"அதிகாலை பனி" மேடம், "அமுதம் கங்கை" என்ற பெயரில் எழுதறாங்க. அவங்க ஜி+ ல் எழுதிய சில கவிதைகளுக்கு அவர்களின் சம்மத்தோடு எழுதிய எதிர்கவிதைகள்.


*******************
மனதின் குதிரையை நிறுத்த
உடலை வருத்திக் கொண்டேன்.
அளவற்ற உடல் தளர்வில்
முன்னிலும் வேகமாய்த் துயர்க் குதிரை.

                           
மனம் அறுத்துவிட்ட குதிரையாய் பறந்தது
வளைந்தும் குதித்தும் அதே வேகத்தில் நான்-
அதுத் தொட்டவைகளின் உத்வேகத்தில்
முன்னிலும் வேகமாய் மகிழ்க் குதிரை


*********************
புண்ணியம் செய்தேன்
சிரசில் இருந்து பாதம் வரை
ஒற்றைத் தொழல்தான்.

                              
பாவம் செய்தேன்
விரல் நுனியில் நின்று எட்டிப்பார்த்தும்
எஞ்சியது "ஜருகண்டி ஜருகண்டி"


******************

அமைதியான குளிர் இரவில் நைட் குயின் மணக்கும் வீதி . 
அமைதியாய் மனம்.

நடுங்கும் குளிர் இரவில் மருதாணி பூக்கள் மயக்கும் வீதி 
அலைப்பாயும் மனம்

********************

பொருந்தாத் துயரம்.

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும் .


பிடிப்பின் வெளிப்பாடு

பயணத்தில் வீட்டையும்
வீட்டில் பயணத்திற்கும்..


*********************

ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கூட காணோம்.


ஆவலோடு காத்திருக்கிறேன் ;
அழுகைக்கு முன் கணம் கண்டுக்கொண்டேன்.


ஆவலும் ஆசையே
அழுகைக்கும் ஆசைக்கும் தொடர்பினை கண்டேன்


**********************

தினம் தோலுரித்து மேலுயர்த்துகிறது
தொடர்பற்றிருக்கும் பேரன்பு.

தினம் ஆத்மாவை அரவணைக்கிறது
தொடர்பற்றிருந்தாலும் பேரன்பு


***********************

**********************
அமுதூறும் என் உலகு.

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக் கொண்டிருந்த
தீர்மானத்தின் தோல்விகள் .
நானே நகர்த்தாமலும்
தானாய் நிகழாமலும்
காத்திருப்பின் தடை.
எப்போது நிகழ்ந்தது நிகழ்ந்ததா .
பிறந்த குழந்தை போல் மெத்தென்றானேன் .



அமுதூறும் என் உலகு

சுயத்திற்கும் விருப்பத்திற்கும்
ஆடிக்கொண்டிருந்த
தீர்மானத்தின் வெற்றிகள்
நானே நகர்த்தியும்
தானாய் நிகழவைத்தும்
காத்திருக்காத வாழ்க்கையின் வேகம்
இப்போது நிகழ்ந்தது நிகழ்த்தியதே
நிகழ்த்திய பெருமையில் திளைத்திருக்கிறேன்


********************

காரணம் கண்டு பிடித்து வெறுக்கலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும் .
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
வெறுமையின் வாசனை.


காரணம் கண்டு பிடிக்காமல் விரும்பலாம்
இருப்பவர்களைப் பற்றியும்
இல்லாது போய்விட்டதற்காகவும்
அற்புதங்கள் நிகழ்ந்துவிட நீ நான் எல்லோரும் காத்திருக்கும்
நிறைவின் வாசனை


*************************

வஸ்திரக் காப்பு நடக்கிறது
திரை விலகக் காத்திருக்கிறேன்.
என்னுள் சாமி வெற்றுக் கல்.


வெற்றுக்கல் ஆண்டவனாகினும் ஈர்ப்பதில்லை!
திரை விலகக்காத்திருந்து தரிசிப்போம்
வெளியலங்கார கவர்ச்சியோடு...


***********************

வாழ்விளக்கை அணைத்து எரிகிறது
குழி மாடத்து விளக்கு.


வாழ்விளக்கை அனுபவித்து பூரித்து எரிகிறது
சட்டிவானம்


**********************

தனிமை.

இன்னும் ஒன்றுமற்றுப் போவதை கற்றுக் கொள்கிறோம்
நானும் என் துக்கமும்.
நானும் இல்லாது கற்றுக் கொள்வதும் இல்லாதாகும் நாளுக்காய்
என்னை இறுகக் கட்டிக் கொண்டிருக்கிறது துக்கம்.


தனிமை

இன்னும் மனிதத்தையும் உலகத்தையும் கற்றுக் கொள்கிறோம்
நானும் என் உள்ளமும்
நானும் இருக்கும்போது இல்லாததென்று ஏதுமில்லாத நாட்களில்
என்னை நானே இறுகக்கட்டி கொள்வதில் சந்தோஷம் !


***********************

எதையும் தீவிரமாக எடுத்துக் கொள்பவர்களுக்கு
எதுவும் மீதமிருப்பதில்லை.


எதையும் எளிமையாய் எடுத்துக் கொள்பவர்களுக்கு
சாதிக்க ஏதுமிருப்பதில்லை.


************************