகுப்புகள், அதில் கிடைத்த நட்பு என இவையும் பெரும் பங்கு வகிக்கிறது.

சென்ற நவராத்திரியில்,  தேனாம்பேட்டை ரயில்வே சங்கத்தினர் நடத்திய நவராத்திரி விழாவில் அவசர அவசரமாக ஒரு மேடை நிகழ்ச்சி செய்தோம். நன்றாக ஆடியிருந்தாலும் இப்போது பார்க்கையில் அது சுமாராக தெரிகிறது.. :)

இந்த வருடம்  ஆத்மலயா'வின்   ஆண்டுவிழா 27.04.2014 அன்று வெகு விமர்சையாக சென்னை செட்டிநாடு வித்யாசரமம் பள்ளி ஆடிட்டோரியத்தில் கொண்டாடப்பட்டது. 25 வயது முதல் 75 வயது வரையிலான பெண்கள் ஆத்மலயாவில் நடனம் கற்றுக்கொள்கின்றனர், இரண்டு மாதம் முழுமையாக அனைவருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.


அத்தனைப்பேரும் அதாவது 77 பெண்களும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு நடனம் ஆடினோம். ஜெயா டிவி, நிகழ்ச்சியை படம் பிடித்து செய்திகளில் காண்பித்தனர்.  முன்னாள் நீதிபதி. பிரபா ஸ்ரீதேவன்  தலைமை வகித்து, அனைவரையும் கவரும் வகையில் உரையாற்றினார்.

அம்மா'க்கள் நடனம் புரிய குழந்தைகள், கணவர் உட்பட மாமியார், மாமனார், அம்மா அப்பாவென அவர்களின் குடும்பங்கள் கண்டுக்களித்த முதல் விழா இதுவாகவே இருக்கும். 2 மணி நேரம் நகர்ந்ததே தெரியாமல் நிகழ்ச்சி ஒருங்கிணைக்கப்பட்டிருந்தது.  வேளச்சேரி குழுவினர் இரண்டு பாடல்களுக்கு நடனம் ஆடினோம்.

இந்த வயதில் " நீ டான்ஸ் கத்துக்கிட்டு என்னத்த செய்யப்போற" ன்னு என்னை, எனக்கு நடனத்தின் மேலிருந்த ஆர்வத்தை முடக்கிவிடாமல், நடன வகுப்புகளுக்கு முழு மனதோடு செல்ல அனுமதித்த என் கணவருக்கு இந்நேரத்தில் என் நன்றியை சொல்லனும். குறிப்பாக இந்நிகச்சியின் பயிற்சிக்காக அங்கே இங்கே என நான் செல்லும் போது தடை சொல்லாமல், முகம் சுளிக்காமல் என்னை ஊக்கிவித்தும், ரிகர்சலின் போது உடல் நலமில்லாமல் இருந்தபோது, எனக்கு களைப்பு வராமல் இருக்க பழச்சாறுகள், பிஸ்கெட்கள் வாங்கிக்கொடுத்து, நடனம் ஆடும் இடத்திற்கு கொண்டுவந்து விட்டுச்சென்றது, மேடையில் நடனம் ஆடும் அன்று எனக்கிருந்த டென்ஷனை குறைக்க அவர் கொடுத்த அறிவுரைகளும், ஊக்குவிப்பும், எளிமையான சில மனப்பயிற்சிகளும் மிகவும் முக்கியமானவை.   #ஒய் ஹஸ்பண்ட் ஈஸ் தெய்வம்' மொமன்ட்: :)

நிகழ்ச்சியில் ஒரு பெண் குழந்தை அவளின் அம்மா ஆடும் போது எடுத்த விடியோ ஒன்று பொதுவில் பகிரப்பட்டுள்ளது... கண்டு மகிழுங்கள்... 
எனக்கு மிக மிக பிடித்தப்பாடலும் நடனமும்...




அணில்குட்டி :  ஃபோட்டோ எடுக்கும் போதே இவங்களப்பாத்து ஃபோட்டோகிராஃபர் ஜர்க் ஆகி  2 அடி பின்னாடிப்போனாரு... பாவம் யார்
பெத்தப்புள்ளையோ... எப்படி இருக்காரோ என்னவோ ??!  இன்னும் அம்மணி ஆடின டான்ஸ் வீடியோ வரல.. அது வந்தாத்தெரியும்...சேதி..  கடவுளே அதைப் பாக்கப்போற எல்லாரையும் தயவுசெய்து காப்பாத்து...



பீட்டர் தாத்ஸ் :  Passion is energy. Feel the power that comes from focusing on what exist in you and  excites you

Dance Photos & Video courtesy : Thanks Ms. Pavithra Suresh, Athmalaya-Annanagar
& Ms. Malabharath, Founder - Athmalaya.