இந்த படத்தை பார்ப்பதற்கு முன் எந்த விமர்சனத்தையும் படிக்கக்கூடாது என்ற முடிவுடன் இருந்தாலும், ரீடரில் கண்ணில் படும் பதிவுகள் எல்லாம், இந்த பட விமர்சனமாக இருக்க, கடைசி வரியை மட்டும் படிக்குமாறு பார்த்துக்கொண்டேன். அதில் ஆதிஷா வின் கடைசி வரியை படிக்கும் போது, "அம்மா" பற்றிய கதை என்று புரிந்தது. அம்மா சம்பந்தப்பட்ட படம் என்றால், நாம பார்க்கமுடியுமா, என்ற எண்ண ஓட்டம் இருந்துக்கொண்டே இருந்தது....

அம்மா இல்லங்கற காம்ப்ளக்ஸ் நிறைய இருக்கு.. அது நெகட்டிவாக போயிட க்கூடாதுன்னு நானே எனக்கு கவுன்சலிங் கொடுத்து கொடுத்து, அம்மா இல்லைன்னா என்ன? என்னால் தனியா செய்துக்க முடியும்...னு செய்து செய்து.. :)) எதையும் செய்ய முடியும் ங்கற தன்னம்பிக்கை நிறைய வளர்ந்துடுச்சி.! எங்களுக்கு எல்லாம் தன்னம்பிக்கை இல்லையா ன்னு, அம்மா இருங்கவங்க எல்லாம் வந்தால், க்யூல வாங்க.. உட்கார்ந்து பேசுவோம். .டீல முடிப்போம்..!!  சரி, இப்ப காம்ப்ளக்ஸ் போயிடிச்சான்னு கேட்டீங்கன்னா.. சில உதாரணம் சொல்றேன்.

இந்த பக்கம், அந்த பக்கம் வீடுகளில் அம்மாக்களின் படையெடுப்பு நடந்து, பெண்கள் ரொம்ப ஓய்வாக, அம்மா சமைத்துப்போட்டு சாப்பிட்டு, அவங்க மடியில் படுத்தாலோ, தலைவாரிக்கிட்டாவோ,  இவங்க குழந்தைகளுக்கு லீவு விட்டால் போதும்னு அம்மாவீட்டுக்கு மாசக்கணக்கில் போனாலோ.. யாரோ கொள்ளிக்கட்டைய என் இரண்டு காதுலேயும் சொருகின மாதிரி புகை வரும் பாருங்க.. ஹும்ம்ம்.!!  இரண்டு பேருக்குமே இன்னைய வரைக்கும் நடுவீட்டில் இப்படி ஒரு வயத்தெரிச்சல் கேஸ் இருக்காள்னு தெரியாது. அவ்வளவு ஏன் என் நெருங்கிய நண்பர்கள் அம்மாவின் மேல் பாசத்தை கொட்டும் போதோ, அவங்க அம்மாக்கள் இவிங்க மேல பாசத்தை கொட்டும் போதும்.. வெளியில் ரொம்ப நல்ல பெண்ணாக :)  உள்ளுக்குள்ள ஒரே புகைச்சலோட இருப்பேன்.. :( . பாவம் இதெல்லாம் இப்ப வரைக்கும் எந்த நண்பர்களுக்கும் தெரியாது. .ஹி ஹி.. :))  I am a Fraud !!

ம்ம்ம்.. தலைப்புக்கு வருவோம். நந்தலாலா.. அம்மாவை பிரிந்த அந்த இரண்டு குழந்தைகளின் மனநிலை என்னை ஒத்தே இருந்ததால், ரொம்ப மனதை பாதித்தப்படமாக இருந்தது. கண்களில் வரும் கண்ணீரை நிறுத்தவே முடியாமல், உள்ளிருந்த வலிகள் அத்தனையும் வெளிக்கொண்டு வந்துவிட்டது. காரணக்காரியங்கள் எதுவாக இருந்தாலும், அம்மா இல்லாமல் வளரும் எல்லா குழந்தைகளின் மனநிலையும், ஏக்கங்களும், எதிர்ப்பார்ப்புகளும், கோவங்களும், வெறுப்புகளும், அழுகையும், ஆத்திரமும், தேடுதலும் ஒரே மாதிரியாக இருக்கும் என்பதை பல தடவை உணர்ந்திருந்தாலும், இந்த படத்தில் அப்படியே தெரிந்தது, வலித்தது.

