பெண் எந்த விஷயத்தை செய்தாலும் இப்படித்தான் இருக்கும் என்ற முடிவோடு நிறைய கேலி சித்திரங்கள் நமக்கு ஈமெயிலில் வரும். அதை பார்க்கும் போது பல தடவை கோபம் வரும்..அப்படியா நாம் இருக்கிறோம், ஏன் இப்படி கிண்டல் செய்கிறார்கள்?? கார் பார்க்கிங், டூ வீலர் பார்க்கிங் இடங்களில் பெண்கள் மட்டும் தனிவிதமாக பார்க்கிங் செய்வது போன்ற படங்கள் நிஜமாக கோபத்தை தாண்டி சிரிப்பையும் வர வைக்கும் படங்கள்.

பெண் இப்படித்தான் செய்வாள் என்பதை தாண்டி நாம் சிந்திக்கிறோமா? அதைவிட்டு வெளியில் வர முயற்சி செய்து இருக்கிறோமா.? தனிப்பட்ட முறையில் சுய மதிப்பீடு செய்து பார்த்து நம்மை நாம் நம் வேலைகளில் சரி செய்துக் கொள்கிறோமா? இரு சக்கர வண்டி ஓட்டும் பெண்கள், மிகுந்த போக்குவரத்துக்கு இடையே அடிக்கும் கூத்து இருக்கிறதே.. எத்தனை பொறுமையானவர்களையும் கோபத்துக்கு உள்ளாக்கி திட்ட செய்யும். அத்தனை மோசமாக வண்டி ஓட்டுகிறார்கள். பெண்கள் பக்கத்தில் வண்டி ஓட்டி வந்தாலே, "ஓரங்கட்டு சனியன் போட்டும், இல்லன்னா நம்மளை சில்லறை பொறுக்க வைப்பாளுங்க" என்ற சொல்லும் அளவிற்கு பெண்கள் வாகனங்களை ஓட்டுகிறார்கள். சாலைகள் அவர்களுக்கு மட்டுமே என்ற எண்ணமா என்று தெரியவில்லை. பொதுவாக எனக்கு நண்பர்களுடன் / தோழிகளுடன் பின்னால் அமர்ந்து வண்டியில் செல்லும் வழக்கமில்லை. என்னுடன் பின்னால் (உயிரின் மீது அக்கறை இல்லாதவர்கள் மட்டும்) அமர செய்து போவேன். அல்லது தனித்தனியே அவரவர் வண்டியில் செல்வோம். அப்படி செல்லும் போதே அவர்களை ஓட்டுவதை கவனித்து அலுவலகம் வந்த பிறகு இப்படி ஓட்டுங்கள் என்று சொல்லுவேன். சிலர் எடுத்துக் கொள்வார்கள், சிலர் திருப்பி வேலையை பார் என்பார்கள்.

தெரியாத்தனமாக என் வீட்டு பக்கத்தில் இருப்பவர்களுடன் வெளியில் சென்று விட்டேன். சோம்பேரித்தனம் தான் காரணம். போன பிறகுதான் தெரிந்தது, கடவுளே எவ்வளவு மோசமாக வண்டியை யாரை பற்றியும் கவலை படாமல் ஓட்டுகிறார்கள்? கவனித்த வரை

* நடு ரோட்டில் வண்டியை ஓட்டுகிறார்கள்

* யாராவது ஹாரன் கொடுத்தால் கேவலமாக அவர்களை திட்டுகிறார்கள்

* ஹாரன் கொடுப்பவர்களை திட்டினாலும், அவர்களுக்கு வழி விடவில்லை.

* சைட் மிரரா? அப்படின்னா என்று பெருமையாக கேட்கிறார்கள்

* எந்த பக்கத்தில் திருப்பினாலும் சிக்னல் கொடுக்கவில்லை, அல்லது கொடுத்தாலும் அடுத்தவர் தனக்கு இடம் கொடுக்கிறார்களா என்று பார்க்கவில்லை

* இடது வலது பக்கம் என்ற சென்ஸ் இல்லாமல் ஓட்டினார்கள். அதாவது இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால் அதற்காக முன்னமே தன்னை தயார் படுத்தாமல் போக்குவரத்துக்கு நடுவில் அலங்க மலங்க எல்லோரையும் பயமுறுத்தி நடுவில் புகுந்து... (ஸ்ஸ் ..இதுக்கு மேல முடியல நான் குதித்து ஓடிவிடலாமா நமக்கும் சேர்த்து அடிக்கிடைக்குமா என்று யோசித்தேன்.)

இத்தனைக்கும் இந்த பெண் தினமும் கிட்டத்தட்ட சென்னை நகரத்து போக்குவரத்து மிகுந்த சாலைகளில் 30 கிமி பயணிக்கிறார். அதில் அவர் குழந்தை வேறு அவருடன் செல்கிறது. :( அவர் செய்வது தவறு என்றே அவருக்கு புரியவில்லை, அடுத்தவர்கள் தான் சரியாக ஓட்டவில்லை என்று திட்டிக்கொண்டே வந்தார். :) நான் பொறுமையாகத்தான் இருந்தேன். பல சமயங்களில் இப்படி பேசவிட்டு பார்ப்பதில் எனக்கு சந்தோஷம் என்பது இதற்கு நிச்சயமான காரணம். திரும்பி வீட்டுக்கு வந்த பிறகு தேவைப்பட்டால் எடுத்துக்கொள்ளட்டும் என்று அந்த தெய்வத்தை பார்த்து சொன்னது..இன்னும் இப்படிப்பட்ட தெய்வங்களுக்கு தேவைப்படுமே என்று பதிவானது.

