வந்தாகிவிட்டது.. எத்தனை வருட கனவு.. இத்தனை வருடங்கள் கழித்து நிறைவேறும் என்று ஒரு போதும் நினைக்கவில்லை. ஆனால் நடந்துவிட்டது. சுதந்திரக்காற்றை சுவாசிக்கலாம், சுதந்திரமாக சிந்திக்கலாம், பேசலாம், சிரிக்கலாம், அழலாம், மனம் சொல்வதை மட்டும் கேட்கலாம்... இந்த சுதந்திரக்காற்று எத்தனை சுகமாக இருக்கிறது.... ஒரு முறை அடிவயிற்றுவரை காற்றை உள்ளிழுத்து சுவாசி்க்கிறாள் சுவாதி. அவள் கையை ஒரு முறை கிள்ளி பார்த்துக்கொள்கிறாள் ..உண்மைதான்....வந்தாகிவிட்டாது.

ஆயிற்று, ஏழு மணிக்கு ரயில், 6.45 க்கு வந்திவிட்டேன். லோயர் பர்த், 2ஆவது ஏசி கோச், லக்கேஜ் அரேன்ஜ் செய்துவிட்டு, டிக்கெட்''டை ஒரு முறை செக் செய்துவிட்டு, செக்கர் வந்தால் டிக்கெட் டை எடுக்க வசதியாக கைப்பையின் சைட் சிப்'பில் வைத்துக்கொண்டேன். கொஞ்சம் ரிலேக்ஸாக பின்னால் சாய்ந்து உட்கார்ந்து கண்களை மூடி... நடந்து வந்த பாதையை ஒரு முறை திரும்பி பார்க்கிறேன். என்னவோ சொல்ல முடியாத ஒரு பயம் கவ்வுகிறது..... அய்யோ.....ஏன் இது? வேண்டாமே.....கண்விழித்து நேராக உட்காருகிறேன். இல்லை...இனி எதையும் திரும்பி பார்க்கக்கூடாது. இந்த நிமிடம் எனக்கு சொந்தம், இதை மட்டும் யோசிக்கவேண்டும். இதை மட்டும் ரசிக்க வேண்டும்.

என்னவோ என் முகம் ரொம்பவும் இறுக்கமாக இருந்தது. இப்படி ஆகி, ஆக்கப்பட்டு பல வருடங்கள் ஆயிற்று. சிரிக்க வேண்டுமென நினைக்கும் போது எல்லாம் சுற்றி இருப்பவர்களின் வார்த்தைகள் முகத்தை சிரிக்க விடாமல் இறுக்கிவிடும். எங்கே சென்றது என் புன்னகை ? எப்போதும் யாரை பார்த்தாலும் அப்பழுக்கின்றி சிரிக்கும் என் முகம் எங்கே போயிற்று? என் சிரிப்பு அத்தனையும் சுரண்டி எடுத்துவிட்டு, என் முகத்தை மட்டுமல்ல என் மனதையும் இப்படி ஆக்கியது யார்? வெளியில் இருப்பவர்களா இல்லை எனக்குள் இருக்கும் நானா?

இமைகள் உயர்த்தி யார் தன்னுடன் பிரயாணம் செய்கிறார்கள் என்று பார்க்க தோன்றவில்லை. பார்த்து என்ன செய்ய போகிறேன். அவர்கள் ஓவ்வொருவரின் புன்னகையிலும் ஏதோ ஒரு பொய் ஒட்டிக்கொண்டு இருக்கும். உதட்டோர சிரிப்போடு, எங்கே போகிறேன் என்று இவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டால் மட்டும் என்ன செய்ய போகிறார்கள்?. இத்தனை வருடங்களாக நான் இழந்தவிட்டதை திருப்பி கொடுத்துவிடுவார்களா? இல்லை நீ போகாதே உனக்கு தேவையானதை நாங்கள் செய்கிறோம் என்று சொல்ல போகிறார்களா? அப்படி சொல்லத்தான் இவர்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? சம்பந்தம் இல்லை அல்லவா? அப்படி இருக்க ஏன் இவர்களிடம் என்னைப்பற்றி சொல்ல வேண்டும். ஒருவரையும் பார்க்க பிடிக்கவில்லை. இப்படிப்பட்ட எத்தனையோ பேர் என்னின் இந்த முடிவிற்கு காரணம். சக மனிதர்களின் போலி சிரிப்பில் இனியும் என்னை ஏமாற்றிக்கொள்ள நான் தயாராக இல்லை. போதும் ..போதும் என்கிற அளவு இந்த பொய்யான பேச்சையும் சிரிப்பையும் புன்னகையையும் பார்த்தாகிவிட்டது.

