எப்போதும் நடக்கும் சண்டை, சரிக்கு சரியாக சண்டை போடும் பழக்கம்.. (இதை சொல்ல வேண்டிய அவசியமே இல்லைதான்:) ) கவுண்ட்டர் ரிப்ளை கொடுக்கலைன்னா தூக்கம் போய்விடும்.. சண்டைப்போடத நண்பரகள் மிக குறைவு...

கெளரிசங்கர் .... விழுப்புரத்தில் எங்கள் பக்கத்து வீட்டுப் பையன். என்னிடம் சண்டையே போடாமல் நண்பனாக இருந்தவன். . என்னை விட கலராக, என்னைவிட குள்ளமாக இருப்பான். அவனும் என்னுடைய வயதே, ஆனால் அவனுடன் ஒரே வகுப்பில் நான் படித்ததில்லை. நான் காந்தி பள்ளியில் படிக்கும் போது அவனில்லை, அவன் படிக்கும் போது நான் பெண்கள் பள்ளிக்கு மாறிவிட்டேன். ஆனால் இருவரும் ஒன்பதாம், பத்தாம் வகுப்பு ட்யூஷன் ஒன்றாக படித்தோம்.

இந்த கெளரி எப்பவும் என்னை தூர இருந்து கவனிப்பான், அண்ணனிடம் பேசும் அளவிற்கு என்னிடம் பேசியது இல்லை, பக்கத்து வீட்டு மாடிக்கு வந்தால் அங்கிருந்து வேடிக்கை பார்த்துக்கொண்டு நிற்பான். சில சமயம் பேசுவான்..சிரிப்பான்...

ட்யூஷன் சென்றால், அங்கும் கவனிப்பதோடு சரி.. டியூஷன் சந்தேகங்கள், ஹோம் ஒர்க் பற்றி மட்டும் விசாரிப்பேன். அதிகம் அவனுடன் பேசியதில்லை எங்கள் வீட்டிற்கும் வரமாட்டான். அமைதியான ரொம்பவும் அடக்கமான பிள்ளை என்று என் ஆயா, அப்பா, அண்ணன்கள் சொல்லுவார்கள், அவனை பார்த்து, நானும் அப்படி இருக்க கற்றுக்கொள்ள வேண்டும் என்று சொல்லுவார்கள்..

அதற்காக ட்யூஷன் போகும் போது வேண்டுமென்றே சண்டைக்கு இழுப்பேன். ட்யூஷன் டீச்சர், பசங்க, பொண்ணுங்களை கிண்டல் கேலி செய்யக்கூடாது என்பதற்காக எங்களை முதலில் அனுப்பி விடுவார்கள்.. 10 நிமிடம் கழித்து பசங்க வருவாங்க.

நான் கெளரியிடம் பேச நினைக்கும் போது எல்லாம் கேட்டில் காத்திருப்பேன். அன்றைக்கும் அப்படியே அவனிடம் சண்டை போடவே காத்திருந்தேன்.

என்னை பார்த்ததும், அவனுக்காக நிற்கிறேன் என்று தெரிந்து .என்னை நோக்கி வந்தான்.

"ஏண்டா ..ஓவர் அமைதியா இருந்து எங்கவீட்டுல எனக்கு திட்டு வாங்கி வைக்கிற... ஏன் வாய தொறந்து நீ பேசமாட்டியா... ரொம்ப நல்லவனா நீ.. ? " இன்னொரு வாட்டி என்னை எங்க வீட்டில திட்டினாங்க... அவ்வளவுதான் நீ..! " .

..... சிரித்தான் .... "வீட்டுக்கு கிளம்பு" என்றான் ..

"அட நான் என்ன காட்டுக்கா போகப்போறேன்... சொல்லு நீ எப்படி எப்பவும் அமைதியா இருக்கே? " எனக்கு எல்லாம் பேசலன்னா கன்னம் இரண்டும் வலிக்குதுடா.."

திரும்பவும் சிரித்தான்..."சரி கிளம்பு பசங்க எல்லாம் பார்க்கறானுங்க. .ஏதாச்சும் சொல்லுவாங்க.."

"பாத்தா..சொன்னா..?!! ஆமா............என்ன சொல்லுவாங்க..?? "

"கவிதா.. கிளம்பு.. வீட்டுக்கு போ....."

" ம்ம்....சரி.. வீட்டுக்கு வந்து சொல்றியா...?!"

"சொல்றேன்.. போ...."