மனதை பாதித்த பல படங்கள் வந்துள்ளன, "அன்பே சிவம்" என்ற படத்தில் கூட இரண்டு பேர் பயணத்தின் நெடுகிலும், பல மனிதர்களை, நிகழ்வுகளை சந்திப்பார்கள். மேக்கப் போட்ட கதாநாயகி, கதாநாயகன், டூயூட் , காதல், முத்தங்கள், அன்பு என்ற பலவும் இருந்தது. அதைத்தாண்டி ஒரு சினிமாத்தனம், ஒரு பகட்டு இருந்தது. கடைசியில் சொன்ன இரண்டை தவிர்த்து, மற்றவை எல்லாமே இந்த படத்திலும் இருக்கிறது, காதல், முத்தம், அன்பு, உண்மை, மனிதம்,  இவற்றின் ஊடே மிக யதார்த்தமான இரண்டு குழந்தைகளின் பயணம் காட்டப்பட்டுள்ளது..

சந்தானம், விவேக், வடிவேலு என்று யாருமே இல்லாமல், படம் முழுக்க நகைச்சுவை. சிரிப்புக்கூட, வெடிசிரிப்பாக சத்தம் போட்டு சிரிக்கவைத்த காட்சிகள் படம் முழுக்க வருகின்றன,  சிரித்துக்கொண்டு இருக்கும் போதே.. நம்மை அறியாமல் கண்ணீர் வருகிறது, கண்ணீர் மறையுமுன் மீண்டும்  சிரிக்க வைக்கிறார்கள். இவை எல்லாமே மேலோட்டமாக இல்லை, உள்ளிருந்து வருகிறது. மாறி மாறி அழுகையும் சிரிப்புமாக இப்படி ஒரு திரைக்கதை ???? இதுவரையில் எந்த ப்படத்திலும் பார்த்திராத ஒரு திரைக்கதையை இந்த படத்தில் பார்க்க முடிகிறது.

கதாப்பாத்திரங்களில் முன்னனி கதாநாயகி/கதாநாயகன் என்று யாராவது இந்த படத்தில் நடித்திருந்தால், வித்தியாசமான கதை, கதாபாத்திரம் என,  நடிப்பை பிழியோ பிழியோ என்று பிழிந்து, நம்மையும் சக்கையாக பிழிந்து எடுத்து இருப்பார்கள். நல்லவேளை இயக்குனர்,  மிக மிக இயல்பாக நடித்து அசத்திவிட்டார்.

இசைஞானி : வார்த்தைகளால் சொல்ல முடியாது, அனுபவிக்கனும். படம் முழுக்க பயணம் செய்து இருக்காரு..அதுவும் பல இடங்களில் நம்மை இசை தாலாட்டுது.  டைட்டில்ஸ் போடும் போதே... மயங்க வைக்கறாரு..  சலனம் அதிகமில்லாத ஓடை நீரில் கண்ணை மூடி படுத்திருக்க, தென்றல் வந்து நம்மை வருடிக்கொண்டே இருப்பது போன்ற சுகம்,   இப்படி ஒரு இசையை கேட்கத்தான் காதுகள் படைக்கப்பட்டதோ..?

ஒன்னுக்கொன்னு துணையிருக்கும் உலகத்திலே....அன்பு ஒன்னு தான் அனாதையாய்.......  :))  ஜேசுதாஸ்..  Dedicating to me


படத்தின் தயாரிப்பு :  நம்ம சங்கர் சார் ஒரு பாட்டுக்காக செலவு செய்யும் பணத்தில், இப்படிப்பட்ட படங்கள் 3-4 எடுத்துடலானு நினைக்கிறேன்.

இயக்குனருக்கு சொல்ல நினைப்பது, பேன்ட் பெல்ட் போட பல மைல் தூரம் பல மனிதர்களை கடந்து வந்த பிறகு, ஒரு பெண்ணால் போடப்படுவது கொஞ்சம் மனதை நெருடுகிறது... அதுவரையில் ஏன் யாருக்கும் அது தோன்றவில்லை... ?

இது வரையில் திரைவிமர்சனம் "பார்வைகளில்" எழுதியதே இல்லை. எழுதுவது இல்லை என்ற நிலையை மாற்றிய படம் இதுவாகதான் இருக்கும். :)

அணில்குட்டி அனிதா : ஸ்ஸ்ஸ்ஸ்... ஆத்தா.. முடியல ஆத்தா. .எழுதாத வரை நாங்க எல்லாம் நிம்மதியாக இருப்போம். எதையும் நீங்க புதுசா ஆரம்பிக்காதீங்க...

பீட்டர் தாத்ஸ் :  Amma, I love you !