போதுமான பணம் பேங்கில் இருக்கிறது, ப்ளான் செய்த படி எல்லாம் சரியாக நடக்கிறது. எப்படியும் இரண்டு நாட்களில் போய் சேர்ந்துவிடுவேன். ம்ம்..... எதிர்பார்த்த என் வாழ்க்கையின் ஒரே ஒரு ஆசை இது... ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஆசைப்பட்டது முதல் முறையாக நடக்கிறது. இதோ ரயில் புறப்பட்டு விட்டது. இனி யாரும் என்னை தடுக்க முடியாது. என் ஆசை நிறைவேறிவிட்ட மகிழ்ச்சியில், இறுக்குமான என் முகம் லேசாக தளர்ந்தது. அங்கேயும் இப்படிப்பட்ட மனிதர்கள் இருக்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? மீண்டும் முகம் இறுகியது. மீண்டும் அப்படிப்பட்ட மனிதர்களை தான் சந்திக்க போகிறேனா? எங்கே சென்றாலும் இவர்கள் நிழலை போன்று துரத்திக்கொண்டு தான் வருவார்களோ?.

"டீ..டீ டீ....காப்பி.காப்பி......." ஒருவர் விற்றுக்கொண்டு சென்றார்...

எங்கேயோ சுற்றிக்கொண்டிருந்த என் மனம் சுற்றுவதை நிறுத்தி, சற்றே இந்த சத்தத்தினை கவனிக்க ஆரம்பித்தது.

பின்னாலேயே...."டின்னர் ஆர்டர் ப்ளீஸ்".மற்றொருவர் சின்ன நோட்டோடு வந்தார்.

"என்ன இருக்கு" ...... நான்

"சப்பாத்தி, ரோட்டி & மீல்ஸ் மேடம், வெஜ் ஆர் நாந்வெஜ்?"

அங்கே போனால் கண்டிப்பாக வெஜ் தான்... ஏன் இப்ப நாந்வெஜ் சாப்பிட்டால் என்ன? ........... ஒன் நாந்வெஜ் மீல்ஸ் ...ப்ளீஸ்! சீட் நம்பர் 32"

எழுதிவிட்டு கடந்து சென்றுவிட்டான்.

படிக்க நிறைய புத்தகங்கள் எடுத்துவந்தேன். அவற்றில் சில வாழ்க்கையின் தத்துவங்கள், தன்னம்பிக்கையை அள்ளித்தரும் புத்தகங்கள். வாழ்க்கையின் தத்துவங்கள் நிறைந்த ஒரு புத்தகத்தை எடுத்தேன்... என்னவோ அந்த புத்தகத்தை எடுத்தவுடன், எனக்குள் சிரிப்பை அடக்க முடியவில்லை. வாய்விட்டு சிரிக்க வேண்டும் போல் இருந்தது. சிரிக்க முடியவில்லை, எல்லோரும் என்னை திரும்பி பார்ப்பார்கள், பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டுவார்கள். அவரவர் வேலையை தவிர அடுத்தவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதே பலருக்கு இங்கே வேலை. இவர்களுக்கு மத்தியில் எல்லோரையும் போல் நானும் நடிக்க வேண்டும். ஆனால் என் சிரிப்பை என்னால் அடக்க முடியவில்லை. மனதுக்குள் சத்தம் போட்டு சிரித்தேன். என் வாழ்க்கையை கொண்டு இப்படி ஓராயிரம் தத்தவ புத்தகங்கள் என்னால் கூட எழுத முடியும். ம்ம்ம்.... எழுதத்தான் போகிறேன். அவற்றை எல்லாம் விற்று பெரிய பணக்காரி ஆகப்போகிறேன். என் சிரிப்பை என்னால் இன்னமும் அடக்க முடியவில்லை. சிரித்துக்கொண்டே இருந்தேன். கண்களில் லேசாக தண்ணீர் வர ஆரம்பித்தது. யாரும் அறியாமல் துடைத்து, சுவாதி போதுமே சிரித்தது..எனக்குள் நானே சொல்லிக்கொண்டு சிரிப்பை அடக்கினேன்.

