பெண் - என்று தனியாக எடுத்துக்கொண்டால்,

1. அதிக சுதந்திரம்
2. சரியாக அறியப்பட்டு, புரியப்பட்டு நடைமுறை படுத்திக்கொள்ளும் சுதந்திரம்
3. சுதந்திரம் - அப்படீன்னா?

இந்தியாவை பொறுத்தவரை இந்த மூன்றும் எல்லா காலக்கட்டங்களிலும் இருப்பதாக தெரிகிறது. அதிக சுதந்திரம் எடுத்துக்கொண்டு அழிந்து போன பெண்கள் உண்டு, இப்படிப்பட்ட ஒரு பெண்ணின் சுதந்திரம் அவளை சுற்றியுள்ள அத்தனை பேரையும் பாதிக்கிறது என்பது அறியப்பட்ட ஒற்றுக்கொள்ள வேண்டிய உண்மை. எங்கேயோ படித்த நினைவு-

பெண்களை ஆண்கள் காவல் புரிவதால்
பெண்மை தாழ்ந்ததன்று.
வன்மை இரும்புப்பெட்டி மென்மை தங்கத்தை காப்பாற்றுகிறது.
தங்கம் தாழ்ந்ததென உலகம் கருதுகிறதா?
- வாரியார்

"அவள் அப்படித்தான்" படத்தில் நடிகை சரிதா வை (என்ற கதாபாத்திரத்தை) திருமணம் செய்து கொண்டுவரும் கலைஞானி 'யின் முன்னாள் காதலியான ஸ்ரீபிரியா (என்ற கதாப்பாத்திரம்), கேட்பார் "பெண் சுதந்திரத்தை பற்றி நீங்க என்ன நினைக்கறீங்க? " அதற்கு சரிதா மிகவும் யதார்த்தமாக கேட்பார் "அப்படின்னா?"

ரொம்பவும் எளிமையாக சொல்ல வேண்டும் என்றால்,

தேவைகள் என்பது அவரவரை பொறுத்தது, சுதந்திரம் வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு, (இதிலும் சிக்கல் உள்ளது, எது சுதந்திரம் என்ற புரிதலோடு் சிலரும், புரிதல் இல்லாமல் பலரும்) அது பெரிய விஷயமாகவும் போராடி பெற்று நிலை நிறுத்தி வெற்றியை கொண்டாட வேண்டிய விஷயமாக இருக்கிறது

அது என்னவென்றே தெரியாமல், வாழ்க்கையை மிகவும் சந்தோஷமாக அனுபவிப்பவர்களும் உண்டு. அதற்காக அந்த பெண் முட்டாள் அறியாமையில் உழல்பவள் அவளுக்கு உலகம் தெரியவில்லை என்று நினைக்கவேண்டியதில்லை, அப்படி நினைத்தால் அது வெளியிலிருந்து பார்ப்பவர்களின் மனப்பிதற்றல்கள் எனலாம்.

எல்லாம் தெரிந்தும், இது தான் என் வாழ்க்கை நான் இப்படித்தான் இருக்க வேண்டும் என்ற வட்டத்துக்குள் இருப்பவர்களுக்கும் சுதந்திரம் என்பது அந்த வட்டத்துக்குள் ஆரம்பித்தும், தொடர்ந்தும், முடிந்தும் விடுகிறது.

ஆக சுதந்திரத்தை எப்படி எடுத்துக்கொள்கிறோம் எப்படி பார்க்கிறோம், தனி நபர் நடைமுறை வாழ்க்கையில் அது எவ்வளவு எப்படி தேவைப்படுகிறது என்பது அவரவரை பொறுத்தது. வெளியில் நின்றுக்கொண்டு வீர ஆவேசமாக இது தான் "பெண் சுதந்திரம்" என்று கூச்சலிடவும், அறிவுறத்தவும், கோபப்பட்டு பொங்கி எழுதலும் நடைமுறை வாழ்க்கைக்கு ஒற்றுவராது.

"நீ நல்லா இருக்கியா ..சந்தோஷம்.. .நான் நல்லா இருக்கேனா... சந்தோஷம்...!! " இது தான் தாங்க வாழ்க்கை.... இதுல சுதந்திரம் எங்க இருக்கு எப்படி இருக்குன்னு நீங்களே தெரிஞ்சிகோங்க... புரிஞ்சிக்கோங்க... ... :)

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@


விகடனுக்காக எழுதியது -
http://youthful.vikatan.com/youth/india63/index.asp
http://youthful.vikatan.com/youth/india63/kavitha15082009.asp

நன்றி -சிபி
நன்றி - விகடன்


!!! இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள் !!!!


.