1. சைட் மிரர் பார்க்காமல் வலது இடதுபுரம் திரும்பத்திட்டம் இடாதீர்கள். சட்டென்று திரும்பினால் பின் வரும் வண்டிகள் சுதாரிக்கமுடியாமல் விபத்து ஏற்படலாம்

2. ஹாரன் அடித்தால் தயவு செய்து வழிவிட்டு விடுங்கள்

3. நடு ரோட்டில் வண்டி ஓட்டாதீர்கள், பெரிய வாகனங்கள் செல்வது கடினம்.

4. சிக்னல் வர ஒரு கிமி முன்னரே இரண்டு கால்களையும் தொங்கவிட்டு கொள்தீர்கள்.

5. எவ்வளவு வேகமாக போகிறோமோ அதை போலவே அவ்வளவு குறைந்த வேகத்திலும் கால்களை கீழே ஊனாமல் பேலன்ஸ் செய்ய பழகுங்கள். இப்படி செய்வதால் இரண்டு கால்களையும் நிற்க போவதற்கு ஒரு கிமி முன்னறே தொங்க வைக்க வேண்டாம்.

6. தேவையில்லாமல் நீங்கள் ஹாரன் கொடுக்காதீர்கள்

7. வேகமாக சென்று சிக்னல் விழுந்தால் சடன் ப்ரேக் போடாதீர்கள், பின்னால் வரும் வாகனங்கள் வந்து மோதும்.

8. முன்னே செல்லும் 2, 3 வாகனங்களில் கவனம் வைத்து ஓட்டுங்கள், விபத்தை கூடிய மட்டும் தடுக்க முடியும்.

9. செல் போன்னை காதில் மாட்டி க்கொண்டு தயவு செய்து சீன் போடாதீர்கள்

10. பகலில் ஹெட் லைட் நிறுத்தப்பட்டு இருக்கிறதா என்று பாருங்கள்

பெண்கள் இப்போது ரோட் ரேஸ் ரோஜாக்களாக இருந்தாலும், மிக சிலரே மற்றவர் வியக்கும் அளவிற்கு வண்டி ஓட்டுகிறார்கள், பலர் பின்னால் நம்மை கேவலமாக திட்டும் அளவிற்கு தான் வண்டியை ஓட்டுகிறார்கள். தயவுசெய்து இப்படித்தான் என்று இல்லாமல் இப்படியும் என்பதை உணர்ந்துவிட்டால், பெண்கள் இப்படித்தான் என்று யாரும் நம்மை முத்திரை குத்த முடியாது.

அணில் குட்டி அனிதா:- ஹா ஹா ஹா...:) 2009 வருடத்தின் பெரிய காமெடியன் கவி'தான் ..அண்ணாசாலையில் அம்மணி அப்போலோ ஆப்லுன்ஸ்' க்கு நடுவில் வண்டிய விட்டு, அப்போல்லோ ஆஸ்பித்திரியல அட்மிட் ஆகி, எப்படிம்மா ஆக்ஸிடன்ட் ஆச்சின்னு டாக்டர் கேட்டதுக்கு... "டாக்டர் முடியல..உங்களால "First aid " கொடுக்க முடியுமா? ப்ளீஸ்...!! நீங்க கேட்கற கேள்விக்கு எல்லாம் பொறுமையா 2 நாள் உங்க ஆஸ்பித்திரியில பீஸ் கட்டி உட்கார்ந்து பதில் சொல்றேன்னு " (இதுக்கு எப்படி ஆச்சின்னே சொல்லியிருக்கலாம்) சொல்லி..( ஹ ஹா ஹாஆ :)))) என்னால சிரிப்ப அடக்க்க்க்க்க்க்க முடியலியே............... ) ஒன்னு இல்லீங்கோ ஒன்னு ..இந்த பக்கம் ஒன்னு அந்த பக்கம் ஒன்னுன்னு இடுப்புல 2 ஊசி... கையில வேற ஒன்னு, அதுக்கு அப்புறமும் நடக்க முடியாம 2 பேரு இந்த பக்கம் ஒருத்தர் அந்த பக்கம் ஒருத்தர்...........ஹா ஹா.ஹா :)))))) எல்லாமே உள்காயம் அம்மணியால வெளியில சொல்ல முடியல போங்க.....

இந்த விஷயம் இங்க யாருக்கும் தெரியாது இல்ல.. அடடா?!! இவிங்க கொடுக்கறாங்க ப்பா அட்வைஸ்'ஸு எப்படி வண்டி ஓட்டனும்னு.. முடியலடாசாமி.. இவிங்க. சமுதாய அக்கறை... ஹய்யோ ஹய்யோஒ!!.. போங்க போங்க பதிவு படிச்சது போதும்.. ...........பொழப்ப பாருங்க எல்லாரும் !!

பீட்டர் தாத்ஸ் :- Have you ever noticed that anybody driving slower than you is an idiot, and anyone going faster than you is a maniac?”