எனக்கு மிகவும் பிடித்த உணவு வரிசையில் இருப்பது ஆப்பம். அதுவும் தேங்காய் பாலோடு ஆப்பத்தை சாப்பிடும் போது..ஆஹா..ஓஹோ...சூப்பர்ர்... வாரத்திற்கு ஒருநாள் எங்க வீட்டில் ஆப்பம் இருக்கும். செய்யவும் மிகவும் எளிது.  உடலுக்கும் நல்லது.
 
தேவையான பொருட்கள் : 
பச்சரிசி : 3 கப் (200ml or 225 ml)
உளுந்து : 3 பிடி (படத்தில் இருப்பதுப்போல உளுந்தை அளக்கனும், உளுந்து அதிகம் ஆகிடக்கூடாது)
ஆப்பசோடா / சமையல் சோடா : 2 சிட்டிகை
உப்பு : சிறிது
தேங்காய் : 1
சர்க்கரை : தேவைக்கேற்ப
<= கவனிக்க : மேலுள்ள கைப்பிடி அளவிற்கும், படம் 2ல் உள்ள பிடிக்கும் வித்தியாசம் இருக்கு.  படம் 2ல் இருப்பதைப்போல அளவெடுக்கக்கூடாது. 

செய்முறை :  பச்சரிசி உளுந்து இரண்டையும் ஒன்றாக 2-3 மணிநேரம் ஊறவைத்து,  வெண்ணெய்ப்போல அரைத்து, மாவிற்கு தகுந்த உப்பில் கால் பகுதி மட்டும் சேர்த்து கரைத்து வைத்துவிடவும். இரவே மாவை தயார் செய்து வைத்துவிடவும்.

காலையில்,  4-5 கரண்டி மாவை வேறொரு கிண்ணத்தில் போட்டு, தண்ணீர் விட்டு தோசைமாவை விட சற்றே நீர்க்க கரைத்து, சமையல் சோடா சேர்த்து வைத்துக்கொள்ளவும்.

ஆப்பத்திற்கு என தனியாக நான்ஸ்டிக் வாணல் இருக்கிறது, எனக்கு
தோசைக்கல்லிலேயே (சற்று குழிவானதாக இருக்கவேண்டும், நான் ஸ்டிக் தோசைக்கல் இதற்கு சரிவராது) செய்து பழகிவிட்டதால், வாணல் பயன்படுத்துவதில்லை. வாணல்/தோசைக்கல் எதுவாக இருந்தாலும்  நன்கு சூடானவுடன் லேசாக எண்ணெய்த்தொட்டு தேய்த்துவிட்டு, (நான்ஸ்டிக் வாணலிற்கு எண்ணெய் தேவையில்லை) நடுவில் மாவை ஊற்றி, வேகமாக எடுத்து ஒரு சுற்று சுற்றி தோசை போல வடிவம் வரசெய்துவிட்டு, நடுவில் தேவைப்பட்டால் கொஞ்சம் மாவை ஊற்றி, சரியான அளவு மூடியால், மூடிவிட வேண்டும். முதலில் தீ பெரியதாகவும், ஆப்பம் ஊற்றியப்பிறகு தீயைக் குறைத்துவிடவும், 1-2 நிமிடத்தில் வெந்துவிடும், திருப்பிப்போடாமல் எடுத்தால் ஆப்பம் ரெடி.. !! 

தேங்காய் பால் செய்முறை :  தேங்காய்யை கீணி, சிறுத்துண்டுகளாக்கி, மிக்ஸியில் ஒரு சுற்று சுற்றி பொடியானவுடன், தேவையானளவு தண்ணீர் ஊற்றி நன்கு அரைக்கவும். மாவு சலிக்கும் சல்லடையை  ஒரு அகலமானப்பாத்திரத்தின் மேல் வைத்து, அரைத்தக்கலவையைக் கொட்டி பாலை பிழிந்து எடுக்கவும்.  பிழிந்த தேங்காய்யை திரும்பவும் ஒரு தரம் தண்ணீர் விட்டு நன்கு அரைத்து, இன்னொரு முறை பாலை பிழிந்து எடுக்கவும்.  பாலை வேறு பாத்திரத்திற்கு மாற்றி தேவையான அளவு சர்க்கரை சேர்த்து கலக்கி வைத்துக்கொள்ளவும். ஆப்பம் தயார் செய்யும் முன்பே தேங்காய் பாலை தயார் செய்துக்கொள்ள வேண்டும். 

ஆப்பம் சுட்டு எடுத்தவுடன், ஓரங்கள் மடங்கிய தட்டில் வைத்து, தேங்காய் பாலை அதன் மேல் ஊற்றிப் பரிமாறவும்.

தேங்காய் பாலின் பயன்கள்
 * வயிற்றுப்புண்ணிற்கு நல்லது.  முடி உதிர்தல், இளநரையைக் கட்டுப்படுத்தும், அடர்த்தியான கூந்தலுக்கும் தேங்காய்பால் சிறந்தது.
 
* கொழுப்பைக்குறைக்கும் தேங்காய் - என ஒரு பதிவைப்படித்தேன். நீங்களும் படிக்க 

அணில் குட்டி : அம்மணி வீட்டில் ஆப்பம் செய்தால், முதல்ல உக்காந்து இவிங்க நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டு,  அப்புறம் தான் வூட்டுக்காருக்கும் புள்ளைக்கும் கொடுப்பாங்க.. "சிறந்த அம்மா", மிகச்சிறந்த மனைவி" போன்ற பட்டமெல்லாம் இவிங்களுக்கு மட்டும் தான் கொடுக்கனும்னு இந்த நேரத்தில் மிகத் தாழ்மையோடு கேட்டுக் கொ(ல்)ள்கிறேன்........

பீட்டர் தாத்ஸ் : Your diet is a bank account. Good food choices are good investments. - Bethenny Frankel