=> தீடீர்னு நேற்று இரவு.."அய்யய்யோ... ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னையும், பெங்களூரும் மோதினால்...?!! இந்த Gayle பந்தை அடிக்கிற அடிக்கு,எங்க தல தோனி என்னா செய்வாரு..?!!  அப்படியே கன்னத்தில் கைவச்சிக்கிட்டு கவலையோடு உக்காந்து புலம்பிட்டே இருந்தேன். உடனே பழம்நீ சொன்னாரு " இதுக்கு ஏன் இவ்ளோ கவலப்படற Gayle
மூஞ்சியில அழுகிப்போன முட்டையும் , தக்காளியையும் எடுத்து அடிச்சா, அந்த நாத்ததில், பந்தை சரியா அடிக்காம விட்டுடுவாரு.. நமக்குத்தெரியாத குறுக்கு வழியா?" ன்னு என்னை சமாதானம் செய்தாரு.. ஆனா எனக்கென்னவோ, அடுத்தப்போட்டிக்கு, முதல்ல Gayle வ எவ்ளோ காசானாலும் பரவாயில்லைன்னு சென்னைக்கு வாங்கி போட்டுடனும்... அப்பதான் இந்த டென்ஷன் குறையும்.

=> ரஜினி ஆல் டைம் ஃபெவரைட்.யாரும் அவர் இடத்தை பிடிக்கவே முடியாது. அவரைத்தவிர சில நடிகர்களை பிடிக்கும்.. ஷ்யாம், சிநேகாவ கல்யாணம் பண்றதுக்கு முன்னவரை இருந்த பிரசன்னா.
இவங்க இரண்டு பேர் கிட்டயுமே எப்பவுமே ஆர்ப்பாட்டம் எதும் இருக்காது. அந்த வரிசையில் தற்போது சித்தார்த் சேர்ந்து இருக்காரு. உதயம் NH4 பார்த்ததிலிருந்து சித்தார்த்தை ஏனோ ரொம்ப பிடிச்சிப்போச்சி. யாரோ இவன் பாட்டும்..

=> நேற்று ஒரு வேலையாக ஐசிஐசிஐ வங்கிக்கு சென்றிருந்தேன். என் பக்கத்து கவுண்டரில் வந்திருந்த பெண் கஸ்டமர் ஒருவர், வங்கியில் வேலைப்பார்க்கும் பெண்ணிடம் " இப்படிதான் இங்க பேசனும்னு ஏதாச்சும் ரூல்ஸ் இருக்கா ?" என்றார்  அவர் "Nothing as such" என பதில் சொன்னார், கஸ்டமர் மிகக்கடுப்பாக "அப்ப ஏன் இங்லீஷிலேயே பேசறீங்க? தமிழ்ல பேசலாமே?",  அதற்கு அவர் "I dont know tamil, am from kerala, new to Tamil, I can understand but unable to reply in tamil" என சொல்லிக்கொண்டே அவரின் பெயர் பலகையை திருப்பி இந்தப்பெண்ணிடம் காண்பித்தார். "ஓ..அதான் தமிழ் பேசலையா..பெயரை கவனிக்கல." என வழிந்தார்.

=>  அண்ணன் மகனுக்கு 14 வயசு. பெரிய வண்டி எடுத்துக்கிட்டு ஊர் சுத்துமளவு பெரியவனா ஆகிட்டான். சென்ற வாரம் வெளியில் சென்று வந்துக்கொண்டிருக்கும்போது, பட்டம் விட்ட மாஞ்சாப்போட்ட நூல் கழுத்தில் மாட்டி, குழந்தைக்கு கழுத்தைச்சுற்றி அறுத்துப்பெரிய காயம் வண்டியோடு சாய்ந்து விழுந்ததால் தப்பித்திருக்கிறான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது போல், குழந்தை உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லாமல் அதிக இரத்தப்போக்கோடு பிழைத்துக்கொண்டான். கழுத்தைசுற்றி ஏற்பட்ட வடுப்போகாது என்றே நினைக்கிறோம். பட்டம் விடற புண்ணியவான்கள் அடுத்தவர்களின் உயிரைப்பற்றியும் கொஞ்சம் யோசித்தால் நல்லது. அண்ணனுடன் சேர்ந்து இந்தமாதிரி மாஞ்சா நூல் தயாரித்து பட்டம் விட்டிருக்கோம்... இந்த மாதிரி நிகழ்வுகள் அன்றையக் காலக்கட்டத்தில் எங்குமே நடந்ததில்லை.