மனம் எதை எதையோ யோசித்தது. கண்ணை மூடி மனம் சொல்லுவதையும், அது போகின்ற வழியையும் கவனமாக கவனிக்க ஆயத்தமானேன். வேகமாக பறந்தது.....ஏழு கடல் ஏழு மலை தாண்டி..சென்றது.... இதோ...ஆப்பிரிக்க காடுகள்......வந்துவிட்டன..... காடுகளுக்குள் என்னை அழைத்து சென்றது. பச்சை பசேலென்ற அந்த காட்டில், பூக்களை, இலைகளை உரசிவரும் காற்றில் ஏதோ ஒரு சொல்ல முடியாத ஆனால் சுகமான வாசனை என்னை தழுவி சென்றது. லேசாக வழுக்கும் குறுகிய பாதையில் மழை ஓய்ந்த அந்த காலை நேரத்தில் ஈர இலைகள் என் உடலை நனைக்க நான் மட்டும் தனியாக சென்று கொண்டே இருந்தேன்....

நத்தை ஒன்று என் காலடி ஓசையில் பயந்து உடம்பை உள்ளே இழுத்துக்கொண்டது. எனக்கும் இப்படி ஒரு ஷெல் இருந்தால்?, என் இதழ்களில் புன்னகை தவழ்ந்தது.... ....ஷெல் இருந்தால்.....??!!!! , பிரச்சனை வரும் போது எல்லாம் உள்ளே போயி புகுந்து க்கொண்டு என்னை காப்பாற்றிக்கொள்ளலாம். அதற்கு நான் நத்தையாக இருந்து இருக்கலாம், சுவாதி'யாக இருந்து இருக்க வேண்டாமே.... ...

பாம்பு ஒன்று வேகமாக கடந்து சென்றது...பயமொன்றும் எனக்கில்லை. என்னை பார்த்து பாம்பிற்கும் கண்டிப்பாக பயம் இருக்கும், நான் ஏன் அதைப்பார்த்து பயப்படவேண்டும்.? .....

எங்கே செல்கிறேன் என்று தெரியாத ஒரு நீண்ட பயணம்... அந்த ஒற்றையடி பாதை போயிக்கொண்டே இருக்கிறது. மரங்கள் கடந்து வெறும் பூக்கள் மட்டுமே உள்ள பூமி வருகிறது.."மேலே வானம் !! கீழே பூக்கள். !!" வேறு ஒன்றுமே அங்கு இல்லை. ஆஹா எத்தனை அழகு.!! என் கண்களை கடவுள் இதற்காக தான் படைத்தானோ.... அப்படியே சிலையாக நின்று கண்ணுக்கு எட்டிய அளவு பூக்கக்களின் வண்ணங்களையும், வாசனையும் ரசிக்கிறேன். இந்த பூக்கள் அத்தனையும் இந்த நொடி எனக்கு மட்டுமே சொந்தம்... நினைக்கும் போதே பொங்கும் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்ல இயலவில்லை....என் முகமும் அந்த பூக்ககளை போல் மலர்ந்து சிரிக்கிறது.

படப்படவென பறந்து வந்து அமரும் வண்ணத்துப்பூச்சி... ..........பட்டாம்பூச்சி' யா? வண்ணத்துப்பூச்சி'யா?........................... பட்டாம்பூச்சி .................... பட்டாம்பூச்சி........... பட்டாம்பூச்சி' யை பார்த்தவுடன்.. நினைவலைகள் எங்கோ ரிவைண்டு செய்த டேப் ரிக்கார்டர் போல பின்னுக்கு இழுத்து செல்கிறது.. ...... போகாதே...! அங்கே போகாதே... !! இங்கேயே இரு..!! இது தான் சுகம்..சந்தோஷம்.... அங்கே போகாதே.. !! அது வேண்டாம்.. !! ... .அதனிடம் போகாதே..!! உன் கண் எதிரில் இருக்கும் வண்ணத்துப்பூச்சியை பார்த்து ரசி.... ! பார்.. உன் கண் முன்னே எத்தனை வண்ணத்து பூச்சிகள்..?? இவை எல்லாமே அதே போல் தான்... எல்லா வண்ணங்களும் இருக்கிறது... பூவீன் மீது அமர்ந்து அழகாக தேனை உறுஞ்சிகிறது..................

