நீர் உருண்டை : -

தேவையான பொருட்கள் :
பச்சரிசிமாவு : 2 கப்
கடுகு : 1/4 டீஸ்பூன்
உளத்தம் பருப்பு: 1/2 டீஸ்பூன்
கடலைப்பருப்பு : 1/2 பிடி
இஞ்சி: பொடியாக நறுக்கியது 1 சின்ன துண்டு
பச்சைமிளகாய்: 2 பொடியாக நறுக்கியது
தேங்காய்: 1/2 படி சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கியது
நல்லண்ணெய்: 1/2 கரண்டி
கருவேப்பிலை சிறிது
உப்பு தேவையானளவு

செய்முறை :
வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன், கடுகு, உளத்தபருப்பு, கடலைபருப்பு போட்டு தாளித்து லேசாக சிவந்தவுடன், இஞ்சி, பச்சைமிளகாய், கருவேப்பிலை போட்டு வதக்கி, கடைசியில் தேங்காய் போட்டு, மாவை உப்பு சேர்த்து கொட்டி வதக்க வேண்டும், கொஞ்சம் வதங்கியபின்பு, தேவையான அளவு தண்ணீர் உற்றி கட்டி இல்லாமல் கிளரிக்கொண்டே இருக்கவேண்டும், மாவு, உருண்டைகள் பிடிக்கும் அளவு கெட்டியானவுடன் இறக்கிவிடலாம்.

இட்லி பாத்திரம் வைத்து, மாவை சிறு உருண்டைகளாக கொழுக்கட்டை போன்றோ, வட்ட வடிவமாகவோ உருட்டி ஆவியில் வேகவைத்து எடுக்கவேண்டும்.

இதற்கு தேங்காய் கார சட்னி தொட்டுக்கொள்ள நன்றாக இருக்கும். எண்ணெய் விட்டு, கடுகு, உளத்தம்பருப்பு, கருவேப்பிலை, காய்ந்தமிளகாய்,பூண்டு
தாளித்து, தேங்காயோடு, புளி, உப்பு சேர்த்து அரைத்தால் கார சட்னி ரெடி.

எண்ணெய் கத்திரிக்காய் காரக்குழம்பு :

தேவையான பொருட்கள் :
கத்திரிக்காய் : 4 (விதையில்லாத)
புளி : சிறிய எலுமிச்சை அளவு
நாட்டு தக்காளி : 1
சின்ன வெங்காயம் : 8
பூண்டு - 8 பல்
வடகம்* : 1/2 ஸ்பூன்
கருவேப்பிலை
தேங்காய் அரைத்தவிழுது : 1/2 கப்
மிளகாய் தூள் : 3 ஸ்பூன் (தனியா மிளகாய் சேர்ந்த தூள்)
மஞ்சள் பொடி : சிறிது
உப்பு : தேவையான அளவு
நல்லண்ணெய் : 1/2 கரண்டி

செய்முறை :-
புளி ஊறவைத்து கரைத்து வடிக்கட்டி, அதில் மிளகாய்தூள், மஞ்சத்தூள், உப்பு சேர்த்து வைத்துக்கொள்ளவேண்டும். வாணலியில் எண்ணெய் ஊற்றி, வடகம் இட்டு பொரிந்தவுடன், நசுக்கிய பூண்டு போட்டு வதக்கவும், சிவந்தவுடன் நறுக்கிய வெங்காயம் போடவும், பிறகு தக்காளியும் போட்டு வதங்கியவுடன் குறுக்கில் + போல் வெட்டிய கத்திரிக்காய், கருவேப்பிலை போட்டு நன்கு வதக்கி, கூட்டிவைத்துள்ள புளிக்கரைசலை அதில் ஊற்றி கொதிக்கவிட வேண்டும். எண்ணெய் மேல் வரும் வரை கொதிக்கவேண்டும். பின் தேங்காய் ஊற்றி இறக்கிவிடலாம்.

வடகம் : இது தாளிப்பதற்காக வருடத்திற்கு ஒரு முறை செய்து வெயிலில் காயவைத்து உருண்டைகளாக்கி வைத்துக்கொள்வார்கள். எங்களது வீட்டில் சாம்பார், காரக்குழம்பு, பொரித்த குழம்பிற்கு இதை போட்டு த்தான் தாளிப்போம். செய்முறை மிகவும் சிரமம். ஒரே நாளில் வருடத்திற்கு தேவையான (5- 10 கி இருக்கும்) வெங்காயம், பூண்டு உரித்து, அதை உரலில் போட்டு உலக்கையால் குத்தி, அத்துடன் கருவேப்பிலை, கடுகு, உளத்தம்பருப்பு, வெந்தயம்,சீரகம் எல்லாம் சேர்த்து பிசைந்து வெயிலில் வைப்பார்கள். இதற்கு நாட்கள் எத்தனை என்று தெரியவில்லை. இது காயந்தவுடன் விளக்கெண்ணெய் ஊற்றி பிடித்து உருண்டையகளாக்கி கத்திரி வெயிலில் 16-21 நாள் வரை தினமும் வைத்து எடுத்து பதப்படுத்துவார்கள்.

இதுவரையில் தனியாக இதை நான் செய்தது இல்லை. காரணம், தவறாமல் வெயிலில் வைத்து எடுக்க வேண்டும், ஒரு நாள் கூட விடக்கூடாது, வேலைக்கு சென்றுக்கொண்டு இதை மட்டும் சரியாக என்னால் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இல்லை. அதுவும் உலக்கை, உரல் போன்றவை வீட்டில் இல்லை. அதனால், இன்று வரையில் ஓசி மங்களம் பாடி வருகிறேன். ஆயா இருந்தவரை ஆயா செய்து கொடுத்தார்கள். இப்போது ஓரகத்திகள் செய்து கொடுக்கிறார்கள். அங்கு சென்றால், வெட்க ப்படாமல் 4-5 உருண்டைகள் வாங்கி வந்து விடுவேன்.

அணில் குட்டி அனிதா : சமையலாஆஆஆஆ???? என்ன தீடீர்ன்னு...???? எழுத ஒன்னும் மேட்டர் இல்லையோ அம்மணிக்கு......?!!

பீட்டர் தாத்ஸ் :“Good painting is like good cooking: it can be tasted, but not explained”