சில மாதங்களாக தான் இப்படி. என்னை மீறிய விடுபடமுடியாதொரு ஆழ்சிந்தனை. ஆம் அந்த மனித உருவத்தை கொன்றே தீரவேண்டும். என் முடிவில் மாற்றம் வர பலமுறை யோசித்தும் விட்டேன், ஆனால் கொல்லவேண்டும் என்ற எண்ணம் மட்டும் போகவில்லை அதற்கு என்னளவில் நியாயமான காரணங்கள் கூறப்பட்டுவிட்டது. அடுத்தது என்ன செய்யவேண்டும் என்பதில் என் கவனம் செல்ல ஆரம்பித்துவிட்டது. அந்த உருவத்தினை அதற்கு தெரியாமல் எப்போதும் தொடர்ந்துக்கொண்டே இருக்கிறேன். ஒவ்வொரு அசைவையும் கவனிக்கிறேன்.

எப்படி கொல்லலாம் என்று திட்டமிடுவதில் தான் பெரிய சிக்கல். கொலை செய்வது கொடூரமான ஒரு செயல் என்பதை உணர்ந்தவளாக இருக்கிறேன், ஆனால் அந்த உருவம் உயிருடன் இருக்கக்கூடாது என்ற எண்ணத்திலும் எனக்கு மாற்று கருத்து இல்லை. இப்படி இரண்டு வெவ்வேறு மனநிலையை ஒன்றாக்கி, அதுவும் அந்த மனநிலை கொலைசெய்ய வேண்டும் என்ற மனநிலையாக மட்டும் ஆக்கிக்கொள்வது அத்தனை சுலபமானதாக எனக்கு தெரியவில்லை.

இருந்தாலும், அதை கொண்டு வர என்னைத்தயார் படுத்துக்கிறேன். கொலை செய்தால், உருவத்திற்கு முதலில் வலிக்கக்கூடாது, கஷ்டப்படக்கூடாது, கொலைசெய்கிறேன் என்றும் தெரியக்கூடாது. அப்படிப்பட்ட நாசுக்கான கொலையாக இருக்கவேண்டும். என் மேல் பழியும் வந்துவிடக்கூடாது. இது சட்டம் சார்ந்த பயமில்லை, மனசாட்சி சார்ந்த பயம். கொலை செய்துவிட்டு நிம்மதியாக எப்படி இருந்துவிட முடியும். நியாயமான காரணங்கள் சொல்லப்பட்ட ப்பிறகு அதை கொலை என்று சொல்லக்கூடாது, வேறு வார்த்தை கண்டுப்பிடிக்க வேண்டும்.

தீவரமான சிந்தைனைக்கு தீனிப்போட தமிழ், ஆங்கில, மலையாள க்ரைம் படங்களை தேடிக்கண்டுபிடித்து பார்க்கத்தொடங்கினேன். வலிக்காமல் செய்தாலும் தடையம் இல்லாமல் செய்வது அத்தனை சுலபமான காரியமாக த்தெரியவில்லை. இப்படி சுலபம் இல்லை என்று த்தெரிய வரும் போது, கொலை செய்ய வேண்டாமென்ற முடிவுக்கும் வந்தேன். ஆனால் அந்த முடிவு ஒன்றிருண்டு நாட்களில் காணாமல் போய், எப்படியும் கொலை செய்தே ஆக வேண்டுமென என்ற நிலைக்கே வந்துவிடுகிறது.

மருத்துவ, போலிஸ்கார நண்பர்களின் சகவாசத்தை அதிகப்படுத்தினேன். அவர்களுக்கு கண்டிப்பாக எளிமையாக சாட்சியமின்றி கொலைசெய்ய வழிகள் தெரிந்திருக்கும். அதில் ஏதாவது ஒன்றை நமக்கு சாதகமாக்கிக்கொள்ள வேண்டும். நாட்கள் நகர்ந்து மாதங்கள் ஆனது. ஆனால் நான் நினைத்தப்படி கொலை செய்ய எனக்கு சரியானதொரு திட்டம் கிடைக்கவில்லை. இருந்தாலும் முயற்சியை மட்டும் விடவில்லை. அது சம்பந்தமாக எதையாவது ஒன்றை செய்தவாரே இருந்தேன். உருவத்தை தொடர்வதையும் விடவில்லை. விலகாமல் இருந்தால் தான், தீடீர் திட்டங்களை செயற்படுத்த முடியும்.

