மனச்சுமை-
என்னையும் உயிரையும்
கூட்டுக்குள்
இழுத்துக்கொள்கிறேன்-

பிழைக்கவுமில்லை
இறந்துவிடவுமில்லை
உள்ளே
உயிர் துடிக்கிறதே...........
********************




 பெளர்ணமி இரவு -

தூரத்தில்
தலைவிரித்து ஆடும்
தென்னங்கீற்றுகள்-

சீவி சடைப்போட்டு
சிங்காரிக்கத் தோன்றுகிறது -

 ********************




அரசின் இலவச சக்கரவண்டி
பக்கத்தில் அவன்
கால்கள் ஊனம்-

பூக்கட்டி விற்கலாமே ?!!

பிச்சைக்கு ஏந்திய அவன் கைகள்
நன்றாகத்தானிருந்தன !

********************




ஏரிக்கரையை
ஒட்டி
ஒற்றைப் பனைமரம்

பேச்சுத்துணையின்றி
தனியாக -

********************





ஒடுங்கிய கூன் கிழவிகள்-
ஒட்டிப்போன ஒற்றைநாடிக் கிழவன்கள்-
கைக்குச்சி பக்கத்தில் கிடக்கும் குருடன்கள்-

ஒர் நடுஇரவில்
வழிநெடுக
சாலையோரங்களில் உறங்கியவர்களின்
தொடர்...

வானத்திலிருந்து வந்தவர்கள் இல்லை -
இவர்களின் குடும்பம்
எங்கோ
இறக்கமின்றி உறங்கிக்கிடக்கிறது !!


************************


நகைக்கடையின்
விற்பனைப்பெண்-
குனிந்து கும்பிட்டு
நகையை
நன்றியோடு தருகிறாள்-
 
ஊக்கத்தொகை
உறுதியானதை-
அவளின் புன்னகை சொல்லியது ! 

                                                                                      *****************************

இலக்கியவாதிகள்  பலருக்கு
"யோனி" மட்டுமே -
வாழ்க்கையாகிப் போனதை
நினைத்து
வெறுமையாக சிரிக்கிறேன் !!

கைப்பிடித்தவன் சொன்னான் -
"அது' வும் ஒருவகை போதை" !!

பெண் குழந்தையைப்
பெற்ற அப்பனுக்குத்தெரியும்
"யோனி" அவனின்
பெண்ணிற்கும் உண்டு !!! 

************************************

என்னால்
சீரணிக்க முடியாதவற்றை
பார்க்காமல்
படிக்காமல்
தெரிந்துக்கொள்ளாமல்
அறிவிலி' யாக
இருக்கவே
விரும்புகிறேன்....
****************************************

என்னை -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
நான் -
அன்பு செய்பவர்களிடம்
ஒரு முகமாகவும்
இருக்கிறேன்

        - சுயநலத்தின் பிரதிபலிப்பு

இருவரிடமும்
ஒரே முகமாக மாறும் தினம்
என்னை நான் வெல்வேன் !!

************************************
பழையத்துணிகளை
சேமித்து வைக்கிறேன் !

படுக்கையிலேயே
எல்லாமும் செய்யும்
அம்மா'விற்கு
பழைய உடைகளை அணிவிக்கும்
போதெல்லாம் -

"அவள் குழந்தையாகிவிட்டாள்"
எனக்கு நானே
சமாதானம்
சொல்லிக்கொள்கிறேன்

************************************

திவ்யா'வும் மனதளவில்
நிராகரித்துவிட்ட
வேதனையில்
தன்னை கொன்றுக்கொண்ட
இளவரசன் -

அறியாதொருக்கூட்டம்
சாதிவெறியென
பிதற்றிக்கொண்டிருக்கிறது !

**************************************