நான் சொல்லுவதை மனம் கேட்கவில்லை........மீண்டும் ஓடுகிறது............... வேகமாக பின்னால் நானும் ஓடுகிறேன்.. ...அய்யோ........ நில் செல்லாதே !! ............... .! ... .இங்கேயே நில்....செல்லாதே....... !! இழுத்து பிடிக்கிறேன் மனதை.. மீண்டும் இறுகி போகிறது என் முகம்... ஏன் இப்படி ? சந்தோஷமாக சில நிமிடங்கள் கூட இந்த மனம் விட மறுக்கிறதே ..... ஏன் இப்படி இல்லாத ஒன்றை தேடி ஓடுகிறது. .எதிரில் இருக்கின்ற ஓராயிரம் மலர்களும், அதனை மொய்க்கும் வண்ணத்துப்பூச்சிகளும்.......

"மேடம்.... டின்னர்.... 45 ரூபீஸ்..சேன்ஞ் ப்ளீஸ்....'

சத்தம் என் காதுகளை தொட, ஆப்பிரிக்க காடுகளிலிருந்து ....இதோ இங்கு வந்து குதித்து விட்டேன்.

தட்டை வாங்கிக்கொள்கிறேன்.பணத்தை கொடுக்கும் போது, பசிக்கு நேரத்திற்கு உணவளிக்கும் அவருடைய கண்களை நேராக பார்த்து, புன்னகையோடு.. "தாங்ஸ்...!!"

அவரும் புன்னகைக்கிறார், சென்றுவிட்டார்.

என் சிந்தனை திரும்ப எங்கேயோ செல்லும் முன் சாப்பிட்டுவிடலாம். சாப்பிட ஆரம்பிக்கிறேன். சிக்கன்... கிரேவி..., சிக்கன் கிரேவி....... என் குழந்தைக்கு சிக்கன் பிடிக்குமே... அவனுக்கு கொடுக்காமல் தனியே சாப்பிடுகிறேனே....? எங்கே என் குழந்தை? அவனில்லாம் எப்படி நான் தனியே இருக்கிறேன்? தனியே சாப்பிடுகிறேன்? அவனை விட்டுவிட்டு எப்படி நான் தனியே இங்கே.? அவன் எங்கே? அவனுக்கு சாப்பாடு யார் கொடுப்பார்கள்.?

ரயில் ஏன் இத்தனை வேகமாக போகிறது,... என்னை சுற்றியுள்ளவர்கள் அத்தனை பேரையும் பார்க்கிறேன். எல்லோரும் ருசித்து சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

எல்லோரையும் பார்த்து, "யாராவது ரயிலை நிறுத்துங்கள், என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்.... நான் போகவேண்டும். ..நான் திரும்ப போக வேண்டும்...ரயிலை நிறுத்துங்கள்.........." கத்துகிறேன்.... யாரும் நான் கத்துவதை பொருட்படுத்தவில்லை. என்னை கவனிக்க கூட இல்லை. நான் தனியே கத்திக்கொண்டே இருக்கிறேன். "நான் கத்துவது உங்கள் காதில் விழவில்லையா?" ஒரு வேளை நான் கத்துவது அவர்கள் யார் காதிலும் விழவில்லையோ? ஏன் விழவில்லை.? தொண்டையை ஒரு முறை அழுத்தி பார்க்கிறேன். கணைத்துப்பார்க்கிறேன். திரும்பவும் கத்துகிறேன்...

"தயவுசெய்து யாராவது ரயிலை நிறுத்துங்கள்...... என் குழந்தையை விட்டுவிட்டு வந்துவிட்டேன்... ரயிலை நிறுத்துங்கள்...நான் திரும்ப செல்லவேண்டும்...நிறுத்துங்க...ப்ளீஸ்....நிறுத்துங்க.............".எழுந்து ரயிலை நிறுத்தும் சங்கிலியை இழுத்துப்பிடிக்க எட்டுகிறேன்.........அது உயரமாய் இருக்கிறது, எனக்கு எட்டவில்லை......

" நிறுத்துங்க ப்ளீஸ்...யாராவது ரயிலை நிறுத்துங்க.... ப்ளீஸ்..." அழ ஆரம்பிக்கிறேன்...... "

*******************