...............................................................................................

வீட்டுப்பாடம் முடிக்காமல் ஒரு நாள் மதியம் அவன் வீட்டுக்கு போய் வெளியில் நின்று "கெளரி கெளரி" என்றேன். அவன் அப்பா முதலில் வந்தார்...

"வாம்மா. .உள்ள வா... .."

"இல்ல அங்கிள் பரவாயில்ல.. கெளரி........"

"அட வாம்மா உள்ள...."

"அங்கிள் கெளரிய கூப்பிடுங்களேன்...."

அதற்குள் கெளரி வந்துவிட.... "கெளரி.. .மேக்ஸ் ட்யூஷன் நோட்டு கொடுடா..நான் முடிக்கல.."

அவன் முடித்திருந்தான்.. (அதான் ரொம்ப நல்லவன் ஆச்சே...!! ) ... எடுத்து வந்து கொடுத்தான்..., வாங்கிக்கொண்டு,

"ட்யூஷன்ல வந்து தரேண்டா.."

"சரி..."

அன்று மாலை... மேல் மாடி.. வேகவேகமாக காப்பி அடித்து எழுதிக்கொண்டு இருந்தேன்.... ஆயா எதற்கோ அழைத்தார்கள்.. வந்தேன்... திரும்ப சென்று நோட்டுகளை எடுக்க மறக்கும் அளவிற்கு விருந்தாளிகள் வேலை இருந்துவிட்டேன். தீடிரென்று மழை வந்துவிட... நான் நோட்டுகள் நினைவு வந்து அவற்றை எடுப்பதற்குள் தொப்பையாக நனைந்து எழுத்துக்குள் எல்லாம் அழிந்தே விட்டது.

முழு நோட்டிலும் ஒரு எழுத்து கூட இல்லை.... என் நோட்டு பரவாயில்லை. முத்து முத்தாக எழுதி வைத்திருந்த கெளரியின் நோட்டு.... அவ்வ்வ்வ்வ்வ்.... எனக்கு அடிவயிற்றை பிசைந்தது.. எப்படி அவனை பார்த்து பேசுவது.. நோட்டை கொடுப்பது... சரி வேறு வாங்கி எழுதி க்கொடுத்துவிடலாம் என்ற முடிவோடு.. அடுத்த நாள் நனைந்த நோட்டை எடுத்துக்கொண்டு ட்யூஷன் சென்றுவிட்டேன்...

எப்போதும் நான் முன்னே வந்து காத்திருக்க கெளரி வந்தான்....

ரொம்பவும் மெதுவான குரலில்..".கெளரி............." என்று அழைத்தேன்.. என் முகத்தை நான் பார்க்க நேரிட்டிருந்தால் சொல்லி இருப்பேன் எவ்வளவு பாவமாக இருந்தது என்று......

"என்ன.....?"

"நோட்டு நேத்திக்கு மழையில மேல விட்டுட்டு வந்துட்டேண்டா... நனைஞ்சி போச்சி.... !... "

வாங்கிப்பார்த்தான்..

"நான் வேற நோட்டு வாங்கி எழுதிக்கொடுத்திடறேண்டா... ஒரு 4 நாள் டைம் கொடுடா..."

என்னை பார்த்தான்... எப்போதும் போலவே முகம் இருந்தது..மாறவே இல்லை.. கோபமே வரலை... கவலையும் இல்லை....

"வேணாம் நானே எழுதிக்கிறேன்..."

எனக்கு ஆச்சரியம்...

"இல்ல..நான் எழுதித்தரேன்.."

"நீ உனக்கு எழுதிக்கோ.... பசங்க யார் கிட்டயாவது நோட்டு வாங்கித்தரேன்..."

"புதுசா நோட்டாவது வாங்கிக்கோயின்..."

"வேண்டாம்... வீட்டுல புதுசு இருக்கு.... அது போதும்.."

"நிஜமாவா சொல்ற? "

எப்போதும் போல் சிரித்தான்...

அணில் குட்டி அனிதா : அதுக்கு மேல அங்க நின்னா உங்களுக்கும் சேர்த்து எழுதித்தர சொல்ல போறீங்கன்னு .... எஸ் ஆயிட்டாரு கெளரி அதுக்கூட தெரியலையா கவி.....?!! :))))))))


பீட்டர் தாத்ஸ்:- “There is a garden in every childhood, an enchanted place where colors are brighter, the air softer, and the morning more fragrant than ever again.”