இருக்கும் வேலை, இடம் அத்தனையும் ஒரே நாளில் மாறியது. மாற்றம் எதிர்பார்க்கவில்லை, கட்டாயம் சென்றாகவேண்டும். அது ஒரு மலைசார்ந்த குளிர் பிரதேசம், வண்ண வண்ணப்பூக்களும்,  ரீங்காரமிடும் வண்டுகளும், மேகம் அருகில் வந்து நம்மை தொட்டு அழைக்கும் சிலிர்ப்பும், பறவைகளின் கூக்கூ சத்தமும், ஓவென்ற கூச்சலிட்டு கொட்டும் அருவியும், அருவி ஓரத்தின் பச்சைப்புல் வெளியில் துள்ளித்திரியும் மான்குட்டிகளுமென இயற்கையோடு என்னை பிணைத்துக்கொள்ளக்கூடிய ஒரு இடமாக அமைந்துவிட்டது. இயற்கை பிரியர்களுக்கு இதைவிட ஒரு வரப்பிரசாதம் வேண்டுமோ.. விடுமுறை நாட்களிலும், வேலை முடிந்தவுடன் கிடைக்கும் நேரத்திலும் பறவைகளுடன் பேசுவதும், வண்ணத்து பூச்சியின் வண்ணத்தை ரசிக்கவும், குயிலோடு சேர்ந்து பாடவும், அருவியில் குளித்து ஆனந்த சயனம் கொள்ளவும் எனக்கு நேரம் போதாமல் இருந்தது. பல நாட்களில் ஆகாரம் கூட மறந்திருந்தேன்.

அப்படியொரு அற்புத இடத்தில் தான் அவனை சந்தித்தேன். நான் அவனை சந்தித்தென் என்றால், அவனும் என்னை சந்தித்தான் என்று தானே அர்த்தம். அவனும் என்னைப்போலவே இந்த இடத்திற்கு புதிது. ஒருவருக்கு ஒருவர் பரிச்சயம் ஆனோம். என்னைப்போன்றே அவனும் இயற்கை விரும்பியாக இருந்தான். என்னைப்போலவே அவனும் அருவியின் அழகையும் சத்தத்தையும் ரசித்தான்.  "என்னைப்போலவே" முற்றுப்புள்ளி இல்லாமல் தொடர்ந்துக்கொண்டே இருந்தது...  

உருவத்தை தொடர்வதை மறந்து வெகுநாளாகிவிட்டது, அவனைத் தொடர ஆரம்பித்து இருந்தேன். என் கொலைகார எண்ணம் ஏனோ காணாமல் போயிருந்தது. நானும் ஏன் காணாமல் போனது என்று யோசிக்க நேரமில்லாமல் அவனுடைய நினைவில் லயித்திருந்தேன். அவனுடன் சேர்ந்து கனவுகளில் உலாவர இயற்கை எனக்கு துணையாக இருந்தது. அவனை நினைக்க வைப்பதில் அவனும் தீவரவாதியாக மாறி என்னை அவனுடயவளாக மாற்றியிருந்தான். அவனின் காதலியாகியிருந்தேன். வாழ்வதற்கும், இந்த வாழ்க்கையை அவனோடு சேர்ந்து ரசிக்கவும் தொடங்கியிருந்தேன். அவனுக்காக புதிதாக பிறந்து, வளர்ந்து வர ஆரம்பித்தேன். சில நேரங்களில் என் அன்பின் மிகுதியை தாங்கமுடியாத அவன், "ஏனடி எனை கொல்'கிறாய்" என்று சொல்லும் போது மட்டும்,  எது நிஜமான கொலை என்ற குழப்பம் எனக்குள் ஏற்பட்டது.

மாற்றங்கள் எப்போது எப்படி யாரால் வரும் என்று சொல்லத்தெரியவில்லை. ஆனால் வந்துவிட்டது. இது எதிர்பார்த்தது அல்ல, ஆனாலும் என்னை கொலைகாரி ஆக்குவதிலிருந்து இயற்கையாகவே தப்பிக்க வைத்துள்ளது. இப்படி ஒரு மாற்றம் வருவதற்கு முன், ஒரு வேளை அவசரப்பட்டு அந்த உருவத்தை கொலை செய்திருந்தால்....?!! 

ஆம், அவன் அந்த உருவத்தை சந்தித்திருக்கவே மாட்டான். அந்த உருவம் யாரெனக்கூட அவனுக்கு தெரிந்திருக்க வாய்பில்லாமல் இருந்திருக்கும். வேறு யாரோ அவனுக்கு காதலியாகியிருக்கலாம்.
.