அன்று நாகமணிக்கு முதல் தேர்வு, அறையை கண்டுபிடித்து, செளகரியமாக ஒரு இடத்தைப்பார்த்து அமர்ந்து கொண்டாள். விடைத்தாள் கொடுக்கப்பட்டதும் பூர்த்திசெய்து, கேள்வித்தாளுக்காக காத்திருந்தாள். அப்போது தான் அந்த பெரியவரும் பெண்ணும் உள்ளே நுழைந்தனர்.

பெரியவர் அந்தப்பெண்ணை, நாகமணிக்கு முன் இருந்த காலி இருக்கையை காட்டி அங்கே அமரசொன்னார்.  உட்காரும் முன் பெண் தன் தோளில் மாட்டியிருந்த கைப்பையை பெரியவரிடம் கொடுத்தாள், அவரிடம் இருந்த தண்ணீர் பாட்டிலை வாங்கிக்கொண்டு பேசாமல் நின்றாள். பெரியவர் அவளை உட்காரசொல்லிவிட்டு, அறையில் இருந்த சூப்பர்வைசரிடம் அந்த பெண்ணைக்காட்டி ஏதோ சொல்லிவிட்டு நகர்ந்தார்.

"இவ்ளோ பெரிய பெண்ணிற்கு தனியாக வந்து அமர்ந்து பரிட்சை எழுதத்தெரியாதா? அதுவும் இது மூணாவது மாடி, அந்த வயதானவரை இங்கு வரை அழைத்து வர வேண்டுமா?" நாகமணியின் மனதுக்குள் எழுந்த தேவையற்ற எரிச்சலின் நடுவே கேள்வித்தாள் வந்தது. அத்தோடு அந்த பெண்ணை மறந்து தேர்வெழுத ஆரம்பித்தாள்.

நாகமணியின் பக்கத்தில் வந்த சூப்பர்வைசர்களில்  ஒருவர் மற்றவரிடம்,  "அந்த பெண்ணிற்கு காது கேட்காது, பேசவும் வராது அதனால் என்ன கேள்வி தாள் வேண்டுமென ஹால் டிக்கட்டைப்பார்த்து கொடு" என்று சொன்னது நாகமணியின் காதில் விழு. "அடடா... இது தெரியாமல் அந்தப் பெண்ணின் மேல் எரிச்சல் பட்டோமே, அந்த பெரியவர் பெண்ணின் அப்பாவாக இருக்கும்... " தனக்குள் உச் கொட்டிக்கொண்டாள்.

தேர்வு முடிந்து வந்து, இரண்டு சக்கர வண்டியை எடுக்கும் போது, அந்த பெண்ணின் நினைவு வர சுற்றி பார்த்தாள், அவள் கண்ணில் தென்படவில்லை. அவளின் நினைவூடே வண்டியை ஓட்டிச்சென்றாள். போரூர் பூந்தமல்லி சாலை, மாலைவேளை போக்குவரத்து அதிகமாகவே இருந்தது. பெரிய வாகனங்கள், ஷேர் ஆட்டோ டுபுடுபு சத்தங்களுக்கு நடுவே நாகமணியின் நினைவு மட்டும் அந்தப் பெண்ணைத் துரத்தியது.

ஒரு வேளை அந்த பெண்ணைப்போல தானும் இருந்தால்???? வினாடித்துளிகளில் போரூர் பூந்தமல்லி சாலையில் வாகனம் செல்ல, இவளின் நினைவுகள் படு வேகமாய் அதே சாலையின் வழியே பின்னோக்கி ஓடியது..... பேரூந்துகள், ஷேர் ஆட்டோக்கள், டூவிலர்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைந்து போக,  இவள் மட்டும் வேக வேகமாய் பின்னோக்கி பயணம் செய்துக்கொண்டிருந்தாள்......

"நிச்சயம் அப்பா கூட வந்திருக்க வாய்ப்பில்லை. திருமணம் கூட ஆகியிருக்காது, அதனால் கணவரோ அவர் சார்ந்தவர்களோ வந்திருக்க வாய்ப்பேயில்லை. தேர்வெழுத நிச்சயம் நான் தனியாக தான் வந்திருப்பேன், பேசவும் கேட்கவும் முடியாததால், ஒரு காகிதத்தில் நானே என்னைப்பற்றிய குறிப்புகளை எழுதி சூப்பர்வைசருக்கு சைகைக்காட்டி, அதைப்படிக்க செய்திருப்பேன்.......நிச்சயம் நன்றி சொல்ல புன்னகைத்திருப்பேன். வாழ்க்கை இன்னமும் போராட்டம் நிறைந்ததாக இருந்திருக்கலாம்.. எல்லாரிடமும் சைகை செய்தே பேசியிருப்பேன், என்னைக்கிண்டல் செய்து பார்த்து சிரிப்பவர்களை பார்த்து விசயமறியாது மரியாதைக்கருதி நானும் சிரித்திருப்பேன். ... இந்தளவு யாரையும் கவனித்திருக்க முடியாது..இப்படி யோசித்திருக்கக்கூட முடியாது...

எல்லாமே நிசப்தம்....ஆமாம்.. நான் நிசப்தம்..என்னை சுற்றிலும் நிசப்தம்...அந்த நிசப்தத்தை சற்றே கண்ணைமூடி ரசிக்க .........."  பின்னோக்கி வேக வேகமாய் ஓடிய நினைவுகளின் வேகம் இரத்த அழுத்தம் சோதிக்கும் போது குறையும் நாடித்துடிப்பை போல குறைந்துக்கொண்டே வந்தது...

வெகு நெருக்கத்தில் "ப்ப்பாம் ப்பாம்ம்ம் "  ..சட்டென்று சாலையில் வந்து குதித்தவளாய்.... அதிர்ச்சியோடு வலதுப்பக்கம் பார்த்தாள்..பெரிய லாரி ஒன்று இவளை ஒட்டி வந்து சத்தமாக ஹாரன் அடித்துக்கொண்டே இருந்தது..  சன்னலோரம் அமர்ந்திருந்தவன் எட்டிப்பார்த்து கெட்ட வார்த்தைகளில் எக்கச்சக்கத்து திட்டினான்.....

நாகமணியின் முகம் சுருங்கி, உதடுகள் சத்தமில்லாமல் அசைந்தன... "நிஜமாகவே காதுக்கேட்காமல் பிறந்திருக்கலாமோ.... ?! "



*படங்கள்: நன்றி கூகுள்!