=> 60 ஆம் கல்யாணம் ஒன்றிருக்கு திருக்கடையூர் சென்றிருந்தோம். வியாபாரம் மிகப்பலமாக நடக்கும் இடமாக இருக்கிறது. ஒரு நாடகம் நடப்பது போல வேக வேகமாக பயன்படுத்திய பொருட்களைக்கொண்டே திருமணத்திற்கான செட் அப் செய்கிறார்கள். அதாவது , கலச தேங்காய்களும், அதனுள் ஊற்றப்படும் தண்ணீர் முதற்கொண்டு எல்லாமே உபயோகத்திவை. காலையில் ஒரு செட் அப் செய்தால், அன்று மதியம் நடக்கும் திருமணங்கள் எல்லாவற்றிற்கும் அதே தான். திரும்ப மதியம் வேக வேகமாக இடங்களை சுத்தம் செய்து, அதையே ரீசைக்கில் செய்து செட் அமைக்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு திருமணத்திற்கு 6500/- ரூ முதல் 1 லட்சம் ரூ வரை அதை நடத்தும் ஐயர்கள் வசூல் செய்கிறார்கள். கோயிலுக்கு ரசீதோடு செலுத்தும் பணம் என்னவோ ரூ 1500/- தான். இதில் அதிக வியாபாரங்களை நடத்திக்கொடுப்பவர்கள்..வேற யாரு?? நம்ம NRI க்கள் தான். சென்னையில் கூட சாதாரணமாக மதியம் சாப்பாடு ரூ70/- க்கு கிடைக்கும் திருக்கடையூரில் மிக சுமாரான ஒரு சாப்பாடு ரூ 90/-. அவர்கள் எனக்கு வைத்த (ஒரு) வடையை பிழிந்து கால் டம்ளர் எண்ணெய் எடுத்து பரிமாறுபவரை கூப்பிட்டு காண்பித்தேன்.. "அடடே, இவ்ளோ எண்ணெய்யா இருந்துச்சி" சிரித்துக்கொண்டே கேட்டுவிட்டு இடத்தை காலிசெய்தார்.

=> சுவாசம், சுவாசக்குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு, மருத்துவர்கள் நீச்சல் பயிற்சியை பரிந்துரைப்பார்கள். என்னுடன் நீச்சலுக்கு வந்த பெற்றோர் சிலரும், வயதானோர் சிலரும் இதைச்சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போது பரதநாட்டியம் பள்ளியிலும், பெற்றோர் சிலர் தங்களின் குழந்தைகள் நடனம் பயில ஆரம்பித்தப்பிறகு வீசிங் குறைந்துள்ளது, வருவதேயில்லை எனவும் சொல்ல கேட்கிறேன். குழந்தைகளுக்கு இதுப்போன்ற பிரச்சனைகளுக்கு எப்போதும் மருந்துக்கொடுப்பதை விட நடனம், நீச்சல் போன்ற பயிற்சிகளில் சேர்த்துவிடுவது நல்ல பயனளிக்கும்.

படங்கள் : நன்றி கூகுள்

அணில் குட்டி : ஹோட்டலில் 4 பேர் சாப்பிடும் போது,அழகா ரவுண்டா இருந்த வடையை பிழிந்து எண்ணெய் எடுக்க்கிறேன்னு நசுக்கி, அதே வடைய எதும் சொல்லாம சாப்பிட்டவங்க எல்லாரும் அம்மணிய "ஞே" ன்னு வேடிக்கைப்பார்க்க பார்க்க, அந்த நசுக்கி நாசம் பண்ண வடைய வூட்டுக்காருக்கு வேற வச்சி அதை தான் சாப்பிடனும்னு ஆர்டர் வேற... இந்த அம்மாவோட அவரும் எப்படித்தான் காலம் ஓட்டறாரோ தெரியல... #இம்சை!

பீட்டர் தாத்ஸ் : Just as your car runs more smoothly and requires less energy to go faster and farther when the wheels are in perfect alignment, you perform better when your thoughts, feelings, emotions, goals, and values are in balance.