சூழ்நிலைகளால் மாறும் மனிதர்கள் இருக்கிறார்கள், ஆனால் மாறுவதுக்கென்றே சூழ்நிலையை பயன்படுத்திக் கொள்பவர்களை பார்க்க ஆயாசமாக இருக்கிறது, அவர்களை கடந்து வர முடியாமல் தவிக்கும் மனதிற்கு ஆறுதலோ அறிவுரையோ சொன்னாலும் மனம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது. 

அதே சமயம் யாரையும் நீ இப்படி இரு என்று சொல்வதை விட, நாம் நம்மை மாற்றிக்கொள்வது எளிதெனப்படுகிறது. எது நடந்தாலும் எதற்காக கஷ்டப்பட்டாலும் யாரையும் நொந்து பிரயோசனம் இல்லை,  என்னை நான் நொந்துக்கொள்வதை தவிர... :)

மனித குணங்கள் மாறுவதில்லை என்னையும் சேர்த்தே. கடந்து
வந்தப்பாதைகளை பார்க்கத் தெரிந்து, அதிலிருந்து பாடங்களைக் கற்றுக்கொள்ளக்கூடிய பக்குவம் இருக்குமேயானால், நம் குணத்தை சற்றே மெறுகேற்றிக்கொள்ள முடியும்.. தவிர இயற்கையாக அமைந்த குணம் உள்ளேயே பதுங்கியிருக்கும். அதில் மனிதத்தைத்தாண்டி மிருகமே அதிகம் இருப்பதாக கணிக்கிறேன்..

மிருகத்தை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி மனிதத்தை வளர்க்க முயற்சி செய்தவாரே இருக்கிறேன்... என்னை சுற்றுயிருப்போர்  மிருகத்தை வெளிக்கொண்டுவரவே முயற்சி செய்கின்றனர். அவர்களை வென்று என் மனிதத்தைக்காப்பாற்ற அதீத போராட்டம் நடத்திக்கொண்டிருக்கிறது என் மனமும் அறிவும்.

என் மனமும் அறிவுமே எப்போதும் ஒன்றாக இருப்பதில்லை... கிழக்கு மேற்காக, மேற்கு கிழக்காகவே இருக்கிறது.. இரண்டும் ஒன்று சேரும், ஒரு நாள் வருமென அறிவு மனதையும், மனது அறிவையும் எதிர்நோக்கி காத்திருக்கிறது.

என் சுயநலம், எதிர்பார்ப்பு, நான் வைத்த நம்பிக்கை நிறைவேறாத ஒரு சந்தர்ப்பத்தில் பிறர்மீது எனக்கு ஏற்படும் நம்பிக்கை இழப்பு, அவர்களை நம்பிக்கை துரோகிகளாக காண்பிக்கிறது. அவர்களின் இடத்திலிருந்து பார்க்கையில் அவர்கள் நல்லவர்களாகவே இருக்கலாம், வாழ்க்கையின் ஓட்டத்தில் எதையும் என்னைப்போல் தலையில் ஏற்றிக்கொள்ளாமல் அங்கங்கே இறக்கிவைத்துவிட்டு ஓடக்கூடியவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் எது முக்கியம், யார் முக்கியம் என்று தெரிந்திருக்கிறது. ஆனால் நானோ தேங்கிவிடுகிறேன்..அந்த தேக்கமே அவர்களை எனக்கு நம்பிக்கை துரோகிகளாகக்காட்டுகிறது. இப்படியானவர்கள் கண்ணில் படும்போது அல்லது அவர்களை மன்னிக்கும் அளவு நான் பக்குவப்படவில்லை எனும்போது, என் மனம் மனிதத்தை இழக்கிறது...உடனே அறிவு சும்மா இருந்து விடுவதில்லை. மனதை பார்த்துக் சரமாரியாக கேள்விகளைத் தொடுக்கிறது. தொடுத்த கேள்விகளின் பதிலில் "என்னைத்தவிர, என் கஷ்டங்களுக்கும் நஷ்டங்களுக்கும் வேறு யாரும்  பொறுப்பில்லை... " என்றே பஞ்சாயத்து முடிகிறது. இந்த முடிவில் இன்னொரு ஆரம்பமாக,  என் மேல் தான் தவறு என்பதை ஒருவிதக் குழப்பத்தோடு உணர்ந்து.....தொடர்கிறேன்...

இந்த தொடர்ச்சி மெளனத்தின் மொழியாக மாறுகிறது.  மெளனம் பல பிரச்சனைகளை உள்ளடக்கிவிட்டு, வெளியில் என்னை ரொம்பவே நல்லவளாகக் காட்டுகிறது.. ஆனால் உள்ளுக்குள் நான் நல்லவளில்லை என்பதை எனக்குள்ளேயே நான் பேசிக்கொள்ளும் சண்டையிட்டு மாண்டுக்கொள்ளும் இரு வேறு பிசாசுகள் உணர்த்துகின்றன. அந்த பிசாசுகள் வெளிவந்துவிடாமல் இருக்க என்னை நான் கட்டுப்படுத்தி வளர்ப்பதில் அதிக சிரமம் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. 

இப்படி பிசாசாக மாறி அதைக்கட்டுப்படுத்துவதற்கு பதில்.. பிசாசாக மாறாமல் இருக்க என்ன வழியென்று யோசிக்கையில். வாழ்க்கையை அதன் போக்கிற்கே எடுத்துக்கொண்டு, எனக்கு நடப்பதை, எனக்கு சுற்றியிருப்பவர்களுக்கு நடப்பதை மிக எளிதாக எருமைமாட்டின் மீது மழைபெய்வதுப்போல சூடு சுரணை எதும் இல்லாமல் எடுத்துக்கொள்ள வேண்டுமென முடிவு செய்கிறேன்.

ஆக,  முடிவின் படி, இப்போது எருமைமாடாக மாறுவது எப்படியென்ற ஆராய்ச்சியில் இருக்கிறேன்... 

அணில் குட்டி : ஹை....?!! . எருமைமாடா அம்மணி ஆவறதப்பத்தி ஒரு பிரச்சனையுமில்ல....ஆனா அப்பவாச்சும் அம்மணி "வாயி" மூடுமான்னு அவங்க வூட்டுல இருக்கவங்க ஆர்வமாக எதிர்ப்பார்தீங்..... வாட் யூ கைஸ் எதிர்பார்த்தீங்...?. சொல்லிட்டுப்போங்க... எனக்கு பிரயோசனப்படும்...

பீட்டர் தாத்ஸ் : Human progress is neither automatic nor inevitable... Every step toward the goal of justice requires sacrifice, suffering, and struggle; the tireless exertions and passionate concern of dedicated individuals. - Martin Luther King, Jr.

தொடர்புடைய மற்றப்பதிவுகள் : (என்னுடைய குறிப்பிற்காக)
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2011/06/blog-post.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/05/2.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2009/02/blog-post_26.html
http://kavithavinpaarvaiyil.blogspot.in/2006/07/blog-post_05.html 

Images : Thx google.